எப்போதும் செய்திகளைத் தின்று
கொண்டிருந்தவனைப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?
விபத்தில் சிதைந்தவர்களை
பரிதாபத்துடன் தின்றான்
கள்ளக்காதல் வன்மக்கொலையை
பொசுங்கும் காமநாற்றத்துடன் தின்றான்
கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமியை
அழுதுகொண்டே தின்றான்
மித்ரதுரோகக் கொலையை
நொறுக்குத்தீனியாகத் தின்றான்
அரசுக்கொலைகளை அச்சத்துடன் தின்றான்
காதல் கொலைகளைக் கனிவுடன் தின்றான்
கருணைக்கொலைகளை காணாமல் விட்டான்
சொத்துக் கொலைகளை அருவெறுப்புடன் தின்றான்
பொழித்தாவா கொலைகளை
சீ..தூ..வெனத் தின்றான்
உரிமைப்போரில் நிகழ்ந்த கொலைகளை
கோபத்துடன் தின்றான்
அகதிக்கொலைகளை சாபமிட்டுக்கொண்டே தின்றான்
கொலைகளைத் தின்று கொலைகளைத் தின்று
அஜீரணமானது மூளை
கொலைகளால் மலிந்த உலகினை மாற்ற
செய்வதென்ன என்று யோசித்தது
ஐஸ்கிரீம் பார்லரில் சென்றமர்ந்து
கனவு கண்டது ஒரு பொன்னுலகம்
பிறக்கப் போவதாக.