Showing posts with label காடு. Show all posts
Showing posts with label காடு. Show all posts

Tuesday, 11 February 2025

சின்னுவும் சிங்கமும்

 சின்னுவும் சிங்கமும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்




சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஆலமரத்தடியில் விளையாடுவார்கள். அந்த ஆலமரத்திற்குச் சற்று தூரத்தில் ஒரு ஆறு ஓடுகிறது.  ஆறு ஓடுகிற சத்தம் கேட்டுக்கொண்டே கதைப்பாட்டியின் மடியில் தலை வைத்து சின்னு படுத்திருப்பாள். அவளுடைய காலில் தலை வைத்து நாய்க்குட்டி படுத்திருக்கும். நாய்க்குட்டியில் வயிற்றில் தலை வைத்து பூனைக்குட்டி படுத்திருக்கும். ஆற்றின் பாடலைக் கேட்டுக் கொண்டே மூன்று பேரும் உறங்குவார்கள்.

அவர்கள் ஆற்றை ஆறம்மா என்று அழைப்பார்கள். ஆறம்மாவின் கரையில் போய் விளையாடலாமா? என்று கேட்டாள் சின்னு. நாய்க்குட்டி பௌ என்றது. பூனைக்குட்டி மியாவ் என்றது. ஆற்றின் அக்கரையில் ஒரு பெரிய காடு இருந்தது. பெரிய பெரிய மரங்கள் நிறைந்த இருண்ட காடு.

ஒரு நாள் ஆறம்மாவின் கரையில் மூன்று பேரும் பாட்டுப்பாடி ஆடிக் கொண்டிருந்தார்கள். சின்னு ஆ ஆ ஆ ஆ என்று பாடினாள். நாய்க்குட்டி பௌ பௌ பௌ என்றும் பூனைக்குட்டி மியாய் மியாவ் மியாவ் என்றும் பாடி ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“ ஹேய்.. நிறுத்து..” என்று ஒரு கர்ச்சனை ஆற்றின் அக்கரையில் இருந்து கேட்டது.  மூன்று பேரும் துள்ளிக்குதித்து பார்த்தால் மறுகரையில் ஒரு சிங்கம். காட்டுக்குள் இருந்து வந்த வயதான சிங்கம் ஆற்றில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. தண்ணீரைக் குடித்தபிறகு அந்த வயதான சிங்கம், சிரித்துக்கொண்டே,

“ யார் நீங்கள்? “ என்று கேட்டது. நாய்க்குட்டி வாலை கால்களுக்கு அடியில் வைத்துக் கொண்டு சின்னுவின் பின்னால் ஒளிந்து கொண்டது. பூனைக்குட்டி நாய்க்குட்டியின் பின்னால் ஒளிந்தது.

“ நாங்கள் இங்கே தண்ணீர் குடிக்க வந்தோம்..” என்று சின்னு சொன்னாள்.

“ நீங்கள் இந்தப்பக்கம் காட்டுக்குள் வாருங்கள்.. நானும் விளையாட வாரேன்..”

என்று சிங்கம் சொன்னது.

” வேண்டாம் வேண்டாம்.. உப்பும் மிளகும் சேர்த்து எங்களைத் தின்பதற்கா? “ என்றாள் சின்னு. வயதான சிங்கம் சிரித்தது. பிறகு கேட்டது,

“ யாரு சொன்னார்கள்..”

“” இந்த ஆற்றைக் கலக்கியது நீ இல்லாமல் இருக்கலாம்.. உன்னுடைய தாத்தா கலக்கினார் என்று சொல்லி ஆட்டினைக் கொன்று தின்ற கதை எங்களுக்குத் தெரியும்..அங்கிருந்தே பேசினால் போதும்..”

 என்று சொன்னது பூனைக்குட்டி.

“ இந்தக் கதை எல்லாம் உங்களுக்குச் சொன்னது யார்? “

“ கதைப் பாட்டி..” என்று மூன்று பேரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

சிங்கத்தின் முகம் சிவந்து விட்டது. மீசை முடி சிலிர்த்தது.

“ உங்களுடைய கதைப்பாட்டியினால் ஒரு விலங்கையும் வேட்டையாடிச் சாப்பிட முடியவில்லை..” என்று சொல்லிக்கொண்டே மெல்ல மெல்ல காட்டுக்குள் சென்றது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கசுமலா காக்கா பறந்து சென்று சிங்கத்தின் தலையில் ஒரு கொத்து கொத்தியது

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

Wednesday, 22 January 2025

நடிப்புத்திலகம்

 

நடிப்புத்திலகம்

உதயசங்கர்



பழையனூர் காடு மிகவும் பழமையானது. எவ்வளவு பழமையானது என்றால் முதன் முதலில் தோன்றிய பெரணிச் செடிகள் முதல் ஓங்கி உயர்ந்து வளரும் தேவதாரு மரங்கள் வரை இருக்கின்ற காடு. அதே போல உலகத்தின் அத்தனை வகையான விலங்குகளும் பறவைகளும் வசிக்கும் காடு.

அங்கே ஒரு அதிசயம் ஆண்டுதோறும் நடக்கும்.

அது பழையனூர் காட்டின் பிறந்த நாள்விழா. அன்று அந்தக் காட்டிலுள்ள எல்லாவிலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் புழுக்களும் பாம்புகளும் பல்லிகளும் எல்லாரும் ஒரு பெரிய மைதானத்தில் கூடி விடுவார்கள்.

பாட்டு, பேச்சு, நடனம், மாறுவேடம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கபடி, கல்லா மண்ணா, கண்ணாமூச்சி, ஓடிப்பிடித்து விளையாடுதல் என்று போட்டிகள் நடந்தன.

பாட்டுப்போட்டியில் யாரும் எதிர்பார்க்கவில்லை.

காகம் வெற்றி பெற்றது.

நடனப்போட்டியில் மான் துள்ளிக்குதித்து வெற்றிபெற்றது.

பேச்சுப்போட்டியில் எல்லாரும் மைனா தான் வெற்றி பெறும் என்று நினைத்தார்கள். மைனா ஏழுகுரலில் பேசும். ஆனால் வெற்றி பெற்றது யார் தெரியுமா?

தவிட்டுக்குருவி. அது ரேடியோ ஜாக்கி மாதிரி கயமுய கயமுய என்று பேசி வெற்றி பெற்றது.

நீளம் தாண்டுதலில் ஆமை வெற்றி பெற்றது.

உயரம் தாண்டுதலில் வெள்ளெலி வெற்றி பெற்றது.

கபடியில் புலி டீமும் எலி டீமும் போட்டி போட்டன. எலி டீம் மிகச்சுலபமாக வெற்றி பெற்றது.

கண்ணாம்மூச்சியில் யானை ஒளிந்த இடத்தை யாராலும் கண்டே பிடிக்கமுடியவில்லை. யானையே வெற்றி பெற்றது.

இப்படி இந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத விலங்குகளும் பறவைகளும் வெற்றி பெற்றன.

பழையனூர் காட்டில் வழக்கமான உற்சாகத்தை விட இன்று மிகுந்த கொண்டாட்டமாக இருந்தது.

கடைசியாக மாறுவேடப்போட்டி. மாறுவேடம் போட்டு வந்து நடிக்க வேண்டும்.

காட்டு ஆடு வந்தது. நீண்ட தாடியுடன் அறிவியலறிஞர் டார்வினைப் போல நடித்தது. ஒவ்வொரு உயிரினத்தையும் ஆராய்ந்து பரிணாமவளர்ச்சி பற்றிப் பேசியது.

சிட்டுக்குருவி வந்தது. பறவையியலாளர் சாலிம் அலி போல வேடம் போட்டிருந்தது. கழுத்தில் ஒரு பைனாக்குலர் மாட்டிக்கொண்டு ஒவ்வொரு பறவைகளைப் பற்றியும் பேசியது.

காற்றில் அங்கும் இங்கும் பறந்து கொண்டே தாத்தாபூ வந்தது. தாவரவியலாளர் ஹம்போல்ட் என்றது. ஒவ்வொரு தாவரத்தையும் ஆராய்ந்து தான் வைத்திருந்த குறிப்பேட்டில் பதிந்து கொண்டது.

