Thursday 12 April 2012

குட்டி உலகத்தின் குட்டி மனிதர்கள்

-indian-children-near-yellow-wall-in-the-village-of-kanyakumari-anastasiia-kononenko குட்டி உலகத்தின் குட்டி மனிதர்கள்..

குட்டித் தலையணை, குட்டிப்போர்வை

குட்டி டம்ளர் மற்றும்

குட்டிக் கொட்டாவியுடன்

குழந்தைகள் உருவாக்குகிறார்கள்

ஒரு குட்டி உலகத்தை

அதில் பெற்றோர்களின் பெரிய விரல்களுக்கு

குட்டிக் கவளங்களைச் செய்யும்

பயிற்சியைத் தருகிறார்கள்.

- முகுந்த் நாகராஜன்.

உலகமெங்கிலும் குழந்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டிய முறையில் அவர்கள் புரிந்து கொள்ளப்படுவதில்லை. குழந்தைகள் இயற்கையின் அற்புதப்படைப்பு. அபூர்வமான பரிசு என்று உணர்ந்து கொள்வதில்லை. அது மட்டுமல்ல நாம் உருவாக்கிய, உருவாக்கிக்கொண்டிருக்கிற இந்த உலகம், சமூகம், குழந்தைகளின் கைகளுக்குத்தான் வரப்போகிறது, என்பதை எண்ணிப்பார்ப்பதில்லை. அப்படி யோசித்திருந்தால் உரியமுறையில் குழந்தைகளை, அவர்களுடைய உலகத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்திருப்போம்.

பெரும்பாலோர் குழந்தைகளை பயிற்சி கொடுக்கப்படாத, பழக்கப்படுத்தப்படாத மானுட விலங்குகள் என்று நினைக்கிறார்கள். ஆதலால் குழந்தைகளுக்கு என்ன தெரியும் என்று அலட்சியம் காட்டுகிறார்கள். ஆனால் பூமியில் பிறந்த கணத்திலிருந்து தன் இடைவிடாத உழைப்பினால் குழந்தைகள் எல்லாவற்றையும் அறிந்துகொள்கிறது. அதன் மனதின் அகஉலக கட்டமைப்பு உருவாகத் தொடங்கி விடுகிறது. பேசத் தெரியாவிட்டாலும், எல்லாவித உணர்வு நிலைகளையும், அனுபவித்து அதைச் சேகரமாக்கிக்கொள்கிறது. இதற்கு இயற்கை உணர்வும், இயல்பாக உள்ள மரபணுக்களின் தூண்டுதல்களும், புறவயமான சூழ்நிலைகளும் துணை புரிகின்றன. நாளும் பொழுதுமாய் குழந்தைகள் அறிதலின் மூலமே வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. இருட்டும் நிசப்தமும் நிறைந்த தாயின் கருவறையிலிருந்து வெளிச்சமும் இரைச்சலும் மிகுந்த இந்த உலகத்தைக் கண்டு ஏற்படும் அதிர்ச்சிதான் குழந்தைகளின் இளம் மனதில் ஏற்படும் முதல் பதிவு. கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் தன் புலனுணர்வுகள், அவற்றில் ஏற்படும் சுகம், வலி, வேதனை மூலம் இந்த உலகத்தை உள்ளுணர்வுபூர்வமாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றன. பிறப்பிலிருந்தே குழந்தையின் புலன் உறுப்புகள் கூர்மையானவையாக இருக்க, அதிலும் குறிப்பாக தொடு உணர்வும், ஒலி எழுப்பும் மற்றும் கேட்கும் உணர்வும் அதிகக் கூர்மையுடன் இருக்கின்றன. எனவே தங்கள் உணர்வுகளை பசி, தாகம், வலி, வேதனை, அதிருப்தி, கலகம் இப்படி எல்லாவற்றையும் அழுகையின் மூலமாகவே வெளிப்படுத்துகின்றன. தொடு உணர்வின் மூலம் மென்மையை, முரட்டுத்தனத்தை, சுகத்தை, வலியை உணர்கின்றனர். இந்த அனுபவங்களை இன்னும் தளிராக உள்ள மூளையின் இளம் பரப்புகளில் பதிவு செய்கின்றன. இந்தப் புதிவுகளின் மூலம் தான் குழந்தைகள் இன்பம், துன்பம் என்ற இருவேறு பிளவுபட்ட உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றனர்.

இவையெல்லாமே உள்ளுணர்வின் மூலமாகவே ஆழ்மனதில் மூழ்கிச் சேர்ந்துவிடுகின்றன. இப்படிச் சேகரமாகிற உள்ளுணர்வின் அனுபவங்களை வளர்ந்த பிறகு அதன் பிரதிபலிப்புகளை அவ்வளவு எளிதில் விளக்கி விடமுடியாது. ஆனால், குழந்தைகளின் ஆளுமைத் திறனை உருவாக்குவதில் உணர்வுநிலையில் இந்தப்பருவம் மிக முக்கியப்பங்கு வகிக்கிறது.

இந்தப்பருவத்தில், குழந்தைகளை அலட்சியப்படுத்துவதோ புறக்கணிப்பதோ, அவமானப் படுத்துவதோ, பயமுறுத்துவதோ அவர்களுடைய ஆளுமைத் திறனைப் பெரிதும் பாதிக்கும்.

