Showing posts with label படைப்பு. Show all posts
Showing posts with label படைப்பு. Show all posts

Thursday, 19 September 2013

படைப்பின் அரசியல்

 

உதயசங்கர்

images (9)  மனிதகுல வரலாற்றில் வேட்டைச் சமூகத்தின் வேட்டை வாழ்வனுபங்களைப் பகிர்ந்து கொள்ளும் மனவெழுச்சியே கலையின் ஆதி வித்தென கொள்ளலாம். குகைச்சுவர்களிலும் கற்பாறைகளிலும் விலங்குகளின் தோலிலும் துவங்கிய கலையின் பயணம் தன்னுணர்வுமிக்க உழைப்பினால் மொழியைத் தோற்றுவித்திருக்கிறது. இயற்கையின் உற்பாதங்களும் மரணமும் ஆவியுலக நம்பிக்கையை வளர்த்தெடுக்க தொன்மங்களும் மந்திரச்சடங்குகளும் தோன்றியிருக்கின்றன. தொன்மங்களைப்புனையும் சிந்தனை ஆதிமனிதர்களுக்கேயுரிய சிந்தனை முறையாகும்.அது புலனறிவு சார்ந்தும் அகவயமாகவும் நெகிழ்ச்சியானதுமாகும். இப்படி தொன்மம் கலைக்கான மூலப்பொருளாக மாறிவிட்டது. தொன்மங்கள் முழுவதும் இயற்கை சக்திகளை முழுக்க கற்பனையிலே கீழ்ப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் அவற்றை மாற்றியமைக்கின்றன. எனவே தொன்மங்களுக்கு மந்திர் ஆற்றல் இருப்பதாக நம்பப்பட்டது. தொன்மங்களிலிருந்து தோன்றிய மந்திரச்சடங்குகளிலிருந்தே ஆதியில் உழைப்பிலிருந்து பிரிந்து கலை தோன்றியிருக்கிறது. ஆவியுலகக்கோட்பாடே மந்திரச்சடங்குகளை உருவாக்கியிருக்கிறது. மந்திரச்சடங்குகளை நடத்தியவர்களே ஆதிக்கலைஞர்களாக இருந்திருக்கிறார்கள். வர்க்கமற்ற சமுதாயத்திலும் வர்க்கசமுதாயத்தின் தொடக்க காலத்திலும் ஒரு தீர்க்கதரிசியைப் போல கலைஞனும் மக்களால் போற்றி வணங்கப்படுபவனாக இருந்தான். அவனுடைய வாழ்த்துக்களுக்கும் சாபங்களுக்கும் தனி ஆற்றல் இருப்பதாகவும் அது ஆவியுலகத்தோடு அவனுக்கிருந்த ஊடாடல் காரணமாக கிடைத்தது என்று நம்பினார்கள்.

மனிதசமுதாயம் பழங்குடிஅமைப்பிலிருந்து அரசு உள்ள சமுதாயமாக மாற்றமடைந்த போது ஆதி மனித உணர்வு சமூக அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உட்பட்டது. இந்த அழுத்தங்கள் மனநோய், காக்காய்வலிப்பு, பிளவுண்ட ஆளுமை, ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்க பல்வேறு மனநோய்களாக வெளிப்பட்டன. உணர்வுபூர்வமான கட்டுப்பாட்டை இழக்கவைக்கும் இந்த மனநோய்கள் ஒரு கடவுளோ அல்லது ஆவியோ மனிதனின் உடலில் புகுந்து அவனை ஆட்கொண்டு விட்டது என்ற நம்பிக்கை தோன்ற வழிவகுத்தன. இப்படித்தான் மந்திரச்சடங்குகளை நடத்திய மனிதர்கள் தனித்துவமும், அசாதாரணமான வாழ்க்கைமுறையும் கொண்டவர்களாக மாறுகிறார்கள். ஆக கலையின் தோற்றுவாயில் உளவியல்நோய்களும் காரணமாக இருந்திருக்கின்றன. இந்த வித்தியாசமான மந்திரவாதிகள் தங்கள் வாழ்க்கையை ரகசியமாக, மறைஞானத்தன்மை கொண்டதாக, சடங்குகள்பூர்வமாக, வைத்துக் கொண்டனர்.

மந்திரச்சடங்குகளிலிருந்து கலை வளர்ந்தது. தன்னுணர்வுமிக்க கலைஞன் சடங்குவடிவத்தை கையிலெடுத்து அதில் புதியதொன்றை அறிமுகப்படுத்தி அதை மாற்றி உருவத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் இடையே ஒரு புதிய இணைவை, ஒற்றுமையை உருவாக்குகிறான். இதன் மூலம் கலை இயங்கியல்பூர்வமாக வளர்கிறது.

வேட்டைசமூகத்திலும், வர்க்கமற்ற சமூகத்திலும், வர்க்கசமூகத்தின் ஆரம்பகட்டத்திலும் கலை, தொடர்பு ஊடகமாகவும், இயற்கையைக்கீழ்ப்படுத்தும் தொன்மச்சடங்குகளாகவும், ஆவிகளைக் கட்டுப்படுத்தும் மருத்துவமாகவும் சமூகத்தோடு இரண்டறக்கலந்தே வளர்ந்து வந்திருக்கிறது. என்றால் ஆதியில் கலை மக்கள் கலையாகவே இருந்திருக்கிறது.

அரசு என்ற அமைப்பு உருவானபிறகு, கலை உழைப்பிலிருந்து முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டு, பொழுதுபோக்கு சாதனமாகவும், அரசின் பிரச்சார பீரங்கியாகவும், அந்தந்த காலகட்ட அரசின் சட்டங்கள், சநாதன மதங்களின் விதிகளை, சடங்குகளை, சாதிய அமைப்பை, வாழ்க்கை மதிப்பீடுகளை மக்கள் மனதில் நிலைநிறுத்தவும், மக்கள் மனங்களை வென்றெடுக்கவும், கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கலைப்படைப்புகளை உருவாக்கிய படைப்பாளிகள் அந்தந்தக் காலகட்டத்தினை தங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கவே செய்திருக்கிறார்கள். எனவே என்றுமே படைப்புகள் அந்தந்த காலகட்ட அரசின், அரசியலை மக்கள் வாழ்வைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

எந்தவொரு படைப்பின் அடிப்படைஆதாரசுருதி வெளிப்பாடு ( expression ) தான். இது தான் படைப்பரசியலின் அரிச்சுவடி. தன்னை, தன்வாழ்வனுபவங்களை, தான் வாழும் சமூகத்தை, மானுடவிழுமியங்களை, வெளிப்படுத்துகிறது படைப்பு.

அரசு என்ற அமைப்பு உருவானதிலிருந்து படைப்பு அரசதிகாரத்தினை முன்மொழிவதாக மாற்றமடைந்தது தான் படைப்பரசியலின் வளர்ச்சி. எனவே படைப்பின் அரசியல் என்பது அதிகாரத்தின் அரசியலை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ மக்கள் மனதில் ஏற்றி அவர்கள் ஒப்புதலைப் பெறுவது தான். அரசு என்ற அமைப்பு இருக்கும்வரை கலையின் தன்னிச்சையான வளர்ச்சியோ மலர்ச்சியோ சாத்தியமில்லை.

நிலப்பிரபுத்துவகாலத்தில் அரசவையில் அரசர்களுக்காக மட்டுமே படைக்கப்பட்ட கலை பூர்ஷ்வா சமூகம் உருவானபிறகு, முதலாளித்துவசந்தை உருவான பிறகு கலையையும் சந்தைவிதிகளுக்கு உட்படுத்தவும், நிலப்பிரபுத்துவத்தளைகளிலிருந்து கலையை விடுவிக்கவும் உருவாக்கிய கோட்பாடு தான் கலை கலைக்காக என்ற கோட்பாடு.

முதலாளித்துவம் தன் ஆயிரக்கணக்கான கரங்களால் கலையை துரியோதனாலிங்கனம் செய்து கொண்டேயிருக்கிறது. கலையின் அரசியலும் வேறு வேறு ரூபங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. சமத்துவமற்ற, வர்க்கபேத சமூகத்தில் கலையும் வர்க்கபேதமுடனே இருக்கும். அறவிழுமியங்கள் எல்லாம் அரசு தன் நலனுக்காக சமூகத்தின்மீது ஏற்றி வைத்துள்ள வாழ்க்கை மதிப்பீடுகள். எல்லாஅறவிழுமியங்களுக்கும் பின்னால் அரசியலதிகாரத்தின் முகம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இருப்பதை அவதானிக்கமுடியும். அதே போல எல்லாபடைப்புகளிலும் இந்த அறவிழுமியங்களை ஏற்று முன்மொழிவதையும் நாம் கட்டுடைத்துப்பார்க்கலாம். இதில் முற்போக்கு படைப்புகளும் பலியாகும் அபாயத்தைக் காணலாம். ஏனெனில் எல்லோருக்கும் பொதுவான அறம் என்று வர்க்கபேத சமூகத்தில் இருக்கமுடியாது. இன்றைய படைப்புகளின் அரசியல் என்பதை வர்க்கசார்பான அறவிழுமியங்களை வர்க்கபேதமில்லாமல் எல்லோரையும் ஏற்றுக் கொள்ளவைக்கிற ஆளும்வர்க்கத்தின் தந்திரங்கள் இருப்பதை நாம் உணரலாம்.

படைப்பு அரசியலின் இன்னொரு இரு பிளவாக படைப்பை ஜனநாயகப்படுத்துதலும் அதற்கெதிராக சர்வாதிகாரப்படுத்துதலும் என்று கூறலாம். படைப்பில் ஜனநாயகம் என்பது ஒரு படைப்பு யாருக்காக எழுதப்படுகிறது. யாரைப்பற்றி எழுதப்படுகிறது. எதற்காக எழுதப்படுகிறது எந்த மொழியில் எழுதப்படுகிறது, என்ற போதத்துடன் படைக்கப்படும் படைப்பில் கலை இன்பமும் நோக்கமும் ஜனநாயகப்படுத்தப்பட்டு எல்லோரையும் சென்றடையும் உத்வேகம் கொண்டிருக்கும். படைப்பு படைக்கப்படும்போதும், படைக்கப்பட்டபிறகும் வாசகனை சென்று சேர்வதில் ஆர்வமாயிருக்கும். இந்த வகையான படைப்புகளில் படைப்பாளியின் தான் என்னும் அகம் கரைந்து சமூக அகமாக மாறிவிடுகிறது. எனவே படைப்பு இயங்கியல்ரீதியாக வளர்ந்து கொண்டேயிருக்கும்.

இதற்கு மாறாக படைப்பில் தான் என்னும் அகங்காரம் சர்வாதிகாரத்துடன் இயங்கும்போது அது வாசகனை மறுதலிக்கிறது. தன்னைத் தவிர மற்றமை என்று ஒன்று இருப்பதை வெறுக்கிறது. தன்படைப்புமொழியை இறுக்குகிறது. குழூஉக்குறியைப் போல படைப்பதிலும் யாராலும் வாசிக்கப்படவோ, புரிந்துகொள்ளப்படவோ இயலவில்லையெனில் மகிழ்ச்சியடைவது, ஆதிகால மந்திரவாதிகள் போல வெகுமக்களிடமிருந்து தங்கள் படைப்புகளைத் தூரவிலக்கி வைப்பது என்று படைப்பின் இயங்கியலை மறுத்து படைப்பின் ஜனநாயகத்தை தன் சர்வாதிகாரத்தினால் நசுக்க நினைக்கிறது. அனுபூதி, தியானம், வேள்வி, என்றும், கலைக்கு நோக்கம் தேவையில்லை, கலைக்கு எந்த லட்சியமும் கிடையாதென்றோ தன்னைச் சிம்மாசனத்தில் நிலை நிறுத்திக் கொள்ளப் பார்க்கிறது.

முதலாளித்துவத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் படைப்பரசியல் தன் முகங்களை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. தன் தேவைகளுக்கேற்ப படைப்புகளை உருவாக்க ஏராளமான தத்துவக் கோட்பாடுகளைப் படைக்கிறது. அது சர்ரியலிசமாக இருக்கலாம். இருத்தலியமாக இருக்கலாம். ஸ்டரட்சுரலிசமாக இருக்கலாம். நவீனத்துவமாக இருக்கலாம். பின்நவீனத்துவமாக இருக்கலாம். அடையாள அரசியலாக இருக்கலாம். எல்லாக்கோட்பாடுகளிலும் வரைமுறையற்ற முதலாளித்துவத்தின் கொள்ளையினாலும் சூதாட்டத்தினாலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருப்பவர்களை மடைமாற்றவும், தனிமைப்படுத்தவௌம், விரக்தியடையவைக்கவும், இறந்துபோன கடவுளுக்குப் பதிலாக புதிய கடவுள்களை உற்பத்திசெய்யவும், சநாதன, பழைய, இற்றுப்போன, காலாவதியான மரபுகளுக்குள் சரணடையவும் செய்கிற படைப்புகளைப் படைக்கச்செய்கிறது. ஏழுதலை நாகமாக மக்களைத் தழுவி பிளவுண்ட தன் நாவினால் படைப்பாளியையும், வாசகனையும் தீண்டித் தீண்டி மயக்குகிறது.

இன்றைய படைப்புகள் அனைத்தையும் இந்த அடிப்படைப்பார்வையுடன் அணுகிப்பார்க்க வேண்டும்.

DSC00105

Friday, 7 June 2013

அரசு, பதிப்புலகம் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் - சில குறிப்புகள்

 

