Tuesday 27 March 2012

குழந்தைக்கதைகள் - அய்யாச்சாமி தாத்தா

ayyasaami
அய்யாச்சாமி தாத்தாவுக்கு நீளமான மீசை உண்டு. அதே போல நீண்டு வளர்ந்த தாடியும் இருந்தது.தலைமுடியும் வளர்ந்து தொங்கியது. தலைமுடி நீளம் மட்டும் அல்ல அடர்த்தியாகவும் இருந்தது.அது வைக்கோலின் நிறத்தில் இருந்தது. எல்லாவற்றையும் மொத்தமாகப் பார்க்கும்போது அய்யாச்சாமி தாத்தா தலையில் ஒரு வைக்கோல்படப்பைச் சுமந்து கொண்டிருப்பது போல தோன்றும்.

அய்யாச்சாமி தாத்தாவுக்கு பலாப்பழம் என்றால் ரொம்பப் பிரியம். வெறுமனே பிரியம்னு மட்டும் சொல்லிர முடியாது. வெறி மாதிரி பேராசை என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். ஒரு பெரிய பலாப்பழம் கிடைத்துவிட்டாலோ? ஒரு மூச்சில் தின்று விட்டுத்தான் வேறு வேலை. சாப்பிட்ட பிறகு ஒரு பெரிய ஏப்பம் விட்டுக் கொண்டே,”சே..ரொம்பச் சின்னப்பழம்!” என்று சொல்வார்.

ஒரு தடவை அய்யாச்சாமி தாத்தா ஒரு பலாப்பழம் சாப்பிட்டார்.கொட்டையை எடுத்து சுளையை முழுங்கினார். என்ன வேகம் தெரியுமா? எப்படின்னு தெரியல ஒரு பலாக்கொட்டை அவருடைய வயிற்றுக்குள் போய்விட்டது. வயிற்றுக்குள் போன பலாக்கொட்டை செரிக்கவில்லை.அதற்குப் பதிலாக முளைக்க ஆரம்பித்தது.இலைகள் துளிர்த்தன.மரமாகி, நீண்டு வளர்ந்து பலாமரமாகி விட்டது. இடது காது வழியே வெளியே வந்து விட்டது.அதற்குப் பிறகு எவ்வளவு வேகமாக வளர்ந்தது தெரியுமா? பருமனாகவும் உயரமாகவும் எல்லாப் பலாமரங்களையும் போல வளர்ந்து கொண்டிருந்தது.அய்யாச்சாமி அந்த பலாமரத்தைப் பார்த்து கர்வம் தோன்றியது. அவர் குழந்தைகளிடம், பலாமரத்தைச் சுட்டிக் காண்பித்து,”குழந்தைகளே! உங்க காதில இத மாதிரி பலாமரம் இருக்கா?” என்று கேட்பார்.

ஊஞ்சலாட்டத்தில் பெரிய கில்லாடி அய்யாச்சாமி தாத்தா. நாள்முழுவதும் ஊஞ்சலாடிக் கொண்டேயிருப்பார். எவ்வளவு ஆடினாலும் திருப்தி வராது.இப்போது தன் சொந்த உடம்பிலேயே பலாமரம் வளர்ந்தால் சும்மா இருப்பாரா? எவ்வளவு வசதியாகப் போய் விட்டது. அவர் அந்த மரத்தின் உயரமான கிளையில் ஊஞ்சல் கட்டினார். ஊஞ்சலில் ஏறி ஆடினாரே ஆட்டம்! அப்படி ஒரு ஆட்டம்!

அய்யாச்சாமி தாத்தாவின் சேக்காளி பக்கத்து வீட்டு பழனிச்சாமி. ஒரு பெரிய பலாபழத்தைத் தலையில் தூக்கிக் கொண்டு வந்தார். அய்யாச்சாமி தாத்தா ஒரு பெரிய கயிறு வைத்திருந்தார். அவர் அந்த கயிறைக் கீழே இறக்கினார். பழனிச்சாமி பலாப்பழத்தை அந்த கயிற்றில் கட்டினார். அய்யாச்சாமி தாத்தா கயிற்றை மேலே இழுத்தார். நாலைந்து சுளைகளை பழனிச்சாமிக்காக கீழே போட்டார். மீதி எல்லாவற்றையும் தின்று தீர்த்தார். பிறகு பழனிச்சாமியிடம் ” பழனி! இன்னும் பெரிய பழமாக கிடைக்கலியா?”என்று கேட்டார்.

அய்யாச்சாமி தாத்தாவின் காதில் பலாக்காய் காய்த்தது. ஒரே ஒரு காய் தான். ஆனால் எப்படிப்பட்ட காய் தெரியுமா? பழனிச்சாமியின் உயரம் இருக்கும். காய் பழுத்து பழமானது. பழனிச்சாமிக்கு நாலைந்து சுளைகளை மட்டும் எண்ணிக் கொடுத்து விட்டு மீதி பழத்தை அய்யாச்சாமி தாத்தாவே தின்று தீர்த்தார்.பிறகு அவர்,” பழனி! என் காதில வளர்ந்த பலாப்பழத்தைப் பாத்தீல்ல.. எவ்வளவு சின்னப்பழம்!” என்று சொன்னார்.

பலாப்பழத்தைத் தின்று முடித்த பிறகு அய்யாச்சாமி தாத்தா கண்களை மூடித் தூங்கத் தொடங்கினார். “கீழே விழுந்திராதீங்க..” என்று சொல்லி விட்டு வீட்டுக்குப் போய் விட்டார் பழனிச்சாமி.

அய்யாச்சாமி ஊஞ்சலில் உட்கார்ந்தபடியே உறங்கினார். கொஞ்சநேரத்தில் ஒரு கனவு கண்டார். சொர்க்கத்தில் ஒரு பலாமரம். அதில் ஒரு பலாப்பழம். எவ்வளவு சுவையாயிருக்கும்? அவர் அதைப் பறிக்க நினைத்தார். ஊஞ்சல் கயிற்றின் பிடியை விட்டு காற்றில் கைகளை நீட்ட, ஊஞ்சலிலிருந்து ‘பொத்தடீர்’ என்று விழுந்தார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களோடு பழனிச்சாமியும் ஓடி வந்தார். உயரத்தில் இருந்த ஊஞ்சலில் அய்யாச்சாமி தாத்தா இல்லை.ஊஞ்சல் வெறுமனே ஆடிக் கொண்டிருந்தது. ஆனால் பலாமரத்தின் அடியிலோ? ஒரு வைக்கோல்படப்பு கிடந்தது. இதற்கு முன் அங்கு கிடையாது. இப்போது எப்படி அங்கே வந்தது? எல்லோரும் அருகில் சென்று பார்த்தனர். அது வைக்கோல்படப்பு இல்லை. அய்யாச்சாமி தாத்தாவின் மீசை தாடி தலைமுடிதான்! அவர்கள் வைக்கோல்படப்பை விலக்கிப் பார்த்தார்கள். அய்யாச்சாமி தாத்தா அடியில் கிடந்தார். பேச்சுமூச்சு இல்லை.

டாக்டர் வந்து பரிசோதித்தார். “அய்யாச்சாமி தாத்தா இறந்து விட்டார்” என்று டாக்டர் அறிவித்தார். பழனிச்சாமி ஆடகளை விலக்கிக் கொண்டு முன்னால் போனார்.எல்லோரும் அவரையே உற்றுப் பார்த்தார்கள். என்ன செய்யப் போகிறார்? பழனிச்சாமி குனிந்தார். அய்யாச்சாமி தாத்தாவின் காதைக் கண்டு பிடித்தார் காதுக்குள் சத்தமாய்,” அய்யாச்சாமி தாத்தா! பலாப்பழம் தரேன் பலாப்பழம்..!” என்று சொன்னார்.

இறந்து போன அய்யாச்சாமி தாத்தா குதித்து எழுந்தார். “பழனி! கொண்டு வா! பலாப்பழத்தை!” என்றாரே பார்க்கலாம்




மலையாளத்தில்- மாலி
தமிழில்-உதயசங்கர்

No comments:

Post a Comment