Showing posts with label முன்னுரை. Show all posts
Showing posts with label முன்னுரை. Show all posts

Monday, 18 August 2025

முன்னுரைகளும் மதிப்புரைகளும் - ஒரு தத்துவப்பார்வை

 

முன்னுரைகளும் மதிப்புரைகளும் - ஒரு தத்துவப்பார்வை

உதயசங்கர்




1. நிலவுடமை காலத்தில் தனிப்பட்ட அறிவுச்சொத்துரிமையாக இருந்த  கலைஇலக்கியம் உள்ளிட்ட அனைத்து அறிவுத்துறைகளையும் முதலாளித்துவம் தன்னுடைய தேவைக்காக, இந்தியாவில் பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்டு ஜனநாயகப் படுத்தியிருக்கிறது.

2.
பார்ப்பனியத்தின் ஆன்மீக அதிகாரத்துடன் கை கோர்த்து நிலவுடமைச் சமூகத்தின் மிச்சசொச்சங்களுக்கு பாதுகாப்பளித்துக் கொண்டிருக்கிறது. சாதி, மதம், சனாதனம், போன்ற காலாவதியான சுரண்டல் யந்திரத்துக்குப் புதிய முலாம்களைப் பூசிக் கொண்டிருக்கிறது.

3.  
புனிதமென்று கருதப்பட்டவை, வேறு யாராலும் செய்ய முடியாதவை, தனித்துவமான மேதமை இருந்தால் மட்டுமே சாத்தியமென்று சொல்லி மறுக்கப்பட்ட அறிவுச்சொத்து இன்று ஆர்வமும் உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் மேதையாகலாம் என்ற தாராளமயத்தை முதலாளித்துவம் உருவாக்கியிருக்கிறது.

4.
ஆனால் இவற்றிலும் பார்ப்பனியம் தன்னுடைய தனிச்சொத்தாக வேதம், உபநிடதம், மனுதர்மம் ஆகியவற்றை இன்னமும் போற்றுகிறது.   அதன்மீது போர்த்தப்பட்டிருக்கிற போலியான புனிதப்போர்வையை விலக்காமலும் யாரும் எந்த விமரிசனம் செய்து விடாமலும் ராணுவத்தைப் போலப் பாதுகாக்கிறது.

5.
அதனால் தான் நவீன முதலாளித்துவமும் சனாதனமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல சுழன்று இந்தியர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு எதிரெதிரான மனநிலைகளில் இந்தியர்கள் வாழும்படி கட்டாயப்படுத்துகிறது.

6.
ஐரோப்பாவில் முதலாளித்துவம் தோன்றிய போதே தன்னுடைய தேவைக்காக அனைத்து மதங்களின் ஆதிக்கத்தைத் தகர்த்து விட்டது. அறிவொளிக்காலத்திலும், அறிவியல் காலத்திலும் உருவாக்கிய கண்டுபிடிப்புகளின் மூலம் மதங்களின் அடிப்படையை ஆட்டம் காண வைத்தது.

7.
அதனால் தான் அறிவியலாளர்களைத் தண்டித்ததற்காக மட்டுமல்ல இதுவரை செய்த தவறுகளுக்காக மதத்தலைமை மன்னிப்பு கோரும் நிலைமைக்குக் கொண்டு தள்ளியிருக்கிறது முதலாளித்துவம்.

8. 
முதலாளித்துவத்தின் முதலும் முடிவுமான நோக்கம் உற்பத்தி, சந்தை, விற்பனை, லாபம் மட்டும் தான். ஆனால் இந்தத் தொடர் செயல்களின் வழியே அதன் நோக்கத்திலில்லாத ஜனநாயகம், அறிவுப்பரவலாக்கல், வர்க்கத்திரட்சி, போராட்டங்களும் உருவாகின்றன.

9.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு எழுத்தாளன் தவிர்க்க முடியாமல் அல்லது தானறியாமல் சந்தையில் பொருளை விற்கும் ஒரு வியாபாரியாகி விடுகிறான். முதலாளித்துவ சிந்தனைகளுக்கு எதிராக பிறந்த படைப்பை  முதலாளித்துவத்தின் சந்தையிலேயே விற்க வேண்டிய முரண் அவனுக்கு ஏற்படுகிறது.

10.
எனவே அவனுடைய படைப்பை விற்பதற்கு எப்படியெல்லாமோ விளம்பரம் செய்கிறான்.  அந்த விளம்பர யுத்திகளில் ஒன்று தான் முன்னுரைகளும் மதிப்புரைகளும். ஏற்கனவே புகழ்பெற்ற எழுத்தாளர்களிடம் முன்னுரை, அணிந்துரை, வாழ்த்துரை, மதிப்புரைகளை வாங்கி அதன் மூலம் தன்னுடைய படைப்பைப் பரவலாகக் கொண்டு போக முயற்சிக்கிறான்.

11.
ஆனால் விளம்பரங்களினால் மட்டுமே ஒரு படைப்பு வாசகர்கள் மனதில் நிலைத்திருக்காது. அப்படிக் கிடைக்கிற வெளிச்சமும் தற்காலிகமானது தான்.

12.
ஒரு படைப்பு தன்னுடைய படைப்பூக்கத்தின் சக்தியினாலும், படைப்பின் மானுட அறத்தினாலும் இந்தப் பிரபஞ்சத்தின் மீதான பேரன்பினாலும் அதன் கலைத்துவத்தாலும் சிறந்து விளங்கும்போது மட்டுமே காலம் அந்தப் படைப்பைத் தன் இரு கைகளால் வாரி நெஞ்சோடு அணைத்துக் கொள்ளும்.

13.
மற்றபடி கோவில்கொடைகள் நடக்கும்போது கயமுய கயமுய என்று கேட்கும் எதுவும் புரிய முடியாமலும் கவனிக்க முடியாமலும் போகும் விளம்பரக்குரல்கள் தான் முன்னுரைகளும் மதிப்புரைகளும்.

14.
முதலாளித்துவத்தின் தந்திரமான இந்தச் சந்தையில் வாசகர்கள் போலிகளை வாங்கி ஏமாறாமல் இருக்க வேண்டியது அவர்களுடைய சொந்தப் பொறுப்பு.

15.
ஏனெனில் தமிழில் ஏலவே சொன்னது போல விமரிசகர்கள் இல்லை. விளம்பரதாரர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

எச்சரிக்கை !!! 

 

Tuesday, 20 May 2025

காலம் கேட்ட கதைகள்

 

காலம் கேட்ட கதைகள்

உதயசங்கர்

( காலம் சென்ற எழுத்தாளர்.ஜமிலுதீனின் புதுச்சட்டை சிறுகதை நூலுக்கு எழுதிய முன்னுரை )




வாழ்க்கையின் எந்தப்பருவத்தில் எப்படிப்பட்ட உறவுகள் வந்து சேரும் என்று யாருக்கு தெரியும்? சுழன்று விரியும் புதிர்ப்பாதையில் எப்போதும் புதிதாக சிலர் இணந்து கொள்வதும், சிலர் பிரிந்து செல்வதும் நடந்து கொண்டேயிருக்கிறது. பல சூழ்நிலைக்காரணங்களால் என்னால் உறவுகளை சரிவரப் பராமரிக்க முடிந்ததேயில்லை. கையாலாகாத நிலையில் மிகுந்த கவலைப்படுவேன். அதற்கான முழுப்பொறுப்பும் என்னை மட்டுமே சாரும். அப்படி உறவுகளைத் தொடர முடியாத என்னுடனும் சில நண்பர்கள் தொடர்ந்து நட்பைப் பேணி வருகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பொறுமைசாலிகளாவும், பெருந்தன்மை மிக்கவர்களாகவும், பேரன்பு மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்! அப்படிப்பட்ட நண்பர்களில் முக்கியமானவர் எழுபத்தியைந்து வருட இளைஞர் திரு..ஜமீலுதீன்.

 எப்பொதாவது சில புதிய நண்பர்கள் தாங்கள் எழுதிய கதைகளைக் கொண்டு வந்து வாசிக்கக் கொடுப்பார்கள். நானும் வாசித்து விட்டு என்னுடைய பாராட்டுகளையும், அபிப்பிராயங்களையும் சில விமரிசனங்களையும் சொல்லுவேன். புதிய எழுத்தாளர்களைப் பார்த்தால் எனக்கு உற்சாகம் பொங்கிவிடும். அவர்களுடைய கதைகளை வாசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். எப்படி புதிது புதிதாக கதைக்களனில் எழுதுகிறார்கள்? அப்படி ஒரு நாள் மதுரையிலிருந்து அலைபேசியில் திரு..ஜமிலுதீன் பேசினார். செம்மலரில் வெளிவந்துள்ள அவருடைய கதையை வாசித்து விட்டு அபிப்பிராயம் சொல்லும்படி கேட்டார். அவர் தன்னை அறிமுகப்படுத்தியதிலிருந்து அவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்துவதில் நிபுணர் என்ற விவரத்தையும் அறிந்து கொண்டேன். கோவில்பட்டி எழுத்தாளர் பூமணி பணி செய்து ஓய்வுபெற்ற கூட்டுறவுத்துறையில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் என்பதையும் பேச்சுக்கிடையில் அவர் சொன்னார். எல்லாவற்றிலும் மிகப்பெரிய ஆச்சரியம் அவர் இதுவரை சிறுகதை எதுவும் எழுதியதில்லை. இப்போது சமீபகாலமாகத்தான் எழுதத் தொடங்கியிருப்பதாகவும் சொன்னது தான். முதலில் சற்று அசட்டையாகத்தான் அவருடைய கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் வாசிக்க வாசிக்க அவருடைய ஆளுமை எனக்குள் மெல்ல மெல்ல வளர்ந்தது.

பல கதைகளை எழுத்துப்பிரதியாகவே எனக்கு அனுப்பி வைத்து எனது கருத்துக்களையும், இந்தக் கதையை எந்தப்பத்திரிகைக்கு அனுப்பலாம் என்ற விவரங்களையும் கேட்பார். என்னுடைய ஆலோசனைகளை அப்படியே செயல்படுத்தவும் செய்வார். அதில் புதுச்சட்டை என்ற கதை உயிரெழுத்து பத்திரிகையில் பிரசுரமானது மிக முக்கியமான நிகழ்வு. அதோடு அந்தக்கதை அந்த மாதம் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்ததாகவும் விருட்சம் பத்திரிகையாசிரியர் அழகியசிங்கரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தக்கதை மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளெழுத்து என்ற பத்திரிகையில் பிரசுரமானது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திரு..ஜமீலுதீன் அவர்களுடைய பெரும்பாலான கதைகளில் விளிம்பு நிலை இஸ்லாமிய மக்களே கதாபாத்திரங்களாக வருகிறார்கள். சாணை பிடிப்பவர், மெக்கானிக், பேப்பர் போடுகிற பையன், பிளாட்பாரத்தில் குடியிருப்பவர்கள் ஒரே ஒரு உடையுடன் இருப்பவர்கள், பிச்சைக்காரர்கள், என்று சாமானிய மக்களை கதைகளில் சித்திரிக்கிறார். அத்தனை கதைகளிலும் சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் கடுமையான உழைப்பாளிகளாக, முயற்சியுடையவர்களாக, பிறருக்கு உதவி செய்பவர்களாக, இரக்கமுடையவர்களாக, மார்க்கவழி பிறழாதவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் இஸ்லாமிய இந்து மக்களின் உணர்வுகளின் ஊடாடல் நிகழ்கிறது. இன்றைய காலகட்டத்தின் அவசியமான மதநல்லிணக்கத்தினைச் சித்தரிக்கிற கதைகளும் இருக்கின்றன. அதிகாரவர்க்கத்தினை விமரிசிக்கிற கதைகளும், அரசியல்வாதிகளின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டுகிற கதைகளும் இருக்கின்றன. சாதிவெறியர்களின் முகமூடியைக் கிழித்தெறிகிற கதைகளும் இருக்கின்றன. 

திரு..ஜமீலுதீனோடு நடத்திய பல உரையாடல்களின் வழியாக நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் திரு..ஜமீலுதீன் தான் எழுதுவது என்னவென்று தெரிந்து, திட்டமிட்டு எழுதுபவர். தான் எழுதிய அத்தனை கதைகளுக்கும் உரிய நியாயத்தை அவர் வைத்திருக்கிறார். இது மிகவும் அபூர்வம். எனவே சிறுகதை இலக்கணம் சற்றும் பிசகாத கதைகளை அவர் எழுதியிருக்கிறார் என்றும் சொல்லலாம்.

இன்னுமொரு முக்கியமான பண்பாக திரு..ஜமீலுதீனுடைய கதையில் வருகிறசிறுவர் சிறுமிகள், அவர்களுடைய மனநிலை, உளவியல், ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்று. சமீபகாலத்தில் சிறுவர்களை இத்தனை கதைகளில் சித்தரித்த எழுத்தாளர் இவர் ஒருவராகத் தான் இருக்கமுடியும்.

 எழுத்தின் மீதான தீராத பற்றின் காரணமாக இவ்வளவு சீக்கிரத்தில் ஒரு முக்கியமான சிறுகதைத்தொகுப்பைக் கொண்டுவந்திருக்கிறார் திரு..ஜமீலுதீன். அவர் ஒரு அநுபவச்சுரங்கம். அந்தச் சுரங்கத்தின் ஒரு துளியே இந்தச் சிறுகதைத்தொகுப்பு. இன்னும் இருக்கிறது கடலளவு. இன்னும் எழுதுவார்.. எழுதிக்கொண்டேயிருப்பார்….

காலம் தனக்கான படைப்பாளிகளை தானே உருவாக்கிக் கொள்கிறது. காலம் தனக்கான குரலை தானே உரத்துப்பேசுகிறது. காலம் தனக்கான பாடலைத் தானே பாடிக்கொள்கிறது. மதவெறி தூண்டிவிட்ப்பட்டு அதில் சாமனியர்களைப் பலியிட்டு குளிர்காயந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் உலவுகிற நடுநிசி நேரத்தில் மதநல்லிணக்கத்தை உரக்கப்பேசிக்கொண்டு களம் இறங்கியிருக்கிறார் திரு..ஜமீலுதீன்! அவருடைய இந்தக்கதைகள் பெரிதும் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.