ஓடு! ஓடு! ஓடு!
உதயசங்கர்
பன்னி முயலுக்கு எதைக் கண்டாலும் பயம். எதைக்கேட்டாலும் பயம். எப்போதும் ஏதாவது நடந்து விடுமோ என்று பயந்து நடுங்கும். அம்மா அப்பாவிடம் கேட்கும்,
“
அப்பா மேலே இருக்கிற வானம் கீழே விழுந்தா என்ன ஆகும்? “
“
இந்த மலை அப்படியே குப்புறப்படுத்தா என்ன ஆகும்? “
“
ஆற்றில் வெள்ளம் வந்தா என்ன ஆகும்? “
“
எல்லா மரங்களுக்கும் பைத்தியம் பிடிச்சா என்ன ஆகும்? “
இப்படிக் கேள்வி மேலே கேள்வி கேட்டுக் கொண்டே
இருக்கும். அம்மாவும் அப்பாவும்,
“
பயப்படாதே பன்னி.. அப்படி எதுவும் நடக்காது..” என்று ஆறுதல் சொல்வார்கள். ஆனாலும் பன்னிமுயலுக்குப் பயம் போகாது. கற்பனை செய்து கொண்டே இருக்கும்.
ஒருநாள் இரவில் முயல் குடும்பம் வளைக்குள் படுத்துறங்கிக் கொண்டிருந்தது. வெளியில் பெரும் காற்று அடித்தது. மரங்கள் பயங்கரமாய் ஆடின. காற்றின் ஊளைச்சத்தம் கேட்டது. இடி, மின்னல், மழை பெய்தது.
பன்னி முயலின் உடல் நடுங்கியது. அது அம்மாவை அழைத்தது.
“
அம்மா அம்மா.. எனக்குப் பயமாக இருக்கும்மா..”
“
பேசாம படு பன்னி.. மழைக்காலம் அப்படித்தான் இருக்கும்..”
என்று அம்மா சொன்னதைக் காதில் வாங்கவில்லை. காதுகளை மடக்கி முன்கால்களால் மூடியது. அப்படியும் சத்தம் கேட்டது.
திடீரென்று ஒரு பெரிய சத்தம். அப்படியே பன்னி முயல் இருந்த வளை குலுங்கியது. படுத்த இடத்தில் இருந்து தூக்கிப் போட்டது. அவ்வளவு தான்.
பன்னி முயல் துள்ளிக்குதித்தது.
”
ஐய்யய்யோ.. உலகம் அழியப்போகுது..” என்று கீச்சிட்டது.
வளைக்கு வெளியே பாய்ந்தது. ஒரே இருட்டு.
“
ஐயய்யோ.. உலகம் அழியப்போகுது..
ஐயய்யோ உலகம் அழியப்போகுது..” என்று கத்திக் கொண்டே முன்னால் ஓடியது.
பன்னி முயலின் சத்தத்தைக் கேட்டு முழித்த மற்ற விலங்குகளுக்கு எதுவும் புரியவில்லை.
தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கும் பன்னி முயலைப் பார்த்தார்கள். அதன் கூக்குரலைக் கேட்டார்கள்.
“
ஓடு ஓடு உலகம்
அழியப்போகுது..”
உடனே எல்லோருக்கும் பயம் வந்து விட்டது. எல்லோரும் பன்னி முயலின் பின்னால் ஓடினார்கள். புள்ளிமான், குள்ளநரி, வெள்ளெலி, காட்டெலி, புலி, காட்டெருமை, செந்நாய், உடும்பு, குரங்கு, சிறுத்தை, காட்டுப்பன்றி, கழுகு, புறா, காகம், சிட்டுக்குருவி, மைனா, இருவாச்சி, என்று எல்லோரும் ஓடினார்கள்.
கூட்டம் கூடி விட்டது. விலங்குள் ஓடும் சத்தத்தில் காடே அதிர்ந்தது. பல விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் எதற்காக ஓடுகிறோம் என்று தெரியவில்லை. எல்லோரும் ஓடுகிறார்கள். நாமும் ஓடுவோம் என்று நினைத்துத் தான் ஓடிக் கொண்டிருந்தன.
புலி அருகில் ஓடிக் கொண்டிருந்த புள்ளிமானிடம் கேட்டது,
“
எதற்காக ஓடுகிறாய்? “
“
தெரியாதா உனக்கு உலகம் அழியப் போகுதாம்..”
அதைக் கேட்ட உடனே புலி இன்னும் நாலுகால் பாய்ச்சலில் ஓடியது. அப்படியே எல்லாவிலங்குகளும் பறவைகளும்,
“
ஓடு ஓடு . உலகம் அழியப்போகுதாம்..” என்று கத்திக் கொண்டே ஓடின. பறந்தன.
முன்னால் ஓடிக் கொண்டிருந்த பன்னி முயலிடம்,
“
எங்கே போகிறோம்? “ என்று காட்டுப்பன்றி கேட்டது.
“
நம் தலைவரைப் பார்த்து இதற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்கச் சொல்வோம்..” என்றது பன்னி முயல்.
“
சரி.. இன்னும் சீக்கிரமாகப் போக வேண்டும்.. தலைவரைப் பார்ப்பதற்குள் உலகம் அழிந்து விடக்கூடாது...ஐயய்யோ என் குட்டிகள் பாவம்..”
என்று சொல்லிவிட்டு காட்டுப்பன்றி இன்னும் வேகமாக ஓடியது.
விலங்குகளின் தலைவர் சிம்பா சிங்கம் இருந்த குகையை நோக்கித் தான் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தன.
குகையை நெருங்கி விட்டன.
ஓடிக்கொண்டே எல்லாவிலங்குகளும்
“
தலைவா.. தலைவா. எங்களைக் காப்பாற்றுங்கள்.. உலகம் அழியப்போகுது...” என்று கத்தின.
தூக்கம் கலைந்து குகைக்குள்ளிருந்து வெளியே வந்த சிங்கம் அதைக் கேட்டது.
,
அவ்வளவு தான். ,
பின்னங்கால் பிடறியில் பட எல்லாருக்கும் முன்னால் பாய்ந்து ஓடியது. .
ஓடும்போது,
“
ஓடு ஓடு உலகம்
அழியப்போகுது.. ஓடு ஓடு உலகம் அழியப்போகுது..”
என்று கர்ஜித்தவாறே ஓடியது. ஒரு கணம் திகைத்து நின்று விட்ட அத்தனை விலங்குகளும் மறுபடியும் ஓடத் தொடங்கின.
“
ஓடு ஓடு உலகம் அழியப்போகுதாம்..” என்று எல்லாவிலங்குகளும் கத்தின.
காலையில் வளையிலிருந்து வெளியே வந்த பன்னி முயலின் அம்மா அருகில் காற்றில் விழுந்து கிடந்த பெரியமரத்தை ஆச்சரியத்துடன் பார்த்தது. அந்த மரத்தின் மீது பன்னி முயலின் அப்பா அம்மா தம்பி தங்கை எல்லோரும் ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அம்மா கேட்டது.
“
எங்கே போனாங்க எல்லாரும்? “
உங்களுக்குத் தான் தெரியுமே!
நன்றி - விஞ்ஞானத்துளிர் ஜூன் 2025
No comments:
Post a Comment