Showing posts with label குருவி. Show all posts
Showing posts with label குருவி. Show all posts

Sunday, 1 August 2021

சூரியனும் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சும்

 

சூரியனும் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சும்

உதயசங்கர்

காலை விடிந்தது. சூரியன் கண்களை மெல்லத் திறந்து உலகத்தைப் பார்த்தான். வெளிச்சத்தினால் கண்கள் கூசின. மறுபடியும் கண்களை மூடி கொஞ்சம் கொஞ்சமாய் கால்க்கண்களைத் திறந்தான். அரைக்கண்களைத் திறந்தான். முக்கால் கண்களைத் திறந்தான். பிறகு முழுக்கண்களையும் திறந்தான். இப்போது கண்கள் கூசவில்லை. மேலேயிருந்து கீழே பூமியை வேடிக்கை பார்த்தான். அப்படியே மெல்ல வானத்தில் காவல் நடைப்பயிற்சி செய்யப் புறப்பட்டான்.

கீழே ஒரு கூரை வீட்டின் முற்றத்தில் ஒரு சிட்டுக்குருவி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது. அது ஓலைகளுக்கு நடுவில் கூடு கட்டி குஞ்சுகள் பொரித்திருந்தது. கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. இரண்டு குருவிக்குஞ்சுகளில் ஒன்று ரொம்பக்குட்டியாயிருந்தது. ஆனால் அந்தக்குட்டிக் குட்டி குருவிக்குஞ்சு சுறுசுறுப்பாக இருந்தது. கூட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க முடியவில்லை. அங்கே சுற்றிச் சுற்றி வந்தது. அம்மாவிடம்,

“ நான் எப்ப பறக்கலாம்? சொல்லுங்கம்மா.. நான் எப்ப பறக்கலாம்? சொல்லுங்கம்மா..என்று கேட்டுக்கொண்டேயிருந்தது. அம்மாக்குருவி,

“ குட்டிக்குட்டி குருவிக்குஞ்சே! இறகு முளைக்கணும்.. சிறகு முளைக்கணும்.. வால் முளைக்கணும்.. கால் வளரணும்.. அப்புறம் பறக்கலாம் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சே! “

என்று சொன்னது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சுக்கு எல்லாம் உடனே நடக்கணும் என்று நினைத்தது. அது தன்னுடைய உடலை மீண்டும் மீண்டும் பார்த்தது. அப்போது உச்சி வெயில் வந்து விட்டது. நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த சூரியன் அந்தக் கூரை வீட்டுக்கு மேலே வந்து நின்றது.

வெளிச்சத்தினால் கண்கள் கூசிய குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு கூட்டிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தது. சூரியன் சிரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து அதற்கும் சிரிப்பு வந்தது. கிய்யா கிய்யா என்று சிரித்தது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சின் சிரிப்புச்சத்தத்தை கேட்ட சூரியன் அங்கேயே நின்று விட்டது.

குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு சூரியனிடம், “ கிய்யா கிய்யா சூரியன் மாமா சூரியன் மாமா நானும் உங்களை மாதிரி வானத்தில் பறந்து மிதக்கணும்…என்று பேசியது. அதற்கு சூரியன்,

“ ஆகா அதுக்கென்ன.. உன் சிறகுகளை அசைத்து மேலே பறந்து வா..என்று பதில் அளித்தது. உடனே குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு தன் சின்னஞ்சிறு சிறகுகளை அசைத்தது. என்ன ஆச்சரியம்! அது பறக்கத் தொடங்கிவிட்டது. ஆமாம். மேலே மேலே பறந்தது.

முதலில் ஊர்ந்து செல்லும் எறும்பு மேகங்களைக் கடந்தது. பின்னர் தாவிக்குதிக்கும் முயல் மேகங்களைக் கடந்தது. அப்புறம் பாய்ந்து செல்லும் மான் மேகங்களைக் கடந்தது. கர்ச்சித்துக்கொண்டிருந்த சிங்கமேகங்களைக் கடந்தது. கன்னங்கரேலென்று பிளிறிக்கொண்டிருந்த யானை மேகங்களைக் கடந்தது. அப்படியே பறந்து பறந்து சூரியனுக்கு அருகிலேயே போய்விட்டது.

