Showing posts with label ஏ.சண்முகானந்தம். Show all posts
Showing posts with label ஏ.சண்முகானந்தம். Show all posts

Wednesday, 15 February 2017

பூச்சிகள் ஒர் அறிமுகம்

பூச்சிகள் ஒர் அறிமுகம்
சூழலியல் சிறுவர் நூல்
தமிழில் சிறார்களுக்கான சூழலியல் நூல்கள் மிகவும் குறைவு. இயற்கையின் முக்கியத்துவம், பல்லுயிர் பெருக்கம், உயிர்ச்சங்கிலியில் எல்லா உயிர்களுக்கும் உள்ள பங்கு, எல்லோருக்கும் ஒரு இடம், என்று குழந்தைப்பருவத்திலிருந்தே அறிமுகப்படுத்தவேண்டிய விஷயங்கள் ஏராளமாய் இருக்கின்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், இந்த அமைப்புகளைத் தாண்டி பெரிய அளவுக்கு யாரும், எதுவும் இவற்றில் கவனம் செலுத்தவில்லை. இந்த விஷயங்களைக் குறித்து இப்போது தான் ஒரு விழிப்புணர்வு வந்து கொண்டிருக்கிறது.
உயிர்ச்சங்கிலியில் அலட்சியப்படுத்தப்பட்ட அருவருப்படைந்த பூச்சிகளைப் பற்றி பெரியவர்களான நமக்கே அவ்வளவாகத் தெரியாதபோது சிறார்களுக்கு என்ன தெரியும்?
சூழலியல்-காட்டுயிர் புகைப்படக்கலைஞர் சண்முகானந்தம் எழுதியுள்ள பூச்சிகள் ஒரு அறிமுகம் என்ற புத்தகம் சிறார்களுக்கு மிகச்சிறந்த அறிமுகமாகும். பூச்சிகளின் புகைப்படங்களுடன் அவற்றின் உருவம், நிறம், வாழ்விடம், சூழலியலில் அதன் பங்கு என்று ரத்தினச்சுருக்கமாக, எளிய மொழியில் சொல்லியிருக்கிறார். குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோரும் வாசிக்க வேண்டிய நூல்.
சமூகத்தில் மட்டுமல்ல இயற்கையிலும் பன்மைத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்க கோரும் நூல்.
இந்த நூலுக்குக்கிடைக்கும் வரவேற்பு நாம் சூழலியல் குறித்து எவ்வளவு அக்கறையோடு இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும். மேலும் மேலும் இது மாதிரியான நூல்கள் வெளிவர உதவியாக இருக்கும்.
வாழ்த்துக்கள் சண்முகானந்தம்!
வெளியீடு வானம் பதிப்பகம்
விலை-ரூ60/