Thursday 12 September 2013

எல்லோருக்கும் விடுதலை

 

சாதத் ஹஸன் மண்டோ

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்-உதயசங்கர்

manto

சுதந்திரம் பெற்ற புதிய தேசத்தின் ஒவ்வொரு பெருநகரத்தில், சிறுநகரத்திலும், கிராமத்திலும், செய்தி முன்னால் சென்றது. யாராவது தெருவில் பிச்சையெடுப்பதைப் பார்த்தால் அவர்கள் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். உடனே கைதுகள் தொடங்கியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் பிச்சையெனும் பெருஞ்சாபம் ஒருவழியாக ஒழிந்துவிடும்.

அலைந்து திரிந்து கொண்டிருந்த பாணரான கபீர் மட்டும் துக்கத்தினால் பீடிக்கப்பட்டான்.

“ என்ன ஆச்சு உனக்கு நெசவாளியே..” - அதுதான் அவனுடைய ஜாதி – என்று குடிமக்கள் கேட்டனர்.

” நான் ஏன் வருத்தமாயிருக்கேன்னா துணி இரண்டு இழைகளால் நெய்யப்படும்… ஒன்று குறுக்குவசமாகவும், மற்றது செங்குத்தாகவும் ஒடும்…..பிச்சைக்காரர்களை கைது செய்வதென்பது குறுக்குவசமென்றால் பசித்தவர்களுக்கு உணவளிப்பதென்பது செங்குத்தானது.. எப்படி நீங்கள் இந்த துணியை நெய்யப்போகிறீர்கள்? “

********** ********* *********** ************** *********** **********

இந்தியாவிலிருந்து வந்த ஒரு அகதிக்கு - அவர் தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞர் –கைவிடப்பட்ட இருநூறு கைத்தறிகளைச் சொந்தமாக கொடுத்தனர். அந்த வழியே போன கபீர் அழத்தொடங்கினான்.

“ உனக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டியதை எனக்குக் கொடுத்ததற்காக அழுதுகிட்டிருக்கியா? “ என்று அந்த வழக்கறிஞர் கேட்டார்.

“ இல்லை…நான் ஏன் அழுதேன்னா.. இனிமேல் இந்தத்தறிகள் துணி நெய்யப்போவதில்லைன்னு தெரிஞ்சதால.. ஏன்னா நீங்க இந்த நூலையெல்லாம் நல்ல லாபத்துக்கு வித்துருவீங்க… உங்களுக்கு தறியின் கிளிக்டி-கிளாக் சத்தத்தைக் கேட்கப் பொறுமையிருக்காது… ஆனால் அந்த சத்தம்தான் நெசவாளி உயிரோடு வாழ்வதற்கான ஒரே காரணம்….”

**********************************************************************************************************************

தெருவில் ஒரு மனிதன் புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்து காகிதப்பைகளாகச் செய்து கொண்டிருந்தான்.

கபீர் அதில் ஒன்றை எடுத்தான். அதில் அச்சிடப்பட்டிருந்ததைப் படிக்க ஆரம்பித்தவுடன் அவனுடைய கண்கள் கண்ணீர்க்குளமாயின.

திகைப்படைந்த பை செய்பவர் “ என்ன பிரச்னை உனக்கு? “ என்று கேட்டார்.

” நீ பைகளை உருவாக்கும் காகிதங்களில் அச்சிடப்பட்டிருப்பது அந்தகரான இந்து ஞானி பகத் சூர்தாஸின் ஆன்மீகக்கவிதைகள்…தெரியுமா? “ என்று கபீர் பதில் சொன்னான்.

பை செய்பவருக்கு இந்தி தெரியாது.ஆனால் அவனுடைய தாய்மொழியான பஞ்சாபியில் சூர்தாஸ் என்றால் அந்தகபக்தர் என்று அர்த்தமில்லை.. ஆனால் பன்றி என்று அர்த்தம்.

அவன்,” ஒரு பன்றி எப்படி புனிதராக முடியும்..? ” என்று கேட்டான்.

******************************************************************************************************

நகரத்திலுள்ள ஒரு அற்புதமான கட்டிடத்தில் செல்வத்தின்இந்துக்கடவுளான லட்சுமியின் உருவச்சிலையை வைத்து அலங்கரித்திருந்தார்கள். ஆனால் எல்லை தாண்டி வந்த அகதிகளான புதிய குடியிருப்பாளர்கள் அதை அலங்கோலமான சாக்குத்துணியினால் மூடியிருந்தார்கள். அதைப்பார்த்த கபீர் அழத் தொடங்கினான்.

” எங்கள் மதத்தில் உருவவழிபாட்டுக்கு இடமில்லை…” என்று அவர்கள் அவனிடம் சொன்னார்கள்.

கபீர், “ அது அழகை அசிங்கப்படுத்தவா சொல்லியது..?” என்று கேட்டான்.

**********************************************************************************************

ஒரு படைத்தளபதி தன்னுடைய படைவீரர்களிடம், “ நம்மிடம் உணவு குறைவாக உள்ளது…ஏனென்றால் நம்முடைய பயிர்களை நாசம் செய்துவிட்டார்கள். ஆனால் அச்சப்படத்தேவையில்லை.. என்னுடைய வீரர்கள் வெறும்வயிற்றோடு எதிரிகளோடு சண்டை போடுவார்கள்…

வரவிருக்கும் வெற்றியின் கோஷங்கள் முழங்கின.

கபீர் கேட்டான்,” என்னுடைய தீரமிக்க தளபதியே.. யார் பசியுடன் போரிடுவார்கள்

******************************************************************************************

 

“ விசுவாசமுள்ள அன்புச்சகோதரர்களே! தாடி வளருங்கள்… உங்களுடைய பாவமீசையை மழித்து விடுங்கள்…..கட்டளையிட்டபடி உங்கள் கால்சராயை கணுக்காலுக்கு ஒரு அங்குலத்துக்கு மேலே உடுத்துங்கள்… விசுவாசமுள்ள அன்புச்சகோதரிகளே! உங்கள் முகத்தில் பூச்சு பூசாதீர்கள்… உங்களைத் திரையிட்டுக் கொள்ளுங்கள்.. இது தெய்வீகக்கட்டளை..”

கபீரின் கண்களில் கண்ணீர் வந்தது.

” உங்களுக்கு சகோதரரோ சகோதரியோ இல்லை. ….உங்கள் தாடி கருப்பாக இல்லை.. கலரூட்டப்பட்டது… நீங்கள் உங்களுடைய வெள்ளை முடியை காட்ட விரும்பவில்லையா? “ என்று கபீர் கேட்டான்.

**************************************************************************************************

 

ஒரு அறிவார்ந்த விவாதம் போய்க்கொண்டிருந்தது.

“ கலை கலைக்காக “

” கலை வாழ்க்கைக்காக..”

“ நீ நரகத்துக்குப் போக!.”

“ உன்னுடைய ஸ்டாலின் நரகத்துக்குப் போக! “

“ வாயை மூடு… இன்று கலை இன்னொரு விதமான பிரச்சாரம்..”

“ உலகத்திலுள்ள பிற்போக்குவாதிகள்..எல்லோரும் நரகத்துக்குப் போக! அதோடு அவர்களுடைய ஃப்ளாபர்ட்டுகளும், பாதலேர்களூம்…”

கபீர் அழ ஆரம்பித்தான்.

அவர்களில் ஒரு அறிவுஜீவி,” அவன் பூர்ஷ்வா துயரநாடகத்தை நடிக்கிறான்..” என்று சொன்னார்.

“ இல்லை.. நான் அழுவது ஏனென்றால் கலை எதற்காக என்று நீங்கள் புரிந்து கொள்ளவேண்டுமே என்பதற்காக…” என்று கபீர் சொன்னான்.

“ அவன் ஒரு பாட்டாளிவர்க்க ஜோக்கர்..”

“ இல்லை…அவன் ஒரு பூர்ஷ்வாக்கோமாளி..”.

