Monday 2 July 2012

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சாதத் ஹசன் மண்ட்டோ

ஆங்கிலத்தில் – காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்

manto

இந்த சம்பவம் கிழக்குபஞ்சாப்பும் மேற்கு பஞ்சாப்பும் இந்து முஸ்லீம் கலவரத்தினால் சூறையாடப்பட்ட காலத்தில் நடந்தது. பல நாட்களுக்கு கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. மனிதர்களிடம் இருந்த அணைக்க முடியாத பெருந்தீயை இயற்கை அணைத்தது. ஆனாலும் ஏதுமறியாதவர்களின் மீதான கொலைவெறித்தாக்குதலோ, இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறையோ நிற்கவில்லை. பயந்த, அநாதரவான பெண்களைக் கடத்திக் கொண்டு போவதற்காக இன்னமும் பதுங்கித் திரியும் இளைஞர் கூட்டத்தை இன்னமும் பார்க்கலாம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொலை, கொள்ளை, சூறையாடுதல், எல்லாம் சிலர் நினைப்பதைப் போல அவ்வளவு கஷ்டமாக இல்லை. ஆனால் என்னுடைய நண்பன் திரு. எஸ்ஸுக்கு அது அவ்வளவு சுலபமானதாக இல்லை.

அவனுடைய கதையை உங்களுக்குச் சொல்வதற்கு முன்னால் நான் திரு.எஸ்ஸை அறிமுகம் செய்கிறேன். உருவத்திலும், பார்வையிலும் நம் எல்லோரையும் போல சாதாரணமான ஒரு ஆள் தான். அதே மாதிரி பெரும்பாலோர் நினைப்பது போல ஒன்றுமில்லாததற்கு ஏதாவது கிடைத்தால் சரிதான் என்று நினைப்பவன். ஆனால் இது வேறு ஒரு விஷயம். ஒரு விசித்திரமான விபத்து நிகழ்வதற்கு அவன் காரணமாக இருந்து விட்டான். அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

நாங்கள் பள்ளியில் படிக்கும்போது அவன் ஒரு சாதாரண மாணவன். விளையாட்டுகளை விரும்புவான். ஆனால் தீவிரமான விளையாட்டு வீரனல்ல. விளையாட்டின் போது விவாதம் வளர்ந்தால் அவன் தான் சண்டைக்கு முதல் ஆளாய் இருப்பான். நன்றாக விளையாடுபவனாக அவ்ன் ஒரு போதும் இருந்ததில்லை என்றாலும் நல்ல சண்டைக்காரனாக இருந்திருக்கிறான்.

அவனுக்கு ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. ஆனால் ஒரே ஒரு வருடத்திலேயே கல்லூரியை விட்டு வெளியேற வேண்டியதாகி விட்டது. அதன் பிறகு அவன் ஒரு சைக்கிள் விற்பனை கடையை வைத்திருந்தான் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம்.

இந்தக் கலவரங்கள் ஆரம்பித்தபோது, முதன் முதலில் எரிந்து சாம்பலான கடைகளில் அவனுடைய கடையும் ஒன்று. வேறு ஒன்றும் செய்ய முடியாததால் கொள்ளைக்காரர்களோடும் கலவரக்காரர்களோடும், அவன் சேர்ந்து கொண்டான். அப்போது இதொன்றும் அசாதரணமானதில்லை. அது உண்மையில் பொழுதுபோக்குவதற்கான வழியாகவும், மதத்துவேஷபழியுணர்வுக்கு ஒரு மாற்றாகவும் இருந்தது என்று நான் சொல்வேன். அது விசித்திரமான காலம். இது அவனுடைய கதை. அதுவும் அவன் சொந்த வார்த்தைகளிலேயே………

