Showing posts with label மொழிபெயர்ப்பு. மலையாளம். Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்பு. மலையாளம். Show all posts

Monday, 31 March 2025

எலியும் கல்யாணிப்பசுவும்

 

எலியும் கல்யாணிப்பசுவும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்

ஒரு நாள் நடுப்பகலில் கல்யாணிப்பசு ஆலமரத்தடியில் அமர்ந்து ஓய்வாக அசைபோட்டுக் கொண்டிருந்தது தூரத்தில் ஒரு எலிக்குட்டி கல்யாணிப்பசுவைப் பார்த்துக் கொண்டிருந்தது. பார்க்கப் பார்க்க எலிக்குட்டிக்குப் பயங்கரப்பொறாமை வந்தது.

கல்யாணிப்பசு என்ன ஒரு அழகு!

நீண்ட அழகியக் கண்கள்! வெள்ளை நிறம், நெற்றியில் ஒரு சுழி, நீண்ட வால், என்ன ஒளி, அப்படிப் பார்த்து பார்த்து பொறாமை அதிகமாகிக் கொண்டே போனது. எலிக்குட்டி ஓடி வந்து கல்யாணிப்பசுவின் மூக்கை ஒரு கடி கடித்தது.

கல்யாணிப்பசுவுக்கு அதிர்ச்சி. உடனே அடக்கமுடியாத கோபம் வந்தது. ஆகா! இந்த எலிக்குட்டிக்கு இவ்வளவு திமிரா? இதுக்கு ஒரு பாடம் கற்பித்துவிட்டு தான் வேறு வேலை என்று நினைத்தது. தட்டுத்தடுமாறி எழுந்து எலியின் பின்னால் ஓடியது.

எலிக்குட்டி சுவரிலுள்ள ஒரு பொந்தில் போய் ஒளிந்து கொண்டது. கல்யாணிப்பசு சுவரை முட்டி மோதிக் கீழே தள்ளிவிடப் பார்த்தது.

இந்த சத்தம் கேட்டு சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஓடிவந்தார்கள். நாய்க்குட்டி குரைத்தது. பூனைக்குட்டி எலிக்குச் சவால் விடுத்தது. இந்தக் களேபரத்துக்கிடையில் எலி வேகமாக ஓடி வந்து இன்னொரு தடவை கடித்து விட்டு ஓடி ஒளிந்து விட்டது.

பசு மறுபடியும் சுவரில் முட்டியது. பூனைக்குட்டி அந்தப் பொந்துக்குள் கையை விட்டுத் துழாவியது. பூனைக்கும் ஒரு கடி கிடைத்தது.  வேதனையில் கையைப் பின்னுக்கிழுத்துக் கொண்டு அழுதது. நாய்க்குட்டி பயங்கரமாகக் குரைத்தது. 

இந்த கலவரத்துக்கு மத்தியில் எலி அவர்களுக்கு இடையில் புகுந்து ஓடித் தப்பித்து விட்டது.

நன்றி - புக் டே


 

Saturday, 8 March 2025

கசுமலா காக்காவின் கவலை


கசுமலா காக்காவின் கவலை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



    ஒரு நாள் உச்சிவேளையில் சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் மண்ணைக் குழைத்து அப்பம் சுட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கசுமலா காக்கா ஆலமரத்தின் கிளையில் வந்து உட்கார்ந்து,

“ கா கா கா கா கா கா..” என்று கரைந்தது..

      கதைப்பாட்டி காக்கா கவலையோடு கரைவதைக் கவனித்தார். கதைப்பாட்டி எழுந்து எழுந்து சென்று,

“ என்ன கசுமலா.. உனக்கு என்ன கவலை? “ என்று கேட்டார். காக்காவின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அதைப் பார்த்த நாய்க்குட்டியும், சின்னுவும், பூனைக்குட்டியும் விளையாட்டை நிறுத்திவிட்டு கதைப்பாட்டியின் அருகில் சென்றார்கள்.

கசுமலா காக்கா தாழப்பறந்தபடியே,

“ கா கா கா கா கா “ என்று கூப்பாடு போட்டபடி கதைப்பாட்டியைச் சுற்றிச் சுற்றி சிறகுகளடித்து பறந்தது.

கதைப்பாட்டிக்கு பறவைகள் விலங்குகள் பேசுகிற மொழி தெரியும். நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் சின்னுவும் ஒரே குரலில்,

“ ஏன் காக்கா இப்படி கரையுது கதைப்பாட்டி..” என்று கேட்டார்கள்.

