Thursday, 19 June 2025

பேக்கரி தாக்குதல் - ஹாருகி முரகாமி

பேக்கரி தாக்குதல்

ஹாருகி முரகாமி

ஆங்கிலத்தில்மைக்கேல் வார்ட்

தமிழில்உதயசங்கர்




எப்படியிருந்தாலும் எங்களுடைய வயிறுகள் காலியாக இருந்தன. இல்லை. உண்மையில் நாங்கள் பசித்திருந்தோம். அது எப்படியிருந்ததென்றால் ஏதோ நாங்கள் விண்வெளியிலுள்ள கொஞ்சம் வெற்றிடத்தை விழுங்கிய மாதிரி இருந்தது. முதலில் ஆரம்பிக்கும்போது ஒரு சிறிய, மிகச் சிறிய வெற்றிடமாக, ஒரு டோனட்டிலுள்ள சிறிய துளை மாதிரி தான் இருந்தது. ஆனால் ஒரு நாள் கழிந்தபோது எங்களுடைய உடம்புக்குள் இருந்த அந்த உணர்வு அடித்தளமில்லாத வெறுமையின் உச்சத்தை நோக்கி கூடிக் கொண்டே போனது. எங்களுடைய வயிறுகளின் இரைச்சல் பசியின் ஞாபகச்சின்னத்துக்கு ஒரு புனிதமான பின்னணி இசையாக இருந்தது.

எப்படி இந்தப் பசி எழுந்தது? ஏனெனில் எங்களிடம் உணவு இல்லை. எப்படி எங்களிடம் உணவு இல்லாமல் போனது? ஏனெனில் எங்களிடம் பணப்பரிவர்த்தனைக்கான திட்டங்கள் ஏதும் இல்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் எங்களிடம் திட்டங்களுக்கான கற்பனைத்திறன் இல்லை. அதற்குக் காரணம் எங்களுடைய பசி தான். உண்மையில் இதிலெல்லாம் பெரிய வித்தியாசமுமில்லை.

கடவுள், மார்க்ஸ், ஜான் லென்னான் எல்லோரும் இறந்து போய் விட்டார்கள். ஆனால் நாங்கள் இப்போது பசியுடனிருந்தோம். இந்தக் காரணத்துக்காகவே நாங்கள் ஒரு குற்றம் புரிய இருந்தோம். பசியினால் தான் குற்றச் செயலில் ஈடுபடவேண்டியதிருக்கிறது என்று சொல்லமுடியாது. ஆனால் அந்தக் குற்றச்செயல் தான் எங்களைப் பசியுடன் ஓட வைத்துக் கொண்டிருக்கிறது. எனக்குச் சரியாகப் புரியவில்லை. ஆனால் அது தான் வாழ்க்கை.

எனக்கு முடியவில்லை..” என்று என்னுடைய நண்பன் மிகச் சில வார்த்தைகளில் பேசினான். நானும் அதை வழிமொழிந்தேன். கடந்த இரண்டு நாட்களாகத் தண்ணீரைத் தவிர வேறு எதையும் சாப்பிடவில்லை. ஒருமுறை நான் சூரியகாந்தி இலைகளை அது எப்படியிருக்குமென்று பார்ப்பதற்காகச் சாப்பிட்டேன். ஆனால் அதைத் திரும்பச் சாப்பிடவேண்டுமென்று தோன்றவில்லை.

இந்தக் காரணத்தினால், எங்களுடைய சமையலறைக் கத்திகளை எடுத்துக் கொண்டு பேக்கரிக்குப் போனோம்.  அந்தப் பேக்கரி வணிகவளாகத்தின் உள்ளே ஒரு மெத்தைக்கடைக்கும், ஒரு எழுதுபொருள் கடைக்கும்  நடுவிலிருந்தது. அந்தப் பேக்கரியின் சொந்தக்காரருக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்கும். வழுக்கைத்தலையுடன் இருந்தார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்.

