Tuesday 19 November 2019

ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்

ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்


தமிழில் குழந்தை ப்படைப்பாளிகள் உருவாகவில்லையே என்ற கவலை நெடுநாளாக இருந்தது. மலையாளத்தில் புகழ்பெற்ற அபிமன்யுவின் கதைகளை மொழிபெயர்த்த போது குழந்தைகளின் மாய யதார்த்த உலகத்தில் பெரியவர்களின் வறண்ட யதார்த்தப்பார்வைகளுக்கும், இலக்கணம் வழுவாத கதைகளுக்கும் அறிவுரைகளுக்குமே கொஞ்சமும் இடமில்லை என்று தோன்றியது.
அபிமன்யு வின் கதைகளில் கலையின் வித்துகள் முளைவிடத் தொடங்கியிருந்தன.
குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று தோன்றியது.
நீண்ட காலத்துக்குப் பின்பு
பஞ்சு மிட்டாய் 9 ஆவது இதழில் வெளிவந்திருக்கிற நான்கு குழந்தைப்படைப்பாளிகளின் கதைகளைப் படித்தவுடன்
அபிமன்யுவைப் படிக்கும்போது ஏற்பட்ட பரவச உணர்வு ஏற்பட்டது.
குழந்தைகளின் கட்டற்ற கற்பனைத்திறன் எப்படி யெல்லாம் ஒரு புனைவை உருவாக்குகிறது என்று வாசிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
தமிழிலும் அசலான குழந்தைப்படைப்பாளிகள் உருவாகி விட்டார்கள் என்று பெருமிதம் தோன்றியது.
1. ஆலமரமும் குயிலும்- ரியா
சூரியன் மரங்களிடம் அவர்களுடைய ஆசைகளைக் கேட்பதற்கு  குயிலை தூது அனுப்புகிறது. இந்தக்கதை முடிய வில்லை. ஆனால் கதையின் முடிவில் பல ஆயிரம் கதைகளை எழுதுவதற்கான கலையின் முடிவின்மை தரிசனம் தருகிறது.
2. தூரத்துல பெரிய காட்டுல - இசை
காட்டில் பசி வந்தால் நரி என்ன செய்யும்?
குட்டி நத்தை, குட்டி ஆமை, குட்டி யானை, இவர்கள் உணவு இருக்குமிடத்தைச் சொல்கிறார்கள். குட்டிவீட்டில் இருக்கும் உணவைச் சாப்பிடுகிறது நரி. கவனியுங்கள்! இந்தக் கதையில் எல்லாமே குட்டியாக இருக்கிறது. நரியின் பயணம் பெரிய காட்டில் நடக்கிறது. நரியை யாரும் வஞ்சிக்கவில்லை. நரியும் யாரையும் வஞ்சிக்கவில்லை. நரியை தந்திரமான மிருகம் என்று யாரும் ஒதுக்கவில்லை. நரியும் தந்திரங்களென்று எதையும் செய்வதில்லை.
 நரிக்குப் பசிக்கிறது. எல்லோரும் வழி சொல்கிறார்கள். குழந்தைமையின் களங்கமற்ற பரிசுத்தமான மனமே இந்தக்கதையில் துலங்குகிறது.
பசியினால் வாடும் நரி என் அன்புக்குரியதாகி விட்டது. இதைவிட கலை வேறு என்ன செய்ய வேண்டும்?

3.நாயின் மகிழ்ச்சி- ஸ்ரீநிதி
நம்மைச் சுற்றியிருக்கும் யதார்த்த உலகத்தை கண்ணாடி என்ற படிமமாக்கி நாய் என்ற கதாபாத்திரத்தின் வழியே சமூகத்தின் குணாதிசயத்தைச் சொல்லியிருக்கும் விதம் ஆச்சரியமூட்டுகிறது. ஏழு வயது குழந்தையின் மனதில் எப்படி இப்படி படிமங்கள் தோன்றுகின்றன?
கண்ணாடி வெறும் கண்ணாடி மட்டுமல்ல. நாய் வெறும் நாயல்ல. வாசிக்க வாசிக்க எத்தனையோ படிமங்கள் உங்களை அழைத்துக் கொண்டிருக்கும். என்ன ஆச்சரியம்?

4. யாரு தைச்ச சட்டை- ரமணி
குழந்தைகளின் உலகத்தில் பறவைகளின் நாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி தான் கதை.
இந்தக் கதையின் அதிசயமே பறவைகளின் பெயர்களை எழுதியுள்ள விதம், எந்தப் பறவை தையல் தைக்கும் என்ற ஞானம், கதையின் முடிவு.
கதை எளிய பறவையான தையல்சிட்டு செய்த உதவிக்கு இன்னும் பரிசுகள் கிடைக்கவில்லை. அதோடு இன்னமும் அது உழைத்துக் கொண்டிருக்கிறது. பரிசு கொடுக்க ராஜா மறந்து விட்டார். எந்த ராஜா தான் ஞாபகத்தில் வைத்திருப்பார்? எல்லோரும் மறதிக்காரர்கள் தானே. அவரிடம் யார் ஞாபகப்படுத்துவார்கள்?
கதை நிகழ்காலத்தில் நடக்கிறது. கதை இன்னும் முடியவில்லை. வாசிக்கிறவர்களுக்கு ஏராளமான  திறப்புகளைத் தரக்கூடிய கதை.
சமூகப்பார்வையில், சொந்தப்பார்வையில் என்று வாசிப்பு முறைகளை மாற்றினால் வேறு வேறு அர்த்தங்களைத் தரும் கதை.

என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

எங்கே இருந்தார்கள் இந்தக்குழந்தைகள்?
எப்படி எழுதினார்கள்?
மேலே சொன்ன கருத்துகளையெல்லாம் குழந்தைகள் யோசித்து எழுதினார்களா என்று கேட்டால் இல்லை என்பார்கள்.
கலையின் மகத்துவமே அதன் முடிவின்மை தான். அந்த முடிவின்மையின் ஒரு துளி இந்தப் படைப்பாளிகளிடம் இருக்கிறது.
குழந்தைகள் பிரபஞ்சத்தின் மழைத்துளிகள். அதன் பரிசுத்தம் அவர்களுடைய மனதில் என்றென்றும் இருக்கிறது. நாம் தொலைத்த குழந்தைமையின் கல்லறையிலிருந்து முகிழ்த்த பூக்கள். பூக்களுக்கு மணம் வீச
மட்டும்தான் தெரியும்.
ஒரு தீவிர அர்ப்பணிப்புணர்வோடு பஞ்சு மிட்டாய் இதழை கொண்டுவரும் ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துகள்!
ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்!

No comments:

Post a Comment