“ கசுமலா காக்காவின் முட்டைகளை ஒரு நல்லபாம்பு முட்டைகளைத் தின்று விட்டுப் போய் விட்டதாம்..”

“ அட..பாவமே! “ என்று சின்னு சொன்னாள்.

“ ஐய்யய்யோ..” என்று நாய்க்குட்டியும் சொன்னது.

அப்போது கதைப்பாட்டி கசுமலா காக்காவிடம் சொன்னார்,

“ நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன்.. அமைதியாக இரு..” என்று சொல்லி விட்டு சின்னுவின் கழுத்திலிருந்து தங்கச்சங்கிலியைக் கழற்றி பாம்பின் புற்றில் போடுமாறு கதைப்பாட்டி கசுமலா காக்காவிடம் சொன்னாள்.

கசுமலா காக்கா அதைச் செய்தது. சின்னுவிடம் வீட்டுக்கு ஓடிப்போய் விவரம் சொல்லச் சொன்னார் கதைப்பாட்டி. தங்கச்சங்கிலியைக் கழற்றி விளையாடும்போது காக்கா கொத்திக் கொண்டு போய் விட்டது என்று சின்னுவும் வீட்டில் சொன்னாள்.

தங்கச்சங்கிலியைத் தேடி வந்த சின்னுவின் வீட்டுக்காரர்கள் அந்த நல்லபாம்பை அடித்துக் கொன்று விட்டார்கள்.

கசுமலா காக்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பறந்து வந்து கதைப்பாட்டியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.

இப்போதும் கதைப்பாட்டியின் கன்னத்தில் ஒரு கரும்புள்ளி இருக்கிறது... பாருங்கள்!

நன்றி - புக் டே 



 


Tuesday, 4 March 2025

காக்காவும் கொக்கும்

 

காக்காவும் கொக்கும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் ஒளிந்து விளையாடும்போது கசுமலா காக்காவும் வந்தது. தன்னையும் விளையாட்டில் சேர்க்க வேண்டும் என்று சண்டை போட்டது. கல்யாணிப்பசு சொன்னது,

“ உனக்கு வெட்கமாக இல்லையா கசுமலா.. இந்தச் சின்னப்பிள்ளைகளோடு விளையாட ஆசைப்படுகிறாய்..”

கசுமலாவுக்கு அது பிடிக்கவில்லை. கோபம் கொண்ட கசுமலா பூனைக்குட்டியின் தலையில் ஒரு கொத்து கொத்தியது. பூனைக்குட்டி ‘ மியாவ் ‘ என்று அழுது கொண்டே நாய்க்குட்டியின் அருகில் சென்றது. நாய்க்குட்டி, ‘ பௌ ‘ என்று சின்னுவை அழைத்தது. சின்னு காக்கா மீது கோபப்பட்டாள். கசுமலா சிணுங்கிக் கொண்டே ஆற்றங்கரைக்குப் போய் விட்டது. ஆற்றில் ஆழமில்லாத பகுதிகளில் நிறைய வாத்துகள் நீந்திக் குளித்துக் கொண்டிருந்தன. நல்ல வெள்ளை நிறம். ஒரு அழுக்கு கூட இல்லை. தன்னுடைய நிறமோ? கருப்பு. யாருக்கும் கருப்பு நிறம் பிடிக்கவில்லை. அதனால் தான் நிறையப் பேருக்கு வாத்துகளை மிகவும் பிடித்திருக்கிறது.

காக்காவும் ஆற்றில் முங்கிக் குளித்தது. பல நாட்களாக ஆலமரத்தடிக்குப் போகவில்லை. நிறைய நாட்களுக்குப் பிறகும் கருப்பு நிறம் மாறவேயில்லை. அதை நினைத்துக் கவலைப்பட்டது கசுமலா காக்கா. நண்பர்களைத் தேடி திரும்பிச் சென்றது. பூனைக்குட்டியும் நாய்க்குட்டியும் காக்காவின் குளியலைக் கேட்டு கை தட்டிச் சிரித்தார்கள். காக்கா கவலையுடன் கதைப்பாட்டியிடம் கேட்டது,

“ கதைப்பாட்டி ஏன் நான் வெள்ளையாகவில்லை? “

“ காக்கா குளிச்சால் கொக்காக மாறாது கசுமலா.. எல்லோருக்கும் இயற்கை கொடுத்த சில அடிப்படையான விசயங்களை மாற்ற முடியாது...கருப்பு நிறத்தை விட வெள்ளை நிறம் உயர்வு என்று நினைப்பதினால் தான் பிரச்னை.. கருப்பு நிறத்துக்கு ஏழு நிறங்களும் அழகு கசுமலா காக்கா.. நமக்கு இயற்கை எதைக் கொடுத்திருக்கிறதோ அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு நல்லபடியாக வாழக் கற்றுக் கொள்ளணும்.. “ என்று கதைப்ப்பாட்டி சொன்னார்.