“ கிய்யா கிய்யா சூரியன் மாமா! சூரியன் மாமா! நான் வந்துட்டேன்..என்று கத்தியது. சூரியன் அந்தக்குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சை தன் முதுகில் தூக்கி வைத்துக் கொண்டது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு ரொம்ப தூரம் பறந்து வந்திருக்கிறதல்லவா. அதற்கு சிறகுகள் வலிக்குமல்லவா. அதனால் சூரியனின் முதுகில் உட்கார்ந்து உலகத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தது.

உலகத்தை வேடிக்கை பார்ப்பது வேடிக்கையாக இருந்தது.

இருட்டத் தொடங்கிவிட்டது. சூரியன் மாமாவின் காவல் நேரம் முடிந்து விட்டது. இனி நிலா அத்தை வந்து விடுவாள். வேடிக்கை பார்த்துப்பார்த்து சோர்ந்து போய் உறங்கி விட்டது குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு. உறங்கிக்கொண்டிருந்த குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சை அப்படியே பூப்போல சூரியன் நிலா அத்தையிடம் கொடுத்தது. நிலா அத்தை குளிர்ந்த தன் கரங்களால் அதை வாரி அணைத்து அப்படியே கீழே இறங்கினாள்.

கூரை வீட்டிலிருந்த கூட்டில் பத்திரமாக அதை வைத்தாள். உறங்கிக்கொண்டே நிலா அத்தையின் கைகளைப் பிடித்த குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சை மெல்ல தட்டிக்கொடுத்தாள். குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு உறக்கத்தில் சிரித்தது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு பெரிய குருவியாகி வானத்தில் அங்கும் இங்கும் சர் சர்ரென்று பறந்து கொண்டிருப்பதாகக் கனவு கண்டது.

நன்றி - வண்ணக்கதிர்



 

Tuesday, 29 May 2012

நகரம் பார்த்த சின்னக்குருவி

உதயசங்கர்sparrow

முன்பு ஒரு நாள் ஒரு குருவி காட்டிலிருந்து நகரத்துக்குப் பறந்து போய் விட்டது. அங்கேயிருந்து திரும்பி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. காட்டிற்குத் திரும்பி வந்த பிறகு எல்லாக் குருவிகளிடமும் அது அனுபவித்த கஷ்டங்களைப் பற்றிச் சொல்லியது. அதைக் கேட்ட எல்லாக் குருவிகளும் உச் உச் என்று பரிதாபப்பட்டன. எங்கே சென்றாலும் நகரத்துக்கு மட்டும் போய் விடாதீர்கள் என்று திரும்பத் திரும்பக் கீச்சிட்டது. சரி சரி என்று எல்லாக்குருவிகளும் தலையாட்டின. அவைகளில் கொஞ்சம் துடுக்குத்தனம் கொண்ட குருவி ஒன்றும் இருந்தது. அது சேட்டைக்காரக் குருவி. யார் என்ன சொன்னாலும் நம்பாது. ஆபத்தான பல காரியங்களைச் செய்யும். அப்பா அம்மா எத்தனையோ தடவை இப்படி இருக்காதே என்று சொல்லியும் அது கேட்கவில்லை. இப்போது அந்தக் குருவிக்கு நகரத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆசை வந்து விட்டது.

ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் நகரம் இருந்த திசையை நோக்கிப் பறந்தது. தூரத்திலிருந்து பார்க்கும் போது கவர்ச்சியாகத் தான் தெரிந்தது.ஆனால் நகரத்தை நெருங்க நெருங்க அனல் வீசியது. புகை மூட்டமாக இருந்தது.கருப்பாய் கண்களை மறைத்தது. எப்படியோ சமாளித்து நகரத்துக்குள் சென்று விட்டது.