உண்மையில் மழை ஊற்றிக்கொண்டிருந்தது. வானம் வெடித்து விடுமோ என்று தோன்றியது. என்னுடைய மொத்த வாழ்க்கையிலும் அப்படி ஒரு மழையைப் பார்த்ததில்லை. நான் என் வீட்டுப் பால்கனியில் உட்கார்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் கும்பலோடு சேர்ந்து பல கடைகளிலும், வீடுகளிலும் கொள்ளையடித்த பொருட்களின் மிகப் பெரும் குவியல் கிடந்தது. ஆனால் எனக்கு இப்போது அதில் ஆர்வம் இல்லை. அவர்கள் என்னுடைய கடையை எரித்து விட்டார்கள். என்னை நம்புங்கள்.இப்போது எனக்கு அது பெரிய விஷயமாகத் தொன்றவில்லை. அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் நான் நிறையக் கொள்ளைகளையும், அழிவுகளையும், பார்த்துவிட்டேன். அதனால் அதில் ஒன்றும் பெரிய பாதிப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. மழையின் ஓசையை அலட்சியப்படுத்துவது கஷ்டமாக இருந்தது. ஆனால் அதே நேரம் விசித்திரம் போலும் ஒரு உலர்ந்த மலட்டுத்தனத்தை நான் உணர்ந்து கொண்டிருந்தேன். காற்றில் ஒரு துர்நாற்றம் வீசியது. என்னுடைய சிகரெட் கூட துர்வாடை வீசியது. அவ்வளவு ஏன் நான் அப்போது என்ன யோசித்துக் கொண்டிருந்தேன் என்று கூட நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை. திடீரென என்னுடைய முதுகுத்தண்டில் ஒரு நடுக்கம் ஓடியது. வெளியே பாய்ந்து சென்று என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்ள ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு வர வேண்டும் என்ற சக்தி மிக்க விருப்பம் தோன்றியது. மழை மேலும் வலுத்தது. நான் எழுந்து என்னுடைய மழைக்கோட்டை எடுத்து அணிந்து கொண்டேன். எனக்குத் தைரியமூட்டுவதற்காக எனக்கு முன்னால் கிடந்த கொள்ளைக் குவியலிலிருந்து ஒரு சிகரெட் டின்னை எடுத்துக் கொண்டு மழையில் வெளியே போனேன்.

சாலைகள் ஆளரவமற்று இருள் மூடியிருந்தது. சுற்றும்முற்றும் ராணுவவீரர்கள் கூட- அந்த நாட்களில் அது மிகச் சாதாரணம்- கண்ணுக்குத் தென்படவில்லை. நான் எந்தநோக்கமுமில்லாமல் மணிக்கணக்காக நடந்து கொண்டிருந்தேன். தெருக்களில் பல இறந்த உடல்கள் கிடந்தன. ஆனால் அவை எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சிறிது நேரத்துக்குப் பின்பு நான் சிவில் லைன்ஸ் ஏரியாவில் இருந்தேன்.. அந்த சாலைகளில் வாழ்வின் எந்த அறிகுறியும் தெரியவில்லை. திடீரென நான் அணுகி வருகிற ஒரு காரின் சத்தத்தைக் கேட்டேன். நான் திரும்பிப் பார்த்தேன். அது ஒரு சிறிய ஆஸ்டின் கார். தலைதெறிக்கும் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. எனக்கு என்ன நேரும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் சாலையின் நடுவில் நின்று கொண்டு காரை நிறுத்த மூர்க்கமாக என் கைகளை ஆட்டிக் கொண்டிருந்தேன்.

அந்தக் காரின் வேகம் குறையவில்லை. ஆயினும் நான் அசையப் போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன். மிகச் சில அடி தூரத்தில் அந்தக் கார் இடதுபுறமாக வளைக்கப்பட்டது. அதன் பின்னால் ஓட முயற்சித்ததில் நான் கீழே விழுந்தேன். ஆனால் உடனே எழுந்து கொண்டேன். எனக்குக் காயம் எதுவுமில்லை. அந்தக் காரின் பிரேக் போடப்பட்டதும், கார் தரையில் கிறீச்சிட்டு வழுகிச் சாலையை விட்டு விலகி ஓடியது. கடைசியில் அது ஒரு மரத்தின் மீது மோதிய பிறகே நின்றது. நான் அதை நோக்கி நகரத் தொடங்கினேன். படாரெனத் திறந்த காரின் கதவு வழியே சிவப்பு நிற மழைக்கோட்டு அணிந்த ஒரு பெண் குதித்து வெளியேறினாள். என்னால் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த இருளில் அவளுடைய மினுமினுக்கும் மழைக்கோட்டு தெளிவாகத் தெரிந்தது. என்னுடைய உடலை ஒரு வெப்ப அலை கவ்விப் பிடித்தது.

