Showing posts with label குழந்தைக்கவிதை. Show all posts
Showing posts with label குழந்தைக்கவிதை. Show all posts

Wednesday, 5 March 2025

குழந்தைமையின் அற்புதத் தரிசனங்கள்

 

குழந்தைமையின் அற்புதத் தரிசனங்கள்

உதயசங்கர்




குழந்தைமை என்பதே மனிதனோ விலங்குகளோ பறவைகளோ மூளையின் செயல்பாடுகளான அறிவும் மனமும் உருப்பெரும்போது நிகழும் அற்புதங்கள். அனுபவங்களின் வழியே கிடைக்கும் உணர்வுகள் திரண்டு அறிவாக மாறுகிறது. ஆனால் உணர்வுகளின் வெளிப்பாடென்பது வெகுளித்தனமாகவும், கவித்துவமாகவும் அபத்தமாகவும் அர்த்தமில்லாததாகவும் தர்க்கமில்லாதாதாகவும் முக்கியத்துவமில்லாததாகவும் இருக்கும் நிலையையே நாம் குழந்தைமை என்கிறோம். எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எதைச் செய்கிறோமோ அதுவாகவே மாறிவிடும் தீவிர ஒருமை நிலையில் தான் குழந்தைமை தன்னை வெளிப்படுத்துகிறது. அப்படிப்பட்ட நிலையில் குழந்தைகளின் சொல்லும் நடவடிக்கைகளும் கணநேரத்தரிசனங்களைத் தரும். அவற்றைப் பார்ப்பதற்கோ உணர்வதற்கோ அறிவதற்கோ நேரமில்லாத பெரியவர்கள் அலட்சியப்படுத்திக் கடந்து போய்விடுவார்கள். கவிஞர்களும், எழுத்தாளர்களுமே அந்தக் கணநேரத்தரிசனங்களைக் கவிதைகளாக, கதைகளாக மாற்றுகிறார்கள். அப்படி கணநேரத்தரிசனங்களின் தொகுப்பு தான் கவிஞர். சலோனியா லியோ கமலத்தின் கவிதைகள்.

பொதுவாக சிறார் இலக்கியத்தை மூன்று வகைமைகளாகப் பிரிக்கலாம். குழந்தைகளே எழுதுகிற குழந்தைப்படைப்புகள், குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் எழுதுகிற படைப்புகள், குழந்தைகளை மையமாக வைத்து பெரியவர்களுக்கு எழுதுகிற படைப்புகள் என்று சொல்லலாம். இதில் மூன்றாவது வகையான குழந்தைகளை மையமாக வைத்து பெரியவர்களுக்கு எழுதுகிற இலக்கியப்படைப்புகளை கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி, என்று தொடங்கி தமிழ்ச்செல்வன், கோணங்கி, ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன் வரை நீளும். இதில் குழந்தைகளை மையப்படுத்தி நவீன கவிதைகளை எழுதுபவர்களாக, பழ.புகழேந்தி, முகுந்த்நாகராஜன், அ.வெண்ணிலா, ந.பெரியசாமி, ஆகியோரை முக்கியமானவர்களாகச் சொல்ல முடியும். அந்த வரிசையில் இந்தச் சிறப்பான கவிதைத்தொகுப்பின் மூலமாக சலோனியா லியோ கமலமும் இணைகிறார்.

குழந்தைகள் எதையும் திட்டமிடுவதில்லை. ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பதில்லை. பிரதிபலனை எதிர்பார்ப்பதில்லை. இருப்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். இருப்பதில் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். அதில் சமாதானமடைகிறார்கள். வெற்றிடங்களை வேறொன்றால் நிரப்புகிறார்கள். அந்தக் குழந்தையின் மனதை கவிஞர் துல்லியமாக வரைகிறார்.

கங்காரு படம் வரைந்த

அனாதைக் குழந்தை ஒன்று

கங்காருவின் பையில்

தனது உருவத்தை வரைந்து

மகிழ்கிறது.

