Tuesday, 11 February 2025

சின்னுவும் சிங்கமும்

 சின்னுவும் சிங்கமும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்




சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஆலமரத்தடியில் விளையாடுவார்கள். அந்த ஆலமரத்திற்குச் சற்று தூரத்தில் ஒரு ஆறு ஓடுகிறது.  ஆறு ஓடுகிற சத்தம் கேட்டுக்கொண்டே கதைப்பாட்டியின் மடியில் தலை வைத்து சின்னு படுத்திருப்பாள். அவளுடைய காலில் தலை வைத்து நாய்க்குட்டி படுத்திருக்கும். நாய்க்குட்டியில் வயிற்றில் தலை வைத்து பூனைக்குட்டி படுத்திருக்கும். ஆற்றின் பாடலைக் கேட்டுக் கொண்டே மூன்று பேரும் உறங்குவார்கள்.

அவர்கள் ஆற்றை ஆறம்மா என்று அழைப்பார்கள். ஆறம்மாவின் கரையில் போய் விளையாடலாமா? என்று கேட்டாள் சின்னு. நாய்க்குட்டி பௌ என்றது. பூனைக்குட்டி மியாவ் என்றது. ஆற்றின் அக்கரையில் ஒரு பெரிய காடு இருந்தது. பெரிய பெரிய மரங்கள் நிறைந்த இருண்ட காடு.

ஒரு நாள் ஆறம்மாவின் கரையில் மூன்று பேரும் பாட்டுப்பாடி ஆடிக் கொண்டிருந்தார்கள். சின்னு ஆ ஆ ஆ ஆ என்று பாடினாள். நாய்க்குட்டி பௌ பௌ பௌ என்றும் பூனைக்குட்டி மியாய் மியாவ் மியாவ் என்றும் பாடி ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“ ஹேய்.. நிறுத்து..” என்று ஒரு கர்ச்சனை ஆற்றின் அக்கரையில் இருந்து கேட்டது.  மூன்று பேரும் துள்ளிக்குதித்து பார்த்தால் மறுகரையில் ஒரு சிங்கம். காட்டுக்குள் இருந்து வந்த வயதான சிங்கம் ஆற்றில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. தண்ணீரைக் குடித்தபிறகு அந்த வயதான சிங்கம், சிரித்துக்கொண்டே,

“ யார் நீங்கள்? “ என்று கேட்டது. நாய்க்குட்டி வாலை கால்களுக்கு அடியில் வைத்துக் கொண்டு சின்னுவின் பின்னால் ஒளிந்து கொண்டது. பூனைக்குட்டி நாய்க்குட்டியின் பின்னால் ஒளிந்தது.

“ நாங்கள் இங்கே தண்ணீர் குடிக்க வந்தோம்..” என்று சின்னு சொன்னாள்.

“ நீங்கள் இந்தப்பக்கம் காட்டுக்குள் வாருங்கள்.. நானும் விளையாட வாரேன்..”

என்று சிங்கம் சொன்னது.

” வேண்டாம் வேண்டாம்.. உப்பும் மிளகும் சேர்த்து எங்களைத் தின்பதற்கா? “ என்றாள் சின்னு. வயதான சிங்கம் சிரித்தது. பிறகு கேட்டது,

“ யாரு சொன்னார்கள்..”

“” இந்த ஆற்றைக் கலக்கியது நீ இல்லாமல் இருக்கலாம்.. உன்னுடைய தாத்தா கலக்கினார் என்று சொல்லி ஆட்டினைக் கொன்று தின்ற கதை எங்களுக்குத் தெரியும்..அங்கிருந்தே பேசினால் போதும்..”

 என்று சொன்னது பூனைக்குட்டி.

“ இந்தக் கதை எல்லாம் உங்களுக்குச் சொன்னது யார்? “

“ கதைப் பாட்டி..” என்று மூன்று பேரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

சிங்கத்தின் முகம் சிவந்து விட்டது. மீசை முடி சிலிர்த்தது.

“ உங்களுடைய கதைப்பாட்டியினால் ஒரு விலங்கையும் வேட்டையாடிச் சாப்பிட முடியவில்லை..” என்று சொல்லிக்கொண்டே மெல்ல மெல்ல காட்டுக்குள் சென்றது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கசுமலா காக்கா பறந்து சென்று சிங்கத்தின் தலையில் ஒரு கொத்து கொத்தியது

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

No comments:

Post a Comment