Thursday, 18 April 2019

குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள்.


குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள்.


1.
வீட்டில் குழந்தைகள் கண்ணில் படுகிற மாதிரி புத்தகங்கள் கிடக்க வேண்டும்.
2.
அம்மா அல்லது அப்பா தினம் குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளின் முன்னால் வாசிக்க வேண்டும்.
3.
குழந்தைகளிடம் உரையாடிக்கொண்டே வாசிப்பது நல்லது.
4.
புத்தகங்களை வாசித்துக்கொண்டே குழந்தைகளுக்குக் கதை சொல்லவேண்டும்.
5. கதை சொல்லும்போது புத்தகத்தை அடிக்கடி பார்த்துவிட்டு கதை சொல்லவேண்டும்.
6. அப்படிக் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது இடையில் விரித்து வைத்த புத்தகத்தை அப்படியே குழந்தையிடம் விட்டு விட்டு எழுந்து சென்று கவனிக்க வேண்டும். குழந்தை அந்தப்புத்தகத்தைக் கையில் எடுக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும்.
7. குழந்தைகள் புத்தகங்களில் கிறுக்கினாலோ கிழித்தாலோ திட்டவோ மிரட்டவோ கூடாது.
8. குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு புத்தகங்களில் உள்ள கதைகளைச் சொல்ல வேண்டும்.
9. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது ஏனோ தானோ என்றோ தாங்கள் சின்னவயதில் கேட்ட கதைகளையோ சொல்லாமல் நாமும் அதில் ஒன்றி குழந்தைகளின் கண்களைப் பார்த்துக்கொண்டு அபிநயம் பிடித்துக்கொண்டு சொல்லவேண்டும்.
10. இவை எல்லாவற்றுக்கும் முதலில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி முதலில் அம்மாவும் அப்பாவும் வாசித்து விடுவது நல்லது. குழந்தைகளை வைத்துக்கொண்டு எழுத்துக்கூட்டி வாசித்துக்கொண்டிருக்கக்கூடாது.
11. குழந்தைகள் தமிழ் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தமிழ் மொழி, தமிழினம், பாதுகாக்கப்படுகிறது என்ற உணர்வு பெற்றோர்களுக்கு வேண்டும்.
12. எனக்கு என்னுடைய அம்மா தான் வாசிப்பின்ருசியை ஊட்டிவிட்டவர். வீட்டில் வாங்கிய வணிகப்பத்திரிகைகளின் வழியாக வாசிப்பை மேம்படுத்திக்கொண்டேன்.
13. பள்ளியில் இருந்த நூலகவகுப்பு, நீதிபோதனை வகுப்பு, அதில் கிடைத்த உண்மையான குழந்தைக்கதைகள் என்னிடம் வாசிப்பிற்கான தேடலை உருவாக்கியது.
14. என்னுடைய நண்பர்கள் புத்தகங்களை வாசிக்கிற, நூலகத்துக்கு செல்கிற நண்பர்கள். அவர்களுடனான உரையாடல் சிறுவயதிலேயே வாசிப்பதற்கும், எனக்கென்று புத்தகங்களை வாங்கவும், பதுக்கவும், திருடவும்கூட செய்யவைத்தது.
15. விளையாட்டு சாமான்களை தயக்கமில்லாமல் வாங்கிக்கொடுப்பதைப் போல புத்தகங்களை வாங்கிக்கொடுக்கவும் அந்தப்புத்தகங்களை வைத்துக்கொள்ள வீட்டிலுள்ள அல்மாரியில் சிறு இடம் ஒதுக்கிக்கொடுக்கவும் வேண்டும்.
16. எக்காரணம் கொண்டும் புத்தகங்களை முன்வைத்து குழந்தைகளிடம் சிறு முகம் சுளிப்பைக்கூட காட்டக்கூடாது.
17. தினமும் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். குழந்தைகளுக்கு அப்படியொரு டார்லிங் ஆகிவிடுவீர்கள்.
18. கதைகள் அத்தனை வலிமையானவை. மனிதமனதை மயக்கிவிடும் மாயம் கொண்டவை.

Sunday, 13 January 2019

தமிழிலக்கியத்தின் தனிக்குரல்


தமிழிலக்கியத்தின் தனிக்குரல்

உதயசங்கர்

1980 – களில் தான் பிரபஞ்சன் முதன்முதலாக எனக்கு அறிமுகமானார். வானம்பாடி பத்திரிகைகளில் வாசித்த ஏராளமான கவிஞர்களில் அவரும் ஒருவராக இருந்தார். அதில் எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்தியவராக நினைவில்லை. ஆனால் அதன்பிறகு வெளிவந்த அவருடைய ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் என்ற கதை என்னைப் புரட்டிப்போட்டது. அதுவரை வாசித்த கதைகளிலிருந்து வேறொரு புதிய குரலாக ஒலித்தது. கிருஷ்ணமூர்த்தி, கோபாலு, ரெங்கசாமி, மூன்றே கதாபாத்திரங்களை வைத்து அவர் தீட்டிய வாழ்க்கைச்சித்திரம் அழியாத இலக்கியப்படைப்பாக நின்று நிலைத்து விட்டது. பிரபஞ்சன் என்ற பெயரோடு அந்தக்கதையும் ஒட்டிக்கொண்டது. கிட்டத்தட்ட அந்தக்கதை தான் பிரபஞ்சனின் மையம் என்று சொல்லலாம். கிருஷ்ணமூர்த்தி அரிசிக்கடை நடத்தி நஷ்டத்தினால் கடையை மூடியவன். கடை நடந்தபோது அவனிடம் அரிசி கடனாக வாங்கிய கோபாலு கடனைக்கொடுக்காமல் ஏமாற்றிக்கொண்டே போகிறான். கிருஷ்ணமூர்த்தி அவன் கடையில் முன்னால் வேலைபார்த்த ரெங்கசாமியிடம் சொல்லி அவனிடம் கேட்கச்சொல்கிறான். அவன் கோபாலுவிடம் சினிமா தியேட்டரில் வைத்து கடுமையான வார்த்தைகளில் கேட்டு விடுகிறான். அதை ரெங்கசாமி சொல்லும்போதே கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்லும்போதே கிருஷ்ணமூர்த்தி அவனிடம் அவ்வளவு கடுமையாகப்பேசியிருக்க வேண்டியதில்லை என்று வருத்தப்படுகிறான். ஆனால் கோபால் அதன் பிறகும் அவனைப்பார்த்தால் கண்டுகொள்ளாமல் போவது, முடிந்த போது தான் கொடுப்பேன் என்று அலட்சியமாகப்பேசுவது என்று நடந்து கொள்கிறான். கிருஷ்ணமூர்த்தி எவ்வளவோ சுமூகமாகக் கேட்டும் கோபாலு கிருஷ்ணமூர்த்தியைத் திட்டுகிறான். திடீரென ஒருநாள் கிருணமூர்த்தி கோபாலுவின் வீட்டுக்குப் போய் அடாவடியான வார்த்தைகளால் திட்டி மிரட்டுகிறான். அப்போது கோபாலுவின் மனைவி நிறைசூலியாக இருப்பதையும் பார்க்கிறான் கிருஷ்ணமூர்த்தி. அதற்கு இரண்டு நாட்களுக்குப்பின்னால் கோபாலு கொடுக்க