வானம் வரை முட்டுகிற மாதிரி கட்டிடங்கள், காட்டிலுள்ள மரங்களை விட ரெண்டு பங்கு, மூன்று பங்கு, உயரமாய் இருந்தன. வண்ணமயமாய் எல்லாம் ஒளி வீசின. எல்லாக் கட்டிடங்கள் மீதும் வட்டமாகவும், குச்சி குச்சியாகவும் கம்பி வலைகளும், வட்டமான தட்டுகளும் இருந்தன. அவைகளை ஆண்டெனாக்கள் என்று நகர மக்கள் சொன்னார்கள். கார்கள், மோட்டார்சைக்கிள்கள், மொபெட்டுகள், எல்லாம் மின்னல் வேகத்தில் பறந்து சென்றன. எல்லா இயந்திரங்களும் புகையைக் கக்கின. பெரிய பெரிய சாலைகள், பெரிய பெரிய ஆலைகள், கடைகள், இடைவிடாத போக்குவரத்து என்று நகரம் ஒரே இரைச்சலாக இருந்தது. மனிதர்கள் அங்குமிங்கும் பாய்ந்து பாய்ந்து சென்று கொண்டிருந்தனர். ஏதோ அவசரமோ, ஆபத்தோ,என்று நினைக்கும்படி இருந்தது அவர்களுடைய ஓட்டம். தான் ஒரு புது உலகத்துக்குள் வந்துவிட்டது போல எல்லாம் வேடிக்கையாகவும் விநோதமாகவும் தெரிந்தது குருவிக்கு. அது ஒவ்வொரு இடமாக அமர்ந்து அமர்ந்து பறந்து சென்றது.

அப்போது தான் திடீரென்று அது கவனித்தது. நகரத்தில் ஒரு மரம் கூட இல்லை. செடிகளோ கொடிகளோ இல்லை. சின்னக்குருவிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் வீடுகளுக்குள் தொட்டிச் செடிகள் இருந்ததை சன்னல் வழியே பார்த்தது. அது காலை நேரம். குழந்தைகள் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தார்கள்.எல்லோர் கைகளிலும் ஒரு பாட்டில் தண்ணீர். குருவிக்கு இன்னொரு அதிசயமும் காத்திருந்தது. நகரத்தில் ஒரு நதியோ, ஓடையோ, குளமோ, குட்டையோ, இல்லை. அட என்னடா இது!

தண்ணீருக்கு எங்கே போவார்கள்? அடுத்த சாலைத் திருப்பத்தில் கடைகளில் தண்ணீரை பைகளிலும், பாட்டில்களிலும், பெரிய பெரிய டப்பாக்களிலும் அடைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். தண்ணீரைப் பார்த்த உடனே குருவிக்குத் தாகம் எடுத்தது. நேரம் ஆக ஆக சூரியன் நெருப்பாக மாறிக் கொண்டிருந்தது. நகரமே அடுப்பு போல சூட்டினால் கணகணத்தது. குருவிக்கு மூக்கு காந்தல் எடுத்தது. சிறகுகளுக்குள் வெக்கைக் காற்று புகுந்து வேதனை அளித்தது. எங்கேயாவது ஒரு மடக்குத் தண்ணீர் கிடைத்தால் பரவாயில்லை என்று நினைத்தது. நகரத்தைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. நகரத்தின் ஓரத்தில் கருப்பாய் ஒரு நதி ஓடிக் கொண்டிருந்தது. அதன் அருகில் கூடச் செல்லமுடிய வில்லை. அவ்வளவு நாற்றம். ஒரே குப்பையும் கூளமுமாக அந்தத் தண்ணீர் ஓடியது. அதைச் சாக்கடை என்றார்கள். அழுக்கான, கிழிந்த உடைஅணிந்த சில மனிதர்கள் அதில் கூட இறங்கி எதையோ தேடிக்கொண்டிருந்தனர். குருவிக்குத் தலை சுற்றியது.