உதயசங்கர்books2

சமீபகாலமாக அரசாங்கத்தின் நூலக ஆணை கிடைக்காததினால் விரக்தியடைந்திருக்கும் பதிப்பகத்துறை அதற்காகக் குரல் கொடுத்திருக்கிறது. அதற்குக் கொஞ்சம் பலனும் கிடைத்திருக்கிறது. ஆனால் அறிவுசார் வளர்ச்சி எந்த அரசாங்கத்துக்கும் உவப்பானதில்லை. அது மட்டுமல்லாமல் அரசு நூலகங்கள் மூலமாக கிராமங்கள் வரை சமகாலத் தமிழ் அறிவுலகச் செயல்பாடுகள் சென்று விடும் அபாயம் இருப்பதை எல்லா அரசாங்கங்களும் உணர்ந்திருக்கின்றன. அதனால் தான் வாசிப்பு வாசனையே இல்லாதவர்களையே நூலகத்துறை அதிகாரிகளாக வைத்திருக்கின்றனர். அப்படியே நூலக ஆணைக்கான விதிமுறைகளையும் பழைய பாடாவதியாகவே வைத்துக் காப்பாற்றுகின்றனர். பழையபுத்தகக்கடையில் எடைக்குப் புத்தகங்கள் போடுவதைப் போன்ற நடைமுறையினால் புத்தகத்தயாரிப்பு பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாரத்துக்கு இவ்வளவு என்ற அடிமாட்டு ரேட்டுக்குப் புத்தகங்கள் நூலகத்துறையால் வாங்கப்படுகின்றன. அதனால் பதிப்பகங்களும் சில தகிடுதத்த வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர். இல்லையென்றால் முதலுக்கே வந்து விடும் மோசம் என்று எல்லோருக்கும் தெரியும். இது ஊரறிந்த ரகசியம். இப்பேர்க்கொண்ட நூலக ஆணை வாங்குவதற்கு அரசு அலுவலகங்களில் வழக்கமாக நடைபெறும் ரெம்ப ” நேர்மையான “ நடைமுறைகளின் வழியைத் தான் அநேகமாக எல்லாப்பதிப்பகங்களும் கடைப்பிடிக்கின்றன. தமிழர்களை இலவசங்கள்மூலம் கடைத்தேற்றி உலக அரங்கில் தமிழனின் கலை இலக்கிய அரசியல் தத்துவப்பெருமையை காற்றில் பறக்கவிடவே இந்தப்பிறவி எடுத்த திராவிடஅரசாங்கங்கள் இப்படி பதிப்பகங்கள் பிச்சைக்காரர்களைப் போலக் கையேந்தி நிற்பதையே விரும்புகின்றன.  இத்தனை ஆண்டுகளாகியும் இதற்கொரு ஒழுங்கோ முறையோ அரசாங்கம் கொண்டுவர விரும்பவில்லை. மக்களின் வரிப்பணத்தில் நூலக வரிப்பணம் எவ்வளவோ கோடி பயன்படுத்தப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கொருமுறை இப்படிக் குரல் பதிப்பகங்களிடமிருந்து எழும். உடனே கொஞ்சம் ஆர்டர் கிடைக்கும். அப்புறம் மறுபடியும் அதே கதை தான்.  மக்களின் அறியாமையும் சினிமாவை மட்டுமே மூலதனமாகக் கொண்டு மக்களைச் சுரண்டிப்பிழைக்கும் வணிகப்பத்திரிகைகளும், மின்னணு ஊடகங்களும் ஒரு காரணமென்றால், அது ஏதோ புலவர்கள் சமாச்சாரம் என்று மக்களும் நம்பி இன்று புதிதாக நடிக்க வந்த திரைப்பட நடிகையின் நேர்காணலைக் காண்பதில் காட்டுகிற ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கைக்கூட தமிழ்அறிவுலகம் சார்ந்து, நூலுலகம் சார்ந்து செலுத்துவதில்லை. அது ஏதோ, எங்கோ, யாருக்கோ நடக்கிற மாதிரி இருக்கிறார்கள். தமிழ்அரசியல்வாதிகள், திரைப்படநடிகர்கள், மின்னணுநிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், என்று எழுத்தாளர்களைத் தவிர எல்லோரும் இலக்கியவாதிகளாகி விடுகின்றனர். எனவே மக்களுக்கும் உண்மையான எழுத்தாளர்களைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை. எழுத்தாளர்களும் தாங்களே எழுதி, தாங்களே அச்சடித்து, தாங்களே வாசித்து கொள்கிற பத்திரிகைகளில் தங்களுடைய உலக இலக்கியங்களைப் படைத்து அதைத் தங்களுக்குள்ளே உச்சிமுகர்ந்து பாராட்டிக் கொண்டு, உலக இலக்கியத்துக்குச் சற்றும் குறைவில்லாத படைப்புகளைத் தமிழ் எழுத்தாளர்கள் படைக்கிறார்கள் என்று யாருமில்லாத சூன்ய வெளியில் கத்திச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.? இப்படி ஒரு நிலைமையில் இருக்கும் தமிழனை தமிழ்நாட்டை யாராவது காப்பாற்றி விட முடியுமா?

தமிழ்நாட்டை விட குறைந்த மக்கள்தொகை கொண்ட கேரளாவில் மலையாளப் பதிப்புலகம் கொடி கட்டிப் பறக்கிறது. பதிப்பகங்கள் சாதாரணமாக எந்தவொரு நூலாக இருந்தாலும் குறைந்தது இரண்டாயிரம் பிரதிகள் அச்சடிக்கிறார்கள். ஆண்டுதோறும் முக்கிய நகரங்களில் அரசாங்கமே தன்னுடைய செலவில் புத்தகக்கண்காட்சி நடத்துகிறது. உலகப்புத்தகக்கண்காட்சியும் நடத்துகிறது. அங்கே வாசிப்பவர்கள் அதிகமாக இருப்பதினால் பதிப்பகங்கள் அரசு நூலக ஆணைகளுக்காகக் காத்திருப்பதில்லை. அரசு நூலக ஆணையினால் மட்டுமே ஜீவித்திருக்க வேண்டிய அவசியத்தில் இல்லை. ஆனால் எந்த அரசாங்கமும் அது இடதுசாரி அரசாங்கமாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் அரசாங்கமாக இருந்தாலும் சரி நூலக ஆணைகளை நிறுத்தி வைப்பதில்லை. கேரள மக்களின் அரசியல்,சமூக உணர்வின் தளம் அதனுடைய ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை அப்படியில்லை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால் நிலைமை மிக மோசம் என்றும் சொல்லி விட முடியாது. ஏனெனில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் பெருநகரங்களிலும், சிறுநகரங்களிலும் கூட புத்தகக்கண்காட்சி நடைபெற்று வருகிற காலமாக மாற்றம் உருவாகியிருக்கிறது. புத்தகசந்தைக்கான புதிய வெளி திறந்து விடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல உலகமெங்கிலும் ஏதிலிகளாக தஞ்சமடைந்திருக்கும் இலங்கைத் தமிழர்களும் தமிழ்ப்புத்தகச்சந்தைக்கான பரந்த வெளியை உருவாக்கியிருக்கிறார்கள். இவ்வளவு வாய்ப்புகளிருந்தும் தமிழ்ப்பதிப்புலகம் நூலக ஆணைகள் நிறுத்தி வைக்கப்படுவதால் பெரிய அளவுக்கு நஷ்டம் என்றும் எழுத்தாளர்களுக்கு காப்புரிமைத் தொகை வழங்க முடிய வில்லை என்றும் கூக்குரல் எழுப்புகின்றன. இதன் உண்மைத்தன்மை என்ன?

தமிழ்ப்பதிப்பகங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை வணிக ரீதியிலான பதிப்பகங்கள், இவர்கள் ஆண்டு முழுவதும் எல்லாவகையான புத்தகங்களையும் வெளியிட்டுக் கொண்டேயிருப்பவர்கள். இவர்களுடைய இலக்கு விரிந்து பரந்த புதிய, பழைய, எளிய வாசகர்கள். அவர்கள் தமிழ்நாடெங்கும் தங்களுக்கென ஒரு வியாபார வலைப்பின்னலை உருவாக்கி வைத்திருப்பவர்கள். கிட்டத்தட்ட தொழில்முறையிலான நடைமுறைகளைப் பின்பற்றுபவர்கள். அடுத்த வகையிலான பதிப்பகங்கள் தேர்ந்தெடுத்த சமூக இலக்கிய அரசியல் தத்துவப்புத்தகங்களை மட்டும் தேர்ந்தெடுத்த வாசகப்பரப்பிற்காக வெளியிடுபவர்கள் இவர்கள் தொழில்முறையிலும் தொழில்முறைஅல்லாமலும் தங்கள் பதிப்பகங்களை நடத்தி வருபவர்கள். இவர்கள் ஆண்டு முழுவதும் புத்தகங்களை வெளியிடுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் சென்னைப்புத்தகக்கண்காட்சியை ஒட்டி நூல்களை மொத்தமாக வெளியிடுவார்கள், மற்ற காலங்களில் ஒன்றிரண்டாய் நூல்வெளியிடுவார்கள். இவர்களில் இடதுசாரி அமைப்புகள் சார்ந்த பதிப்பகங்களும், அமைப்பல்லாத இடதுசாரி உணர்வுள்ள பதிப்பகங்களும், முழுமையாக சமூக இலக்கிய நூல்களை வெளியிடும் பதிப்பகங்களும் அடங்குவார்கள். மூன்றாவதாக குடிசைத்தொழில் மாதிரி பதிப்பகம் நடத்துபவர்கள். இவர்களுக்கு எந்த வியாபார வலைப்பின்னலும் கிடையாது. அதைப்பற்றிக் கவலைப்படுவதுமில்லை. இவர்களில் ஏராளமான வகை மாதிரிகள் இருக்கிறார்கள். தான் எழுதிய புத்தகத்தைத் தன் மனைவி, குழந்தை, பேரில் ஒரு பதிப்பகம், அதற்கு வீட்டுமுகவரியைப் போட்டு உள்ளூர் அச்சகத்தில் அச்சடித்து உள்ளூர் பிரமுகர்களை வைத்து ஒரு வெளியீட்டு விழா நடத்தி நானும் ஒரு கவிஞர் தான், நானும் ஒரு எழுத்தாளன் தான் என்று உலகத்துக்கு அறிவித்து விட்டு வெளியீட்டுவிழாவில் விற்ற சில புத்தகங்கள் போக மீதிப் புத்தகங்களைக் கட்டி பரணில் ஏற்றி வைத்திருப்பார். அவ்வப்போது திருமணவைபவங்களுக்கு பரிசுப்பொதியாகக் கொண்டுபோய் கொடுத்து பயமுறுத்துவார். அப்படியெல்லாம் கொடுத்தும் ஏன் கட்டி வைத்த புத்தகங்கள் குறையவே மாட்டேங்குறதுன்னு புரியாமலேயே தன்னுடைய பதிப்பகத்தின் அடுத்த புத்தகத்துக்கான சப்ஜெக்ட்டை யோசித்துக் கொண்டிருப்பார். இன்னொரு வகைப் பதிப்பகங்கள், இப்படி புதிதாக எழுதுகிற எழுத்தாளர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு அவர்களுடைய பணத்தின் மதிப்புக்கேற்ப நூறோ, இருநூறோ புத்தகங்களை அச்சடித்து அவர்கள் தலையிலேயே கட்டி விடுவது அவர்களும் மேலே சொன்ன மாதிரி நானும் ஒரு எழுத்தாளன் தான் என்ற அடையாளத்துடனும் தன்னுடைய புத்தகங்கள் தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதான கற்பனையில் மிதக்க அந்தப் புத்தகமும் அந்த எழுத்தாளரிடம் தவிர வேறெங்கும் கிடைக்காமலிருப்பதன் மர்மம் புரியாமலேயே தன்னுடைய இலக்கியப்பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கவும் நேரும். இதில் அந்தப் புத்தகம் அவருக்கே தெரியாமல் நூலக ஆணை பெற்று நூலகத்தில் சென்று சேர்ந்திருக்கும். இன்னும் சில பதிப்பகங்கள் இருக்கின்றன. அவை எந்தப்புத்தகமாயிருந்தாலும் இரண்டே இரண்டு பிரதிகள் மட்டுமே கம்ப்யூட்டர் பிரதி எடுத்து அதற்கு கலர் ஜெராக்ஸ் அட்டை போட்டு நூலக ஆணையை மட்டுமே நம்பி மேற்கொண்டு புத்தகங்களை அச்சடிக்கும் குணாதிசயம் கொண்ட பதிப்பகங்கள். இவர்கள் எதற்காக பதிப்பகம் நடத்துகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. புத்தகத்தின் தயாரிப்புச் செலவு பற்றி எந்த அறிவுமில்லாமல் ஒரு புத்தகத்துக்கான தொகை மதிப்பை அடிமாட்டுவிலையாக அறிவிக்கும் நூலகத்துறையின் ஆணை பெற்று அச்சடித்து என்ன தொழில் செய்து விடமுடியும் என்பது அவர்களுக்கே தெரிந்த தங்கமலை ரகசியம். இதற்கூடாகவும் சிலபல வகைகளில் பதிப்பகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இந்த எல்லாவகையான பதிப்பகங்களும் சேர்ந்து தான் நூலக ஆணைக்கான குரலை ஓங்கி ஒலித்திருக்கின்றன. அதன் விளைவான நூலக ஆணையில் டார்வினின் வலிமையுள்ளது வெல்லும் என்ற கோட்பாட்டின்படி பல பெரிய பதிப்பகங்கள் மொத்தமான ஆணைகளை வாங்கியிருப்பதும் நடந்திருக்கிறது. பதிப்பகங்களின் கூட்டமைப்பான பாபாசி இந்த எல்லாவகையான பதிப்பகங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான எந்தத் திட்டமும் வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. அதே போல எந்த அரசாங்கமாக இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நூலகத்துறையும் நூலக ஆணைகளும் ஒழுங்கான வெளிப்படையான ஒரு நடைமுறையைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி ஏதாவது இயக்கத்தை நடத்தியிருக்கிறதா என்றும் தெரியவில்லை. அந்தந்த ஆட்சியாளர்களை, அவர்களுக்கு வேண்டியவர்களை காக்கா பிடித்தே நூலக ஆணை வாங்க வேண்டிய அவலத்தைத் தீர்க்க ஏதேனும் வழிமுறைகளைக் கண்டிருக்கிறதா என்றும் தெரியவில்லை. புத்தகத்தயாரிப்புச் செலவைக் குறைக்க அரசிடம் ஏதாவது புதிய திட்டங்களை பிரேரிபித்திருக்கிறதா என்றும் தெரியவில்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க பதிப்பகங்களின் ஆதங்கமான நூலக ஆணை கிடைக்காததினால் தான் எழுத்தாளர்களுக்குக் காப்புரிமைத் தொகை வழங்க முடியவில்லை என்ற விஷயத்துக்குள் சற்றே எட்டிப்பார்த்தோமானால் பதிப்பகங்கள் எப்படி தமிழ்எழுத்தாளர்களை எப்படிக் காமெடி பீஸாக வைத்திருக்கிறார்கள் என்று புரியும். அநேகமாக பெரும்பாலான பதிப்பகங்களுக்கு எழுத்தாளர்களுக்குக் காப்புரிமை என்று ஒரு உரிமை இருக்கிறது என்றே தெரியுமா என்று அச்சப்பட வேண்டியதிருக்கிறது. இதில் இடதுசாரி, வலதுசாரி என்ற பேதமில்லை. இதில் இன்னுமொரு முரண்நகை என்னவென்றால் எந்த எழுத்தாளருக்குமே காப்புரிமைத்தொகை வழங்காத பதிப்பகங்கள் பதிப்புரிமை பற்றியும், காப்புரிமை பற்றியும் செமினார்களை நடத்துவதும், தாங்கள் நடத்தும் பத்திரிகைகளில் அது பற்றி வல்லுநர்களின் கருத்துக்களை வெளியிடுவதும் நடக்கிறது. முதலில் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சில பதிப்பகங்களே எழுத்தாளருடன் காப்புரிமை ஒப்பந்தம் போடுகிறார்கள். மற்ற பதிப்பகங்கள் அப்படின்னா என்ன? என்று கேட்பார்கள். பல பதிப்பகங்களுக்கு மட்டுமல்ல நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது சதவீத எழுத்தாளர்களுக்கு அந்தக் காப்புரிமை ஒப்பந்தம் எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாது. எல்லாம் வாய்மொழி வார்த்தைகள் தான். அதுவும் ஏதோ ஒப்பந்தம் என்று யாரும் நினைத்து விடாதீர்கள். என்ன சார் என் கதைத்தொகுப்பை போடலாமா? சரி போடுவோம். இவ்வளவு தான். இது தான் அந்த வாய்மொழி வார்த்தைகள். சமூகத்தின் நிகழ்வுகளில் அறச்சீற்றம் பொங்க எழுதி செயல்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளரும் தன்னுடைய காப்புரிமை பற்றியோ காப்புரிமைத் தொகை பற்றியோ பேசுவதில்லை. ( ஏன்னா புத்தகம் போடறதே பெரிசு என்று அவர் நினைக்கிறார்.) பதிப்பகமும் அதைப்பற்றி அப்போது மட்டுமல்ல எப்போதும் வாய் திறப்பதில்லை. புத்தகம் வெளிவந்து எத்தனை வருடங்கள் ஆன பின்னும் சரி எப்போதாவது யாராவது ஒரு எழுத்தாளர் தெரியாத்தனமாக காப்புரிமைத்தொகை பற்றி கேட்டால் உடனே பதிப்பகம் ஒரு பதிலை ரெடிமேடாக வைத்திருக்கும். உங்க புஸ்தகம் கொஞ்சம் கூட போகலையே..சார்.. எல்லாம் அப்படியே கட்டிக் கிடக்கு. இப்படி ஒரு பதில். இதற்குள் நீங்கள் எல்லாவற்றையும் அடக்கி விடலாம். புத்தகம் போடும்போதும் எத்தனை புத்தகம் போடுகிறோம் என்று சொல்வதுமில்லை. எழுத்துபூர்வ ஒப்பந்தம் இல்லாததினால் தெரிவதுமில்லை. இத்தனை ஆண்டுகளில் இத்தனை புத்தகங்கள் தான் விற்றிருக்கிறது என்றும் சொல்வதில்லை. அதற்குமேல் நம் எழுத்தாளப்பெருமகனாருக்கு இதைப்பற்றிக்கேட்பதற்கு தைரியமும் இல்லை. அதனால் பதிப்பகம் சொல்கிற புத்தகம் போகல சார் என்று கேட்ட எழுத்தாளர் மனம் சோர்ந்து போவார். இனி ஒருபோதும் காப்புரிமைத்தொகை பற்றி வாயைத் திறப்பதில்லை என்று முடிவு செய்து விடுவார். இன்னும் சில பதிப்பகங்கள் எழுத்தாளரின் சமூக அந்தஸ்தை வைத்து காப்புரிமைத்தொகை கொடுப்பதா என்று தீர்மானிக்கின்றன. ஐயோ பாவம் அவர் கஷ்டப்படறார் அவருக்குக் கொடுத்துருவோம் என்றும் அவருக்கென்ன நல்ல ஜாப்பில இருக்கார் அவருக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? என்றும் பாகுபாடு பார்க்கின்றன. இதுவும் அப்படியே என்றும் சொல்ல முடியாது. மார்க்கெட்டில் டிமாண்ட் இருக்கிற எழுத்தாளரென்றால் அவர் எந்த அந்தஸ்திலிருந்தாலும் காப்புரிமைத்தொகையை பக்காவாக வருடந்தோறும் ஸ்டேட்மெண்ட் போட்டு அனுப்பி விடுகிறதும் உண்டு. மார்க்கெட் டிமாண்ட் என்கிற பரவலாக வாசிக்கப்படுகிற அங்கீகாரம் எழுத்தாளர்கள் பல உபாயங்களைச் செய்வதால் வந்தடைகிறது. அந்த உபாயங்களைச் செய்யத்தெரியாத அப்பாவிகள் புத்தகங்களைக் கொடுத்து விட்டு அங்கீகாரமும் இல்லாமல் காப்புரிமைத்தொகையும் கிடைக்காமல், அதை மறைக்க எழுத்தாளன் சமூகத்தின் மனசாட்சி அவனுக்கு இதெல்லாம் கால்தூசி. பாரதியைப்பார். புதுமைப்பித்தனைப்பார். என்று ஜம்பம் பேசிக் கொண்டு திரிவார்கள்.

இதில் மொழிபெயர்ப்பு புத்தகங்களென்றால் பதிப்பகங்களுக்கு அல்வா திங்கிற மாதிரி. ஏன் திடீரென்று எல்லாபதிப்பகங்களும் மொழிபெயர்ப்பு நூல்களின் மீது அபரிமிதமான ஆர்வத்தை கடந்த சில வருடங்களாகச் செலுத்தி வருகின்றன தெரியுமா? பிற நாட்டு நல்லறிஞர் நூல்களைத் தமிழில் கொண்டுவந்து தமிழ் மொழியை வளப்படுத்தவா என்ற சந்தேகம் சிலருக்கு வந்தது. முக்கியமான காரணம் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு காப்புரிமைத்தொகை வழங்க வேண்டியதில்லை. அதுவும் ஆங்கிலமென்றால் அவுட்ரேட்டாக மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுத்துவிட்டு போட்டுக் கொண்டேயிருக்கலாம். மலையாளம் போன்ற கொஞ்சம் விழிப்புணர்வு மிக்க எழுத்தாளர்களைக் கொண்ட மொழியாக இருந்தால் மட்டும் அந்த மூல ஆசிரியருக்கு மட்டும் காப்புரிமைத்தொகை ஐந்து சதவீதம் தருவது. அதையும் மொழிபெயர்ப்புக்கு நூலைத் தேர்ந்தெடுத்து மூல ஆசிரியரிடம் அனுமதி பெற்று மொழிபெயர்த்து பதிப்பகத்தாரிடம் கொடுத்து அது வெளிவந்ததும் நூலை மூல ஆசிரியருக்கு அனுப்பி வைத்து அவருக்குக் காப்புரிமைத்தொகையையும் பதிப்பகத்தை நச்சரித்து வாங்கி அனுப்பி வைத்த பிறகு அவ்வளவு உழைப்புக்கும் தனக்குக் கிடைக்கும் மொழிபெயர்ப்பாளர்பிரதிகள் ஐந்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் தியாகி தான் மொழிபெயர்ப்பாளர். அவருடைய உழைப்பை பதிப்பகங்கள் மதிப்பதேயில்லை. உழைப்பையே மதிக்காத போது அவருக்கான காப்புரிமை பற்றி என்ன பேசமுடியும்?

சில பதிப்பகங்கள் தங்கள் பதிப்பகத்திலேயே வெளிவந்த புத்தகங்களில் சில எழுத்தாளர்களுக்கு காப்புரிமைத் தொகை வழங்குவதும் சில எழுத்தாளர்களுக்கு அது பற்றிய மூச்சே காட்டாமல் இருப்பதும் நடக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் எதில் ஒற்றுமையாக இருக்கிறார்களோ இல்லையோ தங்களுக்கு காப்புரிமைத்தொகை கிடைக்கவில்லை என்பதைப் பற்றியோ பதிப்பகங்கள் அறவுணர்வுடன் அதைக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியோ எங்கும் பேசுவதில்லை. ஒருவேளை அதைப்பற்றி பேசினால் பதிப்பகங்கள் ஒன்று சேர்ந்து தீர்மானம் போட்டு தங்கள் புத்தகங்களைப் போடாமல் போய் விடுவார்களோ என்ற அச்சமோ என்னவோ.

