Sunday, 7 July 2024

மக்சீம் கார்க்கியின் மீசை

 

மக்சீம் கார்க்கியின் மீசை

 உதயசங்கர்




எனக்கு மக்சிம் கார்க்கியின் தாய் நாவலை தோழர்.பாலு தான் கொடுத்துப் படிக்கச்சொன்னார்.. முதன் முதலாக கார்க்கியைப் பார்த்தபோது வார்வாரான மீசை, கலைந்த கோரை கோரையான தலைமுடி, அகன்று விரிந்த மூக்கு என்று அப்படியே எங்கள் தெருவிலிருந்த சாமியாடி காசிக்கொத்தனாரைப் போலவேயிருந்தார். இப்போதும் கார்க்கியை யோசிக்கும்போதெல்லாம் காசித்தாத்தாவின் ஞாபகம் தான் வருகிறது

 

கடுமையான உழைப்பாளியான காசித்தாத்தா மாதாங்கோவில் என்றழைக்கப்பட்ட அங்காளபரமேஸ்வரி கோவிலின் தலைமைச் சாமியாடி. எல்லாச்சாமிகளும் அவர் மீது வந்து இறங்கிவிடுவார்கள். இல்லையென்றால் நாக்கைத்துருத்தி, சிவந்த கண்களையுருட்டிஅவர்களை மிரட்டி விடுவார். அவருக்குப் பயந்து அவர்களும் அவரிடம் தஞ்சமடைந்து விடுவார்கள்.

 

நாக்கைத்துருத்தி ஆடினால் ஒரு சாமி. பல்லைக்கடித்தால் ஒருசாமி, மூச்சுவாங்கினால் ஒருசாமி, ஒரு காலால் நொண்டியடித்தால் ஒருசாமி என்று சாமிகளை ஒரு கை பார்த்து விடுவார். புதிய இளஞ்சாமியாடிகளுக்கு அவரே வழிகாட்டியாக இருந்தார். அதனால் அவருடைய இளவல்களுக்கு எப்படியோ ஒருவிதத்தில் அவருடைய ஆட்டத்தின் சாயல் வந்து விடும்.

 

 சன்னதத்தின் உச்சத்தில் அவர் வேறொருவராக மாறி ஏழை எளிய மக்களுக்கு வரமும், பரிகாரமும், யோசனைகளையும், ஆற்றுப்படுத்தல்களையும் செய்வார். அவர்தான் கார்க்கியாக ஞாபகத்துக்கு வருவார்

 

கோவில்பட்டியில் என்றில்லை உலகம் முழுவதும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இடதுசாரி இயக்கங்களை நோக்கி வந்துவிட்டால் அவர்களிடம் அனைத்துத் தோழர்களும்  பரிந்துரைக்கக் கூடிய ஒரு புத்தகம். தவறாமல் கேட்கக்கூடிய கேள்வி.

 

" தாய் படிச்சிட்டீங்களா தோழா"  . 

 

உலக மொழிகளனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டதும், இன்றும் தொழிலாளிவர்க்கத்தின் ஆவேசமான உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பிரதிபலிப்பதும், சோசலிச இலக்கியத்தின் கலங்கரை விளக்காகமாகவும் தாய் நாவல் திகழ்கிறது. சுரண்டல் இருக்கும்வரை தாய் நாவலும் தன்னிகரில்லா ஒளிவீசி உணர்வூட்டும்.

 

ஆனால் கார்க்கி என்றாலே தாய் என்ற  அரசியல் நாவல் மட்டும்தான் என்று  புரிந்து கொண்டார்களோ  என்று தோன்றுகிறது.

 

அவருடைய மகத்தான மற்ற படைப்புகளைப் பற்றி  அறியவில்லையோ என்று அஞ்சுகிறேன்

 

 கார்க்கி  எனும் மகத்தான மேதையின் பல படைப்புகள் புதிதாக எழுதுகிறவர்களுக்கான கலங்கரை வெளிச்சம் என்று சொல்லலாம்

 

 எதார்த்த வாதம் விமர்சன யதார்த்த வாதம் சோசலிச யதார்த்த வாதம் என்று அனைத்து வகைகளிலும் உச்சம் தொட்டவர் மாக்சீம் கார்க்கி.

 

என்னிடம் இந்தப் புத்தகம் எப்படி வந்ததென்று தெரியவில்லை. மக்ஸீம் கார்க்கி தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் 3 என்று போட்டிருப்பதால் ஏற்கனவே இரண்டு தொகுப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் அவற்றைப் படித்த ஞாபகமில்லை.

 

 கார்க்கி மற்ற ருஷ்ய, சோவியத் எழுத்தாளர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர். அவர் இழப்பதற்கு எதுவுமில்லாத பாட்டாளிவர்க்கத்திலிருந்து புறப்பட்ட சம்மட்டியென்று கூடச் சொல்லலாம். டால்ஸ்டாய், துர்கனேவ், தாஸ்தயேவ்ஸ்கி, செகாவ் போன்ற மேதைகளின் கதைகளும் சரி, கதை மாந்தர்களும் சரி பெரும்பாலும் மேல் தட்டு, மேல்  மத்தியதர, மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் கார்க்கியின் கதைகளில் அச்சு அசல் பாட்டாளிவர்க்க மாந்தர்களைச் சந்திக்கமுடியும். அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? எப்படிச் சிந்திக்கிறார்கள்? எப்படி பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்? என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

கார்க்கியின் இருபத்தியாறுபேரும் ஒரு பெண்ணும் கதை ருஷ்யாவில் வெளிவந்தபோது டால்ஸ்டாய் அவரிடம் 

" பார் கார்க்கி உன்னுடைய தானியா முதல் முறை தரையில் நடக்கிறாள் அடுத்த முறை அடுப்பின் மீது நடந்து போகிறாள்.." என்று சொல்லிச் சிரித்தாராம். அதாவது முதல் முறை இடதுபுறம் இருப்பதாக வர்ணிக்கப்பட்ட  அடுப்பு இருந்த இடது பக்கமாக தானியா நடந்து வருவதாக எழுதிவிட்டார் கார்க்கி. அது உலகப்புகழ் பெற்ற கதை

பிஸ்கோத்து தயாரிக்கும் இருபத்தியாறு தொழிலாளர்களுக்கான ஒரே ஆறுதல் தானியா தான். ஆனால் அவர்களுடைய விபரீதம் என்ன மாதிரியான விளைவை தானியாவிடம் ஏற்படுத்தி விடுகிறது தெரியுமா?

" மனிதன் தன் அன்பை யார் மீதாவது செலுத்த எப்போதும் விரும்புகிறான். ஆனால் இந்த அன்பினால் சில வேளைகளில் அவன் நசுக்குகிறான், சில வேளைகளில் கறைப்படுத்துகிறான், தனது அன்பினால் வாழ்க்கையை நஞ்சாக்குகிறான். ஏனெனில் அன்பு செய்கையில் அன்புக்குரியதை அவன் மதிப்பதில்லை..."

