Friday, 4 July 2025

கலையெனும் மாயாஜாலம்

 

கலையெனும் மாயாஜாலம்




1.
கலை என்பதின் தனித்துவமான அடிப்படையான மற்றும் சாராம்சமான விடயம் அதன் மாயாஜாலம் எனலாம்


2.
கலை தன்னை கலையாக வெளிப்படுத்துவதற்கான சாராம்சம் எதுவோ அதுவே அதனை கலையாக வெளிப்படுத்துகிறது.


3.
அறிவுத்துறைகள் சார்ந்த ஆய்வுகள் கலையின் இடத்தை ஒருபோதும் பிடிக்க முடியவில்லை எனில் கலை மனிதனுடைய அடிப்படையான பண்புகளில் ஒன்றாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.


4. 
கலை ஒன்றே மனிதனுடைய மனதில் ஊடாடுகிறது தன்னுடைய மாயத்தினால் கலை மனித மனதை பண்படுத்துகிறது இசைவுக்குள்ளாக்குகிறது வசப்படுத்துகிறது ஒருவகையில் அடிமைப்படுத்துகிறது மேலாண்மை செலுத்துகிறது அதனால் தான் கலை காலம் கடந்தும் மனித மனதை ஆட்கொள்கிறது


5.
புராணங்களும் இதிகாசங்களும் கட்டுக்கதைகளும் புதிய புதிய அற்புதங்களையும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கட்டமைக்கின்றன. மனித மனம் அடிப்படையில் உணர்வு நிலையிலையே இருப்பதினால் அவர்கள் இந்த கட்டுக் கதைகளை நம்ப விரும்புகிறார்கள், நம்புகிறார்கள். அந்தகலையின் பின்னால் இருக்கக்கூடிய ஆதிக்கத்தையோ ஏதேச்சதிகாரத்தையோ அதன் ஆபத்தான விளைவுகளையும் உணர்வதில்லை.

6. கலை பிரச்சாரத்திற்கான தொடர்பாடலுக்கான ஒரு கருவிதான். கலையில் அரசியல் இருக்கலாம் அறிவியல் இருக்கலாம் தத்துவம் இருக்கலாம் அறிவுரை இருக்கலாம் நன்னெறி இருக்கலாம் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.


7.ஆனால் வெறும் அரசியலோ தத்துவமோ அறிவியலோ அறிவுரைகளோ நன்னெறிகளோ கலையாகி விட முடியாதுஅதாவது கலை பிரச்சாரம்தான் ஆனால் பிரச்சாரமெல்லாம் கலையாக முடியாது.

8.கலைக்கும் பிரச்சாரத்திற்கும் நடுவில் ஊடாடுகிற மாயாஜாலத்தையே  மந்திர வித்தைகளையே, அறிவியல் பூர்வமான பயிற்சிகளின் மூலம் எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் .


9.கலை மற்றும் எந்தத் துறைகளுக்கும் இல்லாத அளவிற்கு தனக்கென தனித்துவமான கச்சா பொருட்களை கொண்டிருக்கிறது. மொழியின் சொற்களாக, நிறங்களாக மரமாக கல்லாக தன் உடலாக பாவனையாக, மனிதனுடைய அறிவின் எல்லைகள் விரிந்து கொண்டே இருப்பதைப் போல கலையை உருவாக்குகிற கச்சா பொருள்களின் பரப்பும் விரிந்து கொண்டே இருக்கின்றது.


10.
அந்த கச்சாப்பொருட்கள் அனைவருக்கும் பொதுவானவை தான். ஆனால் அவற்றை எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்களுடைய   படைப்பூக்கத்தின் வழியாக கலையாக மாற்றும் போது அது மானுட சமூகத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன


11.
மனித மனதை தன் வசப்படுத்துவது என்பது அத்தனை எளிதானதில்லை. எனவே தான் கலையை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். எந்த இடத்திலும் சுய திருப்தியோ நிறைவோ போதும் என்ற மனநிலையோ இன்றி தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு துறை கலை.


12.
கலை படைப்புகளை காலம் கடந்தும் நிலை நிறுத்துவதற்கு எழுத்தாளர்களிடமிருந்து அவர்களுடைய அர்ப்பணிப்பை கோருகிறது பெரியவர்களுக்கான கலை இலக்கியமாக இருந்தாலும் சரி சிறார்களுக்கான கலை இலக்கியமாக இருந்தாலும் சரி அத்தகைய அர்ப்பணிப்பை தருவதற்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும் முன் வர வேண்டும் அதற்காக அவர்கள் முழு மனதுடன் உழைக்க வேண்டும்.


