உங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறீர்கள்?
1. குழந்தைகளின் மறுப்பையும் விருப்பத்தையும் பெற்றோர்கள் மதிக்க வேண்டும். அவர்களிடம் தங்களுடைய விருப்பங்களையும் வெறுப்புகளையும் திணிக்கக்கூடாது.
2. குழந்தைகளின் நியாயமற்ற விருப்புவெறுப்புகளை பக்குவமாக மறுக்கவும் ஆற்றுப்படுத்தவும் பெற்றோர்களுக்குத் தெரியவேண்டும்.
3. குழந்தைகள் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்க உதவி செய்ய வேண்டும். அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். அதற்கு பெற்றோர்கள் அப்படி மாற வேண்டியது அவசியம்.
4. அனைத்துயிர்களுக்குமானது இந்த உலகமென்பதையும், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலையும் குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும்.
5. சாதி, மதம் சார்ந்த எந்த உயர்வு தாழ்வுகளையும் குழந்தைகளிடம் கற்பிக்கக்கூடாது. அப்படியேதேனும் குழந்தைகள் கேட்டால் அவர்களுக்கு விளக்கம் சொல்லுமளவுக்கு பெற்றோர்களுக்கு பண்பாட்டு வரலாறு தெரிய வேண்டும்.
6. பிரபஞ்சம், உலகம், உயிர்கள், தோன்றிய வரலாற்றை அறிவியல்பூர்வமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கட்டுக்கதைகளைச் சொல்லி நம்பவைக்கக்கூடாது.
7. வறட்டுத்தனமான அறிவுரையாக, அறவுரையாக, அறிவுறுத்தலாக எப்போதும் குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருக்கக்கூடாது. எதை நாம் அறிவுறுத்த வேண்டுமோ அதை கதைப்புத்தகங்களின் வழியே, கதைகளைச் சொல்வதின் வழியே சொல்ல வேண்டும்.
8. எல்லாக்குழந்தைகளுக்கும் நுண்கலைகளின் மீதான விருப்பம் இருக்கும். இசை, ஓவியம், விளையாட்டு, வாசிப்பு, இப்படி ஏதாவதொன்றில் ஈடுபடுவது, ஈடுபடுத்துவது குழந்தைகளின் மனதை வலிவூட்டும். வெறும் படிப்பு படிப்பு என்று போரடிக்கக்கூடாது.
9. நம் ஆசைகளின் வடிகாலாகக் குழந்தைகளை நினைக்கக்கூடாது. குழந்தைகளின் தனித்துவத்தைக் கண்டுபிடிப்பதும் அது வளர்வதற்கு துணைசெய்வதும் தான் தலையாயக்கடமை.
10. வாழ்வில் பொருள் ஈட்டி வெற்றி பெறுபவர்களாகக் குழந்தைகளை வளர்க்க வேண்டுமென்றே பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இல்லை. அதைவிட முக்கியம் நல்ல சமூக மனிதனாக வளர்ப்பது தான் என்பதை உணரவேண்டும்.
ஏனெனில்
வாழ்க்கை ஒரு பயணம்
பந்தயமல்ல.
|
|
So healthy post!!! எல்லோருக்குமே தேவையான ஒன்று.
ReplyDelete