நான் அவளை நோக்கி வருவதைப் பார்த்த அவள் ஓடத் தொடங்கினாள். ஆயினும் நான் அவளைச் சில அடி தூரத்திலேயே பிடித்து விட்டேன். என்னுடைய கைகளினால் அவளைச் சுற்றி வளைத்து இறுக்கிப் பிடித்த போது “ யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் “ என்று ஆங்கிலத்தில் கத்தினாள். அதை இப்போது நினைக்கும்போது நான் அவளைப் பிடித்ததை விட அவளுடைய வழுவழுப்பான மழைக்கோட்டைத் தான் இறுக்கிப் பிடித்தேன் என்று தோன்றுகிறது.

“ ஆர் யு எ இங்கிலிஷ்வுமன்?” என்று நான் அவளிடம் கேட்டேன். நான் ஆங்கிலத்தில் கேட்கும்போது ’ எ ‘ இல்லை ‘ ஆன் ‘ போட்டிருக்கவேண்டும் என்று மிகத் தாமதமாகவே நினைவுக்கு வந்தது.

“ இல்லை “ என்று அவள் பதிலளித்தாள். நான் ஆங்கிலப் பெண்களை வெறுத்தேன். ஆகையால் நான் அவளிடம், “ அப்படின்னா பரவாயில்லை..” என்று சொன்னேன். அவள் உருதுவில் கத்தத் தொடங்கினாள்.

“ நீ என்னைக் கொல்லப் போறே.. நீ என்னைக் கொல்லப் போறே..”

நான் ஒன்றும் பேசவில்லை. நான் அவளுடைய வயதையும் பார்ப்பதற்கு அவள் எப்படி இருப்பாள் என்றும் யூகிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அவளுடைய மழைக்கோட்டின் தலைமூடி அவளுடைய முகத்தை மறைத்திருந்தது. நான் அதை அகற்ற முயற்சித்தபோது அவள் தன்னுடைய இரண்டுகைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள். நான் அவள் மீது பலத்தைப் பிரயோகிக்கவில்லை. அதற்குப் பதில் நான் அவளை இழுத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தேன். பின் கதவைத் திறந்து காருக்குள் அவளைத் தள்ளினேன். நான் காரை இயக்கினேன். எஞ்சின் இயங்கத் தொடங்கியது. நான் அதைப் பின் பக்கமாக எடுக்க முயற்சித்தேன். அது ஒத்துழைத்தது. கவனமாக அதை வளைத்து சாலையின் மீது கொண்டு வந்தபிறகு ஓட்டத் தொடங்கினேன்.

என்னுடைய வீட்டுக்கு முன்னால் வந்த பிறகே நான் கார் எஞ்சினை அணைத்தேன். என்னுடைய முதல் எண்ணம் அவளைப் பால்கனிக்குக் கொண்டு செல்வது தான். ஆனால் நான் பின்னர் என் மனதை மாற்றிக் கொண்டேன். அவள் அத்தனை படிக்கட்டுகளையும் அவளாகவே ஏறி வந்து விடுவாளா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. நான் வேலைக்காரப் பையனைக் கத்திக் கூப்பிட்டேன்.

” வரவேற்பறை கதவைத் திற..” என்று அவனிடம் சொன்னேன். அவன் அதைச் செய்த பிறகு நான் அவளை அந்த அறைக்குள் தள்ளிக் கொண்டு போனேன். இருளில் அவலைப்பிடித்து மெதுவாக அங்கேயிருந்த சோபாவின் மீது தள்ளினேன்.

“ என்னைக் கொல்லாதே.. தயவு செய்து என்னைக் கொல்லாதே..”

அவள் மறுபடியும் கதற ஆரம்பித்தாள். அது எனக்கு வேடிக்கையாக இருந்தது. போலியான குரலில் நானும்,

“ நான் உன்னைக் கொல்லமாட்டேன்.. நான் உன்னைக் கொல்லமாட்டேன்..கண்ணே..”

என்று சொன்னேன். அவள் அழ ஆரம்பித்தாள். அங்கேயே சுற்றிக் கொண்டிருந்த வேலைக்காரப் பையனை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னேன். நான் என்னுடைய பையிலிருந்து ஒரு தீப்பெட்டியை எடுத்தேன். மழை அதை நனைத்திருந்தது. பல வாரங்களாகவே மின்சாரமும் இல்லை. மாடியில் ஒரு டார்ச் லைட் இருந்தது. நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

“விளக்கு தேவைப்படுவதற்கு நான் ஒன்றும் படங்கள் எடுக்கப் போவதில்லையே..”

எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன். என்னுடைய மழைக்கோட்டை கழற்றித் தரையில் வீசினேன்.

“ உன்னோடதை நான் கழட்டறேன்…”

என்று நான் அவளிடம் தெரிவித்தேன்.சோபாவிலிருந்த அவளை நான் இருளில் தடவினேன்.ஆனால் அவள் அங்கே இல்லை. ஆயினும் நான் கவலைப்படவில்லை.அவள் அந்த அறைக்குள் எங்கேயோ தான் இருக்கவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தை அலசத் தொடங்கினேன். சில நிமிடங்களில் நான் அவளைக் கண்டு பிடித்து விட்டேன். உண்மையில் நாங்கள் பின்புறமாக மோதிக் கொண்டோம்.என் கை எதிர்பாராவிதமாக அவளுடைய தொண்டையில் பட்டுவிட்டது. மறுபடியும் அவள் கத்தத் தொடங்கினாள். நான்,

“ நிறுத்து நான் உன்னைக் கொல்லப் போவதில்லை….”

என்று சொன்னேன்.

அவளுடைய அழுகையை அலட்சியம் செய்துகொண்டே அவளுடைய மழைக்கோட்டின் பொத்தான்களைக் கழட்டத் தொடங்கினேன்.அது ஏதோ ஒரு பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப் பட்டிருந்ததால் மிகவும் வழுவழுப்பாக இருந்தது.அவள் தொடர்ந்து அழுது கொண்டே என்னிடம் இருந்து விடுபடப் போராடிக் கொண்டிருந்தாள்.ஆனால் ஒருவழியாக நான் அவளை அவளுடைய மோசமான மழைக்கோட்டிலிருந்து விடுவித்து விட்டேன்.அவள் அதற்குக் கீழே சேலை கட்டியிருந்தாள் என்று தெரிந்தது. நான் அவள் முழங்காலைத் தொட்டேன். அது உறுதியாக இருந்தது. என் உடல் முழுவதுமொரு தீவிரமான மின்சாரஅலை பாய்ந்து சென்றது.ஆனால் நான் அவசரப்பட விரும்பவில்லை.

நான் அவலை அமைதிப்படுத்த விரும்பினேன்.

“ கண்ணே! நான் உன்னைக் கொலை செய்வதற்காக இங்கே கொண்டு வரவில்லை பயப்படாதே. வெளியிலிருப்பதை விட இங்கே நீ பாதுகாப்பாக இருக்கலாம். நீ வெளியே போக விரும்பினால் சுதந்திரமாகப் போகலாம்..ஆனால் நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால் இந்தக் கலவரங்கள் எல்லாம் முடியும்வரை நீ என்னுடனே இருந்து விடு.நீ ஒரு படித்த பெண்..வெளியில் மக்கள் காட்டுமிருகங்களாக மாறி விட்டார்கள்..நீ அந்த மிருகங்களிடம் சிக்கிக் கொள்வதை நான் விரும்பவில்லை…”

“ நீ என்னைக் கொல்லமாட்டியே..” அவள் அழுதாள்.

