Saturday 8 April 2017

விசும்பல்

விசும்பல்

உதயசங்கர்

மீண்டும் அந்தச் சத்தம். நரேனுக்கு லேசான பயம் துளிர்த்தது. சில நொடிகள் இடைவெளி. அமைதியின் கதவுகளைப் படீரெனத் திறந்து கொண்டு மறுபடியும் அந்தச் சத்தம்.கேட்டது. சத்தம் என்றால் சத்தமில்லை. ஒரு ஈளக்கம். யாரோ ஒரு வயது முதிர்ந்த ஆண் அழுகிற ஒலி. மனசை அறுக்கிற அந்த இழுவை. அழுகை என்று கூடச் சொல்லமுடியாது. அழுகையை அடக்க முயற்சி செய்து முடியாமல் கார்வையுடன் குரல் தழுதழுக்க வருகின்ற ஒலி. நிராதரவான அந்தச் சத்தம் ஒரு ஆணின் தொண்டையில் கோழை அடைத்து தட்டுத்தடுமாறி காற்று வெளியேறும்போது வருகிற பிசிறலான ஒரு சப்தம். சில நிமிடங்கள் தொடர்ந்து கேட்டது. பின்னர் சில நொடிகள் அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அமைதி அழுகையை அடக்கியதனால் வந்த அமைதி. மறுபடியும் பீறிட்டு வரும் அழுகையை வாயைப் பொத்தி அடக்க முயற்சிக்கும் சத்தமும் கேட்டது. நரேன் திரும்பிப் பார்த்தான். அருகில் திவ்யா புதுவீட்டின் பெருமிதம் துலங்க ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். உற்றுக்கேட்டால் மட்டுமே தெரிகிற லேசான குறட்டைச் சத்தமும் கேட்டது. மணியைப் பார்த்தான். மணி இரண்டரை. உடம்பில் லேசான நடுக்கம் ஓடி மறைந்தது. திவ்யாவை எழுப்பலாமா? அவளுடைய சந்தோஷத்தை ஏன் கெடுக்க வேண்டும்? அசங்காமல் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். இப்போது மறுபடியும் அந்த அழுகை.  எண்ணெயின் முகத்தை நீண்ட நாட்களாகக் காணாத பெரிய மரக்கதவுக்கீல்களின் அழுகையைப் போல கேட்க ஆரம்பித்தது. உற்றுக் கவனித்தான் நரேன். அது முன்னால் உள்ள படிப்பறையிலிருந்து வருகிற மாதிரி இருந்தது. ஒருவழியாக தைரியத்தை சேர்த்துக் கொண்டு மெல்ல எழுந்து படுக்கையறையை விட்டு வெளியே வந்தான்.
நரேனும் திவ்யாவும் புது வீட்டுக்குக் குடிவந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. இன்னமும் புதிய வீட்டின் மணம் சுவாசத்தில் கலந்து கிளர்ச்சியைத் தூண்டிக் கொண்டு தான் இருக்கிறது. உற்சாகம் கொப்பளிக்க திவ்யா வீட்டின் ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு மூலையிலும் சென்று ரசித்துக் கொண்டிருந்தாள். சிறுபிள்ளைகள் ஆச்சரியப்படுவதைப் போல அந்த வீட்டைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய அடக்க முடியாத சந்தோஷமும், ஆச்சரியம் அவனுக்கு முத்தங்களாக மாறின. அவன் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறி விட்டதாகவே நினைத்தான். அவன் எஞ்சினியரிங் படித்து முடித்து அரசு உத்தியோகத்துக்கான குரூப் டூ பரீட்சை எழுதி பாஸ் பண்ணி அரசு உத்தியோகத்தில் உட்கார்ந்து விட்டான். இனி கவலையில்லை. பாதுகாப்பான வேலை. நிரந்தரமான சம்பளம். விலைவாசி உயர்வைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. வருடத்துக்கு ரெண்டுமுறை சம்பள உயர்வு கிடைக்கும். வேறென்ன வேண்டும்?
அவனும் திவ்யாவும் மிகுந்த முன்யோசனையோடு திட்டமிட்டு வாங்கிய வீடு. பெருநகரை விட்டு வெகுதூரம் விலகி இருந்தாலும் முதன்முதலில் வீட்டைப் பார்த்ததுமே மனதில் பாரதியின் காணிநிலம் வேண்டும் பராசக்தி என்ற கவிதைவரி துள்ளி வந்தது. அப்படி ஒரு ஏகாந்தமான சூழல். சுற்றிலும் வீடுகள் இருந்தாலும் எல்லாவீடுகளும் கடலில் நடுவே உள்ள தீவுகள் போல தனித்தனியே இருந்தன. விலை அதிகம் என்றாலும் நம்பகமான புரோமோட்டர்ஸ், என்றதும் இருவரும் உடனே ஓகே சொல்லி விட்டார்கள். ஆனால் இந்த ஒரு வாரத்திற்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது ஒருவேளை வாஸ்து சரியாகப்பார்த்திருக்க மாட்டார்களோ? தச்சு கழித்திருக்க மாட்டார்களோ..? என்ற சிந்தனைகள் அவனுக்குள் ஓடின.
கிரஹப்பிரவேசத்தன்று இரவே அந்த அழுகைச் சத்தம் கேட்டது. ஆனால் நரேனுக்கு கிரஹப்பிரவேச வேலை அசதியில் அடித்துப் போட்ட மாதிரி தூங்கி விட்டான். இடையில் பாத்ரூம் போவதற்காக எழும்போது கேட்டாலும் அது மூளையில் பதியவேயில்லை. பாத்ரூம் போய்விட்டு வந்து மறுபடியும் திவ்யாவைக் கட்டிக் கொண்டு உறங்கி விட்டான். ஆனால் மறுநாள் திங்கள்கிழமையிலிருந்து சொல்லி வைத்த மாதிரி அந்த அழுகை அவனை தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டது. அவன் பயந்து போய் உறங்கியும் உறங்காமலும் இரவைக் கழித்தான். ஒருவேளை அவனுக்குத்தான் அப்படி கேட்கிறதா? திவ்யா கொஞ்சம் கூட அசங்கவில்லையே. பிரம்மையாக இருக்கலாமோ? ஆனால் மிகத்தெளிவாகக் கேட்கிறதே. கிளையர் ஆடியன்ஸ் நோயாக இருக்கலாமோ ? எங்கெங்கோ கேட்கிற சத்தங்கள் இங்கே மிக அருகில் கேட்பதான பாவனையாக இருக்கலாமோ? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
புதன்கிழமை அந்த ஏரியாவில் இருக்கிற சில வீடுகளுக்குப் போய் வலிய அறிமுகம் செய்து கொண்டான். குடியிருப்போர் நலச்சங்கம் ஆரம்பிப்பதைப் பற்றி பேசினான். அப்படிப் பேசுகிற சாக்கில்,
“ இங்க வேற ஒண்ணும் பிரச்னையில்லியே..” என்று கேட்டு ஆழம் பார்த்தான். மற்ற யாரும் அப்படி ஏதும் இருப்பதாக சிறு சமிக்ஞை கூடக் காட்டவில்லை. இப்போது நரேனுக்கு வேறு ஒரு சந்தேகம் வந்தது. ஒருவேளை வீடு கட்டிய இடம் சுடுகாடாக இருக்குமோ? அதுதான் ஆவிகளின் சேட்டையாக இருக்கலாம் என்று நினைத்தான். இது எல்லாவற்றையும் விட எப்படி இதை திவ்யாவிடம் சொல்வது? நண்பர்களிடம், உறவினர்களிடம் எப்படிச் சொல்வது என்பது தான் பெரிய பிரச்னை. அவனைப் பயந்தாங்குளி என்று நினைத்து விட்டால்! அவன் கொஞ்சம் பயந்தவன் தான். இன்னமும் இருட்டை சத்தமாய் படிக்கும் பாட்டின் வழியே தான் கடந்து கொண்டிருந்தான். ஆனால் இதை எப்படி விட்டு விட முடியும்? அல்லது எப்படி சகித்துக் கொள்ளத்தான் முடியும்?