வேண்டிய நூற்றெண்பது ரூபாயில் நூறு ரூபாயைக் கிருஷ்ணமூர்த்த்தியின் வீடு தேடி வந்து கொடுக்கிறான். அப்போது இதமாகப்பேசிய கிருஷ்ணமூர்த்தி அவன் இன்னும் கொடுக்கவேண்டிய எண்பது ரூபாயில் முப்பது ரூபாயைக் கழித்து ஐம்பது ரூபாய் கொடுத்தால் போதும் என்கிறான். அதற்குப்பின் இன்னும் சிலநாட்கள் கழித்து வந்து முப்பது ரூபாயைக் கொடுத்து அவ்வளவு தான் புரட்டமுடிந்தது மனைவிக்குப் பிரசவச்செலவாகி விட்டது என்று கோபாலு கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்கிறான். கிருஷ்ணமூர்த்தி கனிவுடன் மீதிப்பணத்தைக் கொடுக்க வேண்டாம். அந்த ரூபாயில் அவன் பெயரைச் சொல்லி ஒரு சட்டைத்துணி எடுத்துப்போடச் சொல்கிறான்.
மனிதர்களிடம் மீந்திருக்கும் அன்பின் ஒளிச்சுடரைத் தன் இருகைகளாலும் பொத்திப்பாதுகாத்து நம்மிடம் அளித்திருப்பார் பிரபஞ்சன். வாழ்க்கை தன் கொடும்பற்களால் எத்தனை துன்பங்களைக் கொடுத்தாலும் மனிதன் அவற்றைப் புறம்தள்ளி அன்பெனும் பேராற்றிலிருந்து ஒருகை நீரேனும் அள்ளிக்கொண்டிருக்கிறான் என்பதை தன்னுடைய படைப்புகளில் உரத்துச் சொன்னவர் பிரபஞ்சன்.
மிக மிகத்தாமதமாகத்தான் அவருடனான நேர் அறிமுகம் கிடைத்தது. அவருடைய ஆளுமையின் வசீகரம் எல்லோரையும் ஈர்க்கும். அவருடைய குரல் கம்பீரமானது. ஆனால் அந்த கம்பீரம் ஈரப்பதத்துடன் நம்மை வருடிச் செல்லும். எப்போதாவது விழாக்களில் மட்டுமே அவரைச்சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது ”உதயசங்கர் எப்படி இருக்கீங்க?..” என்ற அந்தக்குரலில் இருக்கும் நெருக்கமும் உரிமையும் எனக்கு அப்படிப்பிடித்திருந்தது. அவருடன் எப்போதும் நண்பர்கள் கூடியிருப்பார்கள். அதுவே அவர் எப்பேர்ப்பட்ட உரையாடல்காரர் என்பதை உணர்த்தி விடும். மேடைப்பேச்சிலும் அவர் கேட்பவர்களை வசியப்படுத்தி விடுவார். அவரிடம் நூல்வனம் பதிப்பகத்தில் வெளியான பிறிதொரு மரணம் என்ற சிறுகதை நூலை சென்னைப்புத்தகக்கண்காட்சியில் வைத்துக் கொடுத்தேன். புத்தகத்தின் தயாரிப்பில் மிகவும் லயித்துப் போய் புத்தகத்தயரிப்பாளர் மணிகண்டனைப் பாராட்டிக்கொண்டேயிருந்தார்.