தாய்மைக்கான ஏக்கத்தை குழந்தையின் வரைதலின் மூலம் நிரப்பிக்கொள்கிறது. பெரியவர்கள் எதையும் பயன் நோக்கில் தான் அணுகுகிறார்கள். ஆனால் குழந்தைகள் வெகுளியாய் எல்லாவற்றின் மீதும் அன்பாய் இருக்கிறார்கள்.

‘ ச்சீ போ ‘ என நான் துரத்திவிடும்

காக்கையிடம்

காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா எனச்

சொல்லி அனுப்புகிறது குழந்தை.

அனைத்தையும் அழகாகப்பார்க்கும் குழந்தைகளிடம் பெரியவர்கள் தானே பேதங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம்.

குழந்தைகளின் விரல்களால்

வரையப்படும்போது

பூக்கூடையும் மீன்கூடையும்

ஒரே மணத்தைப் பெற்று விடுகிறது.

 

குழந்தைகளின் விளையாட்டில் பொம்மைகளும் ஒன்று தான் சோப்பும் ஒன்று தான். பொம்மைகளைக் குளிப்பாட்டுவதைப் போலச் சோப்பையும் குளிப்பாட்டுகிறார்கள். சோப்பு கரையக் கரைய அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். குழந்தைகளைக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே இத்தகைய அவதானிப்புகளைக் கண்டடைய முடியும்.

குளியல் சோப்புகளைக்

குளிப்பாட்டி

குளிப்பாட்டி

மகிழ்ச்சியில்

கரைந்து போகின்றன

குழந்தைகள்.

 

எப்போதுமே குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இல்லாமையை அவர்கள் வார்த்தைகளால், செயல்களால், பாவனைகளால் மாற்றி இருப்பதாக நினைக்கிறார்கள். தன்னிடம் இல்லையென்றாலும் மற்றவர்களிடம் இருப்பதை நினைத்து திருப்தியடைகிறார்கள்.

குருவிக்கூட்டை

குருவி வீடு என்றும்

எலிப்பொந்தை

எலி வீடு என்றும்

சிங்கக்குகையை

சிங்கவீடு என்றும்

எறும்புப்புற்றை

எறும்பு வீடு என்றும்

சொல்லி மகிழ்கின்றன

தெருவோரம் படுத்துறங்கும்

திக்கற்ற குழந்தைகள்.

 

இந்த உலகினைப் படைக்கும் வல்லமை மிக்கதாய் கடவுளைக் கற்பனை செய்த மனிதன் இத்தனை கடவுள்களையும் மதங்களையும் படைத்திருக்கிறான். ஆனால் குழந்தை என்ன நினைக்கிறது தெரியுமா?

அம்மாவின் இடுப்பில்

இருக்கும் குழந்தை

பல்லக்கில் வலம் வரும்

தெய்வங்களைப்

பெரிது படுத்துவதே

இல்லை.

 

உண்மையான தெய்வம் அருகில் இருக்கும்போது எதற்காக பொம்மைகளை வணங்க வேண்டும்?

வெறுப்பு, பகை, விரோதம், குரோதம், மனமாச்சரியங்களைப் போற்றிப்பாதுகாப்பது பெரியவர்கள் மட்டுமே. குழந்தைகள் ஒரே கணத்தில் வெறுப்பின் இடத்தில் அன்பை கொண்டு வந்து வைப்பார்கள். பகையை நேசமாக மாற்றி விடுவார்கள். காய் விடும்போதே பழத்துக்கான விரல்களையும் சேர்த்தே வைத்திருப்பார்கள்.

பேய்களின் கொம்புகளை

எரேசர் கொண்டு

அழித்து விட்டு

பென்சில்களால்

இறக்கைகள் வரைந்து

பேய்களை

தேவதைகளாக்கி விடுகின்றன

குழந்தைகள்

மிகச்சுலபமாக.

 

என்று எழுதும் கவிஞரின் மனது குழந்தையின் மனது தானே. அதனால் இத்தனை அழகாகக் கவிதைகளை எழுத முடிகிறது.