பெண்புலி வந்தது. நான் தான் இடவேலத் கக்கத் ஜானகியம்மாள் தாவரங்களின் பூக்களின் மரபணுவை ஆராய்ந்து மாற்றங்களைச் செய்வேன் என்றது. கையில் வைத்திருந்த சிவப்பு நிறச் செம்பருத்திப் பூவின் நிறத்தை மஞ்சளாக மாற்றிக் காட்டியது.

யாருக்குப் பரிசு கொடுப்பது ?

நடுவர் குழு தடுமாறின.

அப்போது ஒரு குரல் கேட்டது.

அதுக்குள்ள தீர்ப்பைச் சொன்னா எப்படி? என்னோட நடிப்பைப் பாருங்க..

எல்லாரும் திரும்பிப்பார்த்தார்கள். எதுவும் தெரியவில்லை.

அப்போது மின்னு முயல் சொன்னது,

“ நடுவர்களே! . இங்கே ஒரு ஹாக்னோஸ் பாம்பு செத்துக்கிடக்கு.. செத்து பல நாள் ஆகியிருக்கும் போல.. நாத்தம் குடலைப் புடுங்குது..

பார்த்தால் அங்கே ஒரு பாம்பு மட்டமல்லாக்கப் படுத்துக் கிடந்தது. வாயைத் திறந்து நாக்கைத் தொங்கவிட்டபடி கிடந்தது. உடம்பு விரைத்து அசையாமல் கிடந்தது. மூச்சு விடவில்லை.

அதைப் பார்த்த மயிலானுக்கு ஆசை வந்தது. அருகில் போய் கொத்தித் திங்கலாம் என்று நினைத்தது.

ஐயே! பக்கத்தில் போக முடியவில்லை. அப்படி ஒரு துர்நாற்றம். அப்படியே பின்னால் போய் விட்டது.

நடுவர்களும் மற்ற விலங்குகளும் அந்த இடத்திலேயே இருக்கமுடியவில்லை. எல்லாரும் வேக வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

அந்த செத்த பாம்பு அப்படியே கிடந்தது.

போட்டிகள் முடிந்து பரிசுகள் எல்லாம் கொடுத்து எல்லாரும் வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

இரவாகி விட்டது. அப்போது செத்தபாம்பு அசைந்தது.

.” எப்படி என் நடிப்பு நடுவர்களே! என்று கூவியது. உடலைத் திருப்பி கண்களைத் திறந்தது அந்தப் பாம்பு.

யாரும் இல்லை.

“ ஐயோ.. நான் எப்படி நடித்தேன்.. எனக்குத் தானே பரிசு கொடுக்க வெண்டும்.. இதை யாரும் கேட்கமாட்டீர்களா? “

என்று அழுதுகொண்டே மீண்டும் மல்லாக்க விழுந்து செத்தது போல நடிக்கத் தொடங்கியது அந்த நடிப்புத்திலகம் ஹாக்னோஸ் பாம்பு.

அப்போது மரத்தில் இருந்த ஆந்தை சொன்னது,

“ எதுவும் அளவோடு இருக்கணும்டா ஹாக்னோஸ்..

 

நன்றி - வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

Tuesday, 10 December 2024

முழுமதி நாள் சாகசம்

 

. முழுமதி நாள் சாகசம்

உதயசங்கர்



நல்ல முழுமதி நாள் இரவு. மின்னி முயல் அதனுடைய பாட்டி வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. காடு நிலா ஒளியில் மின்னியது. மின்னி முயல் அல்லிமலர்கள் நிறைந்த ஒரு குளத்தைப் பார்த்தது.  நிலாவின் ஒளி குளத்து நீரில் விழுந்தது. மீன்கள் தண்ணீருக்கு மேலே வாயை வைத்து நிலவின் ஒளியைக் குடித்தன. தவளைகள் அல்லி இலைகளின் மீது தாவித் தாவிக் குதித்தன. மின்னி முயலுக்கும் மகிழ்ச்சி. அங்கும் இங்கும் தாவிக் குதித்தது.

