Showing posts with label இடைசெவல். Show all posts
Showing posts with label இடைசெவல். Show all posts

Saturday, 14 July 2018

கி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...


கி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...

உதயசங்கர்

கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு அரைமணிநேரம் மழை பெய்தது. காய்ந்து, கருகி, வெட்டை வெட்டையாய் விருவுகள் தெரிய நிதங்குலைந்து சுடுகாடு போல கொடூரமான அமைதி நிலை கொண்டிருந்த கரிசலில் உயிர்கள் துடிக்கத் தொடங்கின. வெயிலின் இசை முடிந்து விட்டது. ஒரே மாதிரி ராகம், தாளம், சுருதி, எதுவும் இல்லாத இசை. உடலையும் மனசையும் உருக்கும் இசை. கரிசல் காட்டு விவசாயி காட்டை உழுது காத்திருக்கிறான். உப்பு படிந்த வியர்வை அவனுடைய வீட்டின் தரையெங்கும் அவனுடைய உழைப்பைப் பற்றி ஓவியம் வரைந்து கொண்டிருந்தது. இன்று மழை. இடி. மின்னல். அவன் உடலும் உள்ளமும் குளிர்ந்தது. இனி காதுகளைக்கிழிக்கும் அந்த வெயிலின் இசை முடிவுக்கு வரும். அவன் உழுது போட்டிருக்கிற நிலத்திலிருந்து புதிய புதிய உயிர்கள் தோன்றும்.
 ராத்திரி ஒரே சத்தக்காடு. இரவு ஒரு இசைக்கச்சேரிக்குத் தயாராகிறது. கருமை கூடியிருக்கிற இந்த இரவில் நான் குமாரபுரம் ஸ்டேஷனில் நின்று எதிரே தெரியும் கரிசல் வெளியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இத்தனை நாள் தியானத்திலிருந்த உயிர்கள் மழையின் ஈரம் பட்டதும் உறக்கம் கலைந்து எழுந்தது போல ஒன்று போல மழலைக்குரலில் பேசுகின்றன. விதம் விதமான  ஏற்ற இறக்கங்களோடு பூச்சிகள் இசைக்கும். சிம்பனி இசை கரிசலின் மகத்துவத்தைச் சொல்கிறது. அந்த இசையின் ஸ்வரத்தில் நான் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கிறேன். என் எதிரே தூரத்தில் விளக்கின் வெளிச்சம் மினுக்குகிறது. அது இடைசெவலில் புறப்பட்டு தமிழிலக்கியத்தில் பாய்ச்சிய புதிய  வெளிச்சம் என்று நம்புகிறேன்.
இடைசெவலிலிருந்து தமிழ் இலக்கியவெளியில் பரவிய புதிய வெளிச்சம் தமிழிலக்கியத்தைத் தலைகீழாய் புரட்டிப்போட்டது.  புதிய பாதைகளை உருவாக்கியது. அதுவரை மடிசஞ்சியான மத்திய தரவர்க்கத்தின் சடவுகளையே பாடுபொருளாகக் கொண்டிருந்த இலக்கியம் முதன்முதலாக கிராமங்களின் உயிர்வெளியைக் காட்டியது. சிறுகீறலாக ஷண்முகசுந்தரம் துவங்கிய அந்தக்கொழுமுனை இடைசெவலில் கி.ராவின் கைகளின்வழியே ஆழமாகவும் அகலமாகவும் உழுது ஏராளமான புதையல்களை வெளிக்கொண்டுவந்தது. யாரும் சென்றிராத தாம்போதிகளின் வழியே சென்று நாட்டார் இலக்கியத்தை, வட்டாரச்சொல் அகராதியை, பாலியல் கதையாடல்களை, சிறுவர் கதைகளை, சேகரித்து பண்பாட்டுக்களத்தில் புதிய காற்றாய் வீசிய அந்தப்புயல் இடைசெவலில் மையம் கொண்டிருந்தது. ஒரு பல்கலைக்கழகத்தின் ஒட்டு மொத்தப்பணிகளை தன் தோள்களில் சுமந்த கி.ரா. என்ற கி.ராஜநாராயணன் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஏராளமான கொடைகளைத் தந்துள்ளார்.
வட்டார வழக்குகளை, விளையாட்டுகளை, சொற்பிரயோகங்களை, நாட்டார் கதைகளை, சிறுவர் கதைகளை, பெண் கதைகளை, நவீனக்கதைகளை, வேளாண் சமூக வரலாற்றை, களஞ்சியத்தை, தமிழுக்கு அளித்துள்ள மகத்தான ஆளுமை கி.ரா.
2.
1980- ஆம் ஆண்டு. கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு பரீட்சை எழுதி முடித்திருந்த சமயம். அதுவரை வீட்டுக்கு அருகில் இருந்த காந்திமைதானத்தில் நடக்கும் அரசியல் கூட்டங்களையும், இலக்கியப் பட்டிமன்றங்களையும், கவியரங்கங்களையும் ஆச்சரியத்துடன் வாய்பார்த்து கொண்டிருந்த எனக்குள்ளும் எழுத வேண்டும் என்ற பேராசைப்பேய் பிடித்தது. எல்லோருக்கும் போல கலாமோகினி கவிதையரசியை என்னிடம் அனுப்பி வைத்தாள். அவளுடைய கடைக்கண் பார்வை ஏற்படுத்திய ஹார்மோன்களின் துடிப்பினால் ஆழம் தெரியாமல் தமிழின் கரைகாண கடலுக்குள் குதித்தேன். நீச்சலும் தெரியாது. உயிரைத் தக்கவைக்க தத்தக்கா பித்தக்கா என்று கையையும் காலையும் அடித்துக் கொண்டிருந்தபோது தான் நண்பர் மாரீஸ் பள்ளிப்பிராயத்துக்குப் பிறகான நீண்ட இடைவெளியைக் கடந்து வந்து என்னைச் சந்தித்தார்.
அவர் தான் கோவில்பட்டி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். தேவதச்சன், கௌரிஷங்கர், பிரதீபன், வித்யாஷங்கர், அப்பாஸ், ராமு, முருகன், நாடக நடிகர் மனோகர், பசப்பல் ராஜகோபால், என்று ஒரு குழாமை அறிமுகப்படுத்தினார். நிறைய புத்தகங்களையும் சிற்றிதழ்களையும், கையெழுத்துப்பத்திரிகைகளையும் வாசிப்பதற்கான சூழ்ந்லை கிடைத்தது. அப்போது நயினாவின் வேட்டி சிறுகதைத் தொகுப்பும், வாசகர் வட்டம் வெளியிட்ட கோபல்லகிராமம் நாவலும் வாசித்தேன். என்னால் நம்பமுடியவில்லை. அந்த மொழி, நடை, உத்தி, எல்லாம் புதுமையாக இருந்தது. மூளையின் அணுக்களில் ஒரு புதிய உணர்வு தோன்றியது. நான் அதைப்பற்றி என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த மாரீஸ்
