Sunday, 5 October 2025

ச்ச்சேய் ஒரே தூசி!

 

ச்ச்சேய் ஒரே தூசி!

உதயசங்கர்




அனகாவுக்குத் தூசியே பிடிக்காது. தூசியைத் தவிர இந்தியாவில் மற்ற எல்லாமும் பிடிக்கும். அவள் வெளிநாட்டிலிருந்தாள். ஆண்டுக்கு ஒரு முறை இந்தியாவுக்கு வருவாள். தமிழ்நாட்டிலிருக்கும் புன்னைவனம் கிராமத்துத்தாத்தா வீட்டுக்கு வருவாள். பதினைந்து நாட்கள் இருப்பாள். அவள் எச்சரிக்கையாகத்தான் இருப்பாள். ஆனாலும் வந்த இரண்டு நாட்களில் தூசியினால் ஒவ்வாமை ஏற்பட்டு விடும். உடனே நீர்க்கோர்வை வந்து தும்மிக்கொண்டே இருப்பாள்

.“ தாத்தா ஏன் தான் இங்கே மட்டும் இவ்வளவு தூசி? அழுக்கு.. குப்பை..

தாத்தா உடனே பதில் சொல்லமாட்டார். சிரித்துக் கொண்டே இருப்பார். அனகாவுக்குக் கோபம் வரும். இந்த நாட்டில் இருக்கும் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

அனகாவுக்காக வீட்டைச் சுத்தம் செய்வார் தாத்தா. ஆச்சி ஒட்டடைக்குச்சியால்  நூலாம்படை எல்லாம் எடுப்பார். சிலந்திப்பூச்சிகள் அங்கும் இங்கும் ஓடும். வீட்டைச்சுற்றிக்கிடக்கும் குப்பைகளை ஓரமாய்க் கொட்டுவார். மாட்டுச்சாணம் போட்டு வைக்கும் உரக்குழியை பெரிய தென்னைந்தட்டியினால் மூடி வைப்பார்.

இவ்வளவும் செய்தாலும் அனகாவுக்கு தூசியும் குப்பையும் கண்ணில் பட்டு விடும். அனகா ஒவ்வொரு முறையும்,

தாத்தா அடுத்த வருடம் நான் வரமாட்டேன்.. இவ்வளவு தூசியும் குப்பையும் எனக்கு அலர்ஜியாக இருக்கு..

என்று சொன்னதும் தாத்தாவும் ஆச்சியும் வருத்தப்படுவார்கள். ஒவ்வொருவருடமும் அனகாவின் வருகைக்காகத் தான் அவர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். ஆச்சி தூதுவளை, தும்பை, துளசி, எல்லாம் போட்டு கஷாயம் வைத்துக் கொடுப்பாள். வேப்பிலையை அரைத்து குட்டி உருண்டை பிடித்து விழுங்கச்சொல்லி கருப்பட்டியைக் கொடுத்துச் சாப்பிடச்சொல்வாள்.

இந்தக் கைப்பக்குவத்தில் அவளுக்குச் சரியாகிவிடும். ஆனால் அனகாவுக்கு குப்பையையோ, தூசியை பார்த்து விட்டால் போதும் உடனே தும்மல் வந்து விடும்.

வீட்டினுள்ளே புத்தகம் படித்துக் கொண்டு படுத்திருந்தாள். ஓட்டுச்சாய்ப்பு வீடு சிறு சிறு துவாரங்களின் வழியே சூரியனின் ஒளி வட்டமாகவும் சதுரமாகவும் தரையில் விழுந்தது. சூரியன் நகர நகர அந்த ஒளிச்சில்லுகளும் தரையில் நகர்ந்து கொண்டே வந்தன.

திடீரென அனகா படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் மீது ஒரு ஒளிச்சில்லு விழுந்தது. அனகா அதைப் பார்த்தாள். உயரே இருந்து கீழே வரை ஒரு ஒளிக்குழாய் மாதிரி தெரிந்தது. அந்த ஒளிக்குழாய் முழுவதும் தூசிகள். அப்படியே அங்கும் இங்கும் நடனம் ஆடிக் கொண்டும் பாய்ந்து கொண்டும் இருந்தன.

அனகாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தக்காட்சியை இப்போது தான் பார்க்கிறாள். அந்தத் தூசிகளில் ஒரு சின்னஞ்சிறு தூசி,

அனகா..என்று அழைத்தது.

அனகாவுக்கு ஆச்சரியம். இதுவரை கதைகளில் காக்கா, நரி, புலி, கிளி இப்படி விலங்குகள் பறவைகள் பேசிப் படித்திருக்கிறாள். ஆனால் இங்கே தூசி பேசுகிறதே.

அனகா உனக்குத் தூசி, அழுக்கு, குப்பை பிடிக்காதாமே.. ஆனால் ஒரு விசயம் தெரியுமா? “

என்ன சொல்லேன்..

 ” 484 கோடி ஆண்டுகளுக்கு முன்னால்  சூரியனிலிருந்து நெருப்புக்கோளமாய் பூமி உடைந்து சிதறியபோது தூசி மட்டும் தான் இருந்தது

ஐயே நான் இதை நம்பணுமாக்கும்.. “

சரி உலகத்தின் முதல் உயிர் எது தெரியுமா? “

நீ என்ன டீச்சரா? கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கே..

சும்மா சொல்லு கண்ணு..

பச்சைப்பாசி.. அதுக்குப்பேரு கூட சைனாவோ என்னவோ..

சையனோஸ்.. அந்த உயிர் உருவாவதற்குக் காரணம் யார் தெரியும? “

தெரியுமே.. நீ தான்னு சொல்லப்போறே..

அந்தத் தூசியில் உருவான சையனோஸிலிருந்து தான் மனிதன் உருவானான்னு சொன்னால் உனக்குக் கோபம் வருமே..என்று சொல்லித் தூசி சிரித்தது.

அப்ப என்னை தூசின்னு சொல்றியா? “ என்று கோபத்துடன் கேட்டாள் அனகா... மறுபடியும் விழுந்து விழுந்து சிரித்தது தூசி.

அனகா எழுந்து வெளியே தோட்டத்துப்பக்கம் போனாள். பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனாள். அந்தத் தூசியும் அவளுக்குப் பின்னால் பறந்தது.

  அனகா தூசி இல்லைன்னாமழை இல்லைதூசிகள் தான் நீராவியை நிறுத்தி குளிர வைக்கிறது.. குளிர்ந்த நீராவியை மேகமாகச் சேர்த்து வைக்கிறது..

இப்போது .அனகாவுக்குக் கொஞ்சம் கோபம் குறைந்திருந்தது. அக்கறையோடு தூசியைக் கவனித்தாள். தூசி குட்டிக்கரணம் போட்டு விசிலடித்தது. அவளும் விசிலடித்தாள். தூசி அவளுடைய   மூக்கின் மீது உட்கார்ந்தது. அனகாவுக்குத் தான் தூசி ஆகாதே.

அச்சூ.. அச்சூ..என்று இரண்டு தும்மல் போட்டாள். தூசி உடனே பறந்து விட்டது.

பார்த்தியா எனக்கு தூசியே பிடிக்காது..உடனே தும்மல் வந்துரும்..

சரி சரி.. நான் பக்கத்துல வரலை.. சூரியனுடைய் வெளிச்சம் தரைக்கு வருவதற்கு நான் உதவி செய்றேன்.. அது மட்டுமல்ல உங்களுக்குப் பிடித்த ஏழு வண்ண வானவில் நாங்க இல்லைன்னா தெரியாது.. “

அனகா தூசி சொல்வதைக் கண்களை விரித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள். இப்போது அவளுக்குத் தூசி மீது அன்பு தோன்றியது. அவளுடைய கற்பனையில் ஒரு தூசியிலிருந்து மனிதன் உருவாகிற காட்சி தோன்றியது. ஆகா! என்ன அற்புதம். அனகா திரும்பிப் பார்த்தாள்.

தூசி காற்றில் நடனம் ஆடிக் கொண்டிருந்தது. அனகாவும் நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். தூசியை விரலில் ஏந்தினாள்.

மிக்க நன்றி என பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டியே.. உனக்கு என வணக்கம்..

என்றாள் அனகா.

சிரித்தது தூசி.

நன்றி - விஞ்ஞானத்துளிர்

 

 

No comments:

Post a Comment