குழந்தையைத் தூங்க வைத்து விட்டு

எப்போதும்போல்

விழித்திருக்கிரது நிலவு

இயற்கையும் கூட தாய்மையின் குணங்களைக் கொண்டிருப்பதாக அதுவும் குழந்தைகளின் பார்வையில் சொல்லும் போது கூடுதல் அழகு பெறுகிறது.

இப்படி அனிச்சம் தொகுப்பு முழுவதும் புதிய தரிசனங்கள், கண்டடைதல்கள் உணர்வுகள், காட்சிகள், படிமங்கள் நிறைந்திருக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகளைப் போல சின்னஞ்சிறு கவிதைகள் குழந்தைகளைப் பற்றிய நம்முடைய புரிதல்களை மேன்மையுறச் செய்கின்றன.

இன்னும் நிறைய எழுதுங்கள். 

குழந்தைகளின் மெசையாவாக இந்த உலகத்துக்கு நிறையச் சொல்லுங்கள்


( அனிச்சம்பூ நூலுக்கு எழுதிய முன்னுரை )


 

 

Tuesday, 25 February 2025

குழந்தைமையெனும் அற்புத உலகின் சாவிகள்

 

குழந்தைமையெனும் அற்புத உலகின் சாவிகள்

உதயசங்கர்



இந்தப் பூவுலகின் உயிர்களுக்கு இயற்கையின் ஆகச்சிறந்த கொடை என்னவென்றால் குழந்தமை தான். ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதும் இந்த உலகம் புதிதாகப் பிறக்கிறது. சூரியனிலிருந்து பிரிந்த கோளத்துண்டு பூமியாகி நானூற்றிஎண்பத்திநான்கு ஆண்டுகளும், முதல் உயிர் தோன்றி முன்னூற்றிஎண்பத்திநான்கு ஆண்டுகளும் ஆகின்றன. ஆனால் இந்த பூமி ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகப் பிறந்து கொண்டேயிருக்கிறது. அப்படி எத்தனை கோடி முறை பிறந்திருக்குமென்று யோசித்துப் பாருங்கள். குழந்தைமையின் அற்புதம் விளங்கும்.

பிறந்ததிலிருந்து குழந்தைகள் இந்த உலகை, இயற்கையை, புழுவை, பூச்சியை, எறும்பை, மனிதர்களை, ஏன் அவர்களையே கூட புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள்.  அவர்களுக்கேயுரிய தனித்துவமான கட்டற்ற புனைவு மொழியில் பேசுகிறார்கள். அந்த புனைவின் அதிசயத்தைப் பொதுவாகப் பெரியவர்கள் கவனிப்பதில்லை. அவர்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் அத்தனை முயற்சிகளில் மட்டுமே ஈடுபடுகிறார்கள். அதாவது சர்க்கஸில் விலங்குகளைப் பழக்குவதைப் போல குழந்தைகளை இந்த சமூகமென்ற சர்க்கஸ் கூடாரத்தில் மூன்றுவேளை உணவுக்காகப் பழக்குகிறார்கள். ஆனால் எழுத்தாளர். தேனி சுந்தர் குழந்தைகளின் குழந்தைமையைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அந்தக் குழந்தைமையெனும் அற்புத உலகின் கதவுகளைத் திறந்து காட்டுகிறார். அந்தக் கதவுகளைத் திறந்த சாவிகளை அவர் மட்டும் ரகசியமாகப் பூட்டி வைக்கவில்லை. நம்மிடமும் கொடுத்து திறந்து பாருங்கள் என்கிறார்.

