Tuesday 9 March 2021

அலாவுதீனின் சாகசங்கள்


 அலாவுதீனின் சாகசஙகள்

சென்னை புத்தகக் கண்காட்சி 2021- ல் கவனிக்கப்பட வேண்டிய சிறுவர் இலக்கிய புத்தகங்கள். "அலாவுதீனின் சாகசங்கள்-எழுத்தாளர் உதயசங்கர்- பாரதி புத்தகாலயம்" (இளையோருக்கான நாவல்)

அலாவுதீனால் விடுதலை பெற்ற ஜீனி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கின்றனர். ஆனால் என்ன..? அவர்கள் சந்தித்த காலம் - கொரோனா பேரிடர் காலம். பேரிடர் காலத்தின் போக்குகளை அலாவுதீனுக்கு மட்டுமல்ல வாசகர்களுக்கு புரிய வைக்கிறது ஜீனி. பேரிடர் காலத்தைப் பற்றி மட்டுமல்ல, பல நூற்றாண்டாக நமது சமூகத்தில் இருக்கும் பல இக்கட்டான விசயங்களையும் ஜீனி அலாவுதினிடம் பேசுகிறது. தினமும் இரவில் அவர்களுக்கு எங்கிருந்தோ ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது, அந்தக் குரலை தேடி "மந்திர சொல்" லின் துணையோடு அவர்கள் இருவரும் பயணிக்கின்றனர்..

அந்தச் சொல் என்ன தெரியுமா ? "டியோப்"...

இந்த மந்திர சொல் அவர்களுக்கு புதிய உருவத்தை தருகிறது. மணற் உலகிற்கு செல்லும் போது எறும்பாக மாறுகிறார்கள், சித்திர குள்ளர்களின் உலகிற்கு செல்லும் போது சித்திரகுள்ளர்களாக மாறுகின்றனர். நினைத்த நேரத்தில் பெரிய உருவத்தை எடுக்கின்றனர், பறக்கின்றனர், ஏன் கொரோனா வைரசையும் சந்திக்கின்றனர்..அதுமட்டுமல்லை கொரோனா வைரஸ் கடத்திச் சென்றவர்களை கூட தேடி செல்கின்றனர்...இவ்வாறு எண்ணற்ற சாகச பயணமாக செல்கிறது நாவல்...

அந்தச் சாகச பயணத்தில் அவர்கள் செல்லும் ஒவ்வொரு இடமும், சந்திக்கும் ஒவ்வொரு அழுகுரலும், அதற்கு பின்னால் இருக்கும் சிக்கல்களும் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விசயங்கள் தான். ஓர் ஊரில், சமையல் அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் பெண்களின் அழுகுரல் கேட்டு செல்கிறார்கள் ஜீனியும் அலாவுதினும்..அதை வாசிக்கும் போது சமீபத்தில் வெளியான "The Great indian kitchen" ஏற்படுத்திய அதிர்வலைகளை இந்தப் புத்தகமும் நமது இளையோர் மனதில் ஏற்படுத்தும் என்ற நம்பிகை எழுகிறது. சாதி, மதம், சடங்கு என இங்கு பரவிக்கிடக்கும் மூடநம்பிகைகளை எந்த எல்லைக்குள் பேச வேண்டுமோ அந்த எல்லைக்குள் அழகாக பேசி இருக்கிறார் உதயசங்கர் அவர்கள்.

இந்த விசயங்கள் எல்லாம் வாசித்ததும் நேரடியாக வாசகரின் மனதினுள் கேள்விகளை தூண்டி விடுமா என்ற நிலையில் இருந்து..கட்டாயம் இனி அவர்கள் அந்த விசயங்களை அல்லது யாரோ ஒருவர் ஒடுக்கப்படும் போது கட்டாயம் இந்த நாவலின் காட்சிகள் அவர்களின் மனதில் விரிவடையும் என்று உறுதியாக சொல்ல முடியும்...தமிழ் சிறார் இலக்கியத்தில் நேரடியாக இம்மண்ணில் உள்ள சிக்கல்களை பேசும் புதிய முயற்சி தான் இந்த நாவல். துணிச்சலாக இறங்கி விளையாடும் எழுத்தாளர் உதயசங்கள் ஐயா அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்.

- பஞ்சு மிட்டாய் பிரபு

No comments:

Post a Comment