தானியா என்ற அந்தச் சின்னஞ்சிறுபறவை வெக்கையால் அவிந்து புழுங்கி கோபமும் ஆவேசமும் பொங்கும் நிலவறையில் பிஸ்கோத்து தொழிலாளர்களின் வாழ்வில் ஆறுதலைத் தந்தது

இந்தக் கதை ஏன் உலகக்கதையாகப் போற்றப்பட்டது என்று வாசித்தால் தெரியும். மறக்க முடியாத கள்ளம் கபடில்லாத, சுதந்திரமான தானியாவின் கீச்சுக்குரல் உங்களுக்குன் ஆறுதல் தரும்.

 

பனிக்கட்டி நகர்கிறது கதையில் ஈஸ்டர் பண்டிகைக்காக ஆற்றைக்கடக்கும் மரம் வெட்டும் தொழிலாளர்களைப் பற்றியது. உயிரைப் பணயம் வைத்து அப்படிப் போவானேன் என்று கேட்கும் மத்தியதர வர்க்க மனநிலைக்கு அவர்களைப் புரிந்து கொள்வது கடினம் தான். வாழ்க்கை அவர்களுக்கு அவ்வளவு கொடுப்பினையாக இல்லை.

கதையை வாசிக்கும்போது நாமும் ஆற்றோடு போகிற உணர்வை ஏற்படுத்திவிடும்.

" வசந்தத்தை வரவேற்பதற்காக எத்தனை முறையும் நான் இங்கே இருப்பேன்.." 

ஓசிப் பெருமூச்சுடன் குறிப்பிட்டான்.

" ஆனா.. மனிதனிட ஆன்மா - ஆன்மாவுக்கு இறக்கைகள் உண்டு... அவன் தூங்குற போது ஆன்மா பறந்து போகுது.."

 

இறக்கைகள் உண்டா? எவ்வளவு அதிசயமானது?

 

அந்தத் தொழிலாளர்களுக்கு இறக்கைகள் முளைத்திருந்தன.

 

இருபத்தியாறுபேரும் ஒரு பெண்ணும் போலவே அற்புதமான கதை மனிதன் பிறந்தான்.

பஞ்சகாலத்தில் புலம்பெயர்ந்து கொண்டிருந்த கூட்டத்திலுள்ள பெண்ணுக்கு திருமணம் முடியாத ஒரு இளைஞன் நடத்தும் பேறுகாலம் தான் கதை.குழந்தை பிறந்ததும் மீண்டும் பயணம் தொடர்கிறது. மனிதன் மகத்தானவன் என்று ஏன் கார்க்கி சொன்னாரென்பதை இந்தக் கதை சொல்லும்.

 

அந்தத் தாய் சொல்கிறாள்

கடவுளே, என் ஆண்டவனே! எவ்வளவு நன்றாய் இருக்கிறது எங்கும், என்ன அழகு! இப்படியே எல்லாம் நடந்தேறினால் நல்லது, எல்லாம், உலகத்தின் எல்லை விளிம்புவரையில் நடந்தேறினால் நல்லது. இவன் என் மகன் வளரட்டும், கட்டில்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்து பெரியவன் ஆகட்டும். என் கண்ணின் கருமணி.."

கடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இடையறாது ஒலித்துக் கொண்டிருந்தது..

 

இது தான் கார்க்கி.

 

முதல் காதலைப் பற்றி எழுதாத ருஷ்ய சோவியத் எழுத்தாளர்களே கிடையாது போல. கார்க்கியும் முதல் காதலைப் பற்றி எழுதியிருக்கிறார். இளம்பருவக்காதலின் தூய்மையைத் தரிசிக்க முடியும்.

 

மனிதன் ஆற்றிய யாவற்றிலும் அறிவு மிக்க சாதனை நங்கையைக் காதலிக்கவும், அவளுடைய அழகை வழிபடவும், உள்ள திறமைதான். மாதின் மீது உண்டாகும் காதலிலிருந்தே உலகில் அழகியவை யாவும் தோன்றி உள்ளன..

 

என்று ஓரிடத்தில் சொல்வார் கார்க்கி. இதைவிட வேறென்ன வேண்டும்?

 

கார்க்கியெனும் மகத்தான படைப்பாளிக்கு எங்கள் முன்னோடிக்கு, புரட்சிக்கு உத்வேகமளித்த தாய் நாவலையெழுதிய புரட்சியின் சங்கநாதத்துக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்

 

கார்க்கி எங்கள் வழிகாட்டியே.. 





 

Wednesday, 17 May 2023

நிர்வாணக் குரல்கள் - சதத் ஹசன் மண்டோ







நிர்வாணக் குரல்கள்

சதத் ஹசன் மண்டோ

தமிழில் : உதயசங்கர்

பதிப்பகம் : நூல்வனம்
விலை : 220
பக்கங்கள் : 144
வகைமை :மொழிபெயர்ப்பு (சிறுகதை தொகுப்பு)
நூலுக்குள்..
எழுதுங்கள் என் கல்லறையில்
இங்கே கிடக்கிறான் சதத் ஹாசன் மண்டோ அவனுடன் சேர்ந்து சிறுகதைக் கலையின் அத்தனை மர்மங்களும் கலைத்திறன்களும் புதைக்கப்பட்டு விட்டன டன் கணக்கிலான மண்ணுக்கடியில் கிடக்கும் அவன் கடவுளை விட மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் அவன் தானோ என்று வியந்து கொண்டிருக்கிறான்...
இந்த வாசகத்தை இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் கூறிவிட்டு இன்று அந்த மாபெரும் உன்னத எழுத்தாளன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
ஆனால் அவன் எழுத்துக்கள் இன்றும் பாதிக்கப்பட்ட சமூகத்தால் வெறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சாமானிய மனிதர்களுக்கு நியாயம் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
இடதுசாரி ஆகவும் சோஸலிஸ்ட்டாகவும் முற்போக்கு வாதியாகவும் இருந்த மண்டோ எழுதிய முதல் கதை தமாஷா என்ற ஜாலியன் வாலாபாக் பற்றிய கதை.
சினிமாவிற்கு எழுதிய முதல் கதை தோல்வி. ஆனாலும் தொடர்ந்து சினிமாவிற்கு கதை எழுதினார். பத்திரிகைகளில் எழுதினார். 1940ல் முதல் தொகுப்பும் 1942ல் இரண்டாம் தொகுப்பு 1943 மூன்றாம் தொகுப்பு பிறகு வாழ்நாளில் இரு பெரும் இழப்புகள்.
அம்மாவையும் மூத்த மகனையும் இழந்தபின் அந்த இழப்பின் வலியை வாழ்நாள் முழுவதும் தூக்கி சுமந்தபடியே வாழ்ந்தார்.
நாடு கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் மண்டோ மனைவி குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்குப் போய்விட்டார்.
1948 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம் ஆண்டு வரை மிகத் தீவிரமான எழுத்தாளராக இயங்கினார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு கதை என்ற வீதத்தில் எழுதி இருக்கிறார்.
ஒரே கதையை வேறு வேறு மாதிரி எழுதியிருக்கிறார். ஒரே கதையின் முடிவுகளை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார். இப்படி புது புது யுக்திகளை தன்னுடைய கதைகளில் நுழைத்திருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே இருந்த பகைமை தீவிரமாக இருந்த காலத்தில் மிகுந்த மன உளைச்சலுடன் மனதின் உணர்ச்சிகளை தாங்க முடியாமல் அதீத குடியுடன் அலைக்கழிந்திருக்கிறார் மண்டோ.
குடி வெற்றி கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் மனநல மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்திருக்கிறார். உணர்ச்சியின் உக்கிரத்தை அவர் எழுதுவதின் மூலமே சமாதானப்படுத்தி இருக்கிறார். அதற்கு குடி தேவைப்பட்டிருக்கிறது.
அவரை சதாகாலமும் போலியான மனித சமூக மனிதர் இருந்த நாகரிகமான ஆடைகளுக்கு பின்னால் இருக்கும் அழுகிய புண்களின் வடிந்து கொண்டிருக்கும் சீல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.
அவருடைய கதைகளுக்கு நீதிமன்றத்தில் ஏறி இருக்கிறார்.
ஒருமுறை தண்டிக்கவும் பட்டிருக்கிறார். ஆனால் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் நடந்த இருண்ட காலத்தின் கதைகளை மட்டுமே மண்டோ பதிவு செய்திருக்கிறார்.
மண்டோவின் கதைகள் நுட்பங்கள் நிறைந்தது. இருளை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடியது.
ஆனால் அந்த வெளிச்சத்தில் இந்த உலகம் பைத்தியக்காரத்தனமாக தெரிந்தது.
எல்லா கதைகளும் துல்லியமான விவரங்களை நேர்த்தியான கதை சொலலுடன் அழுத்தமான கதாபாத்திரங்களுடன் எழுதப்பட்டிருப்பது மண்டோவின் மேதமைக்குச் சான்று.
மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமே புது சமூகம் தன்னுடைய மனப்பிறழ்வுகளை கண்டு உணர்ந்து சரி செய்து கொள்ள முடியும். முன்போதிலும் காட்டிலும் இப்பொழுது மண்டோ அதிகம் தேவைப்படுகிறார்.
எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் நிர்வாணக் குரலுக்கு எழுதிய இந்த முன்னுரை மண்டோவின் வாழ்க்கையை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.
கதைகளுக்குள்..
பிஸ்மில்லாவைப் பற்றி கூறியாக வேண்டும். திரைப்படத் தயாரிப்புக்காக ஜாகீரைச் சந்திக்கச் செல்கிறார் சையத். இருவரும் விரைவில் நண்பர்களாகி விடுகிறார்கள். ஜாகிரின் மனைவி பிஸ்மில்லாதான் அவர் எடுக்கவிருக்கும் படத்தின் கதாநாயகி என்று கூறுகிறார்.
பிஸ்மில்லாவின் அந்த பெரிய கண்களில் சோகம் ஒளிந்து இருப்பதை சையத் உணர்கிறார்.
அந்த சோகம் நிறைந்த கண்களுக்குள் பலமுறை பாய்ந்து விழுந்திருக்கிறான் சையத்.
அவனை பல முறை மூழ்கடித்ததும் அவளுடைய பெரிய சோகமான கண்கள்தான். கண்களில் உள்ள சோகத்தின் எல்லாத் தடயங்களையும் கழுவி சுத்தப்படுத்தும் வரை அந்த கண்களை முத்தமிட வேண்டும் என்று தீராத ஆசை அவனுக்கு.
அந்த பெரிய சோகம் நிறைந்த கண்கள் எப்பொழுதும் தூக்க கலக்கத்துடனே இருப்பதை சையத் கவனிக்கிறான். அன்றும் அப்படித்தான் ஜாஹிரே காணச் சென்ற சையத் பிஸ்மில்லாவோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பிஸ்மில்லா உறங்கி விடுகிறார்.
அடுத்த நாள் அவர்களின் வீட்டிற்கு செல்லும் பொழுது பிஸ்மில்லாவைப் பற்றி ஊர் மக்கள் பேசியதும் ஜாகிரை போலீஸ் பிடித்ததும் இந்தக் கதையின் எதிர்பாராத ஒரு திருப்பம் என்னவாக இருக்கும்?
****†***
ஆறுதல் கதையில் சாரதாவுக்கு நேர்ந்த அவமானம் அதன் பிறகான ஆறுதல் வரிகளும் அந்த ஆறுதல் படுத்தும் பொழுது பேசிய பேச்சுக்களும் உளவியல் ரீதியாக நுட்பமாக மனதை படம்பிடித்தது மிக சரியான வார்த்தைகள்.
ஆறுதல் என்பது என்றுமே மிகப்பெரிய தத்துவம் நிறைந்த வார்த்தைகளைத் தேடுவதில்லை.
மிக எளிமையான அன்பு கூறும் வார்த்தைகளையே எதிர்பார்க்கிறது. சில நேரங்களில் மௌனம் கூட ஆறுதல் ஆகிவிடும். சில நேரங்களில் காது கொடுத்தலே அவர்களுக்கு ஆறுதலாகிவிடும்.
நிர்வாணக் குரல்கள் கதை வியப்பின் உச்சம். இப்படி கூட ஒரு மனிதனால் சிந்திக்க முடியுமா? கட்டில்கள் பேசுமா? குரல்கள் துரத்துமா? காமம் ஒரு மனிதனை இப்படி அலைக்கழிக்குமா? ஒரு மனித வாழ்வில் காமத்திற்கான இடம் என்ன?
சுற்றி இருந்து எழுப்பும் குரல்கள் ஒருவனை இப்படித் துரத்துமா? முடிவில் அவனுக்கு மனப்பிறழ்வை ஏற்படுத்துமா? கற்பனைக்கும் அப்பாற்பட்ட கதை.
*********
ஒரு மனிதன் எல்லா இடங்களிலும் பயம் கொண்டே இருக்கிறான். தெனாலி படத்தில் வருவது போல எதற்கெடுத்தாலும் அவனுக்கு பயம் பயம் பயம்.
இந்த பயத்தை எல்லாம் உடைத்து ஒரு நாள் பாலியல் தொழிலாளியிடம் செல்ல நினைக்கிறான். முடிவில் போவானா போவானா என்ற பதட்டத்தோடு கதையை நகர்த்துகிறார். எதுக்குடா இப்படி பயப்படுற என்று நமக்குள்ளே கேள்விகள் எழும் அளவிற்கான கதை நகர்த்துதல்..
அவன் மனது செல்கிறது. அதை அவன் தடுத்துப் பார்க்கிறேன் முடியவில்லை முடிவில் அந்த பயத்தை உடைத்து சென்றானா?
என்பதை அறிய கோழைக்கதை..
***********
திருமணம் ஆகி 5 வருடம் குழந்தை இல்லாத நிலையில் சலிமாவிடம் அவள் தோழி ஒரு கோயிலைப் பற்றிக் கூறுகிறார். அந்தக் கோயிலுக்குச் சென்று எனக்கு பிறக்கும் முதல் குழந்தையை உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று வேண்டினால் குழந்தை பிறக்கும் என்று கூறுகிறார்.
அந்தக் குழந்தை சிறிய தலையுடன் பிறக்கும் என்று கூறுகிறார். சலிமா வேண்டிக் கொள்கிறார். அது போலவே அவளுக்கு குழந்தை பிறக்கிறது.
கன்னத்தில் கருப்பு நிற மசாசத்துடன். வலியோடும் வேதனையோடும் அந்தக் குழந்தையை அந்தக் கோவிலில் கொண்டு சென்று விட்டு விடுகிறார். ஆனாலும் அந்தக் குழந்தையின் நினைவு அலைக்கழிக்கிறது. திரும்பவும் சென்று அங்கு பார்க்கிறார்.
ஆனால் அந்தக் குழந்தை அங்கு இல்லை. அதன் பிறகு இரண்டு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. ஆனாலும் அந்தக் கன்னத்தில் மச்சத்தோடு பிறந்த குழந்தையை மறக்க முடியாத வலியோடும் வேதனையோடும் சுற்றித் திரியும் பொழுது, அந்த ஊருக்கு வித்தை காண்பிக்க வருகிற ஒரு வித்தைக்கார சிறுவனைப் பார்க்கிறாள். அந்த வித்தைக்கார சிறுவன் கன்னத்தில் கருப்பு நிற மச்சத்தோடு இருக்கிறான்.
யாரவன்?.
குழந்தை இல்லை என்பதற்காக முதல் குழந்தையை தருகிறேன் என்று வேண்டிக் கொண்டாலும் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் ஒரு குழந்தையின் இழப்பு என்பது ஒரு தாயின் மனதை எவ்வளவு அலைக்கழிப்பை ஏற்படுத்தும் என்று நுட்பமான உளவியலை உணர்ந்து ஒவ்வொரு வரியிலும் வலியையும் வேதனையும் கடத்தி இருக்கிறார் மண்டோ.
*********
தோற்றுக் கொண்டிருப்பவன் எல்லாவற்றையும் ஜெயித்த பிறகு அதையெல்லாம் தொலைத்து விடுவதில் மகிழ்ச்சி அடையும் ஒருவனான கதையின் நாயகன்.
அவன் எப்பொழுதும் ஜெயிப்பதற்கு கஷ்டப்படவே இல்லை.
ஆனால் அதை இழப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. இதை படிக்கும் பொழுது அருணாச்சலம் படத்தில் ரஜினியிடம் கொடுக்கப்பட்ட பணத்தைச் செலவு செய்ய வேண்டும் என்ற ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது அதை செலவழிக்க ரஜினி படம் கஷ்டம் நினைவுக்கு வருகிறது.
ஆனால் இந்த கதையின் நாயகனுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படுவதில்லை. ஆனால் இவர் சம்பாதித்த இலட்சக்கணக்கான பணங்களைத் தொடர்ந்து செலவழித்துக் கொண்டே இருக்கிறார் .அதற்காக எவ்வளவு மெனக்கடல்களையும் செய்வார். ஆனாலும் இவருக்கு செல்வம் குவிந்து கொண்டிருக்கிறது. தினமும் கண்டிப்பாக 200 ரூபாயை சூதாட்டத்தில் இழந்தே ஆக வேண்டும் என்று என்ற ஒரு கட்டுப்பாட்டை தனக்குள்ளே விதைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சூதாட்டத்திற்கு போகும் வழியில் ஒரு அசிங்கமான முகத்துடன் கூடிய பாலியல் தொழிலாளி பெண்ணைப் பார்க்கிறார் இனிமேல் நீ இதில் ஈடுபடக்கூடாது நீ சம்பாதிப்பதற்கு மேல் நான் பணம் தருகிறேன் என்று கூறி தினமும் பத்து ரூபாயை அவருக்குக் கொடுக்கிறார்.
ஒரு வாரம் அந்த பெண் அந்த விளக்கிற்கு கீழே வந்து அமரவில்லை ஒரு வாரத்திற்கு பின் வழக்கம்போல தன்னுடைய வாடிக்கையாளர்களை அழைக்கும் இடமான அந்த விளக்கு கம்பத்துக்கு கீழ் வந்து அமர்கிறார். இதைப் பார்த்து எரிச்சல் அடைந்து கோபத்தோடு அவளிடம் சென்று கேட்கிறான்.
அப்பொழுது அந்த பாலியல் தொழிலாளி கைக்காட்டும் இடத்தில் ஏராளமான விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன.
**************
யாசித் அதை இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு நடந்த மறைமுகமான யுத்தத்தை பற்றிய கதை.
இந்தியாவிலிருந்து ஆற்று நீரை பாகிஸ்தானுக்கு வர அனுமதிக்க மறுக்கிறார்கள் இந்தியர்கள் என்ற ஒரு செய்தி பாகிஸ்தானுக்குப் பரவுகிறது.
அங்கு இருக்கும் மக்கள் இந்தியாவில் இருக்கும் மனிதர்கள் கொடூரமானவர்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரே ஒருவர் மட்டும் அப்படி பேசக்கூடாது எனும்பொழுது அவரை எதிர்த்து அனைவரும் பேசுகிறார்கள்.
அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது வீட்டிற்கு வந்து குழந்தையைப் பார்த்தவுடன் அந்தக் குழந்தைக்கு யாசித் என்ற பெயர் வைக்கிறார். அந்த யாசிப் அங்கு இருக்கும் புராணக் கதைகளில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம்.
பெயரைக் கேட்டதும் மனைவி அதிர்ந்து போக அந்த யாசித் அப்படி இருந்தால் என்ன இந்த ஆசை ஒரு வேலை ஆற்றிலிருந்து நீரை வர வைக்கும் நல்லவனாக இருப்பானோ என்று கூறுகிறார்.
**********
கேள்விக்குறியான கௌரவம் படிக்கும் பொழுது நகைச்சுவை உணர்வு தழும்பி ஓடினாலும் கடைசியாக மீசைக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு மீசையை இழந்தவுடன் அவருடைய கௌரவம் முற்றிலும் அழிந்து விட்டதாக நினைப்பது.
மீசை என்பது மம்மது பாய்க்கு வெறும் மயிர் அல்ல அது அவரின் கௌரவம்..
***************
இப்படி இந்த தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கதையைப் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம்.
மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளையும் உளவியல் ரீதியான பல்வேறு சிக்கல்களையும் அந்த சிக்கலுக்குள் மனித மனங்கள் மாட்டிக் கொண்டு விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதையும் வாசிக்கும் பொழுது மண்டோ ஒரு மகத்தான எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு மகத்தான உன்னதமான மனிதனும் கூட என்பதை உணர முடிகிறது.
குறிப்பாக பெரும்பாலான கதைகளில் விளக்கு வந்து செல்கிறது ஒளி அற்றவர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் வருகிறது.
இந்த விளக்காவது அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் தரும் என்று நினைத்தாரோ என்னவோ.
மனதைக் குத்தி கிழிக்கும் நேரத்தில் தெறித்த ரத்தக்கங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் மண்டோ படைப்புகள்.
மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு.
வாசிக்க வாசிக்க ஆக்டோபஸ் கரங்களால் கதைகள் நம்மை உள்ளே இழுத்துக் கொள்கின்றன.
நன்றி - சரிதாஜோ