அவர் கண்டடைந்த உலகத்தின் பக்கங்களே ” நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கின்றன” என்ற குழந்தைக்கவிதை நூல். நவீனத் தமிழ் சிறார் இலக்கிய வகைமைகளை மூன்றாகப்பிரிக்கலாம். முதலாவதாக குழந்தைகளே எழுதும் குழந்தை இலக்கியம். இரண்டாவதாக குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் எழுதும் குழந்தை இலக்கியம், மூன்றாவதாக குழந்தைகளை மையமாக வைத்து பெரியவர்களுக்காக எழுதும் குழந்தை இலக்கியம் என்று வகை பிரிக்கலாம். அந்த வகையில் எழுத்தாளர் தேனிசுந்தர் மூன்றாவது வகைமையான பெரியவர்களுக்காக எழுதும் குழந்தை இலக்கியத்தில் போற்றத்தக்க பங்களிப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

இதை நவீன பிள்ளைத்தமிழ் நூல் என்று சொல்லலாம். ஏற்கனவே தமிழ் இலக்கிய மரபில் பிள்ளைத்தமிழ் என்ற வகைமை இருந்தாலும் அதன் நாயகர்கள் பெரியவர்களே. அவர்கள் குழந்தையாக இருந்தபோது எப்படியெல்லாம் இருந்திருப்பார்களென்பதைச் சொல்வதாகவே அமைந்திருக்கும். அதனால் தான் அழ.வள்ளியப்பா போன்ற நம் முன்னோடிகள் பிள்ளைத்தமிழை சிறார் இலக்கியம் இல்லை என்று உறுதியாகச் சொன்னார்கள். ஆனால் தேனிசுந்தரின் குழந்தைக்கவிதைகள் பிள்ளைத்தமிழ் என்ற சொல்லின் முழு அர்த்தத்துடன் திகழ்கிறது. இந்த நூல் புகழ்மதி பிள்ளைத்தமிழ் என்று கூடச் சொல்லலாம்.

குழந்தைகள் எதையும் யோசிப்பதில்லை. அவர்களுக்கு உடனே தோன்றுவதை உடனே சொல்லிவிடுவார்கள். பெரியவர்களைப் போல இடம் காலநேரம் ஆள் அதனால் கிடைக்கும் பலாபலன் என்று மனதைக் கறைப்படுத்தாத வெள்ளையுள்ளம் கொண்டவர்களென்பதால் எல்லாம் உடனுக்குடன் தெறித்து வருகின்றன. அந்தத் தெறிப்புகளைச் சரியாகக் கண்டுணர்ந்து சொல்வது ஒரு கலைஞனால் மட்டுமே முடிகிற காரியம். அப்படிப்ப்பட்ட கலைஞனாக தேனி சுந்தர் இந்தத் தொகுப்பில் மிளிர்கிறார்.

 பள்ளியில் கற்பவர்களாக இருக்கும் குழந்தைகள் வீட்டில் ஆசிரியராக மாறுகிரார்கள். அம்மாவை எழுத வைக்கிறார்கள். விளையாட வந்த பக்கத்து வீட்டுச் சிறுவனை எழுத வைக்கிறார்கள்.  தான் கண்டுபிடித்த தன்னுடைய நான்கு பெயர்களை எல்லோரிடமும் சொல்லிச் சொல்லிப் பெருமைப் படுகிறார்கள்.

வீட்டுக்குள்ள

ரொம்ப வெக்கையா இருந்துச்சு

நானும் பாப்பாவும்

மாடிக்குப் போனோம்

புகழ்மதி சொன்னாங்க

வானத்துல பாருப்பா

எவ்ளோ நச்சத்திரம் இருக்குன்னு?!

நான் சொன்னேன்

சரி பாப்பா

எத்தனை இருக்குன்னு

எண்ணிச்சொல்லு பாக்கலாம்!

பத்து பதினாலு

எட்டு அஞ்சு பத்தொம்பது!