*****************************************************************************************

 

ஒரு புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டது. முப்பது நாட்களுக்குள் அந்த நகரத்திலுள்ள பாலியல்தொழிலாளிகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. கவலையால் பாழடைந்த அவர்களுடைய முகத்தைப் பார்த்த கபீர் அழுதான்.

ஒரு மதத்தலைவர் கபீரிடம் கேட்டான்,” நீ ஏன் அழுகிறாய் நல்லவனே? “

கபீர்,” யார் அவர்களுக்கு மாப்பிள்ளைகளைக் கண்டுபிடிப்பார்கள்? “ என்று கேட்டான்.

. ஏதோ அவர் கேள்விப்பட்டதிலேயிலே இதுதான் மிகவும் வேடிக்கையான விஷயம் போல அந்த மதத்தலைவர் சிரிக்க ஆரம்பித்தார்

**********************************************************************************************************

 

ஒரு அரசியல்வாதி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். “ என் அருமைச் சகோதரர்களே! நம்முடைய தலையாயப் பிரச்னை எல்லைக்கு அப்பால் கடத்திச் செல்லப்பட்ட நம் பெண்களை எப்படி மீட்பது என்பது தான். நாம் எதுவும் செய்யவில்லையென்றால் அவர்கள் பாலியல்தொழிலாளிகள் வீட்டிற்கு அனுப்பப் படுவார்கள்… இந்த அழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்றவேஅண்டும்..அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்துப் போங்கள்…உங்கள் குடும்பத்தில் அடுத்ததாக யாருக்கேனும் திருமணஏற்பாடு நடக்க இருந்தால் இந்தப் பாவப்பட்ட ஜீவன்களை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருங்கள்…” கபீர் இதைக் கேட்டதும் தேற்றமுடியாத அளவுக்கு அழுதான்.

அதைப்பார்த்த தலைவர், கூட்டத்தைப்பார்த்து,” பாருங்கள் இந்த நல்லமனிதனை..என்னுடைய வேண்டுகோள் அவரை எப்படி ஆழமாகப் பாதித்திருக்கிறது.”

“ இல்ல… உங்கள் கோரிக்கை என்னைப் பாதிக்கவில்லை.. நான் ஏன் அழுதேன்னா எனக்குத் தெரியும்.. நீங்க இன்னும் கலியாணம் முடிக்காமல் இருப்பது ஏன்னா இன்னும் பணக்காரப்பொண்ணு கிடைக்காதது தான்..” என்று கபீர் சொன்னான்.

“ தூக்கி எறியுங்கள்..இந்தப்பைத்தியத்தை….” என்று கூட்டம் சீறியது.

**********************************************************************************************************

 

தேசத்தந்தை முகமது அலி ஜின்னா மறைந்தார். தேசமே அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தது.ஒவ்வொருவரும் கருப்பு பட்டைகளை அணிந்திருந்தனர்.அமைதியாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த கபீரின் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

“ எவ்வளவு துணி இந்தக் கருப்புப்பட்டைகளுக்காக செலவாயிருக்கும்.. அதை வைத்து எத்தனையோ நிர்வாணிகளுக்குத் துணியும்.. பசித்தவர்களுக்கு உணவும் கொடுத்திருக்கலாம்..” அவன் அஞ்சலிசெலுத்துபவர்களிடம் சொன்னான்.

“ நீ ஒரு கம்யூனிஸ்ட்..” என்று அவர்கள் சொன்னார்கள்.

“ நீ ஒரு ஐந்தாம்படை பத்திரிகையாளர்…”

“ நீ ஒரு பாகிஸ்தான் துரோகி..”

அன்று முதல்முறையாக கபீர் சிரித்தான். “ ஆனால் நண்பர்களே! நான் கருப்போ, சிவப்போ, பச்சையோ… எந்த பட்டையும் அணியவில்

3 comments:

  1. A nice story, thanks for translation.

    ReplyDelete
  2. அருமையான மொழிபெயர்ப்பு.
    நன்றி சார்.

    ReplyDelete
  3. அருமையான மொழிபெயர்ப்பு.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி திரு உதயசங்கர்.

    ReplyDelete