Thursday, 30 January 2025

ஆந்தை ------ ருஷ்ய நாடோடிக் கதை

 

ஆந்தை

விடாலி பையாங்கி

தமிழில் - உதயசங்கர்



ஒரு வயதான விவசாயி தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். கடும்தேநீர் அல்ல. தாராளமாக பால் சேர்க்கப்பட்டு வெள்ளை நிறத்தில் இருந்தது. அப்படி அவர் உட்கார்ந்திருக்கும்போது ஒரு ஆந்தை அவரைக் கடந்து பறந்து சென்றது.

“ நண்பரே.. இந்த நாள் இனிதாகுக! “ என்று சொன்னது ஆந்தை. ஆனால் அந்தப் பெரியவர் கடுமையான குரலில்,

“ பைத்தியக்கார ஆந்தையே..விடைத்த காதுகள்..வளைந்த அலகு, சூரியனையும் மனிதர்களையும் பார்த்துப் பயந்து ஒளிகிற நான் எப்படி உனக்கு நண்பனாக முடியும்? “

என்று சொன்னார். அதைக் கேட்ட ஆந்தைக்குக் கோபம் வந்தது.

“ அப்படியா? வயதான முட்டாளே! நான் இனிமேல் உன்னுடைய வயல்களுக்க்கு இரவில் எலிகளைப் பிடிக்க வரமாட்டேன்... நீயே அவற்றைப் பிடித்துக் கொள்..”

“ ஆ ஐய்யோ.. ஹா ஹா ஹா நான் பயந்துட்டேன்..ஆமாம் நான் பயந்துட்டேன்.. முதலில் இந்த இடத்தை விட்டு கிளம்பு.. உன் இறகுகள் கீழே விழுந்துரப்போகுது,..”

என்று வயதான விவசாயி கேலி செய்தார். ஆந்தை அங்கிருந்து பறந்து தன்னுடைய மரப்பொந்துக்குப் போய் விட்டது.

இரவு வந்தது. வயதான விவசாயியின் வயலில் தங்களுடைய வளைகளில் இருந்த எலிகள் கீச்சிட்டின,

“ வெளியே எட்டிப் பார்.. அந்தப் பைத்தியக்கார ஆந்தை பக்கத்தில் எங்காவது இருக்கிறதா என்று பார்..”

பதில் வந்தது.

“ ஆந்தை இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.. ஆந்தையின் சத்தமும் இல்லை.. இன்று இரவு புல்வெளியில் எந்த நடமாட்டமும் இல்லை.. நாம் பயப்படத் தேவையில்லை..”

உடனே எல்லா எலிகளும்,தங்களுடைய வளைகளிலிருந்து வெளியே குதித்தன. ஆனந்தமாக புல்வெளிக்குள் சென்றன.

ஆந்தை தன்னுடைய மரப்பொந்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது.

“ ஹோ ஹோ ஹோ பெரியவரே! எலிகள் வேட்டைக்குக் கிளம்பி விட்டன.. உனக்குப் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்..”

என்று சொல்லியது.

“ அதனால் என்ன? அவை வேட்டையாடட்டும்.. எலிகள் ஒன்றும் ஓநாய்கள் இல்லை.. அவை கன்றுக்குட்டிகளைக் கொல்லாது..”

எலிகள் புல்வெளியில் அலைந்து வண்டுத்தேனீக்களின் கூடுகளைத் தேடியது. நிலத்தைத் தோண்டி வண்டுத்தேனீக்களைப் பிடித்தது.

தன்னுடைய மரப்பொந்திலிருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தது ஆந்தை.

“ ஹோ ஹோ ஹோ பாருங்கள் பெரியவரே! அதோ.. பிரச்னை வரப்போகிறது.. புல்வெளியில் இருந்த எல்லா வண்டுத்தேனீக்களும் பறந்து விட்டன..”

“ போனால் போகட்டும்.. அவற்றால் என்ன பயன்? தேன் கிடைக்காது.. மெழுகும் கிடைக்காது.. கூடுகள் மட்டும் தானே..”

கால்நடைத்தீவனமான மணப்புற்கள் வளர்ந்தன. பூக்கள் பூத்துத் தொங்கின. ஆனால் வண்டுகள் அவற்றைப் பார்க்காமல் பறந்து சென்றன. அங்கே பூக்களுக்கு இடையில் ஒரு மகரந்தச் சேர்க்கை நடத்த யாரும் இல்லை.

ஆந்தை தன்னுடைய மரப்பொந்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது.

“ ஹோ ஹோ ஹோ பெரியவரே! பாருங்கள்.. பிரச்னை வரப்போகிறது. உங்கள் புற்களுக்கு நீங்கள் தான் மகரந்தச் சேர்க்கை நடத்த வேண்டும்..”

“ காற்று மகரந்தச் சேர்க்கை நடத்தும்..” என்று சொன்னார் பெரியவர். ஆனால் அவருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தலையைச் சொறிந்தார்.

காற்று வீசியது. ஆனால் மகரந்தங்கள் கீழே நிலத்தில் சிதறி விழுந்தன. ஒரு மகரந்தத்துகள் கூட மலருடன் சேரவில்லை. அப்படி என்றால் சீக்கிரத்திலேயே புற்கள் அங்கே இல்லாமல் போய் விடும்.

ஆந்தை மரப்பொந்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தது.

“ ஹோ ஹோ ஹோ.. பெரியவரே.. உங்களுடைய பசு மெலிந்து போய் விட்டது. அது நிறைய மணப்புல் கேட்கிறது.. மணப்புல் இல்லாத வெறும் புல் வெண்ணெய் இல்லாத கஞ்சி போலத்தான்..”

என்று சொன்னது.

மணப்புல்லைச் சாப்பிடும்போது பசு ஆரோக்கியமாக இருந்தது. இப்போது  எலும்பும் தோலுமாகி விட்டது. பால் வற்றி விட்டது. கழுநீர்த்தொட்டியை நக்கிக் கொண்டிருந்தது. அதனுடைய பால் தண்ணீராகி விட்டது.

ஆந்தை மரப்பொந்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது.

“ ஹோ ஹோ ஹோ பெரியவரே! நான் சொன்னேன் இல்லையா? நீ என்னிடம் உதவி கேட்டு வருவாய்..”

அந்தப் பெரியவர் திட்டினார். ஆனால் காரியங்கள் மோசமாகிக் கொண்டேயிருந்தன. மரத்தில் உட்கார்ந்திருந்த ஆந்தை எலிகளைப் பிடிக்கவில்லை. எலிகள் வண்டுத்தேனீக்களின் கூடுகளை அழித்தன. வண்டுத்தேனிக்கள் வேறு புல்வெளிக்குப் பறந்து போய் விட்டன. அதனால் பெரியவரின் புல்வெளி பாழாகி விட்டது. ஏனெனில் மணப்புல் வளரவில்லை. பசு மெலிந்து விட்டது. பால் கொடுக்கவில்லை.

அதனால் பெரியவர் தன்னுடைய தேநீரில் சுவை கூட்ட பால் சேர்க்கமுடியவில்லை.

வேறு வழியில்லை. ஆந்தையின் உதவியைக் கேட்டார்.

“ அன்பான ஆந்தையே.. எனக்கு உதவி செய்.. என்னுடைய பிரச்னையிலிருந்து காப்பாற்று.... என்னுடைய பசு பால் கொடுக்கவில்லை.. தேநீரில் பால் சேர்க்கமுடியவில்லை..”

மேலே மரப்பொந்திலிருந்த ஆந்தை தன்னுடைய பெரிய கண்களை உருட்டி முழித்தது. தன்னுடைய கால் நகங்களால் தலையைச் சொறிந்தது.

“ அப்படித்தான்.. பெரியவரே.. நல்ல நண்பர்கள் சிறந்தவர்கள்.. மோசமான நண்பர்கள் நம்மை ஏமாற்றி விடுவார்கள்... எனக்கு என்ன எலிகளைப் பிடிக்காது என்றா நினைக்கிறாய்? “

என்று சொன்னது. அந்த வயதான பெரியவரை மன்னித்து விட்டது. ஓக் மரப்பொந்திலிருந்து தாவி புல்வெளி மீது பறந்தது. எலிகளைப் பிடித்தது.

பயந்து போன எலிகள் வேகமாக ஓடி வளைகளில் பதுங்கின.

வண்டுத்தேனீக்கள் மீண்டும் புல்வெளிக்கு வந்தன. மலருக்கு மலர் தாவிப் பறந்தன. சிவப்பு மணப்புல் பூக்கத் தொடங்கியது. அதில் தேன் நிறைந்திருந்தது.

பசு புல்வெளியில் மணப்புல்லை விருந்தாக்கியது. இப்போது பால் நிறையச் சுரந்தது.

இப்போது அந்தப் பெரியவரின் தேநீரில் பால் கலந்து சுவை கூடியது. அவர் ஆந்தையைப் புகழ்ந்தார். தன்னுடைய வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ஆந்தைக்கு மிகச் சிறந்த வரவேற்பையும் அளித்தார்.

நன்றி - புக் டே

 

Sunday, 26 January 2025

யாருடைய வீடு?

 

யாருடைய வீடு?

உதயசங்கர்







 

1.

ஆதினிப்பாப்பாவுக்கு ஆச்சரியம்! வீட்டு மூலையில் ஒரு வலை தொங்கிக் கொண்டிருந்தது. காற்று வீசும் போது ஆடியது. ஆனால் அறுந்து விடவில்லை. வட்டமான வலையின் நான்கு பக்கங்களிலும் ஒரே ஒரு இழையினால் சுவரில் ஒட்டியிருந்தது.

அட! இது யாருடைய வீடு?

யாராவது இருக்கீங்களா? “ ஆதினி கேட்டாள்.

ஒரு கொசு பறந்து வந்து அந்த வலையில் மாட்டிக் கொண்டது. அது வலையில் இருந்து வெளியேறத் துடித்தது. அப்போது வலையின் ஒரு ஓரத்தில் இருந்து வேகமாக ஒரு எட்டுக்கால் பூச்சி அதுதான் சிலந்தி ஓடி வந்து கொசுவைக் கவ்வியது.

ஆதினிப்பாப்பாவுக்குப் புரிந்து விட்டது.

இது சிலந்தியின் வீடு.

 

2.

ஆதினிப்பாப்பா ஆசையாய் வைத்திருந்த குட்டி டைனோசர் பொம்மையைக் காணவில்லை. வீடு முழுவதும் தேடினாள். ஒரு வேளை அம்மா எடுத்து ஒளித்து வைத்திருப்பாளோ. மேலே பரணில் இருந்த அட்டைப் பெட்டியை எடுத்தாள். திடீரென அதிலிருந்து ஏதோ குதித்து அவள் மீது விழுந்தது.

“ ஐய்யோ அம்மா..என்று துள்ளிக்குதித்தாள் ஆதினி. அட்டைப்பெட்டியும் கீழே விழுந்தது. பெட்டியிலிருந்து வெள்ளையாய் இரண்டு சிறிய முட்டைகள் உருண்டு  ஓடின. சுற்றிப் பார்த்தாள். அங்கே ஒரு பல்லி சுவரில் நின்று கொண்டு அவளையே பார்த்தது.

ஓ இது பல்லியின் வீடா?

 

3.

இரவில் ஆதினிப்பாப்பா உச்சா போக எழுந்தாள். கழிவறைக்குப் போய் விளக்கைப் போட்டாள். சடசடவென நான்கு மிளகாய்வத்தல் பாச்சா அதுதான் கரப்பான் பூச்சி ஓடி கழிவறை இடுக்குகளில் ஒளிந்தன. ஆதினிப்பாப்பா பயப்படவில்லை.

இங்கே தான் நீங்க குடியிருக்கிறீர்களா? உங்கள் வீடா இது? என்று கரப்பான் பூச்சியைப் பார்த்துக் கேட்டாள். இடுக்கிலிருந்து தன்னுடைய உணர்கொம்புகளை நீட்டி ஆமாம் என்றது கரப்பான் பூச்சி.

4.

ஆதினிப்பாப்பா புத்தகப்பையை எடுத்தாள். அப்போது தான் கவனித்தாள். பையிலிருந்து வரிசைவரிசையாக எறும்புகள் வாயில் எதையோ கவ்வியபடி போய்க் கொண்டிருந்தன.  உடைந்து தூளான பிஸ்கெட் துண்டுகள்.

எங்கே போகின்றன இந்த எறும்புகள்?

அந்த வரிசையின் பின்னால் அப்படியே ஊர்ந்து போனாள் ஆதினிப்பாப்பா. வாசல்படிக்குக் கீழே சிறிய ஓட்டை வழியே போய்க் கொண்டிருந்தன எறும்புகள்.

இங்கே இருப்பது எறும்புகள் வீடு.

5.

கீச் கீச் கீச் என்று அணிலின் சத்தம் கேட்டது. ஆதினிப்பாப்பா ஓடிப் போய்ப் பார்த்தாள். வீட்டுத்தாழ்வாரத்தில் ஓட்டுச்சாய்ப்பின் கீழே இருந்த பனங்கட்டை இடைவெளியில் தேங்காய் நார் பஞ்சு எல்லாம் தெரிந்தது.

கீச் கீச் கீச் கீச்

அணில் அந்த இடைவெளிக்குள் போவதும் வருவதுமாக இருந்தது. பாட்டி சொன்னார்.

“ அணில் கூடு கட்டியிருக்கு..

ஆதினிப்பாப்பா நினைத்தாள்.

இது அணிலின் வீடு.

6.

மாலையில் அம்மாவிடம் ஓடிப்போய்,

“ அம்மா இது யாருடைய வீடு ? “ என்று கேட்டாள். அம்மா சிரித்துக் கொண்டே சொன்னார்,

“ நம் எல்லோருடைய வீடு..



நன்றி - அதிசய மோதிரம்

வெளியீடு - அறிவியல் வெளியீடு

 

 

 

Saturday, 25 January 2025

நடுவில் ஆறு

 

நடுவில் ஆறு

உதயசங்கர்



” ஆற்றைக் கடக்கவேண்டும் “

டிட்டு மான் தன் இரண்டு குட்டிகளுடன் முதலையாற்றின் கரையில் நின்றது. கடந்த ஒருவாரமாக எருமைக்காட்டில் நல்லமழை. இங்கிருந்து பார்க்கும்போது அந்தக் கரையில் பச்சைப்பசேல் என்று புற்கள் வளர்ந்திருப்பது தெரிந்தது.

கானூர் காட்டை முதலையாறு தான் இரண்டாகப் பிரித்தது. வலது பக்கக்காடு மான்காடு. இடதுபக்கக் காடு எருமைக்காடு. ஆறு மாதங்கள் மான்காட்டில் மழை பெய்யும். ஆறு மாதங்கள் எருமைக்காட்டில் மழைபெய்யும். மான்களும் எருமைகளும் ஒற்றுமையாகவே வாழ்ந்தன. எனவே மான்காட்டில் மழை பெய்யும்போது எருமைகளும் மான்களும் மான்காட்டிற்கு வந்து விடுவார்கள். எருமைக்காட்டில் மழை பெய்யும் போது எருமைக்காட்டுக்கு வந்து விடுவார்கள்.

