Saturday, 15 February 2025

கல்லின் கதை

 

கல்லின் கதை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



ஒரு நாள் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் விளையாட வரவில்லை. நாய்க்குட்டி காட்டில் குள்ளநரி வீட்டுக்கு விருந்துக்குப் போய் விட்டது. குள்ளநரியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

பூனைக்குட்டிக்கு பாலும் சோறும் சாப்பிட்டு சலித்துவிட்டது. அதனால் ஏதாவது மாமிசம் சாப்பிட வேண்டுமென்ற ஆசையில் எலியைப் பிடிக்கப் போயிருந்தது.

சின்னுவுக்கும் போரடித்தது. தட்டாங்கல் விளையாடலாம் என்று கற்களைப் பொறுக்கினாள். ஒரு கல் நல்ல முல்லைப்பூ மணம் வீசியது. சின்னு அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு கதைப்ப்பாட்டியிடம் போனாள்.

கதைப் பாட்டி கதைப்பாட்டி..இந்தக் கல்லுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு மணம்.. முல்லைப்பூ மணம் வீசுது? “ என்று கேட்டாள்.

கதைப்பாட்டி சொன்னாள்,

“ சின்னுக்குட்டி.. இவ்வளவு நாளும் இந்தக் கல் முல்லைப்பூச் செடிக்குக் கீழே கிடந்தது.. முல்லைப்பூக்கள் பூத்து கீழே உதிரும்போது இந்தக் கல்லின் மீது விழுந்து மூடிக் கொள்ளும்.. அதனால் தான் முல்லைப் பூ மணம் கல்லில் வீசுகிறது..”

“ முல்லைப் பூ மணத்துடன் கிடக்கும்

கல்லுக்கும் கிடைக்கும் புகழ்மாலை “

என்று கதைப்பாட்டி பாடினாள்.

“ என்ன அர்த்தம் ? “ என்று சின்னு கேட்டாள்.

“ நல்ல மனிதர்களுடன் நட்பாக இருந்தால் நாமும் நல்லவர்களாக இருப்போம் என்று அர்த்தம். அதனால் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..தெரிஞ்சுதா? “ என்று கதைப்பாட்டி சொன்னாள்.

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

 

7.

No comments:

Post a Comment