Thursday 24 December 2015

மஞ்சள் நிற ரிப்பன்

மஞ்சள் நிற ரிப்பன்
உதயசங்கர்


ஏகாதசியை நமக்குப் பாடலாசிரியராகத் தெரியும். எளிய பேச்சுவழக்கிலுள்ள வார்த்தைகளை புதிய அர்த்தத்தில் கோர்க்கும் அவரது கவிதைகள், பாடல்கள், ஆச்சரியப்படவைக்கும், அதே போல இயக்குநராகவும் களம் கண்டவர். இப்போது மஞ்சள் நிற ரிப்பன் மூலம் சிறுகதையாசிரியராக அறிமுகமாகியுள்ளார். மதுரை மண்ணிலுள்ள காத்திரமான படைப்பாளிகளில் ஏகாதசி சற்று வித்தியாசமானவராக இந்தத் தொகுப்பில் தெரிகிறார்.
எளிய கிராமத்து மனிதர்களின் நம்பிக்கைகள், வலிகள், துன்பங்கள் ஏமாற்றங்கள், இவையே ஏகாதசியின் கதையுலகம். மதுரையின் மேற்கில் உள்ள வறண்ட கிராமத்து மனிதர்களையே தன் கதாபாத்திரங்களாக வார்த்திருக்கிறார். மனிதர்கள் தான் எத்தனை வகை,! எத்தனை ரகம்! 5.6 என்ற கதையில் கிராமத்துக்குப் போகும் ஒரு போட்டோகிராபரின் அந்த எளிய மக்களின் நம்பிக்கையை வைத்தே அவர்களைச் சமாளிப்பதை ரசமாகச் சொல்லியிருக்கிறார். பிள்ளைகளின் ஆசைகளை தன்னுடைய ஏழ்மையினால் நிறைவேற்ற முடியாத அப்பா எப்படிச் சமாளிக்கிறார் என்று சொல்லியிருக்கும் மஞ்சள் நிற ரிப்பன் கதை  தாழ் கதையில் ஆண்பெண் உறவைப் பற்றி கத்தி மேல் நடக்கிறமாதிரி அழகாகச் சொல்லிச் செல்கிறார் ஏகாதசி,. அம்மாவை விட்டு ஓடிப்போன அப்பாவைப் பற்றிய சித்திரத்தை அப்பா என்ற வெளியூர்காரன் என்ற கதையிலும், உதவி இயக்குநர்களின் அவலத்தை கதை வாங்கலியோ கதையிலும் இப்பொழுதும் பூக்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன என்ற கதையில் மகனால் நிராகரிக்கப்பட்ட தாயின் உணர்வுகளையும் மனம் வலிக்கும்படி எழுதிச் சென்றிருக்கிறார் மிகச்சிறந்த கதைசொல்லியாக ஏகாதசி உருவாகிக் கொண்டிருக்கும் அடையாளங்களை இந்தத் தொகுப்பு காட்டுகிறது. வாழ்த்துக்கள் ஏகாதசி!

வெளியீடு – எழுத்து


விலை – ரூ70/-

No comments:

Post a Comment