Wednesday, 18 June 2025

அவளுடைய நகரம் அவளுடைய ஆடுகள் - ஹாருகி முரகாமி

 

அவளுடைய நகரம் அவளுடைய ஆடுகள்

ஹாருகி முரகாமி

ஆங்கிலத்தில்கிகி

தமிழில் - உதயசங்கர்





வடக்கு ஜப்பானின் சப்பாரோ நகரத்துத் தெருக்களில் முதல் பனி விழத் தொடங்கி விட்டது. அது மழையாகத் தொடங்கிப் பின் பனியாக மாறி விட்டது. அது மீண்டும் மழையாக மாறுவதற்கு நீண்டகாலம் எடுக்கவில்லை. ஆனால் சப்பாரோவின் தெருக்களில் விழுந்த பனி அவ்வளவு ரம்மியமாக இல்லை. விரும்பாத விருந்தாளியை வரவேற்பதைப் போல இருந்தது. அன்று அக்டோபர் 23, வெள்ளிக்கிழமை.

நரிடா விமானநிலையத்திலிருந்து 747 –ல் டோக்கியோவை விட்டு  புறப்படும்போது நான் டி. சர்ட் மட்டுமே அணிந்திருந்தேன். என்னுடைய வாக்மேனில் தொண்ணூறு நிமிட பதிவைக் கேட்டு முடிக்கும் போது பனி பெய்யத் தொடங்கியிருந்தது.

இது வழக்கம் போலவே நடக்கிறது.. பொதுவாக ஆண்டின் இந்தச் சம்யத்தில் தான் முதல்பனி விழத்தொடங்கும்.. பிறகு அது குளிராக மாறிவிடும்..” என்று என்னுடைய நண்பர் சொன்னார்.

உண்மையில் மிகவும் குளிராக இருக்கிறது இல்லையா? “

விளையாட்டில்லை.. இது மிக மிக மிக குளிராக இருக்கிறது..”

நாங்கள் மேற்கு ஜப்பானிலுள்ள சிறிய அமைதியான கோபே என்ற ஊரில் ஒன்றாக வளர்ந்தோம். எங்களுடைய வீடுகள் ஐம்பது மீட்டர் இடைவெளியில் இருந்தது. நாங்கள் இருவரும் ஜூனியர் கிரேடு, சீனியர் கிரேடு, இரண்டையும் உயர்நிலைப்பள்ளியில் ஒன்றாகவே படித்தோம். பள்ளிச் சுற்றுலாவுக்குச் சேர்ந்தே சென்றோம்.  ஒரு முறை நாங்கள் அதிகமாகக் குடித்திருந்தோம். திடீரென திறந்த காரின் கதவுகள் வழியே கீழே விழுந்து உருண்டோம். பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற பிறகு நாங்களிருவரும் வேறு வேறு கல்லூரிகளில் சேர்ந்தோம். நான் டோக்கியோவுக்குப் போனபோது  அவன் ஹொக்கைடோவுக்கு வடக்கில் போய் சேர்ந்தான். டோக்கியோவில் என்னுடைய வகுப்புத்தோழியைத் திருமணம் முடித்தேன். என்னுடைய நண்பன் ஹொக்கைடோவிலுள்ள ஒடாரு நகரத்திலுள்ள அவனுடைய வகுப்புத்தோழியைத் திருமணம் முடித்தான். இப்படித்தான் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. காற்றில் பறக்கும் விதைகளைப் போலப் சிதறிப்போனோம்.

ஒருவேளை அவன் டோக்கிவிலுள்ள கல்லூரியில் படித்து, நான் ஹொக்கைடோவிலுள்ள கல்லூரியில் படித்திருந்தால் எங்களுடைய வாழ்க்கை முற்றிலும் வேறுமாதிரி ஆகியிருக்கும். அநேகமாக நான் ஒரு சுற்றுலா நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு உலகைக் களிப்புடன் சுற்றிக் கொண்டிருந்திருப்பேன். அவன் டோக்கியோவில் ஒரு எழுத்தாளராகியிருப்பான். ஆனால் விதி என்னை எழுத்தாளராக வழி நடத்தியது. அவனுடைய பாதை அவனை சுற்றுலா நிறுவனத்துக்கும் அழைத்துச் சென்றது. இப்போதும் ஒவ்வொரு நாளும் சூரியன் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

