Sunday 19 October 2014

கவிஞர்களின் கவிஞர் பிரமிள்

piramil உதயசங்கர்

நவீன தமிழ் இல க்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை தருமு சிவராமு என்ற பிரமிள்.ஆவார். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்த பட்சத்தை எட்டியுள்ளது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமையானவராக இருந்தார். இவரது ஆன்மீக ஈடுபாடு இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. படிமக்கவிஞர் என்று சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம் இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க்கவிதை வரலாற்றில் தனித்துவம் மிக்கதாகும்.

பழங்கவிதைகளில் உருவம், உருவகம், உவமை, எதுகை, மோனை, என்ற அலகுகளைப் போல நவீன கவிதைகளில் படிமம் என்பது கவிதையில் சொல்ல வருகிற பொருளை பன்முகத்தோற்றத்துடன் வாசகனின் சிந்தனைகளைத் தூண்டி விடவும், அவனுக்கு, கவித்துவ இன்பளிக்கவும் படைக்கப்படுகிறது. அப்படி நவீன கவிதைகளில் படிமத்தை பிரமிள் பயன்படுத்திய அளவுக்கு வேறெந்த கவிஞரும் பயன்படுத்தியதில்லை என்று உறுதியாகக் கூற முடியும். ஒரு விடியலைப் பற்றி எப்படியெல்லாம் கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்.

விடிவு

பூமித்தோலில்

அழகுத்தேமல்

பரிதி புணர்ந்து

படரும் விந்து

கதிர்கள் கமழ்ந்து

விரியும் பூ

இருளின் சிறகை

தின்னும் கிருமி

வெளிச்சச் சிறகில்

மிதக்கும் குருவி.

அதே போல மின்னலை அவர் படிமமாக்கி மகிழ்வதைப் பாருங்கள்.

மின்னல்

ககனப்பறவை

நீட்டும் அலகு

கதிரோன் நிலத்தில்

எறியும் பார்வை

கடலுள் வழியும்

அமிர்தத்தாரை

கடவுள் ஊன்றும்

செங்கோல்.

அடடா என்ன அழகாய் படிமங்களை அடுக்குகிறார் கவிஞர். எல்லாக்கலைகளும், தத்துவங்களும், மனித வாழ்வின் அர்த்தத்தையே தேடி ஆராய்கின்றன. இந்த வாழ்வெனும் பெருங்கடலில் மிதக்கும் சிறு துரும்பான நான் யார்? எதற்காக இந்த புவியில் பிறந்தேன்? நான் பிறந்ததற்கு ஏதேனும் அர்த்தம் உண்டா? என்று சாதாரண மனிதர்களிலிருந்து ஞானிகள் வரை கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தக் கேள்விகளைப் பின் தொடர்ந்து போகிறவர்கள் அவரவர் கண்ட ரகசியங்களை சமூகத்திடம் பகிர்ந்து கொள்கிறார்கள். பிரமிளுக்கும் அந்தத் தேடல் தீவிரமாக இருந்திருக்கிறது.

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின்

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது.

என்ற கவிதையிலாகட்டும்,

குமிழிகள்

இன்னும் உடையாத ஒரு

நீர்க்குமிழி

நதியில் ஜீவிக்க

நழுவுகிறது

கைப்பிடியளவுக் கடலாய்

இதழ்விரிய

உடைகிறது

மலர்மொக்கு.

வாழ்வின் இறுதி நிகழ்வான மரணத்தைப் பற்றிய கவிதையிலும் சரி வாழ்க்கை பற்றிய இவருடைய விசாரம் வாழ்வின் மீதான நம்பிக்கையை, பிடிப்பை நமக்குத் தெரிவிக்கிறது.

இறப்பு

சிறிதில் பெரிதின் பளு

பாழின் இருளைத் தொட்டுன்

நுதலில் இட்ட பொட்டு

பார்வைக் கயிறு அறுந்து

இமையுள் மோதும் குருடு

ஒன்றும் ஏதுமின்றி

இன்மை நிலவி விரிதல்

வண்டியை விழுங்கும் பாலம்

மஞ்சம் கழித்த பஞ்சு

கூட்டை அழிக்கும் புயல்

புயலில் தவிக்கும் புள்

வாழ்வின் சூழலைத் துறந்து

என்றோ இழந்த வாசக்காற்றுள்

வீழும் ரோஜா

துணியே நைந்து இழையாய்

பஞ்சாய் பருத்தித் திரளாய்

பின்னே திருகும் செய்தி

காற்றை விழுங்கும் சுடர்

சுடரை உறிஞ்சும் திரி

வினையில் விளைவின் விடிவு

விளையாவிடிவின் முடிவு

தொடங்காக் கதையின் இறுதி

நிறுத்தப்புள்ளிகளிடையே

அச்சுப்பிழைத்து

அழித்த வசனம்

வெறும் வெண் தாள் சூன்யம்.

கற்பனையின் எல்லையிலிருந்து காட்சி ரூபங்களை படைத்து அதில் வாழ்வின் அநுபவச்சாற்றைப் பிழிந்து சூத்திரம் போல் கவிதை படைக்கும் பிரமிள் கவிஞர்களின் கவிஞர் என்பதில் வியப்பேது?

நன்றி-அகில இந்திய வானொலி நிலையம்

5 comments:

  1. பிரமிளின் படிமங்களுக்கு நானும் ரசிகன்;உங்கள் அடுத்த தொகுப்பை வாசிக்க ஆவல்

    ReplyDelete
  2. கவிஞர் பிரமிள் பற்றி அறிந்தேன் ஐயா நன்றி

    ReplyDelete