அதைக் கேட்ட காக்காவின் கண்கள் கலங்கின. அதைப்பார்த்த சின்னு ஓடிப்போய் கசுமலா காக்காவைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்தாள்.

 நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

Tuesday, 18 February 2025

குயிலிடம் சொன்ன கதை

 

குயிலிடம் சொன்ன கதை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்




      நல்ல கோடைகாலம். மாமரத்தில் இலைகள் துளிர்த்து நிறைந்திருந்தன. மாமரத்தின் அடியில் கதைப்பாட்டியும், சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் உட்கார்ந்திருந்தார்கள். இளம் மாவிலைகளின் சிவப்பு நிறத்தில் பார்வதி இருந்தாள் என்று கதைப்பாட்டி சொன்னாள். அப்போது மாமரத்தின் கிளையில் ஒரு குயில் வந்து அமர்ந்தது. அது பாடத்தொடங்கியது.

என்ன ஒரு இனிமையான குரல்! எப்படியான இசை!

யாரும் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். குயிலின் பாட்டுக்குப் பதிலாக சின்னுவும் பாடினாள். குயில் கதைப்பாட்டியின் முன்னால் வந்து உட்கார்ந்தது.

“ பாடு குயிலக்கா! “ என்று நாய்க்குட்டி கெஞ்சியது.

“ நான் பாடுவதால் என்ன பயன்? “ என்று குயில் வருத்தத்துடன் சொன்னது.

“ ஏன்? என்னாச்சு? “ என்று கதைப்பாட்டி கேட்டார்.

“ எல்லாருக்கும் என்னுடைய பாட்டு மட்டும் தான் பிடிச்சிருக்கு.. என்னை யாருக்கும் பிடிக்கவில்லை.. என்னுடைய நிறத்தைப் பாருங்கள் கதைப்பாட்டி.. இயற்கை என்னை கருப்பு நிறத்தில் முக்கியெடுத்து விட்டது என்று தோன்றுகிறது.. சின்னுவைப் பார்த்தீர்களா? என்ன அழகான நிறம்! பழுத்த மாம்பழம்போல, குட்டி முயலைப் பாருங்கள்..என்ன அழகு..” என்று சொன்னது குயில்.

பூனைக்குட்டி இரண்டு கால்களில் எழுந்து நின்று,

“ என்னுடைய கண்கள் கூட பளிங்குக்கல் மாதிரி இருக்கும் பாரு..”

என்று சொன்னது.

குயில் குமுறி அழுதது.

அப்போது கதைப்பாட்டி சொன்னாள்,

“ குயிலே.. இயற்கை உனக்குக் கொடுத்த நிறத்தைப் பற்றிக் கவலைப்படாதே.. உனக்கு நல்ல இசை, மயிலுக்கு அழகு, யானைக்கு அறிவு, கதைப்பாட்டிக்குக் கதை, இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு கொடுத்திருக்கிறது.. அதை நினைத்து மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்..”

நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

Monday, 10 February 2025

காக்கா கொண்டு போச்சு!

 

காக்கா கொண்டு போச்சு!

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



ஓரு ஊரில் ஒரு பாட்டி இருந்தாள். கதை சொல்கிற பாட்டி. கதை கேட்கிற குழந்தைகள் அவரை கதைப்பாட்டி என்று அழைத்தார்கள். கதைப்பாட்டியின் கையில் ஒரு மூட்டை உண்டு. அதற்குள் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. கதைப்பாட்டியிடம் குழந்தைகள் கேட்கும்போது அந்த மூட்டையில் நிறைய கதைகள் இருக்கின்றன என்று சொல்வாள். உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அந்த மூட்டையில் ஒரு ஆரஞ்சுப்பழத்தைப் போட்டால் உடனே ஆரஞ்சுப்பழத்தைப் பற்றி ஒரு கதை வரும். ஒரு வாழைப்பழத்தைப் போட்டால் உடனே வாழை மரத்தைப் பற்றி ஒரு கதை வரும்.