வணிகவளாகப்பரபரப்பான சூழலில் கைகளில் கத்திகளைப் பிடித்தவாறு நாங்கள் பேக்கரியை நோக்கி மெல்ல நடந்தோம். அப்போது என்னுடைய உணர்வு உச்சிப்பகல் திரைப்படத்தினை ஒத்திருந்ததுநாங்கள் நடக்கும்போது வெந்து கொண்டிருக்கும் ரொட்டியின் நறுமணமும் அதிகமாகிக் கொண்டே வந்தது. உண்மையில் நறுமணம் கூடக் கூட எங்களுடைய குற்றச்செயலின்மீதான விருப்பமும் ஆழமானது. நாங்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையிலிருந்தோம். ஏனென்றால் நாங்கள் ஒரே நேரத்தில் பேக்கரியையும், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரையும் தாக்கப்போகிறோம். அந்தக் கணத்தில் இளம் ஹிட்லரின் ஆழமான உணர்ச்சிகளை நான் நினைவுபடுத்திக் கொண்டேன்.

அது பின் மதிய நேரமாக இருந்ததால் பேக்கரிக்குள் ஒரே ஒரு ஆள் மட்டுமே இருந்தான். அங்கே அருவருப்பான ஒரு வயதான பெண்மணி கையில் ஒரு அழுக்குப்பையுடன் நின்று கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. குற்றவாளிகளின் திட்டங்களை இது போன்ற அவலட்சணமான பெண்களே தடுத்து நிறுத்துவார்கள். குறைந்தது குற்ற நாடகங்களில் இப்படித்தான் நடக்கிறது. என்னுடைய கண்களின் வழியே கூடாளிக்கு ஒரு செய்தியனுப்பினேன். அந்தப் பெண் போனாலொழிய நாம் எதுவும் செய்யமுடியாது. எனவே நான் கத்தியை முதுகுக்குப் பின்னால் மறைத்துக் கொண்டேன். நாங்கள் கடையில் ரொட்டி வாங்க வந்த வாடிக்கையாளர்களைப் போல நடித்தோம்.

 அந்தப் பெண் ரொட்டிகளைத் தேர்வு செய்ய அசாதாரணமான நேரத்தை எடுத்துக் கொண்டாள். என்னவோ விவேகத்துடன் மூன்று கண்ணாடிகள் பதித்த பீரோவைத் தேர்வு செய்வதைப் போல நின்றாள். ஆனால் அதற்குப்பதில் அவளுடைய தட்டில் பொரித்த ரொட்டிகளும் முழாம் பழ ரொட்டிகளும் இருந்தனஅதற்கு அர்த்தம் அவள் அவற்றை வாங்கப் போகிறாள் என்பதில்லை. அவளுடைய ஆய்வின் ஒரு அம்சமாக பொரித்த ரொட்டி அல்லது முழாம்பழ ரொட்டி வாங்குவதற்காகவோ அல்லது முற்றிலும் அதற்கு எதிராகவோ இருக்கலாம் என்பதற்கு மேல் ஒன்றுமில்லாமலுமிருக்கலாம். அதனாலேயே அந்தச் சூழ்நிலையை அனுசரித்துத் தன்னை சௌகரியமாக வைத்துக் கொள்ள நீண்ட நேரம் அவளுக்குத் தேவைப்பட்டது.

ஆய்வில் முழாம்பழ ரொட்டி தன்னுடைய இடத்தை இழந்து விட்டது.

ஏன் நான் இப்படியொரு பொருளைத் தேர்வு செய்தேன்.. அது மிகவும் இனிப்பு..” என்று யோசித்தமாதிரியே தலையைக் குலுக்கிக் கொண்டாள். இன்னும் கொஞ்சநேரம் யோசித்தபிறகு முழாம்பழ ரொட்டியை அலமாரியில் அதனிடத்தில் திரும்ப வைத்தாள். பிறகு மெதுவாக இரண்டு பிறைவடிவ ரொட்டிகளை எடுத்து தட்டில் வைத்தாள். ஒரு புதிய ஆய்வுக்கோட்பாடு பிறந்து விட்டது. வசந்தகாலச் சூரியனின் பொங்கி வரும் ஒளிக்கிரணங்கள் மேகங்களிலிருந்து சிதறி பனிப்பாறையைச் சற்றே இளக்கியது.