“ இல்லை சார்..” என்று நான் சொன்னேன். அவளை நான் சார் என்று அழைத்ததைக் கேட்டுவெடித்துச் சிரித்தாள். அவளுடைய சிரிப்பு என்னை உற்சாகப் படுத்தியது.

“ கண்ணே..என்னுடைய ஆங்கிலம் ரெம்ப பலகீனமானது…”

என்று ஒரு சிரிப்புடன் சொன்னேன். கொஞ்சநேரத்துக்கு அவள் எதுவும் பேசவில்லை. பிறகு அவள்,

“ நீ என்னைக் கொல்ல விரும்பவில்லையென்றால் எதுக்காக என்னை இங்கே கொண்டு வந்தாய்? “

என்று கேட்டாள். அது ஒரு இக்கட்டான கேள்வி. என்னால் உடனே அதற்கான பதிலை யோசிக்கமுடியவில்லை. ஆனால் நானே,

“ நான் உன்னைக் கொல்ல விரும்பாததற்கு எளிய காரணம் தான். நான் மனிதர்களைக் கொல்வதை விரும்பவில்லை அவ்வளவு தான்.. உன்னை ஏன் இங்கே கொண்டு வந்தேன்..நான் நினைக்கிறேன்..ஏன்னா நான் தனியா இருக்கேன்…”

என்று சொல்லிக் கொண்டிருப்பதை நானே கேட்டுக் கொண்டிருந்தேன்.

“ ஆனா உங்ககூட ஒரு வேலைக்காரப்பையன் இருக்கானே..”

“ அவன் வேலைக்காரன் தானே.. அவன் ஒரு விஷயமே இல்லை..”

அவள் அமைதியாகி விட்டாள். நான் ஒரு குற்றவுணர்ச்சியை அநுபவிக்க ஆரம்பித்தேன். நான் எழுந்து,

“ எல்லாத்தையும் மறந்திருவோம்.. நீ இங்கிருந்து போகவேண்டுமென்று விரும்பினால் நான் உன்னைத் தடுக்கமாட்டேன்…”

என்று சொன்னேன். நான் அவளுடைய கையைப் பிடித்தேன். பிறகு நான் ஏற்கனவே தொட்டிருந்த அவளுடைய முழங்காலை நினைத்துப் பார்த்தேன். முரட்டுத்தனமாக என் நெஞ்சோடு அவளை அழுத்தினேன். என் முகவாய்க்குக் கீழே அவளுடைய சூடான மூச்சுக் காற்றை உணர்ந்தேன். நான் என் உதடுகளை அவளுடைய உதடுகளோடு பொருத்தினேன். அவள் நடுங்கத் தொடங்கினாள்.

“ பயப்படாதே கண்ணே.. நான் உன்னைக் கொல்ல மாட்டேன்..”

என்று நான் கிசுகிசுத்தேன்.

“ தயவு செய்து என்னைப் போகவிடுங்கள்…”

என்று அவள் தழுதழுத்த குரலில் சொன்னாள். நான் என் கைகளை மெல்ல இழுத்தேன். ஆனால் பிறகு ஒரு வேகத்தில் அவளைத் தரையிலிருந்து உயரே தூக்கினேன். அவளுடைய இடுப்பிலிருந்த சதை மிகமிக மென்மையாக இருந்ததைக் கவனித்தேன். அவள் ஒரு சிறிய கைப்பையையும் வைத்திருப்பதை அப்போது தான் கண்டுபிடித்தேன். நான் அவளை அந்த சோபாவில் கிடத்தி அவளிடமிருந்த அந்தக் கைப்பையை எடுத்து தூரத்தில் வைத்தேன்.

“ என்னை நம்பு.. அதில் ஏதாச்சும் விலையுயர்ந்த பொருட்கள் இருந்தால் அது பத்திரமாக இருக்கும்.. அதோட நீ விரும்பினா நான் உனக்கு நிறைய்ய பொருட்களைத் தரமுடியும்…”

நான் அவளிடம் உறுதியளிக்கும் விதமாகச் சொன்னேன்.

“ எனக்கு எதுவும் தேவையில்லை..” என்றாள்.