13.
அப்போதுதான்   பழைய கட்டுக்கதைகளின் வழியாக   மனித சமத்துவத்தை மறுக்கின்ற  சமூகக்கட்டமைப்பை மாற்றுவதற்கு எதிர்க்கட்டுக்கதைகளை எழுத்தாளர்களாலும் கலைஞர்களாலும் உருவாக்க முடியும்.


14.
உன்னதமான கலை எளிமையாக இருக்கும். ஆனால் எளிமையானதெல்லாம் கலையாகி விடாது.

Thursday, 3 July 2025

குழந்தைகளுக்கு நாடோடிக்கதைகளைச் சொல்லலாமா?

 குழந்தைகளுக்கு நாடோடிக்கதைகள், , கிராமியக்கதைகள் சொல்லலாமா? 


 


1. நாட்டார் இலக்கியம் கிராமப்புற மக்களின் வாழ்க்கை குறித்த அருங்காட்சியகம். அவற்றில் முற்போக்கான அம்சங்களும் பழமையான பிற்போக்கான அம்சங்களும் இருக்கும் - என்று இத்தாலிய கம்யூனிஸ்ட் அறிஞர் அந்தோனி கிராம்ஷி சொல்கிறார். 


2. நாட்டார் இலக்கிய வகைமையில் தான் நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் இருக்கின்றன. நாடோடிக்கதைகளென்பது நாடோடிகளாக, ஊர், நாடு, எல்லைகளைக் கடந்து செல்லும் நாடோடி மக்கள் எல்லாப்பிரதேசக்கதைகளையும் எல்லாப்பிரதேசங்களுக்கும் கொண்டு செல்வது.


3. கிராமியக்கதைகளென்பது ஒரே பிரதேசத்தில் கூட வட்டாரத்துக்கு வட்டாரம் மாறுபட்டோ, ஒரே மாதிரியோ சொல்லக்கூடியது. 


4.  நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் கல்வியோ, எழுத்தோ, இலக்கியமோ, மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களிடமிருந்து வாய்மொழியாக உருவானவை.


5.      சாமானியர்களின் வாய்மொழி இலக்கியம் இலக்கியப்பண்டிதர்களின் எந்தப் படைப்புக்கும் குறைவானதில்லை.


6 கல்வியறிவு மறுக்கப்பட்ட பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்க்கையனுபவங்களிலிருந்தே இந்த மாதிரியான வாய்மொழி இலக்கியத்தை படைக்கிறார்கள்.


7. அந்தக் கதைகளில் ஏமாற்றுதல், ஏமாறுதல், துரோகம், வஞ்சகம், கொலைபாதகம், கொடுமை, பேய், பிசாசு, முனி, மாற்றாந்தாய் கொடுமை, கள்ள உறவு, ஆணாதிக்கம், அரக்கன், அசுரன்,  அரசன், மந்திரி, போன்ற கருப்பொருட்களிலும் கதைகள் இருக்கின்றன.


8. இந்தக் கதைகள் உருவான காலகட்டத்தின் விழுமியங்களைப் பிரதிபலிக்கும்போது அவற்றில் பலது பிற்போக்கானதாகவும், மூடநம்பிக்கைகளைச் சொல்வதாகவும் இருக்கின்றன. அவை சமகாலத்துக்குப் பொருத்தமில்லாதவையாக இருக்கின்றன.


9. அதுமட்டுமல்ல, சில பல கதைகளில் குழந்தைகளும் மையக்கதாபாத்திரங்களாக வருவார்கள். அதனால் இந்தக் கதைகளெல்லாம் குழந்தைகளுக்கானதென்று கருதி விடக்கூடாது. 


10. இந்த மாதிரிக் கதைகளின் கற்பனை வளம், மாயாஜாலம், விலங்குகளைப் பேச வைப்பது, போன்ற சொல்முறை உத்திகள் பெரியவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குழந்தைக்கதைகளென்ற மயக்கத்தை உருவாக்குகின்றன.