இரண்டு நாட்களாக மான்காட்டில் காய்ந்த புற்களைத் தின்று எப்படியோ பசியைப் போக்கியாச்சு. இனிமேல் முடியாது. தின்பதற்கு எதுவும் இல்லை. எல்லாமான்களும் எருமைகளும் போய் விட்டன. டிட்டு மான் தயங்கித் தயங்கி கடைசியாகப் புறப்பட்டது.

ஏன் தெரியுமா?

முதலையாற்றில் இருந்த முதலைகள் தான். சாதாரணமாக தண்ணீர்த்தாகத்துக்காக நீர் அருந்த வரும் மான்களையும் எருமைகளையுமே நீருக்குள் ஒளிந்திருந்து எதிர்பாராத நேரத்தில் பாய்ந்து பிடித்துவிடும். அப்படி இருக்கும் போது, மான்களும் எருமைகளும் ஆற்றைக் கடந்து அக்கரைக்குப் போகும்போது சும்மா இருக்குமா? ஏராளமான எருமைகளையும் மான்களையும் முதலைகள் பிடித்துத் தின்று விடும்.

 இதனால் எருமைகளும் மான்களும் ஆற்றைக் கடப்பதற்கே அஞ்சும்.

ஆனால் வேறு வழியில்லை. உயிர் வாழ்வதற்காக உயிரைப் பணயம் வைக்க வேண்டிய நிலை. டிட்டு குட்டிகளை தூரமாய் நிறுத்திவிட்டு வந்தது. ஆற்றின் அருகில் நின்று முதலைகள் தென்படுகிறதா என்று உற்றுக்கவனித்தது. ஆறு அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது.

இன்னும் கொஞ்சம் அருகில் சென்றது டிட்டு. அப்போது ஆற்றின் நடுவில் பாறை ஒன்று முளைத்தது. அந்தப் பாறைக்கு வெளியே துருத்தியபடி இரண்டு கண்கள் தெரிந்தன.

முதலை.

. டிட்டுவுக்குத் தெரிந்து விட்டது. முதலையைப் பார்த்த உடனே டிட்டு பின்னால் போய் விட்டது.

பிறகு ஆற்றின் கரை வழியே நெடுக நடந்தது. பிறகு ஒரு திட்டத்துடன் திரும்பி வந்தது. இரவு வந்தது.

மங்கலான நிலா வெளிச்சம். குட்டிகளை அழைத்துக் கொண்டு சற்று தூரத்தில் ஆழம் குறைவான பகுதிக்குச் சென்றது. குட்டிகளிடம் ஏதோ முணுமுணுத்தது.

பிறகு மீண்டும் முன்பு பாறைபோல முதலை தெரிந்த இடத்துக்கு வந்தது. மெல்ல ஆற்றின் அருகில் சென்றது. ஆற்றுக்குள் கால்களை வைத்தது. இருளில் ஆற்றை உற்றுக்கவனித்தபடி நின்றது. முதலில் எந்த அசைவும் இல்லை. பிறகு ஆற்றின் நடுவில் ஒரு அலை மெல்ல எழுந்து அடங்கியது.

ஒரு பாறை நகர்ந்து வருவதைப் பார்த்தது டிட்டு. உடனே குட்டிகள் இருந்த திசையில் ஒரு குரல் கொடுத்தது.

உடனே குட்டிகள் வேகவேகமாக ஆற்றுக்குள் இறங்கி ஓடின. இப்போது முதலை குட்டிகள் ஓடிய திசை நோக்கித் திரும்பியது.

டிட்டு குரல் கொடுத்தவாறே இன்னும் கொஞ்சம் ஆழத்துக்குப் போனது. இப்போது குட்டிகள் பாதிதூரம் ஆற்றைக் கடந்து விட்டன. முதலையும் திரும்பி டிட்டுவைப் பார்த்து வந்தது. டிட்டுவின் பார்வை குட்டிகள் ஓடுகிற பக்கமே இருந்தன.

முதலை மிக அருகில் வந்து விட்டது. குட்டிகளைப் பார்த்துக் கொண்டே அந்த இடத்திலேயே நின்றது டிட்டு.

ஸ்ஸ்ஸ் அப்பாடா.. குட்டிகள் கரையேறி விட்டன. குட்டிகள் இரண்டும் உற்சாகமாய் குரல் கொடுத்தன.

அதைக் கேட்ட உடன் டிட்டு துள்ளிக்குதித்து பின்னால் ஓடி ஆற்றங்கரைக்கு வந்து விட்டது. வேகமாக வந்த முதலை குட்டிகள் கடந்து போன இடத்தையும் பார்த்தது. எதுவும் தெரியவில்லை. மறுபடியும் தன்னுடைய வழக்கமான இடத்துக்கே போய் பதுங்கிவிட்டது.

டிட்டு குட்டிகள் ஆற்றைக்கடந்து போன ஆழம் குறைவான அந்த இடத்தில் போய் காத்திருந்தது.

அதிகாலை நேரம்.

டிட்டு ஆற்றில் மெல்ல இறங்கியது. ஒரு தாவலில் பாதி ஆற்றைக் கடந்தது. பிறகு வேகவேகமாக மீதி ஆற்றை ஓடியும் நீந்தியும் கடந்தது. டிட்டு கரையில் பாயும்போது பின்னால் முதலையைப் பார்த்தது.

ஆனால் முதலை ஏமாந்து விட்டது. டிட்டு வருவதற்காகக் காத்திருந்த குட்டிகள் அம்மாவைக் கண்டதும் ஓடி வந்து உரசின. டிட்டுவும் குட்டிகளைத் தன் நாவினால் நக்கிக்  கொடுத்தது.

மூன்று பேரும் எருமைக்காட்டுக்குள் நுழைந்து வயிறு நிறைய்யச் சாப்பிட்டார்கள்.

 

நன்றி - வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

Friday, 24 January 2025

வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்

 

வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்

உதயசங்கர்



புலிக்குட்டி இப்போது துள்ளிக்குதித்து அங்கும் இங்கும் ஓடியது. உயரே குதித்தது. தாவிக்குதித்தது. தன்னுடைய வாலைப் பிடிக்கச் சுற்றிச் சுற்றி வந்தது. அப்படியே உட்கார்ந்து அப்படி இப்படி தலையைத் திருப்பிப் பார்த்தது.

ஏதாவது செய்யவேண்டுமே.

துறுதுறுவென்று வந்த புலிக்குட்டி அருகில் இருந்த ஒரு செடியின் இலைகளைக் கடித்தது.

ச்சீ தூ.. என்ன கசப்பு!

அப்போது அந்தச் செடியில் ஒரு கவச வண்டைப் பார்த்தது. அதனை முகர்ந்து பார்த்தது. ச்சேய்! கெட்ட நாற்றம்! தலையை உதறியது. திடீரென அம்மாவின் ஞாபகம் வந்து விட்டது.

அம்மா எங்கே?

உடனே காதுகளை விடைத்துக் கொண்டு காற்றை முகர்ந்து பார்த்தது. ஞாபகத்துக்கு வந்து விட்டது. அம்மா இரை தேடப் போயிருக்கிறது.

லேசாய் பசிக்கிறது. இந்த பச்சை வெட்டுக்கிளியைச் சாப்பிடலாமா?

யோசித்தது புலிக்குட்டி. அப்போது தான் அதன் கண்களுக்கு முன்னால் குறுக்கே ஏதோ பறந்து வந்து மூக்கில் உட்கார்ந்தது..

