Showing posts with label பவா செல்லத்துரை. Show all posts
Showing posts with label பவா செல்லத்துரை. Show all posts

Tuesday, 2 August 2016

தீராத்தனிமையை எழுதித் தீர்த்த ஒற்றைக் கலைஞன் உதயசங்கர்

தீராத்தனிமையை எழுதித் தீர்த்த ஒற்றைக் கலைஞன் 

உதயசங்கர்
-    பவா செல்லதுரை

அது அழகிய கையெழுத்தில் எழுதப்பட்டதொரு இன்லேண்ட் லெட்டர். இதற்கு மேல் வார்த்தைகளைச் சுருக்கிவிட முடியாது.
 “அன்புமிக்க பவா,
நான் உதயசங்கர், இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். உதவி நிலைய அதிகாரியாக வேலை கிடைத்து உங்கள் ஊருக்கருகே வேளானந்தல் ரயில்வே ஸ்டேஷனில் ஒத்தையில் நிக்கேன். உங்களைச் சந்திக்க வேண்டும். நேரம் வாய்த்தால் ஸ்டேஷனுக்கு வாங்க
கடிதத்தை எப்போதும் போல் இரண்டு மூன்றுமுறைப் படித்தேன். அடுத்தநாள் மதியம் நானும் கருணாவும் தனித்தனி சைக்கிள்களில் ரயில்வே தண்டவாளத்தின் வழியே ஒதுங்கிக்கிடந்த மண்சாலையில் இறைந்து கிடந்த ஜல்லிக்கற்களை உரசியவாறே வேளானந்தல் ஸ்டேஷனை நோக்கிப் போனோம். கற்களின் உரசல் ஜாலியான மனநிலையைக் கொடுத்தது.
பெரும் மரங்கள் அடைகாத்த பேய்ப் பங்களா மாதிரி அப்பழைய கட்டிடம் திப்பக்காட்டின் ஒரு பக்கமாக நின்றிருந்தது. சீமை ஓடுகள் சரிந்து கிடந்த ஊழியர்களுக்கான குவார்ட்டஸ்கள் பாம்படையும் புற்றுகளாகியிருந்தன.
கொஞ்சம் சுமாரான ஒரு வீட்டின் பழைய சிமெண்ட் தரையில் பாய்விரித்து, கையை தலையணையில் ஊன்றி குள்ளமான ஒரு மனிதர் படுத்துக்கொண்டே படித்துக் கொண்டிருந்தார். கதவு திறந்தேதான் கிடந்தது.
‘‘நான் பவா’’ எனத் துவங்கும் முன்,
‘‘தெரியும் வாங்க, இது கருணாதானே’’ என அறிமுகத்தை வெகு சுலபமாக்கிக் கொண்டார்.
பாதியில் மூடிவைக்கப்பட்ட புத்தகத்தைப் பார்த்தேன்.
தாஸ்தாவேஸ்கியின்குற்றமும் தண்டனையும்இத்தனைப் பெரிய புத்தகத்தை தனிமையில் படிக்க வாய்ந்திருந்த கணமே என்னைக் கொஞ்சம் பொறாமைப்படுத்தியது.
அப்போது நாங்கள், கலை இரவு, இலக்கியக்கூட்டம், நாடகம், போஸ்டர், போராட்டம், என அலைந்து, திரிந்து வாசிப்பை இரண்டாவதாக வைத்திருந்த நாட்கள்.
அவர் கோவில்பட்டியின் இலக்கியச் சூழல் பற்றிப் பேச ஆரம்பித்தார். எந்நேரமும் நாங்கள் ஓடிவிடக் கூடுமென நினைத்தோ என்னமோ எங்களுக்காக உணவு தயாரித்துக் கொண்டே பேசினார்.
வாத்தியார் ராமகிருஷ்ணன் (க்ருஷி) தமிழ்ச்செல்வன், கோணங்கி, தேவதச்சன், சாரதி, அப்பணசாமி, நாறும்பூநாதன், திடவை பொன்னுசாமி என சென்ற அவர் பேச்சு ஒரு ஊரில் இத்தனை படைப்பாளிகளாவென ஆச்சர்யபட வைத்தது.
நைனாதான் எங்க எல்லோருக்குமே முன்னத்தி ஏர். அழகிரிசாமியும், புதுமைப்பித்தனும் அதற்கும் மேலேநான் சராசரிக்கும் மிக உயரமாக எழுப்பப்பட்டிருந்த அந்த ரயில்வே குவார்ட்டர்ஸின் சுவரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதில் கறுப்பு வெள்ளையிலான ஒரு சின்னப் புகைப்படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது. பழைய கல்யாண போட்டோக்களைச் சட்டமிடும் பிரேமில் சிறு கண்ணாடியிடப்பட்டிருந்தது. எங்கள் பேச்சை மீறி அப்புகைப்படம் என்னை வசீகரித்தது.
தரைப் படுக்கைக்கருகே பிரிந்து படித்தும் படிக்காமலும் பத்திருபது இன்லேண்ட் கடிதங்கள் பரப்பி வைக்கப்பட்ட மாதிரியிருந்தன. எழுதப்படாத ஐம்பதுக்கும் மேற்பட்ட இன்லேண்ட் கடிதங்கள் ஒரு பெரிய புத்தகத்தின் நடுவில் துருத்திக் கொண்டிருந்ததைக் கவனித்தேன்.
உதயசங்கர் என் கவனிப்பை நுட்பமாய் யூகித்து,
இது  நண்பர்களுக்கு எழுத
கூட படிச்சவன், கவிஞன், எழுத்தாளன், என்னை இருமுறை நிராகரித்தவள் என பெயர் ஞாபகம் வரும் எவருக்கும் கடிதம் எழுதுவேன். இத்தனிமையை இப்படி மட்டுமே கரைத்துக் கொள்கிறேன்.
நாங்கள் ஒரு சராசரியான மனிதனிடம் பேசிக்கொண்டிருக்கவில்லை என்பது மட்டும் புரிந்தது. எப்போதும் மனித நெரிசலில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த எனக்கும் கருணாவுக்கும் இம்மனிதனின் தனிமை வியப்பளித்தது.
எங்கள் உரையாடல் நீண்டு கொண்டேயிருந்தது. சூரியனின் மறைவு அறையிலிருந்த எங்கள் மூவரையும் வெளியே வரவழைத்தது. தண்டவாளத்திற்கு எதிர்ப்புறம் முழுக்கக் காடு. ஒரு ரயில் போகுமளவிற்கு மட்டுமே இடைவெளி. தூரத்தில் யாரோ சில பெண்கள் தலையில் விறகுச்சுமையோடு கிட்டத்தட்ட ஓடிக் கொண்டிருந்தார்கள்.
பெருமரங்களினூடே எழுந்த காற்றின் சப்தம் பழக்கப்படாதவர்களைப் பயமுறுத்தும். எங்கள் இருவரையும் பயமுறுத்தியது. உதயஷங்கர் பழக்கப்பட்டிருந்தார்.
என் நினைவு சரிதானெனில் அன்றிரவு அவருடனேயே படுத்துறங்கினோம். எங்கே உறங்கினோம்? பின்னிரவு வரை பேசிக் கொண்டிருந்தோம். அதிகாலையின் குளிர் காற்றினூடே அவரோடு கை குலுக்கியபோது நேற்றிலிருந்து என்னை வசீகரித்த அப்படத்தை காட்டி,
‘‘இது யார் சங்கர்?’’ எனக் கேட்டேன்.
‘‘என் சித்தப்பா, காலமாயிட்டாரு, பேரு விருத்தாச்சலம்’’ என சிறு புன்னகை உதட்டோரம் ஒதுங்க உதயசங்கர் சொல்லி, எங்களை சைக்கிள் மிதிக்க அனுமதி தந்தார்,
வீடடைந்ததுமே அவர் சொன்ன புத்தகங்கள், அவர் பேச்சில் தெறிந்த சிறு பத்திரிகைகள், அவர் பார்த்த திரைப்படங்கள் என தேட ஆரம்பித்தேன்.
அப்போதுசுபமங்களாவை கோமல் பொறுப்பேற்று புதுப் பொலிவோடு நடத்த ஆரம்பித்திருந்தார். மூலக்கடை சௌந்தர் கடையில் காத்திருந்து அதை வாங்கிக் கொள்வதுண்டு. ஆர்வத்தை வீடு வரை கொண்டு போக முடியாத அவசரத்தில் அங்கேயே பிரித்துப் பக்கங்களைப் புரட்டுவேன்.
ஒரு முழுப்பக்கத்தில் நேற்று உதயசங்கரின் குவார்ட்டர்ஸில் பார்த்த அவர் சித்தப்பாவின் படம் பிரசுரமாகியிருந்தது. படத்திற்கு கீழே விருதாச்சலத்திற்குப் பதில் புதுமைப்பித்தன் என அச்சாகியிருந்தது. என் குழப்பத்தைத் தீர்க்க தொலைபேசியில்லை. அன்றும் மதிய வெயிலில் வேளானந்தல் ஸ்டேஷனை நோக்கி தனியாளாக சைக்கிள் மிதித்தேன். நான் ஸ்டேஷனை அடைந்தபோது ஷங்கர், ஒயிட் அண்ட் ஒயிட் சீருடையில் கையில் ஒரு பச்சைக் கொடியோடு ஏதோ ஒரு ரயிலின் வருகைக்காக, தென்பக்கமாய்ப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார்.
நான் அவரருகில் நின்று மூச்சு வாங்கியதைக் கூட உணராமல் வெகுதூர ரயில் சத்தத்திற்கு தன் காதுகளை ஒப்படைந்திருந்தார்.