“தண்ணீர்…தண்ணீர்..” என்று கதறியது. கீச் கீச் என்ற அதன் மெல்லிய குரல் ஆரவாரமான போக்குவரத்து சத்தத்தில் யாருக்கும் கேட்கவில்லை. யாரும் குருவியைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. மனிதர்கள் சாவி கொடுத்த இயந்திரப் பொம்மைகள் போல அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள்.

குருவியினால் சிறகினை அசைக்கக் கூட முடியவில்லை. விர்ரென்று தலை சுற்றியது. பறக்கவும் முடியாமல், கீழே இறங்கவும் முடியாமல் தலைகீழாகக் குருவி சாலையின் ஓரத்திலிருந்த நடைமேடையில் ‘பொத்’ தென்று விழுந்தது. உடம்பை அசைக்க நினைத்தும் முடியவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக குருவிக்கு நினைவு தவறிக் கொண்டிருந்தது. தண்ணீரே இல்லாத இந்த நகரம்.வெறும் பாட்டில் தண்ணீரிலும் பாக்கெட் தண்ணீரிலும் உயிர் வாழும் மனிதர்கள். குருவிக்குக் கண்கள் சொருகின. நினைவு மங்கியது. செத்து போய் விடுவோமோ என்று நினைத்தது. இந்த பூமியில் அன்பு, தயை, கருணை, இரக்கம், பச்சாதாபம், எல்லாம் அழிந்து விட்டதா?

அப்போது திடீரென மழைத்துளிகளைப் போல தண்ணீர் அதன் உடலெங்கும் பொழிந்தது. ஒரு கணம் உடல் சிலிர்த்தது. மெல்லக் கண்களைத் திறந்த போது நான்கைந்து குழந்தைகள் முதுகில் புத்தகச் சுமையுடன் தன்னைச் சுற்றி அமர்ந்திருப்பதைப் பார்த்தது. அதில் ஒரு குழந்தை தான் தன்னுடைய பாட்டிலில் இருந்து நீரைக் கையில் ஊற்றி குருவியின் மீது தெளித்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னொரு குழந்தை, “போதும்டி..இந்தத் தண்ணி தான் சாயங்காலம் வரைக்கும்.. காலி பண்ணிராதே..அம்மா திட்டுவா..” என்று சொன்னாள். அதைக் கவனிக்காமல் எல்லாக்குழந்தைகளும் குருவி வாயைத் திறப்பதையே பார்த்துக் கொண்டிருந்தனர். “ஐயோ..பாவம்..” என்றாள் ஒரு குழந்தை. உடனே கையைக் குவித்து நீரை ஊற்றி குருவியின் வாய்க்கு அருகில் கொண்டு வந்தாள் இன்னொரு குழந்தை. குருவி ஆசை தீரத் தண்ணீர் குடித்தது. ரொட்டிப் பொறுக்குகளை இன்னொரு குழந்தை கையில் ஏந்தினாள். அதன் சுவை குருவிக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் நாலைந்து வாய் தின்று வயிறை நிரப்பியது. அதற்கு உடனே நகரத்தை விட்டு ஓடி விட வேண்டும் என்று தோன்றியது. ‘கீச் கீச்’சென்று கத்திக் கொண்டே எழுந்து பறந்தது.

சிறிது தூரம் பறந்த குருவி திடீரெனத் திரும்பி வந்து குழந்தைகளின் தலைக்கு மேலே சுற்றிச் சுற்றிப் பறந்து ‘கீச் கீச்’ சென்று தனது மொழியில் நன்றி சொல்லி விட்டுப் பறந்தது. குழந்தைகள் ஆரவாரமிட்டனர்.

குருவிக்கு குழந்தைகளின் குதூகலத்தைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி. என்றாவது ஒருநாள் இந்தக் குழந்தைகள் வசம் இந்த நகரம் வரும் போது எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தது. பின்பு நகரத்தை விட்டு வேகவேகமாகக் காட்டை நோக்கிப் பறந்து சென்றது.

dep_2432274-Children-Art