Tuesday, 21 October 2025

சிறார் இலக்கியத்தில் கலையும் அறிவியலும்

 

1.   சிறார் இலக்கியத்தில் கலையும் அறிவியலும்

உதயசங்கர்



1.கலை என்பதே கட்டற்ற புனைவு தான். அது ஆராய்ந்து நிருபிக்கப்படுகிற உண்மையல்ல.


2.
கலை மனதில் வினை புரிகிறது. அறிவில் அல்ல. எனவே கலையின் செயல்தளம் உணர்வுத்தளம் என்பதால் தான் கட்டற்ற புனைவுவெளியை உருவாக்க முடிகிறது.



3.
நம்ப முடியாததையெல்லாம் நம்ப வைக்கிறது. நடக்க முடியாததையெல்லாம் நடக்க வைக்கிறது. அதீதத்தை யதார்த்தம் போலும் சித்தரிக்கிறது. ஆக கலை தனக்கான பிரபஞ்சத்தில் இந்த அண்டத்தையே கற்பனையாகவும் படைக்கிறது.



4.
கலை யதார்த்தத்தை அடிப்படையாகக்கொண்டு புனைவாக படைப்பாளியின் நோக்கத்துக்காக கட்டமைக்கப்படுகிறது. எனவே தான் கலையில் உண்மை இருக்கலாம். ஆனால் கலையே உண்மை கிடையாது.


5.
அப்படிப் பார்க்கும்போது சிறார் மனம் கட்டற்ற புனைவு வெளியில் சிறகடிப்பவை. பிறந்ததிலிருந்தே குழந்தைகளுக்கு இந்த உலகம் ஆச்சரியங்களையும் அற்புதங்களையும் தந்து கொண்டேயிருக்கிறது.

6.
வளர வளரத்தான் அவர்கள் வாழ்வின் யதார்த்தங்களைப் புரிந்து கொள்கிறார்கள். உலகம் முழுவதும் சிறார் செவ்வியல் புனைவு நூல்களிலெல்லாம் விலங்குகள் மனித குணங்களுடனும், விசித்திர உருவங்களுடன் படைக்கப்பட்டிருக்கின்றன என்ற யதார்த்தத்தையும் கணக்கிலெடுத்துக்கொண்டால் படைப்புகளில் விலங்குகள் பேசுவதோ, மனிதர்களைப்போல குணபாவங்களைக் கொண்டிருப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.



7.
ஆனால் விலங்குகளின் இயல்புகளிலிருந்து அவற்றை மாறுபடுத்திக் காட்டுவது உதாரணத்துக்கு பாம்பு ஞாபகம் வைத்திருந்து கொத்தும். பாம்புகளை வணங்கினால் அது நமக்கு ஆசீர்வாதம் தரும். வயதான பாம்புகள் நாகரத்தினம் தரும். என்பது போன்ற மூட நம்பிக்கைகளைச் சொல்வது குழந்தைகளிடம் பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

8. 
அத்துடன் கலையைத் தாண்டிய நடைமுறை அறிவுரைகளை உதாரணத்துக்கு முகமூடி அணியவேண்டும், ஹெல்மெட் போட வேண்டும், என்கிற மாதிரியான படைப்புகளும் குழந்தைகளுக்கானதில்லை

9..
எனவே புனைவுகளில் விலங்குகள் மனித குணங்களைப் பிரதிபலிக்கலாம். அதன் நோக்கங்கள் முக்கியமானவை என்று நினைக்கிறேன்.

10.
ஒவ்வொரு விலங்கும் தன்னுடைய இருத்தலுக்காக தனித்துவமான நிறம், மணம்,குணம், ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இந்த தனித்துவமே அவற்றின் வாழ்வதற்கான போராட்டத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. இதற்கு மனிதகுணங்களை ஏற்றிச்சொல்வது என்பது உடன்பாடானதில்லை.

11.
உயிரியல் பற்றிய அறிவியல் வளர்வதற்கு முன்னால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது பஞ்சதந்திரக்கதைகள் ( Fables ) தோன்றிய காலத்திலிருந்தே உலகம் முழுவதும் இப்படியான கதைகளும் கருத்துகளும் பொதுப்புத்தியில் உறைந்து விட்டன. இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் இத்தகைய கதைகளின் கருத்துத்தளம் கேள்விக்குரியது தான்.
12.
ஆனால் விலங்குகளின் உண்மையான இயல்போடு புனைகதைகளில் எழுதுவது ஒரு சவாலாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். புனைவின் எல்லையிலிருந்து அறிவியலின் எல்லைக்குள் புகுந்துவிடும் சாத்தியங்கள் அதிகம் என்றே தோன்றுகிறது. அதனால் புனைவின் ரசனை குறைந்துவிடும் அபாயமும் ஏற்படும்.