மிகுந்த இரைச்சலோடு ஒரு ரயில் நிற்காமல் எங்களை கடந்து போனது. நான் காதுகளில் கை வைத்து கொஞ்சம்பாவ்லாகாட்டிக் கொண்டேன்.
நிறைவின் ஆசுவாசத்தோடு திரும்பி ஸ்டேஷனுக்கு போகையில் நானும் அவரைப் பின் தொடர்ந்தேன்.
சம்பிரதாயங்களோடு சில கடமைகளைச் செய்து முடித்து, வேறு யாரிடமோ எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு,  ‘குவார்டர்ஸ்க்கு போலாமா?’ என என் முகத்தை ஏறெடுக்கையில்தான் அவர் முகத்தின் ஓரத்தில் ததும்பி நின்ற ஒரு குறும்புப் புன்னகையைக் கவனித்தேன்.
‘‘அப்புறம்?’’
‘‘இது யார் சங்கர்?’’ என நேற்றைய கேள்வியை மறுபடியும் கேட்டேன்.
‘‘என் சித்தப்பா’’
‘‘பேரு’’
‘‘விருத்தாச்சலம்’’ நேற்றைய நிதானத்தோடேயே அவர் சொன்னார்.
 ‘‘இல்ல, புதுமைப்பித்தன்’’ இது கோபமேறிய நான்,
அவர் வாய்விட்டு சிரித்தார்.
நான் கொடுத்த சுபமங்களாவைப் பார்த்துக்கொண்டே,
விருத்தாச்சலமும், புதுமைப்பித்தனும் ஒருத்தர்தான் பவா, புதுமைப்பித்தனை தெரியாம நீயெல்லாம் கதை எழுத ஆரம்பிச்சிட்டே என்ற வார்த்தைகளில்தான் திருநவேலிக் குசும்பை முதன்முதலாய்க் கேட்டேன்.
பதிலுக்கு நானும் சிரித்துக் கொண்டேன். அன்றிரவு அவரிடமிருந்து வாங்கிவந்த என்.பி.டி. வெளியிட்டிருந்த புதுமைப்பித்தன் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
இப்படியும் உதயசங்கர் என்ற சிறுகதையாளனை நாங்கள் அறிமுகப்படுத்திக் கொண்ட விதத்தை சொல்லலாம்.
இந்த மத்தியான நேர சைக்கிள் பயணங்கள்  தொடர்ந்து கொண்டிருக்கையில் அவரின் முதல் தொகுப்பு  ‘யாவர் வீட்டிலும்சென்னை புக்ஸ் பாலாஜியால் கொண்டுவரப்பட்டது.
களச் செயற்பாட்டாளர்களாகிய நாங்கள்தமுஎசவின் நிகழ்வில் ஒன்றாய் அதற்கான வெளியீட்டு விழாவை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரீப்பர் பட்டைகள் உடைந்த அதன் நீண்ட ஹாலில் ஏற்பாடு செய்தோம்.
நிகழ்ச்சியை நடத்தி முடிக்க இரண்டாயிரம் செலவாகும். புத்தகம் எழுதின உதயசங்கரின் ரயில் வரும்வரை காத்திருந்து அவரையும் உடன் அழைத்துக் கொண்டு நிதி வசூலுக்கு அலைவோம்.
ஐம்பது ரூபாய் கொடுக்கும் ஆள் கடவுள். கடவுள் எப்போதும் எங்கள் கைகளுக்கு அகப்பட்டதேயில்லை.
எழுத்தாளர். . தமிழ்ச்செல்வன் தன் நண்பனின் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட தோழர் ஆரோக்கியசாமி அதைப் பெற்றுக்கொண்டு பேசினார். அந்த நிகழ்விற்கு இரண்டு மூன்று நாட்களுக்குமுன் இரவில்தான் அத்தொகுப்பை முழுவதுமாய்ப் படித்து முடித்தேன். தாங்கிக்கொள்ள முடியாததொரு மௌனத்தில் கிடந்த நான், அடுத்த நாள் அத்தொகுப்பில்  ‘ஒரு பிரிவுக் கவிதைஎன்றொரு கதை படித்தேன். கதையென்றா சொன்னேன்? இல்லை. ஒரு மிக நீண்ட கவிதை அது. கவிதையிலான உரைநடையென்றும் சொல்லலாம்.
ஆனந்த், சேது, அவள்.
ஆனந்த் அவள் கணவன், சேது அவள் காதலன் மூவரும் ஆளரவமற்ற அந்த ரயில்வே நிலையத்தில் எப்போதோ வரப் போகிற ஒரு ரயில் வண்டியை எதிர்பார்த்து நின்றிருப்பார்கள்.
மௌனத்தால் மட்டுமே கதை நகரும். உரையாடல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதொரு புனைவு அது.
சேதுவை ரயிலேற்ற ஆனந்தும் அவளும் நிற்பார்கள். அவர்களுக்கான ஒரு தனிமையை உருவாக்க வேண்டி  ஆனந்த் தூரத்திலிருக்கும் ஒரு பெட்டிக்கடையை நோக்கி சிகரெட் வாங்க போவான்.
அவனின் இச்செயல் அவளுக்கு அருவெறுப்பூட்டும். ஆனாலும் அந்நிமிடத்திற்கே காத்திருந்தது போல் அவர்களிருவரின் பார்வையும் ஒரே நேரத்தில் மேலெழும். தொட்டால்இல்லையில்லைபெயர் சொல்லியழைத்தாலே அழுதுவிடுவது போலிருப்பாள் அவள்.
அவர்கள் மூவரின் உலகத்தில் இதற்கும் மேல் ஒரு அங்குலமும்  என்னால் நுழைய முடியாது. நீங்கள் வேண்டுமானால் முயன்று பாருங்கள்.
டிகிரி படித்து முடித்து வேலைகிடைக்காமல் அலைக்கழிப்புகளும் அவமானங்களும் நிறைந்த முதல் பத்தாண்டுகளின் துயர வடுவை இன்னமும் உதயசங்கர் நடுநெஞ்சில் தடவிப்பார்த்துக் கொள்கிறார். எழுதியெழுதித் தீர்த்த பின்னும் அது வளரும் புற்றாக எழுந்து கொண்டேதான் இருக்கிறது.
.நா.சு. தான் இறப்பதற்கு முன் தினமணியின் நடுப்பக்கத்தில் தமிழ் சிறுகதைச் சூழலைப்பற்றி எழுதின ஒரு முக்கியமான கட்டுரையில், நம்பிக்கையளிக்கும் இரு சிறுகதைத் தொகுப்புகளென உதயசங்கரின் யாவர் வீட்டிலும்ஐயும் கௌதம சித்தார்த்தனின்  ‘மூன்றாவது சிருஷ்டியையும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இலக்கியச் சூழல் எப்போதும் இருவேறு துருவங்களாகவே பிரிந்து கிடந்திருக்கிறது. ஒன்று முற்றிலும் வெகுஜன வாசிப்பு சார்ந்தது. ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் என அது பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு இவர்களின் படைப்பைக் கொண்டு போய்ச் சேர்த்தது.
கோபிகிருஷ்ணன், சம்பத், பாதசாரி, ஆத்மநாம், பிரமிள் என சிறுபத்திகைகளை மட்டுமே நம்பி எழுதின படைப்பாளிகள். இரண்டாம் வகை.
கந்தர்வன், உதயசங்கர், தமிழ்செல்வன், வேலராமமூர்த்தி, லட்சுமணபெருமாள் மாதிரியான அலாதியான படைப்பாளிகள், இவை இரண்டிற்கும் இடையில் மாட்டிக்கொண்டவர்கள்.
எப்போதும் மழைநிழல் பிரதேசவாசிகள் இவர்கள். இரு தரப்பு வாசகர்களும் தவறவிட்ட பெரும் படைப்புகளை வெகுகாலம் கழித்து இப்போதுதான் தமிழ்ச்சூழல் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது.
இது காலம் கடந்த கவனிப்பு. ஆனால் படைப்புகளுக்கு ஏது காலம்? அது எப்போதுமே சாகாவரம் பெற்றவைகளே. பொருட்படுத்தாமை நம் துரதிஷ்டமே.
ஆனால் இது அவனைப் பற்றி என்றொரு குறுநாலை உதயசங்கர் எழுதியிருக்கிறார். ‘ஆட்டோகிராப் என்ற சேரனின் திரைப்படம் அக்கதையின் சாரம்தான்.
ஒரு மனிதனின் மொத்த ஜீவிதத்தில் குறைந்தது ஆறேழு பெண்கள் வந்து போய்விடுகிறார்கள். ஓரிருவர் தங்கி விடுகிறார்கள்.
கோலம் போட்டு அதைக் கவனிக்கும் கண்களைச் சந்தித்துப் பிரியும் ஒரு கணம் வந்துபோன கோமதியோ, எதேச்சையான ஒரு சந்திப்பில் விடுதியறையில் தங்க நேரிடும் சங்கரியாகவோ, வாழ்நாளெல்லாம் கடிதமெழுதி, ரத்தக் கையெழுத்திட்டு ஒரு மாலையில் சொல்லாமல் பிரியும் வசந்தியாகவோ அப்பெண்கள் நம் வாழ்வைத் தீண்டிச் செல்லும்தீ ஜுவாலைகள்.
