Showing posts with label நரி. Show all posts
Showing posts with label நரி. Show all posts

Friday, 21 February 2025

புளிக்கும் திராட்சை

புளிக்கும் திராட்சை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் விளையாடுகிற ஆற்றங்கரைக்குச் சற்று தூரத்தில் ஒரு திராட்சைத்தோட்டம் இருக்கிறது. கிராமத்தலைவரான மொட்டை மாதவனின் தோட்டம். அந்தத் தோட்டத்திலிருந்து திராட்சைப்பழத்தைப் பறிக்க முடியாது என்று கதைப்பாட்டி சொன்னார்.

 போய்ப்பார்த்தால் தெரியும் என்று பதுங்கிப்பதுங்கிப் போய்ப் பார்த்துவிட்ட வந்த பூனைக்குட்டி சின்னுவிடமும் நாய்க்குட்டியிடமும் சொன்னது,

“ பயங்கரம்.. மொட்டை மாதவன் அங்கே ஒரு பெரிய வேட்டை நாயை அவிழ்த்து விட்டிருக்கிறான்.. ஒரு தடவை பார்த்தால் போதும்.. ராத்திரி தூக்கம் வராது.. கெட்ட கனவுகள் வந்து கூப்பாடு போட வேண்டி வரும்.. அப்படிப் பயங்கரமாக இருக்கு..”

என்று சொன்னது.

ஒரு நாள் நடுமதியத்தில், பசியால் வாடிய குள்ளநரி பம்மி, பம்மி, திராட்சைத்தோட்டத்துக்குள் ஒளிந்து பதுங்கி போவதைப் பார்த்தார்கள். மூன்று பேரும் குள்ளநரியின் பின்னாலேயே போனார்கள்.

கசுமலா காக்காவும் பின்னால் பறந்தது. குலைகுலையாகத் தொங்கிக் கொண்டிருந்த திராட்சைப்பழங்களைப் பார்த்த குள்ளநரியின் வாயில் எச்சில் ஊறியது. பிறகு ஐந்தாறு முறை குதித்துப் பார்த்தது. திராட்சைப்பழத்தைப் பறிக்கமுடியாதென்று தெரிந்து விட்டது.

திரும்பி வரும்போது தான் சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தது.

” நரியண்ணே.. திராட்சைப்பழம் கிடைக்கலையா? “ என்று நாய்க்குட்டி கேட்டது.

“ யாருக்கு வேணும் புளிப்பாய் இருக்கிற திராட்சைப்பழம்? “ என்று குள்ளநரி சொன்னது. அப்போது கசுமலா காக்கா சொன்னது,

“ நரியண்ணே நில்லுங்க.. நான் இரண்டுமூன்று கொத்திக் கொண்டு வருகிறேன்..”

கசுமலா காக்கா நிறைய திராட்சைப்பழங்களைக் கொத்திக் கொண்டு வந்தது. எல்லாரும் சேர்ந்து பாட்டுப்பாடி தின்று முடித்தார்கள். அவர்களுடைய ஆட்டத்தையும் பாட்டையும் வேட்டை நாய் கேட்டது. மூக்குமுட்ட இறைச்சி சாப்பிட்டு தூக்கமயக்கத்தில் இருந்தது. ஒரு முறை உறுமிவிட்டு அப்படியே திரும்பிப் படுத்து உறங்கி விட்டது. அந்த முழக்கத்தைக் கேட்ட உடனே மீதி இருந்த திராட்சைப்பழங்களைப் பொறுக்கினார்கள்.சத்தம் போடாமல் எல்லாரும் அந்த இடத்தை விட்டு ஓடியே போய் விட்டனர்.

 நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள் 

Friday, 13 December 2024

காக்கா கிளி புலி நரி

 

10.  காக்கா கிளி புலி நரி

உ உதயசங்கர்



u

கனகு ஒரு குட்டி எழுத்தாளர். ஒரு கதை எழுத வேண்டும். என்ன கதை எழுதலாம்? மரம் நடுவதைப் பற்றிய கதை எழுதலாமா? வேண்டாம். அப்படி லட்சக்கணக்கான கதைகள் வந்து விட்டன. ஆனாலும் அமேசான் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களை வெட்டிக் கொண்டுதானிருக்கின்றனர்.