“ ஆனால் எனக்குக் கொஞ்சம் தேவையிருக்கிறது..” என்று பதில் சொன்னேன்.

“ என்ன?” என்று அவள் கேட்டாள்.

“ நீ..” என்று நான் பதில் சொன்னேன். அவள் எதுவும் சொல்லவில்லை. நான் அவளுடைய முழங்காலைத் தடவத் தொடங்கினேன். அவள் எதிர்ப்பெதுவும் காட்டவில்லை. நான் அவளுடைய நிராதரவான நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்துவதாக அவள் நினைக்கலாமோ என்ற உணர்வு வரவே நான்,

“ நான் உன்னைக் கட்டாயப்படுத்தவிரும்பவில்லை.. உனக்கு விருப்பமில்லையென்றால் நீ போகலாம்.. உண்மையாகவே..”

என்று சொன்னேன். நான் எழுந்திரிக்கப் போன சமயத்தில் அவள் என்னுடைய கையைப் பற்றி அவளுடைய மார்பில் வைத்தாள். அவளுடைய இதயம் வேகவேகமாக துடித்துக் கொண்டிருந்தது. நான் கிளர்ச்சியடைந்தேன். அவளை என் கரங்களில் திரும்பவும் எடுத்து

“ கண்ணே..” என்று கிசுகிசுத்தேன். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் அடங்காத வெறியோடு முத்தமிட்டுக் கொண்டோம். அவள் தொடர்ந்து ஆசையோடு “ கண்ணே..” என்று மென்மையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தப் பைத்தியக்காரத்தனமான வேளையில் நான் என்ன உளறினேன் என்பதை கடவுள் தான் அறிவார்.

“ நீ எல்லாவற்றையும் கழட்டி எறி..” என்று நான் சொன்னேன். அதற்கு அவள்,

“ ஏன் நீங்களே அவற்றைக் கழட்டக் கூடாதா? “ என்று உணர்ச்சிபூர்வமாகச் சொன்னாள். நான் அவளைக் கொஞ்சத் தொடங்கினேன். அவள்,

“ நீங்கள் யார்?” என்று கேட்டாள். நான் அதைச் சொல்கிற மனநிலையில் அப்போது இல்லை. எனவே நான் “ உன்னுடையவன் கண்ணே…” என்று சொன்னேன்.

“ நீங்கள் ஒரு குறும்புக்காரர் “ என்று என்னை அவளோடு இழுத்து அழுத்திக் கொண்டே மோகத்தோடு சொன்னாள். நான் அவளுடைய ரவிக்கையைக் கழட்ட முயற்சி செய்தேன். ஆனால் அவள் என்னிடம்,

“ தயவு செய்து என்னை அம்மணமாக்காதீங்க..” என்று சொன்னாள்.

“ அதனால் என்ன.. இருட்டுதானே…! “ என்று நான் சொன்னேன். Modern Art101

“ வேண்டாம்..வேண்டாம்..”

அவள் என் கரங்களை விலக்கி அவற்றை முத்தமிட ஆரம்பித்தாள்.

“ வேண்டாம்.. தயவு செய்து வேண்டாம்.. எனக்கு வெட்கமா இருக்கு..”

“ சரி ரவிக்கையை மறந்திரு எல்லாம் பிரமாதமா நடக்கும்..”

என்று நான் சொன்னேன். அங்கே ஒரு அமைதி. அவள் தான்,

“ நீ கோபப்படலை இல்லையா?..”

என்று சொல்லி உடைத்தாள்.

“ இல்லை.. நான் ஏன் கோபப்படணும்… உன் ரவிக்கையை கழட்ட விரும்பல.. சரி நல்லது.. ஆனால்…”

என்னால் அந்த வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. பிறகு கொஞ்சம் முயற்சி செய்து,

“ எப்படியோ.. ஏதாச்சும் நடக்கணும்.. நான் என்ன சொல்ல வர்றேன்னா.. உன் சேலையக் கழட்டு…”

என்று சொன்னேன்.

“ எனக்குப் பயமாருக்கு..” என்று சொன்ன அவளுடைய குரல் உலர்ந்து போயிருந்தது.