Friday, 4 November 2022

மாரி எனும் குட்டிப்பையன்


 


நூல் : மாரி என்னும் குட்டிப் பையன்

 ஆசிரியர் : உதயசங்கர்

 பதிப்பகம் : அறிவியல் வெளியீடு 

விலை : 65 

பக்கங்கள் : 64 

வகைமை : சிறார் நாவல்

எழுத்தாளர் சரிதாஜோ


தமிழ் சிறார் இலக்கியத்தில் என்றுமே முன்னோடியாக இருப்பது அழ. வள்ளியப்பா. 1950 களில் அழ. வள்ளியப்பா அவர்களின் முன்னெடுப்பு தமிழ் சிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒன்று. இடையில் சிறார் இலக்கியம் சிறு தொய்வு கொண்டு இருந்தது. 


2010க்கு மேல் சிறார் இலக்கியம் மீண்டும் சிறகடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஏராளமான எழுத்தாளர்கள் சிறார்களுக்காகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் எனது ஆசான் எழுத்தாளர் உதயசங்கர் நவீன சிறார் இலக்கியத்தின் முன்னோடி என்று கூறுவேன்.


குழந்தைகளுக்காக தொடர்ந்து புதிய வகை மையை அறிமுகப்படுத்துவதில் அதீத ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் படித்த சோசோவின் வாழ்க்கை அதற்கு ஒரு  முன்னுதாரணம்.


 அடுத்த படைப்பான மாரியெனும் குட்டி பையனில் அவர் என்னுரையில் கூறியிருப்பது போல சிறார் கதைகளில் எதார்த்தமான கதைகள் மிக குறைவு. அதைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த மாரியெனும் குட்டி பையன் அமைந்திருக்கிறது. எந்தக் குழந்தைக்கும் அம்மாதான் பிடித்தமான ஒருவராக இருக்கிறார். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு. 


மாரி சிறு பையன் அவனுக்கு எதைப் பார்த்தாலும் பயம்.

இருட்டை பார்த்துப் பயப்படுகிறான். பல்லியைப் பார்த்து பயப்படுகிறான். தேளைப் பார்த்துப் பயப்படுகிறான்.  அம்மா அருகில் இல்லை என்றால் இன்னும் அதிக பயம்.


 அவனுக்கு தைரியமாக இருக்க வேண்டும் என்று ஆசை .

பலசாலியாக இருக்க வேண்டும் என்று ஆசை .

ஆனால் அதெல்லாம் எப்படி நடக்கும் என்ற கேள்வி .

பொதுவாகவே சிறுவயதில் ஒவ்வொரு குழந்தையும் யாராவது ஒருவருடைய கவனம் தன்மீது இருக்க வேண்டும் அவர்களுடைய கவனத்தை தன் பால் இருக்க வேண்டும் என்று அதீத ஆர்வம் இருக்கும்.


. நண்பர்களோடு சேர்ந்து விளையாடும் பொழுது ஏதாவது ஒரு இடத்தில் அங்கீகாரம் கிடைத்து விடாதா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்த கதையிலும் அப்படியான ஒரு குழந்தையாகத்தான் மாரி இருக்கிறான்.


குழந்தைகளுக்கு கல்வி மீது ஆர்வம் ஏற்பட ஆசிரியர் மிக முக்கிய காரணமாக இருக்கிறார். மாரிக்கு கோமு டீச்சரை அவ்வளவு பிடிக்கும். யாரையும் அதட்ட மாட்டார். அடிக்க மாட்டார். சத்தம் போடாமல் படிங்க என்று அவருக்கு கேட்காத குரலில் சொல்லும் அளவிற்கான மென்மையான ஆசிரியர். அந்த டீச்சர் மீது எப்பொழுதுமே மாரிக்கு அதிக அன்பு.


 கோமு டீச்சர் வராத நாட்களில் ராமலட்சுமி டீச்சர் வருவார். ராமலட்சுமி டீச்சர் கோமு டீச்சருக்கு நேர் எதிர். 


கோமு டீச்சரின் இறப்பு மாரிக்கு ஏராளமான கேள்விகளைக் கொடுக்கிறது. இறப்பு என்றால் என்ன? இறந்த பின்பு எங்கு செல்வார்கள்? மேலே செல்வார்கள் என்றால் எப்படி செல்வார்கள்? பறந்து செல்வார்களா? அங்கு சென்று என்ன செய்வார்கள்? இப்படியான கேள்விகளை தன் நண்பரிடம் கேட்கிறான் அன்றிரவு கோமு டீச்சர் கனவில் வருகிறார். கோமு டீச்சரோடு இவனும் பறந்து செல்கிறான்.


பள்ளியில் ஒரு முறை வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது. ஆனால் மாரி உனக்கு இப்பொழுது தானே இனிப்பு கொடுத்தேன் என்று இனிப்பு வழங்காமலேயே ஆசிரியர் மாரியை அனுப்பி விடுகிறார். வீட்டுக்கு வந்த மாரி தன் அம்மாவிடம் சொல்கிறான். அம்மா பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் இது பற்றி பேசி ஒரு இனிப்பு பொட்டலத்தை வாங்கி கொடுக்கிறார். 


அந்த நேரத்தில் அந்த இனிப்பு வாங்கிக் கொடுப்பதைத் தாண்டி தன் குழந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை சரி செய்ய போகும் ஒரு அம்மாவாக எத்தனை அம்மாக்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்?  அந்த நேரத்தில் தவிர்க்கப்படும் பொழுது அந்த குழந்தையின் மனநிலை என்ன ஆகிறது?

இதைத்தான் யோசிக்க வைக்கிறது இந்த இடம்.


மீண்டும்  இனிப்பு கைக்கு வந்த பிறகு கூட அந்தக் குழந்தை அந்த இனிப்பை தொடவில்லை.

ஒரு அவமானம் ஒரு அவமதிப்பு ஒரு குழந்தையின் மனதில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இதைவிட எப்படிச் சொல்லிவிட முடியும்.


 மாரிக்கு கதை கேட்பதென்றால் கொள்ளை பிரியம் அம்மா அடிக்கடி கதைகள் கூறுவர்.


அம்மா புத்தகம் வாசிக்கும்போது அம்மாவின் முகத்தை கவனிப்பான் மாரி. அம்மாவின் முகம் சில நேரங்களில் சிரிக்கும் யோசிக்கும் வியக்கும் அப்பொழுதெல்லாம் அந்த புத்தகத்திற்குள் அப்படி என்னதான் இருக்கிறது. அம்மா இவ்வளவு நேரம் அதை வாசித்துக் கொண்டிருக்கிறார் என்று எடுத்து பார்க்க் தோன்றும் மாரிக்கு.


 அப்படி ஒரு முறை எடுத்து பார்க்கும்பொழுது அந்த புத்தகத்தில் இருந்த கதையின் தலைப்பு வீட்டின் மூலையில் சமையலறை _ அம்பை என்று எழுதியிருந்தது. அந்த புத்தகத்தில் படங்களை இல்லை மாரிக்கு ஆச்சரியம். படங்களே இல்லாமல் ஒரு புத்தகம் எப்படி வாசிக்க முடியும்? வெறும் எழுத்துக்களாக இருக்கிறது என்று பார்த்தான்.


 அதன் பிறகுதான் தன்னுடைய குழந்தை மாரிக்கு அவனுடைய அம்மா புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறார். தனது மடியில் அமர வைத்துக்கொண்டு ஆலிஸின் அற்புத உலகத்தை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறார். அந்தக் குழந்தைக்கு ஒரு புது உலகத்தைக் கொடுக்கிறார். எவ்வளவு அருமையான அம்மாவாக இருக்கிறார். 


மாரியின் அம்மா மட்டுமல்ல மாரியின் நண்பன் கதிரேசனும் கதைகள் கூறுவான். ஆனால் பேய் இல்லாமல் அவன் கதைகள் கூறியதில்லை. முதலிலேயே பயத்தை அதிகமாக தன் மனதில் அப்பிக் கொண்டிருக்கும் மாரிக்கு இவன் கூறும் கதைகள் இன்னும் பயத்தை அதிகப்படுத்தின.


 இருட்டில் செல்லும் போதெல்லாம் அம்மாவின் கைகளை பற்றி கொள்வான் அம்மா எவ்வளவோ தைரியப்படுத்துவார். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை அந்த இருட்டின் முன் நின்று கேள் என்பார்.


 அம்மா என் எல்லாமுமாக இருக்கிறார். என்று அடிக்கடி எண்ணிக் கொள்ளும் ஒரு சிறுவனாக மாரி இருந்தான்.


ஒரு நாள் மாரியும் நண்பர்களும் சேர்ந்து நாடகம் போட தயாரானார்கள் ‌ அப்பொழுது மாரிக்கு தான் கதை எழுதும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது.

அதுவரை ஆயிரம் கதைகள் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தன கேட்டவுடன் அத்தனை கதைகளும் சிறகு முளைத்து பறந்து விட்டன.


மாரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அடுத்த நாள் மாலை அனைவரும் இந்த கதை என்று கேடட்டார்கள். அந்த நிமிடத்தில்  இரண்டு நாட்களுக்கு முன்பு அம்மா கூறிய கதை மனதில் தோன்றியது. அந்தக் கதையைக் கூற அனைவரும் ஒத்துக் கொள்கிறார்கள். அந்த நேரம் ஆதிமூலம் மாமா அங்கே வர அவரிடம் இந்த கதையை கூற மாரி நீ பெரிய ஆளுதாண்டா என்று கூறினார். அவருடைய வார்த்தை மாறிய என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

மாரி தனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக  கருதினான்.

எத்தனையோ இடர்பாடுகளுக்கு இடையில் விடாமுயற்சியாக நாடகத்தை நடத்தி முடித்தார்கள்.


சின்னச் சின்ன நிகழ்வுகள் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த நாடகம் நடப்பதற்காக குழந்தைகள் செய்கின்ற மெனக்கடல்களை அவ்வளவு அழகாக விளக்கி இருக்கிறார். 


யார் வந்தாலும் வராவிட்டாலும் மழை பெய்தாலும் நடத்திய தீருவது என்ற அவர்களுடைய அந்த பிடிவாதம் நிறைய இடங்களில் என்னுடைய சிறுவயதை ஞாபகப்படுத்தி இருக்கிறது. நான் எப்பொழுதுமே பிடிவாதத்தைப் பிடித்த  பிடிவாதக்காரி. 


நான் சிறுவயதாக இருக்கும் போது ஒரு முறை கூட்டாஞ்சோறு செய்து கொண்டிருக்கும் பொழுது மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த மழைக்கும் இடையேகூட நாங்கள் அவ்வளவு பேரும் சுத்தி நின்று அடுப்பு எரிவதற்காக பாதி வெந்தும் வேகாமலும் இருந்த அந்த கூட்டாஞ்சோற்றை ஆக்கி முடித்து கைகளில் வாங்கி சாப்பிடும் பொழுது இருந்த ருசி என்றுமே நாவில் நின்று கொண்டிருக்கிறது. இன்று வரை எவ்வளவு ருசியான பண்டங்களை சாப்பிட்டாலும் அந்த ருசிக்கு ஈடாகாது.


 இந்த நினைவுகளை தான் நாம் இன்றைய காலகட்ட குழந்தைகளுக்கு கொடுக்க தவறுகிறோமோ என்று ஏராளமான இடங்களில் இந்த புத்தகம் தலையில் கொட்டிக் கொண்டே செல்கிறது. 


குழந்தைகளுடைய உலகை அவர்களுக்கு நாம் அறிமுகம் செய்ய வேண்டும். நாம் வாழ்ந்த வாழ்க்கையில் சிறுவயதில் எத்தனை நினைவுகளை மனது தாங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு எந்த நினைவுகள் இருக்கும் பிற்காலத்தில் செல்போனையும் டிவியையும் தவிர.

 குழந்தைகள் மனதில் ஏராளமான நினைவுகள் மலர அவர்களுடைய பால்யத்தை அவர்களிடம் ஒப்படைப்போம். அவர்களோடு சேர்ந்து கைகோர்ப்போம். 


இந்தக் கதை மாரி தன் அம்மாவின் மீது வைத்திருந்த அளப்பரிய அன்பையும் அம்மாவின் மீது வைத்திருந்த அளப்பரிய மதிப்பையும் காட்டுகிறது.


கதையின் தொடக்கத்தில் ஓரிடத்தில் முடிவுகள் எடுப்பதில் நான் கில்லாடி என்ற ஒரு வரி வருகிறது. மாரி தன்னைத்தானே கூறி கொள்வது போன்று உண்மை சிறு வயதில் ஒவ்வொரு குழந்தையும் தான் எடுக்கும் முடிவின் மீது அவ்வளவு அதிக நம்பிக்கை கொண்டிருக்கும். இந்த முடிவுகள் எந்த இடத்தில் தகர்க்கப்படுகிறது. எனக்கு சரியாக முடிவு எடுக்கத் தெரியவில்லை என்று தோன்றும் அளவிற்கு எந்த இடம் அவர்களை இட்டுச் செல்கிறது? யோசிப்போம். 


அவர்களுடைய முடிவுகளை அவர்கள் எடுக்கும் சுதந்திரத்தை பெரும்பாலான நேரங்களில் கொடுக்க தவறிவிடுகிறோம். முடிவெடுக்கும் அதிகாரத்தை விட்டுக் கொடுப்போம் அன்போடு.


 முடிவெடுக்கும் ஒரு சுதந்திரத்தை அவர்களுக்குக் கொடுப்போம். அது பதின் பருவத்திலும் இருக்கலாம்.

குழந்தையின் ஒவ்வொரு பருவத்தையும் ரசிப்போம் கொண்டாடுவோம்.

வாசிக்க வேண்டிய புத்தகம்.

மாரி எனும் குட்டி பையனின் கதை. 


நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையின் கதை.

Friday, 16 September 2022

சேவல் முட்டை

 

சேவல் முட்டை


உதயசங்கர்

வாயில் கவ்விய சேவலுடன் காட்டுக்குள் ஓடியது குள்ளநரி.

இன்று முழுவதும் குள்ளநரிக்கு சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. இரவாகி விட்டது. மலை அடிவாரத்தில் இருந்த காவூர் கிராமத்துக்குள் நுழைந்தது.  நல்ல நிலா வெளிச்சம். அந்த வெளிச்சத்தில் குள்ளநரியின் கண்களுக்கு ஒரு சேவல் தெரிந்தது.

ஆகா! கிடைத்தது பெரும் பரிசு! குள்ளநரியின் நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கியது. மெல்லப் பதுங்கிப் பதுங்கி சேவலுக்குப் பின்னால் போய் லபக் என்று ஒரு கவ்வு. அவ்வளவுதான்.