13.
அறிவியல் புனைகதைகளில் விலங்குகளைப்பற்றி இயல்பாக எழுதலாம். அதற்கு முன்னுதாரணங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை.


14.
புதிய சவால்களை சிறார் எழுத்தாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.

 

Sunday, 19 October 2025

ஜப்பான் பேனா

 

ஜப்பான் பேனா

உதயசங்கர்




மறுபடியும் வகுப்பில் திருட்டு. இன்று ராமின் பேனாவைக் காணவில்லை. ராமின் மாமா ஜப்பான் போய்விட்டு நேற்று மாலை வந்தார். வரும்போது ராமுவுக்காக அந்தப் பேனாவை வாங்கி வந்திருந்தார்.

பேனா அவ்வளவு அழகாக இருந்தது. வழுவழு என்று பட்டுத்துணியைக் கையில் தொட்டமாதிரி. அத்தனை பளபளப்பு. ராமுவின் முகத்தில் அத்தனை ஆனந்தம். சிரிப்பு. அந்தப் பேனாவைக் கையிலே வைத்துக் கொண்டே சாப்பிட்டான். தூங்கும்போது அந்தப் பேனாவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே தூங்கினான்.

அந்தப் பேனாவைப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுபோகக்கூடாது என்று அம்மா சொன்னார். ஆனால் ராமுவுக்கு நண்பர்களிடம் அந்தப் பேனாவைக் காட்ட வேண்டும் என்ற ஆசை.

அம்மா அம்மா இன்னிக்கு ஒரு நாள் மட்டும் கொண்டு போறேன்.. ப்ளீஸ்மா.. ப்ளீஸ்மா..

என்று கெஞ்சினான். அம்மாவும்,

சரி.. இன்னிக்கு ஒரு நாள் தான்.. பத்திரம்.. “

என்று அனுமதி கொடுத்தார். அவன் அம்மாவைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டான். பள்ளிக்கு வந்ததும் தற்செயலாய் அந்தப் பேனாவை எடுப்பது போல எடுத்து சும்மா ரஃப் நோட்டில் எழுதினான். அவனுக்கு அருகில் உட்கார்ந்திருந்த கிருத்திக் முதலில் கவனிக்கவில்லை. தற்செயலாய் திரும்பிப் பார்த்தவன்,

ஐய் புதுப்பேனா.. டேய் ஏதுடா? “

என்று கண்கள் விரியக் கேட்டான்.

எங்க மாமா ஜப்பானிலிருந்து வாங்கி வந்தார்

 என்று சொன்னான் ராம். வகுப்பு தொடங்குவதற்கு முன்னால் எல்லாப்ப்பையன்களும் ராமைச் சூழ்ந்து நின்று அந்தப் பேனாவைத் தொட்டுத் தொட்டுப்பார்த்தார்கள். ராம் யார் கையிலும் பேனாவைக் கொடுக்கவில்லை. அவனுக்கு நெருங்கிய நண்பனான கைலாஷிடம் கூடக் கொடுக்கவில்லை. அவன் கையிலிருக்கும். எல்லாரும் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டார்கள்.

அந்தப் பேனாவைக் காணவில்லை.

வகுப்பறை, அவனுடைய புத்தகப்பை, அவன் போன இடம், வந்த இடம் எல்லா இடத்திலும் தேடினார்கள். கிடைக்கவில்லை.

மதிய உணவு இடைவேளை சமயத்தில் தான் யாரோ எடுத்திருக்கிறார்கள். அவன் சட்டைப்பையிலேயே இருந்த பேனாவை யார் எடுத்திருப்பார்கள்? ராம் அழுதான். எல்லாரும் அனுதாபப்பட்டார்கள். எல்லாரும் கடைசி பெஞ்சில் இருக்கும் ஆகாஷைச் சந்தேகப்பட்டார்கள்.

ராமின் காதுகளில்,

டேய்.. ஆகாஷ் தான் லவட்டிருப்பான்..

ராம் திரும்பி ஆகாஷைப் பார்த்தான். அவன் அமைதியாக புத்தகத்தை எடுத்துத் திருப்பிக் கொண்டிருந்தான். ஏற்கனவே இரண்டு முறை அவன் வகுப்பில் திருடி மாட்டியிருக்கிறான்.

ரோஷனின் காம்பஸ் பாக்ஸைத் திருடினான். அதைக் கண்டுபிடித்ததும் செமையான அடி விழப்போகுது என்று எல்லாரும் காத்திருந்தார்கள். ஆனால் தமிழாசிரியர் நெடுஞ்செழியன் அவனை அழைத்து மென்மையான குரலி,

ஏன் எடுத்தே? “ என்று கேட்டார். ஆகாஷ் பதில் சொல்லவில்லை. அப்படியே அமைதியாக தலை குனிந்து நின்றான்.