உதயசங்கர் தன் குறுநாவலில் அவர்களை அத்தனை அழகாக வரிசைப்படுத்தியிருப்பார்.
சில எழுத்தாளர்கள் அவர்களின் ஆக சிறந்த கதை ஒன்றின் பெயரின் அடைமொழியோடே அழைக்கப்படுவதுண்டு.
சாயாவனம், சா.கந்தசாமி, கோவேறு கழுதைகள், இமயம், இடைவெளி சம்பத், மனர்குடம் மாதவராஜ் இப்படி பெரு நாட்கள் உதயசங்கரும், சக மனிதன் உதயசங்கர் என்றே அடையாளப்படுத்தப்பட்டார்.
இரவு கடைசி டவுன் பஸ்ஸில் ஒரு அலுவலக ஊழியனும், ஒரு சம்சாரியும் பயணிப்பார்கள். அரசு ஊழியன் அப்பாவுக்கு அனுப்ப வேண்டிய பணம் மறதியில் பேண்ட் பாக்கெட்டில் கிடந்தது.
இன்னொருவேன் சம்சாரி, மளிகைக் கடைக்காரனுக்கு தரவேண்டி எடுத்து வந்த ஐநூறு ரூபாய், மளிகைக் கடை பூட்டியிருந்தால் பையில் இருந்தது.
எதேச்சையாக இருவரும் பக்கத்து பக்கத்து இருக்கைகளில் அமர நேர்கிறது.
இருவருமே ஒருவரை ஒருவர் சந்தேகிக்கின்றனர். சம்சாரியின் முகத்திலிருந்த வெட்டுத் தழும்பு அவன் பாக்கட் அடிப்பவனேயென அரசு ஊழியனை நம்ப வைக்கும்.
எதுவுமே நேராமல் பஸ் பயணம். சகமனிதர்களை சந்தேகப்படும் படியானதொரு உலகில் நாம் வாழ நேர்ந்திருக்கிறது.
ஒரு நிறுத்தத்தில் இருவருமே இறங்கிக் கொள்பார்கள்.  வாழ்வு ஆளுக்கொரு திசைக்கு அவர்களை செலுத்தும். கொஞ்ச தூரம் நடந்து போய் திரும்பிப் பார்த்து சிரித்துக் கொள்வர்கள். எப்படியானதொரு குரூரமான சமூக விளிம்பில் சக மனித அன்பு சிக்கித் தவிக்கிறது!
உதயசங்கரின் எல்லாக் கதைகளுமே எளிமையும், சிடுக்கல் இல்லாதவைகளும்தான். அது தெளிந்த நீரில் விழும் நாணயத்தைப் போல் நம் கண்ணெதிரே தரையைத்தொடும்.
உதயசங்கரின் மாஸ்டர் பீஸ் கதை ஒன்று உண்டு. ‘டேனியல் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல் ஒவ்வொரு படைப்பாளியையும் தன் வாழ்நாளில் லௌகீக நச்சரிப்பு இப்படி ஒரு கதை எழுத வைத்திருக்கிறது.
கந்தர்வன் தன் ராமன் சாரை முதல் பென்ஷன் பணத்தில் புல்புல்தாரா வாங்க வைத்ததும்,
தமிழ்செல்வன் கருப்பசாமியின் அய்யா இசக்கிமுத்துவை சதுரம் சதுரமாய் இட்லி சுட வைத்ததும்,
நான் என் ஏழுமலையை பெங்களூர் சிட்டி மார்க்கெட்டில் பழக்கூடை சுமக்க வைத்ததும்,
உதயசங்கர் தன் டேனியல் பெரியநாயகத்தின் தூசடைந்து மூலையில் கிடக்கும்  புல்லாங்குழலை தன் மகனே எடுத்து அப்பாவை வாசிக்க சொல்வதும் தற்செயலானவைகள் அல்ல.
ஒரு சமூகம் கலைஞர்களிடம் காட்டும் குரூரம் அது. அச்சமூக வாழ்வியலைக் கூர்ந்து அவதானிக்கும் ஒரு படைப்பாளி, பிரதேசங்கள் மாவட்டங்களைத் தாண்டி தன் அசலான மனிதர்களை படைப்பாக்குகிறான். அப்படித்தான் கலைவயப்பட்ட கலைஞர்களை லௌகீகமும், அரசும் புதைகுழியில் நெட்டித்தள்ளுவதை இவர்கள் எல்லோருமே படைப்பாக்கியிருக்கிறார்கள்.
டேனியல் பெரிய நாயகத்தின் மகன் ஏசுராஜைப் போல சில மகன்கள் மட்டும் அதிசயமாக புதைகுழியிலிருந்து மீள அப்பாக்களுக்கு தங்கள் பிஞ்சுக் கரங்களை நீட்டுகிறார்கள்.
உதயசங்கர் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் எழுத்தாளனில்லை. கரிசல் மண்ணிலிருந்து எழுதத் துவங்கியிருப்பினும், பணி நிமித்தம் வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழ்வு வேர்பிடிக்க ஆரம்பிக்கையில் வேறொரு இடத்தில் பிடுங்கி நடப்பட்டவர் அவர். அதனாலேயே அவர் படைப்பு முழுவதையும் பொதுவான மனித மனங்களே ஆக்ரமித்துக் கொள்கின்றன.
ஒரு பிரிவுக் கவிதைடேனியல் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல்பெயிண்டர் பிள்ளையின் ஒருநாள் காலைப் பொழுதுபூனை வெளி ஆகிய நான்கு கதைகளும் வேறு எவராலும் எழுதிவிட முடியாத அசாத்திய படைப்புகள். இந்த உயரத்தை அடைவதற்கே ஒவ்வொரு படைப்பாளியும் தன் ஜீவிதம் முழுக்க எழுதியெழுதித் தீர்க்கிறான். உதயசங்கர் மிக எளிமையாக இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதே நம் பெருமிதங்களில் ஒன்று.
வேளானந்தல் ஸ்டேஷனுக்கு பக்கத்து ஸ்டேஷன் தண்டரை. இதுவும் திப்பக்காட்டின் தென்பக்க நீட்சிதான். அதுவும் எப்போதாவது பயணிகள் வந்து போகும் ஒரு ரயில் நிலையம்தான். திருச்சூரிலிருந்து பிடுங்கி நடப்பட்ட மலையாள இலக்கியமறிந்த வெங்கடேஸ்வரன் அதன் ஸ்டேஷன் மாஸ்டர்.
சற்று நின்று கிளம்பும் ரயிலில் அவர் ஏறி பக்கத்து ஸ்டேஷனில் உயிர்ப்புடன் இயங்கும் இன்னொரு படைப்பாளியோடு எப்போதும் தன் இலக்கிய, அரசியல் உரையாடலைத் துவக்குவார். இருவருக்குமே மார்க்சியம்தான் அடிப்படை.
அவர் பஷீரை சொல்லும்போது, பதிலுக்கு இவர் ஜி. நாகராஜனை அறிமுகப்படுத்துவார். இப்படித்தான் உதயசங்கர் மலையாளம் கற்று, தேர்ந்து, பல மலையாளக் கதைகளை தமிழ்ப்படுத்தினார். இது இன்னொரு மொழியின் மீதுள்ள பற்று மட்டுமல்ல. வெறி. அம்மொழியைக் கற்று அந்த இலக்கியங்களை அதன் சொந்த வாசனையோடு முகர்ந்துவிட வேண்டுமென்ற அதீத ஆர்வம். அதையும்கூட வேளானந்தல் ஸ்டேஷனின் பிடுங்கித் தின்னும் தனிமையே அவருக்குக் கற்றுத்தந்தது.
தோழர் வெங்கடேஸ்வரன் கடைசிவரை கற்றுக் கொடுப்பவராக மட்டுமேயிருந்தார். கற்றுக் கொள்ளவேயில்லை. இருந்திருந்தால் பல நல்ல தமிழ்ப் படைப்புகள் மலையாளத்திற்குப் போயிருக்கும்.
சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், பாடல், ஓமியோபதி மருத்துவம் என உதயசங்கரின் உலகம் விரிந்து கொண்டேயிருக்கிறது. இது ஒரு வகை அசாத்தியம்தான். ஆனால் என் பார்வையில் சிறுகதைகளில்தான் உதயசங்கர் வேறொரு உயரத்தை எட்டியிருக்கிறார். இயற்கையாகவே இதன் அடுத்த பரிணாமம் நாவல். அவருக்கமைந்த மொழியிலேயே கரிசல் நிலப்பரப்பைத் தாண்டி முப்பது வருடங்களுக்கும் மேலாக அலைக்கழித்த அவர் வாழ்வையும், சந்தித்த மனிதர்களையும், கவித்துவத்திற்கு வெகு அருகாமையில் அமைந்த அவர் மொழியில் எழுத வேண்டி ஒரு பெரும் நாவல் அவருக்கெதிரே அரூபமாய் நிற்பதாகவே தோன்றியது.
கோபல்லபுரம் போலவோ, நீலகண்டபறவையைத் தேடி போலவோ ஒரு பெரும் வாழ்வை எழுதுவதற்கான வலுப்பெற்ற கலைஞன்தான் உதயசங்கர் என்ற ஐந்தடிக்கும் குறைவான அந்த மனிதன்.
நான் அவர் வலைப்பக்கத்தை எப்போதும் பார்ப்பதில்லை. முகநூல் பக்கம் போனதில்லை. இந்த சாதரணங்கள் முப்பது வருடங்களுக்கு முன்பான எங்கள் தோழமையை அழித்து விடக்கூடும் என்ற அச்சம் உள்ளூரக் காரணமாயிருக்கலாம்.