நெகிழிப் பயன்பாட்டை ஒழிப்பதைப் பற்றி எழுதலாமா? அதுவும் ஆயிரக்கணக்கில் வந்து விட்டன. ஆனாலும் நெகிழிப்பயன்பாடு குறையவில்லை.

கா க்க்கா கா கா கா..

என்று காகம் கரையும் சத்தம் கேட்டது. உடனே கனகுவுக்குக் காகத்தைப் பற்றிக் கதை எழுதலாம் என்று தோன்றியது.

காக்காவுக்கு கருப்பு நிறம் எப்படி வந்தது?

ஐய் சூப்பர்!

கனகு கதையை எப்படித் தொடங்கி எப்படி முடிக்கலாம் என்று யோசித்தபடியே தூங்கி விட்டான்.

நள்ளிரவு. ஒரே இருட்டு. அவன் காதுக்குள் கா கா கா கா என்று சத்தம் கேட்டது. கண்விழித்தான் கனகு.

சன்னலில் கன்னங்கரேலென்று ஒரு உருவம் தெரிந்தது. கனகு பயத்தில் உளற ஆரம்பித்தான்.

“ யாய்ய்ய்யாரு? “

 அந்தக் கருப்பு உருவம் பதில் சொன்னது,

“ நான் தான் காகம்.. என்னைப் பற்றிக் கதை எழுதப் போகிறாயா? “ என்று கேட்டது காகம்.

“ ஆஆம்மா..

என்ன கதை எழுதப் போறே? “

“ காக்காவுக்கு கருப்பு நிறம் எப்படி வந்தது? “

“ ஏம்ப்பா இப்படி யோசிக்கிறீங்க? காக்கா ஏன் கருப்பாச்சு? கிளி ஏன் பச்சையாச்சு.. புலிக்குக் கோடு போட்டது யாரு? சிறுத்தைக்குப் புள்ளி வைச்சது யாரு? “

“ பிறகு எப்படி எழுதறது? “

“ அறிவியல் வளராத காலத்தில் கிராமப்புற மக்கள் நிறையக் கட்டுக்கதைகளைச் சொன்னாங்க.. சரிதான்.. இப்போதும் அப்படிச் சொல்லலாமா?“

கனகு யோசித்தான். காகம் சன்னலில் இருந்து பறந்து வந்து அவனுடைய படுக்கையில் உட்கார்ந்தது. இப்போது கனவுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.

“ பிறகு எப்படி எழுதறது? பெரிய எழுத்தாளர்கள் இப்படித்தான் எழுதியிருக்காங்க..

அதே மாதிரி தான் நாம எழுதணுமா என்ன? சரி.. என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? என்னுடைய வாழ்க்கை, பழக்கவழக்கம், அறிவுத்திறன், பூர்வீகம், இயற்கை ஏன் என்னைப் படைத்தது? இப்படி யோசித்துப் பாரு.. ஆயிரம் கதை கிடைக்கும் “

“ ஆகா.. நல்ல யோசனை..என்றான் கனகுவின் முகத்தில் வெளிச்சம். காகம் மறுபடியும்,

“ அதை விட்டுட்டு.. நிறத்தைப் பற்றி, உருவத்தைப் பற்றி, குணத்தைப் பற்றி கதை விடலாமா? அது கேலி இல்லையா? “

“ நிறம் ஓகே.. உருவம் ஓகே.. ஆனால் குணத்தைப் பற்றி எழுதுவது என்றால் புரியவில்லையே..

கனகு பெரிய எழுத்தாளரைப் போல நெற்றியில் கைவைத்து யோசித்தான்.

