Sunday 11 May 2014

கோடைகாலம் கொடுங்காலமா?

summer

உதயசங்கர்

ஒவ்வொரு கோடைகாலத்திலும் பெரும்பாலானவர்கள் “ யப்பா..இந்த வருஷம் வெயில் அதிகமப்பா…தாங்கமுடியல..” என்று சொல்வதைக் கேட்கலாம். புவிவெப்பமயமாதலால் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை கூடுவது உணமைதான் என்றாலும் கோடைகாலமே வராமல் போய்விட்டால் என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள். இயற்கையின் சுழற்சியில் பருவங்கள் மாறி மாறி வந்து கொண்டிருப்பதால் பூமியில் உயிர்கள் ஜீவித்திருக்கின்றன. ஒரே பருவகாலம் நீடித்திருந்தால் புவியில் பல்லுயிர்ப்பெருக்கம் நிகழாது. கோடை, குளிர், வசந்தம், மழை, என்று இயற்கை சுழன்று பூமியை உயிர்கள் வாழ்வதற்கான இடமாக நிலைத்திருக்க வைக்கிறது.

நமது உடலின் கழிவுகள், சிறுநீரகம் மூலம் சிறுநீராக, வியர்வைச்சுரப்பிகள் மூலம் வியர்வையாக, மலக்குடல் மூலம் மலமாக வெளியேறுகிறது. , கோடைகாலத்தில் உடலின் வெப்பநிலை உயர்வதால், நம்முடைய உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக் கொள்ள நமது உடல் மருத்துவர் வியர்வைச் சுரப்பிகளை இயங்க வைக்கிறார். வியர்வைச்சுரப்பிககளின் மூலம் உடலின் கழிவுகளை வெளியேற்றும் அதே வேளையில் உடல் வெப்பநிலையை சமச்சீராக வைத்துக் கொள்ளச் செய்கிறார். அப்போது உடலிலிருந்து அதிக நீர் வெளியேறுவதால் தாக உணர்ச்சி ஏற்படுகிறது. நல்ல சுத்தமான தண்ணீரைக் குடிப்பது மட்டும் தான் வியர்வையின் மூலம் ஏற்படும் தண்ணீர் இழப்பை ஈடுகட்டுவதற்கான முதன்மையான வழி. எனவே மற்ற காலங்களை விட கோடைகாலத்தில் அதிகமான தண்ணீர் அருந்துவதின் மூலம் கோடைகாலத் தீவிர ( Acute diseases) நோய்களை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்..

பொதுவாகக் கோடைகாலத்தில் வரக்கூடிய நோய்களாக, ஜலதோஷம், காய்ச்சல், வயிற்றோட்டம், சிறுநீரகக்கல், நீர்க்கடுப்பு, வியர்க்குரு, வேனல்கட்டி, வெப்பமயக்கம், போன்றவற்றைச் சொல்லலாம்.

வெயிலில் போய்விட்டு வந்தவுடன் வியர்வை அடங்குமுன் குளிர்ந்த நீரைக் குடிப்பது பழக்கம். குளிர்ந்த நீர் தொண்டையில் இறங்கும்போது அவ்வளவு சுகமாக இருக்கும். ஆனால் அதனால் தாகம் அடங்காது. அது மட்டுமல்ல வெயிலில் அலைந்து கொண்டிருக்கும் போது உடலின் வெப்பநிலையைச் சமச்சீராக வைத்துக் கொள்ள வியர்வைச் சுரப்பிகள் செய்யும் வேலை முடியும் முன்பே வெளியிலிருந்து உடலுக்குள் செல்லும் குளிர்நீர் வியர்வைச் சுரப்பிகளின் வேலையை நிறுத்திவிடுகிறது. ரத்தக்குழாய்கள் குளிர்ந்து சுருங்கி விடுகிறது. ரத்தக்குழாய்கள் திடீரெனச் சுருங்குவதால் வியர்வைச்சுரப்பியின் வேலை தடைப்படுகிறது. வெளியேறும் நீர் அப்படியே வெளியேறவும் முடியாமல் உள்ளே போகவும் முடியாமல் திகைத்து தோலின் துவாரங்களை அடைத்து வியர்க்குருவை உண்டுபண்ணுகிறது. இந்த வியர்க்குருவே சிலநேரம் வேனல்கட்டியாக மாறுகிறது. இதெல்லாம் உடலின் வெப்பம் வெளியேற முடியாமல் போகும்போது ஏற்படும் தொந்திரவுகள். அதேபோல உடலின் திடீர்சீதோஷ்ண மாற்றத்தினால் சளிச்சவ்வுகள் அதிக நீரை உற்பத்தி செய்ய ஜலதோஷம் உண்டாகிறது. சிலநேரங்களில் ஜலதோஷக்காய்ச்சல் வரும். எனவே வெயிலில் போய்விட்டு வந்தவுடன் உடனே குளிர்ந்த நீரைப் பருகாமல் சற்று நேரம் கழித்து வியர்வை அடங்கியதும் பருகினால் உடல் தன் சமச்சீரான நிலைக்கு வந்து விடும். அதுவும் குளிர்பதனப்பெட்டியில் உள்ள நீரையோ, மென்பானங்களையோ அருந்தவே கூடாது.