மழையில் நனைந்து, வெயிலைக் குடித்து வேளானந்தல் ரயில் நிலைய அகன்ற தண்டவாள வெளிகளில் பேசித் தீர்த்த பல மணி நேர ஈரம் மிகுந்த உரையாடல்கள் மட்டும் போதும் எனக்கு.
நன்றி - செம்மலர் ஆகஸ்ட் 2016
 

Friday, 27 July 2012

ஒரு கை நீரள்ளி…

உதயசங்கர்

 

எப்போதும் கனவுகள் காண்பவன் நான். கனவுகளைச் சுவாசித்து, கனவுகளைத் தின்று, கனவுகளால் வளர்க்கப்படுபவன். கனவுகளின்றி ஒரு நாளும் நான் இருந்ததிலை. உறங்கியதில்லை. ஒரு ஐந்து நிமிடமே உறக்கம் என்றாலும் கனவுப்பூச்சி என்னைச் சுற்றி வலை பின்னத் தொடங்கி விடும். விழித்திருக்கும் போதும் கனவுகள் என்னை மொய்த்து விடும். என்ன உறங்கும்போது காணும் கனவுகளில் படைப்பூக்கத்தின் சக்தி நிரம்பி வழியும் என்றால் விழித்திருக்கும்போது அந்தப் படைப்பூக்கத்தின் செயல்பாடுகளாக முண்டியடிக்கும். நான் கனவுகள் காண்பதை விரும்புகிறேன். கனவுகளிலிருந்து என்னை யாரும் பிரித்து விடக் கூடாது என்று என்னைச் சுற்றி நானே அமைத்துக் கொண்ட ஒரு பிரத்யேகமான கூட்டில் இருப்பதையே பெரும்பாலும் விரும்புகிறவன். வாழ்க்கையே ஒரு கனவு தானோ என்று அவ்வப்போது வியந்து போகிறேன். பல சமயங்களில் நடந்து கொண்டிருப்பதெல்லாம் ஏற்கனவே கனவுகளில் நடந்து முடிந்ததான பிரமையும் வரும்.

