Friday 17 April 2020

குழந்தைகளுக்கு பாட்டுப்பாடுங்கள்


குழந்தைகளுக்கு பாட்டுப்பாடுங்கள்

உதயசங்கர்


1.   பச்சிளம் குழந்தைகள் ஒலியை உடனடியாகப் பிரித்தறியவோ, அதை மூளைச்சேகரத்தில் வகைப்படுத்தவோ முடியாது. ஆனால் ஒரே வார்த்தையை அல்லது ஒரே விதமான ஒலிக்குறிப்பைத் திரும்பதிரும்பக் கேட்பதன் மூலம் குழந்தைகளின் காதுகளும் மூளையும் பிரித்துச் சேகரித்து நினைவில் வைத்துக்கொள்கின்றன.
2.   தாலாட்டுப்பாடல்களில் வரும் ஒரே மாதிரியான சொற்களும், சந்தமும் எதுகை மோனையும் குழந்தைகளின் காதுகளில் அமைதியை ஏற்படுத்துகின்றன.
3.   ஆராரோ ஆரிரரோ என்ற ஒலிக்குறிப்பில் உள்ள இசை நெடில் குழந்தைகளின் காதுகளில் ஒரு இனிய அநுபவத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தான் குழந்தைகள் அந்த இசையில் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் மன அமைதியுடனும் உறங்கி விடுகிறார்கள்.
4.   குழந்தைகளுக்கான மொழிப்பயிற்சியில் முதல் பாடமே தாலாட்டுப்பாடல்கள் தான். திரும்பத்திரும்ப பாடல்களைக் கேட்கும் குழந்தைகள் அந்த வார்த்தைகளின் அவர்களுடைய மொழிக்கிட்டங்கியில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
5.   குழந்தைகளின் ஞாபகத்திறன் மூன்று வயதுக்கு மேல் தான் உருப்பெறும் என்றாலும் அதன் நனவிலி மனதில் வெளியில் நடக்கும் அத்தனை அநுபவங்களும் தங்களுடைய முத்திரையை சிறிதளவேனும் பதிக்காமலிருக்காது.
6.   திரும்பத் திரும்பச் செய்வதன் மூலமும் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் மட்டுமே குழந்தைகள் தங்கள் கற்றல் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். முழுமையாக அதைக் கற்கும்வரை அவர்கள் சலிப்படைவதேயில்லை. நூற்றுக்கணக்கான முறை செய்கிறார்கள். வார்த்தைகளை அல்லது ஒலிக்குறிப்புகளைச் சொல்கிறார்கள்.
7.   பெற்றோர்கள் குழந்தைகளின் இந்தச் செயல்பாடுகளைத் தடைசெய்யக்கூடாது. எத்தனை முறை கேட்டாலும் குழந்தைகளுக்காக அதைச் செய்யவேண்டும். அப்போது தான் குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல், மனம், மூளைச் செயல்பாடுகள் வலிமையடையும்.
8.    இந்தச் செயல்பாடுகள் குழந்தைகள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வந்ததுமே தொடங்கி விடுகிறது. கற்றல் உயிரியல் செயல்பாடு. வேறுவிதமான குறைபாடுகளில்லாத குழந்தைகள் ஒவ்வொரு கணமும் தாங்கள் வாழ்வதற்கான அடிப்படைக் கூறுகளைக் கற்றுக்கொண்டேயிருக்கின்றன.
9.   பச்சிளம் குழந்தைகள் பிறந்தவுடன் தன்னுடைய ஐம்புலன்களால் தான் இந்த உலகை அறிந்து கொள்கின்றார்கள். மூன்று வயது வரை மூளையின் வளர்ச்சி அணுகணமும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அதனால் தான் பெரும்பாலும் மூன்று வயதுக்கு முன்னால் நடந்த எந்த நிகழ்வும் நம் நினைவுகளில் சேகரமாவதில்லை.
10. மூன்று வயதுக்கு முன்னால் அசைவுகளும், ஓசையும், தொடுகையுமே பிரதானமான புற உலகை அறிந்து கொள்வதற்கான கருவிகளாகச் செயல்படுகின்றன. ஒரு சிறு அசைவும் குழந்தையின் கண்களின் கவனத்தை ஈர்க்கின்றது. ஒரு சிறு ஓசையும் குழந்தையின் காதுகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால் தான் இசைக்குச் செவி மடுத்து குழந்தை அமைதி கொள்கிறது.