“ நாளைக்கி இடைசெவல் போவோம்… “ என்றான். மறுநாள் காலை நானும் அவனும்  இடைசெவலுக்குப் போனோம். நயினாவைச் சந்திக்கும்வரை எனக்கு எழுத்தாளர்களைப் பற்றி இருந்த சித்திரம் மிக மிக விசித்திரமானது. ஒழுங்கற்ற, விட்டேத்தியான, அசாதாரண நடைமுறை வாழ்க்கையும், பழக்கவழக்கங்களும் கொண்டவர்கள் என்று நினைத்திருந்தேன். அதில் பெருமளவு உண்மை இருந்ததை யதார்த்தத்திலும்  கண்டேன். ஆனால் நயினாவின் வீட்டில் என்னுடைய கற்பனைக்கு மாறான ஒழுங்கும் நேர்த்தியும் இருந்தது. புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடிதங்கள் தேதிவாரியாக இருந்தன. நயினாவின் சாய்வு நாற்காலித்துணி சுத்தமாக இருந்தது. வீட்டின் உள்ளே முற்றத்தில் இருந்த தொழுவம் சுத்தமாக இருந்தது. அமைதியும் சுத்தமும் அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தது.
ஈரிழைத்துண்டை மார்பில் போட்டமானிக்கு நயினா வந்து எங்களை வரவேற்றார். வெளியே பார்த்த சன்னலுக்கு எதிரே இருந்த சாய்வு நாற்காலியில் நயினா உட்கார்ந்தார். சன்னலில் இருந்து செய்யது பீடிக்கட்டை எடுத்தார். ஒவ்வொரு பீடியாக உருட்டிப்பார்த்து சில பீடிகளை ஒதுக்கினார். தேர்வு செய்த பீடிகளிலிருந்து ஒரு பீடியை எடுத்து அந்தப்பீடிக்கட்டுக்கு அருகிலேயே இருந்த கத்தரிப்பானால் அதன் சுருண்டு மடங்கியிருந்த நுனியைக் கத்தரித்தார். பின்னர் பீடியைப் பற்ற வைத்து இழுத்தார். அவருடைய இந்தச் செய்கைகள் எல்லாம் ஒரு தியானம் போல நடந்தது. நான் திறந்த வாய் மூடாமல் அவருடைய ஒரு அணக்கத்தையும் கவனித்துக் கொண்டிருந்தேன்.
மாரீஸ் மிக சகஜமாக நயினாவிடம் பேசினான். அடுக்களைக்குப் போனான். கணவதியம்மாவிடமிருந்து மோர் வாங்கி வந்தான். நாங்கள் குடித்தோம். நயினா மெல்லியகுரலில் நிறைய சங்கதிகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒன்றிலிருந்து ஒன்றாக தொட்டுத் தொட்டு பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அப்போது அவர் பேசியதில் கொஞ்சமாவது புரிந்ததா என்று தெரியவில்லை. அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அப்போது தான் கரிசல் வழக்குச்சொல் அகராதியைத் தொகுத்து வருவதாகச் சொன்னார். கிளிப் வைத்த பரீட்சை அட்டையில் நிறையக் காகிதங்களில் கரிசல் வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.
“ அகர வரிசைப்படி எழுதறது பெரிய வேலையா இருக்கு.. நீங்க அதைச் செய்ய முடியுமா?..”
என்று கேட்டார். எங்களுக்குத் தலைகால் புரியவில்லை. மறுநாளிலிருந்து ஒருபத்து நாட்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். மாரீஸ், முருகன், நான், முன்றுபேரும் காலையில் பத்துமணிக்குப் போய்விடுவோம். போனதும் ஒரு கடுங்காப்பி அல்லது மோர், மதியம் நல்ல சாப்பாடு, சாயந்திரம் கருப்பட்டிக்காப்பியும் காராச்சேவும் சாப்பிடுவோம். நாலு ஐந்து மணி வரைக்கும் உட்கார்ந்து எழுதிக்கொடுப்போம். எழுதியது கொஞ்சம் தான் பேசிக்கொண்டிருந்தது தான் அதிகம் என்று நினைக்கிறேன்.
கோவில்பட்டியில் கௌரிஷங்கர், தேவதச்சன், மனோகர், வித்யாஷங்கர், மாரீஸ், உதயசங்கர், நாறும்பூநாதன், சாரதி, முத்துச்சாமி, அப்பணசாமி, முருகன், எல்லோரும் சேர்ந்து சிருஷ்டி என்று ஒரு வீதி நாடகக்குழுவை உருவாக்கினோம். அதில் மௌனநாடகமாக பேரா.ராமனுஜத்தின் இசைநாற்காலி, தேவதச்சனின் பத்துரூபாய், பூமணியின் வலி, என்று நாடகங்களை உருவாக்கியிருந்தோம். தமிழ்நாட்டில் அப்போது தான் வீதி நாடகக்குழுக்கள் அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் உருவாகிக்கொண்டிருந்த நேரம். சிருஷ்டி கலைக்குழுவின் நாடகங்களின் முதல் அரங்கேற்றம் இடைசெவலில் தான் நிகழ்ந்தது. ஒரு மாலைவேளை நயினா தன்னுடைய மெல்லிய குரலில் சத்தமாக
“ கோவில்பட்டியிலிருந்து நாடகம் போட வந்திருக்காங்க… வாங்க..வாங்க… “ என்று ஊர் அழைப்பு செய்ய கோவிலுக்கு முன்னால் இருந்த மந்தைத்திடலில் கூட்டம் கூடிவிட்டது. அங்கே பேண்ட், சட்டை, ஸ்டெப் கட்டிங், ஹீல்ஸ் செருப்பு, போட்டிருந்த இளைஞர்கள் நாங்கள் நாடகங்களை அரங்கேற்றினோம். நாடகநிகழ்வுக்குப்பின்னால் நாடகவிமரிசனமும் நடந்தது. அதே போல சமீபத்தில் அமரரான கவிஞர், ஓவியர், அஃக் பரந்தாமனை அழைத்து பிக்காசோ நூற்றாண்டு ஓவியக்கண்காட்சி நடத்தினோம். கார்ட்டூன் கண்காட்சி ஒன்றும் நடத்தினோம். கோவில்பட்டியில் கலை, இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டேயிருந்தன. கரிசல் இலக்கியத்தின் காத்திரமான படைப்பாளிகளாக உருவாகிக் கொண்டிருந்தோம். நயினா எல்லோரிடமும் மிகப்பெருமிதமாக கரிசல் இலக்கியப்படை பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். பூமணி தன்னுடைய நாவலில் அவரை தன்னுடைய முன்னத்தி ஏர் என்றார். நாங்கள் நயினாவை எங்கள் பிதாமகராகப் போற்றினோம்.
கோவில்பட்டியில் மிகப்பெரிய எழுத்தாளர்குழாம் உருவாகவும் எல்லாவிதகலை முயற்சிகளைச் செய்து பார்க்கவும் நயினா பின்னணியில் எங்களுக்கு ஊக்கசக்தியாக இருந்தார் என்பதில் எள்ளளவும் மிகையில்லை.
3.