நான் சந்தித்த மனிதர்களை ஏற்கனவே கனவுகளில் சந்தித்திருக்கிறேன். இனி சந்திக்கப் போகிறவர்கள் என் கனவுகளில் இப்போது உலவிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை ஒரு அற்புதம். எத்தனை வண்ணங்கள்! எத்தனை பேதங்கள்! எத்தனை உருவங்கள்! எத்தனை குணங்கள்! வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ருசிக்கப் பேராவல் பொங்குகிறது. இத்தனை மாறுபாடுகளும், வேறுபாடுகளும் இருப்பதால் தானே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கிறது. இயற்கை இனியது. மானுட வாழ்க்கை மகத்தானது. எத்தனை தத்துவங்கள்! எத்தனை படைப்புகள்! எத்தனை முரண்பாடுகள்! எத்தனை அதிசயங்கள்! எத்தனை அற்புதங்கள்! எத்தனை மர்மங்கள்! முடிவிலியான காலத்தின் எத்தனையோ ஜாலங்கள்! அந்த ஜாலத்தின் ஒரு கோலம் தானே இந்த பூமி, ஜீவராசிகள்,எல்லாம். நினைத்துப் பார்த்தால் காலப்பெருவெள்ளத்தின் ஒரு துளியின் துளியாக மனிதன். ஆனால் அவன் தான் காலத்தை அளக்கிறான். படைப்பே படைப்பாளியை விஞ்சும் முயற்சியை என்ன சொல்வது?

எனக்கு மனிதர்கள் மீது நம்பிக்கையிருக்கிறது. இந்தப் பூமியின் புத்திரர்கள் மானுடஅறத்தை பூமிப்பரப்பெங்கும் நிலைநிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. மீண்டும் மீண்டும் இந்த அறவுணர்வை வலியுறுத்தவே எழுத்தாளர்கள் இலக்கியம் படைக்கிறார்கள். தங்களைப் பலி கொடுத்தேனும் மானுடத்தின் மகத்துவத்தை பிரேரணை செய்கிறார்கள். விகசிக்கும் வாழ்வின் கணங்களை, அந்தக் கணங்களில் வாழும் மனிதர்களைத் தங்கள் எழுத்தில் படைக்கிறார்கள். முரண்களையும், துயரத்தையும், அழுக்கையும், அவமானத்தையும், அவலத்தையும், படைக்கும் கலைஞன் தன் சக மனிதர்களின் மனதில் வாழ்க்கை குறித்த விசாரணையைத் துவக்கி வைக்கிறான். அதன் மூலம் அறவுணர்வைத் தூண்டி விடுகிறான். இதைச் செய்கிற படைப்புகள் உன்னதமான படைப்புகளாகின்றன.Mohan Das (102)

என் கனவுகளில் உலவிய மனிதர்கள் எல்லாம் எங்கோ நினைவுகளின் ஆழத்தில் புதைமணலில் புதைந்து கிடந்தார்கள். என் வாழ்வின் கணங்கள் தோறும் என்னைச் செதுக்கிய அந்தச் சாதாரண மனிதர்கள் இன்னமும் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் செய்ததைக் குறித்து அவர்களுக்குத் தெரியாது. மற்றவர்கள் அவர்களுக்குச் செய்ததைக் குறித்தும் தெரியாது. அதனால் அவர்கள் தன்முனைப்பின்றி, சுளித்தோடும் நதியின் சுழல்கள் எப்படியெல்லாம் சுழற்றுகிறதோ அப்படியெல்லாம் சுழன்று கொண்டே வாழ்கிறார்கள். அவர்களுக்குப் பலசமயங்களில் பெயரே கிடையாது. தங்கள் வாழ்வில் இப்படி எதிர்கொண்ட சாதாரணர்களைப் பற்றி பலரும் கவலைப் படுவதில்லை. ஏனெனில் அவர்கள் முக்கியப் பிரமுகர்கள் இல்லையே. ஆனால் அந்தச் சாதாரணர்கள் இல்லாமல் தாங்கள் உருவாகவில்லை என்று உணர்வதில்லை.

மகத்தான தியாகங்களால் ஆனது சாதாரணர்களின் வாழ்க்கை. அனுதினமும் தியாகம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். தாங்கள் ஒரு தியாகவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணராமலே. ஒரு புறம் சிலரிடம் குவியும் செல்வமும், மறு புறம் அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத அவலமும் கொண்ட இந்த அசமத்துவ சமூகத்தை இந்தச் சாதாரணமக்களே இயக்குகிறார்கள். சமூகத்தின் சமத்துவத்துக்காகவும் அவர்களே போராடுகிறார்கள். அவர்கள் புகழுக்காக அல்ல. அவர்களுடைய வாழ்வின் நெருக்கடி அவர்களைப் போராடத் தூண்டுகிறது. அந்தப் போராட்டம் என்பது அவர்களுக்காக மட்டுமில்லாமல் மானுடம் முழுமைக்குமாக விடிவுக்கானப் போராட்டமாக உருமாறுகிறது. அவர்கள் தான் இந்த பூமியின் கதாநாயகர்கள். வரலாற்றை இயக்குபவர்கள். வரலாற்றை உருவாக்குபவர்கள். நான் அவர்களின் பக்கம் நிற்பதையே என்றும் விரும்புகிறேன்.

இரவின் அமைதியில் களக் களக் என்ற மெல்லிய சத்தத்துடன் இருளுக்குள் மினுக்கும் நீர்ப்பரப்பு, அவ்வப்போது நீருக்கு மேல் துள்ளிவிழும் மீன்கள், நீரின் உயிர்வாசனை, எல்லாம் என் நினைவு நதியில் பெரும் சலனங்களை ஏற்படுத்தின. மறதியின் புதைசேற்றில் ஆழ்ந்து கிடந்த அந்தச் சாதாரண மனிதர்கள் எழுந்து நதியின் நீர்ப்பரப்பில் வெள்ளிமீன்களென மின்னினார்கள். .என்றென்றும் பெருமைப்படும் என்னுடைய பிறந்த ஊரான கோவில்பட்டி என்னுடன் பேசியது. என்னுடைய பால்யகால நண்பர்கள் குதூகலத்துடன் விளையாடிக் கொண்டிருந்த காட்சிகள் தெரிந்தன. என்னுடைய தோழர்கள் கையில் செங்கொடியுடன் கோஷமிட்டார்கள். புரட்சிக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். நான் கொண்டாடுகிற எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளோடு பிரமாண்டமாய் விசுவரூபம் எடுத்து நின்றார்கள். இவர்கள் என்னோடு பேசியதை நான் புரிந்து கொண்ட விதத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். அந்த ஆசையின் விளைவே நினைவு என்னும் நீள்நதி தொடர்.

இந்தத் தொடரைச் சாத்தியமாக்கிய இரண்டு பேரை என்றென்றும் மறவேன். என் மீது அன்பும் அக்கறையும் கொண்ட என் அருமைத் தோழன் எழுத்தாளர் பவா செல்லத்துரை நான் இந்தத் தொடர் எழுத முதல் காரணம். அடுத்தது மீடியா வாய்ஸ் பத்திரிகையின் சிறப்பாசிரியர் திரு. ராவ் அவர்கள். அலைபேசிப் பேச்சிலேயே நீண்ட நாள் பழகிய நெருக்கமான நண்பராக மாறியவர். தொடரின் ஒவ்வொருபகுதியையும் படித்தவுடன் என்னைத் அலைபேசியில் தொடர்பு கொண்டு அவருடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டவர். சென்னையில் அவரை நேரில் சந்தித்த போது கண்ட அவருடைய எளிமை என்னை வியப்பிலாழ்த்தியது. அவரின்றி இந்தத் தொடர் சாத்தியமாயிருக்காது. என்னுடைய ஒவ்வொரு கட்டுரைக்கும் உயிர்த்துடிப்புடன் அற்புதமான ஓவியங்கள் வரைந்த ஓவியர் மனோகர் அவர்கள், அவ்வப்போது என்னிடம் தொடர் குறித்து உரையாடியதை மறக்க முடியாது. அவருடைய ஓவியங்கள் என்னுடைய கட்டுரைகளுக்கு மிகப் பெரிய பலம். அவருக்கு என் அன்பும் நன்றியும். ஒவ்வொரு வாரமும் தொடர் குறித்து நினைவுபடுத்தி அதை அனுப்பியவுடன் படித்து சந்தேகங்களைத் தெளிவுபடுத்திய நண்பர் பாலாவுக்கு நன்றி. இந்தத் தொடர் முழுவதும் அதன் வடிவமைப்பு குறித்து பெரிதும் பேசப்பட்டது. அழகாக வடிவமைத்த மீடியா வாய்ஸ் பத்திரிகை இதழ் வடிவமைப்புக் குழு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

மீடியா வாய்ஸ் இதழ் வந்ததும் வாங்கிப் படித்து விட்டு உடனே தங்களுடைய கருத்துகளைச் சொன்ன என் இனிய நண்பர் மீடியா வாய்ஸ் பத்திரிகையின் தலைமை நிருபர் திரு. பி.என்.எஸ்.பாண்டியன், சென்னையைச் சேர்ந்த நண்பர் சீனிவாசன், என்னுடைய எழுத்தாள நண்பர்கள் கமலாலயன், அப்பணசாமி, மாரீஸ், கவிஞர் லட்சுமிகாந்தன், நாறும்பூநாதன், கிருஷி, சு.வெங்கடேசன், பால்வண்ணம், எனது துணைவியார் திருமதி. மல்லிகா, மற்றும் மீடியா வாய்ஸ் வாசகர்கள் எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்.

எழுதித் தீராதது வாழ்க்கை வாழ்வெனும் பேராற்றில் ஒரு கை நீரையே அள்ளியிருக்கிறேன். இன்னும் மீதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அன்பின் ஊற்றாய் அருஞ்சுனையாய் எங்கும் மானுடம் நிறைந்திருக்கிறது.. வாழ்க மானுடம்!

நன்றி – மீடியா வாய்ஸ் 

புகைப்படம் – மோகன் தாஸ் வடகரா

Thursday, 17 May 2012

அன்பின் பேராற்றில்………….

bava_chelladurai_thumb[6]karuna 

வேலை கிடைத்தும் நிம்மதியில்லை. கோவில்பட்டியின் ஞாபகங்கள் என்னைக் கொத்தித் தின்றன. கல்லூரி முடித்த நாளிலிருந்து வேலைக்கான ஆர்டர் வாங்கிய நாள்வரை கோவில்பட்டி நண்பர்களோடும், தமுஎச தோழர்களோடும், தான் வாழ்ந்து வந்தேன் என்று சொல்லலாம். வீடு உண்பதற்கும், உறங்குவதற்குமான தற்காலிக உறைவிடமாகவே இருந்தது. பல சமயங்களில் உண்பதும், உறங்குவதும் கூட நண்பர்களோடு வெளியே வெளியூரில் என்று ஆகி விட்டிருக்கிறது. அத்தனை நண்பர்களையும், தோழர்களையும் விட்டு விட்டு வேரோடு பிடுங்கி எறியப்பட்டு வெயிலில் எரிந்து கொண்டிருந்தேன்.அதுவும் நான் இது வரை கண்டிராத வட ஆற்காடு மாவட்டம். விசித்திரமான வட்டார மொழி. புதிய நிலப்பரப்பு. புதிய மனிதர்கள்.இவர்களுக்கு நடுவே திருவண்ணாமலை அருகில் திப்பக்காட்டுக்கு நடுவில் இருந்த வேளானந்தல் ரயில்வே ஸ்டேசனில் வேலை. அங்கே மனிதவாடையே இல்லை. மனிதர்கள் என்று ஸ்டேசனில் வேலை பார்த்த நாங்கள் மட்டும் தான் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டு திரிந்தோம். மனிதர்களைத் தவிர வகைவகையான பாம்புகள், நட்டுவாக்காலி, ஜலகண்டச் சிலந்திகள், தேள்கள், இரவில் படையெடுக்கும் அத்தனை வகையான பூச்சியினங்கள், அவைகளின் விசித்திரமான சப்தங்கள், ஊளையிடும் நரிகள், பறவைகளின் விதம்விதமான குரரொலிகள் என்று எல்லாம் நிறைந்திருந்தது.

நான் அதிகபட்சம் எங்கள் ஓட்டுச்சாய்ப்பு வீட்டில் தேளைப் பார்த்திருக்கிறேன். அதைக் கூட நான் அடித்ததில்லை. அம்மாவோ, இல்லை அப்பாவோ,அடிப்பார்கள். ஏன் தம்பிகூட அடித்திருக்கிறான். நான் அருகிலேயே போக மாட்டேன். சின்ன வயதில் எனக்கிருந்த ஏராளமான பயங்களில் தேள் பயமும் ஒன்று. அது எங்கள் வீட்டுச் சுவரில் எங்கோ உயரத்தில் இருந்ததைப் பார்த்து போட்ட கூப்பாட்டில் தெருவே திரண்டு விட்டது. அப்பேர்க்கொண்ட தைரியசாலியான என்னை இப்பேர்க்கொண்ட ஸ்டேசனில் அப்பாயிண்ட்மெண்ட் செய்திருந்தார்கள். எனக்கு அங்கே இருந்த மரம், செடி, கொடி, எதைப்பார்த்தாலும் பயமாகவிருந்தது. எல்லாமே பாம்புகளாகத் தெரிந்தது. அது வரை நான் படித்திருந்த இலக்கியம், அரசியல், தத்துவம், எல்லாம் என்னைக் கைவிட்டன. அங்கேயிருந்த ரயில்வே தொழிலாளர்கள், சகநிலைய அதிகாரிகள் பேசிய மொழியே புரியவில்லை. அவர்கள் ரயில்வே சம்பந்தமில்லாமல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதிகாரிகளைப்பற்றி, அன்றாடம் நடந்த ரயில்வேதுறை சார்ந்த நடவடிக்கைகள் பற்றி, தீரவே தீராமல் பேசிக்கொண்டிருந்தார்கள். பொழுது போவதற்காக முறைபிறழ் உறவுகளைப் பற்றிப் பேசினார்கள்.