  மெல்ல எழுந்து முன்னறைக் கதவைத் திறந்து விளக்குகளைப் போட்டான். கையில் ஏதாவது கம்பு இருந்தால் பரவாயில்லை என்று தோன்றி விட்டது. யாரையும் அடிப்பதற்காக இல்லையென்றாலும் அவனுக்கு ஒரு தைரியத்துக்காகவாச்சும் தேவைப்பட்டது. புது வீடு சுத்தமாக பளிச்சென்றிருந்தது. நல்லவேளை திவ்யா தினசரி வீட்டின் தரையைத் துடைக்கும் தரைதுடைப்பான் கம்பு மூலையில் இருந்தது. அதுவும் பிளாஸ்டிக் தான். இருந்தாலும் பரவாயில்லையென்று கையில் எடுத்துக் கொண்டான். இப்போது அந்த அழுகைச் சத்தம் மிக அருகில் கேட்டது. அதைக் கேட்கும்போதே அவன் மனசைப் பிசைந்தது. இனி வாழ்வதற்கு ஏதும் இல்லை என்ற அநாதரவான அழுகை அது. நரேன் படிப்பறையின் வாசலில் போய் நின்றான். மூடியிருந்த கதவுக்கருகில் நின்று சத்தமாய் யாரு? என்று கேட்டான். ஆனால் குரல் வரவில்லை. வெறும் காற்று தான் வந்தது. அவனுக்கு தன்னறியாமல் வியர்த்து விறுவிறுத்து கைகால்கள் நடுங்க ஆரம்பித்தது. அவனுடைய தொண்டையைக் கள்ளச்சாவி போட்டு திறந்து மெதுவாக யாரு உள்ளே? என்றான். அந்தச் சத்தம் அவனுக்கே கேட்டதா என்று தெரியவில்லை. அழுகையின் ஸ்தாயி கூடிக் கொண்டே வந்தது. அந்த அழுகையினுள்ளே வாழ்வும் மரணமும் போராடிக் கொண்டிருந்தது. அவனால் தாங்க முடியவில்லை. கைகள் நடுங்கின. அவன் படிப்பறையின் வெளித்தாழ்ப்பாளை அரவமில்லாமல் திறந்து ஓங்கிக் கதவைத் தள்ளினான். தள்ளிய வேகத்தில் அவன் பின்னால் ஓடி விட்டான். படிப்பறையின் கதவுகளும் வேகமாகத் திறந்து பின்னால் போன வேகத்தில் மறுபடியும் வந்து மூடிக் கொண்டது. அந்த இரவின் நிசப்தத்தில் அந்த சப்தம் இடியெனக் கேட்டது.
சில நொடிகள் அமைதியாக இருந்தது. மறுபடியும் மனதை உருக்கும் அந்த அழுகைச்சத்தம். அவன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு படிப்பறையின் கதவை மெதுவாகத் திறந்து உள்ளே வலது கைப்பக்கமாக இருந்த ஸ்விட்சைப் போட்டான். பளீரென அறை அந்த எல்லீடி பல்பின் வெள்ளையொளியில் ஒளிர்ந்தது. இப்போது அந்த அழுகைச் சத்தம் நின்று போனது. அறைக்குள் சுற்றிலும் பார்த்தான்.. வித்தியாசமாக எதுவும் இல்லை. அவன் தேர்வு செய்து சேகரித்த புத்தகங்கள், தனுஷ்கோடி சென்றிருந்தபோது கிடைத்த கிளிஞ்சலை ஒட்டி வைத்திருந்த அந்த ஓவியம், பூஜாடி, அவன் கல்லூரியில் படிக்கும்போது பேச்சுப்போடியில் வாங்கிய பல்கலைக்கழக ஷீல்டு, ஒரு சாய்வு நாற்காலி, புத்தக அலமாரியின் அருகில் ஒரு மேஜை. இல்லை. எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. சிறிது நேரம் அங்கேயே நின்றான். காற்றாடியைச் சுழல விட்டு சாய்வுநாற்காலியில் உட்கார்ந்தான்.
வெளியே கீச்சிடும் பூச்சிகளின் சப்தம் மட்டும் கேட்டது. இடையில் ஒரு தடவை காலம் பிழைத்துக் கத்தும் காகத்தின் குரல் ஒற்றையாய் கரகரத்தது. தூரத்தில் தேய்ந்து போன நாயின் குரைப்பொலி. அமைதி. விர்ர்ரென்று சுழலும் காற்றாடியை நிமிர்ந்து பார்த்தான். ஏதோ பிரமைதான். தலை சுற்றுவது போலிருந்தது. உறக்கம் கண்களை அழுத்திக் கொண்டு வந்தது. உறக்கத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு அவன் நுழையும்போது மறுபடியும் அந்த அழுகைச்சத்தம் மெல்ல மேலெழுந்து வந்தது.
இப்போது அந்த அறையின் நடுவே கிளைகள் அடர்ந்த வேம்பு நின்று கொண்டிருந்தது. அந்த வேப்பமரத்தின் எதிரே நின்று கொண்டிருந்தான் நரேன். வேம்பு காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதன் கீழே நாற்பத்தியைந்து வயது மதிக்கத்தக்க ஒரு முதிர்ந்த ஆள் ஒரு கல்லின் மீது உட்கார்ந்திருந்தார். தலைகுனிந்திருந்த அவர் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார். ஆனால் கண்ணீர் நிற்கவில்லை. உடல் நடுங்கி திடீர் திடீரென அழுதார். வாயைப் பொத்தியும் தொண்டையிலிருந்து பீறிடும் அழுகைக்குரலை அடக்க முடியவில்லை. அவருடைய அழுக்கான வேட்டியும் தலையில் கட்டிய பச்சைத் துண்டும் அறுதப்பழசாக இருந்தது. அவருக்கு முன்னால் பீட்டர் இங்கிலாண்டு சட்டையும், லெவிஸ் ஜீன்ஸும் போட்டு நின்று கொண்டிருப்பது நரேனுக்கு அவமானமாக இருந்தது. இப்போது குழப்பமாகவும் இருந்தது. அவன் ஏன் அங்கே வந்தான்? அவர் யார்? எதற்காக இப்படி உட்கார்ந்திருக்கிறார்? என்று தோன்றியது நரேனுக்கு. ஒரு வேளை கனவு காண்கிறானோ? திடீரென ஒரு சாயலில் அவர் அவனுடைய அப்பாவாகத் தெரிந்தார். தெற்கில் உள்ள கரிசல்குளத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பா ஏன் இப்போது இங்கே உட்கார்ந்திருக்கிறார். அவர் எப்போதும் தலைப்பாகை கட்டியிருக்கும் அந்த பச்சைக்கலர் துண்டின் விசிறி அவருடைய  உடல் குலுங்குவதற்கேற்ப ஆடியது. அவருடைய அந்த அழுகை அவனுடைய அப்பாவின் அழுகை தான். ஒரு கணத்தில் அது அவனுடைய குரலாக மாறியது. அம்மா இறந்தபோது அழுதானே யாராலும் தேற்ற முடியாதபடி அப்படியான குரலாக மாறியது. தேற்றமுடியாத அந்தக்குரலின் பாதையில் நரேன் நடந்தான்.
 கலங்கிய கண் திரை வழியே எதிரே காய்ந்து வறண்ட அந்த கரிசல் நிலம் பெரும்பாதாளமாகத் தெரிந்தது. அது காரிருளான தன் வாயைத் திறந்து அவனை அழைத்துக் கொண்டிருந்தது. அவன் அரசாங்கம் கொடுத்த விதைகளைப் போட்டான். அரசாங்கம் கொடுத்த உரங்களைப் போட்டான். இரவும் பகலும் கண்ணும் கருத்துமாய் நிலத்தைப் பார்த்துக் கொண்டு வந்தான். அவன் சூரியன் உதிக்குமுன்னே எழுந்து வயக்காட்டுக்கு வந்து விடுவான். புதிய களைகளை ஒவ்வொன்றாய் தேடிப் பிடுங்குவான். ஏற்கனவே சாலடித்த பாத்திகளை ஆழப்படுத்துவான். ஏதாவது ஒரு செடி கொஞ்சம் சுணங்கியிருந்தாலும் அதனருகில் நின்று கவனிப்பான். நீர்வரத்து பத்தாதா? உரம் சரியாகப் போடவில்லையா? என்று குழம்புவான். ஒரு இலை புதிதாக துளிர்த்தாலும் அது அவனுக்குத் தெரியும். ஒரு இலை உதிர்ந்தாலும் அவனுக்குத் தெரியும். அவன் அந்த நிலத்தின் மண்ணை தீத்தித் தான் பல்லைத் தேய்ப்பான். மத்தியானம் கஞ்சியைக் கூட வரப்பில் வைத்துத் தான் குடிப்பான். அவனுக்கு மண்தான் எல்லாம். அவனே மண் தான். ஒரு நாள் அவன் மண்ணோடு பேசிக் கொண்டிருப்பதாக அவனுடைய சின்ன மகள் அவளுடைய அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள். அதற்கு அவளுடைய அம்மா
 “ அந்த கிறுக்கெழவு அப்படித்தான்… மண்ணு..மண்ணுன்னு சாகும்..” 
