Saturday, 20 September 2025

புதிதாக எழுதுபவர்களின் கவனத்துக்கு 1

 


யாரும் எழுதாத கதையை எழுதுவது எப்படி?







1. எழுதத் தொடங்கும் எல்லோருக்கும் அவர்கள் எழுதும் கதை இதுவரை யாரும் எழுதியதில்லையென்ற எண்ணம் தோன்றுவது இயல்பு.


2. நிறைய எழுத்தாளர்கள் இது அப்படியே நடந்தது என்று சொல்வார்கள். நடந்ததை அப்படியே சொல்வது இலக்கியமல்ல. நாம் வாழும் சமூகத்தில் ஒரே மாதிரியான சம்பவங்கள், அனுபவங்கள், நிறையப்பேருக்கு நடந்திருக்கும். அப்போது கூறியது கூறலாக மாறிவிடும். 


3. கூறியது கூறல் கலையின் தனித்துவத்தை வெளிப்படுத்தாது. முதல் ருசிக்கும் நூறாவது ருசிக்கும் வேறுபாடு இருப்பதைப் போல. 


4.  மற்றவர்கள் வாசிக்கும் போது நாம் எழுதியதைப்போலவே , அதே மாதிரி கருப்பொருளில் ஆயிரம் கதைகள் எழுதப்பட்டிருப்பது தெரியும்.


5. அப்படியென்றால் என்ன செய்வது?எழுதுபவர்கள் முதலில் நாம் எழுத நினைப்பதை ஏற்கனவே வேறு எழுத்தாளர்கள் எழுதிவிட்டார்களா?  என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?


6. வாசிப்பு ஒன்று தான் அதற்கு வழி. எல்லாநூல்களையும் வாசிக்க முடியாவிட்டாலும் முக்கியமான மாஸ்டர் எழுத்தாளர்களின் புத்தகங்களையாவது வாசித்துவிட வேண்டும்.


7. நாம் எழுத நினைப்பது தேய்வழக்கான கருப்பொருளாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.  அப்படியே அதே மாதிரி எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.


8 இன்னொரு வழி தேய்வழக்கான கருப்பொருளாக இருந்தாலும்  இதற்கு முன் யாரும் அணுகியிராத கோணத்தில் யோசிக்க வேண்டும். புதிய வடிவத்தில் சோதனை செய்து பார்க்க வேண்டும். 


9. தேய்வழக்கான கருப்பொருளும், கதைசொல்லலும் புதிய அனுபவத்தைத் தராது. கதை ஆரம்பிக்கும்போதே முடிவு தெரிந்துவிடும். 


10. ரெடிமேட் சட்டைகளைப்போல கருத்துகளுக்கேற்ற கதைகளைச் செயற்கையாக உருவாக்கலாம். சிறார் இலக்கியத்தில் இது அதிகம். இப்படிப்பட்ட படைப்புகளைத் தான் வணிக இலக்கியம் அல்லது போலி இலக்கியம் என்கிறோம். இப்படிப்பட்ட படைப்புகள் முற்போக்கு இலக்கியத்திலும் உண்டு. 


11. கதைகள் வாசகனுக்கு புதிய அனுபவத்தைத் தரவேண்டும். இதுவரை அவன் வாசித்திராத கதைக்களனைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது வாசித்திராத கோணத்தில் எழுதப்பட்டிருக்க வெந்ண்டும். 


12. கதாபாத்திரங்கள் முழுமையானவர்களாக,  கதைக்குள்ளேயே பரிணாமவளர்ச்சி பெறுபவர்களாக இருக்க வேண்டும். ஜவுளிக்கடை பொம்மை போல இருக்கக்கூடாது. 


13.  கதையில் வரும் சம்பவமோ, அனுபவமோ, நுண்விவரங்களுடன் இருக்கவேண்டும். உதாரணத்துக்கு கதை ஒரு பஸ் ஸ்டாப்பில் நடக்கிறதென்றால் அந்த பஸ் ஸ்டாப்பைப் பற்றி அங்கே பல நிலைகளில் காத்துக்கொண்டிருக்கும் பயணிகளைப் பற்றி நுட்பமான விவரணைகளைச் சேர்க்க வேண்டும்.


14. நுட்பம் கூடக்கூட ஆழமும் நம்பகத்தன்மையும் அதிகமாகும். ஆழம் அதிகமாகும்போது அது வாசகனிடம் ஏற்படுத்தும் விளைவுகளும் அதிகமாகும். ஆனால் அந்த நுட்பங்கள் கதையோடு ஒன்றியும், கதைக்குத் தேவையானதாகவும் இருக்க வேண்டும். கதாபாத்திரங்களின் மனநிலையோடு அந்தக் காட்சி விவரணைகளை ஒன்றிணைக்கத் தெரியவேண்டும்.


15. கதை தொடங்கியதும் அதற்குள்ளே ஒரு அகவெளி உருவாகிறது. அந்த அகவெளியை மொழியின் மூலம்  எழுத்தாளன் தான் உருவாக்குகிறான். அகவெளியை உருவாக்குவதற்கும் நுட்பமான விவரணைகளும் உணர்ச்சிநிலைகளும் உதவும்.  அதற்கான வலிமையை எழுத்தாளன் பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். 


16. எழுதும் களம் குறித்த முழுமையான தரவுகள், உளவியல் மற்றும் தகவல்களைப் பெற உழையுங்கள். அதற்கு எழுத்தாளனுக்கு சமூகம் குறித்த பார்வை மிக முக்கியம்.  


17. மாறிவரும் மதிப்பீடுகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். அந்த மதிப்பீடுகள் உருவாக்கும் மனிதமனநிலைகளை ஆராய வேண்டும். 


18. கதைகள் மனிதர்களின் அகநிலை மற்றும் புறநிலை குறித்த ஆய்வுகள் தான். அந்த ஆய்வுகளின்வழியே எழுத்தாளனும்  வாசகனும் மானுடத்தைப் புரிந்து கொள்வான்.


19. அதுவே மானுடத்தின் மேன்மைக்குத் தூண்டுகோலாக இருக்கும்.. அத்தகைய பொறுப்புணர்ச்சியுடன் கதைகளை எழுதுங்கள். உங்கள் கதைகள் இதுவரை யாரும் எழுதாத கதையாகத் திகழும்.

Friday, 19 September 2025

குழந்தைகளுக்குத் தத்துவமா? - 5

குழந்தைகளுக்குத் தத்துவமா? - 5
கொஞ்சம் வரலாறு உதயசங்கர்




தத்துவச்சிந்தனை எப்போது, எப்படித் தோன்றியது என்று தெரிந்துகொள்ளும் முன் நம்முடைய வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும்.


என்ன சரிதானே!


வாயுக்கள், தூசி போன்றவை அடங்கிய சுழலும் பெருமேகமான நெபுலாவில்  இருந்து பெருவெடிப்பில் சிதறிய ஒரு துண்டுதான் பூமி. அந்த சம்பவம் நடந்து சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன.


என்னது?

454 கோடி ஆண்டுகளா?


ஆமாம். நாம் வாழும் இந்த பூமி பிறந்து 454 கோடி ஆண்டுகளாகி விட்டன. ஆனால் எரிந்துகொண்டிருந்த நெருப்புக்கோளமான பூமியில் ஒரு உயிர் எப்போது தோன்றியது தெரியுமா?


380 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் முதல் உயிர் தோன்றியது. 


என்னது 74 கோடி ஆண்டுகளாக பூமி எரிஞ்சிக்கிட்டே இருந்ததா? அப்படின்னா பூமியைப் படைத்தது, உயிர்களைப் படைத்தது கடவுள் என்று சொல்கிறார்களே..


அதைப் பற்றி அப்புறம் பார்ப்போம். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் இப்போது தெரிந்துகொள்ளலாம். அறிவியல் எந்த ஒன்றையும் ஆராய்ந்து நிரூபிக்கும். அல்லது நிரூபிக்கப்பட்ட ஒன்றையே உண்மை என்று ஏற்றுக்கொள்ளும். 


புரியலையே!


தண்ணீர் எப்படி உருவானது என்று முதலில் யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது பள்ளிக் குழந்தைகூட ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்தால் தண்ணீர் உருவாகும் என்று சொல்லிவிடும்.


அது எப்படித் தெரிந்தது?


தண்ணீரின் மூலக்கூறுகளை ஆராய்ந்து அறிவியலாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். ஆராய்ந்து நிரூபிப்பது அறிவியல் என்று சொல்கிறோம்.


சரி. முதல் உயிர் எப்போது, எப்படித் தோன்றியது?


74 கோடி ஆண்டுகளாக எரிந்துகொண்டிருந்த பூமி கொஞ்சம்கொஞ்சமாகக் குளிர்ந்தது. அப்படிக் குளிர்ந்தபோது விதவிதமான வாயுக்கள் உருவாயின. ஹைட்ரஜன், நைட்ரஜன், ஹீலியம், கார்பன் டை ஆக்சைடு, இவற்றில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் வினைபுரிந்து தண்ணீர் உருவானது.


அதுதான் கடல். 


பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சொந்த ஊர் என்றால் அது கடல்தான்.  அந்தக் கடலில்தான் முதல் உயிரான சயானோ பாக்டீரியா அல்லது நீலப்பச்சை பாசி போன்ற நுண்ணுயிரி தோன்றியது.