குமாரபுரம் ஸ்டேஷனுக்கு வெளியே வேம்பின் அடியில் கிடக்கும் சிமெண்ட் பெஞ்ச் காலத்தின் கரையேறிக் கிடக்கிறது. காலத்தின் பழுப்பு நிறத்தின் சிதறல்களில் கு.அழகிரிசாமியும் அவருடைய அத்யந்த நண்பரான கி.ரா.வும் சிறுவர்களாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். காற்றில் வேம்பின் மஞ்சள் நிறப்பழங்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. எதிரே விரிந்து வானத்தை அண்ணாந்து பார்த்து குடைபிடித்துக் கொண்டிருக்கும் கருவை மரத்தில் ஒரு கொண்டைக்குருவி கீச்சிட்டுக் கொண்டிருக்கிறது. கி.ரா. அந்தக்குருவியை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறார். பூஞ்சிட்டுகள் அருகிலிருந்த பன்னீர் மரத்தில் கிளைகளில் தவ்விக் கொண்டிருந்தன. கு.அழகிரிசாமியின் தொண்டையிலிருந்து ஏதோ ஒரு ராக ஆலாபனை மெல்ல எட்டிப்பார்க்கிறது. விளாமரத்தின் கிளையில் ஒரு குயில் கூவிக்கொண்டிருக்கிறது. கி.ரா. என்ற வெங்கடேசுக்கு பறவைகளின் மீது அலாதி ஆர்வம் தோன்றுகிறது. எதிரே இருக்கும் புதரிலிருந்து எட்டிப்பார்க்கும் கௌதாரியை அதன் குஞ்சுகளை ஆச்சரியத்துடன் விழிகள் விரியப் பார்க்கிறான். இந்நேரம் அவனுடைய மாமா திருவேதி நாயக்கர் இருந்தால் கவணால் அந்தக்குயிலை அடித்து வீழ்த்தியிருப்பார். இன்று மதியம் கம்பங்கஞ்சிக்கு வெஞ்சனமாயிருக்கும் அந்தக்குயில். அவன் சிரித்தான். அந்தக்குயிலும் சிரித்தது.
தினமும் இடைசெவல் பள்ளிக்கூடம் விட்டதும் தெக்கேயிருந்து வருகிற மெயில் வண்டியைப் பார்ப்பதற்கு இடைசெவலிலிருந்து குறுக்கே காட்டுவழியாக வெங்கடேசும், அசோக்கும் ஓடி வருவார்கள். தண்டவாளத்திலிருந்து தூரமாய் நின்று கொண்டு மெயில் வண்டியில் போகிற பயணிகளுக்கு கையை ஆட்டி டாட்டா காட்டுவார்கள். பதிலுக்கு பயணிகள் காட்டுகிறார்களோ இல்லையோ ரயில் டிரைவரும், கார்டும் பச்சைக் கொடியை அசைத்து அவர்களுக்கு டாட்டா காட்டுவார்கள். பொசல் வண்டியில் போகிற சட்டைக்காரடிரைவர் இப்போதும் அவர்களுக்கு ரொட்டியும் பிஸ்கெட்டும்போடுகிறார். அவர்கள் நீண்ட கம்பின் நுனியில் மல்லித்தழையைக் கட்டி நீட்டுகிறார்கள். அவர்கள் இருவருக்கும் பொசல்வண்டி பார்த்து விட்டால் ஆச்சரியமாக இருக்கும். எம்மாம் நீளம்! டொடக் டொடக் டொடக்.. என்று போய்க்கொண்டேயிருக்கும். அசோக் ஆளே இல்லாத அதற்கும் டாட்டா காட்டுவான்.
பள்ளிக்கூட லீவு நாட்களில் ஆடுமேய்க்கும் வடிவேலுவுடன் சேர்ந்து காடோ செடியோ என்று அலைவார்கள். வடிவேலு காட்டில் அலைந்து திரியும்போது மட்டும் தான் பாடுவான். அந்தப்பாட்டு அவனே கட்டியது. அவன் பாட்டுக்கட்டும் அழகே தனீ அழகு. கையில் வைத்திருக்கும் குச்சியால் தரையில் தோண்டிக்கொண்டேயிருப்பான். அப்படித்தோண்டத் தோண்ட அவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் அடுத்தடுத்து வந்து கொண்டேயிருக்கும். அப்படியே ராகத்தை இழுத்து வளைத்துப் பாடுவான்.
வெத்திலை வெத்திலை வெத்திலையோ
கொழுந்து வெத்திலையோ
கோவில்பட்டிக் கொழுந்து வெத்திலையோ
எப்படி அவன் பாடுகிறான்? எப்படி ராகம் அவனுடைய தொண்டையிலிருந்து இழைகிறது என்று ஆச்சரியத்துடன் வடிவேலின் வாயையே பார்த்துக் கொண்டிருப்பான். அசோக்.  கலை எப்படி எங்கே ஏன் தோன்றுகிறது என்று யாரால் சொல்ல முடியும்? ஆடுகள் கரிசலில் பச்சையைத் தேடி அலைந்து கொண்டிருக்கும்.
திடீரென்று காட்டுக்குள் காணாமல் போகும் வடிவேலு எங்கே போவான்? என்ன செய்வான்? இருட்டு அவனுக்குப் பயமாக இருக்காதா? என்ன சாப்பிடுவான்? எப்படித்தூங்குவான்? வெங்கடேசு யோசித்தான். ஒருவேளை காட்டின் இருட்டிலிருந்து தான் அவன் வார்த்தைகளை, பாடல்களை, ராகங்களை எடுத்துக் கோர்த்து வைத்திருக்கிறானோ? கலையும் கலைஞர்களும் உன்மத்தம் கொண்டவர்கள் தானோ? தனிமையின் சிகரத்திலிருந்தே கலைஞன் தன் பாடல்களைப்பாடுகிறான்.
குமாரபுரம் ஸ்டேசனுக்கு தண்ணீர் குடிக்க வருகிற வடிவேலுவை நானும் பார்க்கிறேன். அவனிடம் கி.ரா.வைப் பற்றிக் கேட்கிறேன். இடைசெவல் கண்மாய்க்கரையில் நிற்கும் ஆலமத்தின் அடியில் தூரத்தில் தெரியும் குருமலையைப் பார்த்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார் என்கிறான். அவனுடைய பாடல்கள் எல்லாம் அவர் சொல்லித்தந்தது என்கிறான்.
இப்போதும் செந்திவேல் அம்மனைக்குளிப்பாட்டும்போது கி.ரா.வைத்தேடுகிறான். கோவில் நைவேத்தியத்தை உருளியின் கைப்பிடியில் கரண்டிக்காம்பைக் கொடுத்து தூக்கிக் கொண்டு வருகிறான். வெங்கடேசு எத்தனை பறவைகளைப் பார்க்கிறான்! அத்தனை பறவை முட்டைகளையும் சேகரித்து வைத்திருக்கிறான். காடை, கௌதாரி, கிளி, பருந்து, மயில், தவிட்டுக்குருவி, கொண்டைக்குருவி, கருங்குருவி, வாலாட்டிக்குருவி, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, நீலச்சிட்டு, என்று அத்தனை முட்டைகளையும் சேகரித்து வைத்திருக்கிறான்.
என் கனவில் திருவேதி நாயக்கரும், அசோக்கும், செந்திவேலும், வெங்கடேசும், வடிவேலுவும் திக்கம்மாளூம் வருகிறார்கள். அவர்கள் என்னிடம் கி.ரா.வைப் பார்த்தீர்களா? என்று கேட்கிறார்கள். அவர் புதுச்சேரியில் சௌக்கியமாக இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். காகங்கள் கலைந்து கலவரம் அடைகின்றன. திருவேதி நாயக்கர் வெங்கடேசு.. என்று வேப்பமரத்தைப் பார்த்து சிரிப்புடன் அழைத்துக் கொண்டிருக்கிறார்.
நள்ளிரவு. கரிசல் பூச்சிகளின்  இசை அடங்கி விட்டது. எப்போதாவது ஒரு குரல் எழுந்து அடங்குகிறது. அமைதியின் போர்வை எல்லாவற்றையும் போர்த்தி விட்டது. குருமலை கணவாய்க்காற்று குளிர்ந்து வீசுகிறது. நான் பொசல்வண்டியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வண்டி வந்தால் தான் வெங்கடேசும் அசோக்கும் வருவார்கள். அவர்கள் வந்தால் தான் எங்கள் அன்புக்குரிய கி.ரா. வருவார். ரயில்வே கேட்டின் மீது கைகளை வைத்துக் கொண்டு ஓடுகிற ரயிலின் ஒளிநிழல் விளையாட்டுகளை ரசித்துக் கொண்டிருப்பார். இன்னும் என்னென்ன வகைமையில் எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பார். நீண்ட தார்ச்சாலையின் ஓரத்தில் வளர்ந்துள்ள சீம்புல் அவருக்குத் தலையாட்டி வணக்கத்தைச் சொல்கிறது. அவர் நடந்து கொண்டிருக்கிறார். நடக்க நடக்க பூக்கிறது இலக்கியம். நானும் வணங்குகிறேன். என்னுடைய பிதாமகனை.
என் எதிரே இடைசெவல்.
உண்மையில் இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில் தூரம் அதிகமில்லை.