காப்புரிமை என்பது ஒரு படைப்பாளியின் படைப்பைச் சந்தைப்படுத்தும் போது அவருக்குச் சேரவேண்டிய மதிப்பூதியம். அந்தப் படைப்பாளியின் படைப்பை சந்தையில் விற்பனை செய்து வருகின்ற மொத்தத்தொகையில் பத்தோ, பதினைந்தோ, இருபதோ சதவீதம் அந்த படைப்பாளியின் சந்தை மதிப்பை வைத்து கொடுக்கப்படுவது. இப்படிப் பதிப்பகங்கள் எழுத்தாளர்களின் படைப்பை விற்றுத் தாங்கள் வருவாய் அடையும்போது அந்த வருவாய்க்கான மூலகாரணகர்த்தாவாகிய படைப்பாளிக்கு அவருக்கு உரிய காப்புரிமைத்தொகை கொடுப்பதில் என்ன தயக்கம் என்றும் தெரியவில்லை. ஒரு புத்தகத்தைப் வெளியிடுவதற்கும் வெளியிட மறுப்பதற்கும் ஏன் அந்தப் படைப்பைத் திருத்தி எழுதச்சொல்லிக் கேட்பதற்கும் ஒரு பதிப்பகத்துக்கு எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால் ஒரு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிட்ட பிறகு அந்தப் புத்தகத்தை விற்பனை செய்கிற பொறுப்பு அந்தப் பதிப்பகம் சார்ந்தது. அந்த நூலுக்கான வெளியீட்டு நிகழ்வு, அந்த நூலைப் பற்றிய மதிப்புரைகள், அதை புரோமோட் பண்ணுவதற்கான விளம்பரங்கள், எல்லாம் பதிப்பகங்கள் செய்ய வேண்டிய வேலை. ஆனால் இங்கே என்ன நடக்கிறது? எழுத்தாளரே தன் கைகாசை செலவு செய்து வெளியீட்டு விழா நடத்துகிறார். புத்தகங்களை நண்பர்களுக்கு ஓசிக்கு அனுப்புகிறார். அவர்களைப் பலமுறை நச்சரித்து மதிப்புரை வாங்கி பத்திரிகைகளில் வரவழைக்கிறார். இதில் எந்த வேலையையும் பெரும்பாலான பதிப்பகங்கள் செய்வதில்லை. புத்த்கங்களை விற்பனை செய்வதற்காக தமிழகமெங்கும் நூல்களை அனுப்புவதிலாகட்டும், விற்பனையான நூல்களுக்கான தொகையை வசூலிப்பதிலாகட்டும், எந்தப்பதிப்பகமும் தொழில்முறையில் செய்வதில்லை. அப்படித் தொழில்முறையில் செயல்பட்ட பதிப்பகங்கள் மகத்தான வெற்றி பெற்றிருக்கின்றன என்பதற்கு நம் கண்முன்னே உதாரணங்கள் இருக்கின்றன.

  ஒரு வேளை எல்லா எழுத்தாளர்களுக்கும் லட்சக்கணக்கில் காப்புரிமைத்தொகை கொடுக்க வேண்டியதிருக்குமோ என்றால் அதுவுமில்லை. ஆயிரக்கணக்கு என்பது கூட சில சமயம் அதிகம் தான். ஆனால் அதை கொடுப்பதற்கும் மனமில்லாத பதிப்பகங்கள் தான் ஏராளம். இதற்கும் கேரளாவையே உதாரணம் சொல்ல வேண்டியதிருக்கிறது. என்ன செய்ய? நல்ல அரசு உத்தியோகத்திலிருந்து முழுநேர எழுத்தாளராக மாறிய எழுத்தாளர்கள்  கேரளத்தில் அதிகம். காரணம் எழுத்தின் மூலமாக தங்களுக்குக் கிடைக்கும் வருவாய் போதுமானதாக இருந்தது தான் காரணம். அதற்கு அங்குள்ள பதிப்பகங்கள் எழுத்தாளர்களை மதிக்கின்றன. மக்கள் மதிக்கின்றனர். அரசியல்வாதிகள் மதிக்கின்றனர். அங்கே நீங்க என்ன செய்யறீங்க என்ற கேள்விக்கு அப்போது தான் எழுதத்தொடங்கியிருக்கும் ஒருவர்கூட நான் எழுத்தாளர் என்று தலை நிமிர்ந்து சொல்ல முடியும். ஆனால் இங்கே பிரபலமான எழுத்தாளர்கள் கூட அப்படிச் சொவதற்கு கொஞ்சம் யோசிப்பார்கள்.  இங்கே எழுத்தாளர் என்றால் எந்தப் போலீஸ் ஸ்டேஷனில் என்றோ, பத்திர எழுத்தாளர் என்றோ புரிந்து கொள்பவர்களை அதிகமாகக் கொண்ட நாட்டில் வாழநேர்ந்து விட்டது. இதில் பதிப்பகங்களும் நம்நாட்டு விவசாயிகளை ஏமாற்றும் வியாபாரிகளைப் போல எழுத்தாளர்களிடம் நடந்து கொண்டால் நஷ்டம் பதிப்பகங்களுக்கு மட்டுமல்ல. நாட்டின் கலை இலக்கிய, பண்பாட்டு, அறிவுலகப் பாரம்பரியத்துக்கும் தான்.

நன்றி- புதியபார்வை

Wednesday, 18 July 2012

படைப்பும் விமரிசனமும்

 

உதயசங்கர்

116

விமரிசனம் என்பது ஒரு படைப்பைச் சார்ந்து இயங்க வேண்டியது. படைப்பைப் போலவே உயர்ந்து நிற்கவும் கூடியது. சில சமயங்களில் அதன் ஆழ அகல விரிவினால் படைப்புக்குச் சமமாகவும் விமரிசனம் அமையும். என்றாலும் பொதுவாக விமரிசனம் படைப்பினை ஆதார சுருதியாகக் கொண்டு படைப்பிலுள்ள நுட்பதிட்பங்களை வாசகனுக்கும், சிலநேரங்களில் படைப்பாளிக்கே கூட விளக்கும். அதோடு படைப்பிலக்கியக் கொள்கைகளை ஆராய்ந்து ஒப்பிட்டு படைப்பையும் அதன் தாத்பரியங்களையும் துலங்கச் செய்யும். ஆதலால் விமரிசனம் படைப்பின் அளவுக்குச் சுயமாகவும் இயங்கும்.

அழகியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, அதன் வெளிச்சத்தில் படைப்பின் சார்பு நிலையை இனங்கண்டு படைப்பின் சூட்சுமங்களை, அது தொற்ற வைக்கும் அநுபவச்சிலிர்ப்பை தெரிவிக்கும் ஆதாரக்கருத்தினை எடுத்துரைத்து படைப்பின் உள்வெளி அழகினைச் சிலாகித்து, படைப்பின் போதாமைகளை அக்கறையோடு எடுத்துக்காட்டி படைப்பாளி தனது எழுத்துப் பயணத்தின் அடுத்த நிலைக்குச் செல்ல ஊக்குவித்தும், வாசகனுக்கு அந்தப் படைப்போடு ஒரு அந்நியோன்யமான உறவை ஏற்படுத்தும் ஒரு பாலமாகவும் விமரிசனம் அமைய வேண்டும்.

வாசகனைப் பொறுத்தவரை விமரிசனம் படைப்பை நெருங்கிச் செல்ல உதவுகிற பாலமாக மட்டுமே இருக்க வேண்டும். பாலமே பெருந்தடையாகவோ, முன் அபிப்ராயங்களை ஏற்படுத்துகிற பெருஞ்சுவராகவோ மாறி விடக் கூடாது. அப்படி மாறி விட்டால் வாசகன் படைப்பிலிருந்து அந்நியப்பட்டு விடவோ, படைப்பை முன் முடிவுகளோடு அணுகவோ நேரிடும். அப்போது படைப்பை முழுமையாக அதன் அழகோடும் அசிங்கத்தோடும் வாசகன் தரிசிக்க முடியாமல் போகலாம். அப்படி நேருமானால் வாசனுக்கும், படைப்புக்கும், படைப்பாளிக்கும் பெரும் நஷ்டம்.

விமரிசகன் ஒரு வகையில் படைப்பாளியை விடவும் அறிவார்த்தமாக மிகுந்த பலவானாக இருக்க வேண்டும். படைப்பின் நுட்பங்களான வடிவ அழகு, மொழி, நடை, உத்தி, செய்நேர்த்தி, தொழில்திறமை, குறித்த விரிந்த அறிவு வேண்டும். உலக இலக்கியங்கள், பிறமொழி இலக்கியங்கள், உலகளாவிய சமீபத்திய இலக்கியப்போக்குகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். மொழி வரலாறு, இலக்கிய வரலாறு குறித்த பொதுவான கண்ணோட்டமும், தனக்கேயுரிய பிரத்யேகக் கண்ணோட்டமும், வேண்டும். இது வரை வந்துள்ள படைப்புகளைக் குறித்த பரந்த அறிவும், விமரிசனம் செய்யும் படைப்பின் வீரியம் குறித்தும் தெளிவு வேண்டும். தனிமனித விரோதம், வெறுப்புகளினால் விமரிசனம் பாதிப்படையக் கூடாது. அப்படி தனிமனித விருப்பு வெறுப்புகளினால் பாதிக்கப்பட்டு விமரிசனம் தன் நிலை பிறழ்ந்து வெளிப்பட்டால் அது எவ்வளவு ஆதாரங்களோடு இருந்தாலும் எளிதில் சுயமுகம் காட்டிவிடும்.அதேபோல் வேண்டுமென்றே படைப்பில் அதற்கான நியாயங்கள் இல்லாதபோதும் வெறும் புகழுரைகளால் அர்ச்சனை செய்வதும் படைப்பைக் கேலிக்குரியதாக்கி விடும். ஏனென்றால் வெறும் அபிப்ராயங்களை விமரிசனம் என்ற பெயர் கொள்ள முடியாது.

படைப்பை அணுகும்போது படைப்பாளியைப் போலவே தன்னைக் கரைத்து, படைப்பைச் செரித்து, அது தரும் அநுபவ உணர்வினை பூரணமாக உணர்ந்து பின்னர் அதைத் தன் பேரறிவு கொண்டு விளக்கி, அதற்கான தர்க்கநியாயங்களை நிறுவி படைப்பிற்கு அதற்குரிய தகுதியை அளிக்க வேண்டும். விமரிசனங்களில் இரண்டு வகை உண்டு. ஆக்கபூர்வ விமரிசனம், அழிவுப் பூர்வ விமரிசனம். படைப்பாளியின் அடிப்படை நேர்மை மனித மேன்மைக்கானதாக இருக்கும்போது படைப்பு குறித்த நிறைகுறைகளை ஆக்கபூர்வமான வகையில் படைப்பாளி ஏற்றுக் கொள்ளும் வகையிலும், கற்றுக் கொள்ளும் வகையிலும், அடுத்த படைப்பினை இன்னும் சிறப்பாகச் செய்வதற்குத் தயார்படுத்தும் வகையிலும் இருக்கும்படிச் செய்யப் படுவது ஆக்கபூர்வ விமரிசனம்.

படைப்பாளியின் அடிப்படை நோக்கம் மானுட இழிவை, வக்கிரத்தைத் தன் இலக்காகக் கொண்டிருக்குமானால், அதை எவ்வளவுக்கெவ்வளவு தோலுரிக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு மறைந்திருக்கும் அதன் கோரப்பற்களை வெளிப்படுத்தும் விதமாகவும், மனிதவன்மத்தை உள்நோக்கமாகக் கொண்ட படைப்புகளை அடையாளம் காட்டும் விதமாக அழிவுப் பூர்வ விமரிசனம் அமைய வேண்டும். இருப்பதிலேயே இது தான் மிகவும் கடினமான காரியம். இந்த மாதிரியான படைப்புகளும், படைப்பாளிகளும் தான் எல்லாவித சித்து வேலைகளையும் காட்டுவார்கள். உண்மையோவென மயங்க வைக்கும் நிழல் தோற்றங்களை ஏற்படுத்துவார்கள். இவர்களின் உண்மைச் சொரூபத்தை உலகிற்கு தெரிவிக்க விமரிசகனுக்கு ஓயாத படிப்பும் தீராத தேடலும் வேண்டும்.

மனித சமூக வரலாறு குறித்த தெளிந்த ஞானம், கலையின் தோற்றம், வளர்ச்சி குறித்த அறிவு, படைப்பியக்கம் குறித்த இயங்கியல் படைப்பின் நுட்பங்கள் குறித்த கூருணர்வு, இவையெல்லாம் கொண்டு ஒரு விமரிசகன் இயங்க வேண்டும்.

ஒரே படைப்பில் கூட சில முற்போக்கான கூறுகளும், சில பிற்போக்கான கூறுகளும், இருக்கலாம். ஒரே படைப்பாளியே சில முற்போக்கான, மனிதமேன்மையை வேண்டும் படைப்புகளைப் படைத்து விட்டு, அவரே அவருடைய வேறு சில படைப்புகளை மோசமானதாகவும் படைத்திருக்கலாம். கருத்தளவில் முற்போக்காகவும் கலைரீதியில் வெறும் குப்பையாகவும் படைப்பு இருக்கலாம். வடிவத்தில் மிகச் சிறந்ததாகவும் உள்ளடக்கத்தில் மிக மோசமாகவும் இருக்கலாம். சாதாரண வாசகனை விடவும் விமரிசகன் இதனை உடனே கண்டு கொள்வான். அதற்குத் தேவையான பயிற்சியையும், உழைப்பையும் அவன் செலுத்த வேண்டும்.

எப்பேர்ப்பட்ட படைப்பையும் அதன் வேரிலிருந்து நுனிவரை இனங்கண்டு வெளிப்படுத்த வேண்டியது விமரிசகனின் வேலை. சில சமயம் இந்தக் காரியத்தினால் படைப்பின் தீ வாசக மனங்களில் பற்றிப் பிடித்து, செயல்திறன் மிக்க பௌதீக சக்தியாகவும் மாறக்கூடும். அது சமூக மாற்றத்துக்குத் துணை செய்யும் வல்லமை கொண்டதாக உருமாறும்.