இப்டி எண்ணிட்டு

அடுத்துச் சொன்னது தான்

ஹைலைட்டு

எல்லா நச்சத்திரமும்

நம்மளவே தான்ம்ப்பா

பாத்துக்கிட்ருக்கு

இது தான் குழந்தைமையின் அற்புதகணம். அதைக் குழந்தை மொழியிலே நமக்குக் கடத்துகிறார் கவிஞர். பேயாக இருந்தாலும் கண்ணைக்குத்துவது சும்மாச்சுக்கும் என்று சொல்லும் மனம் குழந்தைகளுக்கு மட்டுமே வாய்க்கும்.ஆங்கில ஏ ஃபாரை வைத்து குழந்தை சொல்லும் வார்த்தைகளை வாசித்தால் நீங்கள் புன்னகைக்காமல் இருக்க முடியாது. எல்லாக்குழந்தைகளும் விவரம் தெரிந்த நாளிலிருந்தே பெரியவர்களாக ஆசைப்படுகிறார்கள். எல்லாப்பெரியவர்களுமே குழந்தைகளாக ஆசைப்படுகிறார்கள். இதுதான் வாழ்க்கையின் முரண். நேற்றுவரை சின்னப்பிள்ளையாகவும் இன்று பெருசாகவும் விவரமாகவும் ஆகிவிட்டதாகச் சொல்லும் குழந்தையின் சொற்களில் என்ன ஒரு ஆனந்தம்!

குழந்தைகள் எப்படியெல்லாம் மற்றவர்களை அடையாளம் காண்கிறார்கள் தெரியுமா?. சீட்டா என்ற நாயின் அம்மா என்று ஒரு வீட்டம்மாவை அடையாளம் காண்கிறார்கள். ஏடிஎம்முக்குள்ளே போய்த் திரும்பி வரும் அப்பா கையில் பணம் இருப்பதைப் பார்த்த குழந்தை கேட்கிறது.

உள்ள யாருமே இல்ல..

களவாண்டுக்கு வந்துட்டியா?

குழந்தைகளின் பள்ளி அனுபவங்களும் கவிதையாகி இருக்கின்றன. அதில் குழந்தைகளின் கசப்புணர்ச்சி தெரிகிறது. விமர்சனமும் தெரிகிறது.

ரொம்பதூரம் நடந்தா எரிமலைக்கு கால் வலிக்கும்னு குழந்தை கண்டுபிடிக்கிறாள். கேள்விகளைக் கேட்டுப் பதிலையும் சொல்கிற குழந்தையின் சொற்களில் அன்பு வழிந்தோடுகிறது. குழந்தையின் சில கேள்விகளுக்குப் பதிலே சொல்ல முடியாது. அந்தக் கேள்விகளையும் குழந்தை கேட்கிறார். பல்லி இறந்தால் சொந்தக்காரங்க வந்து அழுதுட்டு போயிட்டாங்களா ன்னு கேட்கிறது குழந்தை. யதார்த்த உலகத்தை எப்படிப் பிரதிபலிக்கிறது குழந்தை என்று பாருங்கள். தோத்ததுக்கும் பரிசு கொடுத்தாங்கன்னு குழந்தை சொல்கிறாள். போட்டிகளே கவனியுங்கள். வீடு கட்ட பணம் இல்லையா? பெரிய வீடு கட்டியிருக்கிறவங்ககிட்டே போய் கேட்கலாம் என்கிறது குழந்தை.

இப்படி சின்னச்சின்னக்கவிதைகளின் வழியே குழந்தையின் மனதைப் புரிய வைக்கிறார். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் எப்படிச் சிந்திக்கிறார்களென்பதை அவர்களுடைய சொற்களிலிருந்தே நமக்குக் காட்டுகிறார் தேனிசுந்தர். ஒவ்வொரு கவிதையையும் வாசித்து அனுபவிக்கவேண்டும். அப்போது தான் நம்முடைய கடந்து போன குழந்தைமையின் பழைய நினைவுகளை அசைபோடவும் மனம் ததும்பித் திளைக்கவும் முடியும்.

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். உங்கள் குழந்தையும் இப்படியான கவித்துவத்தருணங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதைக் கண்டு அனுபவிக்க நமக்குப் பொறுமை வேண்டும். குழந்தை மனம் வேண்டும்.

தேனி சுந்தர் இந்தக் கவிதைகளின் வழியே நவீனத் தமிழ்ச்சிறார் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கிறார். இன்னும் குழந்தமையின் அற்புதவெளியில் அலைந்து திரிந்து புதையலை நமக்கு அள்ளியள்ளிக் கொடுக்க வேண்டுமென நெஞ்சார வாழ்த்துகிறேன்.


( நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கின்றன - தேனி சுந்தர் நூலுக்கான முன்னுரை )