எனக்கு இவை இரண்டும் ரசிக்கவில்லை. அப்போது தான் நான் கதகதப்பாய் இருந்த உலகம் வேறு. வெளியே இருக்கிற உலகம் வேறு என்று மண்டையில் உறைத்தது. எப்படியாவது மீண்டும் அந்த கதகதப்பான உலகத்துக்குள் போய்விட ஆசைப்பட்டேன். அதற்காக என் வேலையை விடவும் தயாரானேன். தனிமை என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று தின்றது. யாரிடமும் வாயார பேச முடியவில்லை. மனதார பகிர்ந்து கொள்ள முடியவில்லை. கொண்டு போன புத்தகங்களையும் மீண்டும் மீண்டும் படித்தாயிற்று. தன்னந்தனியே உட்கார்ந்து கொண்டு சிசர் சிகரெட்டுகளாக ஊதித் தள்ளினேன். நண்பர்களுக்குக் கடிதம் எழுதினேன். தினமும் குறைந்தது நான்கு கடிதங்களாவது எழுதித் தள்ளினேன். அது வரை சரியாகக் கூடப் பேசியிராத நண்பர்களுக்குக் கூடக் கடிதம் எழுதினேன். என்னைத் தனிமையின் கொடூரச் சித்திரவதையிலிருந்து யாராவது காப்பாற்றி விட மாட்டார்களா என்று ஏங்கித் தவித்தேன். மூச்சு முட்டும் இந்தத் தனிமைச் சுழலிலிருந்து கை கொடுத்துக் காப்பாற்ற யாரும் இல்லையா? தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பவன் தலைக்கு மேலே கையைத் தூக்கி காப்பாற்றச் சொல்லும் உயிர்வாதையாய் அந்தக் கானகத்தின் நடுவிலிருந்து கதறிக் கொண்டிருந்தேன். ஆனால் யார் காதிலும் அது விழவில்லை. நான் நூறு கடிதம் போட்டால் பதிலுக்கு ஐந்து கடிதம் வந்தது. எல்லோரும் எரிச்சலும், சலிப்பும் அடைந்தார்கள். சில நண்பர்கள் கோணங்கி, பாரதி, சாரதி, முத்துச்சாமி, வேளானந்தல் ஸ்டேசனுக்கே வந்து ஆறுதல் சொன்னார்கள். ஒருநாள் திருவண்ணாமலையில் சும்மா சுற்றிக் கொண்டிருந்தபோது டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளிக்கூடம் இருந்த மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகம் தற்செயலாகக் கண்ணில் பட்டது. உள்ளே பெரிய மீசையுடன் தோழர் ஒருவர் இருந்தார். நான் என்னை அறிமுகம் செய்து கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர், செயலாளர், பற்றி விசாரித்தேன். அவர் தான் அதே தெருவில் இருந்த பல்லவன் ஆர்ட்ஸில் மாலை நேரம் சென்று பார்க்கச் சொன்னார்.

அன்று நேரமாகி விட்டதால் ரயிலுக்கு ஓடி விட்டேன். மறுநாள் மாலை படபடக்கும் நெஞ்சோடு பல்லவன் ஆர்ட்ஸை நெருங்கினேன். அங்கே பளபளக்கும் முகத்தோடு மெல்லியமீசையோடு படம் வரைந்து கொண்டிருந்த இளைஞரிடம் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவர் கூடவே என்னை விட கருப்பாய் ரெண்டு இளைஞர்கள் இருந்தார்கள். நான் பேசி முடித்ததும் படம் வரைந்து கொண்டிருந்த ஓவியர் பல்லவன் சிரித்துக் கொண்டே எழுந்து, பின்னாலிருந்த இளைஞர்களிடம்,

“ யெப்பா உங்க ஆளு வந்துட்டாருப்பா..”

என்று சொன்னார். அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்த அந்த இளைஞர்கள் தங்களை என்னிடம் அறிமுகம் செய்த போது அவர்கள் இருவரும் தமிழ்க்கலை இலக்கிய உலகத்தின் முக்கிய ஆளுமைகளாக உருவாகப் போகிறார்கள் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அவர்கள், எல்லாநாளும் கார்த்திகையாக வாழ்வைக் கொண்டாடுகிற, கலைஞர்களை, எழுத்தாளர்களைக் கொண்டாடுகிற, தமிழின் மிகமுக்கியமான படைப்பாளியாக உருவாகியிருக்கிற பவா செல்லத்துரையும், மாற்றுத்திரைப்பட, குறும்பட, ஆவணப்பட,இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கிற குறும்பட இயக்குநர், பண்பாட்டுப்போராளி, கருணாவும் தான்.

அன்றிலிருந்து நானும் அவர்களை விடவில்லை. அவர்களும் என்னை விடவில்லை. என் தனிமைத்துயர் நீங்க எனக்குக் கிடைத்த மாமருந்தாய் அவர்கள் இருந்தனர். எனவே அது வரை பேசாத பேச்செல்லாம் பேசினேன். எனக்குத் தெரிந்த அத்தனை விசயங்களையும் அவர்களிடம் கொட்டினேன். நவீன இலக்கியம் குறித்த முற்போக்கு இலக்கியம் குறித்த, அரசியல் குறித்த, தத்துவம் குறித்த, புரட்சி குறித்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்த, அத்தனை விசயங்களையும் சொல்லித் தீர்த்தேன். வேளானந்தல் ஸ்டேசனில் பணி முடிந்ததும் திருவண்ணாமலைக்கு ஆவலோடு ஓடி வந்து விடுவேன். அவர்களோடு அவர்கள் போகிற இடங்களுக்கெல்லாம் கூடவே அலைந்து திரிந்தேன். அங்கே பவாவின் வீட்டில் பெரும்பாலான சமயங்களில் சாப்பிட்டேன். பவாவின் அம்மாவைப் பார்க்கிற போதெல்லாம் ஒரு செவ்வியல் கதாபாத்திரத்தைச் சந்திக்கிற உணர்வு தோன்றும். அவர்களின் அன்பும் பரிவும், பவாவைப் பற்றி ஆதங்கத்தோடு சொல்கிற வார்த்தைகளும் ஓலைக்குடிசையும் அதன் சாணவாசமும் ஒரு வங்காள நாவலுக்குள் நானும் பங்கேற்கிற மாதிரியே உணர்வேன். பவாவின் அப்பா மத்திய அரசு ஊழியன், ஸ்டேசன் மாஸ்டர்,என்ற மரியாதையுடன் ஒரிரு வார்த்தைகள் என்னுடன் பேசி விட்டு அகன்று விடுவார். அந்தச் சிறு வயதிலேயே பவாவுக்கு ஊரிலுள்ள அத்தனை பேரைத் தெரிந்திருந்தது ஆச்சரியமாகவிருந்தது. எல்லோரிடமும் நின்று ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டுத் தான் வருவார் பவா. எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்திருப்பதும், செய்யவிருப்பதும் தெரியும். யாரையும் குறை சொல்லத் தெரியாத ஒரு பேராளுமையின் சாயலை அப்போதே நான் உணர்ந்தேன். அப்போது எனக்கு அது பிடிக்கவில்லை. எல்லாவற்றையும் கறாரான விமர்சனத்துக்கு உட்படுத்தவேண்டும் என்ற கோவில்பட்டிக் குணம் எனக்கு இருந்தது. அதைச் சில சமயங்களில் சொல்லியுமிருக்கிறேன். பவா என்னுடைய வார்த்தைகளை ஒரு புன்னகையில் ஒதுக்கி விடுவார்.