“ தம்பி, நரி தந்திரமானது என்று பஞ்சத்ந்திரக்கதைகளில் சொன்னதையே இப்பவும் சொல்லலாமா? புலியோ சிங்கமோ கொடூரமானது என்று சொல்லலாமா? பாம்பு பழி வாங்கும் என்று சொல்லலாமா? யோசித்துப் பாரேன்..

இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு விதமான குணத்தைக் கொடுத்திருக்கிறது.. அதைத் தந்திரம், கொடூரம், பாவம், புத்திசாலி, என்று நீங்கள் மனிதர்கள் தங்களுடைய குணங்களை ஏற்றிச் சொல்கிறார்களே சரிதானா? பார்க்கப்போனால் மனிதர்களிடம் தான் எல்லாக்குணங்களும் எப்போதும் இருக்கின்றன

அப்படின்னா எப்படி கதை எழுதறது? “

காகமும் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தது. தன்னுடைய அலகால் சிறகுகளைக் கோதி விட்டது. இருட்டுக்குள் அங்கும் இங்கும் பார்த்தது.

“ தம்பி வயிறு பசிக்குது.. ஏதாவது மிச்சம் மீதி இருந்தாக்கொடேன்..

கனகு எழுந்து அலமாரியிலிருந்த பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து இரண்டு பிஸ்கெட்டுகளைக் கொடுத்தான். காகம் பொறுமையாகச் சாப்பிட்டுவிட்டுச் சொன்னது.

 அறிவியல் உண்மைகள் மாறாமல் கதைகளை எழுத வேண்டும்.. இல்லையென்றால் கதைகளை உண்மை என்று நம்பிவிடுவார்கள்.. தம்பி. “

“ ஆமாம் உன்னை செத்துப்போன முன்னோர் என்றும் சனி பகவான் வாகனம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே..

கனகுவுக்கு இப்போது கொஞ்சம் புரிந்தது போல இருந்தது. அவன் காகத்திடம் வேறு ஒரு கேள்வி கேட்பதற்காக நிமிர்ந்தான்.

காகம் அங்கு இல்லை. கனவா?

கனகுவுக்குத் தூக்கம் சொக்கியது.

காலையில் எழுந்ததும் பார்த்தால் படுக்கையில் பிஸ்கெட் துகள்கள் கிடந்தன..

நன்றி - நான் யார்?

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

 

 

Thursday, 28 June 2012

இனிக்கும் திராட்சை

உதயசங்கர்red-fox-and-grapes-shakila-malavige

அன்று இருட்டியதிலிருந்தே நரியாருக்கு எதுவுமே சாப்பிடக் கிடைக்கவில்லை. என்றுமே இப்படி நடந்தது கிடையாது. பொழுது அடையும் போது படுத்து உறங்கிய புதரிலிருந்து வெளியே வந்து உடம்பை நெளித்து நீட்டி நீண்ட கொட்டாவி விடுவார் நரியார்.

தலையை உதறி கண்களை அகலத் திறந்து பார்த்தால் எதிரே அவர் தின்பதற்கு ஏதாவது தயாராக இருக்கும். ஒரு முயல் மேய்ந்து கொண்டிருக்கும். ஒரு காட்டுக் கோழி உட்கார்ந்து கொண்டிருக்கும். ஒரு கௌதாரி பம்மிக் கொண்டிருக்கும். அட, ஒண்ணுமில்லைன்னா ஒரு காட்டெலியாவது அலைந்து திரிந்து கொண்டிருக்கும். உடனே மின்னலடித்த மாதிரி மூளை சுறுசுறுப்படையும். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் ரத்தம் துடிக்கும். அப்படியே பாய்ந்து அதை லபக்கென்று பிடித்து உணவாக்கிக் கொள்வார். அப்படிச் சாப்பிடும் போதே பற்களையும் துலக்கிக் கொள்வார்.