என்ன கொடுமை.. நாம் அதைச் செய்யும்போது அந்தக் கிழட்டுச்சிறுக்கியையும் கொல்லணும்..”

என்று என்னுடைய நண்பன் மெல்லிய குரலில் சொன்னான்.

ஹேய்.. தள்ளியிரு..” என்று சொல்லிக் கொண்டே பின்னால் அவனிடத்துக்குத் தள்ளினேன். பேக்கரியின் சொந்தக்காரர் இதையெல்லாம் கவனிக்கும் மனநிலையிலில்லை. அவர் ரேடியோ கேசட் பிளேயரிலிருந்து வெளிப்படும் வாக்னரின் இசைத்துணுக்கைக் கேட்டுக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட கட்சியின் உறுப்பினர் வாக்னரைக் கேட்பது சரியானது தானா என்று எனக்குத் தெரியவில்லை.

அந்தப் பெண் பிறைவடிவ ரொட்டியையும், பொரித்த ரொட்டியையும் உற்றுப் பார்ப்பதைத் தொடர்ந்தாள். அவள் குழம்பி விட்டாளென்று தெரிந்தது.

இது பைத்தியக்காரத்தனமானது மட்டுமல்ல இயற்கைக்கு மாறானாது.. எந்த வகையிலும் பிறை வடிவ ரொட்டியும் பொரித்த ரொட்டியும் அருகருகே இருக்கக்கூடாது

இரண்டுவிதமான ரொட்டிகளுக்கும் வேறு வேறு தத்துவங்களைக் கொண்டவை என்று அவள் உண்ர்ந்திருக்க வேண்டும். தட்டின் மேலே இருந்த ரொட்டியை, அந்தப்பெண்ணின் நடுங்கிக் கொண்டிருந்த கைகள் டப டப வென சத்தத்துடன் ஆட்டிக் கொண்டிருந்தன. அது குளிர்சாதனப்பெட்டியின் வெப்பமானி உடைந்தது போலவே இருந்தது. உண்மையில் அந்த ரொட்டி ஆடவில்லை. ஆனால் முடிவில் அதை ஆட்டியதால் கிளக் கிளக் என்ற சூசகமாக சத்தமிட்டது.

நான் அவளைக் கொல்லப்போகிறேன்..

என் நண்பன் சொன்னான். அகோரப்பசியினால், வாக்னர், அந்தப் பெண் ஏற்படுத்திய பதற்றம், எல்லாம் சேர்ந்து அந்தச் சூழ்நிலையை பீச் பழத்தின் தோலைப் போல சிக்கலாக்கி விட்டது. நான் அமௌனமாக என் தலையைக் குலுக்கிக் கொண்டேன்.

இதையும் மீறி அந்தப் பெண் இன்னமும் கைகளில் தட்டுடன் தாஸ்தயேவ்ஸ்கியின் நரகத்தில் இருப்பதைப் போல அலைந்து கொண்டிருந்தார். அதைப் பார்க்கும்போது அந்த பொரித்த ரொட்டி மேடையில் நின்று கொண்டு ரோமின் குடிமக்கள் முன்னால்  உரையாற்றியதைப் போலவும் அந்த உரையினால் மக்கள் பெரிதும் உணர்ச்சி வசப்பட்ட மாதிரியும் இருந்தது. அப்படி அழகான வார்த்தைகள்! அப்படி அற்புதமான எதுகை மோனைகள். கம்பீரமான உரத்த சத்தத்துடன் உரையாற்றிய ஆணின் குரல் அந்த மக்களை ஒன்று போல கைகளைத் தட்டச் செய்தது. அடுத்ததாக பிறைவடிவ ரொட்டி மேடையில் ஏறியது. போக்குவரத்து சிக்னல்களைப் பற்றி ஒரு தாறுமாறான உரையை நிகழ்த்தியது.

