Friday 17 May 2019

யார் இந்து?

யார் இந்து?

இந்தியச் சமூக அமைப்பைப் புரிந்து கொள்ளவும், நிர்வாக நலனுக்காகவும், இந்திய மக்களை வகைப்படுத்தி, தொகுக்கும் வேலையைத் தொடங்கியது. 1871 – ஆம் ஆண்டு டபிள்யூ.ஹெச்.எல்லீஸ் என்ற ஆங்கிலேய அதிகாரியின் தலைமையில் சென்சஸ் எடுக்கப்பட்டது. அத்துடன் அவர் “ THE CODE OF HINDU LAW “ என்னும் கட்டுரையையும் எழுதினார். அதோடு இந்திய சமூகத்தை ஆங்கிலேயக்கிறித்துவக்கண்  (அதாவது ஒற்றைமதக்கோட்பாடு ) கொண்டு பார்த்ததின் விளைவாக அனைத்து சமயக்குழுக்களும் ஒற்றை மதத்தின் குடைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டனர்.

ஸ்மார்த்தம், சைவம், வைணவம், காளி வழிபாடு, முருகவழிபாடு, தாந்திரீக வழிபாட்டு, தாய்த்தெய்வ வழிபாடு, சாக்தம், சாங்கியம், என்று எண்ணற்ற மாறுபட்ட முரண்பட்ட சமயங்களைக் கொண்டவர்களை இந்து என்ற ஒற்றை வார்த்தையில் அடைத்து வைத்தனர்.

கெடுவாய்ப்பாக அந்த இந்து என்ற அந்த ஒற்றை வார்த்தையின் சிம்மாசனத்தில் வேத பிராமணர்களான ஸ்மார்த்த மரபினர் உட்கார வைக்கப்பட்டனர். அதே ஆங்கிலேயர்கள் இந்து மதத்தை உருவாக்கிய மாதிரி இந்து மதக்கோட்பாட்டையும் உருவாக்கினர். புனித நூலாக வேதங்களையும் பகவத்கீதையையும் இந்து மதச்சட்ட நூலாக மனு தர்மசாஸ்திரத்தையும் முன் வைத்தனர்.

சைவ ஆகமத்தையும் வைணவ ஆகமத்தையும் புறந்தள்ளினர். அந்த கோஷ்டிச் சண்டை இன்னும் நடக்கிறது என்பது வேறு விஷயம். அதுமட்டுமல்லாமல் மனுதர்ம சாஸ்திரத்தை அங்கீகரித்ததின் மூலம் கொடிய சாதியப்படிநிலைகள் நிலைத்திருக்க வழி செய்து விட்டனர்.. இப்படித்தான் வரலாற்றில் நவீன இந்து மதம் கற்பிதமாக உருவாக்கப்பட்டது.

மறைந்த சந்திரசேகர சங்கராச்சாரியார் அவருடைய தெய்வத்தின் குரல் என்ற நூலில் சென்சஸ் எடுத்து எல்லாசமயக்குழுக்களையும் இந்து என்ற ஒரே குடையின்கீழ் தன்னுடைய அதிகாரத்தின் வழியாக ஒன்று திரட்டியதைப் பாராட்டுகிறார் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

“ நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போது ‘ஹிந்து சமூகம்’ என்று பொதுப் பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத் தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால், அதற்கப்புறம் ஒவ்வொர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் போன்ற மதஸ்தர்கள்தான் அதிகத் தொகை இருப்பார்கள். அதாவது, இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாக்கிஸ்தான் முளைத்திருப்பதுபோல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகியிருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும் படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்! “

ஆங்கிலேயர்கள் உருவாக்கிய இந்து மத அடையாளமே அவர்களுக்கு எதிரான அரசியல் அணி திரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டது. வேதகாலப்பழமையைப் போற்றவும் வர்ணாசிரமத்தை உறுதிப்படுத்தவும், புராண இதிகாசங்களை விடுதலைப்போராட்டத்துக்கான பிரசாரக்கருவிகளாக மாற்றிய புதிய நடுத்தரவர்க்கம் தோன்றியது. இந்த நடுத்தர வர்க்கம் ஒரே நேரத்தில் பழமையான சாநானதனத்தைப் போற்றவும், நவீன மாற்றங்களை வரவேற்கவுமான இரட்டை முகத்தை காட்டியது. பழமையைப் போற்றிய பிராமணிய நடுத்தர வர்க்கம் மாறி வரும் புதிய அரசியல் சூழலில் தன்னை மேலாதிக்க சக்தியாக மாற்றிக் கொள்ள, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்து கலாச்சார தேசிய வாதத்தை உருவாக்கியது. அதுவே இன்று ஆர்.எஸ்.எஸ்ஸாக, பாரதிய ஜனதாவாக உருமாறி பாசிச வழியில் செல்ல முயற்சிக்கிறது. இந்தியாவின் பன்முக சமய வழிபாட்டு முறைகளையும், நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் ஒற்றைக் கலாச்சாரக் கொடுங்கரத்தால் அடக்க நினைக்கிறது. அதற்காக வரலாற்றைத் திருத்தவும் மாற்றவும் புரட்டி எழுதவும் முனைகிறது.

அபௌருஷ்யமான ( காற்றில் தானாக வந்த) வேதங்களை மட்டுமே பின்பற்றுகிற ஸ்மார்த்த பிராமணர்களைத் தவிர

இந்தியாவில் யாரும் இந்து கிடையாது.

மீள்பதிவு

No comments:

Post a Comment