சேவலுக்கு நரி கவ்வியதிலேயே பாதி உயிர் போய் விட்டது. இரவில் எப்போதும் மரத்தின் மீது தான் உட்கார்ந்திருக்கும். இன்று பௌர்ணமி. நல்ல வெளிச்சம். கீழே இரவுப்பூச்சிகள் ஊர்வதும் தாவுவதும் நன்றாகத் தெரிந்தது. அந்தப் பூச்சிகளைத் தின்பதற்காக மரத்திலிருந்து கீழே இறங்கியது. இரண்டு பூச்சிகளைத் தின்பதற்குள் நரி கவ்வி விட்டது.

நடுக்காட்டில் கருவேலமரத்தின் கீழே குள்ளநரியின் வீடு இருந்தது. அந்த முள்ப் புதருக்குள் நுழைந்து சேவலைக் கீழே போட்டது. கீழே விழுந்த சேவல் மெல்ல எழுந்து நின்றது. சேவலின் கழுத்தைப் பார்த்தபடியே,

“ வண்ண வண்ணச் சேவலே

வலிமையான சேவலே..

எண்ணம் போலே தின்னுவேன்..

என் பசிக்கு உன்னையே..

ஊஊஊஊஊஊ… லாலாலல்லா “

என்று பாட்டுப் பாடியது.

அதைக் கேட்ட சேவலின் உடல் நடுங்கியது. ஆனாலும் தைரியமாய் நிமிர்ந்து நின்று,

குள்ள நரியே குள்ளநரியே

கூறுகெட்ட குள்ளநரியே

இன்று மட்டும் போதுமா

என்றும் சாப்பிட வேண்டாமா

கொக்கரக்கோ கொக்கரக்கோ..

 என்று கூவியது. உடனே குள்ளநரி யோசித்தது.

“ என்ன சொல்கிறாய் நீ? “

என்று கேட்டது குள்ளநரி.

“ சேவல் முட்டை பார்த்திருக்கிறாயா?..என்றது சேவல்.

என்னது சேவல் முட்டையா? கோழி முட்டை தானே உண்டு..

அட அறிவுக்கொழுந்தே…உலகத்தை இன்னும் அறியவில்லையே.. காலம் மாறி விட்டது. இப்போது சேவலும் முட்டையிடும்.. அந்த முட்டையிலிருந்து முழுச்சேவலும் வெளியே வரும்..

என்று சொன்ன சேவலைச் சந்தேகத்துடன் பார்த்தது குள்ளநரி. ஆனால் சேவல் கொஞ்சமும் தயங்கவில்லை.

“ இன்று நீ என்னைச் சாப்பிட்டால் இன்று மட்டும் தான் உன் பசி தீரும்.. ஆனால் என்னை நீ வளர்த்தால் தினம் ஒரு முட்டை இடுவேன். தினம் ஒரு சேவலை நீ சாப்பிடலாம்.. எப்படி..வேண்டுமானால் இதோ இப்போதே என்னைச் சாப்பிட்டு விடு..க்க்கொக்கொ..கொக்கரக்கோ…

என்று சொல்லியது சேவல். குள்ளநரிக்குக் குழப்பமாக இருந்தது. ஒருவேளை சேவல் சொல்வது உண்மையாக இருந்தால்.. தினம் ஒரு சேவல் கிடைக்குமே. உடனே,

“ சரி.. உன்னைச் சாப்பிடவில்லை.. இன்னும் ஒரு வாரத்துக்குள் நீ மூட்டை இடவில்லை என்றால் உன்னைச் சாப்பிட்டு விடுவேன்..தெரிந்ததா..ஊஊஊஊ

அந்தப் புதரிலேயே சேவலை கட்டிப் போட்டுவிட்டு வேறு உணவு தேடி வெளியில் போய் விட்டது குள்ளநரி.

அன்றிலிருந்து தினம் காலையில் எழுந்ததும் குள்ளநரி சேவலிடம்,

“ முட்டையிட்டையா சேவலே..

முட்டையிட்டையா சேவலே

ஆறு நாள் தான் இருக்கு

முட்டையிட்டையா சேவலே..

என்று கேட்கும். அதற்கு சேவல்,

“ குள்ளநரியே குள்ளநரியே

கூறுகெட்ட குள்ளநரியே

சேவல் முட்டை வேணும்னா

ஒரு வேளை குளிக்கணும்

இரண்டு வேளை கூவணும்

மூணு வேளை மேயணும்

நாலு வேளை பறக்கணும்

அஞ்சு வேளை தூங்கணும்

ஆறு வேளைச் சாப்பிடணும்..

ஏழு வேளை பேன் எடுக்கணும்

குள்ள நரியே குள்ளநரியே

கூறுகெட்ட குள்ளநரியே “

என்று பதிலுக்குப் பாடும்.

அதன் பிறகு சேவல் ஏவிய அத்தனை வேலைகளையும் குள்ளநரி செய்தது. குள்ளநரி சேவலுக்கும் சேர்த்து வேட்டையாடிக் கொண்டு வந்தது. சேவல் எந்த வேலையும் செய்யாமல் ஹாயாக இருந்தது.

மூன்று நாட்கள் கழிந்தது. காலையில் எழுந்ததும் குள்ளநரி கேட்டது.

“ முட்டையிட்டையா சேவலே..

முட்டையிட்டையா சேவலே..

மூணு நாள் தான் இருக்கு..

முட்டையிட்டையா . சேவலே....

என்று ஊளையிட்டது. அப்போது சேவல்,

.. குள்ளநரியே குள்ளநரியே

கூறுகெட்ட குள்ளநரியே

மூணுநாள் முடியட்டும்

முட்டை இடுவேன் நான்

குள்ளநரியே குள்ளநரியே

கூறுகெட்ட குள்ளநரியே “

கடைசியில் ஏழாவது நாளும் வந்தது. இதுவரை ஏமாந்தது போதும் என்று நினைத்தது குள்ளநரி. இன்று சேவல் முட்டை இடவில்லை என்றால் அதைக் கொன்று தின்று விட வேண்டியது தான் என்று நினைத்தது.

ஆனால் ஏழாவது நாள் காலையில் சூரியன் உதித்ததும் சேவல்,

“ குள்ளநரியே குள்ளநரியே

கூறுகெட்ட குள்ளநரியே

முட்டையிடும் மந்திரம்

என் கூட்டிலே இருக்குதே

பறந்து போய் எடுத்து வர

அனுமதிக்க வேண்டுமே..

குள்ளநரியே.. குள்ளநரியே

கூறுகெட்ட குள்ளநரியே..

என்று கண்ணீர் விட்டது. அதைப் பார்த்த குள்ளநரி,

“ கொக்கரக்கோ சேவலே

முட்டையிடும் சேவலே

இப்போதே பறந்து போய்

மந்திரத்தைக் கொண்டு வா..

காத்திருப்பேன் சேவலே..

என்று சொல்லிக் கட்டியிருந்த சேவலை அவிழ்த்து விட்டது. அப்புறம் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தான் தெரியுமே. உடனே சேவல் புதருக்குள்ளிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று பறந்து போய் விட்டது.

அன்றிலிருந்து தினம்தினம் இரவாகி விட்டால் குள்ளநரிக்கு சேவல் முட்டை ஞாபகம் வந்து விடும். அந்தச் சோகத்தில் தான் இன்னமும், ஊஊஊஊஉ  ஊஊஊஊஉ  என்று ஊளையிட்டுக் கொண்டேயிருக்கிறது.