தாகம் அடங்குவதற்கு, இளநீர், மோர், பானக்காரம், தர்பூசணி, நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கள் சாப்பிடுவது நல்லது.

கோடைகாலத்தில் உடலிலுள்ள நீர் வெளியேறும்போது நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. அதற்கு ஈடாக நீரை அருந்தாவிடில் ரத்தத்திலுள்ள உப்புச்சத்துகளை சிறுநீரகம் வெளியேற்றும்போது சிறுநீரகக்குழாய்களிலோ, சிறுநீரகத்திலோ படிகமாகத் தங்கி கல்லாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே சிறுநீரகக்கற்கள் உருவாகாமல் தடுக்க கோடைகாலத்தில் அதிகமான நீர் இளநீர், மோர், அருந்த வேண்டும்.

கோடைகாலத்தில் உணவுப்பொருட்கள் வெப்பநிலை உயர்வு காரணமாக சீக்கிரம் கெட்டுப்போய்விடும். எனவே கெட்டுப்போன உணவை, வீட்டிலோ, ஹோட்டலிலோ சாப்பிட்டால் கெட்டுப்போன உணவிலுள்ள விஷத்தை வெளியேற்ற வயிற்றோட்டத்தை உடல்மருத்துவர் ஏற்படுத்துகிறார். கோடைகாலத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஒருவேளை அப்படிச்சாப்பிட்டதால் வருகின்ற வயிற்றோட்டத்துக்கு உப்பும்சர்க்கரையும் சேர்ந்த கரைசல், நீர், எளிய உணவு, ஓய்வு இவையே போதுமானது.

உடல்வெப்பம் அதிகமாவதாலும் நீர் சரியாகக்குடிக்காததாலும் சிறுநீர் பிரிவது குறைந்து சிறுநீர்க்குழாய்த்தொற்று ஏற்படும். இதன் விளைவாக நீர்க்கடுப்பு வருகிறது. இதைத் தவிர்க்கவும் அதிகமான நீர் அருந்த வேண்டும்.

அதிகநேரம் வெயிலில் வேலை செய்தால் உடலின் வெப்பநிலை அதிகரிப்பதுடன், நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் தடைபடுவதினால் வெப்பமயக்கம் ஏற்படுகிறது. மரணத்தை விளைவிக்கக்கூடியது. எனவே தொடர்ந்து இரண்டுமணி நேரத்துக்கு மேல் வெயிலில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

எனவே கோடைகாலத்தை கொடுங்காலமாக நினைக்கவேண்டியதில்லை. இயற்கையின் சுழற்சியை வரவேற்போம். கோடையின் நிழல்தரும் குளிரை அநுபவிப்போம். மரங்கள் பூப்பதற்கும், காய்ப்பதற்கும், வெப்ப சுழற்சி அவசியம். கோடையில் நமது ஆடை கைத்தறி, கதர், காட்டனாக இருக்கட்டும். குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இளநீர், மோர், பானக்காரம், பழங்கள், தர்பூசணி, நீர்ச்சத்துள்ள காய்கறிகள், நிறைய சாப்பிட்டுப் பழகுவோம்.

கோடையை அநுபவிப்போம். கொளுத்தும் வெயிலை சுட்டுப்பொசுக்குவோம்.

 

நன்றி- இளைஞர் முழக்கம் மே 2014

3 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
    கோடையை அநுபவிப்போம். கொளுத்தும் வெயிலை சுட்டுப்பொசுக்குவோம்.

    ReplyDelete
  2. கோடையைக் கொண்டாடுவோம் .குழந்தைகள் குழந்தைகளாக இக்கோடையில் தான் மாறுகின்றனர்...

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    நன்றி சார்.

    ReplyDelete