என்னுடைய நண்பனுக்கு ஆறுவயது மகன் ஹொகுடோ இருந்தான். அவனுடைய மணிபர்சில் எப்போதும் மகனுடைய மூன்று புகைப்படங்களை வைத்திருப்பான். ஹொகுடோ மிருகக்காட்சி சாலையில் ஆடுகளுடன் விலையாடிக் கொண்டிருப்பான். ஹொகுடோ இலையுதிர்கால  சிச்சிகோசன்* திருவிழா உடைகள் அணிந்திருப்பான். விளையாட்டு மைதானத்தில் ஹொகுடோ ராக்கெட்டை ஓட்டிக் கொண்டிருப்பான். நான் அந்தப் படங்களைத் திருப்பிக் கொடுப்பதற்கு முன் ஒவ்வொரு படத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று முறை பார்த்தேன்.  நான் என்னுடைய பியரையும் ஹொக்கைடோவின் ருசிமிக்க பண்டமான குளிர்ந்த ரூய்பியை எடுத்துக் கொண்டேன்.

சரி.. பி என்ன செய்கிறான்? “

அவன் என்னிடம் கேட்டான்.

மிக நன்றாக இருக்கிறான்.. இப்போது தான் ஒருநாள் தெருவில் அவன் மீது மோதிக் கொண்டேன்.. அவனுக்கு விவாகரத்தாகி விட்டது. இப்போது ஒரு இளம்பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்..

க்யூ எப்படி இருக்கிறான்? “

அவன் ஒரு விளம்பர ஏஜென்சியில் வேலை பார்க்கிறான். அவ்வப்போது சில பயங்கரமான நகல்களை எழுதுவான்..

அது எனக்கு ஆச்சரியமாக இல்லை..

மற்றும்மற்றும்

நாங்கள் பணத்தைக் கொடுத்து விட்டு ரெஸ்டாரண்டுக்கு வந்தோம். மறுபடியும் மழை பெய்யத் தொடங்கியது.

சொல்லு.. நீ சமீபத்தில் கோபே க்குப் போயிருந்தாயா? “

இல்லை.. அது ரொம்ப தூரம்.. நீ எப்படி? “ என்று தலையைக் குலுக்கிக் கொண்டே கேட்டான்.

நானும் போகவில்லை.. எனக்கு அங்கே திரும்பிப் போக அவ்வளவு விருப்பமுமில்லை..

ஆமாம்..

இத்தனை ஆண்டுகளில் பக்கத்து வீட்டுக்காரர்கள் மாறியிருப்பார்கள்..

நாங்கள் சப்பாரோவின் தெருக்களில் பத்து நிமிடங்கள் மட்டுமே நடந்தோம். மிகவிரைவில் பேசுவதற்கு விஷயங்கள் இல்லாமல் போய் விட்டது. நான் ஹோட்டலுக்குத் திரும்பினேன். அவனுடைய சிறிய அபார்ட்மெண்டுக்கு அவன் திரும்பினான்.

அடிக்கடி தொடர்பிலிரு.. உடம்பைப் பார்த்துக் கொள்..

நீயும் தான்..

திடீரென கேட்ட கன்வெர்ட்டரின் சத்தம், நாளை நாங்கள் இருவரும் மறுபடியும் ஐநூறு கிலோமீட்டர் தூரத்துக்குப் பிரிந்து விடுவோம் என்பதை எனக்கு உணர்த்தியது. சில நாட்களில் நாங்கள் வேறு வேறு தெருக்களில் நடந்து கொண்டிருப்போம். எங்களுடைய சலிப்பூட்டும் நடைமுறைகளுக்குத் திரும்பியிருப்போம். எலிப்பந்தய எலிகளைப் போல எந்த நோக்கமுமில்லாமல் ஒரு பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருப்போம்.