அது ஒரு சிறிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சி. அதைப்பார்த்த புலிக்குட்டிக்கு ஆச்சரியம். என்ன தைரியம்!

முன்காலால் மூக்கைச் சொறிந்தது. மஞ்சள் வண்னத்துப்பூச்சி பறந்து விட்டது. பறப்பதைப் பார்த்துக் கொண்டே நின்றது புலிக்குட்டி. திடீரென்று மஞ்சள் வண்னத்துப்பூச்சியைக் காணவில்லை. அப்படியே தலையைத் தொங்கவிட்டவாறே புலிக்குட்டி மஞ்சள் வண்ணத்துப்பூச்சியைத் தேடியது. சற்று தொலைவில் தும்பைச்செடியில் உட்கார்ந்திருந்தது மஞ்சள் வண்ணத்துப்பூச்சி.

ஓடிச் சென்று பயமுறுத்தியது. மஞ்சள் வண்ணத்துப்பூச்சி டக்கென்று காற்றில் பறந்தது. முன்காலைத் தூக்கி அதைப் பிடிக்கப்போவதைப் போல புலிக்குட்டி குதித்தது. இன்னும் மேலே பறந்தது மஞ்சள் வண்ணத்துப்பூச்சி.

புலிக்குட்டி சுற்றுமுற்றும் பார்த்தது. வண்ணத்துப்பூச்சியைக் காணவில்லை. அங்கே குட்டிச்செடிகளில் சிறிய பூக்கள் வண்ண வண்ணமாய் பூத்திருந்தன. வெள்ளை, நீலம், பிங்க், மஞ்சள், ஆரஞ்சு, நிறங்களில் கூட்டமாய் பூத்திருந்தன. புலிக்குட்டி அந்தச் செடிகளுக்குள் போய் படுத்துக் கொண்டது. ஆனால் கண்கள் மஞ்சள் வண்ணத்துப்பூச்சியைத் தேடிக் கொண்டு தான் இருந்தன.

ஓ.. அது என்ன சத்தம்! புலிக்குட்டி எழுந்து ஒரு குதிகுதித்தது. மூக்கில் என்ன இருக்கிறது? கண்களை மூக்கிற்குக் கொண்டு வந்து பார்த்தது.

அட! அந்த மஞ்சள் வண்ணத்துப்பூச்சி!

ஆமாம். புலிக்குட்டியின் மூக்கில் மஞ்சள் வண்ணத்துப்பூச்சி உட்கார்ந்திருந்தது. புலிக்குட்டிக்கு விளையாட்டாய் தெரிந்தது. அது தலையை உலுப்பியது. மஞ்சள் வண்னத்துப்பூச்சி மேலே பறந்து திரும்ப வந்து உட்கார்ந்து கொண்டது.

முன்கால்களைத் தூக்கி ஏதோ சொல்லியது மஞ்சள் வண்ணத்துப்பூச்சி.

“ புலிக்குட்டி. நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்.. உன்னையும் ஒரு பூ என்று நினைத்துத்தான் உன் மீது உட்கார்ந்தேன்.. நாம் நண்பர்களாகி விடலாம்..”

புலிக்குட்டி யோசித்தது.

“ சரி மஞ்சளழகி.. நீயும் அழகாக இருக்கிறாய்.. எனக்கு இப்போது பசிக்கிறது.. “ நான் இதுவரைத் தேனைச் சாப்பிட்டதே இல்லை..”

“ வா.. நண்பா.. நான் உனக்குத் தேன் இருக்கும் இடத்தைக் காட்டுகிறேன்.. தும்பைப்பூவின் தேன் அவ்வளவு ருசியாக இருக்கும்....”

உடனே மஞ்சள் வண்ணத்துப்பூச்சி புலிக்குட்டியின் முன்னால் பறந்து திரும்பி வந்து மூக்கில் உட்கார்ந்து. புலிக்குட்டியை அழைத்தது.

புலிக்குட்டியும் மஞ்சள் வண்ணத்துப்பூச்சியின் பின்னால் சென்றது. கொஞ்சதூரத்தில் தும்பைச்செடிகள் காடு மாதிரி வளர்ந்திருந்தன. அப்படியே வெள்ளை வெளேரென்று பூக்கள் பூத்து அந்த இடமே வெள்ளைப்போர்வை விரித்த மாதிரி இருந்தது.

மஞ்சள் வண்ணத்துப்பூச்சி ஒவ்வொரு பூவாய் போய் உட்கார்ந்தது.

ஆகா! என்ன ருசி! ஆகா!

என்று சொல்லிக்கொண்டே பறந்து கொண்டே இருந்தது.

புலிக்குட்டியும் ஒவ்வொரு பூவாய் போய் முகர்ந்து பார்த்தது.

ஒன்றும் தெரியவில்லை.

பூக்களை கடித்துப் பார்த்தது. ஒன்றும் தெரியவில்லை. நாக்கினால் நக்கிப் பார்த்தது. ஒன்றும் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தது.

புலிக்குட்டிக்குக் கோபம் வந்து விட்டது.

அவ்வளவு தான். தும்பைச்செடிகளை வாயினால் பிய்த்துப் போடத் தொடங்கியது.

அப்போது மஞ்சள் வண்ணத்துப்பூச்சி பறந்து வந்து,

“ புலிக்குட்டி.. எனக்குப் புரிந்து விட்டது.. உன்னால் தேனை உறிஞ்சிக்குடிக்க முடியாது..குட்டிப்பூவில் ஊறும் சொட்டுத்தேனை உறிஞ்ச மெலிதான உறிஞ்சுகுழல் தேவை.. உன்னிடம் அது கிடையாது.. இயற்கையன்னை ஒவ்வொரு உயிரையும் ஒவ்வொரு விதமாகப் படைத்திருக்கிறார்.. உன்னைப் போல நான் இருக்க முடியாது.. என்னைப் போல நீ இருக்க முடியாது.. கோபப்படாதே.. “

என்று சொன்னதைக் கேட்டதும் புலிக்குட்டி அமைதியாக யோசித்தது. மஞ்சள் வண்ணத்துப்பூச்சி மீண்டும் புலிக்குட்டியின் மூக்கில் வந்து உட்கார்ந்தது. புலிக்குட்டி தலையை ஆட்டிக் கொண்டு,

“ உன்னைப் போல நான் இருக்க முடியாது.. என்னைப் போல நீ இருக்க முடியாது..”

என்று பாடிக்கொண்டே தன்னுடைய வீட்டுக்கு ஓடியது.

 

 நன்றி - வண்னத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

Thursday, 23 January 2025

ஊர் சுற்றிய சிங்கக்குட்டி

       ஊர் சுற்றிய சிங்கக்குட்டி

உதயசங்கர்



கிர் காட்டில் சுமி, சிமி, டுமி, என்று மூன்று சிங்கக்குட்டிகள் அம்மா சிங்கத்தின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தன. மூன்று பேரில் டுமிக்குச் சேட்டை அதிகம். சுமியையும், கமியையும் சும்மா வம்பிழுக்கும். பால் குடிக்கவிடாது. காலைக்கடிக்கவும், வாலைக்கடிக்கவும் மேலே விழுந்து புரளவும் செய்யும். அம்மா சிங்கம்,

“ கர்ர்ர்.. சும்மா இரு டுமி.. “ என்று அவ்வப்போது செல்லமாய் திட்டும். அம்மா திட்டுவதற்கு யாராவது பயப்படுவார்களா? டுமி அம்மா சிங்கத்தின் முகத்தில் முத்தம் கொடுத்து தாஜா செய்து விடும். அம்மா சிங்கத்துக்கு டுமியின் சுறுசுறுப்பைப் பார்த்துப் பெருமையாக இருக்கும்.