அடேயப்பா!

நம்முடைய மூதாதையர் யார்? என்று கேட்டால் சயானோ பாக்டீரியா என்று சொல்லவேண்டும். 

சரியா? பேரே அழகா இருக்குல்ல..


ree

சயானோ.


அந்த சயானோவிலிருந்துதான் பூமியில் இப்போது இருக்கும் இத்தனை கோடி உயிரினங்களும் தோன்றின. இதையும் அறிவியலாளர்கள் ஆராய்ந்து நிரூபித்திருக்கிறார்கள். அப்படித்தான் ஒவ்வொரு உயிரும் தங்களுக்கென்று  தனியான பண்புகளுடன் வாழ்கின்றன. இயற்கையில் ஒன்றைப் போல இன்னொரு உயிர் கிடையாது.


சரி. மனித இனம் எப்போது, எப்படி உருவானது?


அறிவியலறிஞர் டார்வின் பரிணாமக் கோட்பாட்டை (Evolution Theory) கண்டுபிடித்தார். அப்போது அவருக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்தார். அதிலிருந்து கிடைத்த உண்மைகளைச் சொன்னார். 


குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று டார்வின் சொன்னார். ஆனால் டார்வினுக்குப் பின்னால் வந்த அறிவியலாளர்கள் அவர் சொன்ன பரிணாமவரலாற்றில் புதிய உண்மைகளைக் கண்டுபிடித்தார்கள்.


அது என்ன? 

குரங்கு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பொது மூதாதையிலிருந்து மனித இனம் தோன்றியது. நேரடியாக குரங்கிலிருந்து மனித இனம் தோன்றவில்லை. 


உராங் ஊத்தன், சிம்பன்சி, கொரில்லா, போனோபாஸ் போன்ற வாலில்லா குரங்குகளுக்கும் மனித இனத்துக்கும் ஒரே பொது மூதாதை இருந்தது. 


அப்படி என்றால் இப்போது நாம் பார்க்கும் குரங்குகள் ஏன் மனிதனாக மாறவில்லை?


அங்கேதான் இருக்கிறது இன்னொரு ட்விஸ்ட்.


அதாவது, பிரைமேட் என்று சொல்லப்படும் குரங்கினங்களுக்கும் வாலில்லா குரங்குகளுக்கும் இடையில் ஹோமினிட் என்று சொல்லப்படும் விலங்கினங்கள் தோன்றியிருக்கின்றன.

 

வாலில்லாக் குரங்குகளுக்கு முன்னால் ஒரு குரங்கினம் தோன்றியிருக்கிறது. அதனுடைய பரிணாம வளர்ச்சியில்தான் வாலில்லா குரங்குகள் தோன்றின. அதேபோல் அந்தப் பொது மூதாதையிலிருந்தே மனித இனம் தோன்றியது.


இதெல்லாம் எப்போது ஆரம்பித்திருக்கும்?


சுமார் அறுபது எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்.. மனித இனத்தின் பொது மூதாதை பூமியில் தோன்றியது.


அதற்கு முன்னால் மனித இனமே கிடையாது.


நவீன மனித இனமான, அதாவது ஹோமோசேப்பியன்ஸ் எப்போது தோன்றியது?


சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்தான்.


சரி. எங்கே தோன்றினார்கள்?


ஆப்பிரிக்காவில் தோன்றினார்கள். ஆமாம். இன்று உலக முழுவதும் பரவியுள்ள  மனித இனம் முதன்முதலில் தோன்றியது ஆப்பிரிக்காவில்தான். 


நமக்கெல்லாம் பூர்விகம், அதாவது மூதாதையர் அல்லது முன்னோர்களின் ஊர் ஆப்பிரிக்காவா?


எதுக்குச் சுத்தி வளைச்சிகிட்டிருக்கீங்க? மொத்த மனித இனத்தின் பாட்டி, தாத்தாவின் ஊர் ஆப்பிரிக்கா. 


அவ்வளவுதான்.


ஆனால்? 

என்ன ஆனால்?

இல்லை. வந்து.. ஆப்பிரிக்க மக்களுக்கும் உலகம் முழுதும் இருக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லையே.


ஆமால்ல..ஆனால் ஆப்பிரிக்காதான் எல்லோருக்கும் சொந்த ஊர்.

என்ன குழப்பமாக இருக்கா?


சரி. குழப்பம்தான், அதாவது சந்தேகம்தான் உண்மையைக் கண்டுபிடிக்க ஒரே வழி.. 

எப்படின்னு பார்ப்போம்.


(தத்துவம் அறிவோம்)நன்றி - இயல் மின்னிதழ்