எழுத்தை முழுநேரவாழ்க்கையாகக் கொண்ட அநேக எழுத்தாளர்களைப்போல அன்றாடத்தின் துயரங்களில் சிக்குண்டவர் பிரபஞ்சன். அந்தத்துயரத்தின் சிறு சாயல் கூட அவருடைய படைப்புகளில் தென்படாது.
பிரபஞ்சன் அவருடைய சிறுகதைகளில் மிகப்பெரிய சோதனை முயற்சிகளையோ, வடிவப்பரிசோதனைகளையோ, அதிகமாகச் செய்தவரில்லை. ஆனால் அள்ள அள்ளக்குறையாத வாழ்க்கையிலிருந்து தன்னுடைய கதைகளைத் தேர்ந்து கொண்டவர். அவருடைய கதையுலகம் கீழ் நடுத்தரவர்க்கமாக, நடுத்தர வர்க்கமாக இருந்தது என்று சொல்லாம். யாரையும் முன்மாதிரியாகக் கொள்ளாத அவருடைய எழுத்து தனித்துவமிக்கது. எளிமையும், அடர்த்தியும் கொண்ட நேரடியான நடையில் தன் படைப்புகளைக் கலையாக மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார் பிரபஞ்சன். வாழ்வின் நெருக்கடிகளுக்கானக் காரணங்களைக் குறித்து அவர் தன்னுடைய படைப்புகளில் கவலை கொள்வதில்லை. அதைப்பற்றிய குறிப்புகள் கூட அதிகம் இருக்காது. ஆனால் வாழ்வின் அத்தனை வண்ணங்களையும் அப்படியே உள்ளது உள்ளபடியே தீட்டியவர். அதில் தான் அவருடைய படைப்புகளின் வெற்றி நிலைகொண்டிருக்கிறது. அவருடைய கதைகளில் சிறந்த கதைகள் என்று தனித்துக்குறிப்பிட்டுச் சொல்வதை விட அவருடைய அத்தனை சிறுகதைகளிலும் மானுடநேயம் மாபெரும் சமுத்திரமாக அலையடித்துக் கொண்டேயிருப்பதை வாசிக்கும்போது உணரமுடியும். அந்த சமுத்திரத்தின் அலை ஒருநேரம் சுனாமியாக நம்மை மூழ்கடிக்கும், ஒரு நேரம் மெல்லலையாக வந்து காலை வருடும். எந்த அலையாக இருந்தாலும் அது மனிதநேயத்தை உரத்து முழங்கிக்கொண்டிருக்கும்.
பிரபஞ்சன் என்ற மகத்தான, தனித்துவமிக்க படைப்பாளியின் குரல் அது. அவருடைய ஒவ்வொரு கதையிலும் அது ஒலித்துக்கொண்டேயிருக்கும். அந்தப்படைப்புகளில் அவர் என்றென்றும் உயிர்த்துடிப்புடன் அதே நெருக்கத்துடனும் கம்பீரத்துடனும் உரையாடிக்கொண்டேயிருப்பார். ஒரு ஊரில் இரண்டு மனிதர்களில் வருகிற கிருஷ்ணமூர்த்தியின் அந்தக்குரலில் நீங்கள் வாழ்கிறீர்கள் பிரபஞ்சன்!. நீங்கள் போற்றிப்பாதுகாத்த அன்பெனும் ஒளிச்சுடர் இன்னும் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
போய் வாருங்கள் தோழர் பிரபஞ்சன்.

