Sunday 26 October 2014

காற்றில் கரைந்த பூதம்

உதயசங்கர்

raja 1

மண்டியா தேசத்து ராஜா மத்தியானம் தன் யானை வயிறு நிறைய பலகாரங்களும் பட்சணங்களும் சாப்பிட்டு முடித்து இரண்டு மணி ஆலைச் சங்கு போல பெரிய ஏப்பத்தை வெளியிட்டார். அந்த ஏப்பக்காற்று அவர் என்னென்ன பலகாரங்களைச் சாப்பிட்டார் என்று நாட்டு மக்கள் அனைவரிடமும் சொல்லிக் கொண்டே சென்றது. பின்னர் ஒரு கவுளி வெத்திலையை ஆடு தழையை மென்று தள்ளுவதைப்போல அரைத்துத் தள்ளினார். அதன்பிறகு அரண்மனை அதிர குறட்டை விட்டபடி தூங்குவார். தூங்குவது, சாப்பிடுவது, திரும்பவும் தூங்குவது, சாப்பிடுவது என்று விடாமல் செய்து கொண்டிருந்ததால் ராஜா குண்டாகி விட்டார்.

அதோடு ராஜா படு சோம்பேறி வேறு. அவர் நடக்க வேண்டுமென்றால் அவருடைய வலது காலைத் தூக்கி வைக்க ரெண்டு பேர் வலது பக்கம் இருப்பார்கள். அதேபோல இடது காலை தூக்கி வைக்க இடது பக்கம் ரெண்டு பேர் இருப்பார்கள். சிம்மாசனத்தில் உட்கார வேண்டுமென்றால் நாலு பேர் அவரைத் தூக்கி சிம்மாசனத்தில் உட்கார வைப்பார்கள். உடலுழைப்பு இல்லாததினால் உடலில் கொழுப்பு சேர்ந்து கொழுப்பு கட்டிகள் அங்கங்கே உண்டாகி விட்டன. ராஜா அரண்மனை வைத்தியர்களை அழைத்து உடனே இந்தக் கட்டிகள் கரைய மருந்துகள் கண்டு பிடிக்கும்படி ஆணையிட்டார்.

அரண்மனை வைத்தியர்களுக்குத் தெரிந்து விட்டது. ராஜா ஒரு உணவுப்பிரியர். அவரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்ல முடியாது. எனவே ஒரு வாரகாலம் ஆலோசித்தனர். பின்னர் ராஜாவிடம் வந்து,

“ மன்னர்மன்னா… உங்கள் உடலில் வந்துள்ள இந்தக் கட்டிகள் கொழுப்புபூதம் உங்கள் உடலில் புகுந்திருப்பதினால் தான் வந்திருக்கின்றன. எனவே இந்தப் பூதத்தை விரட்ட ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. சாப்பாட்டின் வழியே உங்கள் உடலுக்குள்ளே புகுந்துள்ள இந்தப் பூதத்தை சாப்பாட்டின் வழியே தான் விரட்ட முடியும்… நீங்கள் ஒரு மூன்று மாதங்களுக்கு தினம் மூன்று வேளையும் நீராகாரமும், பழங்களும் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன் நாங்கள் தருகிற இந்த மருந்தை தினம் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும் பிரபோ..”

இதைக் கேட்டதும் ராஜாவுக்கு திடுக்கென்றது.

“ என்ன.. நெய்யில் பொரித்த ஜாங்கிரியும், லட்டு, சிலேபி, பலகாரங்கள், சாப்பிடக்கூடாதா… கோழியும், ஆடும்.. சாப்பிடாமல் எப்படி என்னால் இருக்க முடியும்..? இல்லை வைத்தியர்களே.. வேறு ஏதாவது வைத்தியம் சொல்லுங்கள்…”

” இல்லை மன்னா.. இன்னொரு வைத்தியம் இருக்கிறது.. அதை நீங்கள் செய்ய முடியுமா என்று எங்களுக்குச் சந்தேகம்…”

“ என்ன அது..”

“ தூங்கி எழுந்தவுடன் பல் விளக்காமல் நாங்கள் தரும் மருந்தைச் சாப்பிட்டு விட்டு ஒரு பத்து மைல் தூரம் ஓடிப் போய் வர வேண்டும்…..அவ்வளவு தான் மன்னா..”

“ என்னது.. பத்து மைலா…என்னால முடியாது.. என்னால முடியாது…எதுவும் வேண்டாம் நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேன் ”

“ இல்லை மன்னா இப்போது உங்கள் உடலில் புகுந்துள்ள கொழுப்பு பூதம் வளர்ந்து வளர்ந்து உங்களையேச் சாப்பிட்டு விடும்……இப்போதே இதை விரட்டி விடுவது நல்லது…”

ராஜா யோசித்தார். யோசித்தார். யோசித்தார்.

நடப்பதற்கே சோம்பேறியான ராஜாவா பத்து மைல் ஓட முடியும்..கடைசியில் ராஜா முதலில் சொன்ன வைத்திய முறைக்கே ஒத்துக் கொண்டார். மறுநாளிலிருந்து அரண்மனை முழுவதும் மூன்று வேளையும் நீராகாரமும் பழங்களும் தான் எல்லோருக்கும் சாப்பாடு. அது போக கொள்ளுப்பயறும் கருப்பட்டியும் சேர்த்து செய்த மருந்தையும் கொடுத்தார்கள் அரண்மனை வைத்தியர்கள்.

மூன்று மாதங்களில் ராஜாவின் உடலில் இருந்த கொழுப்பு பூதம் காற்றில் கரைந்து விட்டது. இப்போதும் ராஜா நடப்பதில்லை. ஆனால் ஓடுகிறார். எல்லோரும் அவர் பின்னால் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.

2 comments:

  1. சிறப்பான கதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கொள்ளுப்பயரும் கருப்பட்டியுமா சாப்பிட வேண்டுமே,
    நானும் குண்டானது போல் இருக்கிறேன்/

    ReplyDelete