“ யாரைப் பார்த்து பயப்படறே..” என்று நான் சத்தத்தோடு சொன்னேன்.

“ எனக்குப் பயமாருக்கு..” என்று மறுபடியும் பதில் சொன்னவள் அழ ஆரம்பித்தாள்.

“ பயப்படறதுக்கு எதுவுமே இல்லை.. “ என்று நான் ஆறுதலளிக்கும் குரலில் சொன்னேன்.

“ நான் உன்னைத் துன்புறுத்தமாட்டேன்.. ஆனால் நீ உண்மையிலேயே பயந்தேன்னா.. நாம அதை மறந்துருவோம்…நீ இங்கேயே சில நாட்களுக்குத் தங்கியிரு.. எப்ப உனக்கு சகஜமாக நீ உணர்றீயோ.. எப்ப என்னைப் பார்த்துப் பயப்படாம இருக்கியோ..அப்ப பார்த்துக்கலாம்…”

என்று நான் சொன்னேன்.

“ இல்லை…இல்லை…” என்று சொன்ன அவள் அவளுடைய தலையை என்னுடைய தொடைகளில் சாய்த்தாள். நான் அவளுடைய தலையை என்னுடைய விரல்களினால் வருடிக் கொடுத்தேன். கொஞ்சநேரத்துக்குப் பிறகு அமைதியடைந்தாள். பிறகு திடீரென அவளை நோக்கி என்னை வேகமாக இழுத்தாள். நானே திடுக்கிட்டுப் போய் விட்டேன். அவள் பயங்கரமாக நடுங்கிக் கொண்டிருந்தாள்.

கதவைத் தட்டுகிற சத்தம் கேட்டது. வெளியிலிருந்து ஒளியின் கீற்றுகள் அந்த இருண்ட அறைக்குள் ஊடுருவி வரத் தொடங்கின. அது வேலைக்காரப்பையன்.

“ நான் ஹரிக்கேன் விளக்கைக் கொண்டு வந்திருக்கேன்.. தயவு செய்து எடுத்துக்கிறீங்களா?”

“ சரி..” என்று நான் பதிலளித்தேன்.

“ வேண்டாம்.. வேண்டாம்..” என்று பயந்த குழப்பமான குரலில் சொன்னாள்.

“ ஏன் அதில என்ன வரப்போகுது.. நான் திரியைக் குறைச்சி ஒரு மூலையில வைச்சிர்ரேன்..”

என்று நான் சொன்னேன். நான் கதவைத் திறந்து ஹரிக்கேன் விளக்கை வாங்கி அறையின் ஒரு மூலையில் வைத்தேன். இன்னமும் என்னுடைய கண்கள் அந்த வெளிச்சத்துக்குப் பழக்கப்படாததினால் சில விநாடிகளுக்கு என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. இதற்கிடையில் அவள் இன்னும் மூலையை நோக்கி நகர்ந்து போயிருந்தாள்.

“ வா..இப்ப..நாம இந்த விளக்கு முன்னாடி உட்கார்ந்து கொஞ்சநேரம் பேசிக்கிட்டிருப்போம்.. எப்ப நீ விருப்பப்படறீயோ.. அப்ப நான் விலக்கை அணைச்சிடறேன்..”

என்று நான் பதில் சொன்னேன். விளக்கை எடுத்துக்கொண்டு நான் சில அடிகள் அவளை நோக்கிப் போனேன். அவள் முகத்தைச் சேலையினால் மறைத்துக் கொண்டாள்.

“ நீ ஒரு விசித்திரமான பெண்.. நான் உன்னோட. மாப்பிள்ளை மாதிரி தானே..”

என்று சொன்னேன்.

திடீரென வெளியே ஒரு பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டது. அவள் முன்னால் பாய்ந்து என் கைகளில் விழுந்தாள்.

“ அது வெடிகுண்டு தான்.. பயப்படாதே..”