நன்றி - ஓவியம் உ.நவீனா

கி.ரா. என்னும் மானுடம் கி.ரா.95 தொகுப்பு நூல்.






Friday, 16 September 2016

கருப்பட்டிக் காப்பியும் காராச்சேவும் இடைசெவல் நயினாவும்

கருப்பட்டிக் காப்பியும் காராச்சேவும் இடைசெவல் நயினாவும்
உதயசங்கர்
கல்லூரிப்படிப்பு முடிந்திருந்த நேரம். அதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் கோவில்பட்டியில் உள்ள இலக்கியவாதிகளின் அறிமுகம், இலக்கியப்புத்தகங்களின் வாசிப்பு என்று எனது இலக்கிய அறிவு குழந்தைப் பருவத்திலிலிருந்தது. புத்தகங்களை வாசிக்க வாசிக்க எழுத்தாளர்களின் மீது பிரமிப்பு ஏற்பட்டது. எழுத்தாளர்களைச் சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஒரு புதிய வெளிச்சம் தந்தது. கனவுகளில் எழுத்தாளர்கள் வந்தார்கள். எழுத்தின் மீதான பிரேமை கூடிக்கொண்டிருந்தது. ஆனால் மிகப்பெரிய தயக்கம் என்முன்னால் மலை போல நின்று கொண்டிருந்தது. இயல்பிலேயே மிகுந்த தயக்கமும் கூச்ச சுபாவமும் உடைய நான் எழுத்தாளர்களைச் சந்திக்கும் போதும் சரி, படித்த புத்தகங்களைப் பற்றிய கருத்துகளைக் கேட்கும்போதும் சரி எதுவும் பேசியதில்லை. கருத்துகள் முட்டி மோதிக் கொண்டிருந்தாலும் வாயைத் திறக்க மாட்டேன். அதையும் மீறி ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி, அதைப்பற்றி மீண்டும் யாராவது கேட்டுவிட்டால் வெலவெலத்து போய்விடும். உலகமே என் வார்த்தைகளில் இருண்டுவிடுமோ என்று பயந்துபோய் பேசாமலிருந்து விடுவேன்.
இலக்கியம், அரசியல், தத்துவம், என்று எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது இதுவரை இல்லாத புதிய உலகத்திற்கு நான் போய் வருகிற மாதிரி இருக்கும். அந்த உலகத்தின் அழகும் பயங்கரமும், என்னை வசீகரித்தது. அந்த வசீகரத்தின் பின்னால் ஓடித்திரிந்தேன். யாருடைய கைப்பிள்ளையாகவும் இருக்கத்துணிந்தேன். அப்போது என் பள்ளித்தோழனாகவும், கல்லூரித்தோழனாகவும் இருந்த மாரீஸ் மிக லகுவாக எல்லா எழுத்தாளர்களிடமும் பழகுவதையும் அவர் மனதுக்குப் பட்டதை பட்டென்று முகதாட்சண்யமின்றி சொல்வதையும் கண்டு அவர் மீதுபொறாமைப்பட்டிருக்கிறேன்.
இரவுகளில் எங்கள் ஜமா எப்போதும் காந்திமைதானத்தில் கூடிக் கலைய நள்ளிரவு தாண்டிவிடும். அப்படி ஒரு சந்திப்பில் மாரீஸ் என்னிடம் நாளை கி.ராவைப் பார்க்க இடைசெவல் போகலாம் வர்றியா? என்றார். அப்போது தான் படித்து முடித்திருந்ததால் வேலையின்மையின் வெம்மை தாக்காத நேரம். அதோடு இந்தக் கிறுக்கும் சேர்ந்து விட்டதா நான் நடந்து திரிந்ததாக நினைவில்லை. பறந்து கொண்டிருந்தேன். இடைசெவலில் கி.ரா.வைப் பார்க்கப்போகிறோம் என்றதும் சரி என்று சொல்லிவிட்டேன். அதற்குக் கொஞ்சம் முன்னால் அவருடைய கதவு சிறுகதைத்தொகுப்பையும் குறுநாவலையும் படித்திருந்தேன். அதைப் படித்தபோது இலக்கியம் வேறு மாதிரியிருந்தது. அந்த எழுத்து நடையின் மீது ஒரு அந்நியோன்யமான உணர்வு எப்படியோ உணர முடிந்தது. அவரைச் சந்திக்க மறுநாள் காலை நானும் மாரீஸூம், கவிஞர் முருகனும், சென்றிருந்தோம். பேருந்து நிறுத்தத்திலிருந்து இடைசெவல் கிராமத்துக்குள் நுழைவதற்கு எப்படியும் ஒரு முக்கால் கி.மீ தூரம் இருக்கும். பல சமயங்களில் இந்த இடைவழி தூரத்தைக் கடப்பதற்குப் பலமணி நேரம் எடுத்திருக்கிறோம். நின்று பேசி, நின்று பேசி, நடந்து கொண்டேயிருப்போம். ஓரிருமுறை நயினா பேருந்து நிறுத்தம் வரை கூட வந்து வழியனுப்புவார்.
அவருடைய வீட்டில், அறையில் இருந்த ஒழுங்கு எங்களை ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் எழுத்தாலர்கள் நடைமுறை வாழ்க்கையில் அக்கறையற்றவர்கள் என்ற சித்திரம் எனக்குள் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பெருமிதமும் இருந்தது. ஆனால் நயினாவின் அறையில் சுத்தமும் ஒழுங்கும் அப்படி ஆட்சி செய்தன. அப்போது அவர் புகைத்துக் கொண்டிருந்த காலம். பீடிக்கட்டிலிருக்கும் பீடிகளைத்தரம் பிரித்து தனியே அடுக்கி வைத்திருப்பார். புகை பிடிக்கும் எண்ணம் வந்ததும், பீடிகளின் அருகில் வைத்திருக்கும் கத்தரிக்கோலை எடுத்து பீடியின் முனையைக் கத்தரித்த பின்னால் புகைக்கத் தொடங்குவார். அதைப்பார்க்க பார்க்க புகைக்கும் ஆசை யாருக்கும் வரும்.
கரிசல் வட்டாரச்சொல்லகராதிக்கான சொற்களை அகரவரிசைப்படுத்தும் வேலையை நானும், மாரீஸும், முருகனும் செய்தோம். கணவதியம்மா நாங்கள் போனதும் மணக்கும் மோரும், மதியம் சாப்பாடும், சாயங்காலம் கருப்பட்டிக்காப்பியும் காராச்சேவும், தந்து உபசரித்துக் கொண்டேயிருப்பார்கள். அத்தனை இணக்கமான தம்பதிகளை இதுநாள் வரை வேறு யார் வீட்டிலும் நான் பார்த்ததில்லை.
