Monday 22 April 2019

குழந்தைகள் ஏன் விளையாட வேண்டும்?

குழந்தைகள் ஏன் விளையாட வேண்டும்?
1. விலங்குகள், பறவைகள், பூச்சிகள் முதல் மானுட சமூகம் வரை கூடி வாழ்தல் என்பது இயற்கையின் உள்ளுணர்வினால் விளைந்த செயல்பாடு.
2.  கூடி வாழ்தலில் தான் ஒரு சமூகம் உயிர்த்திருக்கிறது. கூடி வாழ்வதற்கான,  உளவியல் பயிற்சிகளை, குழந்தைப் பருவத்திலிருந்தே விளையாட்டின் மூலம் மானுட இனம் சமூகத்துக்குப் பயிற்றுவிக்கிறது.
3. விளையாட்டு குழந்தைகளின் மனதுக்கும், உடலுக்கும் உரமூட்டுவதாக மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாக சமூகத்தின் அங்கத்தினராக குழந்தைகள் உருவாக ஒவ்வொருவரையும் பண்படுத்துகிறது.
4. கூடி விளையாடும் விளையாட்டுகளில் குழந்தைகளின் மனம் களிப்புறுகிறது. எந்த கட்டுப்பாடுமின்றி தன்னைத் தானாகவே உணர்ந்து, தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்துகிறார்கள்.
5. புறஉலகின் எல்லா நெருக்கடிகளிலிருந்தும், பெற்றோர்களின், ஆசிரியர்களின், வீட்டுப்பாடச்சுமையின், மதிப்பெண் பூதங்களிலிருந்து விடுபட்டு தங்களுடைய இயல்பான படைப்பூக்க உணர்வை (CREATIVE) மீட்டெடுக்கவே குழந்தைகள் விளையாடுவதற்கு பேராவல் கொள்கின்றனர்.
6. படைப்பூக்க உணர்வை மீண்டும் மீண்டும் மீட்டெடுப்பதின் மூலம் கிடைக்கும் பரவசத்தை அனுபவிக்கவே விளையாடத் துடிக்கின்றனர்.
7. அத்துடன் சமூகத்தில் அவர்கள் இயைந்து வாழ விளையாட்டுகள் அவர்களை பண்படுத்துகிறது. தன் வயதொத்த குழந்தைகளோடு கூடி விளையாடும்போது கூட்டுச்செயல்பாட்டுக்கான விவேகமும், கூட்டுணர்வும் ஏற்படுகிறது.
8. கூடிச்சேர்ந்து ஒரு காரியத்தைச் செய்யும்போது  ஒரு தார்மீக நெருக்கமும், செய்யும் செயலில் அழகியலும் தோன்றுகிறது.
9. விளையாடும் கூட்டுச்செயல்பாட்டிலேயே தனித்துவம் காணும் தனிப்பாணியும் உருவாகிறது.
10. கூட்டுச் செயல்பாட்டை வழிநடத்திச் செல்லும் தலைமைப் பண்பும் குழந்தைகளிடம் இயல்பாகவே தோன்றுகிறது.
11. இந்தத் தலைமைப்பண்பின் தனித்தகுதியாக எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்கிற திறன் வளர்கிறது.
12. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பொறுமை, ஒருவரையொருவர் மதிக்கும் பண்பு, வளர்கிறது.
13. குழந்தைகளிடம் அன்பும், நட்பும் பெருகித் தழைக்கிறது. விளையாட்டுச் சண்டை என்பது விளையாட்டுச் சண்டையாகவே முடிந்து விடுகிறது.
14. குழந்தைகளால் நீண்ட நேரத்திற்குக் கோபத்தையும், வெறுப்பையும், கசப்பையும் வளர்க்க முடியாது. சிறிது நேரத்திலேயே பழம்விட்டு சேர்ந்து கொள்வார்கள். யார் பக்கம் நியாயம் என்று தர்க்கரீதியாக யோசிக்காமல் யார் அதிகமாகப் புண்பட்டிருக்கிறார்களோ, யார் அதிகம் வருத்தமடைந்திருக்கிறார்களோ அவர்களுக்காக விட்டுக்கொடுப்பார்கள்.
15. குழந்தைகளுக்கு விட்டுக்கொடுத்து இயைந்து வாழ்கிற பண்பு விளையாட்டின் மூலமே கிடைக்கிறது. இதற்கேற்ப இருவர் விளையாடும் விளையாட்டுகளிலிருந்து பத்துபேர் விளையாடும் விளையாட்டுகள் வரை அந்தந்தக் கால தட்பவெப்ப நிலைமைகளுக்கேற்பவும், அந்தந்தப் பகுதி மண், வளம், வாய்ப்புகளுக்கேற்பவும் இருக்கின்றன.
16.  கிட்டிப்புள், கோலி, பம்பரம், கண்ணாமூச்சி, கிளியாந்தட்டு, தாச்சி, ஓடு அடுக்குதல், எறி பந்து, கல்லாமண்ணா, பாண்டி, கள்ளன்போலீசு, கபடி, மரம் ஏறுதல், பச்சைக் குதிரை, செதுக்குமுத்து, குலைகுலையா முந்திரிக்கா, போன்ற ஓடி ஆடும் விளையாட்டுகளும், தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், ஆடுபுலி, ஒத்தையா ரெட்டையா, போன்ற உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகளுமாய் எத்தனை எத்தனை விளையாட்டுகள்! காலத்திற்கும், பருவத்திற்கும், நேரத்திற்கும் ஏற்ற மாதிரியான உள்விளையாட்டுகள் என்று விளையாட்டுகளை வகை வகையாய் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இப்போது காணவில்லை.
17. மேலே குறிப்பிடப்பட்ட விளையாட்டுகள் எதுவும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில்லை. ஆனால் பெரிய அளவில் பொருளாதார வசதி தேவைப்படாத விளையாடுபவர்களின் நோக்கத்திற்கு ஏற்றபடியெல்லாம் வளைந்து கொடுக்கக்கூடிய விளையாட்டுகள்.
18. விளையாட்டுகளில் ( உள்விளையாட்டாக இருந்தாலும் சரி, வெளிவிளையாட்டாக இருந்தாலும் சரி) ஏற்படும் வெற்றி, தோல்விகள், குழந்தைகள் மனதில் நீண்டகாலம் நிற்பதில்லை. அவை குழந்தைகளின் மனதை பிற்கால சமூகவாழ்க்கைக்குத் தயார்படுத்துகின்றன.
19. விளையாட்டுகள் லட்சியவெறியையும், விடாப்பிடியான மனநிலையையும் கூட உருவாக்குகின்றன.
20. விளையாட்டின் வெற்றி, தோல்விகளை ருசித்துப்பழக்கப்பட்ட குழந்தைகள் சமூகவாழ்வில் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனைப் பெறுகின்றனர்.
21. தற்கொலை, வன்முறைச்சிந்தனை, தலைதூக்காமல் தடுக்க விளையாட்டு உதவுகிறது.
22. மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற வீடியோ கேம்ஸிலும், கம்யூட்டர் கேம்ஸிலும் உள்ள பிரத்யேகமான தன்மை குழந்தை தன்னைப்போன்ற இன்னொரு குழந்தையோடு விளையாடுவதைத் தடுக்கிறது. அது பிரதிமையோடு விளையாடத் தூண்டுகிறது.
23. அந்தக் காட்சிப் பிரதிமைகள் எப்படி இருக்கின்றன? கார்பந்தயம், வேட்டையாடுதல், பைக் ஓட்டுதல் போன்ற குழந்தையின் மனநிலைக்கும், யதார்த்தத்திற்கும் சற்றும் சம்பந்தமில்லாத விளையாட்டுகளே குழந்தைகளுக்கு கிடைக்கின்றன.
24. அந்த விளையாட்டுகளில் எந்தக் கூட்டுச் செயல்பாடும் இல்லை. விட்டுக்கொடுத்தல் இல்லை. தலைமைப்பண்பு தேவையில்லை. அன்போ, நட்போ, பாசமோ, தேவையில்லை. அதில் ஒரே குறிக்கோள் தான். வெற்றிபெறவேண்டும் நிறைய்ய பாயிண்டுகள் எடுக்கவேண்டும். இதைத் தவிர வேறு எதுவும் வேண்டாம். தனிமையில் விளையாடும் இந்த விளையாட்டு குழந்தையிடம் பிடிவாதத்தை வளர்க்கிறது. சுயநலவெறியை கிளப்புகிறது. வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தை வளர்க்கிறது.
25. கார் பந்தயம் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை எதிர்ப்படும் தடைகளை முறியடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிகிறான். சாலையோரத் தடுப்பைத் தகர்க்கிறான். விளக்குக் கம்பங்களை வீழ்த்துகிறான். எந்த சிக்னலையும் மதிக்காமல் விரைகிறான். குறுக்கே எதிர்ப்படும் எவரையும் காரை ஏற்றிக் கொல்கிறான். சில நேரம் பிளாட் பாரத்தில் நடந்து போய் கொண்டிருப்பவர்கள் மீதும் காரை ஏற்றுகிறான். அது பிரதிமையே என்றபோதிலும் குழந்தையின் முகத்தில் ஒரு ஆபத்தான தீவிரமும், வெற்றிபெற வேண்டும் என்கிற வெறியையும்.ஏற்படுத்துகிறது.
26. பெற்றோர்கள் தலையிடாமல் இருந்தால் விளையாட்டின் மூலம் குழந்தைகளிடம் நம்நாட்டின் விஷவிருட்சமான சாதியின் சல்லிவேர் இற்றுவிழும்.

27. எதிர்கால சமூகத்தின் பிரதிநிதிகளான இன்றையக்குழந்தைகளை விளையாட விடுங்கள். அப்போது தான் நலமான சமூகம் உருவாகும்.

No comments:

Post a Comment