Sunday, 1 July 2012

கலையின் இயங்கியல் – சிறு குறிப்பு

 

உதயசங்கர்

abstract 

எந்தவொரு கலைப்படைப்பின் முதல் நோக்கம் கலை இன்பமே. பின்னர் அந்தப் படைப்பிலிருந்து கிடைக்கும் அநுபவபகிர்வு. அந்த அநுபவப்பகிர்வின் வழியாக நாம் புரிந்து கொள்கிற சிந்தனைத்தளம். இது ஒரு படைப்பை வாசிக்கிற வாசகனின் பயணம் என்று சொல்லலாம். இந்தப் பயணத்தின் முடிவில் படைப்பாளியும் வாசகனும் ஒரே இடத்தில் சந்திக்கலாம். அப்போது அடுத்த பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்ய முயற்சிக்கிறார்கள். அந்தப் பயணம் இருவரையும் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

கலைஞன் தன்னுடைய வாழ்வில் எதிர் கொள்ள நேரிடும் நிகழ்வுகளில் சில அநுபவப்பொறிகள் மின்னலெனக் கருக்கொண்டு மனதில் வளர்கின்றன. வளர்ச்சியின் வேகமும், ஆழமும், கலைஞனின் மொழி ஆளுமை, படைப்பாற்றலில் உள்ள தீவிர வேட்கை, வாசிப்பு அநுபவம், அவனுடைய அழகியல் கோட்பாடு, இவற்றின் அடிப்படையிலேயே இருக்கும். வெளிப்பாட்டுக்குத் தேவையான உத்வேகம் புறவயமாகவோ, அகவயமாகவோ, எந்த நிலையிலும், எந்த நேரத்திலும் பிறக்கலாம். அப்போது காகிததில், கணிணியில் பதிவு செய்யும் நிகழ்வு நடக்கிறது. இந்தப் புறவயமான வெளிப்பாட்டுக்கு முன்னரே மனசுக்குள் பலமுறை வீரியமிக்க மொழியலகுகளை மாற்றி, மாற்றிப் போட்டு எழுதிப் பார்த்தபிறகே காகிதத்தில் எழுதும் துணிவு வந்தது.

கலைஞன் சுய அநுபங்களிருந்தோ, அறிவனுபவங்களிலிருந்தோ, புராணிக, சரித்திர, தொல்கதை வாசிப்பனுபவங்களிலிருந்தோ, தத்துவார்த்த அனுபவங்களிலிருந்தோ, தன் படைப்புக்கான உத்வேகத்தைப் பெறலாம். ஆனால் அந்த உத்வேகம், படைப்பின்சிறு பொறி நின்று நிதானித்து நன்றாக அடைகாக்கப்பட்டு, முழு உருவம் அடைந்த பிறகு வெளிவந்திருக்கிறதா அல்லது அவசரமாக, அரைகுறையாக வெளிவந்திருக்கிறதா என்பதை எந்த எளிய வாசகனும் கண்டுபிடித்து விடுவான். இதற்கு ஒரளவு வாசிப்பனுபவமும், நுண்ணுணர்வும் இருந்தாலே போதுமானது.

கலைஞனிடம் பிறந்த படைப்பு வாசகனிடமே நிறைவடைகிறது. அது மீண்டும் கலைஞனிடத்தில் வாசகானுபவக்குறிப்புகளுடன் வரும்போது வேறொன்றாக மாறிவிடுகிறது. அது வெறும் அரூபமான குறியியல் சூத்திரமாக இருப்பதில்லை. ஒவ்வொரு வாசகர் வாசிக்கும் போதும் அது அவரிடத்தில் அவருடைய உணர்ச்சித் தளம், சிந்தனைத்தளம், ஆகியவற்றில் செயல்பட்டு பௌதீகசக்தியாக மாறுகின்ற வல்லமை கொண்டதாகிறது. கலைஞனித்திலிருந்து வெளிப்படும் படைப்பு தன் வெளிப்பாட்டுச் செயல் முடிந்ததும் தாயிடமிருந்து தொப்புள்க்கொடி அறுந்த குழந்தையைப் போல சுயம்புவாகி விடுகிறது. அந்தப் படைப்பின் மீது படைப்பாளிக்கு தன் படைப்பு என்ற உரிமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஏனெனில் படைப்பாளியிடமிருந்து வெளிப்பட்ட படைப்பு உறைநிலையிலேயே இருக்கிறது. வாசகன் அதை வாசிக்கும் போதே அது உயிர்பெறுகிறது. படைப்பு முழுமையடைகிற இடமாக வாசகனே இருக்கிறான். வாசகன் கரங்களால் தொடும் வரை படைப்பு மண்ணில் புதைந்த விதையே போல் படைப்பு தற்காலிக உறக்கம் கொள்கிறது. மண்ணைக் கீறி மலரச் செய்வது வாசகனே.

படைப்பு வாசகனால் வாசிக்கப்படும்போது ஒரே தளத்தில் அர்த்தத்தையும் தரலாம். பல தளங்களில் பல அர்த்தங்களையும் தரலாம். பலருக்கு பலவிதமாகவும் அர்த்தம் தரலாம். இதற்கு வாசகனின் நுண்ணுணர்வு, இலக்கியப்பயிற்சி, சமூக அக்கறை, இவை காரணங்களாக இருக்கும். எனவே ஒரே படைப்பு காலந்தோறும் வெவ்வேறு மாதிரியாக வாசிக்கப்படுவதும் நிகழும். ஆனால் அதற்கு படைப்பில் அதற்கான அடிப்படைக் கூறுகள் இருக்கவேண்டும். பாதைகள் தெரியாத கும்மிருளாய் படைப்பு இருந்து அதில் பல்வேறு அர்த்தங்கள் இருப்பதாகப் பாவனை செய்யும் படைப்பாளிகளும், படைப்புகளும் உண்டு. அதற்காக படைப்பின் அடிப்படை கலை அழகியல் முறைமையிலிருந்து பிறழ்ந்து வெறும் சொற்கோர்வையாகவோ, நேரடியான,செய்தியாகவோ, பிரச்சாரமாகவோ, படைப்பு விளங்குமானால் அது காலத்தால் நிராகரிக்கப்படும்.

எல்லாவெளிப்பாடும் அடிப்படையில் பிரச்சாரமே. ஆனால் அந்த வெளிப்பாட்டுமுறையின் அடிப்படைத் தர்க்கநியதிகள் அதில் தொழிற்பட்டிருத்தல் வேண்டும். அதுவே அந்த வெளிப்பாட்டை செய்தி எனவும், பேச்சு எனவும், கவிதை எனவும், கதை எனவும், இன்ன பிற கலைவடிவங்கள் எனவும் வகை பிரிக்கிறது.

படைப்பு எளிமையானதாக இருக்க வேண்டும். ஆனால் இது அந்தப் படைப்பிற்கான அடிப்படை விதியாகக் கொள்ள முடியாது. மொழியின் மீதும், தன் கலைச்சிந்தனைகளின் மீதும் ஆளுமையும் தெளிவும் சித்திக்கும்போது படைப்பில் எளிமை உருவாகும். ஆனால் எளிமையானதெல்லாம் கலையாகி விடாது என்ற எச்சரிக்கையுணர்வும் தேவைப்படுகிறது.

ஒரு படைப்பு படைக்கப்படும்போது தன்னுணர்வுப்பூர்வமானது. அறிவும் உணர்வும் ஊடாடி நெசவு செய்கிற காரியமாக படைப்பு திகழ்கிறது. அனுபவப்பொறி பற்றித் தீயாய் எரியும்வரை வேண்டுமானால் தன்னுணர்வும், தன்னுணர்வுமற்ற நிலையில் படைப்பு தன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதுவுமே முன்னனுபவங்களின், வாசிப்பனுபபவங்களின் சாரம் ஊறிக் கிடக்கும் ஊற்றின் கண் தான். மற்றபடி, அநுபூதிநிலை, தெய்வீக உணர்வு, என்பதெல்லாம் மூட நம்பிக்கைகளே.

எல்லா அறிவுத்துறைகளையும் போலவே படைப்பிலக்கிய அறிவுத்துறையிலும் படைப்பின் நுட்பங்கள் குறித்தான ஆய்வும், அடிப்படை அலகுகள் குறித்த உரையாடலும் அவசியம். அப்போது தான் வாசகனுக்கும் ஏன் படைப்பாளிக்கும் கூட படைப்பின் சூட்சுமங்களை விளங்கிக் கொள்ளமுடியும்.

DSC01492