கேட்கிறதா உங்களுக்கு?

நன்றி - வண்ணக்கதிர்

 

 


 

 

Wednesday, 15 June 2022

மண்டு ராஜா போட்ட சாலை

 

மண்டு ராஜா போட்ட சாலை

உதயசங்கர்


மாமண்டுர் நாட்டு ராஜாவான மண்டு ராஜா திடீரென்று ஒருநாள் ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், உலகத்தைக் காப்பாற்ற வந்த உத்தமர் என்று அவனுக்கு சர்வதேச விருது வழங்கும் விழா நடந்தது. அவனுடைய பட்டுச்சட்டையில் பதக்கம் குத்தி அவனை யானை மீது உட்காரவைத்து ஊர்வலமாய் அழைத்துச் சென்றார்கள். மக்கள் எல்லாரும் பூமழை தூவினார்கள். காலையில் கண்விழித்தவுடன் அவனுடைய மந்திரியை அழைத்து,

“ மகா மந்திரியாரே நான் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமே! உடனே செய்ய வேண்டும்.. நான் கனவில் கண்ட விருது வழங்கும் விழாவை நடத்த வேண்டும்.. “

என்று சொன்னான். உடனே மந்திரி,

“ அதுக்கென்ன அரசே! உடனே செய்து விடலாம்.. நமது நாட்டிலேயே மிகவும் ஏழையின் குடிசைக்கு சாலை வசதி செய்து கொடுக்கலாம்.. அதற்கு உலகவங்கியிடம் கடன் வாங்கலாம்.. அந்தச் சாலை போடும் திட்டத்தை உங்கள் மகனுக்கேக் கொடுத்து விடலாம்..”

என்று சொன்னான். மண்டு ராஜா முகத்தில் மகிழ்ச்சி.

“ ஆகா! நல்ல திட்டமாக இருக்கிறதே! உடனே செய்யுங்கள். நமது நாட்டில் வாழும் பரமஏழையை நாளையே அழைத்து வாருங்கள்..”

என்று சொல்லி விட்டு அடுத்த கனவைக் காணத் தூங்கி விட்டான். மறுநாள் காலை மண்டுராஜா கண் விழித்தபோது, எதிரே கந்தல் உடையில் ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். முகத்தைச் சுளித்த மண்டு ராஜா,

“ யாரையா நீர்? ..” என்று கேட்டான். அந்தப்பெரியவர்,

“ அரசே! என்னைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் அழைத்ததாகச் சொன்னார்கள்..”

என்று சொன்னார்.

“ ஓ நீர் தான் நாட்டிலேயே ஏழையாக இருப்பவரா? உமக்கு நல்ல காலம் பிறக்கப்போகுது.. உங்கள் வீட்டுக்குச் சாலை வசதி வரப்போகிறது.. அதுவும் உமது பெயரையே அந்தச் சாலைக்கு வைத்து விடலாம்..… நானே வந்து சாலையைத் திறந்து வைக்கிறேன்..என்ன மகிழ்ச்சி தானே..”

 ” அரசே! ஏற்கனவே மண்சாலை இருக்கிறது.. எனக்கு வேண்டியது எல்லாம் என்னுடைய நிலத்துக்குத் தண்ணீர் வேண்டும்.. பயிர்கள் காய்ந்து கொண்டிருக்கின்றன.. தண்ணீர் வருவதற்கு வாய்க்கால் வெட்டிக் கொடுத்தீர்கள் என்றால் நான் என் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வேன்.. “

என்று வேண்டினார். அதைக்கேட்ட மண்டு ராஜாவுக்குக் கோபம் வந்து விட்டது.

“ உமக்கு எவ்வளவு பெரிய நன்மை செய்கிறேன்.. சாலை வந்தால் கார், பஸ், எல்லாம் உங்கள் வீடு வரை வரும்.. எவ்வளவு பெரிய முன்னேற்றத்தை உங்களுக்கு அரசாங்கம் கொடுக்கிறது.. புரியவில்லையா? “

என்று கத்தினார்.

“ இல்லை ராஜா.. அதனால் என்னுடைய நிலத்துக்குத் தண்ணீர் கிடைக்குமா? “

“ முட்டாளே! நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. நீ என்ன புலம்பிக் கொண்டிருக்கிறாய்.. போ.. உன்னுடைய சாலையைப் பார்த்துப் பெருமைப்படு..

என்று கத்தினான் ராஜா. அந்தக் கூச்சலைக் கேட்ட அந்தப் பெரியவர் பயந்து போய் விட்டார். அந்தப் பெரியவரின் பெயரான மண்ணாங்கட்டி சாலை அரண்மனையிலிருந்து போடப்பட்டது. ராஜா கொஞ்சம் சாலையைத் தின்றார்.  மந்திரி கொஞ்சம் சாலையைத் தின்றார். பெரிய அதிகாரி கொஞ்சூண்டு சாலையைத் தின்றார். குட்டி அதிகாரி இத்தினியூண்டு சாலையைத் தின்றார். மேஸ்திரி துளியூண்டு சாலையைத் தின்றார். கடைசியில் சாலையின் நீளம் குறைந்தது. அப்படியே குறைந்து குறைந்து மண்ணாங்கட்டியின் குடிசைக்கு இரண்டு கிலோ மீட்டர் முன்னாலேயே  நின்று விட்டது.

மண்ணாங்கட்டி குடிசை வரை இருந்த மண்சாலையையும் தோண்டி பள்ளமாக்கி விட்டார்கள். இப்போது மண்ணாங்கட்டிக்கும் ஊருக்கும் நடுவில் பெரிய பள்ளம் இருந்தது. மண்டு ராஜா ஒருநாள் அந்தச் சாலையில் வந்தார். இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்து மண்ணாங்கட்டியைப் பார்த்துக் கையசைத்தார். அந்தச் சாலை முடியும் இடத்தில் மண்ணாங்கட்டி சாலை என்று பெயர்ப்பலகையைத் திறந்து வைத்தார். கையை அசைத்து டாட்டா காட்டிவிட்டுப் போய் விட்டார்.

மண்ணாங்கட்டி இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்ணீரைப் பார்த்த தேவதைகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு சொடக்கு போட்டார்கள்.

அவ்வளவு தான்.

மண்ணாங்கட்டியின் குடிசையைச் சுற்றி தண்ணீர் ஓடியது. காய்ந்து கொண்டிருந்த பயிர்களில் பாய்ந்தது. பயிர்கள் மகிழ்ச்சியுடன் தலையாட்டின. அரைகுறையாகப் போடப்பட்டிருந்த சாலை மண்ணாங்கட்டியின் வீடு வரை நீண்டு வந்தது.  ஆனால் அதே நேரம் மண்டு ராஜா, மந்திரி, பெரிய அதிகாரி, சின்ன அதிகாரி, மேஸ்திரி எல்லோருடைய வீடுகளைச் சுற்றி இருந்த சாலைகள் மறைந்தன. பெரிய பெரிய பள்ளங்கள் தோன்றி விட்டன.

காலையில் கண்விழித்து வெளியில் வந்த மண்டு ராஜாவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

உங்களுக்குத் தெரியும் தானே. அவர்களிடம் சொல்லி விடாதீர்கள். சரியா?

நன்றி - வண்ணக்கதிர்