என்னுடைய ஹோட்டலுக்குத் திரும்பிய பிறகு, நான் தொலைக்காட்சியை இயக்கினேன். ஒரு உள்ளூர் பொது நலச்சேவை நிகழ்ச்சியைக் கவனிக்கத் தொடங்கினேன். என்னுடைய காலணிகளைக் கழற்றாமலே படுக்கையில் ஏறி உட்கார்ந்தேன். கவனமில்லாமல் தொலைக்காட்சித்திரையைப் பார்த்துக் கொண்டே ரூம் சர்வீசில் பியரும், புகையூட்டப்பட்ட சால்மன் சாண்ட்விச்சையும் வாங்கித் தாக்கத் தொடங்கினேன்.

 கருநீல உடையணிந்த ஒரு இளம்பெண் திரையின் நடுவில் தனியாக நின்று கொண்டிருந்தாள். கேமிரா ஒரு பொறுமையான ஊனுண்ணியைப் போல  அவளைக் காட்டியது. அவளுடைய உருவத்தின் மீது அசையாமல் நின்றது. அது முன்னேறவுமில்லை. பின் வாங்கவுமில்லை. எனக்கு ஒரு கோடார்ட் சினிமாவைப் பார்ப்பதைப் போல உணர்ந்தேன்.

ஆர் நகரத்தின் உள்ளூர் அரசாங்கத்தில் விளம்பரத்துறையில் வேலை பார்க்கிறேன்..என்று அந்தப் பெண் சொன்னாள். அவள் கொஞ்சம் உள்ளூர் உச்சரிப்புடன் பேசினாள். அவளுடைய குரலில் நடுக்கமிருந்தது. ஒருவேளை அவள் கொஞ்சம் பதட்டதிலிருந்ததால் இருக்கலாம்.

ஆர் நகரம் சிறியது. அங்கே ஏழாயிரத்து ஐநூறு மட்டுமே வசிக்கிறார்கள். எங்களுடைய சிறிய நகரத்திலிருந்து புகழ் பெற்றவர்கள் யாருமில்லை. அதனால் அந்த நகரத்தைப் பற்ரி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. “

அது மிகவும் மோசமென்று நான் நினைத்தேன்.

எங்களுடைய முக்கியமான தொழில்கள் விவசாயமும், பால் பண்ணைகளும் தான். அரிசி உற்பத்தி தான் எங்கள் நகரத்தின் முதன்மையான. ஆனால் சமீபத்திய அரசின்  மானியக் கொள்கையின் மாற்றங்களினால், புறநகர்ப்பகுதிகளுக்காக பார்லி கோதுமை,, காய்கறிகளை உற்பத்தி செய்யத் தள்ளப்பட்டிருக்கிறோம். எங்கள் நகரத்தின் எல்லைகளில் இருநூறு மாடுகள், நூறு குதிரைகள், அதே போல நூறு ஆடுகள் இருக்கின்ற மேய்ச்சல் நிலங்கள் இருக்கின்றன. இந்தத் தருணத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகிக் கொண்டிருக்கிறது. அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் கால்நடைகளின் உற்பத்தி இன்னும் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கிறோம்..

உண்மையில் அவள் அழகானவள் என்று சொல்லப்போவதில்லை. அவளுக்கு வயது இருபது இருக்கலாம். கம்பி விளிம்பிட்ட கண்ணாடி அணிந்திருந்தாள். அவள் நட்பார்ந்த புன்னகையுடன் இருந்தாள். அவள் அற்புதமானவளென்றே நான் நினைத்தேன். கோடார்டியக் கேமிரா அவளுடையத் தனிச்சிறப்பான அம்சத்தை சிறப்பாகப் படம் பிடித்தது. சாத்தியமான, சிறந்த ஒளியில் அவளை நிற்க வைத்து தொடர்ந்து அந்த தனிச்சிறப்பான அம்சத்தை அழுத்தமாகக் காட்டியது. நம்மில் யார் வேண்டுமானாலும் ஒரு பத்து நிமிடங்கள் அந்தக் கேமிராவுக்கு முன்னால் நின்றால் நாமும் அற்புதமானவர்களாகத் தெரிவோம். அப்படித்தான் அதை நான் பார்த்தேன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் எங்கள் சிறிய நகரத்துக்கு அருகிலுள்ள ஆர் நதியில் தங்கத்துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். நாங்கள் லேசான தங்கத்துகள் அதிரொலியை அனுபவித்தோம். ஆனால் விரைவிலேயே தங்கத்துகள் தீர்ந்துபோய் விட்டது. அது மலைகளில் எண்ணற்ற குடில்களையும், பாதைகளையும் தழும்புகளாக விட்டுச் சென்றது. உண்மையில் அது பெரிய வருத்தம் தான்.

நான் புகையூட்டப்பட்ட சால்மன் மீனின் கடைசித்துண்டை என் வாயில் திணித்தேன். கடைசி மடக்கு பியரினால் என் வாயைக் கழுவினேன்.

நகரத்தில்.. ம்ம்ம்ம்ம்சில வருடங்களுக்கு முன்பு,  அந்த நகரத்தின் மக்கட்தொகை கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்கு உயர்ந்திருந்தது.  ஆனால் சமீபகாலமாக விவசாயத்தை கைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பிரச்னை என்னவென்றால் இளைஞர்கள் பெருநகரங்களை நோக்கிப் போகத் தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே என்னுடைய வகுப்புத்தோழர்கள் பாதிக்கு மேல் போய் விட்டார்கள்.. ஆனால் இங்கேயே தங்கிவிட முடிவு செய்தவர்கள் எங்கள் நகரத்துக்கு எது சிறந்ததோ அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்..

எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லப்போகிற கண்ணாடி என்பதைப் போல அவள் தொடர்ந்து கேமிராவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் என்னை நேரே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. குளிர்பதனப்பெட்டியைத் திறந்து இன்னொரு பியரை எடுத்துத் திறந்து அதிகமாக ஊற்றிக் குடித்தேன்.

அந்தப் பெண்ணின் நகரம்.

அவளுடைய சிறிய நகரத்தைக் கற்பனை செய்வதில் எனக்கொன்றும் பெரிய பிரச்னையில்லை. ஒரு சிறிய ரயில்வே ஸ்டேஷன், அங்கே ரயில் ஒரு நாளைக்கு எட்டு தடவை மட்டுமே நிற்கும். அந்த ஸ்டேஷனின் காத்திருப்போர் அறையில் சிறிய ஹீட்டர் இருக்கும். சிறியதொரு சுத்தமான ரவுண்டானா, அங்கே பேருந்துகள் வந்து மக்களை அழைத்துச் செல்லும். அந்த நகரத்தைப் பற்றிய வரைபடம், அதிலிருக்கும் பாதி எழுத்துகளை வாசிக்கமுடியாது. சாமந்திப்பூக்களின் பரப்பும் வரிசையான ஒதியமரங்களும் இருக்கும். வெள்ளை நிற சொறிநாய் ஒன்று வாழ்க்கையில் சலிப்புடன் இருக்கும். பள்ளிக்கூட சீருடைகளுக்கும், ,தலைவலி மருந்துகளுக்கான விளம்பரமும் இருக்கும். ஒப்பீட்டளவில் பெரிய ஆனால் எந்தப் பயனுமில்லாமல் அந்த நகரத்தின் முக்கியமான சாலை இருக்கும். ஜப்பானிய பாதுகாப்புப்படைக்கு ஆள் சேர்ப்பதற்கான விளம்பரமும் இருக்கும். ஒரு மூன்று மாடிக்கட்டிட டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் விதம் விதமான பொருட்கள் ஏராளமாக விற்றுக் கொண்டிருப்பார்கள். ஒரு சிறிய சுற்றுலா ஏஜென்சி, ஒரு விவசாயிகளின் கூட்டுறவு பண்டகசாலை, ஒரு வனத்துறை மையம், ஒரு கால்நடை மருத்துவமனைக் கட்டிடம் இருக்கும். அந்த நகரத்தின் பொதுக்குளியலறைக் கட்டிடத்தின் புகைபோக்கி வானத்தை நோக்கி நிமிர்ந்து நிற்கும். நகரின் முக்கியப்பகுதிக்கு முன்னால் இடது பக்கமாய் இரண்டு கட்டிடங்கள் தள்ளி அந்த நகரத்தின் அரசாங்கக்கூடம் இருக்கும். அங்கே அதான் அவள் பி.ஆர். செக்ஷனில் உட்காந்திருப்பாள். உண்மைதான் அது சலிப்பூட்டும் நகரம் தான். வருடத்தில் பாதி பனி போர்த்தியிருக்கும். அவள் அங்கே உட்கார்ந்து நகல் எடுத்துக் கொண்டிருப்பாள்.

நாங்கள் விரைவில் ஆடுகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமலிருக்க மருந்துகளை விநியோகிக்கப் போகிறோம். உங்களுக்கு ஆர்வமிருந்தால் தயவு செய்து முறையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சமர்ப்பித்து விடுங்கள். “

சப்பாரோ ஹோட்டலின் சிறிய அறைக்கு மீண்டபோது, எனக்குத் திடீரென்று அந்தப் பெண்ணின் வாழ்க்கையுடன் தெளிவான தொடர்பு இருப்பதாக உணர்ந்தேன். நான் அவளுடைய இருப்புடன் தொடர்பு கொண்டு விட்டேன். ஆனாலும் ஏதோ ஒன்று இல்லை. எனக்கு நன்றாகப் பொருந்தாத, கடன் வாங்கிய ஆடையில் நான் இருப்பதாக உணர்ந்தேன். எனக்கு அசௌகரியமாக இருந்தது. என்னுடைய கால்கள் கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது. அந்தக் கயிறை மங்கிய கைக்கோடாரியினால் துண்டிக்க வேண்டுமென்று நான் யோசித்தேன். ஆனால் நான் அப்படிச் செய்தால் எப்படி நான் திரும்புவேன்? அது என்னை அமைதியற்றவனாக்கி விடும். எப்படியிருந்தாலும் நான் அந்தக் கயிற்றைத் துண்டிக்கவேண்டும். நான் அதிகமான பியரைக் குடித்திருக்கலாம். வெளியே விழும் பனி இந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். இவ்வளவு தான் என்னால் யோசிக்க முடிந்தது. நான் ய்தார்த்தத்தின் இருண்ட சிறகுகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். என்னுடைய நகரம். அவளுடைய ஆடுகள்.

இப்போது புதிய மருந்து கொடுத்து நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க ஆடுகளைத் தயாராக அவள் வைத்திருப்பாள். நானும் தான். நானும் என்னுடைய ஆட்டை குளிர்காலத்துக்குத் தயாராக வைத்திருக்கவேண்டும். நான் வைக்கோலைத் தொட்டிகளில் சேகரிக்க வேண்டும். மண்ணெண்ணெயும் வேண்டும். நான் அந்தச் சன்னலைச் சரி செய்யவேண்டும். இதோ வந்து விட்டது குளிர்காலம்.

அது என்னுடைய நகரம், அது அவ்வளவு சுவாரசியமில்லாமலிருக்கலாம்.. ஆது என்னுடைய வீடு.. உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அங்கே வாருங்கள்.. உங்களுக்கு எங்களால் என்ன முடியுமோ அதைச் செய்வோம்..

என்று அந்தப் பெண் தொலைக்காட்சியில் தொடர்ந்தாள்.

மாயம் போல அவள் என்னுடைய தொலைக்காட்சித் திரையிலிருந்து மறைந்தும் போனாள். நான் அதை அணைத்து விட்டு மீதமிருந்த பியரைக் குடித்து முடித்தேன். நான் அவளுடைய நகரத்துக்குப் போவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். நான் ஏற்கனவே நிறையப்பொருட்களைத் தூர எறிந்து விட்டேன். வெளியே பனி தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தது.

அந்த இருளில் நூறு ஆடுகள் தங்களுடைய கண்களை மூடிக் கொண்டிருந்தன.

நன்றி - சிறுகதை காலாண்டிதழ்

 

 

.  

 

No comments:

Post a Comment