பாட்டி வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு குன்றைத் தாண்டிப் போக வேண்டும். மின்னி முயல் புறப்படும் போது,

“ பார்த்துப் பத்திரமாப் போகணும்..என்று அம்மா சொல்லியனுப்பியது. ஆனால் நிலாவைப் பார்த்ததும் மின்னி அம்மா சொன்னதை மறந்து விட்டது. திடீரென தவளைகள் க்கிர்ரக் க்கிர்ராக் “ என்று சத்தம் போட்டன. மின்னி முயல் உடனே அருகிலுள்ள ஒரு செடிக்குக் கீழே அப்படியே பதுங்கியது.

அப்போது காய்ந்த சருகுகள் நொறுங்குகிற சத்தம் கேட்டது. ஒரு குள்ள நரி அப்படியே மோப்பம் பிடித்துக் கொண்டே குளத்துக்குப் பக்கமாய் வந்தது. கிட்டத்தட்ட மின்னி முயல் பதுங்கியிருந்த செடிக்கு அருகிலேயே வந்து விட்டது. மின்னி முயலுக்கு உடல் நடுங்கியது. மூச்சைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடி அப்படியே உட்கார்ந்திருந்தது.

இதோ வந்து விட்டது.

அந்த நேரத்தில் வேறு ஏதோ ஒரு விலங்கு குடுகுடுவென ஓடுகிற சத்தம் கேட்டது. உடனே குள்ளநரி சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடியது.

இப்போது தான் மின்னி முயலுக்கு மூச்சு வந்தது. மெல்ல அங்கிருந்து நழுவியது. சிறிது தூரத்துக்கு காதுகளை விடைத்துக் கொண்டு சிறிய சப்தங்களையும் கேட்டுக் கொண்டே சென்றது.

ஒரு இடத்தில் சிறிய வெள்ளை நிறப்பூக்கள் நிலாவின் ஒளியில் வெள்ளித்துகள்களாக ஜொலித்தன. அதைப் பார்த்ததும் எல்லாவற்றையும் மறந்து விட்டது மின்னி முயல். அந்தப் பூக்களைக் கடித்துத் தின்றது. இதழ்களில் பனித்துளியும் தேனும் கலந்து மின்னி முயல் இதுவரை சாப்பிடாத ருசியில் இருந்தன. 

திடீரென மின்னி முயல் சறுக்கிக் குப்புறவிழுந்தது. உருண்டு புரண்டு ஒரு பள்ளத்தில் கிடந்தது.

“ ஐய்யோ அம்மா..என்று கத்தியது.

 பள்ளத்தில் ஒரே இருட்டு. மேலே தெரிந்த வெளிச்சம் பள்ளத்தில் விழவில்லை. ஒரே சேறும் சகதியுமாக இருந்தது. அதன் உடலெங்கும் பாசி நாற்றமடிக்கும் சேறு பூசியிருந்தது. மின்னி முயலுக்கே அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.

ச்சே என்ன நாத்தம். என்று சொல்லி முடிக்கும் போது”

” உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ” என்ற சத்தம் மின்னி முயலின் முதுகுக்குப் பின்னால் கேட்டது. மெல்ல தலையைத் திருப்பிப் பார்த்தது மின்னி முயல். ஒரு பெரிய மலைப்பாம்பு தலையைத் தூக்கியபடி இருந்தது.

 நல்ல வேளை.

அங்கிருந்த நாற்றத்தாலோ என்னவோ மின்னி முயல் இருப்பது தெரியவில்லை. மின்னி முயல் அசையவில்லை. மின்னிக்கு அருகில் ஊர்ந்து அந்தப் பள்ளத்திலிருந்து வெளியேறியது மலைப்பாம்பு. மின்னி முயல் புத்திசாலி. மலைப்பாம்பு ஊர்ந்து சென்ற பாதையில் மெல்ல ஏறிப் பள்ளத்திலிருந்து வெளியே வந்தது.

 மின்னி முயல் அங்கிருந்த காய்ந்த புல்வெளியில் படுத்து உருண்டு தன் மீதிருந்த சேறையும் பாசியையும் நீக்கியது. அப்படியே கொஞ்ச நேரம் படுத்துக் கிடந்தது.

என்ன பயங்கர அனுபவம்?

மெல்லத் தாவித் தாவி குன்றின் மீது ஏறியது. ஒரு பெரிய ஆலமரத்தின் பக்கமாய் வந்தபோது தரையில் ஒரு நிழல் தெரிந்தது. நிலா வெளிச்சத்தில் ஒரு பெரிய பறவையின் நிழல் தாழ்ந்து வருவதைப் பார்த்தது. சற்றே தலையைத் தூக்கிப் பார்த்தது மின்னி முயல்.

 யம்மாடி எவ்வளவு பெரிய கூகை ( ஆந்தையினம் ) !

கால்களை விரித்துக் கொண்டு மின்னி முயலை நோக்கி பறந்து வந்தது. கால்களின் கூர் நகங்கள் நிலா வெளிச்சத்தில் பளபளத்தன.

இவ்வளவு தூரம் தப்பித்து வந்து விட்டோம். இதோ இன்னும் கொஞ்ச தூரத்தில் பாட்டி வீடு வந்து விடும். இப்போது மாட்டிக் கொண்டோமே. என்று நினைத்தது மின்னி முயல்.

சரியாக கூகை கால்களால் பிடிக்கப்போகும் போது ஒரு துள்ளு துள்ளி கூகையின் ஒரு சிறகில் மோதியது. கூகை இதை எதிர்பார்க்கவில்லை. அது நிலை தடுமாறி கீழே மோதப் போனது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மின்னி முயல் ஒரே ஓட்டமாய் ஓடி பெரிய புதருக்குள் நுழைந்து கொண்டது.

பகலில் தான் பயணம் கடினமாக இருக்கும் என்றால் இரவிலும் அப்படித்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து விட்டது.

மெல்ல பொழுது விடியத் தொடங்கியது.

மின்னியின் பாட்டி தன்னுடைய வளையை விட்டு வெளியே வந்து அருகில் இருந்த பனிப்புல்லை மேய்த்தொடங்கியது. நிமிர்ந்து பார்த்தது மின்னியின் பாட்டி.  தூரத்தில் மின்னி முயல் வருவது தெரிந்தது..

அவ்வளவு தான்.

தாவிக்குதித்து சென்று மின்னி முயலைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டது. பாட்டியின் அருமைப் பேரன் இல்லையா?

“ மின்னிக்கண்ணு என்னடா விசேசம்? “ என்று கேட்டது.

மின்னி முயல் முந்தின நாள் இரவில் நடந்த சாகசங்களைச் சொல்லத் தொடங்கியது.

என்ன நடந்தது என்று உங்களுக்குத் தான் தெரியுமே.

 

Tuesday, 29 May 2012

நகரம் பார்த்த சின்னக்குருவி

உதயசங்கர்sparrow

முன்பு ஒரு நாள் ஒரு குருவி காட்டிலிருந்து நகரத்துக்குப் பறந்து போய் விட்டது. அங்கேயிருந்து திரும்பி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. காட்டிற்குத் திரும்பி வந்த பிறகு எல்லாக் குருவிகளிடமும் அது அனுபவித்த கஷ்டங்களைப் பற்றிச் சொல்லியது. அதைக் கேட்ட எல்லாக் குருவிகளும் உச் உச் என்று பரிதாபப்பட்டன. எங்கே சென்றாலும் நகரத்துக்கு மட்டும் போய் விடாதீர்கள் என்று திரும்பத் திரும்பக் கீச்சிட்டது. சரி சரி என்று எல்லாக்குருவிகளும் தலையாட்டின. அவைகளில் கொஞ்சம் துடுக்குத்தனம் கொண்ட குருவி ஒன்றும் இருந்தது. அது சேட்டைக்காரக் குருவி. யார் என்ன சொன்னாலும் நம்பாது. ஆபத்தான பல காரியங்களைச் செய்யும். அப்பா அம்மா எத்தனையோ தடவை இப்படி இருக்காதே என்று சொல்லியும் அது கேட்கவில்லை. இப்போது அந்தக் குருவிக்கு நகரத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆசை வந்து விட்டது.

ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் நகரம் இருந்த திசையை நோக்கிப் பறந்தது. தூரத்திலிருந்து பார்க்கும் போது கவர்ச்சியாகத் தான் தெரிந்தது.ஆனால் நகரத்தை நெருங்க நெருங்க அனல் வீசியது. புகை மூட்டமாக இருந்தது.கருப்பாய் கண்களை மறைத்தது. எப்படியோ சமாளித்து நகரத்துக்குள் சென்று விட்டது.

வானம் வரை முட்டுகிற மாதிரி கட்டிடங்கள், காட்டிலுள்ள மரங்களை விட ரெண்டு பங்கு, மூன்று பங்கு, உயரமாய் இருந்தன. வண்ணமயமாய் எல்லாம் ஒளி வீசின. எல்லாக் கட்டிடங்கள் மீதும் வட்டமாகவும், குச்சி குச்சியாகவும் கம்பி வலைகளும், வட்டமான தட்டுகளும் இருந்தன. அவைகளை ஆண்டெனாக்கள் என்று நகர மக்கள் சொன்னார்கள். கார்கள், மோட்டார்சைக்கிள்கள், மொபெட்டுகள், எல்லாம் மின்னல் வேகத்தில் பறந்து சென்றன. எல்லா இயந்திரங்களும் புகையைக் கக்கின. பெரிய பெரிய சாலைகள், பெரிய பெரிய ஆலைகள், கடைகள், இடைவிடாத போக்குவரத்து என்று நகரம் ஒரே இரைச்சலாக இருந்தது. மனிதர்கள் அங்குமிங்கும் பாய்ந்து பாய்ந்து சென்று கொண்டிருந்தனர். ஏதோ அவசரமோ, ஆபத்தோ,என்று நினைக்கும்படி இருந்தது அவர்களுடைய ஓட்டம். தான் ஒரு புது உலகத்துக்குள் வந்துவிட்டது போல எல்லாம் வேடிக்கையாகவும் விநோதமாகவும் தெரிந்தது குருவிக்கு. அது ஒவ்வொரு இடமாக அமர்ந்து அமர்ந்து பறந்து சென்றது.

அப்போது தான் திடீரென்று அது கவனித்தது. நகரத்தில் ஒரு மரம் கூட இல்லை. செடிகளோ கொடிகளோ இல்லை. சின்னக்குருவிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் வீடுகளுக்குள் தொட்டிச் செடிகள் இருந்ததை சன்னல் வழியே பார்த்தது. அது காலை நேரம். குழந்தைகள் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தார்கள்.எல்லோர் கைகளிலும் ஒரு பாட்டில் தண்ணீர். குருவிக்கு இன்னொரு அதிசயமும் காத்திருந்தது. நகரத்தில் ஒரு நதியோ, ஓடையோ, குளமோ, குட்டையோ, இல்லை. அட என்னடா இது!

தண்ணீருக்கு எங்கே போவார்கள்? அடுத்த சாலைத் திருப்பத்தில் கடைகளில் தண்ணீரை பைகளிலும், பாட்டில்களிலும், பெரிய பெரிய டப்பாக்களிலும் அடைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். தண்ணீரைப் பார்த்த உடனே குருவிக்குத் தாகம் எடுத்தது. நேரம் ஆக ஆக சூரியன் நெருப்பாக மாறிக் கொண்டிருந்தது. நகரமே அடுப்பு போல சூட்டினால் கணகணத்தது. குருவிக்கு மூக்கு காந்தல் எடுத்தது. சிறகுகளுக்குள் வெக்கைக் காற்று புகுந்து வேதனை அளித்தது. எங்கேயாவது ஒரு மடக்குத் தண்ணீர் கிடைத்தால் பரவாயில்லை என்று நினைத்தது. நகரத்தைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. நகரத்தின் ஓரத்தில் கருப்பாய் ஒரு நதி ஓடிக் கொண்டிருந்தது. அதன் அருகில் கூடச் செல்லமுடிய வில்லை. அவ்வளவு நாற்றம். ஒரே குப்பையும் கூளமுமாக அந்தத் தண்ணீர் ஓடியது. அதைச் சாக்கடை என்றார்கள். அழுக்கான, கிழிந்த உடைஅணிந்த சில மனிதர்கள் அதில் கூட இறங்கி எதையோ தேடிக்கொண்டிருந்தனர். குருவிக்குத் தலை சுற்றியது.