என்று சொன்னாள். எப்போதும் தோளில் மம்பட்டியோ, களைக்கொத்தியோ, உட்கார்ந்திருக்கும். விதைகளைப் பற்றி அத்தனை விவரங்களைச் சொல்வான். உரங்களைப் பற்றிப் பேசச்சொன்னால் அப்படிப் பேசுவான். எப்போதும் மழை, பருவம், விதைப்பு, களை, அறுவடை என்று விவசாயத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத மாதிரியே திரிவான். மாலை மசங்க மசங்க அவனுடைய பதட்டம் கூடி வரும். இரவில் பிரியமுடியாமல் பிரிந்து வருவான் வீட்டுக்கு. இரவு தூக்கத்தில் கூட அவனுடைய வயக்காடே அவன் கனவுகளில் வரும்.
ஒவ்வொரு நாளும் பதினாறு மணிநேரம் உழைத்தான். பெரிய கோடீசுவரனாகி விட வேண்டும் என்கிற கனவெல்லாம் அவனுக்கில்லை. வயதுக்கு வந்து பத்து வருடங்களாக வீட்டில் இருக்கும் மூத்த மகள் சண்முகத்தாயைக் கட்டிக் கொடுக்க,வேண்டும். சின்னவள் சொர்ணாவைக் காலேஜில் சேர்க்க,வேண்டும், கடைக்குட்டிப்பயல் ராஜேஷுக்கு அது என்னமோ கிரிக்கேட் மட்டை வாங்கிக் கொடுக்க.வேண்டும்.. ஒரு வருசம் இல்லைன்னு சொல்லாம கஞ்சித்தண்ணி குடிச்சிக்கிற…அளவுக்கு வெள்ளாமை வேண்டும். அவ்வளவு தான்… இவ்வளவு தான் அவனால் யோசிக்க முடிந்தது. ஆனால் அந்த வருசம் மழை பொய்த்தது. கஞ்சிக்கே கடன் வாங்கினான். வெளிநாட்டுக்கம்பெனிகள் விதைகளைக் கொடுத்தன. உரங்களைக் கொடுத்தன. புதிது புதிதாகப் பூச்சிகள் வந்தன. அதற்கு பூச்சி மருந்துகளும் தந்தன. வாங்கிய கடன் தலைக்கு மேல் போய் விட்டது.. நிலத்தை அடமானம் வைத்தான். எப்படியும் மீட்டு விடலாம் என்று நம்பினான். அவனுடைய மண் அவனைக் கைவிடாது என்று நம்பினான். அவனுடைய நிலத்தைப் பற்றி அவனை விட வேறு யாருக்குத் தெரியும்? எல்லோரும் விவசாயத்தைக் கைவிட்ட போதும் அவன் நம்பினான். அவன் பருத்தியைப் போட்டான். பூவே பூக்காமல் பொய்த்தது. கத்தரிக்காய் காய்க்கவில்லை. தக்காளி விலை போகவில்லை. கடன் அலைமேல் அலையாக அடித்து அவனைக் கீழே வீழ்த்தியது. குடும்பமே பட்டினி கிடந்தது. இதோ அவனுடைய நிலம் ஏலத்துக்குப் போகப்போகிறது. பிறந்ததிலிருந்து அவன் நேசித்த மண் ஏலம் போவதை அவனால் தடுக்க முடியவில்லை. இதை விட வேறு அவமானம் என்ன வேண்டும். அவனுடைய மண் அவனைக் கைவிட்டு விட்டது. அவனுடைய .ஊர் அவனைக் கைவிட்டு விட்டது. அவனுடைய தேசம் அவனைக் கைவிட்டு விட்டது. ஒரு நாளின் முழுப்பொழுதும் நிலத்தில் புரண்டெழுந்து தன்னுடைய ஆன்மாவாக நினைத்த அந்த நிலம் மலடாகிப் போனதற்கு யார் காரணம்? நிலம் அள்ளிக் கொடுத்தபோது அதற்கு சரியான விலை கிடைக்காமல் உழைப்பை ரோட்டில் கொட்டி விட்டு வருவதற்கு யார் காரணம்? மலட்டு விதைகளையும், கொடூர நஞ்சான உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் கொடுத்து நிலம் பாழ்பட்டதற்கு யார் காரணம்? அவனுக்கு எதுவும் புரிய வில்லை. கேள்விகள் ஊறிக் கொண்டேயிருந்தன. ஆனால் பதில்? எல்லோரும் யார் யாரையோ குற்றம் சொல்கின்றனர். ஏன் அவனையே கூட குற்றம் சொன்னார்கள். பணம் சம்பாதிக்கும் அவனுடைய பேராசை தான் காரணம் என்று கூடச் சொன்னார்கள். இனி யார் என்ன சொல்லி என்ன செய்ய? அவனைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்து விட்டது.