பவாவின் எஸ்தரும் எஸ்தர் டீச்சரும் என்ற கவிதை நூல் அப்போது வெளியாகியிருந்தது. எனக்கு அது அவ்வளவு உவப்பாக இல்லை. ஆரம்பகால ரொமாண்டிக் தன்மையை அது தாண்டவில்லை என்று விமர்சனம் செய்த ஞாபகம் இருக்கிறது. பல சமயங்களில் பவாவும் கருணாவும் சைக்கிளில் வேளானந்தல் ஸ்டேஷனுக்கு வந்து விடுவார்கள். எனக்கு உற்சாகம் கரைபுரள பேசிக் கொண்டிருப்பேன். கருணா கேலியாக,

“ ரேடியோவை ஆன் பண்ணுங்க..”

என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். எல்லாத் துறைகளைப் பற்றிப் பேசுகிற ஒரு ஆளாக என்னை நானே கற்பிதம் செய்து கொண்ட காலம் அது. நிறைய நண்பர்கள், தோழர்கள், பவா, கருணா, மூலமாகக் கிடைத்தார்கள். பல்லவன், கவிஞர் வெண்மணி, உத்ரகுமார், பாஸ்கர், வெங்கடேசன், சந்துரு, பாலாஜி, சுகந்தன், போளூர்கோவிந்தன், ஃபீனிக்ஸ், என்று எத்தனை நண்பர்கள். திக்குத் தெரியாத காடாக இருந்த திருவண்ணாமலை இப்போது எனக்கு என் சொந்த ஊர் போல ஆயிற்று.

எல்லா நண்பர்கள் வீட்டிலும் ஒரு வேளையாவது சாப்பிட்டிருக்கிறேன். என் மீது அவர்கள் காட்டிய அன்புக்கு மாற்றாக என்ன செய்து விட முடியும் என்று தெரியவில்லை. பவாவும், கருணாவும், ஒரே கதாபாத்திரத்தின் வெவ்வேறு முகங்கள் என்று நான் நினைத்திருந்தேன். உணர்ச்சிமயமான, கருணைபொங்கும், வாழ்வைக் கவித்துவமாய் பார்க்கும் பவாவும், கறாரான, நடைமுறைவாதியான, உண்மையை நேருக்குநேராய் வெடிப்புற பேசுகிற,கருணாவும் இணைந்து அப்போது திருவண்ணாமலையைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்கம் பல புதிய மாற்றங்களை நோக்கி நகரத் தொடங்கியிருந்தது. அதற்கு திருவண்ணாமலையும் தன்னுடைய காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கிறது. குறிப்பாக இன்று தமிழகமெங்கும் ஒரு மாற்றுக் கலாச்சாரக் கலைவிழாவாகக் கொண்டாடப்படும் கலை இரவு திருவண்ணாமலை கொடுத்த தமிழகத்துக்குக் கொடை.அந்தக் கொடை வழங்கிய காலத்தில் நானும் அங்கேயிருந்தது என் பாக்கியம். எல்லா நண்பர்களின் அயராத உழைப்பு இருந்ததென்றாலும் குறிப்பாக பவா, கருணாவின் பங்களிப்பு மகத்தானது.

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி யாவர் வீட்டிலும் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடினார்கள். என் சொந்த ஊரில் கூட அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவில்லை. நான் அந்த ஊரை விட்டு இனி வேறெங்கும் போகப்போவதில்லை என்று தான் நினைத்திருந்தேன். திருமணம் முடித்து வந்த பிறகு திருவண்ணாமலையில் எனக்குத் தெரிந்த எல்லா நண்பர்கள் வீட்டுக்கும், கட்சி அலுவலகத்துக்கும், தமுஎச கூட்டங்களுக்கும் என் மனைவிமல்லிகாவை அழைத்துச் சென்றேன். புதிதாக வந்த ஊரில் புதுப் பொண்டாட்டிகிட்ட என் பவுசைக் காட்டவேண்டும் என்ற ஆசை தான் காரணம். பவாவின் அம்மாவின் உபசரிப்பில் மல்லிகா நெகிழ்ந்து போனாள். பவாவின் அம்மாவும் எங்களுக்கென்றே தனியாக சோறு சமைத்து பவாவிடம் கொடுத்து வேளானந்தலுக்குக் கொடுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. திருவண்ணாமலையில் நிரந்தரமாகத் தங்கி விடலாம் என்று முடிவு செய்த பொழுதில் எனக்கு விருத்தாசலத்துக்கு அருகில் உள்ள பூவனூருக்கு பதவி உயர்வு உத்தரவு வந்தது.

முதல் முதலாய் வேளானந்தல் வரும்போது இருந்த உதயசங்கர் இப்போது மாறி விட்டான். தன்னம்பிக்கை மிக்கவனாக, எதையும் எதிர்கொள்ளும் தைரியமிக்கவனாக, புதிய சூழ்நிலைகளை வரவேற்பவனாக, மாறி விட்டான். இந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம் திருவண்ணாமலை நண்பர்கள், தோழர்கள். குறிப்பாக பவாவும், கருணாவும். அவர்களை என் உதாரணபுருஷர்களாக நான் மனதில் வரித்துக் கொண்டேன். இன்று தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஸ்தலமாக எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக, 19, டி.எம். சாரோன் உருவாகியிருக்கிறது. சொந்த அண்ணன் தம்பி வீட்டிலேயே போய்த் தங்க முடியாத நிலைமையில் உறவுகள் சிடுக்காகிப் போயிருக்கின்றன. அதிலும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். விருதாக்கோட்டிகள் என்று உறவுகள் ஏளனம் செய்யும் காலம். அவர்களைப் போற்றிக் கொண்டாடி போஷிப்பதற்கு மகத்தான அன்பு வேண்டும். அது பவாவிடம் பேராறாய் பிரவகித்து வெள்ளமென பாய்ந்தோடுகிறது. இன்று இருப்பது எஸ்தரும் எஸ்தர் டீச்சரும் எழுதிய பவா அல்ல. இன்று தமிழ்ச் சிறுகதையின் மிக முக்கியமான எழுத்தாளராகவும், தன்னுடைய எழுத்தின் வசீகரத்தால் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிற நூல்களின் படைப்பளியாகவும் திகழ்கிறவர் பவா.

இன்று பவா என்கிற அந்த அன்புப் பேராற்றில் எல்லோரும் ஒரு கை அன்பள்ளிப் பருகி நெகிழ்ந்து போகிறார்கள். ஆனால் அந்தப் பேராறு சுனையூற்றாய் இருக்கும்போதே தரிசித்திருக்கிறேன்.பேராற்றில் பலமுறை முங்கிக் குளித்திருக்கிறேன். குளித்துக் கொண்டுமிருக்கிறேன். ஈரம் சொட்ட சொட்ட..இப்போதும்…இன்னமும்