சுரங்கத்தைத் தோண்டியெடுத்த மாதிரி சொற்கள் குவிந்து கொண்டேயிருந்தன. அவ்வப்போது வரும் சந்தேகங்களை நயினாவிடம் கேட்டால் போதும். உரையாடல் தொடங்கிவிடும். உரையாடல் ஒரு கலை. அதில் நயினா வல்லவர். அணுக்கமாக அமர்ந்து நெருங்கிய பாந்தமான குரலில் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அத்தனை விவரங்கள், கதைகள், விவரணைகள், இலக்கியசர்ச்சைகள், என்று பேசிக்கொண்டேயிருப்பார். அப்போது நாங்கள் இருபதுகளில் இருந்தோம். நயினா அறுபதை எட்டிக் கொண்டிருந்தார். வயதின் இடைவெளியை அவருடைய பேச்சு குறைத்துவிடும். சமவயதினர் போலும் அவர் எங்களிடம் பகிர்ந்து கொண்டே சமாச்சாரங்கள் ஏராளம்.
அப்போது கோவில்பட்டியில் ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருந்த நேரம். தேவதச்சன், பூமணி, கௌரிஷங்கர், வித்யாஷங்கர், அப்பாஸ், தமிழ்ச்செல்வன், பிரதீபன், ஜோதிவிநாயகம், கோணங்கி, உதயசங்கர், நாறும்பூ நாதன், திடவை பொன்னுச்சாமி, சாரதி, அப்பணசாமி, சோ.தர்மன், முருகன், ராம், என்று நகரத்துக்குள்ளேயே ஒரு பெரிய பட்டாளம் இருந்தது. எந்தத்திசை வழி நடந்து சென்றாலும் இரண்டு இலக்கியவாதிகள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். எப்போதும் விவாதம்..விவாதம்… விவாதம்.. கோவில்பட்டி நகரமே கொந்தளித்துக்கொண்டிருப்பதைப் போலத் தோன்றும். சதா வெளியூர்களிலிருந்து எழுத்தாளர்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவர்களின் வாய்மொழிக்கதைகள் மூலமாகவும் கோவில்பட்டி இலக்கியவட்டாரம் தமிழ் இலக்கிய உலகில் பிரசித்தி பெறத் தொடங்கியது. இதெற்கெல்லாம் பின்புலமாக நயினா இருந்தார். அவர் காரசாரமான விவாதங்களில் பங்கெடுத்ததில்லை. இலக்கியக்கூட்டங்களில் ஆவேசமாக உரையாற்றியதும் இல்லை. இலக்கிய அரசியலில் தன்னை முன்னிறுத்தும் சாணக்கிய வேலைகளைச் செய்ததும் இல்லை. ஆனால் கோவில்பட்டி இலக்கியச்சூழலுக்குப் பின்திரையாக இருந்தார். புதிய இளைஞர் படையைக் கண்டு பெருமிதம் அடைந்தார். அதை எல்லோரிடமும் சொல்லிச் சிலாகித்தார். எங்களின் தார்மீக பலமாக அவர் இருந்தார். இத்தனைக்கும் விமரிசன விவாதங்களில் நாங்கள் அவரை விட்டு வைத்ததும் இல்லை.
அவர் ஆரம்பத்திலிருந்தே வட்டார இலக்கியத்தின் மீதும், குறிப்பாகத் தான் வாழ்ந்த தனித்துவமிக்க கரிசல்மண்ணின் மீதும் தீராத நம்பிக்கை வைத்திருந்தார். வட்டார இலக்கியம் குறித்து எத்தனையோ எதிர்மறையான விமரிசனங்கள் வந்த போதும் அவர் விடாப்பிடியான நம்பிக்கை வைத்திருந்தார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை.
பெரும்பாலும் உயர்சாதி இலக்கியமாகவே இருந்து வந்த தமிழிலக்கியத்தில் கிராமத்தின் குரலை அழுத்தமாகச் சொன்னவர் நயினா தான். ஒரு வகையில் பிற்படுத்தப்பட்ட,  மக்களின் வாழ்க்கை தமிழிலக்கியத்தில் பிரதிபலிக்க முன்னத்தி ஏர் பிடித்தவரும் நயினா தான். இன்று வட்டாரமொழி இலக்கியம் இத்துணை அங்கீகாரம் பெற்றிருக்கிறதென்றால் அதற்கு நயினாவின் தொடர்ந்த இலக்கியச்செயல்பாடுகளே காரணம். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணிகளை அவர் தனியாக நின்று செய்தவர். அவர் எங்கேயிருந்தாலும் அங்கே ஒரு இலக்கியச்சூழல் உருவாகிவிடும். கோவில்பட்டியில் அவர் இருந்த காலம் இங்குள்ள இலக்கியவாதிகளின் பொற்காலம் என்று சொல்லலாம். அதை நினைத்து நாங்கள் இப்போதும் பெருமை கொள்கிறோம்.
பலசமயங்களில் நானும் மாரீஸும் பேசிக்கொள்ளும்போது எங்கள் கண்களில் அந்த நாட்களின் ஞாபகங்கள் நிழலாடும். இடைசெவல் சென்று வந்ததைப்பற்றி, நயினாவைப்பற்றி, கோவில்பட்டி நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஞாபகம் கொள்ள வெவ்வேறு ஞாபகங்கள் இருக்கும். எனக்கும் என் துணைவியாருக்கும் மேலும் நெருக்கமான ஒரு நினைவுக்குறிப்பு உண்டு. என் திருமணத்துக்கு ஒரு எழுத்தாளர் தாலி எடுத்துத் தர வேண்டும் என்று தோழர்கள் பேசி முடிவு செய்தார்கள். உடனடியாக எங்கள் அனைவரின் ஒருமித்த கருத்தாக நயினாவையும் கணவதியம்மாவையும் கூப்பிடலாம் என்று முடிவு செய்தோம். என் துணைவியாரின் சொல்லாடலில் கை தட்டி கலியாணம் என்று பெயர்பெற்ற என் திருமண புகைப்படத்தொகுப்பில் நயினாவையும் கணவதியம்மாவையும் அடிக்கடி நானும் என் குடும்பத்தாரும் பார்த்துக் கொள்வோம். எழுத்திற்கும் எனக்கும் இன்று வரையிலான உறவுக்கு நயினா ஒரு முக்கியக் காரணம் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.
எண்பத்தியைந்து வயதைக்கடந்தும் இன்னும் தமிழிலக்கியத்துக்கு தன்னுடைய பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கும் நயினா புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் உத்வேகமளிக்கிறார் என்றால் மிகையில்லை. மாரீஸிடம் நான் சொன்னேன்,
“ நயினாவை அவருடைய நூறாவது வயதில் சென்று பார்க்க வேண்டும்..”
அதற்கு அவர் சொல்கிறார்,
“ அதென்ன பிரமாதம்! அப்பவும் நயினா நமக்கு கருப்பட்டிக்காப்பியும் காராச்சேவும் கொடுத்து ஏகப்பட்ட சங்கதிகளைச் சொல்லுவார்..”
உண்மை தானே!
( பத்து வருடங்களுக்கு முன்பு முன்னொரு காலத்தில் நூலில்

நான் எழுதிய கட்டுரை.)
 

Monday, 1 September 2014

இன்னும் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு

உதயசங்கர்ki.ra

அன்று மழை பெய்து கொண்டிருந்தது

மாரிஸும் நானும்

இடைசெவல் பேருந்து நிறுத்தத்திலிருந்து

நடந்து வந்து கொண்டிருந்தோம்

உங்கள் வீட்டிற்கு நயினா..

கந்தகபூமியின்

கரிசல்காட்டு மக்களின்

மனசின் ஈரம் போல

வரவேற்றீர்கள் உங்கள் இசைக்குரலால்

ஓலைப்பாயில் மோளும்

ஓசையுடன் இலக்கிய சர்ச்சைகள்

ஆரவாரமான கூப்பாடுகள்

வசியம் செய்து

வசத்துக்கு கொண்டு வந்தீர்கள்

உங்கள் இனிய குரலால்

உங்களிடமிருந்து

புதிய தகவலோ வாழ்வநுபவமோ

முன்கூட்டியே

ஒரு மெலிதான செருமலை

அனுப்பி வைக்கும் எங்களுக்கு

இலக்கியத்தை மட்டுமில்லை

வாழ்க்கையையும் பார்ப்பது எப்படியென்று

வலிமையாகக் கற்றுக்கொடுத்தீர்கள்

உங்கள் மென்மையான குரலில்

2

இருளும் ஒளிரும்

விருவோடிய மண்ணை

வெறித்தபடி திரிந்தோம்

விரக்தியுடன் நாங்கள்

மெலிந்துயர்ந்த உருவத்தில்

அதிராத நடையில்

ராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜநாராயணப்பெருமாள் ராமனுஜன்

என்று எல்லோருக்கும் அன்பான

எங்கள் நயினா நீங்கள் வந்தீர்கள்

கீற்றாய் சிந்திய புன்ன்கையுடன்

நீங்கள் கரிசல்க்காட்டை

உழுது வைக்கச் சொன்னீர்கள்

மழை வருமா என்றோம்

நீங்கள் எங்களிடம்

விதை விதைக்கச் சொன்னீர்கள்

முளைக்குமா என்றோம்

எங்களை வெள்ளாமைக்குத்

தயாராகச் சொன்னீர்கள்

வீடு வந்து சேருமா என்று சந்தேகப்பட்டோம்

தீர்க்கதரிசி நீங்கள்

மழை பொழிந்தது

விதை முளைத்தது

வெள்ளாமை வீடு சேர்ந்தது

வாய்மொழி இலக்கியமாம்

வட்டார இலக்கியமாம்

கரிசல் இலக்கியமாம்

என்று ஏகடியம் பேசிச் சிரித்தவர்கள்

இன்று தமிழுக்குப் பெருங்கொடையென்று

புல்லரித்து அலைகிறார்கள்

பிராமண வெள்ளாள மேலாண்மை

இலக்கியக் கரம்பைக்கட்டிகளை

உடைத்தது உங்கள் முன்னத்தி ஏர்

தமிழிலக்கியத்திற்கு

புதிய திசை காட்டினீர்கள்

தமிழையும் புதிதாக மாற்றினீர்கள்

புதிய காற்று வீசிக்கொண்டிருக்கிறது

இப்போது

3

மடிசஞ்சியான

மத்தியதர வர்க்க தமிழிலக்கியத்தில்

உழைக்கும் கிராமத்தான்களும்

உரிமை கோர வைத்தவர் நீங்கள்

விதவிதமான பசியை மட்டுமல்ல

கரிசல்க்காட்டு பண்டங்களின்

விதவிதமான ருசிகளையும்

சொன்னீர்கள்

கரிசல்ச்சீமையின்

புதிய எழுத்தாளர் படையை

அணி திரட்டியவர் நீங்கள்

கரிசல் இலக்கியத்தின்

மூலவர் நீங்கள்

உற்சவ மூர்த்தியும் நீங்களே

இப்போது வெக்கையும்

வியர்வையும் பொங்கும்

புதிய மனிதர்கள்

புதிய இலக்கியத்துக்குள்

நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்

4

தேசிய நெடுஞ்சாலையில்

கடக்கும்போதெல்லாம்

ஒரு குழந்தையின்

குதூகலம் பொங்கிவரும்

இடைசெவலைப் பார்க்கும்போது

எங்கள் ஞானத்தந்தை

சுற்றித் திரிந்த பூமியல்லவா

5

இன்னும்

ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு

இதோ இடைசெவல் பஸ் நிறுத்தம்

உங்கள் வீட்டிற்கு

நடந்து கொண்டிருக்கிறோம்

நானும் மாரீஸும்

ஒரு நூற்றாண்டாய் மழை

பெய்து கொண்டிருக்கிறது

கனிவான சிரிப்புடனும்

கருப்பட்டிக் காப்பியுடனும் நீங்கள்…

Wednesday, 9 May 2012

கருப்பட்டிக் காப்பியும் காரச்சேவும் இடைசெவல் நயினாவும்

 

ki.ra

கல்லூரிப்படிப்பு முடிந்திருந்த நேரம். அதற்கு சிறிது நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் உள்ள இலக்கியவாதிகளின் அறிமுகம். இலக்கிய புத்தகங்களின் வாசிப்பு என்று எனது இலக்கிய அறிவு குழந்தைப் பருவத்திலிருந்தது. புத்தங்களை வாசிக்க வாசிக்க எழுத்தாளர்கள் மீது பிரமிப்பு ஏற்பட்டது. அவர்களைச் சந்திக்கின்ற போதெல்லாம் அவர்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஒரு புதிய வெளிச்சம் தந்தது. கனவுகளில் எழுத்தாளர்கள் வந்தார்கள். எழுத்தின் மீதான பிரேமை கூடிக்கொண்டிருந்தது. ஆனால் மிகப்பெரிய தயக்கம் என்முன்னால் மலைபோல நின்று கொண்டிருந்தது. இயல்பிலேயே மிகுந்த தயக்கமும் கூச்ச சுபாவமுடைய நான் எழுத்தாளர்களைச் சந்திக்கும் போதும் சரி, படித்த புத்தகங்களைப் பற்றிய கருத்துகளைக் கேட்கும்போதும் சரி எதுவும் பேசியதில்லை. கருத்துகள் முட்டிமோதிக் கொண்டிருந்தாலும் வாயைத் திறக்க மாட்டேன். அதையும் மீறி ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி, அதைப்பற்றி மீண்டும் யாராவது கேட்டுவிட்டால் வெலவெலத்து போய்விடும் உலகமே என் வார்த்தைகளில் இருண்டு விடுமோ என்று பயந்து போய் பேசாமலிருந்து விடுவேன்.

இலக்கியம், அரசியல், தத்துவம், என்று எழுத்தாளர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இதுவரை இல்லாத புதிய உலகத்திற்கு நான் போய் வருகிற மாதிரி இருக்கும். அந்த உலகத்தின் அழகும் பயங்கரமும் என்னை வசீகரித்தது. அந்த வசீகரத்தின் பின்னால் ஒடி ஓடித் திரிந்தேன். யாருடைய கைப்பிள்ளையாகவும் இருக்கத் துணிந்தேன். அப்போது என் பள்ளித் தோழனாகவும் கல்லூரித் தோழனாகவும் இருந்த மாரீஸ் மிக லகுவாக எல்லா எழுத்தாளர்களிடமும் பழகுவதையும், அவர் மனதுக்குப் பட்டதை பட்டென்று முகதாட்சண்யமின்றி சொல்வதையும் கண்டு அவர் மீது பொறாமைப்பட்டிருக்கிறேன்.

இரவுகளில் எங்கள் ஜமா எப்போதும் காந்திமைதானத்தில் கூடிக் கலைய நள்ளிரவு தாண்டிவிடும். அப்படி ஒரு சந்திப்பில் மாரீஸ் என்னிடம் நாளை கி.ராவைப்பார்க்க இடை செவல் போகலாம் வர்றியா ? என்றார். அப்போது தான் படித்து முடித்திருந்ததால் வேலையின்மையின் வெம்மை தாக்காத நேரம், அதோடு இந்தக் கிறுக்கும் சேர்ந்துவிட்டதால் நான் நடந்து திரிந்ததாக நினைவில்லை. பறந்து கொண்டிருந்தேன். இடைசெவலில் கி.ராஜநாராயணனைப் பார்க்கப் போகிறோம் என்றதும் சரி என்று சொல்லிவிட்டேன். அப்போது தான் அவருடைய கதவு சிறுகதைத் தொகுப்பும் கிடை குறுநாவலும் படித்திருந்தேன். அதை படித்த போது இலக்கியம் வேறு மாதிரியிருந்தது. அந்த எழுத்து நடையின் மீது ஒரு அந்நியோன்யமான உணர்வு எப்படியோ தோன்றியதை உணர முடிந்தது. அவரைச் சந்திக்க மறுநாள் காலை நானும், மாரீஸும், கவிஞர் முருகனும் சென்றோம். பேருந்து நிறுத்தத்திலிருந்து இடைசெவல் கிராமத்திற்குள் நுழைவதற்கு எப்படியும் ஒரு முக்கால் கி.மீ தூரம் இருக்கும். பலமுறை இந்த இடைவழி தூரத்தைக் கடப்பதற்கு பல மணி நேரம் எடுத்திருக்கிறோம். நின்று பேசி, நின்று பேசி, நடந்து கொண்டேயிருப்போம். சில தடவை நயினா பேருந்து நிறுத்தம் வரை கூட வந்து வழியனுப்புவார்.

அவருடைய வீட்டில் அறையில் இருந்த ஒழுங்கு எங்களை ஆச்சரியப்படுத்தியது ஏனென்றால் எழுத்தாளர்கள் நடைமுறை வாழ்க்கையில் அக்கறையற்றவர்கள் என்கிற சித்திரம் எனக்குள் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பெருமிதமும் இருந்தது. ஆனால் நயினாவின் அறையில் சுத்தமும் ஒழுங்கும் அப்படி ஆட்சிசெய்தன. அப்போது அவர் புகைத்துக் கொண்டிருந்த காலம் பீடிக்கட்டிலிருக்கும் பீடிகளைத் தரம் பிரித்து தனியே அடுக்கி வைத்திருப்பார். புகை பிடிக்கும் எண்ணம் வந்ததும் பீடிகளின் அருகிலேயே இருக்கும் கத்தரிக்கோலை எடுத்து பீடியின் முனையை வெட்டி விட்டு புகைக்கத் துவங்குவார். அதைப் பார்க்கப் பார்க்க புகைக்கும் ஆசை யாருக்கும் வரும்.ki-rajanarayanan-keni

கரிசல் வட்டாரச் சொல் அகராதிக்கான சொற்களை அகர வரிசைப்படுத்தும் வேலையினைத்தான் நானும், மாரீஸீம், முருகனும் செய்தோம். கணவதியம்மா மணக்கும் மோரும், மதியச்சாப்பாடும், கருப்பட்டிக் காப்பியும், சேவும் தந்து உபசரித்துக் கொண்டேயிருப்பார்கள். அத்தனை இணக்கமான தம்பதிகளை இதுநாள் வரை வேறெந்த எழுத்தாளர் வீட்டிலும் நான் பார்த்ததில்லை. சுரங்கத்தைத் தோண்டியயடுத்த மாதிரி சொற்கள் குவிந்து கொண்டேயிருந்தன. அவ்வப்போது வரும் சந்தேகங்களை நயினாவிடம் கேட்டால் போதும் உரையாடல் தொடங்கிவிடும் உரையாடல் என்பது ஒருகலை. அதில் நயினா வல்லவர். அணுக்கமாக அமர்ந்து நெருங்கிய பாந்தமான குரலில் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அத்தனை விவரங்கள், கதைகள், விவரணைகள், இலக்கிய சர்ச்சைகள் என்று பேசிக் கொண்டேயிருப்போம். அப்போது நாங்கள் இருபதுகளில் இருந்தோம். நயினா அறுபதை எட்டிக் கொண்டிருந்தார். வயதின் இடைவெளியை அவருடைய பேச்சு குறைத்துவிடும். சம வயதினர் போலும் அவர் எங்களிடம் பகிர்ந்து கொண்டே சமாச்சாரங்கள் ஏராளம் அப்போது கோவில்பட்டியில் ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருந்த நேரம். தேவதச்சன், கெளரிஷ­ங்கர், வித்யாஷ­ங்கர், பூமணி, அப்பாஸ், தமிழ்ச்செல்வன், பிரதீபன், ஜோதிவிநாயகம், உதயசங்கர், நாறும்பூநாதன், சாரதி, திடவை பொன்னுச்சாமி, முருகன், அப்பணசாமி, கோணங்கி என்று நகரத்துக்குள்ளேயே ஒரு பெரிய பட்டாளம் இருந்தது. எந்தத் திசைவழி நடந்து சென்றாலும் இரண்டு இலக்கிய வாதிகள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். எப்போதும் விவாதம் ... விவாதம் ... விவாதம் ... கோவில்பட்டி நகரமே கொந்தளித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றும் சதா வெளியூர்களிலிருந்து எழுத்தாளர்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவர்களின் வாய்மொழிக் கதைகள் மூலமாகவும் கோவில்பட்டி இலக்கிய வட்டாரம் தமிழ் இலக்கிய உலகில் பிரசித்தி பெறத் தொடங்கிறது. இதற்கெல்லாம் பின்புலமாக நயினா இருந்தார். அவர் காரசாரமான விவாதங்களின் பங்கெடுத்ததில்லை. இலக்கியக் கூட்டங்களில் ஆவேசமாக உரையாற்றியதுமில்லை. இலக்கிய அரசியலில் தன்னை முன்னிறுத்தும் சாணக்கிய வேலைகளைச் செய்ததுமில்லை. ஆனால் கோவில்பட்டி இலக்கியச் சூழலுக்குப் பின் திரையாக இருந்தார். புதிய இளைஞர் படையைக் கண்டு பெருமிதம் அடைந்தார். அதை பலபேரிடம் சிலாகிக்கவும் செய்தார். இத்தனைக்கும் இலக்கிய விமரிசனவிவாதங்களில் அவரையும் நாங்கள் விட்டுவைத்ததில்லை.

அவர் ஆரம்பத்திலிருந்தே வட்டார இலக்கியத்தின் மீதும், குறிப்பாக தான் வாழ்ந்த தனித்துவமிக்க கரிசல் மண்ணின் மீதும் தீராத நம்பிக்கை வைத்திருந்தார். வட்டாரமொழி இலக்கியம் குறித்து எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் வந்தபோதும் அவர் விடாப்பிடியான நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கைவீண் போகவில்லை.

பெரும்பாலும் உயர்சாதி இலக்கியமாகவே இருந்து வந்த தமிழிலக்கியத்தில் கிராமத்தின் குரலை அழுத்தமாகச் சொன்னவர் நயினா தான். ஒரு வகையில் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வாழ்க்கை தமிழிலக்கியத்தில் பிரதிபலிக்க முன்னத்தி ஏர் பிடித்தவரும் நயினாதான். இன்று வட்டாரமொழி இலக்கியம், இத்துணை அங்கீகாரம் பெற்றிருக்கிற தென்றால் அதற்கு நயினாவின் தொடர்ந்த இலக்கியச் செயல்பாடுகளே காரணம். அவர் எங்கேயிருந்தாலும் அங்கே ஒரு இலக்கியச் சூழல் உருவாகிவிடும். கோவில்பட்டியில் அவர் எங்கள் பின்புலமாக இருந்த காலம் இங்குள்ள இலக்கியவாதிகளின் பொற்காலம் என்று சொல்லாம். அதை நினைத்து நாங்கள் இப்போதும் பெருமை கொள்கிறோம்.

பல சமயங்களில் நானும் மாரீஸீம் பேசிக் கொள்ளும் போது எங்கள் கண்களில் அந்த நாட்களின் ஞாபகங்கள் நிழலாடும்; இடைசெவல் சென்று வந்ததைப் பற்றி கோவில்பட்டி நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஞாபகம் கொள்ள வேறுவேறு ஞாபகங்கள் இருக்கும். எனக்கும் என் துணைவியாருக்கும் மேலும் நெருக்கமான நினைவுக்குறிப்பு உண்டு. என் திருமணத்திற்கு ஒரு எழுத்தாளர் திருமாங்கல்யம் எடுத்து தர வேண்டும் என்று நாங்கள் பேசும் போது உடனடியாக எங்கள் ஒருமித்த கருத்தாக நயினாவையும் கணவதியம்மாவையும் கூப்பிடலாம் என்று முடிவுசெய்தோம். என் துணைவியாரின் சொல்லாடலில் கைதட்டி கலியாணம் என்ற பெயர் பெற்ற என் திருமணத்தின் புகைப்படத்தொகுப்பில் நயினாவையும் கணவதியம்மாவையும் அடிக்கடி நானும் என் குடும்பத்தாரும் பார்த்துக் கொள்வோம். இன்று வரையான எழுத்திற்கும் எனக்கும் உள்ள உறவுக்கு நயினா ஒரு முக்கியக் காரணம் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

எண்பத்திஐந்து வயதைக் கடந்தும் இன்னும் தமிழிலக்கியத்திற்கு தன்னுடைய பங்களிப்பை செய்து கொண்டிருக்கும் நயினா புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் உத்வேகமளிக்கிறார் என்பது மிகையில்லை. மாரீஸிடம் நான் சொல்கிறேன். நயினாவை அவரது நூறாவது வயதில் பார்க்க வேண்டும். அதற்கு அவர் சொல்கிறார். “அதென்ன பிரமாதம் அப்பவும் நயினா நமக்கு கருப்பட்டிக் காப்பியும் காரச்சேவும் கொடுத்து ஏகப்பட்ட சங்கதிகளைச் சொல்லுவார்”. உண்மை தானே.