நன்றி - செம்மலர்




Wednesday, 9 January 2019

சுற்றுலா போன சுண்டைக்காய்


சுற்றுலா போன சுண்டைக்காய்

உதயசங்கர்
ஒருநாள் ஒரு ஊரில் ஒரு பாட்டி சமைப்பதற்காக கடையில் சுண்டைக்காய் வாங்கினாள். வீட்டில் சுண்டைக்காய் எடுக்கும்போது ஒரு சுண்டைக்காய் உருண்டு சோற்றுப்பானைக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டது. விறகு அடுப்பில் பொங்கிய அந்தச் சோற்றுப்பானையை அப்போது தான் அந்தப்பாட்டி கீழே இறக்கி வைத்திருந்தாள். பானை சூடாக இருந்தது. ஒளிந்திருந்த சுண்டைக்காய்
“ ஐய்யய்யோ சுடுதே..
அம்மம்மா சுடுதே..
அப்பப்பா சுடுதே..
அக்கக்கா சுடுதே..
அண்ணண்ணே சுடுதே.. “
என்று கத்தியபடி உருண்டு ஓடியது. கண்ணைத்திறந்து பார்த்தால் அரிவாள்மனை முன்னால் இருந்தது. அரிவாள்மனை சுண்டைக்காயைப் பார்த்ததும்
 “ வா ராஜா வா..
சீக்கிரமா வா..
கூராக இருக்கேன்
கூறு போட்டு தாரேன்.
வா ராஜா வா..
சீக்கிரமா வா .”
என்று தன்னுடைய பளபளப்பான பல்லைக்காட்டிச் சிரித்தது. சுண்டைக்காய் உடனே அங்கிருந்து உருண்டு தண்ணிர் வைத்திருந்த செப்புப்பானைக்குக் கீழே போய் நின்றது. செப்புப்பானை,
 “ குளிருது ஐயா
குளிருது..
பனிக்கட்டி போல குளிருது
காப்பாத்துங்க ஐயா
காய்ச்சல் வரும் ஐயா..”
 என்று நடுங்கிக்கொண்டிருந்தது. சுண்டைக்காய்க்கும் குளிர ஆரம்பித்தது. செப்புப்பானையிலிருந்து கொஞ்சம் தூரம் நடந்து அங்கே இருந்த வெண்கல உருளியின் அருகில் போய் நின்றது. உடனே வெண்கல உருளி உருண்டு தன் வாயைக் காட்டியது. ஐயோ… உள்ளே ஒரே இருட்டு. ஈயம் பூசின கருத்த வாயைப் பார்த்த சுண்டைக்காய் பயந்து விட்டது. எதுக்கு வம்பு? என்று தள்ளி இருந்த தம்ளருக்குப் பின்னால் போய் ஒளிந்தது. தம்ளர், முகத்தைச் சுளித்து
“ எங்கூடச் சேராதே..பொடியா..
எங்கிட்டே பேசாதே…பொடியா..
எம்பக்கம் நிக்காதே பொடியா..”
சுண்டைக்காய்க்குக் கோபம் வந்து விட்டது. அங்கிருந்து உருண்டு ஒருபடி உழக்குக்குள் போய் ஒளிந்து கொண்டது. ஒருபடி உழக்கு அப்போது தான் தூங்கி முழித்திருந்தது. அது
 “ இடமில்லை..
இடமில்லை
எனக்கே இடமில்லை
என் தம்பி வீட்டுக்குப் போ..”
என்று விரட்டியது. இரண்டு அடி எடுத்து வைத்தது சுண்டைக்காய். அரைப்படி உழக்கு நின்று கொண்டிருந்தது. அது சுண்டைக்காயைப் பார்க்காமலேயே
“ இடமில்லை.
இடமில்லை
எனக்கே இடமில்லை
என் தம்பி வீட்டுக்குப் போ.” என்று சொன்னது.
” அடக்கோட்டிக்காரா.. நிமிந்து கூட பார்க்கல..” என்று நினைத்துக் கொண்டே சுண்டைக்காய் கொஞ்சம் நடந்தது. கால்படி உழக்கு நிறைய கம்பு தானியம் இருந்தது. அது சுண்டைக்காயைப் பார்த்து,
  இடமிருக்கு..
இடமிருக்கு – மனசில
ஆனால் இடமில்லை.
இடமில்லை வீட்டிலே.”
என்று வருத்தத்துடன் சொன்னது. அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் அரைக்கால்படி உழக்கு,
“ ஐயா நீங்க யாரோ எவரோ தெரியாது.. தெரியாத ஆளுக்கு இடம் தரக்கூடாதுன்னு எங்க பெரியப்பா சொல்லியிருக்காரு..”
