Monday 1 October 2012

ஒருவேளை நீங்கள்..

உதயசங்கர்

015

ஒருபோதும் திறக்காத கதவொன்றை

தட்டிக் கொண்டிருப்பவராக

நீங்கள் இருந்தால்..

ஒருபோதும் மலராத மலரொன்றின்

முன்னால் மண்டியிட்டுப்

பிரார்த்திருப்பவராக

நீங்கள் இருந்தால்

ஒருபோதும் வளையாத

வில்லொன்றை வளைத்து

அம்பு எய்ய யத்தனிப்பவராக

நீங்கள் இருந்தால்

ஒருபோதும் புரியாத

வார்த்தையின் நிழலில்

அர்த்தத்தைத் தேடுபவராக

நீங்கள் இருந்தால்

ஒருபோதும் முளைக்காத

மலட்டுவிதையின்

கனி தின்னும் கனவு காண்பவராக

நீங்கள் இருந்தால்

ஒருபோதும் கேளாக்காதுகளின்

வாசலில் உங்கள் குறைகளைச்

சொல்லி மன்றாடுபவராக

நீங்கள் இருந்தால்

ஒருவேளை நீங்கள்

இல்லாத கடவுளாக

ஏதுமறியாத பைத்தியமாக

அல்லது

இந்திய நாட்டின் குடிமகனாக

இருக்கலாம்.

நன்றி- வண்ணக்கதிர்

1 comment: