Showing posts with label காகம். Show all posts
Showing posts with label காகம். Show all posts

Tuesday, 4 March 2025

காக்காவும் கொக்கும்

 

காக்காவும் கொக்கும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் ஒளிந்து விளையாடும்போது கசுமலா காக்காவும் வந்தது. தன்னையும் விளையாட்டில் சேர்க்க வேண்டும் என்று சண்டை போட்டது. கல்யாணிப்பசு சொன்னது,

“ உனக்கு வெட்கமாக இல்லையா கசுமலா.. இந்தச் சின்னப்பிள்ளைகளோடு விளையாட ஆசைப்படுகிறாய்..”

கசுமலாவுக்கு அது பிடிக்கவில்லை. கோபம் கொண்ட கசுமலா பூனைக்குட்டியின் தலையில் ஒரு கொத்து கொத்தியது. பூனைக்குட்டி ‘ மியாவ் ‘ என்று அழுது கொண்டே நாய்க்குட்டியின் அருகில் சென்றது. நாய்க்குட்டி, ‘ பௌ ‘ என்று சின்னுவை அழைத்தது. சின்னு காக்கா மீது கோபப்பட்டாள். கசுமலா சிணுங்கிக் கொண்டே ஆற்றங்கரைக்குப் போய் விட்டது. ஆற்றில் ஆழமில்லாத பகுதிகளில் நிறைய வாத்துகள் நீந்திக் குளித்துக் கொண்டிருந்தன. நல்ல வெள்ளை நிறம். ஒரு அழுக்கு கூட இல்லை. தன்னுடைய நிறமோ? கருப்பு. யாருக்கும் கருப்பு நிறம் பிடிக்கவில்லை. அதனால் தான் நிறையப் பேருக்கு வாத்துகளை மிகவும் பிடித்திருக்கிறது.

காக்காவும் ஆற்றில் முங்கிக் குளித்தது. பல நாட்களாக ஆலமரத்தடிக்குப் போகவில்லை. நிறைய நாட்களுக்குப் பிறகும் கருப்பு நிறம் மாறவேயில்லை. அதை நினைத்துக் கவலைப்பட்டது கசுமலா காக்கா. நண்பர்களைத் தேடி திரும்பிச் சென்றது. பூனைக்குட்டியும் நாய்க்குட்டியும் காக்காவின் குளியலைக் கேட்டு கை தட்டிச் சிரித்தார்கள். காக்கா கவலையுடன் கதைப்பாட்டியிடம் கேட்டது,

“ கதைப்பாட்டி ஏன் நான் வெள்ளையாகவில்லை? “

“ காக்கா குளிச்சால் கொக்காக மாறாது கசுமலா.. எல்லோருக்கும் இயற்கை கொடுத்த சில அடிப்படையான விசயங்களை மாற்ற முடியாது...கருப்பு நிறத்தை விட வெள்ளை நிறம் உயர்வு என்று நினைப்பதினால் தான் பிரச்னை.. கருப்பு நிறத்துக்கு ஏழு நிறங்களும் அழகு கசுமலா காக்கா.. நமக்கு இயற்கை எதைக் கொடுத்திருக்கிறதோ அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு நல்லபடியாக வாழக் கற்றுக் கொள்ளணும்.. “ என்று கதைப்ப்பாட்டி சொன்னார்.

அதைக் கேட்ட காக்காவின் கண்கள் கலங்கின. அதைப்பார்த்த சின்னு ஓடிப்போய் கசுமலா காக்காவைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்தாள்.

 நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

Friday, 14 February 2025

காக்காவின் தீர்ப்பு

 

காக்காவின் தீர்ப்பு

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



ஒரு நாள் பூனையும் நாயும் சண்டை போட்டன. பூனை ஆற்றில் முகம் பார்த்தது. தன் உடலெங்கும் நாக்கினால் நக்கி சுத்தப்படுத்தியது.

“ என்ன் ஒரு அழகு! பார்த்தியா..நீண்ட கண்கள், இளம் பழுப்பு நிறத்தில் தோல்ச்சட்டை, பெரிய வால், மென்மையான கைகளும் கால்களும், நடக்கும்போது சத்தமே கேட்காது. நான் ஞீம்ம் ஞீம்ம் என்று சிணுங்கினாலும் சரி உறுமினாலும் கேட்பவர்கள் மயங்கி விடுவார்கள் “

ஆற்றங்கரையில் படுத்திருந்த நாய்க்குட்டி அதைக் கேட்டது. அதுக்குக் கோபம் வந்தது. உடனே எழுந்து ஆற்றுக்குள் குதித்துக் குளித்தது. வெளியே வந்து உடலை உதறிக் கொண்டே பூனைக்குட்டிக்கு முன்னால் வந்து நின்றது.

“ உன்னோட நீண்ட கண்களையும் பெரிய வாலையும் வைத்து என்ன பயன்? என்னுடைய எஜமானன் என்னைப் பார்க்காமல் ஒரு நாளும் உறங்கவே மாட்டார். சின்னு அக்காவிடம் கேட்டுப்பார்..அப்போது தெரியும் உனக்கு..என்னுடைய மடங்கிய காதுகளையும் பழுப்பு நிறக்கண்களையும் பாரு..”

என்று சொன்ன நாய்க்குட்டி இரண்டு கால்களிலும் நின்று கொண்டு சவால் விடுத்தது. வாக்குவாதம் முற்றி ரகளையாகிப் போனது. இரண்டும் அடிபிடி நடத்தி மண்டையை உடைத்துக் கொள்வார்கள் என்ற நிலை வந்தது.

அப்போது கசுமலா காக்கா தலையிட்டது.

“ ஹேய்.. ஹேய்.. நண்பர்களே! உங்களுக்குள் அடித்துக் கொண்டு சாகப்போகிறீர்களா? “

என்று சொன்னது. நாய்க்குட்டி,

“ அப்படி என்றால் நீ சொல்லு.. எங்கள் இருவரில் யார் அழகு? “

என்று கேட்டது.

“ ஆமாம் சொல்லு..இன்னிக்கு முடிவு தெரிஞ்சாகணும் நான் இல்லை என்று நீ சொன்னே அவ்வளவு தான் உன்னை ஒரு வழி பண்ணிருவேன்..” என்று பூனைக்குட்டியும் முதுகை வளைத்துத் தூக்கிக் கொண்டு சவால் விட்டு கேட்டது.

கசுமலா காக்காவின் நிலைமை சிக்கலாகி விட்டது.

நாய்க்குட்டி எதுவும் பேசவில்லை. ஆனால் பல்லைக்காட்டிக் கொண்டு நின்றது. உறுமவும் செய்தது. என்ன செய்வது? நாய்க்குட்டி தட்டில் மிச்சம் வைக்கிற சோறைச் சாப்பிட்டுச் சுத்தம் செய்வது கசுமலா காக்கா தான். வயிறு நிறைய நாய்க்குட்டிக் கொடுக்கும். பூனைக்குட்டியை நம்ப முடியாது. சத்தமில்லாமல் பின்னால் வந்து தாவிப் பிடிப்பதில் பலே கில்லாடி.

முடிவில், கசுமலா காக்கா தன்னுடைய தொண்டையைச் சரி செய்து கொண்டு இப்படிச் சொன்னது,

“ நண்பர்களே! இந்த அழகு.. அழகுன்னு சொல்வதில் பெரிய அர்த்தம் இல்லை.. உண்மையான அழகு நீண்ட கண்களிலோ, மடங்கிக் கிடக்கிறக் காதுகளிலோ இல்லை..”

“ பிறகு..”

நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஒன்றுபோலக் கேட்டார்கள். அப்போது கசுமலா காக்கா என்ன சொன்னது தெரியுமா? ,

“ உண்மையான அழகு இதயத்தில் இருக்கிறது.. அப்படிப் பார்த்தால் சின்னு தான் மிக மிக அழகு.. சின்னுவின் இதயத்தின் அழகு தான் அவளுடைய கண்களில் தெரிகிற கவர்ச்சி..”

அதைக் கேட்ட நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஏற்றுக் கொண்டார்கள். உடனே அவர்கள் இரண்டு பேரும் சின்னுவைத் தேடி ஓடினார்கள்.

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

Wednesday, 1 January 2025

என் திறமை என் அழகு

 என் திறமை என் அழகு

உதயசங்கர்



அது பெரிய பெரிய மரங்கள் அடர்ந்திருக்கும் பறவைகளின் காடு. அங்கே எல்லாவிதமான பறவைகளும் இருந்தன. என்னென்ன பறவைகள் இருந்தன தெரியுமா?

காகம், குயில், மயில், மைனா, சிட்டுக்குருவி, பூஞ்சிட்டு, தேன் சிட்டு, தையல் சிட்டு, தவிட்டுக்குருவி, கானாங்கோழி, கின்னிக்கோழி, வான் கோழி, நாரை, பனங்காடை, காடை, கௌதாரி, மரங்கொத்தி, கொக்கு, நீர்க்கோழி, பருந்து, கழுகு, வல்லூறு, கருங்குருவி, ஆக்காட்டிக்குருவி, காட்டுப்புறா, மணிப்புறா, மரகதப்புறா,… இப்படி நிறையப் பறவைகள் அங்கே வசித்தன.

காலையிலும் மாலையிலும் ஒரே சத்தமாக இருக்கும். காலையில் இரை தேடிப் புறப்படும்போது ஒன்றுக்கொன்று பேசிக் கொள்ளும்.

ஏய்.. அருவிப்பக்கம் போகாதே.. அங்கே மனிதர்கள் நடமாட்டம் இருக்கு..

சொல்றதக் கேளு கண்ணு.. காட்டைத் தாண்டிப் போகதடா..

சூரியன் உதிக்கும் திசைப்பக்கம் போ.. நிறைய உணவு கிடைக்கும்

தெற்கே ஒரு நரி செத்துக்கிடக்கு.. போவோம் வாங்க சுத்தப்படுத்துவோம்..

கூட்டை விட்டு கீழே இறங்கக்கூடாது.. பாம்பு பிடிச்சிட்டுப் போயிரும்..

இன்னும் உனக்கு இறக்கை பெரிசாகட்டும்.. அதுக்குப் பிறகு கூட்டிட்டுப் போறேன்..

அந்தப் பெரிய மருதமரத்துக்கு உடம்பு சரியில்லையாம்.. என்ன மறுபடியும் அதோட தோல்ல பூச்சிகள் பெருகியிருக்கும்.. நீ போய் பார்த்து சுத்தப்படுத்திரு..

இப்படி பலவிதமான உரையாடல்கள் நடக்கும். அதே போல மாலையில் எல்லாரும் பல திசைகளிலிருந்தும் கூட்டுக்கும் கிளைகளுக்கும் வருவார்கள். அப்போதும் மற்ற காடுகளில் நடந்ததையும், ஊர்ப்புறங்களில், கிராமப்புறங்களில் நடப்பதையும் பேசிக் கொள்வார்கள். புதிதாகப் பறக்கத் தொடங்கிய குஞ்சுகளுக்குப் பாடம் நடத்துவார்கள். அவர்களுடைய மொழியைச் சொல்லிக் கொடுப்பார்கள்.

இப்படி அந்தக் காடே கோலாகலமாக, கொண்டாட்டமாக இருக்கும். வருடத்துக்கு ஒரு முறை அவர்கள் ஆண்டுவிழா நடத்துவார்கள். அப்போது பறக்கும் போட்டி, ஓடும் போட்டி, தாவும் போட்டி, ஆடும் போட்டி, தின்னும் போட்டி, சுத்தம் செய்யும் போட்டி, பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, உதவும் போட்டி, அழகுப்போட்டி என்று நடத்துவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெறுவார்கள்.

காகம் எல்லாப்போட்டிகளிலும் கலந்து கொள்ளும். ஆனால் ஒரு போட்டியிலும் வெற்றி பெறாது. ஆனாலும் விடாமல் முயற்சி செய்யும். மற்ற பறவைகள் எல்லாம் காகத்தை இளக்காரமாகப் பார்க்கும். கேலி செய்யும்.

அந்த ஆண்டு வேறு ஒரு காட்டிலிருந்து அன்றில் பறவையை நடுவராக அழைத்திருந்தார்கள். அன்றில் காகத்தைக் கவனித்துக் கொண்டேயிருந்தது. சோர்ந்து போய் தாழ்வு மனப்பான்மையுடன் காகம் ஓரமாய் ஒதுங்கி நின்றது. வெற்றி பெற்ற பறவைகள் எல்லாம் ஆரவாரமாய் கூச்சல் போட்டன. ஒவ்வொரு பறவை வெற்றிக்கூச்சல் போடும் போதும் தலையைத் தூக்கிப் பார்க்கும் காகம். பின் மீண்டும் தலையைக் குனிந்து கொள்ளும்.

எல்லாப்போட்டிகளும் முடிந்தன. அப்போது அன்றில் கூவியது,

“ இதுவரை நடந்த போட்டிகள் சாதாரணமானவை.. இப்போது உங்களுக்கு ஒரு புதிய போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தப் போகிறேன்.. யார் அறிவாளி என்ற போட்டி தான். நீங்கள் என்ன தான் ஆடினாலும் பாடினாலும் ஓடினாலும் புத்திசாலியாக இல்லையென்றால் எந்த உபயோகமுமில்லை.. எனவே அறிவாளிப்போட்டியில் வெற்றி பெற்றவர் தான் இந்த ஆண்டு சேம்பியன்.. “

பறவைகள் முணுமுணுத்தன. ஆனாலும் ஏற்றுக் கொண்டன.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொரு பறவையிடமும் ஒரு பழம் கொடுக்கப்பட்டது. பறவைகள் அந்தப் பழத்தை ஒளித்து வைக்க வேண்டும். பிறகு நாளை அந்தப் பழத்தை ஒளித்து வைத்த இடத்திலிருந்து எடுத்து வரவேண்டும். யார் முதலில் எடுத்து வருகிறார்களோ அவர்களே சேம்பியன்.

என்று முரசறைந்து சொல்லச்சொன்னது அன்றில். மறுநாள் எல்லாருக்கும் ஒரு அத்திப்பழம் கொடுக்கப்பட்டது. எல்லாரும் அத்திப்பழத்தை வாயில் கௌவிக்கொண்டு பறந்து சென்றன.

ஆனால் ஒரு பறவையாலும் ஒளித்து வைக்க முடியவில்லை. இல்லை தெரியவில்லை. அங்கங்கே போட்டு விட்டுப் போய் விட்டன. மறுநாள் பறவைகள் எல்லாம் தேடிப் பார்த்தன. ஒருவருக்கும் ஞாபகம் இல்லை. ஒவ்வொரு இடமாகத் தேடின. ம்ஹூம்..

மாலைவரை தேடிப்பார்த்து விட்டு போட்டி நடுவரிடம் சொல்வதற்காகத் திரும்பிச் சென்றன. அங்கே பார்த்தால் ஆச்சரியம். யாரை தாழ்வாக நினைத்தார்களோ அந்தக் காகம் தன் வாயில் அத்திப்பழத்துடன் நின்றது.

அப்போது அன்றில் சொன்னது.