11. கடந்த கால மக்களின் மனநிலையை, வாழ்நிலையைத் தெரிந்து கொள்வது அவசியம். ஆனால் அதற்குரிய வயது வரும்போது தெரிந்து கொள்ளலாம். 


12. அந்தக் கதைகளைப் போன்ற சொல்முறைகளிலும், உத்திகளிலும் புதிய கதைகளை சிறார் எழுத்தாளர்கள் எழுத வேண்டும்.

புதிய குழந்தைகளுக்கேற்ற புதிய கதைகள். 

பழையன கழிதல் வேண்டும்.

Tuesday, 1 July 2025

குழந்தைகளிடம் கதைகள் என்ன செய்யும்?

 

குழந்தைகளிடம் கதைகள் என்ன செய்யும்?





1. 
குழந்தைகள் உணர்வுமயமானவர்கள் அந்தந்தக் கணத்தில் வாழ்பவர்கள், கற்பனைத் திறன் மிக்கவர்கள், எல்லாவற்றையும் உண்மை யென்று நம்புகிறவர்கள்.


2.
குழந்தைப் பருவம் முழுவதும் உணர்வுகளால் பாதிக்கப்படுகிற காட்சிச் சித்திரங்களை மூளை தன்னுடைய ஆழ்மனதில் சேமித்து வைத்துக் கொள்ளும்.


3.
வெளியில் புறவயமாக குழந்தைகள் எதைப் பார்க்கிறார்களோ, எதை உணர்கிறார்களோ, எதை கேட்கிறார்களோ, அவை அனைத்தும் அவர்களுடைய ஆழ்மனதில் அதற்கே உரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


4.
அதன் விளைவுகள் அவர்கள் பெரியவர்களாகும் போது நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்களுடைய ஆளுமையில் பிரதிபலிக்கும்.


5. 
ஏற்றத்தாழ்வுகள் மிக்க இந்த சமூகமும் பெண்கள் குழந்தைகள் மீது அக்கறை இல்லாத ஆணாதிக்க சிந்தனைகளும்  குழந்தைகள் மனதில் ஏதோ ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொண்டோமானால் சிறார் இலக்கியம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.


6. 
கதைகள் குழந்தைகளின் மனக்கண்ணில் ஒரு புதிய உலகத்தை படைக்கிறது. இதுவரை குழந்தைகள் கேட்டிராத, பார்த்திராத, கற்பனை செய்திராத, ஒரு புதிய உலகத்தை அவர்களுக்கு காட்டுகிறது. அந்தக் கதையில் நிகழும் சம்பவங்கள் அதன் விளைவுகள் அதன் முடிவு அனைத்தும் குழந்தைகளின் ஆழ் மனதில் சென்று சேர்கிறது.


7.
எனவே தான் குழந்தைகளுக்கு கதைகளை சொல்லும்போது கதைத்தேர்வில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


8.
பண்பாடு என்ற பெயரில் போலியான சடங்குகள், மூடநம்பிக்கைகளை விதைக்கும் கதைகளைச் சொல்லக்கூடாது.


9.
ஏனெனில் குழந்தைகளுக்கான கதைகளில் வரும் சம்பவங்களில் குழந்தைகள் வாழத் தொடங்கி விடுவார்கள். கதைகளில் வரும் கதாபாத்திரங்களாக தங்களை கற்பனை செய்து கொள்வார்கள்.


10.
பண்பாடு என்பது பழமை போற்றுதல் அல்ல. மாறிவரும் சமூகச்சூழலுக்கேற்ப புதிய பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கதைகளைச் சொல்லவேண்டும்.


11.
தன்னை முன்னிறுத்தல், போட்டி, வெற்றிக்காக எந்த தந்திரமும் செய்தல், தன்னைத்தவிர மற்றவர்களை மதிக்க வேண்டியதில்லையென்ற பண்பு, உயர்ந்தோர் தாழ்ந்தோர் பிரிவினை போன்ற விழுமியங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ  சொல்கிற கதைகளைச் சொல்லக்கூடாது.


12.
சமத்துவம், சகோதரத்துவம்எல்லோருக்கும் சமவாய்ப்பு, அனைத்துயிர்களையும் மதித்தல், அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு, சகிப்புத்தன்மை, பாலின சமத்துவம், போன்ற உயரிய பண்புகளைப் போற்றும் கதைகளைச் சொல்ல வேண்டும்.