Thursday 18 April 2019

குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள்.


குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள்.


1.
வீட்டில் குழந்தைகள் கண்ணில் படுகிற மாதிரி புத்தகங்கள் கிடக்க வேண்டும்.
2.
அம்மா அல்லது அப்பா தினம் குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளின் முன்னால் வாசிக்க வேண்டும்.
3.
குழந்தைகளிடம் உரையாடிக்கொண்டே வாசிப்பது நல்லது.
4.
புத்தகங்களை வாசித்துக்கொண்டே குழந்தைகளுக்குக் கதை சொல்லவேண்டும்.
5. கதை சொல்லும்போது புத்தகத்தை அடிக்கடி பார்த்துவிட்டு கதை சொல்லவேண்டும்.
6. அப்படிக் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது இடையில் விரித்து வைத்த புத்தகத்தை அப்படியே குழந்தையிடம் விட்டு விட்டு எழுந்து சென்று கவனிக்க வேண்டும். குழந்தை அந்தப்புத்தகத்தைக் கையில் எடுக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும்.
7. குழந்தைகள் புத்தகங்களில் கிறுக்கினாலோ கிழித்தாலோ திட்டவோ மிரட்டவோ கூடாது.
8. குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு புத்தகங்களில் உள்ள கதைகளைச் சொல்ல வேண்டும்.
9. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது ஏனோ தானோ என்றோ தாங்கள் சின்னவயதில் கேட்ட கதைகளையோ சொல்லாமல் நாமும் அதில் ஒன்றி குழந்தைகளின் கண்களைப் பார்த்துக்கொண்டு அபிநயம் பிடித்துக்கொண்டு சொல்லவேண்டும்.
10. இவை எல்லாவற்றுக்கும் முதலில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி முதலில் அம்மாவும் அப்பாவும் வாசித்து விடுவது நல்லது. குழந்தைகளை வைத்துக்கொண்டு எழுத்துக்கூட்டி வாசித்துக்கொண்டிருக்கக்கூடாது.
11. குழந்தைகள் தமிழ் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தமிழ் மொழி, தமிழினம், பாதுகாக்கப்படுகிறது என்ற உணர்வு பெற்றோர்களுக்கு வேண்டும்.
12. எனக்கு என்னுடைய அம்மா தான் வாசிப்பின்ருசியை ஊட்டிவிட்டவர். வீட்டில் வாங்கிய வணிகப்பத்திரிகைகளின் வழியாக வாசிப்பை மேம்படுத்திக்கொண்டேன்.
13. பள்ளியில் இருந்த நூலகவகுப்பு, நீதிபோதனை வகுப்பு, அதில் கிடைத்த உண்மையான குழந்தைக்கதைகள் என்னிடம் வாசிப்பிற்கான தேடலை உருவாக்கியது.
14. என்னுடைய நண்பர்கள் புத்தகங்களை வாசிக்கிற, நூலகத்துக்கு செல்கிற நண்பர்கள். அவர்களுடனான உரையாடல் சிறுவயதிலேயே வாசிப்பதற்கும், எனக்கென்று புத்தகங்களை வாங்கவும், பதுக்கவும், திருடவும்கூட செய்யவைத்தது.
15. விளையாட்டு சாமான்களை தயக்கமில்லாமல் வாங்கிக்கொடுப்பதைப் போல புத்தகங்களை வாங்கிக்கொடுக்கவும் அந்தப்புத்தகங்களை வைத்துக்கொள்ள வீட்டிலுள்ள அல்மாரியில் சிறு இடம் ஒதுக்கிக்கொடுக்கவும் வேண்டும்.
16. எக்காரணம் கொண்டும் புத்தகங்களை முன்வைத்து குழந்தைகளிடம் சிறு முகம் சுளிப்பைக்கூட காட்டக்கூடாது.
17. தினமும் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். குழந்தைகளுக்கு அப்படியொரு டார்லிங் ஆகிவிடுவீர்கள்.
18. கதைகள் அத்தனை வலிமையானவை. மனிதமனதை மயக்கிவிடும் மாயம் கொண்டவை.

1 comment:

  1. Super tips. It'll go a long way to make d children lovers of books.

    ReplyDelete