குழந்தைகள் தங்களுக்கு நேர்கிற அனுபவங்களை தாங்கள் கண்டறிகிற புதிய விஷயங்களை முழுவதுமாக அறிந்து கொள்ளும் வரை, அதன் நினைவுக்கிடங்கில் பதிகிற வரை அந்த விஷயங்களை திரும்பத் திரும்ப செய்யவே விரும்புகிறது. அந்த அனுபவத்தின் மூலம் விளைகிற பலனை உணர்ந்த பின்னரே அடுத்த அனுபவத்திற்குப் பயணப்படுகிறது. தவழும்போது அதன் பார்வைத் திறன் கூர்மையால், நம் கண்ணுக்குத் தெரியாத சிறு எறும்பின் பின்னால் தொடர்ந்து சென்று தொட்டுப்பார்க்கிறது குழந்தை. இப்படிப்பட்ட கூடுணர்ச்சிகள் மிக்க புலன்திறனோடு வளர்கிற, குழந்தைகளின் முன்னால் பெற்றோர்களும் சரி, பெரியவர்களும் சரி இதெல்லாம் குழந்தைக்குப் புரியாது, என்று அப்பாவித்தனமாய் ஏமாந்து போகிறார்கள்.

எந்த விஷயமாக இருந்தாலும் குழந்தைகளின் முன்னால் பேசப்படுகிற, நிகழ்த்தப்படுகிற, செயல்களின் முழுமையான அர்த்தம் தெரியாமல் போனாலும், அதன் அடிப்படையான உணர்வு நிலைகளை குழந்தைகள் புரிந்துகொண்டு விடும். அந்த உணர்வுநிலைகள் அதன் அக உலகத்தில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.

குழந்தைகளின் குட்டி உலகத்திற்குள் பெற்றோர்களாயினும், மற்றவர்களாயினும், பிரம்மாண்டமான தங்கள் ஆகிருதியுடனோ, அதிகாரத்துடனோ நுழைவதை குழந்தைகள் ஒருபோதும் விரும்புவதில்லை. குழந்தைகளுக்காக குட்டியான ஒரு பால்பாட்டில் குட்டியான ஒரு சங்கு, குட்டியான கிலுக்கு, குட்டியான படுக்கை, தொட்டில் என்று உருவாக்கி அவர்களை அங்கே சுதந்திரமாக திரியவிடுகிறோம். அதன்பிறகு அவர்களுடைய உலத்திற்குள் அத்துமீறி நுழைந்து நம் அதிகாரத்தின் கொடியைப் பறக்கவிடக்கூடாது. குழந்தைகளிடம் ஒரு குழந்தையைப் போலவே, கூடுவிட்டு கூடு பாய்ந்து மாறிச் செல்லவேண்டும். குழந்தைகளிடம் குழந்தையாகவே பேசிப்பழக வேண்டும். குழந்தைகளின் அறிதிறன் ஆவேசத்தைக் கட்டுப்படுத்தவோ, இடையூறு செய்யவோ கூடாது. அவர்களின் செயல்பாடுகளின் சுதந்திரம் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சிறுசிறு அசௌகரியங்கள் நேரலாம். படுக்கைத்துணி ஈரமாகலாம். புத்தகத்தின் பக்கங்கள் கிழியலாம். கண்ணாடி பாட்டில்கள் உடையலாம். குழந்தையின் உடலெங்கும் அசுத்தமாகலாம். இந்த அசௌகரியங்களைக் கண்டு பொதுவாக பெரியவர்கள் முகஞ்சுளிப்பதும், அதட்டுவதும், மிரட்டுவதும், சிலநேரம் கோப மிகுதியால் அடிப்பதும் கூட நிகழ்கிறது. குழந்தைகளுக்குத் தாங்கள் செய்த காரியங்களை விட, அதனால் கிடைத்த விளைவு ஆழ்மனதில் பதிந்துவிடும். பயந்து நடுங்குகிற அதன் உள்ளம் பிற்காலத்திலும் தன் வாழ்நாள் முழுவதிலும் அந்த நடுக்கத்தை மறப்பதில்லை.

குழந்தைகளின் செயல்பாடுகளை உற்சாகப்படுத்தவேண்டும். குழந்தைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டும். புதிய புதிய செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ளச்செய்ய வேண்டும். அதோடு குழந்தைகள் முன்னால் தகாத எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் இந்த உலகத்தில் வந்திறங்கியவுடன், அவர்களுக்கு முதலில் இந்த உலகத்தை அறிமுகப்படுத்துகிறவர்கள், உணரவைக்கிறவர்கள், பெற்றோர்கள் தான். குழந்தைகள் பெற்றோர்களைத்தான் முதலில் கவனிக்கின்றனர். உற்றுநோக்குகின்றனர். எனவே குழந்தைகளின் முன்னால் பெற்றோர்கள் நடந்துகொள்கிற நடவடிக்கைகளைப் பொறுத்தே குழந்தைகளின் அகஉலக அடிக்கட்டுமானம் கட்டப்படுகிறது.

குழந்தைகளின் செயல்பாடுகளை உற்றுநோக்குங்கள், அதில் தெரியும் ஆவேசம், அர்ப்பணிப்பு, தீவிரம், பேராவல். இடைவிடாத முயற்சி, சிறிய முன்னேற்றத்திலும் கொள்ளும் உவகை. பிரச்னைகளைப் புதிய கோணங்களில் அணுகுகிற அணுகுமுறை, பொறுமை, லாவகம், குழந்தைகள் படைப்பூக்கத்தின் பரிபூரண வடிவமாக திகழ்கிறார்கள். பெரியவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்களும் கற்றுக்கொள்கிறார்கள். உண்மையில் குழந்தைகள் வளர்ந்த மனிதர்களைப் படைக்கிறார்கள் என்றால் மிகையில்லை....

No comments:

Post a Comment