அது இப்படிப் பேசியது,

பொக்குவரத்து சிக்னலில் பச்சை எரியும் போது இடது பக்கமாகப் போகவேண்டிய கார்கள் நேராக முன்னால் செல்ல வேண்டும்.வேறு கார்களேதும் இல்லையென்றால் இடது பக்கமாகத் திரும்பவேண்டும். ரோம் நகரக் குடிமக்கள் அந்த உரையை நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை. ஏனென்றால் அது ஒரு சிக்கலான கதை. அவர்கள் பாராட்டினார்கள். பொரித்த ரொட்டிக்குக் கிடைத்த கைதட்டல்களை விட பிறைவடிவ ரொட்டிக்கு அதிகமான கை தட்டல்கள் கிடைத்ததால் பொரித்த ரொட்டி மீண்டும் அலமாரிக்குள் அதனுடைய இடத்துக்குப் போய் விட்டது. இப்போது அந்தப் பெண்ணின் தட்டில் இரண்டு பிறைவடிவ ரொட்டிகள் எளிமையான முழுமையுடன் உட்கார்ந்திருந்தன. திருப்தியுடன் அவள் கடையை விட்டு வெளியேறினாள்.

இப்போது எங்களுடைய முறை.

நாங்கள் கடும்பசியில் இருக்கிறோம்..எங்களிடம் ஒரு பைசா கூட இல்லை..என்று நான் நேரடியாக பேக்கரிச் சொந்தக்காரரிடம் சொன்னேன். இன்னமும் அந்த சமையலறைக்கத்தியை பின்னால் மறைத்தே வைத்திருந்தேன்.

அப்படியா..தலையை ஆட்டிக் கொண்டே சொந்தகாரர் சொன்னார். நாங்கள் இருவரும் கல்லாப்பெட்டிக்கு மேலே இருந்த் இரண்டு நகவெட்டிகளைப் பார்த்தோம். அவை மிகப்பெரியவை. வல்லூறின் நகங்களை வெட்டுவதற்காக வைத்திருக்கலாம். இருந்தாலும் அவை ஒரு வேடிக்கையைப் போல இருந்தன.

உங்களுக்குப் பசிக்கிறதென்றால், நீங்கள் கொஞ்சம் ரொட்டியைச் சாப்பிடவேண்டும்..

என்று சொன்னார் சொந்தக்காரர்.

ஆனால் எங்களிடம் பணமில்லை..

நீங்கள் சொன்னதை ஏற்கனவே நான் கேட்டு விட்டேன்..என்று சலித்தமாதிரி சொன்னார் சொந்தக்காரர். பிறகு,

நீங்கள் பணம் கொடுக்கவேண்டாம்.. உள்ளே போய் வேண்டியதைச் சாப்பிடுங்கள்..என்றார்.

மறுபடியும் நான் அந்த நகவெட்டிகளைப் பார்த்தேன்.

உண்மையாகவா? நாங்கள் தகாத செயலைச் செய்யவிருந்தோம்..

ஆமாம்  ஆமாம்..

அதனால் நாங்கள் மற்றவர்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்ல முடியாது..

ஆமாம்..

அது அப்படி இருக்கிறது..

அப்படியா.. நல்லது.. நாம் இப்படிச் செய்வோம்.. நீங்கள் எவ்வளவு ரொட்டிகளைச் சாப்பிடமுடியுமோ அவ்வளவு சாப்பிட அனுமதிக்கிறேன்.. பிறகு நான் உங்கள் மீது ஒரு சாபம் விடுகிறேன்.. அது சரியாக இருக்காது? “

சாபமா? என்ன சொல்கிறீர்கள்? “

சாபத்தைக் கொஞ்சமும் கணிக்க முடியாதுஅது நம்முடைய பேரூந்து கால அட்டவணை மாதிரி தான்

ஹேய்.. ஒரு நிமிடம் இரு.. நான் சாபம் பெற விரும்பவில்லை..

அப்போது என்னுடைய கூட்டாளி குறுக்கிட்டான்.

நான் இதை வெறுக்கிறேன்.. நான் இப்போதே உன்னைக் கொல்வேன்..

