Sunday 19 April 2020

மின்னணு உலகில் குழந்தைகளை எப்படி வளர்ப்பது?


மின்னணு உலகில் குழந்தைகளை எப்படி வளர்ப்பது?
உதயசங்கர்

1.   அவசரமான உலகத்தில் அவசர அவசரமாக வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தில் குழந்தைப்பேற்றைத் ( மறு உற்பத்தியைத் ) தவிர மற்ற எல்லாவற்றையும் மின்னணு சாதனங்கள் செய்கிற உச்சபட்ச நுகர்வியக் காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.

2.   குழந்தைகளையும் அந்த மின்னணு சாதனங்களின் கையில் ஒப்படைத்து விட்டு நாம் வாழ்க்கையின் அவசரச்சக்கரத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.


3.   குழந்தைகள் அப்பா அம்மா வின் குரலை விட அதிகமாக தொலைக்காட்சி மற்றும், மொபைல் ஃபோனில் வருகிற குரல்களையே அதிகம் கேட்கிறார்கள். எனவே அவர்கள் அவற்றைப் பார்ப்பதற்கு வெறி கொண்டு அடம்பிடிக்கிறார்கள்.

4.   கையில் மொபைல் ஃபோன் இல்லாத குழந்தைகளைக் காண்பது அரிது. அதுவும் நகரங்களில் சர்வ சாதாரணம். நம்முடைய குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகளாக சாமர்த்தியசாலிகளாக, வசதியானவர்களாக வாழவேண்டும் என்பது தான் எல்லாப்பெற்றோருடைய கனவு. ஆனால் அதற்காக இயல்பான வளர்ச்சியை மறுதலித்து வயதுக்கும், அறிவுக்கும் மீறிய விஷயங்களை அவர்களிடம் திணிப்பது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.


5.   குழந்தைகளுக்கு டூ வீலர் ஓட்டக்கற்றுக் கொடுப்பது, ஓட்டவைத்து அழகு பார்ப்பது, காரோட்டக் கற்றுக்கொடுப்பது, கம்ப்யூட்டரில் உட்காரவைத்து அதை இயக்கச் சொல்லிக்கொடுப்பது என்று குழந்தைகளின் மனநிலைக்கு மீறிய செயல்களை செய்யவைப்பதினால் குழந்தைகளுக்கு எந்தப்பலனுமில்லை.

6.   குழந்தைகளுக்குத் தாலாட்டு பாடுவது, கதைகள் சொல்வது, சினிமா பார்ப்பது, கார்ட்டூன் பார்ப்பது, என்று குழந்தைகளின் வளர்ப்பில் மிகமுக்கியமான மிக அடிப்படையான மனதைக் கட்டமைக்கிற வேலையை மின்னணுச்சாதங்களின் கையில் விட்டு விடுகிறோம்.


7.   மின்னணுச்சாதனங்கள் தேவையின்றியே நம்முடைய வாழ்க்கையில் பிரதான இடத்தைக்கைப்பற்றி விட்டன. அதிலும் குறிப்பாக குடிநோயாளிகளுக்கு வரும் கை நடுக்கம்போல மொபைல் ஃபோனைத் தொடவில்லையென்றால் பலருக்கு கை நடுக்கம் வந்து விடுகிறது. மின்னணுச்சாதனங்களைப் பயன்படுத்துவதில் பெரியவர்களுக்கு நிதானம் வந்தால் தான் குழந்தைகளை அதன் கோரப்பிடியிலிருந்து காப்பாற்ற முடியும்.
8.   இல்லையென்றால் குழந்தைகள் சமூகமனிதனாகாமல் சுயநலமிக்க, பிடிவாதமிக்க, தனிமனிதனாக வளர்வார்கள். சமூக இணக்கம், சகமனிதநேசம், அன்பு, காதல், பாசம், எல்லாம் குறைந்து கொண்டே போய்விடும்.

9.    எப்பேர்ப்பட்ட மின்னணுச்சாதனங்களாக இருந்தாலும் இரத்தமும் சதையுமான மனிதர்களுக்கு மாற்றாக முடியாது. அத்துடன் மனித உறவுகளின், மனித சமூகத்தின் சாரத்தை எதனாலும் ஈடு செய்யமுடியாது.


10.  குழந்தைகளின் வளர்ச்சியில் முதன்மையாக பெற்றோர், ஆசிரியர், இவர்களின் பங்கு மிக முக்கியமானது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளோடு உரையாடுவதை அத்தியாவசியமானதாக மாற்றிக்கொள்ளவேண்டும். அவர்களுடன் விளையாடவேண்டும். அவர்களுக்கு கதைகள் சொல்லவேண்டும். அவர்களுக்குப் பாடல்களைப் பாடிக்காட்ட வேண்டும். அவர்களுடைய சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லவேண்டும். தினம் ஒரு முறையாவது குழந்தைகளை அணைத்து தங்களுடைய அன்பைப் பரிமாறவேண்டும்.

11.  பெற்றோர் முதலில் மின்னணுச்சாதனங்களைப் பயன்படுத்துவதை குறிப்பாக தொலைக்காட்சியை, கணிணியை, மொபைல் ஃபோனை, குறைத்துக் கொள்ளவேண்டும். குழந்தைகள் முன்னால் பயன்படுத்தாமல் இருக்கவேண்டும். அவையெல்லாம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானவை என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும்.


12.  நம்முடைய குழந்தைப் பருவத்தில் கிடைக்காத அத்தனை வாய்ப்புகளும் வசதிகளும் நம்முடைய குழந்தைகளுக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றின் மூலம் ஒரு சிறந்த சமூக மனிதனை உருவாக்குவது தான் இந்த உலகத்துக்கும், நாட்டுக்கும், மனித சமூகத்துக்கும் செய்கிற மகத்தான உதவியாக இருக்கமுடியும்.

13.  நமக்கு எவ்வளவு தான் வசதிவாய்ப்புகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்முடைய குழந்தை இந்த உலகத்தில் தான் வாழவேண்டும் என்பதை எப்போதும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment