Thursday 6 July 2017

இடாலோ கால்வினோ சிறுகதைகள்

இடாலோ கால்வினோ
சிறுகதைகளைப் பற்றிய ஒரு சுருக்கமான மதிப்பீடு

தமிழில் - உதயசங்கர்

( இடாலோ கால்வினோ தலை சுற்றவைக்கும் குறிக்கோளைக் கொண்ட எழுத்தாளர்.  பலவகையான கதைகளை எழுதியுள்ள  அவருடைய ஒவ்வொரு கதையும் புனைவின் சாத்தியங்களுக்குள் நிகழ்த்தப்படும் ஒரு புதிய சாகசம்.)
1983 – ஆம் ஆண்டு இளவேனிற்காலத்து நியூயார்க் நகரத்தில் அவர் பேசும்போது,
“ நான் எழுதியுள்ள பெரும்பாலான புத்தகங்களும், இனி எழுதப்போகிற புத்தகங்களும் என்னால் அப்படி ஒரு புத்தகத்தை ஒரு போதும் எழுதமுடியாது என்ற எண்ணத்திலிருந்து உருவானவையே. எப்போது அப்படி ஒரு புத்தகம் எழுதுவது என்பது என்னுடைய உணர்திறன்களுக்கும் அல்லது செயல்திறன்களுக்கும் அப்பாற்பட்டது என்று எனக்குள்ளேயே முடிவு செய்கிறேனோ அப்போது நான் உட்கார்ந்து அந்தப்புத்தகத்தை எழுத ஆரம்பித்து விடுவேன்.”
என்று குறிப்பிடுகிறார்.
கால்வினோ பெரும்பாலான படைப்புகளைப்போலவே இந்த அறிவிப்பும் உடனடியான முரண்நகையாகவும் மிகத்தீவிரமானதாகவும் ஆனது. அந்த வாக்கியத்தை அவருடைய புத்தகப்பட்டியல் முழுமையாக நியாயப்படுத்தவும் செய்கிறது. 1940-களின் இறுதியிலிருந்து 61 வயதில் ஒப்பீட்டளவில் சீக்கிரமாக அவர் மரணமடைந்த 1985- வரை அவர் தனித்துவமிக்க பலதிறப்பட்ட படைப்புகளை நவீன காலத்தின் அனைத்து எழுத்தாளர்களைப்போலவே படைத்தவர். அதாவது இரண்டாவது உலக யுத்த காலத்திலும், யுத்தகாலத்திற்குப்பின்பும் நியோரியலிசக் கதைகளை எழுதியவர். ( இளம் கால்வினோ கலகக்காரராக இருந்திருக்கிறார். 1956 –ஆண்டில் ஹங்கேரியின் மீதான சோவியத்தின் படையெடுப்புக்கு கொஞ்சம் முன்புவரை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ) பழங்கதைகள், அரசியல் உருவக்கதைகள், வரலாற்று நாவல்கள், அறிவியல் கோட்பாடுகளால் உத்வேகம் பெற்ற கதைகள், சிந்தனைப்பரிசோதனைகள், பழைய காலச்சீட்டுக்கட்டைப்பயன்படுத்தி விவரணைகளை எழுதுதல், கம்ப்யூட்டரின் வழி விவரணைகளை எழுதுதல் என்று எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து பார்த்தவர். 1970 – களின் இரு முனைகளிலும், அவர் வெளியிட்ட புலப்படாத நகரங்கள், ( Invisible cities ) ஒருவேளை பனிக்கால இரவின் மீது ஒரு பயணி, ( If on a winters night a traveler ) என்ற இரண்டு நாவல்களும் ஃபேண்டசியைப் பயன்படுத்தி யதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிற மிகச்சிறந்த முன்மாதிரிகள் என்று சொல்லலாம். கட்டமைப்பு ரீதியாக இந்தப்புத்தகங்கள் அவருக்கு ஆரம்பத்தின் மீது இருக்கும் பெருவிருப்பும், முடிவின் மீது இருக்கும் நம்பிக்கையின்மையையும் காட்டுகிறது. இந்த நிலைமை தான் அவரை வழக்கமாக ஒரு ஆவேசநிலையிலிருந்து மற்றொன்றிற்கு அதாவது அடுத்து எழுதவே முடியாத ஒன்றை நோக்கிப்போகச்செய்கிறது. 1959 – ஆம் ஆண்டு எழுதிய அவருடைய “ இல்லாத படைவீரனின் இரங்கல் ( THE NONEXISTENT KNIGHT MOURNS ) என்ற நாவலில்  உணர்ச்சிக்கொந்தளிப்பை எப்படி அவநம்பிக்கை எதிர்நிலையில் சமன் செய்கிறது என்று கதைசொல்லியாக வெளிப்படுத்துவார்.
“ ஒருவர் ஒரு வித உற்சாகத்தோடு எழுத ஆரம்பிப்பார். ஆனால் ஒரு நேரத்தில் பேனா வெறுமனே தூசிபடிந்த மையோடு உராய்ந்து கொண்டிருக்கும். ஒரு சொட்டு வாழ்க்கைகூட காகிதத்தில் சிந்தாது. வாழ்க்கை வெளியே இருக்கும். ஜன்னலுக்கு வெளியே, ஒருவருக்கு வெளியே இருக்கும். அதைப்பார்க்கும் போது ஒருபோதும் ஒருவரால் எழுதிக்கொண்டிருக்கும் அந்தப்பக்கத்துக்குள் நுழைந்து இன்னொரு உலகத்தை திறந்தோ, இடைவெளியைத் தாண்டிக்குதித்தோ தப்பித்து விடமுடியாது. “
1940-களின் இறுதியில் கால்வினோ அவருடைய யுத்தகால அநுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான ஹெமிங்வேயக்கதைகளை  எழுதினார். எப்படியோ ஏற்கனவே சில கதைகளில் தேவதைக்கதைத்தன்மை புகுந்து விட்டிருந்தது. உதாரணத்திற்கு விலங்குக்காடு ( ANIMAL WOOD )  இந்தத்திசை வழியே தான் 1950-களில் அவருடைய படைப்புகள் இருந்தன. வாசகர்கள் எதிர்பார்த்திருந்த இத்தாலிய சமூகத்தின் நியோரியலிச நாவல் தோன்றவில்லை. பின்னால் அவர் விளக்கமளித்தார்:
“ நான் எந்தப்புத்தகத்தை எழுத வேண்டுமோ எந்தப்புத்தகத்தை என்னிடமிருந்து எதிர்பார்த்தார்களோ அதை எழுதுவதற்குப்பதில் நான் புத்தகத்தில் மாயஜாலம் செய்து கொண்டிருந்தேன். நானே வேறு ஒரு காலத்திலிருந்து வேறு ஒரு நாட்டிலிருந்து யாரோ ஒரு எழுத்தாளர் எழுதிய அந்த மாதிரியான புத்தகங்களை வாசிக்க, மேன்மையான ஒன்றை கண்டுபிடிக்க நினைத்திருந்தேன்..”
அந்தப்புத்தகம், வரலாற்று ஃபேண்டஸியான துர்க்குணப்பிரபு, ( THE CILOVEN VISCOUNT 1951) அதே மாதிரியான பாணியிலான இரண்டு புத்தகங்கள் மரங்களின் சீமான் ( THE BARON IN THE TREES ), இல்லாத வீரன் ( THE NONEXISTANT KNIGHT ) வெளிவந்தன. அதே காலகட்டத்தில் ( 1956) இத்தாலிய நாட்டுப்புற கதைகளை கால்வினோ தொகுத்துக்கொண்டிருந்தார். இத்தாலிய தீபகற்பத்திலுள்ள கதைகளைப் பற்றி கறாரான ஒரு மதிப்பீட்டுக்கு வருவதற்கான அறிவார்ந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்தத் திட்டம் அவருடைய விருப்பார்ந்த “ ஃபேண்டஸியாக வெடித்துக்கிளம்பும் யதார்த்தத்தின் சக்தி “ கருதுகோளை இறுக மூடிவிட்டது. அதற்குப்பின்னால் வந்த அவருடைய படைப்புகளில் சில விதிவிலக்குகளைத் தவிர  அபராதம்1963 கதை ( THE FINE 1963 STORY ) 1953 –ல் நடந்த தேர்தலைப்பற்றிய கதையான காவல்காரர் ( WATCHER ) அவர் முயற்சித்திருந்தார். அதன் பிறகு அவர் யதார்த்தவாதத்தை கைவிட்டுவிட்டார்.
1960-களிலிருந்து கால்வினோவின் எழுத்துமுறை அடிக்கடி வேறொரு வடிவத்தை அடைந்தது. அவருக்கும் வாசகனுக்கும் இடையில் அல்லது அவருக்கும் ஒரு கோட்பாட்டுக்கும் இடையிலான ஒரு விளையாட்டுபோல ஆனது. அதிசயத்தக்க வகையில் டி ஜீரோ மற்றும் இரவு ஓட்டுநர் ( 1967 ) ஆகிய கதைகளில் கதாபாத்திரங்களே இல்லாமலே கூட கதை சொல்லும் சுவாரசியத்தைத் தக்கவைக்க முடிந்தது. இந்தக்கதைகள் கால்வினோவை OULIPO குழுவுடன் அணி சேரவைத்தது. OULIPO பாரீசிலிருந்த ஒரு குழு. அதில் ரேமண்ட் க்யுனிவா, ஜார்ஜஸ் பெரெக் போன்றவர்கள் இருந்தார்கள். அவர்கள் கணிதத்திலிருந்த இறுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் இலக்கியத்தில் உள்ள சுதந்திரத்தையும் இருண்மையையும் ஊடுபாவச்செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் இந்தப்பயணங்களில் விருப்பமுள்ள பயணியாக இல்லை. என்றாலும் கோரே விடால் 1974-ல் எழுதிய ஒரு புகழ் பெற்ற கட்டுரையில்- நியுயார்க் ரிவ்யூ ஆப் புக்ஸ் ஆங்கிலம் பேசும் உலகில் வெற்றிகரமாக கால்வினோவை அறிமுகம் செய்திருந்தது. – அதிருப்தியுடன் “ டி ஜீரோ ஃபோர்ஹேவால் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கக்கூடும். இந்தப்போட்டி அவருக்கு ராப்பே-க்ரில்லெட்டை ஞாபகப்படுத்தினாலும் இதை பாராட்டுக்காகச் சொல்லவில்லை என்று தெளிவுபடுத்திருப்பார்.
அந்தக்கதைகள் அவருடைய காஸ்மிகாமிக்ஸ் தொகுப்பில் வெளிவந்தன. அந்ததொடர் 1964-க்கும் 1968-க்கும் இடையில் எழுதப்பட்ட கால்வினோவின் மிகச்சிறந்த படைப்புகள். பின்னால் அந்தத் தொகுப்பில் 1980-களின் பின்பகுதியில் புதிதாகச் சிலவற்றை சேர்த்தாலும் ஆசிரியரே சொல்வதைப்போல அவையெல்லாம் பப்பாயி காமிக்ஸை எழுதிய லியோபார்டி, சாமுவல் பெக்கட், ஜியோர்டனோ புருனோ, லெவிஸ் கரோல், மாட்டாவின் சில ஓவியங்கள், லாண்டோல்ஃபி, இம்மானுவேல் காண்ட், ஃபோர்ஹே, ஆகியோரின் சில படைப்புகள், கிராண்ட்வில்லேயின் சித்திரங்கள் இவையெல்லாவற்றுக்கும் கடன்பட்டிருக்கிறது. பெரும்பாலும் உச்சரிக்க முடியாத பெயருடைய  Qfwfq கூடுவிட்டு கூடு பாய்கிற கதாபாத்திரத்தால் கதை சொல்லப்படுகிறது. ( எனக்கு ராபெர்ட் கூவர்ஸினுடைய kwoofk –கோடு செல்வது மகிழ்ச்சியைத்தரும்.) ஒவ்வொரு கதையும் ஒரு அறிவியல் அறிக்கையைத் துவக்கமாகக் கொண்டிருக்கும். அதிலிருந்து புனைவின் வழியாக யதார்த்தம், கற்பனாவாதம், இருத்தலியல், வானியல், பூமியியல், பரிணாம உயிரியல், என்று Qfwfq பெரும்வெடிப்பு ( BIGBANG ) காலத்திலிருந்து சுற்றிக்கொண்டிருப்பான். அவனை நாம் ஆழ்வெளியின் கழிவுகளூடே, ஆதிமுன்னோர்களுடன், இனப்பெருக்க அலைக்குளத்தில், பூமியின் ஆழடுக்குகளில் பின் தொடர்ந்து கொண்டிருப்போம். மார்ட்டின் மெக்லாலின் குறிப்பிடுவதைப்போல கால்வினோவின் நிரந்தமான குறிக்கோள் என்பது இப்போது இருக்கும் இடத்திலிருந்து இலக்கியத்தின் குறிக்கோளை உயர்த்துவது தான். அவர் விளக்கமுடியாததை விளக்கும்படி இலக்கியத்துக்கு சவால் விட்டார். அண்டத்திலிருந்து பிண்டம், பெரும்வெடிப்பிலிருந்து அணுக்கள் உடைந்துபிரிவது வரை இலக்கியத்தில் கொண்டுவர விரும்பினார். இதற்காக அவர் பயன்படுத்திய மொழி அதிரடியானது. இறுக்கமான விவரணைகளின் வழி பிரபஞ்சத்தின் தோற்றக்கோட்பாடுகளான அண்டவியல் கொள்கையோடு நிரந்தரநிலை கொள்கையை இணைத்து எழுதினார்.
“ எங்கும் வெளி வளைந்தே இருக்கிறது. ஆனால் சில இடங்களில் மற்ற இடங்களை விட நன்றாக வளைந்திருக்கிறது. பைகளைப்போல, பாட்டில்கழுத்துவளைவு போல, பிறைகளைப்போல வளைந்திருக்கிறது. அங்கே சூனியம் நசுக்கப்படுகிறது. ஒவ்வொரு இருநூற்றைம்பது மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை இந்த பிறைவளைவுகள் இருக்கின்றன. அங்கே ஒரு மெல்லிய மணியோசை கேட்கும். உடனே பளபளக்கும் ஹைட்ரஜன் அணு உருவாகும். முத்துச்சிப்பிகளின் ஓடுகளுக்கிடையில் முத்து உருவாவதைப்போல..”
நான் அறிந்தவரையில் மற்ற எழுத்தாளர்களை விட கால்வினோவின் கதையை வாசிக்கத்தொடங்குவது என்பது யாருமறியாத பூமியை நோக்கிப் பயணம் மேற்கொள்வதைப் போலாகும். அதில் எதிர்பார்ப்பின் ஆனந்தத்தை கால்வினோ உள்பொதிந்து வைத்திருப்பார்.ஆனால் அதே நேரத்தில் அவருடைய படைப்பில் சோகமும், கூடிக்கொண்டே வரும் அவநம்பிக்கையும் சாரமாக இருக்கும். உலகத்தின் முடிவைப்பற்றிய சித்திரங்களை ஒரு ஆவேசவெறியுடன் தொடர்ந்து சித்தரிப்பதை அவரது படைப்புகளில் பார்க்கலாம். ஏன் அவரது படைப்புகளில் மிகக்குறைந்த முக்கியத்துவத்துடனே பயங்கரம் இடம் பெற்றிருக்கும். இதற்கு நல்ல உதாரணமாக அர்ஜெண்டைனா எறும்பு ( 1953 ) என்ற் கதையில் ஒரு கணவன், மனைவி, குழந்தை, ஒரு புதிய கிராமத்துக்கு ஒரு புதிய வாழ்வைத் தொடங்குவதற்கு மிகுந்த நம்பிக்கையோடு ( இது தான் கால்வினோவின் நிரந்தரக்கரு ) செல்வார்கள். ஆனால் அங்கே வீடுகள், ஏன் அந்தப்பிரதேசம் முழுவதும் எறும்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். உண்மையில் இந்தக்கதை கோரே விடால் சொல்வதைப்போல, அச்சுறுத்துகிற, விசித்திரமான காஃப்கா எழுதுவதைப் போன்ற ஒன்று. அது காற்றில் பயத்தையும் மர்மத்தையும் நேரடியான அலங்காரமற்ற மொழியில் கட்டி எழுப்புகிறது. காஃப்காவைப் பற்றி கால்வினோவின் குறிப்பான ” வெளிப்படையான மொழியைப் ஒரு உருவெளித்தோற்றம் உருவாகும் வரை பயன்படுத்திக்கொண்டேயிருப்பது.” என்று சொல்லலாம்.