பொறுங்கள்.. பொறுங்கள்.. நான் கொலை செய்யப்படுவதை விரும்பவில்லை..என்று சொந்தக்காரர் சொன்னார்.

நல்லது நானும் சாபமிடப்படுவதை விரும்பவில்லை..என்று என்னுடைய கூட்டாளியும் பதிலுக்குச் சொன்னான்.

நாம் எதையாவது பரிவர்த்தனை செய்து கொள்வது அவசியம்..என்று நான் சொன்னேன்.

அதற்கு மேல் நாங்கள் எதையும் பேசிக் கொள்லவில்லை. நாங்கள் மீண்டுமொருமுறை நகவெட்டிகளைப் பார்த்துக் கொண்டோம்.

இது எப்படியிருக்கும்.. உங்களுக்கு வாக்னரைப் பிடிக்குமா? “

என்று சொந்தக்காரர் ஆரம்பித்தார்.

பிடிக்காது..என்று நான் சொன்னேன்.

எனக்கும் தான்..என்று என்னுடைய கூட்டாளி சொன்னான்.

நல்லது.. வாக்னரைப் பிடித்த பிறகு வாருங்கள்.. அப்போது உங்களுக்கு வேண்டிய அளவுக்கு ரொட்டையைச் சாப்பிடத்தருகிறேன்..

அதைக் கேட்டபோது  இருண்ட கண்டத்தின் போதகரின் வாயிலிருந்து வருகின்ற கதையைப் போலிருந்தது. ஆனால் நாங்கள் உடனே ஈர்க்கப்பட்டோம். குறைந்தபட்சம் சாபம் பெறுவதை விட மேலானது.

எனக்குப் பிடித்திருக்கிறது..என்று நான் சொன்னேன்.

எனக்கும் பிடித்திருக்கிறது..என்று என்னுடைய கூட்டாளியும் சொன்னான்.

நாங்கள் வாக்னரைக் கேட்டுக்கொண்டே எங்களுடைய வயிற்றை ரொட்டியால் நிரப்பினோம்.

சொந்தக்காரர் இசைத்தட்டின் மேலட்டையில் இருந்த வாசகங்களை வாசித்தார்.

டிரிஸ்டனும், ஐசொல்டும் இசை வரலாற்றில் சிறப்பான சாதனையாகும். 1859 – ல் வெளியிடப்பட்டது. வாக்னரின் பிந்தைய படைப்புகளைப் புரிந்து கொள்ள இந்த இசைக்கோவை இன்றியமையாதது..

நானும் கூட்டாளியும் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. ஏனெனில் எங்கலுடைய வாய் நிறைய ரொட்டி இருந்தது. எங்களால் முணுமுணுக்க மட்டும் தான் முடிந்தது.

கார்ன்வால் அரசனின் மகனான டிரிஸ்டன் அவனுடைய மாமாவின் காதலியான இளவரசி ஐசோல்டை சந்திப்பதற்காக அனுப்பப்படுகிறான்.. ஆனால் கப்பல் திரும்பிவரும்போது ஐசோல்டைக் காதலிக்கத் தொடங்குகிறான். அந்த இசைத்துணுக்கு செல்லோஓபோ இசைக்கருவிகளின் இணையுடன் தொடங்கும். அதன் கருப்பொருள் அந்த ஜோடியின் காதலுக்கு தூண்டுதலாக இருக்கும்.

இரண்டு மணிநேரம் கழித்து இரண்டு தரப்பினரும் திருப்தியடைந்தோம். நாங்கள் பிரிந்து சென்றோம்.

நாளைக்கு நான் டான்ஹாசுரைக் கேட்கப் போகிறேன்..என்று அந்தக் கடைக்காரர் சொன்னார்.

எங்களுடைய அறைக்குத் திரும்பும்போது எங்களுக்குள் இருந்த வெறுமை ஒரு தடயமுமில்லாமல் மறைந்து விட்டது. எங்களுடைய கற்பனையின் சக்தி மென்மையான சரிவில் உருளுவதைப் போல அசையத் தொடங்கியது.

 

  

No comments:

Post a Comment