“ பறவைகளே யாரையும் தாழ்வாகவோ, குறைவாகவோ நினைக்கக்கூடாது….எல்லாரிடமும் ஒரு திறமை இருக்கும். காகம் நம் அனைவரைக் காட்டிலும் அறிவாளி. அதனால் தான் காகத்தைப் பற்றி ஏராளமான கதைகளை மனிதர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்…இந்த ஆண்டு சேம்பியன் காகம் தான் என்று நான் அறிவிக்கிறேன்…”

எல்லாப்பறவைகளும், “ சேம்பியன் காகம் வாழ்க! “ என்று பறவைக்காடே அதிரும்படி கத்தின.

அந்தச் சத்தம் இங்கே வரை கேட்டதென்றால் பாருங்களேன்

நன்றி - மந்திரத்தொப்பி
வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

Friday, 13 December 2024

காக்கா கிளி புலி நரி

 

10.  காக்கா கிளி புலி நரி

உ உதயசங்கர்



u

கனகு ஒரு குட்டி எழுத்தாளர். ஒரு கதை எழுத வேண்டும். என்ன கதை எழுதலாம்? மரம் நடுவதைப் பற்றிய கதை எழுதலாமா? வேண்டாம். அப்படி லட்சக்கணக்கான கதைகள் வந்து விட்டன. ஆனாலும் அமேசான் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களை வெட்டிக் கொண்டுதானிருக்கின்றனர்.

நெகிழிப் பயன்பாட்டை ஒழிப்பதைப் பற்றி எழுதலாமா? அதுவும் ஆயிரக்கணக்கில் வந்து விட்டன. ஆனாலும் நெகிழிப்பயன்பாடு குறையவில்லை.

கா க்க்கா கா கா கா..

என்று காகம் கரையும் சத்தம் கேட்டது. உடனே கனகுவுக்குக் காகத்தைப் பற்றிக் கதை எழுதலாம் என்று தோன்றியது.

காக்காவுக்கு கருப்பு நிறம் எப்படி வந்தது?

ஐய் சூப்பர்!

கனகு கதையை எப்படித் தொடங்கி எப்படி முடிக்கலாம் என்று யோசித்தபடியே தூங்கி விட்டான்.

நள்ளிரவு. ஒரே இருட்டு. அவன் காதுக்குள் கா கா கா கா என்று சத்தம் கேட்டது. கண்விழித்தான் கனகு.

சன்னலில் கன்னங்கரேலென்று ஒரு உருவம் தெரிந்தது. கனகு பயத்தில் உளற ஆரம்பித்தான்.

“ யாய்ய்ய்யாரு? “

 அந்தக் கருப்பு உருவம் பதில் சொன்னது,

“ நான் தான் காகம்.. என்னைப் பற்றிக் கதை எழுதப் போகிறாயா? “ என்று கேட்டது காகம்.

“ ஆஆம்மா..

என்ன கதை எழுதப் போறே? “

“ காக்காவுக்கு கருப்பு நிறம் எப்படி வந்தது? “

“ ஏம்ப்பா இப்படி யோசிக்கிறீங்க? காக்கா ஏன் கருப்பாச்சு? கிளி ஏன் பச்சையாச்சு.. புலிக்குக் கோடு போட்டது யாரு? சிறுத்தைக்குப் புள்ளி வைச்சது யாரு? “

“ பிறகு எப்படி எழுதறது? “

“ அறிவியல் வளராத காலத்தில் கிராமப்புற மக்கள் நிறையக் கட்டுக்கதைகளைச் சொன்னாங்க.. சரிதான்.. இப்போதும் அப்படிச் சொல்லலாமா?“

கனகு யோசித்தான். காகம் சன்னலில் இருந்து பறந்து வந்து அவனுடைய படுக்கையில் உட்கார்ந்தது. இப்போது கனவுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.

“ பிறகு எப்படி எழுதறது? பெரிய எழுத்தாளர்கள் இப்படித்தான் எழுதியிருக்காங்க..