என்று சொல்லவும் சுண்டைக்காய்க்கு சலிப்பாகி விட்டது. அடச்சே! என்று முனகியபடி தரையைப் பார்த்துக் கொண்டே நடந்தது. நடந்து நடந்து அது மாண்பிடி உழக்குக்குள் போய் விட்டது. மாண்பிடி உழக்கு,
“ ஐயா உங்கள் வரவு நல்வரவாகுக! நீங்கள் விரும்பும்வரை இங்கே தங்கியிருக்கலாம்..” என்று வரவேற்றது. சுண்டைக்காய்க்கு ஆச்சரியம். மாண்பிடி வீட்டில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தது. உடம்பு கொஞ்சம் கச்சிதமான பிறகு எழுந்து,
“ உங்கள் விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி.” என்று சொல்லி விட்டு இரண்டு அடி எடுத்து வைத்திருக்காது. கண் அகப்பை அதைத் தூக்கிக் கொண்டது. சுண்டைக்காயால் நிற்க முடியவில்லை. உருண்டு கொண்டே வந்தது.
“ யாரப்பா நீ..
கூறப்பா பேரு..  
ஏது…ஊரப்பா நீ.. “
என்று கண் அகப்பை கேட்டது. சுண்டைக்காய்க்குச் சிரிப்பாய் வந்தது. அப்போது பாட்டி கண் அகப்பையை எடுப்பதற்காகக் கையை நீட்டினாள்.  அதைப்பார்த்ததும் சுண்டைக்காய் விருட்டென்று பாய்ந்து குத்துப்போணிக்குள் நுழைந்து விட்டது. குகை மாதிரி இருட்டாய் இருந்த குத்துப்போணிக்குள் காற்று விர்ரென்று வீசியது. சுண்டைக்காய்க்குப் பயமாக இருந்தது. அங்கேயிருந்து பித்தளைக்கொப்பரைக்குள் பாய்ந்தது. பித்தளைக்கொப்பரையிலும் எதுவும் இல்லை. ஆனால் பெரிய விளையாட்டு மைதானம் மாதிரி இருந்தது. அதில் மேலும் கீழும் சறுக்கி விளையாடியது சுண்டைக்காய்.
“ ஓடி ஆட வாங்க
பாடி ஆட வாங்க..
கூடிச் சாட வாங்க
கூட்டாக வாங்க..”
என்று பாடியபடியே சறுக்கு விளையாடியது. அப்படி விளையாடியபடியே துள்ளி இட்லிக்கொப்பரையில் இருந்த இட்லித்தட்டில் விழுந்து விட்டது. நல்லவேளை பாட்டி காலையிலேயே இட்லி அவித்து முடித்து விட்டாள். மெல்ல இடலித்தட்டிலிருந்து ஏறி வெளியே வைத்திருந்த சட்டக அகப்பை வழியே சறுக்கி ஓடியது.
சுண்டைக்காய்க்கு ஜாலியாக இருந்தது.
எண்ணெய்ச்சட்டியில் விழுந்து எண்ணெயில் குளித்து எழுந்தது. அப்படியே குழம்புச்சட்டிக்குள் ஏறி இறங்கியது. பாட்டி சமையலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். காய்கறிகளை நறுக்கி ஒரு தட்டில் வைத்து அடுப்பை எரிக்கத்தொடங்கினாள். விறகுகளையும் சுள்ளிகளையும், மரச்சிராய்களையும் அடுப்பில் திணித்தாள். அடுப்பைப் பற்றவைத்தாள். எண்ணெய்ச்சட்டியை அடுப்பில் வைத்தாள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் நறுக்கி வைத்திருந்த சுண்டைக்காய்களைப் போட்டாள். அப்போது தான் கவனித்தாள். ஒரே ஒரு சுண்டைக்காயைக் காணவில்லை.
எங்கே போயிருக்கும்? 
பாட்டி அங்கும் இங்கும் தேடினாள். சுண்டைக்காயின் அடுக்களைச் சுற்றுலா இன்னும் முடியவில்லையே. அது இப்போது தான் பாட்டியின் அஞ்சறைப்பெட்டியைப் பார்க்கப்போயிருக்கிறது.
மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடிக் குதித்துக்கொண்டே போகிறது சுண்டைக்காய். அதன் மகிழ்ச்சியை கெடுக்க வேண்டாம். பாட்டியின் கண்ணில் சுண்டைக்காய் பட்டு விடாமல் இருக்கட்டும்.
என்ன சரிதானே!