ஒரு நாள் கதைப்பாட்டி ஒரு ஆலமரத்தடியில் மூட்டையைத் தலைகாணியாக வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அப்போது சின்னு என்ற இரண்டு வயதுக்குழந்தை அம்மாவைத் தேடி வீட்டை விட்டு வெளியில் வந்தாள். அவள் கதைப்பாட்டியின் அருகில் வந்தாள்.

யார் அது படுத்து உறங்குவது? கதைப்பாட்டியா! வெள்ளை வெளேரென்று வெளுத்த தலைமுடி. பளபளன்னு மினுங்கும் மூக்குத்தி.

ஹாய்! சின்னு அவளே வரைந்த அவளுடைய படத்தை மூட்டைக்குள் போட்டாள். கதைப்பாட்டி விழித்து எழுந்து சின்னுவை மடியில் உட்கார வைத்துக் கொண்டாள். சின்னுவைப் பற்றி ஒரு கதை சொன்னாள்.

ஒரு ஊரில் சின்னு என்ற ஒரு குறும்புக்காரக்குழந்தை இருந்தாள். சின்னுவின் அம்மா சோம்பேறி. சின்னு எந்த விளையாட்டு விளையாடவேண்டும் என்று கேட்டாலும் அதை எடுத்துக் கொடுப்பதற்குச் சோம்பல் படுவாள். சின்னுவின் அம்மா சொல்வாள்,

“ ஐய்யோ! அதை காக்கா கொண்டு போச்சு சின்னு.. காக்கா கொண்டு போச்சு..”

எல்லாவிளையாட்டுச் சாமான்களையும் காக்கா கொண்டு போய் விட்டால் சின்னு எதை வைத்து விளையாடுவாள்? சின்னுவுக்குக் கோபம் வந்தது. மூக்குக்கு மேல் கோபம். அம்மா உறங்கும்போது வீட்டை விட்டு வெளியேறினாள். காக்காவைத் தேடினாள். காக்காவிடம் கேள்வி கேட்டே ஆகணும். போகிற வழியில் காக்கா வாழைமரத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். சின்னு விளையாட்டுச்சாமான்களைப் பற்றிக் கேட்டபோது, காக்கா சொன்னது,

“ ஐய்யோ! அதை பூனை கொண்டு போச்சு.. பூனை கொண்டு போச்சு..”

சின்னு பூனையைத் தேடி நடந்தாள். பூனையைப் பார்த்தாள். சின்னு பூனையைப் பயமுறுத்தினாள். பயந்து போன பூனை என்ன சொன்னது தெரியுமா?

“ ஐய்யோ! நாய்க்குட்டி கொண்டு போச்சு! சின்னு நாய்க்குட்டி கொண்டு போச்சு! “

சின்னுவுக்கு குழப்பமாக இருந்தது. என்ன உலகம்! ஒரு சின்னப்பிள்ளையை விளையாட விடவில்லையே. வீட்டுக்குப் போகும் வழியும் மறந்து விட்டது. அப்படியே நடந்து வரும்போது கதைப்பாட்டி உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

அப்போது என்ன நடந்தது தெரியுமா?

தலைமுடியெல்லாம் காற்றில் பறக்க சின்னுவின் அம்மா அழுது கொண்டே ஓடி வந்தாள். சின்னு ஒரு குதி குதித்து கதைப்பாட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டாள். சின்னுவின் அம்மா கதைப்பாட்டியின் முன்னால் வந்து நின்று அழத்தொடங்கினாள்.

“ சின்னுவைக் காணவில்லை.. கதைப்பாட்டி.. சின்னுவை எங்காவது பார்த்தீர்களா? கடவுளே நான் இனிமே எப்படி உயிருடன் இருப்பேன்..”

அதை எல்லாம் கேட்டபிறகு கதைப்பாட்டியின் பின்னால் ஒளிந்திருந்த சின்னு முன்னால் வந்தாள்,

“ காக்கா கொண்டு போச்சு.. சின்னுவைக் காக்கா கொண்டு போச்சு..”

என்றாள். கதைப்பாட்டி விழுந்து விழுந்து சிரித்தாள். சின்னுவின் அம்மா சின்னுவை அப்படியே அள்ளி எடுத்து நிறைய முத்தங்கள் கொடுத்தாள்.

அதன்பிறகு எப்போதும் சின்னுவுக்கு விளையாட்டுச்சாமான்கள் கிடைத்துக் கொண்டிருந்தன.

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

Sunday, 9 February 2025

சின்னுவும் கதைப்பாட்டியும்!

 

1.   சின்னுவும் கதைப்பாட்டியும்!

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்


 

சின்னு வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். மாங்காய் வியாபாரி அங்கே வந்து ” மாம்பழம்.. மாம்பழம் ” என்று கத்தினார்.. தலையில் கூடையை வைத்திருந்தார். அதைப் பார்த்த சின்னு விளையாட்டை நிறுத்தினாள். பிறகு,

“ மாமா மாமா .. கூடையில் என்ன இருக்கு? “

 

“ பழுத்த மாம்பழம்.. காசுக்கு இரண்டு பழுத்த மாம்பழம்..”

என்று மம்மது மாமா பதில் சொன்னார். சின்னக்குழந்தைகள் கையில் காசு எப்படியிருக்கும்? அதனால் சின்னுவுடன் விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் தலை குனிந்து நின்றார்கள். அப்போது மம்மது மாமா மறுபடியும் பாடினார்,

“ வாங்கிக்கோ.. குழந்தை.. வாங்கிக்கோ குழந்தை.. பசிக்கும் போது சாப்பிடலாமே.. வாங்கிக்கோ குழந்தை..”

சின்னு கையை நீட்டினாள். மம்மது மாமா ஒரு குட்டி மாம்பழத்தைக் கொடுத்தார். அதைப் பார்த்த கமலாக்காக்கா பறந்து வந்தது. மாம்பழத்தைக் கொத்திக் கொண்டு பறந்து போய் விட்டது. சின்னு பின்னால் ஓடினாள். சின்னுவின் பின்னால் நாய்க்குட்டி ஓடியது. நாய்க்குட்டியின் பின்னால் பூனைக்குட்டியும் ஓடியது. கமலாக்காக்கா மரக்கிளையில் உட்கார்ந்தது.

சிறிது நேரம் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. முன்னொரு காலத்தில்  கமலாக்காக்காவை நீலாண்டன் குள்ளநரி ஏமாற்றிய கதையை சின்னுவின் காதில் சொன்னது பூனைக்குட்டி.

சின்னு காக்காவிடம் கேட்டாள்,

“ காக்கா காக்கா.. உன்னுடைய கூடு எங்கே? “

கமலாக்காக்கா பதில் சொல்லவில்லை. முன்பு ஒரு குள்ளநரி ஏமாற்றியதை நினைத்துப் பார்த்தது. இனி ஒருத்தரும் தன்னை ஏமாற்ற விடக்கூடாது என்று நினைத்தது.

. அப்போது நாய்க்குட்டி கேட்டது,

“ காக்கா கூட்டில் ஒரு குஞ்சு இருக்கிறது இல்லையா? “

அதைக் கேட்டதும் கமலாக்காக்காவின் கண்கள் நிறைந்து விட்டன. வெகு நேரமாகி விட்டது. இன்னமும் குஞ்சுக்குத் தீனி கொண்டு போய் கொடுக்கவில்லை. இந்த மூன்று பேரும் போய்விட்டால் மாம்பழத்தைக் கொண்டு போய் கொடுக்கலாம். அப்போது பூனை கேட்டது,

“ காக்காக்குஞ்சுக்குத் தீனி கொடுக்கவில்லை என்றால் பசித்து அழும் இல்லையா?”

“ அதைக் கேட்ட கமலாக்காக்காவுக்கு நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது. அது வாயைத் திறந்து கா..கா..கா.. கா.. என்று கரைந்தது.

மாம்பழம் கீழே விழுந்தது. அதை சின்னு தன்னுடைய பாவாடையில் ஏந்திக் கொண்டாள். பிறகு நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சின்னுவும் ஆடிக் கொண்டே கதைப்பாட்டியிடம் போனார்கள். கதைப்பாட்டி மாம்பழத்தைத் துண்டு போட்டு கொடுத்தாள். எல்லாரும் சாப்பிட்டு முடித்தபிறகு, சின்னு தன் கண்களை விரித்து,

“ காக்கா பாவம் இல்லையா? “

கண்களைத் துடைத்துக் கொண்டே, “ ஆமாம் பாவம்.. தான்..” என்றது பூனைக்குட்டி.

உதடுகளை நக்கித் துடைத்துக் கொண்டே நாய்க்குட்டியும்,

“ ஆமாம் ஆமாம்.. பாவம் தான் “ என்றது.


நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

புக் டே