“ இந்த நாட்களில் இது ஒன்றுமே இல்லை…”

என்று நான் சொன்னேன். இப்போது என் கண்கள் அந்த ஒளிக்குப் பழக்கப்பட்டுவிட்டது. அவளுடைய முகம் இப்போது நன்றாகத் தெரிய ஆரம்பித்தது. நான் அந்த முகத்தை ஏற்கனவே பார்த்தமாதிரியான ஒரு உணர்வு தோன்றியது. ஆனால் இன்னமும் அந்த முகத்தை என்னால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.

நான் அவளுடைய தோள்களில் என் கைகளை வைத்து எனக்கு நெருக்கமாக இழுத்தேன். கடவுளே! நான் என்ன பார்த்தேன் என்பதை உனக்கு விளக்கமுடியாது. அது ஒரு வயதான பெண்ணின் முகம். ஆழமான முகப்பூச்சு இருந்தாலும் சுருக்கம் விழுந்து காணப்பட்டது. மழையினால் அவளுடைய ஒப்பனை திட்டுத் திட்டாக கரைந்திருந்தது. அவளுடைய தலைமுடி சாயம் பூசப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தலைமுடியின் வேர்கள் வெள்ளையாக இருந்தன. அவளுடைய முந்தலையில் பிளாஸ்டிக் பூக்கள் கொண்ட ஒரு தலைமாட்டியை அணிந்திருந்தாள். நான் அதிர்ச்சியில் உறைந்து போய் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு நான் ஹரிக்கேன்விளக்கைக் கீழே வைத்து விட்டு,

“ நீ விருப்பப்பட்டா போகலாம்…”

என்று சொன்னேன். அவள் ஏதோ சொல்ல விரும்பினாள். என்னைப்பார்த்த அவள் மழைக்கோட்டையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு சொல்லவேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாள். அவளைப் பார்க்காமலேயே அவளுடைய பொருட்களை அவளிடம் ஒப்படைத்தேன். அவள் சில நிமிடங்கள் அவளுடைய பாதங்களை உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தாள். பிறகு கதவைத் திறந்து வெளியேறி விட்டாள்.

என்னுடைய நண்பன் அவனுடைய கதையை முடித்தபிறகு நான் அவனிடம்,

“ உனக்கு அந்தப் பெண் யார் என்று தெரியுமா? “ என்று கேட்டேன்.

“ இல்லை.. தெரியாது…” என்று அவன் பதில் சொன்னான்.

“ அவள் தான் பிரபலமான ஓவியர் மிஸ். எம்….” என்று அவனிடம் சொன்னேன்.

“ மிஸ்.எம்மா?.... பள்ளிக்கூடத்தில படிக்கும்போது யாருடைய ஓவியங்களைக் காப்பியடிக்க முயற்சி செய்ஞ்சிக்கிட்டிருந்தேனோ அவங்களா?...” என்று கத்தினான்.

’ ஆமாம்.. கலைக்கல்லூரியின் முதல்வராக இருந்தார்.. அவருடைய மாணவிகளுக்கு அசையாப்படங்கள் வரையக் கற்றுக்கொடுத்தாள். அவள் ஆண்களை வெறுத்தாள்…”

“ இப்ப எங்க இருக்காங்க..” என்று அவன் பட்டெனக் கேட்டான்.

“ சொர்க்கத்தில்..” நான் பதில் சொன்னேன்.

“ என்ன சொல்றே?...” என்று அவன் கேட்டான்.

இறந்துபோனாள். நீ தான் அவளைக் கொலை செய்தாய்.. நீ இரண்டு பெண்களைக் கொலை ”அந்த இரவில் உன்னுடைய வீட்டை விட்டு வெளியேறிய அவள் ஒரு கார் விபத்தில் செய்த கொலைகாரன். ஒருத்தி மிகப் பெரிய ஓவியர். இன்னொருத்தி அந்த இரவில் முதன்முதலாக உன்னுடைய வரவேற்பறையில் பெண்ணாகப் பிறந்தாளே.. உனக்கு மட்டுமே தெரிந்த அவளைக் கொன்றாய்..”

என்னுடைய நண்பன் எதுவும் பேசவில்லை.

நன்றி – உயிர் எழுத்து

No comments:

Post a Comment