Showing posts with label பரிசு. Show all posts
Showing posts with label பரிசு. Show all posts

Thursday, 10 December 2020

புத்தகம் பேசுது

 

புத்தகம் பேசுது


உதயசங்கர்

நேற்று அபிக்கு எட்டாவது பிறந்த நாள். அவனுடைய அம்மாவும் அப்பாவும் அபியின் நண்பர்களை அழைத்து கேக் வெட்டி பாட்டுப்பாடி அமர்க்களப்படுத்தி விட்டார்கள். அம்மாவும் அப்பாவும் அவர்களுடைய நெருங்கிய நண்பர்களையும் அழைத்திருந்தார்கள். அதனால் வீடே கலகலப்பாக இருந்தது. எல்லோரும் அபியை வாழ்த்தவும், பாராட்டவும், பரிசுகள் கொடுக்கவுமாக இருந்தார்கள்.

அபிக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அவனுடன் வகுப்பில் எப்போதும் சண்டைபோடும் பிரபாகர் கூட அவனுடைய அம்மாவுடன் வந்து ஒரு பரிசைக் கொடுத்து விட்டுப்போனான். எக்கசக்கமான பரிசுகள்! எல்லாருக்கும் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அபிக்கு எப்போது எல்லாரும் வீட்டுக்குப் போவார்கள் என்றிருந்தது. அவனுக்கு பரிசுப்பொட்டலங்களைப் பிரித்து என்னென்ன பரிசுகள் வந்திருக்கின்றன என்று பார்க்கவேண்டும் என்று ஆவல் இருந்தது. ஆனால் நண்பர்களுடன் விளையாடுவதில் நேரம் போவதே தெரியவில்லை.

நண்பர்கள் போனவுடனே அபிக்குத் தூக்கம் வந்து விட்டது. அவன் தூங்கப்போய் விட்டான். அவனுடைய படிப்பு மேசையின் மீது அத்தனை பரிசுப்பொட்டலங்களும் வைக்கப்பட்டிருந்தன. அதைப்பார்த்தவுடன் வந்த தூக்கம் கலைந்து விட்டது. ஏதாவது ஒரு பொட்டலத்தைப் பிரிக்கலாம் என்று நினைத்து எடுத்தான். அந்தப் பொட்டலத்தில் ஒரு அழகிய பேனா அட்டைப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. பார்க்கப்பார்க்க அவ்வளவு ஆசையாக இருந்தது.

அப்படியே ஒவ்வொரு பொட்டலமாகப் பிரித்தான்.

ஒரு டெடி பியர் பொம்மை.

ஒரு கால்குலேட்டர்

ஒரு காம்பஸ் பாக்ஸ்

ஒரு வீடியோ கேம்ஸ்

க்ரேயான்ஸ்

செஸ் போர்டு

பேங்க் கேம்ஸ்

பெரிய கார்

பெரிய ஹெலிகாப்டர்

கேம்ப் ஹவுஸ்

மேட்சிங் ப்ளாக்ஸ்

கோட் சூட்

டி சர்ட்டு

கலர் பென்சில் பாக்கெட்

என்று ஏராளமான பரிசுப்பொட்டலங்கள் இருந்தன. பெரிது பெரிதான அட்டைப் பெட்டி பரிசுப் பொட்டலங்களுக்கு நடுவில் வண்ணக்காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு சிறிய பரிசுப்பொட்டலத்தைப் பிரித்தான். அது ஒரு புத்தகம். புத்தகத்தைப் பார்த்ததும் திருப்பிக் கூட பார்க்கவில்லை. அப்படியே அதைத் தள்ளிவைத்தான். ஏற்கனவே பள்ளிக்கூடத்தில் பாடம் படிப்பதற்கு நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. அதைப்படிப்பதற்கே நேரமில்லை. மறுபடியும் புத்தகமா? என்ற எண்ணம் தான் அவனுக்குத் தோன்றியது.

எல்லாவற்றையும் பார்த்து முடித்ததும் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.  உறக்கமும் மறுபடியும் வந்து விட்டது. அவன் படுத்ததும் உறங்கி விட்டான்.

திடீரென ஏதோ ஒரு சத்தம் கேட்டு அவன் கண்விழித்தான். ஒரு குயிலின் கூகூக்க்கூ கூகூ என்ற சத்தம் கேட்டது. என்ன இது? நடு ராத்திரியில் குயில் சத்தம். எங்கிருந்து வருகிறது? என்று யோசிப்பதற்குள் சிட்டுக்குருவிகளின் கீச் கீச்.. கேட்டது. கூடவே புறாக்களின் குர்ர்ம்ம்ம் குர்ர்ம்ம்ம் என்ற சத்தம் வந்தது. மயிலின் க்க்யாவ் க்க்யாவ் அகவலும் கொக்கின் குர்க் குர்க் சத்தமும் மாறி மாறிக் கேட்டது. அவன் பயத்துடன் சுற்றிப்பார்த்தான். எதுவுமில்லை. மறுபடியும் உற்றுக்கேட்டான்.

மைனாக்களின் க்ளவ் க்ளவ் என்ற சத்தம் கேட்டது. அவனுடைய அபார்ட்மெண்ட் வீட்டுக்கருகில் மரங்கள் கிடையாது. தூரத்தில் இருக்கும் பூங்காவில் தான் மரங்கள் இருந்தன. ஆனால் இந்தச் சத்தமெல்லாம் அவனுடைய அறைக்குள் கேட்கிறதே. அவன் எழுந்து உட்கார்ந்தான். கொஞ்சம் நிதானமாகக் கேட்டுப்பார்த்தான்.

ஆமாம். சத்தம் அவனுடைய மேசையிலிருந்து தான் வருகிறது. ஒருவேளை ஏதாவது பொம்மையிலிருந்து வருகிறதோ. எழுந்து விளக்கைப்போட்டு விட்டு மேசைக்கருகில் போனான். இப்போது அமைதியாக இருந்தது.

ஒவ்வொரு பரிசுப்பொட்டலமாக எடுத்துப் பார்த்தான். அப்படி சத்தம்போடுகிற மாதிரி எந்தப்பொம்மையும் இல்லை. கடைசியில் அவன் ஓரமாய் வைத்திருந்த புத்தகத்தை எடுத்தான். அபி புத்தகத்தைத் தொடும்போதே புத்தகம் அதிர்ந்தது. அப்போது தான் அந்தப்புத்தகத்தின் தலைப்பை வாசித்தான்.

நம்மைச் சுற்றிலும் பறவைகள்

அட்டைப்படத்தில் ஏராளமான பறவைகள் இருந்தன. 

மயில், குயில், மைனா, காகம், புறா, கொக்கு, சிட்டுக்குருவி, தேன் சிட்டு, பருந்து, ஆந்தை, கழுகு, ராஜாளி, செம்போத்து, நீர்க்காகம், நாரை, காடை, கௌதாரி, பனங்காடை, உள்ளான், தவிட்டுக்குருவி, அன்னம், 

எல்லாம் சிறகுகளசைத்து பறந்து கொண்டிருந்தன. தங்களுடைய அலகுகளைத் திறந்து பாடிக் கொண்டிருந்தன. அந்தப் பாட்டின் இசையையே அபி கேட்டான். அபியின் உள்ளம் மகிழ்ச்சியில் நிறைந்தது. அவன் ஆர்வத்துடன் புத்தகத்தின் அடுத்த பக்கத்தைத் திருப்பினான்.

அவன் இதுவரை காணாத ஒரு புதிய உலகம் அவனை வரவேற்றது.

நன்றி - செல்லமே சிறார் இதழ்