“தண்ணீர்…தண்ணீர்..” என்று கதறியது. கீச் கீச் என்ற அதன் மெல்லிய குரல் ஆரவாரமான போக்குவரத்து சத்தத்தில் யாருக்கும் கேட்கவில்லை. யாரும் குருவியைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. மனிதர்கள் சாவி கொடுத்த இயந்திரப் பொம்மைகள் போல அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள்.

குருவியினால் சிறகினை அசைக்கக் கூட முடியவில்லை. விர்ரென்று தலை சுற்றியது. பறக்கவும் முடியாமல், கீழே இறங்கவும் முடியாமல் தலைகீழாகக் குருவி சாலையின் ஓரத்திலிருந்த நடைமேடையில் ‘பொத்’ தென்று விழுந்தது. உடம்பை அசைக்க நினைத்தும் முடியவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக குருவிக்கு நினைவு தவறிக் கொண்டிருந்தது. தண்ணீரே இல்லாத இந்த நகரம்.வெறும் பாட்டில் தண்ணீரிலும் பாக்கெட் தண்ணீரிலும் உயிர் வாழும் மனிதர்கள். குருவிக்குக் கண்கள் சொருகின. நினைவு மங்கியது. செத்து போய் விடுவோமோ என்று நினைத்தது. இந்த பூமியில் அன்பு, தயை, கருணை, இரக்கம், பச்சாதாபம், எல்லாம் அழிந்து விட்டதா?

அப்போது திடீரென மழைத்துளிகளைப் போல தண்ணீர் அதன் உடலெங்கும் பொழிந்தது. ஒரு கணம் உடல் சிலிர்த்தது. மெல்லக் கண்களைத் திறந்த போது நான்கைந்து குழந்தைகள் முதுகில் புத்தகச் சுமையுடன் தன்னைச் சுற்றி அமர்ந்திருப்பதைப் பார்த்தது. அதில் ஒரு குழந்தை தான் தன்னுடைய பாட்டிலில் இருந்து நீரைக் கையில் ஊற்றி குருவியின் மீது தெளித்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னொரு குழந்தை, “போதும்டி..இந்தத் தண்ணி தான் சாயங்காலம் வரைக்கும்.. காலி பண்ணிராதே..அம்மா திட்டுவா..” என்று சொன்னாள். அதைக் கவனிக்காமல் எல்லாக்குழந்தைகளும் குருவி வாயைத் திறப்பதையே பார்த்துக் கொண்டிருந்தனர். “ஐயோ..பாவம்..” என்றாள் ஒரு குழந்தை. உடனே கையைக் குவித்து நீரை ஊற்றி குருவியின் வாய்க்கு அருகில் கொண்டு வந்தாள் இன்னொரு குழந்தை. குருவி ஆசை தீரத் தண்ணீர் குடித்தது. ரொட்டிப் பொறுக்குகளை இன்னொரு குழந்தை கையில் ஏந்தினாள். அதன் சுவை குருவிக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் நாலைந்து வாய் தின்று வயிறை நிரப்பியது. அதற்கு உடனே நகரத்தை விட்டு ஓடி விட வேண்டும் என்று தோன்றியது. ‘கீச் கீச்’சென்று கத்திக் கொண்டே எழுந்து பறந்தது.

சிறிது தூரம் பறந்த குருவி திடீரெனத் திரும்பி வந்து குழந்தைகளின் தலைக்கு மேலே சுற்றிச் சுற்றிப் பறந்து ‘கீச் கீச்’ சென்று தனது மொழியில் நன்றி சொல்லி விட்டுப் பறந்தது. குழந்தைகள் ஆரவாரமிட்டனர்.

குருவிக்கு குழந்தைகளின் குதூகலத்தைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி. என்றாவது ஒருநாள் இந்தக் குழந்தைகள் வசம் இந்த நகரம் வரும் போது எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தது. பின்பு நகரத்தை விட்டு வேகவேகமாகக் காட்டை நோக்கிப் பறந்து சென்றது.

dep_2432274-Children-Art