.நன்றி - தமிழ் இந்து




Sunday, 25 November 2018

குளத்தில் இருந்த நட்சத்திரங்கள்


குளத்தில் இருந்த நட்சத்திரங்கள்
மலையாளத்தில் - அப்துல்லா பேரம்பரா
தமிழில் - உதயசங்கர்



பழைய, பழைய காலத்தில் ஒரு நாட்டில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். அதில் மூத்தவனின் பெயர் தன்யன், இரண்டாமாவனின் பெயர் சோசு, மூன்றாது மகனின் பெயர் பென்கன். மூத்தவன் தன்யன் நல்லவன். கடின உழைப்பாளி. மற்ற இரண்டு பேரும் படுசோம்பேறிகள். அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் எப்பொழுதும் உறங்கிக் கொண்டும், விளையாடிக்கொண்டும் பொழுதைப்போக்கினார்கள்.
ஒரு நாள் தன்யன் தன்னுடைய சகோதரர்களிடம்,
“ பிரியமுள்ள சகோதரர்களே நாம் இப்படி கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பது சரியில்லை. நம்முடைய குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். அதனால் நான் ஒரு பயணம் போகப்போகிறேன். நல்வாய்ப்பு கிடைத்தால் உழைத்து நான் சம்பாதித்துக் கொண்டு வருவேன்..””
என்று சொன்னான். ஆனால் அது மற்ற இரண்டு சகோதரர்களுக்கும் பிடிக்கவில்லை. அவர்கள்,
“ ஏன் அண்ணன் மட்டும் செல்வந்தனாக வேண்டும்? நாமும் பணம் சம்பாதிக்க வேண்டாமா? அதனால் நாமும் பயணம் போகலாம்..”
என்று யோசித்தார்கள். அவர்கள் அதை அண்ணனிடம் சொன்னார்கள். தன்யன் பதில் எதுவும் சொல்லவில்லை.
அப்படி மூன்றுபேரும் பயணம் போனார்கள். சோசு ஒரு கிராமத்தில் கிலோமீட்டர் கிலோமீட்டராக நடந்து கொண்டிருந்தான். அப்படி நடந்து நடந்து ஒரு வயல்காட்டை அடைந்தான். அப்போது சோசுவுக்கு பசியும் தாகமும் ஏற்பட்டது. அவன் அருகில் தெரிந்த ஒரு குடிசையின் வாசல்கதவைத் தட்டினான். உள்ளேயிருந்து ஒரு வயதானகுரல் ,
“ வெளியில யாரு? “ என்று கேட்டது.
“ நான் ஒரு பிரயாணி.நான் இன்னிக்கு ராத்திரி இங்கே தங்கிக்கலாமா?.” என்று சோசு கேட்டான்.
“ இருந்துட்டுப் போகலாம்.. ஆனால் என்னுடைய குடிசையின்.பின்புறம் ஒரு குளம் இருக்கு.. அந்தக்குளத்திலுள்ள நட்சத்திரங்களை எல்லாம் சுத்தப்படுத்தித் தரணும்..முடியுமா?..”
அதெப்படி முடியும்? சோசு யோசித்தான். குளத்தில் தெரிவது வானத்தில் தெரிகிற நடத்திரங்களின் பிம்பம் தானே. அவற்றை எப்படி குளத்திலிருந்து சுத்தப்படுத்த முடியும்? தோல்வியை ஒப்புக்கொண்டு அங்கேயிருந்து திரும்பி ஊருக்கு வந்து விட்டான். தன்னுடைய சகோதரர்களிடம் வருத்தத்துடன்,
“ எனக்கு எங்கேயும் நல்வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால நான் திரும்பி வந்துட்டேன்..”
என்று சொன்னான். அப்போது தன்யனும் பென்கனும் வீட்டிலிருந்தார்கள். அடுத்தமுறை பென்கனுடையதாக இருந்தது. பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து கடைசியில் அவன் அந்தப் பழைய குடிசைக்குப் போனான். சோசு கேட்டதைப்போல அவனும் அதே கேள்வியைக் கேட்டான். சோசுவிடம் சொன்ன காரியத்தையே கிழவி பென்கனிடமும் சொன்னாள். சோசுவைப்போல எதுவும் செய்யாமல் பென்கனும் வீட்டிற்குத் திரும்பினான்.
“ எனக்கு எந்த இடத்திலும் நல்வாய்ப்பு கிடைக்கவில்லை..”
அவன் வேதனையோடு சொன்னான்.
கடைசியில் நல்வாய்ப்பைத் தேடி தன்யன் புறப்பட்டான். பல மைல் தூரம் கடந்து அவனும் அந்தக்கிழவியின் குடிசைக்குப் போய்ச்சேர்ந்தான். அப்போதும் கிழவி அந்தப் பழைய வேலையைச் செய்யச் சொன்னாள். ஒரு நிமிடம் யோசித்த தன்யன் பின்பு கிழவியிடம் ஒரு வாளியைக் கேட்டு வாங்கினான். வாளி கையில் கிடைத்த உடனே தன்யன் குளத்தில் இறங்கி தண்ணீரை வெளியில் எடுத்து ஊற்றினான். குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியில் எடுத்து ஊற்ற அவன் கடுமையாக உழைத்தான். ஆனாலும் வேலை முழுவதும் முடிந்தபிறகே அவன் ஓய்வெடுத்தான். இரவு முழுவதும் அவன் தன்னுடைய வேலையில் மூழ்கியிருந்தான்.
பொழுது விடிவதற்கு முன்பு கிழவி குடிசையிலிருந்து வெளியில் வந்தாள். தன்யன் மக்ழ்ச்சியோடு குளத்தைக் காட்டினான். ஒரு நட்சத்திரம் கூட குளத்தில் இல்லை.
“ நான் குளத்தில் இருந்த நட்சத்திரங்களை எல்லாம் வெளியே எடுத்து விட்டேன். இனி ஒரு ராத்திரியிலும் ஒரு நட்சத்திரம் கூட குளத்தில் இருக்காது. “
கிழவிக்கு மகிழ்ச்சி. அவள் முன்னால் வந்து தன்யனைக் கட்டிப்பிடித்தாள். பின்பு,
“ உனக்கு முன்னால பலரும் இங்கே வந்திருக்கிறார்கள். இந்தப்போட்டியில் கலந்து கொள்ள முயற்சி கூடச் செய்யாமல் திரும்பிப் போயிருக்கிறார்கள். உழைப்பதற்கான உறுதியோ, சிந்திப்பதற்கான புத்தியோ, இல்லாத கழுதைகள். நீ தான் உத்தமன்..”
கொஞ்சநேரம் கிழவி மௌனமாக இருந்தாள். அதன்பிறகு தன்யனை உற்று நோக்கினாள்.
“ இனிமேல் இந்த நிலம் முழுவதும் உனக்குத் தான். இங்கே நீ உன்விருப்பம் போல் விவசாயம் செய்து பணம் சம்பாதிக்கலாம்..” என்று சொன்னாள்.
அந்த மகிழ்ச்சியான செய்தியைச் சகோதரர்களிடம் சொல்வதற்காக தன்யன் வீட்டிற்கு ஓடினான்.
“ நான் என்னுடைய நல்வாய்ப்பைக் கண்டுபிடித்து விட்டேன்..”
“ எங்கே? “
அவர்கள் திகைத்து நின்றனர். தன்யன் அவனுடைய கையை உயர்த்தி அவர்களைச் சுட்டிக் காட்டினான். எதுவும் புரியாமல் அவர்கள் முழித்தார்கள். சகோதரர்களிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். கதையைக் கேட்ட அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
அன்று முதல் சோம்பலை மறந்து உழைத்துப் பிழைக்கவேண்டும் என்று அவர்கள் முடிவு எடுத்தார்கள்.
நன்றி - மாயாபஜார்