Saturday 24 March 2012

பிக்காசாவுடன் ஒரு சந்திப்பு

images (8)
விஸ்கர்ம நடுநிலைப்பள்ளியில் என்னுடன் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே சிலேட்டில் பிள்ளயார் படத்தை அச்சு அசலாக வரைந்து காட்டி ஆச்சரியப்படுத்திய மாரீஸ் பின்னாளில் கோவில்பட்டி இலக்கியவாதிகளின் இணைப்பு மையமாகத் திகழப்போகிறார் என்று எப்படித் தெரியும் ? நானும் என் தம்பியும் சரஸ்வதி பூஜை சமயம் கொலுவைக்கும் வீடுகளுக்கு தினசரி சாயங்காலம் ஆறுமணிக்கு மேல் கிளம்பிவிடுவோம். கொலு பொம்மைகள் எங்களுக்கு லட்சியமில்லை அங்கே கிடைக்கிற சுண்டல், பொங்கல் இவைகளுக்காகவே தினசரி பத்திருபது வீடுகளுக்கு போய் வருவோம். அய்யர் தெருவில் தான். அதிகக்கொலு வீடுகள் இருக்கும் அது தவிர்த்து தெற்கு பஜாரில் மாரீஸின் வீட்டிலும் மாதாங்கோவில் தெருவில் ஒவியர் ராமலிங்கம் வீட்டிலும், கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள ஒரு வீட்டிலும் கொலு வைத்திருப்பார்கள. அந்தப் பத்து நாட்களும் நான் என் தம்பியை இழுத்துக்கொண்டே அலைவேன். அப்போது மாரீஸை அடிக்கடி பார்த்திருக்கிறேன். இந்தச் சித்திரத்திற்கப்புறம் நான் மாரீஸை சந்தித்தது என் கல்லூரிப் பருவதில் தான்.

கல்லூரியில் படிக்கும் போது தான் நான் கவிதை எழுதத் தொடங்கினேன். அப்போது மாரீஸ் கையெழுத்துப்பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தார். அவன் மூலமாகவே துரை, கெளரிஷங்கர், தேவதச்சன், அப்பாஸ், பிரதீபன் என்று இலக்கிய நண்பர்கள் அறிமுகமானார்கள். மாரீஸின் அப்பா டி.எஸ். சுப்பையா மிகச் சிறந்த காலண்டர் ஆர்ட்டிஸ்ட் பிரபல ஓவியர் கொண்டைய ராஜூவின் பிரதம சீடர் என்பதையும் அப்புறம் நான் தெரிந்து கொண்டேன். மாரீஸின் வீட்டில் அவருடைய சகோதரர்கள் அனைவருமே ஏதோவொரு வகையில் கலைத்துறையில் ஈடுபட்டிருந்தார்கள். மாரீஸின் கையெழுத்துப் பத்திரிக்கை அவ்வளவு அழகாக இருக்கும். அதில் எப்படியாவது என் கவிதை வர வேண்டும் என்று ஏங்கியிருக்கிறேன். மாரீஸ் வீடும், சாரதா ஸ்டுடியோவும், அவருடைய அப்பாவும் , அண்ணனும் வேலைபார்த்த கலைக்கூடமும் அவ்வளவு ஆச்சரியத்தை தரக்கூடியதாக இருந்தது எல்லாவற்றிலும் கலையும் அழகும் ததும்பியது. மாரீஸ் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார்.  அவர் நடத்திய ஆம்லெட், குகை, மனனி, மானசரோவர் போன்ற பத்திரிகைகள் கலை மிளிரும் சிறந்த இலக்கியப் பதிவுகள். அத்துடன் எல்லா இலக்கியவாதிகளுக்கும் இணைப்பு மையமாகவும் இருந்தார் கி.ரா வந்தாலோ, தேவதேவன் வந்தாலோ, விக்கிரமாதித்தன் வந்தாலோ, ஜோதி விநாயகம் வந்தாலோ எல்லோரும் முதலில் அவரைச் சந்தித்து விட்டு பின்னர் மற்றவர்களை சந்திப்பது எனவோ, எல்லோரும் அவருடைய வீட்டுக்கோ, ஸ்டூடியோவுக்கு வந்து கூடுவது எனவோ, சில நேரம் அவரே மற்றவர்களச் சந்திக்க அழைத்துச் செல்கிற மாதிரியோ நடக்கும் இப்படி சிறிது நாளில் தமிழகம் முழுவதுமுள்ள இலக்கியவாதிகளுக்கு மாரீஸ் என்ற பெயர் பிரபலமான பெயராக மாறிவிட்டது.

நாங்கள் தீவிர இலக்கியத்தினுள் கால் வைத்திருந்த சமயம், திடீரென ஒருநாள் மாரீஸ் என்னிடம், நாம் புதிதாய் ஒரு அமைப்பைத் துவங்கியிருக்கிறோம். கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் அண்டு லிட்டரேச்சர் லவ்வர்ஸ் ( கால்ல்) என்று பெயர் அதனுடைய முதல் நிகழ்ச்சி நவீன ஒவியர் பிக்காசோவின் நூற்றாண்டு விழா ஓவியக் கண்காட்சியுடன் ஆரம்பிக்கப் போகிறோம் என்றார். உற்சாகமாகிவிட்டது எனக்கு. அநேகமாக தமிழ்நாட்டில் கோவில்பட்டியில் மட்டும் தான் பிக்காசோவின் ஓவியக்கண்காட்சி அப்போது நடைபெற்றது என்று நினைக்கிறேன். வாசலில் ஆறடி உயரத்திற்கு சுருட்டு பிடித்தபடியே பிக்காசோ வரவேற்றுக் கொண்டிருந்தார். ஏராளமான எழுத்தாளர்கள். இலக்கியவாதிகள் வந்திருந்தனர். அஃக் பரந்தாமன் அதில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்தக் கண்காட்சி முழுவதுமே மாரீஸின் உழைப்பும் திறமையும் தான். மாரீஸ் படைப்பூக்கத்தின் உச்சகட்டத்தில் இருந்த சமயம் அது. முதல்நாள் நானும் மாரீஸிம் சேர்ந்து ஸ்கிரீன் பிரிண்டிங்கில் அடித்த போஸ்டர்களை பசை வாளியை எடுத்துக் கொண்டு கோவில்பட்டி ஊரெங்கும் ஒட்டினோம். அதற்குப்பிறகு கார்ட்டூன் கண்காட்சி உலக சமாதான கண்காட்சி, யுத்த எதிர்ப்பு கண்காட்சி, என்று நிறைய்ய கண்காட்சிகள நடத்தினோம். ஒவ்வொரு நாளுமே புதிது புதிதாய் புலர்ந்து கொண்டேயிருந்த நாட்கள் அவை.images (7)

பிக்காசோ எங்கள் அன்புக்குரிய நவீன ஒவியராகி விட்டார். அவரைப்பற்றிய சிறு குறிப்புகளயும் விடாது படித்தோம். அவருடைய அமைதிப்புறா, குல்பெர்னிகா போன்ற ஒவியங்களை வியந்து போற்றினோம். பாசிசத்தை எதிர்த்த அவருடைய தீரமும் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகக் கடைசிவரை இருந்தார் என்பதும் இன்னும் உவப்பாக இருந்தது. அவருடைய கியூபிசபாணியிலான ஒவியம் குறித்தும் இம்ப்ரஸனிஸம் கோட்டோ வியம், வாட்டர்கலர், ஆயில் பெயிண்டிங் என்று ஓவியங்களின் விதங்கள் மாரீஸ் மூலமாகத்தான் எங்களுக்கு அறிமுகமானது.

கோவில்பட்டியில் நடைபெறும் எல்லா கலைஇலக்கிய நிகழ்வுகளிலும் மாரீஸின் பங்களிப்பு இல்லாமலிருக்காது. நூற்றுக்கும்மேற்பட்ட புத்தகங்களுக்கு அட்டையும் வடிவமைப்பும் செய்திருக்கிற மாரீஸ் அதிகம் பேசாதவர். ஆனால் கூரான,  விமரிசனங்கள முன் வைப்பவர். எல்லா விஷயங்களிலும் இதுவரை யோசித்திராத கோணத்தை முன் வைப்பவர், வேலை செய்வதில் பிசாசு. லெளகீக வாழ்வில் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் தான் ஒரு மகா கலைஞன் என்பதில் உள்ளூரப் பெருமிதம் கொண்டவர். அவர் மட்டும் கோவில்பட்டியில் இருந்திராவிட்டால் கோவில்பட்டிக்கு இன்றுவரை ஏற்பட்டுள்ள இலக்கிய மதிப்பு ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.

கோவில்பட்டியின் எத்தனையோ பெருமைகளில் என் அன்பு நண்பர் மாரீஸ் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் என்பதே எனக்கு பெருமை. மாரீஸ் மகத்தான கலைஞன்!

(எனது முன்னொரு காலத்திலே என்னும் நினைவுகளின் தொகுப்பிலிருந்து..) 

2 comments:

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. எனது குருவும் சித்தப்பாவுமாகிய மாரீஸ் பற்றிய பகிர்வுக்கு நன்றி அண்ணே...

    ReplyDelete