இப்போதே வேட்டைக்குத் தயாரானதைப் போல பதுங்கும். பாயும். கீச்சுக்குரலில் கர்ச்சனை செய்யும்.

க்க்ர் கீச்ச்

அம்மா சிங்கத்துக்கு சிரிப்பாணி பொங்கி வரும். மெல்லச் சிரித்துக் கொண்டே, “ டேய் படவா ராஸ்கல்..என்று சொல்லும்.

அப்பா சிங்கத்தைப் பார்த்தால் சுமிக்கும் சிமிக்கும் பயம். அருகிலேயே போக மாட்டார்கள். ஆனால் டுமி பயப்படாது. அப்பாவின் பிரம்மாண்டமான உடல் மீது முட்டி மோதி விளையாடும்.

 ஒரு நாள் அப்பா சிங்கத்தின் மீது ஏறி அதன் பிடறி முடியைக் கடித்து இழுத்தது. என்ன நினைத்ததோ அப்பா சிங்கம். கோபத்தில் டுமியைக் கவ்வித் தூக்கி வீசி விட்டது. அதைப் பார்த்த அம்மா சிங்கம் அப்பாவுடன் சண்டை போட்டது.

தூக்கி வீசப்பட்ட டுமிக்கு அவமானமாகப் போய் விட்டது. அப்படியே தலையைத் தொங்கப் போட்ட படியே அங்கிருந்து நடந்தது. வருத்தத்துடன் நடந்து போய்க் கொண்டிருந்த அதற்கு முன்னால் கரும்பச்சை நிறத்தில் ஒரு பச்சோந்தி நின்று முதுகை மேலும் கீழும் தூக்கி ஆடியது. டுமிக்கு வேடிக்கையாக இருந்தது.

“ ஏய்.. யார் நீ? “ என்று கேட்டது டுமி சிங்கக்குட்டி.  அது கேட்டதும் அதுவரை பச்சை நிறத்தில் இருந்த பச்சோந்தி சிங்கத்தின் பழுப்பு நிறத்துக்கு மாறி விட்டது.

“ ஐய்.. இது எப்படி பண்றே? “ என்று கேட்டது டுமி.

ஒரு கணம் தன்னுடைய வட்டமான கண்களை இரண்டு பக்கங்களிலும் உருட்டியது பச்சோந்தி. பிறகு,

‘ நீ என்னைச் சாப்பிட மாட்டீல்ல.. அதாவது என்னுடைய தோலில் இருக்கிற நிறமிகள் தான் நான் நிறம் மாறுவதற்கு உதவுகின்றன.. எந்த இடத்தில் இருக்கிறேனோ அந்த இடத்தின் நிறத்தை உடனே பிரதிபலிக்கும்..

என்று சொல்லிக் கொண்டே அடுத்த புதரில் இருந்த வெட்டுக்கிளையைப் பிடிக்க ஓடியது பச்சோந்தி.

டுமி சிங்கக்குட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி இடத்துக்கு இடம் நிறம் மாறினால் ர்வ்வளவு அழகாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே நடந்தது.

கொஞ்ச தூரத்தில் ஒரு பந்து கிடந்தது. உருண்டையான பந்தைப் பார்த்ததும் டுமி சிங்கக்குட்டிக்கு ஆசை வந்து விட்டது. அதன் அருகில் சென்று பார்த்தது. கூர் கூரான முட்கள் நட்டமாய் நிற்க விசித்திரமாக இருந்தது அந்தப் பந்து. காலால் எத்தி விளையாடலாம் என்று டுமி நினைத்து காலைத் தூக்கியது. அவ்வளவு தான் பந்து குடுகுடுகுடு வென்று ஓடியது.

அது முள்ளம்பன்றி. முள்ளம்பன்றி ஓடுவதைப் பார்க்க டுமிக்கு வேடிக்கையாக இருந்தது.

டுமியும் பின்னாலேயே ஓடியது.

 “ ஏய்.. டுமி பின்னாலே வராதே.. நான் தோலைச் சிலிர்த்தா முள்ளு குத்திரும்.. நான் வீட்டுக்குப் போறேன்.. என்னோட அப்பா தேடிக்கிட்டிருப்பாரு.. “ என்று சொல்லி விட்டு திரும்பிப்பார்த்தது. எதிரே குள்ளநரி வந்து கொண்டிருந்தது. உடனே மறுபடியும் பந்து மாதிரி சுருண்டு கொண்டது.

எவ்வளவு நல்லாருக்கு. ஓட வேண்டாம். ஒளிய வேண்டாம். இருந்த இடத்திலேயே பந்து மாதிரி சுருண்டு இருந்துக்கிடலாம் என்று சிங்கக்குட்டி நினைத்தது. அப்பாவின் ஞாபகமும் வந்தது.

ச்சே! அப்பா மோசம்!

ஏதோ ஒரு காட்டுச்செடியை முகர்ந்து விட்டது.

அச்சூ.. அச்சூ.. அச்சூ.. என்று ஒரே தும்மல்.

ஏதோ பிடறி முடி தொங்கிக் கொண்டிருக்கிற மாதிரி தலையை உதறியது டுமி. வீட்டுக்குப் போகவே பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்ச தூரம் போனது.

யம்மாடி! இது என்ன எவ்வளவு பெரிசு! டுமி அப்படியே அருகில் இருந்த புதருக்குள் பம்மியது. எதிரேஒரு யானைக்கூட்டம் வந்து கொண்டிருந்தது. காட்டில் புழுதி பறந்தது. தட தட வென யானைகள் நடந்து போயின. டுமிக்கு மூச்சே நின்று போயிற்று.

காலை வைத்து ஒரு மிதி! அவ்வளவு தான். இப்படி பெரிதாக இருந்தால் யாரைப் பார்த்தும் பயப்பட வேண்டியதில்லை. அப்போது அதன் மீது புஸ் புஸ் என்று மூச்சுக்காற்று பட்டது. ஒரு குட்டி யானை தும்பிக்கையால் டுமியை முகர்ந்து பார்த்தது,

“ ஏய் இங்கே என்ன பண்றே.. உனக்கு அம்மா அப்பா இல்லையா? ப்ளாங் “ என்று பிளிறியது. டுமிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அதற்குள் அம்மா யானை அழைத்தது. உடனே குட்டி யானை ஓடி விட்டது.

புதரில் இருந்து வெளியே வந்தது டுமி. அதன் முகத்தை ஒரு வண்ணத்துப்பூச்சி சுற்றியது. அப்படியே மூக்கின் மீது உட்கார்ந்தது. டுமிக்குக் கோபம். என்ன தைரியம்! ஒரே அடியில் நசுக்கி விடுவேன் என்று நினைத்துக் கொண்டே முன்னங்காலைத் தூக்கி ஓங்கி மூக்கில் அடித்தது.

வண்ணத்துப்பூச்சியைக் காணோம். மூக்கு தான் வலித்தது. தலையை நிமிர்த்தி உயரே பார்த்தது. வண்ண வண்ண நிறங்களுடன் வானத்தில் பறந்து கொண்டிருந்தது வண்ணத்துப்பூச்சி.

எவ்வளவு அழகு! இந்த வண்ணத்துப்பூச்சியைப் போல வண்ணச்சிறகுகள் இருந்தால் எப்படியிருக்கும்! டுமியின் உடலில் சிறகுகள் முளைத்து அப்படியே வானத்தில் பறப்பதைப் போல கற்பனை செய்தது.

ஆகா! என்ன அற்புதம்!