11. தாலாட்டுப்பாடல்களில் உள்ள திரும்பத்திரும்ப வரும் ஓலி நயம் குழந்தைகளின் செவிகளை நிறைக்கிறது. செவிகளின் வழியே மூளைக்குச் செல்லும் ஓசைநயம் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தைச் சாந்தப்படுத்துகிறது. பாடல்களின் அர்த்தம் விளங்காமலேயே குழந்தைகள் இசையினால் வசீகரிக்கப்படுகிறார்கள் என்றால் தாலாட்டு தொடங்கி குழந்தைப்பாடல்களின் முக்கியத்துவம் விளங்கும்.
12. பச்சிளம் குழந்தைகளுக்கு தாலாட்டுப்பாடல்கள் என்றால், குழந்தைகள் வளர வளர குழந்தைப்பாடல்களை அவர்களுக்குச் சொல்லித்தரவேண்டும். அம்மா இங்கே வா வா என்ற பாடல்வழியே குழந்தைகள் அம்மா என்ற உறவின் பெருமையை மட்டுமல்ல அகரவரிசையையும் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களையறியாமலே தாய்மொழியைக் கற்றுக்கொள்ளும் திறனும் அதன்வழியே சிந்திக்கும் திறனும் உருக்கொள்கிறது.
.  
13.   குழந்தைகளுக்காகப் பாடும் பாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் மூன்று அசைச்சொற்களோடு இருக்கவேண்டும். சந்தநயம் வேண்டும். வரிகளின் முதலடியோ ஈற்றடியோ எதுகை மோனையோடு இருக்க வேண்டும். இசைக்கு இசைவாக ஏகாரத்தில் முடிகிற சொற்களைத் தேர்வு செய்ய வேண்டும். பாடலாகப் பாடப்படுகிற இசைக்கோர்வை வேண்டும்.
14. பாடல்கள் குழந்தைகளுக்கு இந்த உலகை அறிமுகப்படுத்தவோ, உலக நடைமுறைகளைப் பற்றிய சித்திரங்களையோ, இயற்கையைப் பற்றிய காட்சிகளையோ,அறிமுகப்படுத்தலாம்.  அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளைப்பற்றியோ, எளிய கணிதம், அறிவியல், பற்றியதாக இருக்கலாம். வேடிக்கையாகவோ, விடுகதைப்பாடல்களாக, இருக்கலாம். மானுட அறம் குறித்தோ, கதையாகவோ, உறவுகளின் மேன்மை குறித்தோ, கதைப்பாடல்களாகவோ, விளையாட்டுப்பாடல்களாகவோ, இருக்கலாம்.
15. பாடல்களில் எளிய கருத்துகள் பொதிந்திருக்க வேண்டும். மொழியை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் விதமாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைகளின் மொழியில் இருக்கவேண்டும்.
16. எளிய வார்த்தைகளை இசையுடனும் பொருளுடனும் கோர்க்கும் திறமை. ஏனெனில் குழந்தைகள் பாடல்களை விளையாட்டாய் பாடும்போதே முதலில் தாய்மொழியை தெரிந்து கொள்கிறார்கள். மொழிவளம் அவர்களுடைய மனதில் உரமாகிறது. அவர்கள் அதன் வழியே உலகை அறிந்து கொள்கிறார்கள்.
17. குறிப்பிட்ட காலம்வரை எக்காரணம் கொண்டும் திரைப்படப்பாடல்களைப் பாடவோ, கேட்கச்செய்யவோ கூடாது. இயந்திரத்திலிருந்து வரும் ஒலி என்ன நவீனமாக இருந்தாலும் அது இயந்திரம் தான். அம்மாவோ அப்பாவோ, ஆச்சியோ தாத்தாவோ, மாமாவோ அத்தையோ குழந்தையின் முகம் பார்த்துப் பாடும்போது குழந்தைகளுக்குக் கிடைக்கும் நெருக்கத்தையும் குரலில் உள்ள பாசமிக்க ஈரத்தையும் எந்த இயந்திரமும் கொடுத்து விடாது.
18. எனவே குழந்தைகளுக்கான பாடல்களைப் பாடுங்கள். குழந்தைகள் வசியமாகி விடுவார்கள்.

No comments:

Post a Comment