அதே மாதிரி தான் நாம எழுதணுமா என்ன? சரி.. என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? என்னுடைய வாழ்க்கை, பழக்கவழக்கம், அறிவுத்திறன், பூர்வீகம், இயற்கை ஏன் என்னைப் படைத்தது? இப்படி யோசித்துப் பாரு.. ஆயிரம் கதை கிடைக்கும் “

“ ஆகா.. நல்ல யோசனை..என்றான் கனகுவின் முகத்தில் வெளிச்சம். காகம் மறுபடியும்,

“ அதை விட்டுட்டு.. நிறத்தைப் பற்றி, உருவத்தைப் பற்றி, குணத்தைப் பற்றி கதை விடலாமா? அது கேலி இல்லையா? “

“ நிறம் ஓகே.. உருவம் ஓகே.. ஆனால் குணத்தைப் பற்றி எழுதுவது என்றால் புரியவில்லையே..

கனகு பெரிய எழுத்தாளரைப் போல நெற்றியில் கைவைத்து யோசித்தான்.

“ தம்பி, நரி தந்திரமானது என்று பஞ்சத்ந்திரக்கதைகளில் சொன்னதையே இப்பவும் சொல்லலாமா? புலியோ சிங்கமோ கொடூரமானது என்று சொல்லலாமா? பாம்பு பழி வாங்கும் என்று சொல்லலாமா? யோசித்துப் பாரேன்..

இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு விதமான குணத்தைக் கொடுத்திருக்கிறது.. அதைத் தந்திரம், கொடூரம், பாவம், புத்திசாலி, என்று நீங்கள் மனிதர்கள் தங்களுடைய குணங்களை ஏற்றிச் சொல்கிறார்களே சரிதானா? பார்க்கப்போனால் மனிதர்களிடம் தான் எல்லாக்குணங்களும் எப்போதும் இருக்கின்றன

அப்படின்னா எப்படி கதை எழுதறது? “

காகமும் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தது. தன்னுடைய அலகால் சிறகுகளைக் கோதி விட்டது. இருட்டுக்குள் அங்கும் இங்கும் பார்த்தது.

“ தம்பி வயிறு பசிக்குது.. ஏதாவது மிச்சம் மீதி இருந்தாக்கொடேன்..

கனகு எழுந்து அலமாரியிலிருந்த பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து இரண்டு பிஸ்கெட்டுகளைக் கொடுத்தான். காகம் பொறுமையாகச் சாப்பிட்டுவிட்டுச் சொன்னது.

 அறிவியல் உண்மைகள் மாறாமல் கதைகளை எழுத வேண்டும்.. இல்லையென்றால் கதைகளை உண்மை என்று நம்பிவிடுவார்கள்.. தம்பி. “

“ ஆமாம் உன்னை செத்துப்போன முன்னோர் என்றும் சனி பகவான் வாகனம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே..

கனகுவுக்கு இப்போது கொஞ்சம் புரிந்தது போல இருந்தது. அவன் காகத்திடம் வேறு ஒரு கேள்வி கேட்பதற்காக நிமிர்ந்தான்.

காகம் அங்கு இல்லை. கனவா?

கனகுவுக்குத் தூக்கம் சொக்கியது.

காலையில் எழுந்ததும் பார்த்தால் படுக்கையில் பிஸ்கெட் துகள்கள் கிடந்தன..

நன்றி - நான் யார்?

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

 

 

Monday, 25 December 2017

காகம் கொண்ட தாகம்

காகம் கொண்ட தாகம்

உதயசங்கர்
ஒரு ஊரில் ஒரு ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தில் இரண்டு காகங்கள் இருந்தன. ஒரு காகத்தின் பெயர் ஒல்லிக்குச்சி. இன்னொரு காகத்தின் பெயர் குண்டுப்பாச்சா. அப்போது கோடைகாலம். அதனால் வெயில் அதிகமாக இருந்தது. காகங்களுக்குத் தாகம் எடுத்தது. எங்கும் தண்ணீர் இல்லை. காகங்களுக்குத் தொண்டை வறண்டு போய் விட்டது. மூன்று நாட்களாக ஒரு சொட்டுத்தண்ணீர் குடிக்கவில்லை. காகங்களால் பேசக்கூட முடியவில்லை.
ஒல்லிக்குச்சி காகம் தன்னுடைய நண்பனைச் சைகையால் அழைத்தது. அருகில் மெல்ல தத்தித் தத்தி நடந்து வந்தது குண்டுப்பாச்சா காகம். அதன் காதில்
“ கா..கா..கா..நாம் இங்கிருந்து போய்விடுவோம். இங்கே தண்ணீர் கிடைக்காது. வேறு இடத்தில் தண்ணீர் கிடைக்கலாம்.. வா.பறந்து போகலாம் கா கா கா.”
என்று சொல்லியது. குண்டுப்பாச்சா காகம் ஒரு சோம்பேறி. அது உடனே,
“ காகாகா காகாகா… கடவுள் கைவிட மாட்டார்…எப்படியும் மழை பெய்யும்… தண்ணீர் கிடைக்கும்.. ஏன் வீணாக அலைய வேண்டும்? பேசாமல் இங்கேயே இருப்போம்…கா  கா ”
என்று ஒல்லிக்குச்சிக்காகத்திடம் கத்தியது. ஒல்லிக்குச்சிக்காகம் மறுபடியும் குண்டுப்பாச்சா காகத்தை அழைத்தது. குண்டுப்பாச்சா காகம் அசையவில்லை. கண்ணை மூடி உறங்கியது.
ஒல்லிக்குச்சி காகம் சிறகுகளை விரித்து அந்த ஆலமரத்தை விட்டுப் பறந்தது. வெகுதூரம் பறந்தது. எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பரிதவித்தது. செடி கொடிகள் காய்ந்து கருகிப் போய் இருந்தன. தண்ணீர் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.
ஒல்லிக்குச்சி காகத்துக்குச் சிறகுகள் வலித்தன. பறக்க முடியாமல் கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்தது. அப்போது தூரத்தில் ஒரு குடிசை வீடு தெரிந்தது. அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு சிறுமி ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். அந்தத் தண்ணீரை எடுத்து வர அவள் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து போய் வந்தாள். அவள் தட்டில் தண்ணீரை ஊற்றியதும் அவளைச் சுற்றி சிட்டுக்குருவிகள், தவிட்டுக்குருவிகள், மைனாக்கள், காகங்கள், புறாக்கள், சின்னஞ்சிறு வட்டம் போட்டு பறந்து கொண்டிருந்தன.
அவள் தண்ணீரை ஊற்றியதும் எல்லோரும் அந்தத் தட்டைச் சுற்றி நின்று தண்ணீர் குடித்தன. ஒல்லிக்குச்சி காகம் அந்த முற்றத்தில் இறங்கியது. மெல்ல நடந்து தண்ணீர் இருந்த தட்டிலிருந்து தண்ணீரை சளப் சளப் என்று குடித்தது. தண்ணீரைக் குடித்தபிறகு தான் அதற்கு உயிர் வந்தமாதிரி இருந்தது. அந்தச் சிறுமியைப் பார்த்து
“ கா…கா…க்கா.. மிக்க நன்றி.. மிக்க நன்றி..”
என்று கத்தியது. அந்தச்சிறுமி ஒல்லிக்குச்சி காகத்தைப் பார்த்துச் சிரித்தாள்.
ஒல்லிக்குச்சி காகம் மீண்டும் தட்டில் இருந்து தண்ணீரை உறிஞ்சி வாயில் வைத்துக் கொண்டது. தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய நண்பன் குண்டுப்பாச்சா இருக்கும் ஆலமரத்தை நோக்கிப் பறந்தது. அப்போது ஒல்லிக்குச்சி காகம் நினைத்தது.
“ முயற்சி தான் கடவுள் “
நன்றி - வண்ணக்கதிர்