டுமி இதுவரை தனியே வந்ததில்லை. நேரமாகி விட்டது. வயிறும் பசித்தது. அம்மா அப்பாவும் இருக்கும் குகைக்குப் போகவேண்டும். நின்று யோசித்தது. வந்த வழியே போகலாமா? எந்த வழியில் வந்தோம்?

 அதற்குக் குழப்பமாகி விட்டது.

அப்போது ஒரு வித்தியாசமான அழுகைச்சத்தம் கேட்டது. யார் இந்தக் காட்டுக்குள் அழுகிறார்கள்? டுமி ஆர்வத்துடன் சத்தம் வந்த திசையைப் பார்த்து ஓடியது.

அங்கே வாயில் எச்சில் ஒழுக, கூன் போட்ட முதுகுடன் ஒரு கழுதைப்புலி  டுமி சிங்கக்குட்டியைப் பார்த்தது.  அம்மாடி! ஆபத்தில் மாட்டிக் கொண்டேனே! அம்மா ஏற்கனவே சொல்லியிருக்கிறது.

யார் கண்ணில் பட்டாலும் கழுதைப்புலியின் கண்ணில் படக்கூடாது. இப்போது என்ன செய்வது? அவ்வளவு தானா? என் உயிர் போகப்போகிறதா? இதோ ஒரே நிமிடத்தில் என்னைக்கிழித்துச் சாப்பிடப்போகிறது இந்தக்கழுதைப்புலி என்று பயந்து நடுங்கியது டுமி சிங்கக்குட்டி. ஓடி விடலாமா? சுற்ரிலும் இருக்கும் இந்தப் புதர்க்காட்டில் ஓட முடியுமா?

டுமியின் மனதில் ஒருகணம் அப்பாவும் அம்மாவும் சிமியும் சுமியும் வந்து போயின.

கழுதைப்புலி மெல்ல அடியெடுத்து வைத்து டுமியை நோக்கி வந்தது. அதன் எச்சில் வாடை மோசமான நாற்றத்தை பரப்பியது. மூசு மூசு என்ற மூச்சுக்காற்று கூட மேலே பட்டது. வாயைத் திறந்து டுமியின் கழுத்தில் கூர்மையான பற்களைப் பதிக்கப் போன கழுதைப்புலி காள் காள் என்ற சத்தத்துடன் தூரத்தில் விழுந்தது.

அப்பாவின் கம்பீரமான கர்ச்சனையில் காடே அதிர்ந்தது. அம்மா கழுதைப்புலியை விரட்டிக் கொண்டு ஓடியது.

டுமிக்கு அப்பாவையும் அம்மாவையும் பார்த்ததும் கண்ணீர் வந்தது.

“ அப்பா நான் இனிமே தனியே வரமாட்டேன்..என்றது.

அப்பா சிங்கம்,

“ இல்லை டுமி இன்னும் கொஞ்ச நாட்களில் நீ தனியாக வரவேண்டும் வேட்டையாட வேண்டும். காடு முழுவதும் சுற்றி வரவேண்டும்.. இப்போது நீ .சின்னப்பையன்.. பாதுகாப்புடன் வருவது தான் நல்லது.. சரி வா என் முதுகில் .ஏறிக்கொள்..என்று அப்பா சிங்கம்.

டுமிக்கு மகிழ்ச்சி. அப்பா சிங்கத்தின் முதுகில் ஏறிக்கொண்டது.

“ அப்பா ஐ லவ் யூ..என்று சொல்லி பிடறி முடியில் முத்தமிட்டது.

பின்னால் வந்த அம்மாவைப் பார்த்து,

“ ஐ லவ் யூ டூ..”  என்று பறக்கும் முத்தத்தை அனுப்பியது. 

                                    

நன்றி - வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

Wednesday, 22 January 2025

நடிப்புத்திலகம்

 

நடிப்புத்திலகம்

உதயசங்கர்



பழையனூர் காடு மிகவும் பழமையானது. எவ்வளவு பழமையானது என்றால் முதன் முதலில் தோன்றிய பெரணிச் செடிகள் முதல் ஓங்கி உயர்ந்து வளரும் தேவதாரு மரங்கள் வரை இருக்கின்ற காடு. அதே போல உலகத்தின் அத்தனை வகையான விலங்குகளும் பறவைகளும் வசிக்கும் காடு.

அங்கே ஒரு அதிசயம் ஆண்டுதோறும் நடக்கும்.

அது பழையனூர் காட்டின் பிறந்த நாள்விழா. அன்று அந்தக் காட்டிலுள்ள எல்லாவிலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் புழுக்களும் பாம்புகளும் பல்லிகளும் எல்லாரும் ஒரு பெரிய மைதானத்தில் கூடி விடுவார்கள்.

பாட்டு, பேச்சு, நடனம், மாறுவேடம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கபடி, கல்லா மண்ணா, கண்ணாமூச்சி, ஓடிப்பிடித்து விளையாடுதல் என்று போட்டிகள் நடந்தன.

பாட்டுப்போட்டியில் யாரும் எதிர்பார்க்கவில்லை.

காகம் வெற்றி பெற்றது.

நடனப்போட்டியில் மான் துள்ளிக்குதித்து வெற்றிபெற்றது.

பேச்சுப்போட்டியில் எல்லாரும் மைனா தான் வெற்றி பெறும் என்று நினைத்தார்கள். மைனா ஏழுகுரலில் பேசும். ஆனால் வெற்றி பெற்றது யார் தெரியுமா?

தவிட்டுக்குருவி. அது ரேடியோ ஜாக்கி மாதிரி கயமுய கயமுய என்று பேசி வெற்றி பெற்றது.

நீளம் தாண்டுதலில் ஆமை வெற்றி பெற்றது.

உயரம் தாண்டுதலில் வெள்ளெலி வெற்றி பெற்றது.

கபடியில் புலி டீமும் எலி டீமும் போட்டி போட்டன. எலி டீம் மிகச்சுலபமாக வெற்றி பெற்றது.

கண்ணாம்மூச்சியில் யானை ஒளிந்த இடத்தை யாராலும் கண்டே பிடிக்கமுடியவில்லை. யானையே வெற்றி பெற்றது.

இப்படி இந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத விலங்குகளும் பறவைகளும் வெற்றி பெற்றன.

பழையனூர் காட்டில் வழக்கமான உற்சாகத்தை விட இன்று மிகுந்த கொண்டாட்டமாக இருந்தது.

கடைசியாக மாறுவேடப்போட்டி. மாறுவேடம் போட்டு வந்து நடிக்க வேண்டும்.

காட்டு ஆடு வந்தது. நீண்ட தாடியுடன் அறிவியலறிஞர் டார்வினைப் போல நடித்தது. ஒவ்வொரு உயிரினத்தையும் ஆராய்ந்து பரிணாமவளர்ச்சி பற்றிப் பேசியது.

சிட்டுக்குருவி வந்தது. பறவையியலாளர் சாலிம் அலி போல வேடம் போட்டிருந்தது. கழுத்தில் ஒரு பைனாக்குலர் மாட்டிக்கொண்டு ஒவ்வொரு பறவைகளைப் பற்றியும் பேசியது.

காற்றில் அங்கும் இங்கும் பறந்து கொண்டே தாத்தாபூ வந்தது. தாவரவியலாளர் ஹம்போல்ட் என்றது. ஒவ்வொரு தாவரத்தையும் ஆராய்ந்து தான் வைத்திருந்த குறிப்பேட்டில் பதிந்து கொண்டது.

பெண்புலி வந்தது. நான் தான் இடவேலத் கக்கத் ஜானகியம்மாள் தாவரங்களின் பூக்களின் மரபணுவை ஆராய்ந்து மாற்றங்களைச் செய்வேன் என்றது. கையில் வைத்திருந்த சிவப்பு நிறச் செம்பருத்திப் பூவின் நிறத்தை மஞ்சளாக மாற்றிக் காட்டியது.

