Showing posts with label அய்யப்ப பணிக்கர். Show all posts
Showing posts with label அய்யப்ப பணிக்கர். Show all posts

Thursday, 24 May 2012

நான் ஏன் எழுதுகிறேன்?

 

K._Ayyappa_Paniker_(1930_–_2006)

கே. அய்யப்பபணிக்கர்

தமிழில்- உதயசங்கர் 

எதை வைத்து எழுதுகிறாய்? என்று கேட்டால் “ பேனாவை வைத்துத் தான் “ என்று சொன்ன பைத்தியக்காரனை மறந்து விடுங்கள். பேனாவும் பென்சிலும் இல்லாமல் எழுதுகிறவர்களுடைய சிந்தனை பெருகி வருவதில்லையா? ஒரு வாக்கியத்தில் பதில் சொல்கிற கேள்வியல்ல எதற்காக எழுதுகிறாய்? என்ற கேள்வி. பலருக்கும் பல லட்சியங்கள் உள்ளன. லட்சியம் என்று ஒன்று தனியாக இல்லாதவையும் பார்க்கலாம். பணத்திற்காகவோ, கௌரவத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ, மக்கள் செல்வாக்குக்காகவோ, ஆத்ம திருப்திக்காகவோ, எழுதுகிறவர்கள் உள்ளனர். எழுதாமலிருக்க முடியாததினால் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றும் சிலர் சொல்ல முடியும். எல்லாப் படைப்புகளுக்கும் ஒரே லட்சியம் கிடையாது. ஒரே படைப்புக்கு பல லட்சியங்களூம் இருக்கலாம்.

எழுதுவதற்காகவே எழுதுகிறவர்கள் இருப்பது போல எழுதி முடிப்பது வரை எதற்காக எழுதுகிறோம் என்று தெரியாமல் எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். ‘ ஆத்மதிருப்தியோ அல்லது பிரச்சாரமோ,’ இதில் ஏதோ ஒன்று எழுத்தாளனின் லட்சியம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. உலகத்தைச் சீர்படுத்துவதற்காகவும் எழுதலாம். உலகத்தைச் சீரழிப்பதற்காகவும் எழுதலாம். சுயதிருப்தியைத் தவிர வேறு லட்சியமில்லாத எழுத்தாளர்களும் உண்டு. இது தான் என்னுடைய லட்சியம் என்று சொல்லிவிட்டதால் மட்டும் அது லட்சியமாக இருந்து விடாது. ஒன்றைச் சொல்லி விட்டு வேறொன்றைச் செய்வது எழுத்தாளர்களுக்கு வழக்கம் தான். இங்கே சொன்ன எல்லாவிதத்திலும் நான் எழுதியிருக்கிறேன் என்பதையும் சேர்த்துச் சொன்னாலே இந்த சிந்தனையோட்டத்தை நிறுத்தமுடியும்.