ஆனால் இன்னிக்கு அதிசயமாய் இருக்கிறது. தூங்கி எழுந்து வெளியே வந்து பார்த்தால் ஒரு சுடுகுஞ்சியைக் கூடக் காணவில்லை. ஒரு முயலோ,ஒரு எலியோ, அட ஒரு வெட்டுக்கிளியைக் கூடப் பார்க்கமுடியவில்லையே. எல்லோரும் வேறு காட்டுக்கு ஓடிப் போய் விட்டார்களா? நரியாருக்கு எதுவும் புரியவில்லை. பசி வயிற்றைக் கவ்வியது.

உணவைத் தேடி ஓட வேண்டிய நிலைமை வந்து விட்டதே. காற்றில் மூக்கால் வாசனையை உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்தது. பசியும் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆனால் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தார் நரியார். இதுவரை கண்ணுக்கு எதுவுமே அகப்படவில்லை. என்ன சோதனை இது?

நிலவு பொழிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் நின்று யோசிக்கலாம் என்று நினைத்த நரியார் சட்டென நின்றார். சுற்றும் முற்றும் பார்த்தார். காட்டை விட்டு வெகுதூரம் வந்திருந்தார் நரியார். ஏதோ ஒரு வாசனை காற்றில் மிதந்து வந்தது. ஒரு பழவாசனை. சரி இன்னிக்கு சைவச்சாப்பாடு தான் என்று முடிவு செய்து கொண்டார். பழவாசனையை முகர்ந்து கொண்டே அதன் பின்னால் ஓடினார்.

திராட்சைப் பழத்தோட்டம். அங்கே திராட்சைப் பழங்கள் கொத்துக் கொத்தாய் பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்தன. நன்றாகப் பழுத்த கருந்திராட்சைப் பழங்கள். நரியாரின் நாக்கில் எச்சில் ஊறியது. உடனே நரியார் நல்ல வாகான தூரத்தில் போய் நின்று திரும்பி ஓடி வந்து துள்ளிக் குதித்தார். பழங்களைத் தொடக் கூடமுடியவில்லை. திரும்பவும் போய் ஓடி வந்தார். ம்ஹூம்..

சோர்வாய் இருந்தது. அப்போது அவருடைய கொள்ளுத் தாத்தா சொன்ன கதை ஞாபகத்துக்கு வந்தது. அதான் ச்சீ..ச்சீ..இந்தப் பழம் புளிக்கும் என்று தாத்தா சொன்னாரோ. கிடைக்கலன்னா இப்படி ஏதாச்சிம் சொல்லிக் கிட வேண்டியதான். அப்படியே திராட்சை கொடி நிழலில் உட்கார்ந்து யோசித்தார். திரும்பிப் போய் வேறு உணவு தேடலாமா என்று நினைத்தார். இத்தனை முறை முயற்சி செய்தும் கிடைக்கவில்லயே. இல்லை. கொள்ளுத்தாத்தாவைப் போல் மனந்தளரக் கூடாது. மாத்தி யோசிக்க வேண்டும். என்ன செய்யலாம்? சில நொடிகளில் பளிச் சென்று ஒரு யோசனை வந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தார் நரியார். ஒரு பெரிய கல் கிடந்தது. அதை மூக்கால் தள்ளிக் கொண்டு வந்தார். திராட்சைப் பழங்களுக்குக் கீழே வைத்து விட்டு, கல்லிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளிப் போய் நின்றார். ஓடி வந்து அந்தக் கல்லில் முன்கால்களை ஊன்றி பின்கால்களை காற்றில் உதைத்து ஓங்கி ஒரு குதி குதித்தார்.

என்ன ஆச்சரியம்!

குதித்திறங்கிய நரியாரின் வாயில் ஏராளமான பழக்குலைகள். மேலும் நிறையப் பழங்கள் தரையில் விழுந்து சிதறின.

வயிறு முட்ட அந்தப் பழங்களைத் தின்றார்.

பின்பு “ அடடா.. இந்தப் பழம் இனிக்கும்..” என்று சொல்லிக் கொண்டே காட்டைப் பார்த்து ஓடினார்.