இனிமே எடுக்காதே.. உனக்கு வேணுமின்னா என்கிட்டே கேளு..என்று சொல்லி முதுகில் தட்டிக் கொடுத்து அனுப்பி விட்டார். வகுப்பில் உள்ள மற்ற பையன்களுக்கு ஏமாற்றம். இதுவே கணக்கு வாத்தியாராக இருந்தால் பின்னி எடுத்திருப்பார். தலைமையாசிரியரிடம் கூட்டிக் கொண்டு போயிருப்பார்.

தமிழாசிரியர் சோப்ளாங்கி என்று பேசிக் கொண்டார்கள். இன்னொரு தடவை விநாயக் வாங்கி வந்த புதிய நோட்டைக் காணவில்லை. எல்லாரையும் சோதனை செய்தால் ஆகாஷின் பைக்குள் இருந்தது. முதலில் அவனுடைய நோட்டு என்று சொன்னான்.

உண்மையிலேயே உன்னுடைய நோட்டா ஆகாஷ்..? சொல்லு..என்று தமிழாசிரியர் நெடுஞ்செழியன் கேட்டபோது அவன் அமைதியாக நின்றான். வகுப்பே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவன் ஆமாம் எனத்தலையாட்டினான். தமிழாசிரியர் அவனிடம் நோட்டைக் கொடுத்தார். தயங்கித் தயங்கி நோட்டை வாங்கிக் கொண்டு போனான் ஆகாஷ்.

 ஆனால் மறுநாள் காலையில் விநாயக்கின் டெஸ்க்கில் அந்த நோட்டு இருந்தது. இப்போது ஜப்பான் பேனாவைக் காணவில்லை. முதலிலேயே தமிழாசிரியர் தண்டனை கொடுத்திருந்தால் அவன் மறுபடியும் எடுத்திருக்க மாட்டான் என்று எல்லாரும் சொன்னார்கள்.

தமிழாசிரியர் நெடுஞ்செழியன் வந்ததும் ராம் அழுதுக் கொண்டே சொன்னான்.

யாராவது எடுத்திருந்தா கொடுத்துருங்கப்பா..என்று சொன்னார் தமிழாசிரியர். வகுப்பறை அமைதியாக இருந்தது.

ஆகாஷ்கிட்டே கேளுங்க ஐயா..அவன் தான் திருடியிருப்பான்

என்று ஒரு குரல் கேட்டது. ஆனால் தமிழாசிரியர் ஆகாஷ் இருந்தபக்கமே பார்க்கவில்லை. ராமை உட்காரச்சொன்னார்.

ஏன் ஆகாஷ் பேரைச் சொல்றீங்க.. ஒரு தடவை தப்பு செய்ஞ்சா மறுபடியும் அவன் தான் செய்வான்னு எப்படி நெனைக்கிறீங்க. இல்லை.. இந்த உலகத்திலே திருட்டுன்னு எதுவும் கிடையாது.. ஒருத்தன் ஒரு பொருளை எடுக்கிறான்னா.. அவனிடம் இல்லைங்கிறதுக்காக எடுக்கிறான்.. இல்லை ஆசைப்பட்டு எடுக்கிறான்.. அடுத்தவர் பொருளை அனுமதி இல்லாம எடுக்கக்கூடாது என்பதை உணரனும்..  தண்டனை கொடுத்தால் மட்டும் திருந்த மாட்டாங்க. வேற இடங்களில் திருட ஆரம்பிப்பாங்க.. அவங்க உணரனும்னா அன்பாலே மட்டும் தான் சாத்தியப்படும்.. அதனால் தான் நான் யாரையும் தண்டிக்கிறதில்ல. யாரையும் தண்டிக்க யாருக்கும் உரிமையில்ல..

என்று பேசியதைக் கேட்ட மாணவர்கள் அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள். ஆகாஷின் கண்களில் கண்ணீர் பொங்கியது. அவன் அழுதுகொண்டே எழுந்தான்,

உண்மையில் நான் எடுக்கல ஐயா..

என்றான். அவர் அவனருகில் வந்து அவனை அணைத்துக் கொண்டார். வகுப்பே அதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டது. தமிழாசிரியரின் அணைப்பில் ஆகாஷ் அந்த வகுப்பறையின் அன்பை உனர்ந்தான். ராம் கூட அம்மாவிடம் பேனா தொலைந்ததற்கு திட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தான்.

அப்போது வாசலில் ஒரு பையன் நின்று கொண்டிருந்தான்.

ஐயா இந்தப் பேனா பாத்திரம் கழுவுற இடத்தில இருந்தது.. எங்க டீச்சர் இது உங்க வகுப்பில் தவறவிட்டதான்னு கேட்கச் சொன்னாங்க..

அவனுடைய கையில்  ஜப்பான் பேனா இருந்தது.


நன்றி - வண்ணக்கதிர்