” என்னுடைய ஆசான் காஃப்கா “  என்று ஒரு நேர்காணலில் கால்வினோவின் மீது தாக்கம் செலுத்தியவர்களைப் பற்றி கேட்டபோது கால்வினோ சொன்னார். காஃப்காவின் இருப்பு கால்வினோவின் படைப்புகளில் எல்லாம் இருந்தது. அர்ஜெண்டைனா எறும்பு தொடங்கி 1984-ல் எழுதிய உருக்குலைதல் ( IMPLOSION) வரை எல்லாக்கதைகளிலும் காஃப்காவின் தாக்கம் இருக்கிறது. அடக்கம் கதையில் கால்வினோ இலக்கியத்தின் மிக முக்கியமான உள்முகச்சிந்தனைக் கதாபாத்திரங்களான தண்டனைபெற்ற ஹேம்லட்டையும், ( அந்தக்கதை “ வெடித்துச்சிதறு அல்லது உருக்குலைந்து போ “ இது தான் இப்போது கேள்வி என்று Qfwfq சொல்கிறான். )  காஃப்காவின் வளை என்ற கதையில் வருகிற மூஞ்சூறு போன்ற உயிரினத்தையும் அழகாக, இணைத்து கருந்துளைகளைப் பற்றி பிரபஞ்சத்தின் மரணத்தைப் பற்றி ஆழ்ந்த சோகமான சிந்தனைகளை எழுதுகிறார். அழிவைப் பற்றி ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஒளிந்திருக்கும் அந்தப்பயம்:
“ நிச்சயமில்லாத எல்லைகளைக் கொண்ட பிரபஞ்சத்தில் அநுமானமான அரைகுறை விண்பொருட்களின் பொறுப்பற்ற நடவடிக்கையை நீங்களாக அதியற்புத கற்பனை செய்து திசை திரும்பாதீர்கள். இங்கே உங்கள் கவனத்தை பால்வெளியின் மையத்தை நோக்கித் திருப்புங்கள். நம்முடைய எல்லாகணக்குகளும், சாதனங்களும் பிரபஞ்சத்தின் உள்ளே கண்ணுக்குத்தெரியாத ஒரு பெரிய உட்கரு இருப்பதைச் சொல்கின்றன. கதிரியக்கத்தின் வலைகளும், வாயுக்களும் கடைசியாக உருக்குலைந்த காலத்திலிருந்தே அங்கே  சிறைப்பட்டிருக்கின்றன. அவைகள் எதைக்காட்டுகிறதென்றால், மையத்தில் இருக்கும் காலியான துளைகள்  ஒரு பழைய எரிந்தடங்கிய எரிமலையாக இருக்கலாம். சுற்றியிருப்பதெல்லாம் கிரகங்களின் வட்ட ஒழுங்கு, நட்சத்திரக்கூட்டம், பால்வெளியின் துணைநிலைகள். நமது பால்வீதியில் உருக்குலைதலின் மையம் தனக்குள் மூழ்கிக்  கொள்வதிலேயே இருக்கிறது.”
கடைசி காஸ்மிகாமிக்ஸின் இறுதி வரி,இது “ நான் என்னுடைய மூஞ்சுறு வளையில்  தோண்டிக்கொண்டே இருப்பேன்”  காஃப்காவின் வளை என்ற கதையோடு ஒரு உறவை ஏற்படுத்துகிறது. காஃப்கா அந்தக்கதையை முடிக்காமலேயே இறந்து போனார் அல்லது அப்படித் தெரிகிறது. கையெழுத்துப்பிரதியின் கடைசிப்பக்கம் முழுவதும் நிறுத்தல் குறியே இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறது என்ன பொருத்தம்! கால்வினோ தன்னுடைய கடைசிக்கதைகளில் ஒன்றான துணுக்குகளின் தொகுப்பு அது தான் என்னுடைய எழுத்து. அப்படித்தான் அவர் அழைத்தார். அந்தக்கதை முடியவில்லை. நின்று விட்டது. கால்வினோவின் வாழ்க்கையும் கூட ஒரு முடிவுக்கு வந்து சேரவில்லை. மூளையிலுள்ள ரத்தக்குழாய் வெடிப்பினால் திடீரென உடைந்து போய்விட்டது; அடுத்த சாத்தியமில்லாத புத்தகம் இன்னும் எழுதப்படாமல் காத்துக்கொண்டிருக்கிறது.

நன்றி - உன்னதம்








No comments:

Post a Comment