Saturday 6 October 2012

அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருடன் தமுஎகச பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் சந்திப்பு

image

 

ஹிரோஷிமா, நாகசாகி தொடங்கி செர்னோபில்,புகுஷிமா வரை அணுசக்தியின் ஆபத்துகளுக்கு எதிராக மக்களும் விஞ்ஞானிகளும் குரல் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் முதலாளித்துவ மைதாஸின் செவிட்டுக் காதுகளுக்குத் தான் மக்களின் குரல் கேட்கவேயில்லை. பேராசையின் தீ நாக்குகள் மனிதகுலத்தையே பூண்டோடு அழித்து விடும் என்று தெரிந்திருந்தும் புதிது புதிதாக அணு உலைகளை நிறுவிக் கொண்டிருக்கிறார்கள். நாம் நம்முடைய எதிர்காலச் சந்ததியினருக்கு அணுக்கதிர் நிறைந்த சுடுகாட்டையா கொடுக்கப் போகிறோம்?

முதலாளித்துவத்துக்கு மக்களும் பண்டங்களே. இந்த உலகமே அதற்கு லாலிபாப் மாதிரி தான். சப்பித் துப்பி விடும். வரப்போகிற வால்மார்ட்டுகளும், ஏற்கனவே வந்திறங்கியிருக்கிற பகாசுர பன்னாட்டுக் கம்பெனிகளும் உண்டு கொழுப்பதற்காக நம்முடைய வாழ்வாதாரத்தை அழிக்க யத்தனிக்கும் அரசு யந்திரங்கள். தடையில்லா மின்சாரம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு. தடையில்லா மின் தடை சொந்த நாட்டு மக்களுக்கு. மக்கள் பயன்பாட்டினால் தான் மின் தட்டுப்பாடு என்று முழங்கும் பிரச்சாரம். மக்களின் ஒரு பகுதியே இதற்கு பலியாகும் அவலம்.

ஒரு சில அரசியல்வாதிகளும் முதலாளிகளும் பல லட்சம்கோடிகளில் லஞ்சமோசடி செய்து நாட்டையே திவாலாக்கி விட்டு சவடால் பேசித் திரியும்போது, நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்துக்காக பதினாலாயிரம் கோடியை இழப்பதொன்றும் பெரிய விஷயமில்லை.

4-10-12 அன்று தமுஎகச பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜனுடன் இடிந்தகரைக்குச் சென்று அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரை சந்தித்து தமுஎகசவின் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்தார்.

அறவழியில் அணு உலையை எதிர்க்கும் கூடங்குள மக்களின் மீதான காவல்துறையின் ஒடுக்குமுறையைக் கண்டித்தும், அணு உலைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக நிறைவேற்றும் வரை அணு உலைகளை இயக்கக் கூடாது என்று வலியுறுத்தியும், திருநெல்வேலியில் 13 -10-12 அன்று தமுஎகசவின். மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

1 comment:

  1. ஒன்றை இழந்தால்தான் மன்றொன்றைப் பெற முடியும்.எதிர்கால சந்ததியினருக்கு நாம் அழிவில்லா
    நமுதாயத்தை தருவோமே.

    ReplyDelete