Showing posts with label செந்நாய். Show all posts
Showing posts with label செந்நாய். Show all posts

Sunday, 23 February 2025

ஆட்டுக்குட்டியின் கதை

ஆட்டுக்குட்டியின் கதை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



சின்னு கூட விளையாடுவதற்கு வழக்கமாக ஒரு ஆட்டுக்குட்டியும் வரும். ஆட்டுக்குட்டியின் பெயர் சூசனா. பார்க்க அவ்வளவு அழகு. அவளுடைய கழுத்தில் ஒரு மணி கட்டியிருக்கும். துள்ளிக்குதித்தே சூசனா நடப்பாள். அதனால் சூசனா வருவது தூரத்திலேயே தெரிந்து விடும்.

ஒரு நாள் ஆற்றங்கரையில் சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சூசனா ஆட்டுக்குட்டியும் கள்ளன் போலீஸ் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒளிந்து கொள்வதற்காக எல்லாரும் நான்கு திசைகளிலும் பாய்ந்து சென்றனர். சூசனா ஆட்டுக்குட்டி கொஞ்ச தூரத்தில் இருந்த புதர்ச்செடிகளுக்குள் பின்னால் ஒளிந்து கொண்டது.

ஆற்றின் அக்கரையிலிருந்து வந்த ஒரு செந்நாய் சூசனா ஆட்டுக்குட்டியைப் பார்த்து விட்டது. செந்நாய்க்கு ஆசை அதிகமானது.

எவ்வளவு அழகான ஆடு! அது மட்டும் கிடைத்தால் இரவு உணவு முடிந்தது. பாதியை கிழட்டுச்சிங்கத்துக்குக் கொடுத்து விட்டால் ஒரு வாரத்துக்கு எதுவும் கேட்காது. யாருக்கும் பயப்படாமல் காட்டில் சுற்றலாம். வசதியாக இருக்கும் என்று நினைத்தது செந்நாய்.

உடனே செந்நாய் சூசனா ஆட்டுக்குட்டியை அழைத்து,

“ அழகுப்பெண்ணே! செந்நாய் மாமா உனக்குக் காட்டைச் சுற்றிப்பார்க்க அழைத்துப் போகிறேன்.. வா.. அந்தப் பிள்ளைகளுடன் சேர்ந்து உன் அழகே கெட்டுப்போச்சு.. செந்நாய் மாமா உன்னைக் குளிப்பாட்டி புத்தம் புது ஆடைகள் வாங்கித் தருகிறேன்..”

என்று சொன்னது. அதைக் கேட்ட சூசனா ஆட்டுக்குட்டி நடுங்கி விட்டது. உடனே துள்ளிக்குதித்து பாய்ந்து போகும்போது,

“ வேண்டாம் மாமா.. நான் இங்கே இன்னும் கொஞ்சநாட்கள்.உயிரோடு இருக்கிறேன்..”

என்று சொல்லியபடியே ஓடியது.

ஓடி வந்த சூசனா ஆட்டுக்குட்டியை சின்னு கட்டி அணைத்துக் கொண்டாள். நாய்க்குட்டி நக்கிக் கொடுத்து அன்பைக் காட்டியது. அவர்கள் எல்லாரும் கதைப்பாட்டியை நோக்கி ஓடினார்கள்.

  நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்