யாருக்குப் பரிசு கொடுப்பது ?

நடுவர் குழு தடுமாறின.

அப்போது ஒரு குரல் கேட்டது.

அதுக்குள்ள தீர்ப்பைச் சொன்னா எப்படி? என்னோட நடிப்பைப் பாருங்க..

எல்லாரும் திரும்பிப்பார்த்தார்கள். எதுவும் தெரியவில்லை.

அப்போது மின்னு முயல் சொன்னது,

“ நடுவர்களே! . இங்கே ஒரு ஹாக்னோஸ் பாம்பு செத்துக்கிடக்கு.. செத்து பல நாள் ஆகியிருக்கும் போல.. நாத்தம் குடலைப் புடுங்குது..

பார்த்தால் அங்கே ஒரு பாம்பு மட்டமல்லாக்கப் படுத்துக் கிடந்தது. வாயைத் திறந்து நாக்கைத் தொங்கவிட்டபடி கிடந்தது. உடம்பு விரைத்து அசையாமல் கிடந்தது. மூச்சு விடவில்லை.

அதைப் பார்த்த மயிலானுக்கு ஆசை வந்தது. அருகில் போய் கொத்தித் திங்கலாம் என்று நினைத்தது.

ஐயே! பக்கத்தில் போக முடியவில்லை. அப்படி ஒரு துர்நாற்றம். அப்படியே பின்னால் போய் விட்டது.

நடுவர்களும் மற்ற விலங்குகளும் அந்த இடத்திலேயே இருக்கமுடியவில்லை. எல்லாரும் வேக வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

அந்த செத்த பாம்பு அப்படியே கிடந்தது.

போட்டிகள் முடிந்து பரிசுகள் எல்லாம் கொடுத்து எல்லாரும் வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

இரவாகி விட்டது. அப்போது செத்தபாம்பு அசைந்தது.

.” எப்படி என் நடிப்பு நடுவர்களே! என்று கூவியது. உடலைத் திருப்பி கண்களைத் திறந்தது அந்தப் பாம்பு.

யாரும் இல்லை.

“ ஐயோ.. நான் எப்படி நடித்தேன்.. எனக்குத் தானே பரிசு கொடுக்க வெண்டும்.. இதை யாரும் கேட்கமாட்டீர்களா? “

என்று அழுதுகொண்டே மீண்டும் மல்லாக்க விழுந்து செத்தது போல நடிக்கத் தொடங்கியது அந்த நடிப்புத்திலகம் ஹாக்னோஸ் பாம்பு.

அப்போது மரத்தில் இருந்த ஆந்தை சொன்னது,

“ எதுவும் அளவோடு இருக்கணும்டா ஹாக்னோஸ்..

 

நன்றி - வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

Tuesday, 21 January 2025

இடமாற்றம்

 

இடமாற்றம்

உதயசங்கர்




ஓங்கி உயர்ந்த மலைகள் மடிப்பு மடிப்பாய் விரிந்திருந்தன. 

அதன் சிகரங்களில் எப்போதும் மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. 

குட்டி மேகம், பெரிய மேகம், குழந்தை மேகம், தாத்தா மேகம், பாட்டி மேகம், எல்லாம் இருந்தன. 

மேகங்கள் எல்லாம் தினம் ஒரு தடவையாவது அந்த மலைகளைச் சந்திக்காமல் போவதில்லை. அங்கே மலைகளுடன் பேசி ஓய்வு எடுத்து விட்டுத் தான் மறுபடியும் பயணத்தைத் தொடரும்.

ஓயாமல் பயணம் போகும் மேகங்கள். 

ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம், என்று எல்லா இடங்களையும் சுற்றி வரும் மேகங்கள் சொல்லும் கதைகளைக் கேட்க ஆச்சரியமாக இருக்கும். ஆர்க்டிக், அண்டார்ட்டிக் குளிர்பிரதேசங்கள், பாலை வனங்கள், அமேசான் காடுகள், கிராமங்கள், நகரங்கள், என்று உலகின் எல்லா அதிசயங்களையும் பர்த்து விட்டு வரும் மேகங்கள்.

மேகங்கள் சொல்லும் கதைகளைக் கேட்கும் மலைகளுக்கு ஒரு ஆசை வந்தது. பிறந்ததிலிருந்தே ஒரே இடத்தில் அசையாமல் நின்று கொண்டிருக்கிறோமே. கொஞ்சம் ஊர் சுற்றிப்பார்த்தால் என்ன? மேகங்களிடம் கேட்டது.

“ என்னையும் உன் கூட ஊர் சுற்றிப்பார்க்கக் கூட்டிட்டுப் போயேன்..

மேகங்கள் யோசித்தன. இதுவரை யாரும் இப்படிக் கேட்டதில்லை. தாத்தா மேகத்திடம் ஆலோசனை கேட்டன. தாத்தா மேகமும் மலைச்சிகரத்தில் இரண்டு நாட்கள் தங்கி யோசித்தது.

கடைசியில் மேகங்களும் மலைகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தன. ஒரு நாள் மேகங்கள் மலைகளைப் போல பூமியில் தங்கியிருப்பது, மலைகள்   மேகங்களைப் போல உயரே பறப்பது என்று முடிவு செய்தார்கள்.

அடுத்த நாள் காலையில் பார்த்தால் மேகங்கள் தரையில் கூட்டம் கூட்டமாகத் தங்கி விட்டன. மலைகள் எல்லாம் வானத்தில் மிதந்து கொண்டிருந்தன.

காற்று வீசியபோது மலைகள் குலுங்கின. மலைகளில் இருந்த உயிரினங்கள் பயந்து அலறின. சில விலங்குகள் மலைகளின் விளிம்பிலிருந்து தவறி விழுந்தன. மரங்கள் முறிந்து பூமியில் விழுந்தன. மலைகளுக்கே பயமாக இருந்தது. கீழே இறங்கி விடலாம் என்று இறங்கத் தொடங்கின.

கீழே மேகங்கள் எங்கும் போகமுடியாமல் ஒரே இடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தன. தாத்தா மேகம்,

“ வாருங்கள் விரைந்து மேலே போய் விடுவோம்..என்றது. மேகங்கள் உயரே சென்றன.

இப்போது மலைகளும் மேகங்களும் தினமும் சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள். மலைகள் இங்கே பூமியில் நடப்பவற்றைச் சொல்கின்றன. 

மேகங்கள் உலகம் முழுவதும் நடப்பதைப் பற்றிச் சொல்கின்றன.

அதோ! ஒரு குட்டி மேகம்.  

மேகமலையின் உச்சியில் இருக்கும் தேவதாரு மரத்தின் கிளையில் உட்கார்ந்து கதை சொல்லிக்கொண்டிருக்கிறது.

என்ன கதை என்று கேட்போமா?


நன்றி - வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

 

Monday, 20 January 2025

மரமும் மலரும்



 

மரமும் மலரும்

உதயசங்கர்



இமயமலையின் அடிவாரத்தில் மிகப்பெரிய தேவதாரு மரக்காடு இருந்தது. அங்கே விதம் விதமான தேவதாரு மரங்கள் இருந்தன. 

இதோ வசந்தகாலம் வந்து விட்டது. வசந்த காலம் வந்து விட்டால் மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு, நிறப்பூக்கள் பூத்துக் குலுங்கும். 

தேவதாரு மரங்கள் பல நூற்றாண்டுகள் வாழும்.

அப்படி இருநூறு ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மரத்தில் மஞ்சள் பூக்கள் பூத்திருந்தன. அதுவரை எந்தப் பூச்சிகளோ, வண்ணத்துப்பூச்சிகளோ, பறவைகளோ தேவதாரு மரத்திற்கு வரவில்லை. 

பூக்கள் பூத்தது தான். 

அவ்வளவு பூச்சிகளும் எறும்புகளும் பறவைகளும் மரத்தை நோக்கி வந்தன. பூக்களின் வாசனையால் காடே மணந்தது.

மரத்துக்குப் பொறாமை வந்தது. பூக்களைப் பார்த்து,

“ கொஞ்ச நாட்கள் இருக்கப்போகிறாய்.. அதற்குள் என்ன அலட்டல்.. நான் இருநூறு ஆண்டுகளாய் இங்கேயே அமைதியாக நின்று கொண்டிருக்கிறேன்.. தெரியுமா?

என்று சொன்னது. பூக்கள் எதுவும் பேசவில்லை. தன்னைத் தேடி வந்த விருந்தினர்களான தேனீ, எறும்பு, வண்ணத்துப்பூச்சி ஆகியவற்றுக்குத் தேன் கொடுப்பதில் கவனமாக இருந்தது.

மரம் மீண்டும் பூக்களிடம்,

“ நீண்ட வருடங்களாக நின்று கொண்டிருக்கிற நான் பெரியவனா? அற்பமான நாட்களில் உதிர்ந்து மண்ணோடு மண்ணாக மக்கிப்போகிற நீ பெரியவனா? “

என்று கிளைகளை ஆட்டிக் கேட்டது. 

பூக்கள் அமைதியாக,

..“ நான் பெரியவனில்லை மரமே.. ஆனால் நீயும் பெரியவனில்லை..”

“ என்ன சொல்றே.. நான் பெரியவனில்லையா? கோமாளி மாதிரி ஆடை உடுத்திகிட்டு போறவாற பூச்சியை எல்லாம் கூப்பிட்டுக்கிட்டிருக்கிற பூ நீ.. என்னைப் பெரியவனில்லைன்னு சொல்றியா..” என்று கோபத்துடன் தலையை விரித்து காற்றில் ஆடியது மரம்.

அன்று பூவின் இதழ்கள் உதிரவேண்டிய நாள். 

மரம் ஆடிய ஆட்டத்தில் அந்தப் பூக்கள் உதிரத்தொடங்கின. கடைசி இதழ் உதிரும்போது,

“ நீ எவ்வளவு ஆண்டுகள் நின்றாலும் நான் சில நாட்களே இருந்தாலும் நான் உன்னுடைய ஒரு பகுதி என்பதை மறந்து விட்டாயே.. நீ இயற்கையின் ஒரு பகுதி.. ”

அதைக் கேட்ட மரம் வருந்தியது.

“ அடடா.. நான் புத்தியில்லாமல் பேசி விட்டேன்.. நீ கீழே உதிராதே.. நான் உன்னைத் தாங்குகிறேன்.. “ என்று கிளையைக் கீழே தாழ்த்தியது.

அதற்கு காற்றில் ஆடி ஆடி கீழே வந்து கொண்டிருந்த பூவிதழ் சொன்னது,

“ மரமே.. என்னுடைய வேலை முடிந்து விட்டது.. இனி ஒட்ட வைத்தாலும் ஒட்டமுடியாது.. காலம் முடிவில்லாதது.. அந்தக் காலத்தின் ஓட்டத்தில் இருநூறு ஆண்டும் ஒன்று தான்.. இரண்டு நாட்களும் ஒன்று தான்.. நாம் வாழும் காலத்தில் எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம்..சரி விடை கொடு.. நீ எனக்களித்த அனைத்துக்கும் மிக்க நன்றி..”

தரையில் கிடந்த பழுத்த இலைகளையும் உதிர்ந்த பூக்களையும் பார்த்து, மரம் தலை வணங்கியது.


நன்றி - வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

 

Sunday, 19 January 2025

பறக்க முடியுமா?

 

பறக்க முடியுமா?

உதயசங்கர்



லில்லி பனிக்கொக்கம்மா தன் குஞ்சான லல்லியிடம்,

“ இன்னும் கொஞ்சம் நாட்களில் நாம் நீண்ட தூரம் வலசை போக வேண்டும் நீ நன்றாகப் பயிற்சி எடுத்துக்கொள் லல்லி....

என்று சொல்லி முடிக்கும் முன்னால்,

“ வலசைன்னா என்ன? “ என்று லல்லி குஞ்சு கேட்டது.

“ நாம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போய் கொஞ்சநாட்கள் இருந்து விட்டு திரும்பி வருகிறோம்.. அதைத் தான் வலசை என்று சொல்கிறோம்..

என்று லில்லி பனிக்கொக்கம்மா விளக்கம் சொல்லியது.

“ எவ்வளவுதூரம் நாம் பறந்து வருகிறோம்? “

“ உன்னுடைய கேள்விகளுக்கு முடிவே கிடையாதா? கிட்டத்தட்ட பத்தாயிரம் கிலோ மீட்டர்..

ஏயப்பா அவ்வளவு தூரமா? இங்கேயே இருந்துட்டா என்ன? “

“ அட என் லல்லிச்செல்லமே.. பூமியில் வ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு விதமான தட்பவெப்பம் இருக்கும்டா.. எல்லாக்காலத்திலும் நம்மால் இருக்க முடியாது.. உணவு கிடைக்காது.. தண்ணீர் இருக்காது.. ஏன் குடும்பம் நடத்தவோ, முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கவோ முடியாது…

அதைக்கேட்ட லல்லி உடம்பைச் சிலிர்த்துக் கொண்டது. அம்மாவைப் பார்த்து,

“ அவ்வளவுதூரம் என்னால் பறக்கமுடியுமா? “

“ ஏன் முடியாது.. நானும் உன்னை மாதிரி என்னுடைய அம்மா கூட பறந்து  .. போனேன்..

எனக்குப் பயமா இருக்கும்மா..””

பயந்தால் வாழமுடியாது.. லல்லி.. நீ இனிமே ரொம்பநேரம் பறக்கும் பயிற்சி எடுக்கணும்..

தினமும் லில்லி பனிக்கொக்கம்மா லல்லியையும் அழைத்துக் கொண்டு பறந்தது. காற்று வீசும்போது அதை எப்படி எதிர்கொள்வது?.. காற்றை எதிர்த்துப்  பறக்கும் போது என்ன செய்யவேண்டும்?. காற்றுடன் பறக்கும் போது என்ன  செய்ய வேண்டும்?.என்று ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்தது.

ஆனாலும் லல்லிக்குப் பயம் போகவில்லை.

அன்று அதிகாலை பனிக்கொக்குக் கூட்டம் வலசைக்குத் தயாரானார்கள். கூட்டத்தின் தலைவர் முன்னால் போகப் பின்னாலே எல்லாப்பறவைகளும் பறந்தன.

 லல்லியும் பறந்தது. பறக்கப் பறக்க பறத்தலின் ஆனந்தம் லல்லிக்குத் தெரிந்தது.

உயரே உயரே பறந்தது லல்லி. இப்போது அதன் மூளையில் பறக்கும் திசை ஓவியம் போலத் தெரிந்தது. இதுவரை இந்தத் திசையில் பறந்ததில்லை. ஆனால் காலம் காலமாகப் பறந்ததைப் போல ஞாபகங்கள் பொங்கி வந்தன. 

அருகில் பறந்த மற்ற பறவைகளிடம்,

 நான் சைபீரியப் பனிக்கொக்கு..” 

என்று கம்பீரமாக முழங்கிக் கொண்டே பறந்தது.

நன்றி - வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்