அவனுடைய கண்ணுக்கு முன்னால் மனைவி, குழந்தைகளின் முகங்கள் நிழலாடின. இன்னும் அழுகை கூடியது. அவன் நிமிர்ந்து பார்த்தான். அவன் சின்னப்பிள்ளையாக இருந்தபோது நட்டு வைத்த வேம்பு இப்போது அடர்ந்து வலுவான கிளைகளுடன் படர்ந்திருந்தது. அரசாங்கம் கொடுக்கிற உதவித்தொகை குடும்பத்துக்குக் கிடைக்கும். அவர்களாவது இந்த காட்டின் நடுவில் கிடந்து நிலத்தோடு போராடாமல் பெருநகரின் யந்திரங்களில் வேலை செய்து பிழைக்கட்டும் என்று நினைத்தான். பெருமூச்சு வந்தது. இது தான் கடைசி மூச்சு என்று யோசித்தபடியே மாடு கட்டிய கயிற்றை தாழ்ந்திருந்த வேம்பின் கிளையில் வீசி சுருக்கு போட்டான். காற்றில் அலைந்த வேம்பு வேண்டாம் வேண்டாம் என்றது. அவன் அருகில் கிடந்த கற்களை நகட்டி நின்று கொள்ள ஏதுவாய் வைத்தான். ஒருகணம் ஆவலுடன் தன்னுடைய நிலத்தை, சுற்றிலும் கிடந்த பூமியை, வானத்தைப் பார்த்தான். அப்படியே கல்லின் மீது ஏறி சுருக்கில் கழுத்தை நுழைத்து கண்களை மூடினான்.
நரேன் வேண்டாம் வேண்டாம் என்று அவனைப் பார்த்து ஓடினான். ஆனால் ஏதோ கல் தடுக்கியது போல வெடுக்கென அவனுடைய கழுத்தில் கயிறு சுண்டியிழுத்தது. அவனுடைய கழுத்தில் ஆழமான ஒரு வலி உடலெங்கும் ஓடியது. அவனால் தாங்க முடியவில்லை. மூச்சுத்திணறியது. தொண்டையில் அடைத்துக் கொண்டது  எல்லாம் சில கணங்கள் தான். சடக்கென்று கழுத்து எலும்பு முறியும் சத்தம் கேட்டது. அப்போது அவனுடைய அடிவயிற்றிலிருந்து ஓரு விசும்பல் எழுந்தது. தொண்டையை அடைத்துக் கொண்டு பீறிட்டு வந்த அந்தச் சத்தம் அப்படியே அடங்கியது. அவனுடைய கைகால்கள் துடிதுடித்தன. மெல்ல துடிப்பு அடங்கும்போது நரேன் வாய் விட்டு கத்த முயற்சித்தான். கண்களைக் கஷ்டப்பட்டுத் திறந்தான். படிப்பறையின் நடுவில் அவன் அந்த வேம்பின் கிளையின் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான். திவ்யா காபி கோப்பையோடு உள்ளே வந்தவள்,
“ என்ன ஐயா இன்னிக்கி சீக்கிரமே எந்திச்சாச்சி..” என்று சொல்லியபடியே டேபிளின் மீது காப்பியை வைத்து விட்டுப் போனாள். அவன் மலங்க மலங்க விழித்துக் கொண்டே அவனுடைய கழுத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான்.

நன்றி- நான்காவது கோணம் மார்ச் 17

1 comment: