Friday 20 September 2013

கவிதையின் அரசியல்

உதயசங்கர் images (5)

 

ஆதியில் மந்திரச்சடங்குகளில் ஒரேவிதமான ஏற்ற இறக்கங்களில் இயைபு கொண்ட ஒலிக்குறிப்புகளைத் திரும்பத் திரும்ப ஒலிப்பதன் மூலம் இசையுடன் கூடிய மனதில் கிளர்ச்சியூட்டும் வார்த்தைகள் தான் இன்றைய கவிதையின் ஆதிமூலம் என்று சொல்லலாம். சடங்குகளில் இயற்கையைக் கட்டுப்படுத்த, ஆவிகளை அடக்கிவைக்க, உற்பத்திபெருக, நோய்கள் தீர, என்று சமூகத்தின் அத்தனை நடவடிக்கைகளிலும் கவிதை மந்திரச்சொல்லாகப் பயன்பட்டிருக்கிறது. வரிவடிவம் தோன்றிய பிறகு உழைப்பிலிருந்து கவிதை பிரிந்து கற்றோர் கலையாகவும், உழைப்பாளிகள் தங்கள் உழைப்பின் தேவைக்கேற்ப உருவாக்கிய உழைப்புப்பாடல்கள் எளியோர் கலையாகவும் பிரிந்து விட்டது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் கவிதை ஆள்பவர்களின் புகழ்பாடவும், பொழுதுபோக்காகவும், சமூகமதிப்பீடுகளை நிலைநிறுத்தும் காவியங்களைப் படைக்கவுமாகத் தொழிற்பட்டது. கவிதையும், கவிஞர்களும் போற்றப்பட்டகாலமும் இதுதான். முதலாளித்துவகாலகட்டத்தில் முதலாம் இரண்டாம் உலகயுத்தங்களினால் ஏற்பட்ட விரக்தியும், நிச்சயமின்மையும், முதலாளித்துவத்தின் பிரிக்கமுடியாத விதியான சந்தை, பொருள், விற்பனையும், கவிதையின் பாடுபொருளை முற்றிலும் வேறொன்றாக மாற்றிவிட்டது. வாழ்வின் நிச்சயமின்மை குறித்தும், உச்சகட்டத்திலிருந்த அந்நியமாதல் குறித்தும், இதுநாள்வரை நம்பியிருந்த கடவுள் கைவிட்டதனால் ஏற்பட்ட கையறுநிலை குறித்தும், கவிதைகள் படைக்கப்பட்டன. புதியபாடுபொருளைப்பற்றிப் பேசுவதால் புதிய வடிவங்களைக் கைக்கொண்டன.

முதலாளித்துவத்தின் கருவறையிலேயே பிறந்த புரட்சியும் தொழிலாளர்களின் குரலாக, ஈவு இரக்கமற்ற முதலாளித்துவத்தின் லாபவெறிக்கு எதிரான கலகக்குரலாக, இழப்பதற்கு எதுவுமில்லை எதிரே ஒரு பொன்னுலகம் என்று புரட்சியின் முழக்கமாக மாறியது கவிதை.

இலக்கியவடிவங்களில் மூத்தகுடி கவிதை தான். எனவே கவிதைக்குத் தான் இலக்கணம் முதலில் எழுதப்பட்டிருக்கிறது. தொல்காப்பியம் முழுவதுமே தமிழ்மொழி இலக்கணமாக விளைந்தது தான். அதுவும் கவிதைக்கான இலக்கணம். அந்த கவிதை இலக்கணத்தை வைத்தே நாம் உரைநடையை இன்று எழுதிக்கொண்டிருக்கிறோம். உரைநடைக்கென்று தனி இலக்கணநூல் கிடையாது. யாப்பு, சீர், தளை, எதுகை, மோனை, உருவகம், என்று பழங்கவிதை தனக்கென்று பிரத்யேகமாக தனிவழிமுறைகளை கொண்டு இயற்றப்பட்டது. தமிழ்க்கவிதையின் பொற்காலமாக இந்தக்காலம் இருந்திருக்கிறது. திருக்குறள், தொடங்கி ஐம்பெருங்காப்பியங்கள், பதினென்கீழ்க்கணக்கு, குறுந்தொகை, கம்பராமாயணம் என்று தமிழ்க்கவிதை தன் உச்சத்தைத் தொட்டகாலம். காலனிய ஆட்சியின் கீழ் ஆங்கிலத்தின் அறிமுகமும் ஆங்கில இலக்கியத்தின் பரிச்சயமும், புதிய சமூக யதார்த்தமும் இந்தியாவிலும் தமிழிலும் புதிய வடிவங்களைக் கோர காலத்தின் விளைபொருளான மகாகவியும் வசனகவிதை எழுதுகிறான். அதுவரை எதுகை,மோனை, யாப்பு தளை, சீர் என்று சிந்தனைகளும் அநுபவங்களும் இலக்கணத்தில் சிறைப்பட்டிருந்ததை விடுவித்து கருத்துகளையும், அநுபவங்களையும் பிரதானப்படுத்தி புதிய வாழ்வநுபவங்களை புதிய மொழியில் புதிய வடிவத்தில் சொல்லும் புதுக்கவிதை பிறக்கிறது.

புதுக்கவிதை பிறக்கும்போது இயற்கையியல்வாதமாகவும், முரண்நகைவாதமாகவும், அழகியல்வாதமாகவும், அவநம்பிக்கைவாதமாகவும், காதலின் ஏக்கவாதமாகவும், பெட்டிபூர்ஷ்வா என்று சொல்லப்பட்ட மத்தியதரவர்க்கத்தின் வாழ்வநுபவமுரண்வாதமாகவும், புலம்பல்வாதமாகவும் உள்முகவாதமாகவும், சூன்யவாதமாகவும் பிறந்து வளர்ந்தது. இந்தப்புதுக்கவிதைக்குள்ளிருந்து தான் சாமானிய, எளிய மக்களின் கோபாவேசமும், ரௌத்ரமும், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையும் பொங்கும் முற்போக்குக்கவிதைகள் பிறந்து வளர்ந்தன.

ஐம்பதுகளில் வேகமெடுத்த புதுக்கவிதையின் பிரவாகம் அறுபதுகள், எழுபதுகளில் உச்சத்தை தொட்டது எனலாம். அதிலும் குறிப்பாக எழுபதுகள் முற்போக்குக்கவிதைகளின் பொற்காலம். எண்பதுகளில் சற்று தேக்கமடைந்த கவிதை தொண்ணூறுகளுக்குப் பிறகு உலகமயமாக்கல் தீவிரமாக அமலாக்கப்பட்ட காலத்தில், பின்நவீனத்துவம் அறிமுகமான நேரத்தில் வேறு வடிவங்கள் பூண்டன. பூடகமும், விடுகதையும், புதிரும், நிறைந்த மயக்குமொழிப்பின்னல் கவிதையில் பிரயாகிக்கப்பட்டன. கவிதை மீண்டும் ஒரு சிறுகுழுவுக்கானதாக மாறியது. குழூஉக்குறியைப்போல கவிதை உருமாற்றம் அடைந்துவிட்டது. இத்தைகையச் சூழலில் நம்பிக்கையான காரியங்களாகத் தலித்தியமும் பெண்ணியமும் முன்னுக்கு வந்ததும், அதிலும் பெண்கவிஞர்கள் பெரும்பாய்ச்சலென தமிழ்க்கவிதையுலகில் பிரவேசித்ததும் என்று சொல்லலாம்.

ஆனால் இன்னமும் வானம்பாடிகளின் காலகட்டத்திற்கு அடுத்த நிலையில் உத்வேகமூட்டக்கூடிய, கலகக்குரலாக, புரட்சியின் கீதமாக, முற்போக்குக்கவிதைகள் மக்கள் மனதைக் கவ்விப்பிடிக்க வேண்டியதிருக்கிறது. ஏனெனில் மொழி தோன்றிய காலத்தில் மந்திரமாக உருவான கவிதை இன்னமும் மொழியின் உச்சபட்ச அர்த்தத்தை மனதில் செலுத்தி வாசகனை ஆட்கொண்டுவிடும் வல்லமை கொண்டது. ஒரு சொல் கவிதையில் சொல் அல்ல. அது பண்பாட்டின், வரலாற்றின், அரசியலின், பொருளாதாரத்தின், இயற்கையின், மாற்றத்தின் பிரதிபலிப்பு. ஆதிநனவிலிமனதில் மந்திரங்கள் ஏற்படுத்திய பாதிப்பை கவிதைகளும், பாடல்களும் ஏற்படுத்துகின்றன. எனவே தான் இன்னமும் கவிதையும் பாடலும் இசையும் வலிமையான கலைவடிவங்களாக இருக்கின்றன.

கவிதையை கலைகளின் அரசி என்றும் கவிதை ஒரு மோகனமான கனவு என்றும் புதுமைப்பித்தன் சொல்லுவார். உண்மைதான் மனிதமனதின் மாபெரும் கனவு கவிதை. மனிதகுலத்தின் மாபெரும் சிந்தனைப்பாய்ச்சல்களில் கவிதை மானசீகமாகத் தன் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறது. முன்னுணர்வின் தடங்களில் மனிதகுலத்தை வழிநடத்தியிருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் அறிந்தும் அறியாமலும் கிடக்கும் அத்தனையும் கவிதையின் பாடுபொருள்தான். கவிதை மொழியின் சாரத்தின் வழியே அநுபவத்தைக் கடத்துவதாலேயே கவிதையில் மொழி முக்கியத்துவமாகிறது. பழகிப்புழங்கிய சொல்லும்கூட கவிதையில் வேறொன்றாக மாறி நிற்கிறது. விவரிப்பதில்லை கவிதை. உணர்த்துவது கவிதை. எனவே இன்றைய புதுக்கவிதை செறிவும் சிக்கனமும் கொண்டதொரு வடிவம் கொள்கிறது. கவிதை உணர்த்தும் சாரத்தின் பின்னால் அதன் நோக்கமாகிய கருத்துருவமும் தொக்கிநிற்கும்.

கவிதைக்கு பலமுகங்கள் அல்லது பலகுரல்கள் உண்டு. ஒரு கவிஞனிடமே கூட பலமுகங்களோ, பலகுரல்களோ வெளிப்படலாம். கவிஞனின் தத்துவப்பார்வை, அழகியல்கோட்பாடு, கவிஞனின் ஆளுமை,அவன் உணர்த்தவிழையும் அநுபவத்தின்சாரத்தை அவன் உள்வாங்கியிருக்கும் பாங்கு, உள்வாங்கியிருக்கும் அநுபவத்தின்மீது அவனுக்கேயுரித்தான பார்வை, அவனுடைய மொழியாளுமை, தொழில்நேர்த்தி, கற்பனையாற்றல், எல்லாம் சேர்ந்து ஒரு கவிதையைச் சிறந்த கவிதையாக்குகிறது. இவையாவும் கருவில் உருவாவதில்லை. எழுத்துழைப்பு, அர்ப்பணிப்பு, கவிதையின் வரலாற்றுணர்வு, வாசிப்பு, இவற்றின் மூலம் உருவாகி வருவது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழில் புதுக்கவிதை 1934-ல் வெளியான ந.பிச்சமூர்த்தியின் காதல் எனும் கவிதையிலிருந்தே தொடங்கியது எனலாம். நாற்பதுகளும், ஐம்பதுகளும் அவ்வளவு ஒளிமிக்கதாக இல்லை. எழுத்து என்ற இலக்கியப்பத்திரிகையின் தோற்றத்தோடு புதுக்கவிதையும் மறுமலர்ச்சியடைந்தது. எழுபதுகளில் ஏற்பட்ட ஜனநாயகஎழுச்சிக்குப் பிறகு முதலில் தயங்கியிருந்த முற்போக்கு இயக்கமும் புதுக்கவிதையை கையில் எடுத்தது. எழுபதுகளின் வானம்பாடி கவிதை இயக்கம் முற்போக்கு கவிதை இயக்கத்தின் பொற்காலம் என்று சொல்லலாம். மக்கள் கவிதைகள் பெருக்கெடுத்த காலம் அது. எண்பதுகள், தொண்ணூறுகளில் புதுக்கவிதைத் தொகுதிகள் ஏராளமாக வெளிவந்தன. மற்ற எல்லாஇலக்கிய வகைமையைக் காட்டிலும் கவிதை நூல்களே ஏராளமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நவீனதாராளமயமாக்கலுக்குப் பிறகு முன்னெப்போதையும் விட வாழ்க்கை கடுமையான நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. தகவல்தொழில்நுட்பபுரட்சியால் தேவையோ தேவையில்லையோ மனிதர்கள் தகவல்களால் குப்பைக்கிடங்காக மாறிக்கொண்டிருக்கின்றனர். உலகத்தை ஒற்றைக்கலாச்சாரம் விழுங்கத்தயாராக வாயைப்பிளந்து கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளின் வழியேயும் பழமை தன் மோகத்தூண்டிலை வீசிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனையும் ஏகாதிபத்தியம் தன் கழுகுக்கண்களால் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது. தனிமனித உரிமைகள், எல்லாமுதலாளித்துவ அரசுகளாலும் மிதித்து நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற காலத்தில் பின்நவீனத்துவம் எல்லாத்தத்துவங்களும் காலாவதியாகி விட்டதாக அவநம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதையும் விட நுண்ணுணர்வுமிக்க கவிஞர்களுக்கு சமூகப்பொறுப்பு அதிகரித்துள்ளது. மனிதனையே பெரும்சந்தைவெளியாக மாற்றி அவன் ஆன்மாவை பொருளாக்கி அவனிடமே விற்றுக்கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தின் தந்திரங்களுக்கு எதிராக தங்கள் கவிதைகள் மூலம் பெரும்கருத்துப்போரை நடத்தவேண்டிய கவிஞர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? 

சமீபமாக எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்களை அல்லது கவிதைகளை மூன்று பெரும்பிரிவாகப் பிரிக்கலாம். இன்று வெளிவந்து கொண்டிருக்கும் கவிதைகள் எல்லாம் இன்றைய வாழ்வின் நெருக்கடியை, கசப்பை, ஏமாற்றத்தை, விரக்தியை, எதிர்காலம் சூன்யமாகத் தெரிவதை, நம்பிக்கையின்மையைச் சொல்பவைதான். முதலில் வாழ்வின் நெருக்கடியை, அரசியலை, தன் கூர்மையான மொழியில் சூசகமாக, பூடகமாக, விடுகதையாக, புதிராகச் சொல்லி வாசகனுக்கு நுழைந்து செல்ல எந்த ஒரு இடமுமின்றி இருள்பூசிய கவிதைகளை மிகச்சிறிய குழு மட்டும் வாசித்துப்பாராட்ட, எழுதுபவர்கள். அடுத்தது எளிய யதார்த்தநிகழ்வுகளிலிருந்து வாழ்க்கையின் விகசிப்பை, விசாரத்தை, அழகை, அன்பின்ருசியை, நெறிபடும் அவஸ்தையை, வெளிப்படுத்தும் கவிதைகளைச் சொல்லலாம். இந்தக் கவிதைகள் பெரும்பாலும் மத்தியதரவர்க்க அறவிழுமியங்களைச் சார்ந்து எழுதப்படுபவை. ஏகாதிபத்தியம், உலகமயமாக்கல், பின்நவீனத்துவம், இவற்றுக்கெதிராக எழுதப்படுகிற முற்போக்குக் கவிதைகள். பெரும்பாலும் இந்தக் கவிதைகள் கோட்பாட்டினை முன்மொழிவதாக இருப்பதனாலும், அரசியலை வெளிப்படையான, நேரிடையான, தட்டையான மொழியில் வெளிப்படுத்துவதாக இருப்பதாலும் ஒரு குழுசார்ந்த கவிதைகளாக மாறிவிடுகின்றன. அநுபவத்தின்சாரம் ஊறித்திளைத்து மொழியின் உச்சபட்ச அர்த்தசிகரத்தில் நின்று கேட்கிற, வாசிக்கிற அனைவரையும் ஈர்க்க வேண்டிய கவிதைகள் முற்போக்குக் கவிதைகளே. வானம்பாடி காலத்துக்குப் ( விமர்சனங்கள் இருக்கலாம்) முற்போக்குக்கவிதைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இன்னும் எழுதப்படாத ஓராயிரம் விடயங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன். முற்போக்குக்கவிஞர்களுக்காக.

இலக்கியத்தின் மற்ற துறைகளைப்போலவே கவிதையிலும் இத்தனை காலமும் அடக்கி, ஒடுக்கப்பட்டு சமூகவெளிக்கு புறந்தள்ளப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த தலித்தியமும், இதுநாள்வரை வீட்டின் மூலையில் இருந்த சமையலறையில் மட்டுமே யாருக்கும் கேட்காமல், யாராலும் கேட்கப்படாத முணுமுணுப்பாக, வலியாக, வேதனையாக, ஒலித்துக்கொண்டிருந்த பெண்களின் குரலான பெண்ணியமும், இனவெறி அரசால் காலந்தோறும் வஞ்சிக்கப்பட்டு கையில் ஆயுதம் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு போர்ச்சூழலில் பலபத்தாண்டுகளை மரணத்தின் கொடும்சிறகினக்கடியில் வாழவிதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நரகவாழ்வனுபவங்களைச் சொல்லும் புலம்பெயர் இலக்கியம், இவையே கடந்த பத்தாண்டுகளில் எழுச்சியுடன் முன்வந்துள்ள கவிதைபோக்குகள்.

DSC00081

Thursday 19 September 2013

படைப்பின் அரசியல்

 

உதயசங்கர்

images (9)  மனிதகுல வரலாற்றில் வேட்டைச் சமூகத்தின் வேட்டை வாழ்வனுபங்களைப் பகிர்ந்து கொள்ளும் மனவெழுச்சியே கலையின் ஆதி வித்தென கொள்ளலாம். குகைச்சுவர்களிலும் கற்பாறைகளிலும் விலங்குகளின் தோலிலும் துவங்கிய கலையின் பயணம் தன்னுணர்வுமிக்க உழைப்பினால் மொழியைத் தோற்றுவித்திருக்கிறது. இயற்கையின் உற்பாதங்களும் மரணமும் ஆவியுலக நம்பிக்கையை வளர்த்தெடுக்க தொன்மங்களும் மந்திரச்சடங்குகளும் தோன்றியிருக்கின்றன. தொன்மங்களைப்புனையும் சிந்தனை ஆதிமனிதர்களுக்கேயுரிய சிந்தனை முறையாகும்.அது புலனறிவு சார்ந்தும் அகவயமாகவும் நெகிழ்ச்சியானதுமாகும். இப்படி தொன்மம் கலைக்கான மூலப்பொருளாக மாறிவிட்டது. தொன்மங்கள் முழுவதும் இயற்கை சக்திகளை முழுக்க கற்பனையிலே கீழ்ப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் அவற்றை மாற்றியமைக்கின்றன. எனவே தொன்மங்களுக்கு மந்திர் ஆற்றல் இருப்பதாக நம்பப்பட்டது. தொன்மங்களிலிருந்து தோன்றிய மந்திரச்சடங்குகளிலிருந்தே ஆதியில் உழைப்பிலிருந்து பிரிந்து கலை தோன்றியிருக்கிறது. ஆவியுலகக்கோட்பாடே மந்திரச்சடங்குகளை உருவாக்கியிருக்கிறது. மந்திரச்சடங்குகளை நடத்தியவர்களே ஆதிக்கலைஞர்களாக இருந்திருக்கிறார்கள். வர்க்கமற்ற சமுதாயத்திலும் வர்க்கசமுதாயத்தின் தொடக்க காலத்திலும் ஒரு தீர்க்கதரிசியைப் போல கலைஞனும் மக்களால் போற்றி வணங்கப்படுபவனாக இருந்தான். அவனுடைய வாழ்த்துக்களுக்கும் சாபங்களுக்கும் தனி ஆற்றல் இருப்பதாகவும் அது ஆவியுலகத்தோடு அவனுக்கிருந்த ஊடாடல் காரணமாக கிடைத்தது என்று நம்பினார்கள்.

மனிதசமுதாயம் பழங்குடிஅமைப்பிலிருந்து அரசு உள்ள சமுதாயமாக மாற்றமடைந்த போது ஆதி மனித உணர்வு சமூக அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உட்பட்டது. இந்த அழுத்தங்கள் மனநோய், காக்காய்வலிப்பு, பிளவுண்ட ஆளுமை, ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்க பல்வேறு மனநோய்களாக வெளிப்பட்டன. உணர்வுபூர்வமான கட்டுப்பாட்டை இழக்கவைக்கும் இந்த மனநோய்கள் ஒரு கடவுளோ அல்லது ஆவியோ மனிதனின் உடலில் புகுந்து அவனை ஆட்கொண்டு விட்டது என்ற நம்பிக்கை தோன்ற வழிவகுத்தன. இப்படித்தான் மந்திரச்சடங்குகளை நடத்திய மனிதர்கள் தனித்துவமும், அசாதாரணமான வாழ்க்கைமுறையும் கொண்டவர்களாக மாறுகிறார்கள். ஆக கலையின் தோற்றுவாயில் உளவியல்நோய்களும் காரணமாக இருந்திருக்கின்றன. இந்த வித்தியாசமான மந்திரவாதிகள் தங்கள் வாழ்க்கையை ரகசியமாக, மறைஞானத்தன்மை கொண்டதாக, சடங்குகள்பூர்வமாக, வைத்துக் கொண்டனர்.

மந்திரச்சடங்குகளிலிருந்து கலை வளர்ந்தது. தன்னுணர்வுமிக்க கலைஞன் சடங்குவடிவத்தை கையிலெடுத்து அதில் புதியதொன்றை அறிமுகப்படுத்தி அதை மாற்றி உருவத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் இடையே ஒரு புதிய இணைவை, ஒற்றுமையை உருவாக்குகிறான். இதன் மூலம் கலை இயங்கியல்பூர்வமாக வளர்கிறது.

வேட்டைசமூகத்திலும், வர்க்கமற்ற சமூகத்திலும், வர்க்கசமூகத்தின் ஆரம்பகட்டத்திலும் கலை, தொடர்பு ஊடகமாகவும், இயற்கையைக்கீழ்ப்படுத்தும் தொன்மச்சடங்குகளாகவும், ஆவிகளைக் கட்டுப்படுத்தும் மருத்துவமாகவும் சமூகத்தோடு இரண்டறக்கலந்தே வளர்ந்து வந்திருக்கிறது. என்றால் ஆதியில் கலை மக்கள் கலையாகவே இருந்திருக்கிறது.

அரசு என்ற அமைப்பு உருவானபிறகு, கலை உழைப்பிலிருந்து முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டு, பொழுதுபோக்கு சாதனமாகவும், அரசின் பிரச்சார பீரங்கியாகவும், அந்தந்த காலகட்ட அரசின் சட்டங்கள், சநாதன மதங்களின் விதிகளை, சடங்குகளை, சாதிய அமைப்பை, வாழ்க்கை மதிப்பீடுகளை மக்கள் மனதில் நிலைநிறுத்தவும், மக்கள் மனங்களை வென்றெடுக்கவும், கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கலைப்படைப்புகளை உருவாக்கிய படைப்பாளிகள் அந்தந்தக் காலகட்டத்தினை தங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கவே செய்திருக்கிறார்கள். எனவே என்றுமே படைப்புகள் அந்தந்த காலகட்ட அரசின், அரசியலை மக்கள் வாழ்வைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

எந்தவொரு படைப்பின் அடிப்படைஆதாரசுருதி வெளிப்பாடு ( expression ) தான். இது தான் படைப்பரசியலின் அரிச்சுவடி. தன்னை, தன்வாழ்வனுபவங்களை, தான் வாழும் சமூகத்தை, மானுடவிழுமியங்களை, வெளிப்படுத்துகிறது படைப்பு.

அரசு என்ற அமைப்பு உருவானதிலிருந்து படைப்பு அரசதிகாரத்தினை முன்மொழிவதாக மாற்றமடைந்தது தான் படைப்பரசியலின் வளர்ச்சி. எனவே படைப்பின் அரசியல் என்பது அதிகாரத்தின் அரசியலை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ மக்கள் மனதில் ஏற்றி அவர்கள் ஒப்புதலைப் பெறுவது தான். அரசு என்ற அமைப்பு இருக்கும்வரை கலையின் தன்னிச்சையான வளர்ச்சியோ மலர்ச்சியோ சாத்தியமில்லை.

நிலப்பிரபுத்துவகாலத்தில் அரசவையில் அரசர்களுக்காக மட்டுமே படைக்கப்பட்ட கலை பூர்ஷ்வா சமூகம் உருவானபிறகு, முதலாளித்துவசந்தை உருவான பிறகு கலையையும் சந்தைவிதிகளுக்கு உட்படுத்தவும், நிலப்பிரபுத்துவத்தளைகளிலிருந்து கலையை விடுவிக்கவும் உருவாக்கிய கோட்பாடு தான் கலை கலைக்காக என்ற கோட்பாடு.

முதலாளித்துவம் தன் ஆயிரக்கணக்கான கரங்களால் கலையை துரியோதனாலிங்கனம் செய்து கொண்டேயிருக்கிறது. கலையின் அரசியலும் வேறு வேறு ரூபங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. சமத்துவமற்ற, வர்க்கபேத சமூகத்தில் கலையும் வர்க்கபேதமுடனே இருக்கும். அறவிழுமியங்கள் எல்லாம் அரசு தன் நலனுக்காக சமூகத்தின்மீது ஏற்றி வைத்துள்ள வாழ்க்கை மதிப்பீடுகள். எல்லாஅறவிழுமியங்களுக்கும் பின்னால் அரசியலதிகாரத்தின் முகம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இருப்பதை அவதானிக்கமுடியும். அதே போல எல்லாபடைப்புகளிலும் இந்த அறவிழுமியங்களை ஏற்று முன்மொழிவதையும் நாம் கட்டுடைத்துப்பார்க்கலாம். இதில் முற்போக்கு படைப்புகளும் பலியாகும் அபாயத்தைக் காணலாம். ஏனெனில் எல்லோருக்கும் பொதுவான அறம் என்று வர்க்கபேத சமூகத்தில் இருக்கமுடியாது. இன்றைய படைப்புகளின் அரசியல் என்பதை வர்க்கசார்பான அறவிழுமியங்களை வர்க்கபேதமில்லாமல் எல்லோரையும் ஏற்றுக் கொள்ளவைக்கிற ஆளும்வர்க்கத்தின் தந்திரங்கள் இருப்பதை நாம் உணரலாம்.

படைப்பு அரசியலின் இன்னொரு இரு பிளவாக படைப்பை ஜனநாயகப்படுத்துதலும் அதற்கெதிராக சர்வாதிகாரப்படுத்துதலும் என்று கூறலாம். படைப்பில் ஜனநாயகம் என்பது ஒரு படைப்பு யாருக்காக எழுதப்படுகிறது. யாரைப்பற்றி எழுதப்படுகிறது. எதற்காக எழுதப்படுகிறது எந்த மொழியில் எழுதப்படுகிறது, என்ற போதத்துடன் படைக்கப்படும் படைப்பில் கலை இன்பமும் நோக்கமும் ஜனநாயகப்படுத்தப்பட்டு எல்லோரையும் சென்றடையும் உத்வேகம் கொண்டிருக்கும். படைப்பு படைக்கப்படும்போதும், படைக்கப்பட்டபிறகும் வாசகனை சென்று சேர்வதில் ஆர்வமாயிருக்கும். இந்த வகையான படைப்புகளில் படைப்பாளியின் தான் என்னும் அகம் கரைந்து சமூக அகமாக மாறிவிடுகிறது. எனவே படைப்பு இயங்கியல்ரீதியாக வளர்ந்து கொண்டேயிருக்கும்.

இதற்கு மாறாக படைப்பில் தான் என்னும் அகங்காரம் சர்வாதிகாரத்துடன் இயங்கும்போது அது வாசகனை மறுதலிக்கிறது. தன்னைத் தவிர மற்றமை என்று ஒன்று இருப்பதை வெறுக்கிறது. தன்படைப்புமொழியை இறுக்குகிறது. குழூஉக்குறியைப் போல படைப்பதிலும் யாராலும் வாசிக்கப்படவோ, புரிந்துகொள்ளப்படவோ இயலவில்லையெனில் மகிழ்ச்சியடைவது, ஆதிகால மந்திரவாதிகள் போல வெகுமக்களிடமிருந்து தங்கள் படைப்புகளைத் தூரவிலக்கி வைப்பது என்று படைப்பின் இயங்கியலை மறுத்து படைப்பின் ஜனநாயகத்தை தன் சர்வாதிகாரத்தினால் நசுக்க நினைக்கிறது. அனுபூதி, தியானம், வேள்வி, என்றும், கலைக்கு நோக்கம் தேவையில்லை, கலைக்கு எந்த லட்சியமும் கிடையாதென்றோ தன்னைச் சிம்மாசனத்தில் நிலை நிறுத்திக் கொள்ளப் பார்க்கிறது.

முதலாளித்துவத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் படைப்பரசியல் தன் முகங்களை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. தன் தேவைகளுக்கேற்ப படைப்புகளை உருவாக்க ஏராளமான தத்துவக் கோட்பாடுகளைப் படைக்கிறது. அது சர்ரியலிசமாக இருக்கலாம். இருத்தலியமாக இருக்கலாம். ஸ்டரட்சுரலிசமாக இருக்கலாம். நவீனத்துவமாக இருக்கலாம். பின்நவீனத்துவமாக இருக்கலாம். அடையாள அரசியலாக இருக்கலாம். எல்லாக்கோட்பாடுகளிலும் வரைமுறையற்ற முதலாளித்துவத்தின் கொள்ளையினாலும் சூதாட்டத்தினாலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருப்பவர்களை மடைமாற்றவும், தனிமைப்படுத்தவௌம், விரக்தியடையவைக்கவும், இறந்துபோன கடவுளுக்குப் பதிலாக புதிய கடவுள்களை உற்பத்திசெய்யவும், சநாதன, பழைய, இற்றுப்போன, காலாவதியான மரபுகளுக்குள் சரணடையவும் செய்கிற படைப்புகளைப் படைக்கச்செய்கிறது. ஏழுதலை நாகமாக மக்களைத் தழுவி பிளவுண்ட தன் நாவினால் படைப்பாளியையும், வாசகனையும் தீண்டித் தீண்டி மயக்குகிறது.

இன்றைய படைப்புகள் அனைத்தையும் இந்த அடிப்படைப்பார்வையுடன் அணுகிப்பார்க்க வேண்டும்.

DSC00105

Saturday 14 September 2013

எஸ்.ராமகிருஷ்ணனின் நான்கு குழந்தைகள் நூல்கள் வெளியீடு

கடந்த 6.9.13 அன்று மாலை மதுரை நார்த் கேட் வே  ஹோட்டல் அரங்கத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நான்கு குழந்தைகள் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. சிரிக்கும் வகுப்பறை, அக்கடா, ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட், whirling wind, ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டது. அக்கடா என்ற நூலைப் பற்றி நான் பேசினேன். விழாவில் எஸ்.ஏ.பெருமாள், மம்முது, துளசிதாசன், சா.தேவதாஸ், ஷாஜகான், ஜெயகரன், பவா செல்லத்துரை, கே.வி.ஷைலஜா, எஸ்.கே.பி.கருணா, மருத்துவர் ச.வெங்கடாசலம், ஓவியர் செல்வம், கலந்து கொண்டனர். நூல்களை குழந்தைகள் பெற்றுக் கொண்டது சிறப்பு. நூல்களை வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ளது.     DSC00167

 

அருந்தலாய் இருக்கும் குழந்தைகள் இலக்கியத்தில் இந்த நான்கு நூல்களும் காத்திரமான வரவு.  வரவேற்போம்.

Thursday 12 September 2013

எல்லோருக்கும் விடுதலை

 

சாதத் ஹஸன் மண்டோ

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்-உதயசங்கர்

manto

சுதந்திரம் பெற்ற புதிய தேசத்தின் ஒவ்வொரு பெருநகரத்தில், சிறுநகரத்திலும், கிராமத்திலும், செய்தி முன்னால் சென்றது. யாராவது தெருவில் பிச்சையெடுப்பதைப் பார்த்தால் அவர்கள் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். உடனே கைதுகள் தொடங்கியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் பிச்சையெனும் பெருஞ்சாபம் ஒருவழியாக ஒழிந்துவிடும்.

அலைந்து திரிந்து கொண்டிருந்த பாணரான கபீர் மட்டும் துக்கத்தினால் பீடிக்கப்பட்டான்.

“ என்ன ஆச்சு உனக்கு நெசவாளியே..” - அதுதான் அவனுடைய ஜாதி – என்று குடிமக்கள் கேட்டனர்.

” நான் ஏன் வருத்தமாயிருக்கேன்னா துணி இரண்டு இழைகளால் நெய்யப்படும்… ஒன்று குறுக்குவசமாகவும், மற்றது செங்குத்தாகவும் ஒடும்…..பிச்சைக்காரர்களை கைது செய்வதென்பது குறுக்குவசமென்றால் பசித்தவர்களுக்கு உணவளிப்பதென்பது செங்குத்தானது.. எப்படி நீங்கள் இந்த துணியை நெய்யப்போகிறீர்கள்? “

********** ********* *********** ************** *********** **********

இந்தியாவிலிருந்து வந்த ஒரு அகதிக்கு - அவர் தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞர் –கைவிடப்பட்ட இருநூறு கைத்தறிகளைச் சொந்தமாக கொடுத்தனர். அந்த வழியே போன கபீர் அழத்தொடங்கினான்.

“ உனக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டியதை எனக்குக் கொடுத்ததற்காக அழுதுகிட்டிருக்கியா? “ என்று அந்த வழக்கறிஞர் கேட்டார்.

“ இல்லை…நான் ஏன் அழுதேன்னா.. இனிமேல் இந்தத்தறிகள் துணி நெய்யப்போவதில்லைன்னு தெரிஞ்சதால.. ஏன்னா நீங்க இந்த நூலையெல்லாம் நல்ல லாபத்துக்கு வித்துருவீங்க… உங்களுக்கு தறியின் கிளிக்டி-கிளாக் சத்தத்தைக் கேட்கப் பொறுமையிருக்காது… ஆனால் அந்த சத்தம்தான் நெசவாளி உயிரோடு வாழ்வதற்கான ஒரே காரணம்….”

**********************************************************************************************************************

தெருவில் ஒரு மனிதன் புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்து காகிதப்பைகளாகச் செய்து கொண்டிருந்தான்.

கபீர் அதில் ஒன்றை எடுத்தான். அதில் அச்சிடப்பட்டிருந்ததைப் படிக்க ஆரம்பித்தவுடன் அவனுடைய கண்கள் கண்ணீர்க்குளமாயின.

திகைப்படைந்த பை செய்பவர் “ என்ன பிரச்னை உனக்கு? “ என்று கேட்டார்.

” நீ பைகளை உருவாக்கும் காகிதங்களில் அச்சிடப்பட்டிருப்பது அந்தகரான இந்து ஞானி பகத் சூர்தாஸின் ஆன்மீகக்கவிதைகள்…தெரியுமா? “ என்று கபீர் பதில் சொன்னான்.

பை செய்பவருக்கு இந்தி தெரியாது.ஆனால் அவனுடைய தாய்மொழியான பஞ்சாபியில் சூர்தாஸ் என்றால் அந்தகபக்தர் என்று அர்த்தமில்லை.. ஆனால் பன்றி என்று அர்த்தம்.

அவன்,” ஒரு பன்றி எப்படி புனிதராக முடியும்..? ” என்று கேட்டான்.

******************************************************************************************************

நகரத்திலுள்ள ஒரு அற்புதமான கட்டிடத்தில் செல்வத்தின்இந்துக்கடவுளான லட்சுமியின் உருவச்சிலையை வைத்து அலங்கரித்திருந்தார்கள். ஆனால் எல்லை தாண்டி வந்த அகதிகளான புதிய குடியிருப்பாளர்கள் அதை அலங்கோலமான சாக்குத்துணியினால் மூடியிருந்தார்கள். அதைப்பார்த்த கபீர் அழத் தொடங்கினான்.

” எங்கள் மதத்தில் உருவவழிபாட்டுக்கு இடமில்லை…” என்று அவர்கள் அவனிடம் சொன்னார்கள்.

கபீர், “ அது அழகை அசிங்கப்படுத்தவா சொல்லியது..?” என்று கேட்டான்.

**********************************************************************************************

ஒரு படைத்தளபதி தன்னுடைய படைவீரர்களிடம், “ நம்மிடம் உணவு குறைவாக உள்ளது…ஏனென்றால் நம்முடைய பயிர்களை நாசம் செய்துவிட்டார்கள். ஆனால் அச்சப்படத்தேவையில்லை.. என்னுடைய வீரர்கள் வெறும்வயிற்றோடு எதிரிகளோடு சண்டை போடுவார்கள்…

வரவிருக்கும் வெற்றியின் கோஷங்கள் முழங்கின.

கபீர் கேட்டான்,” என்னுடைய தீரமிக்க தளபதியே.. யார் பசியுடன் போரிடுவார்கள்

******************************************************************************************

 

“ விசுவாசமுள்ள அன்புச்சகோதரர்களே! தாடி வளருங்கள்… உங்களுடைய பாவமீசையை மழித்து விடுங்கள்…..கட்டளையிட்டபடி உங்கள் கால்சராயை கணுக்காலுக்கு ஒரு அங்குலத்துக்கு மேலே உடுத்துங்கள்… விசுவாசமுள்ள அன்புச்சகோதரிகளே! உங்கள் முகத்தில் பூச்சு பூசாதீர்கள்… உங்களைத் திரையிட்டுக் கொள்ளுங்கள்.. இது தெய்வீகக்கட்டளை..”

கபீரின் கண்களில் கண்ணீர் வந்தது.

” உங்களுக்கு சகோதரரோ சகோதரியோ இல்லை. ….உங்கள் தாடி கருப்பாக இல்லை.. கலரூட்டப்பட்டது… நீங்கள் உங்களுடைய வெள்ளை முடியை காட்ட விரும்பவில்லையா? “ என்று கபீர் கேட்டான்.

**************************************************************************************************

 

ஒரு அறிவார்ந்த விவாதம் போய்க்கொண்டிருந்தது.

“ கலை கலைக்காக “

” கலை வாழ்க்கைக்காக..”

“ நீ நரகத்துக்குப் போக!.”

“ உன்னுடைய ஸ்டாலின் நரகத்துக்குப் போக! “

“ வாயை மூடு… இன்று கலை இன்னொரு விதமான பிரச்சாரம்..”

“ உலகத்திலுள்ள பிற்போக்குவாதிகள்..எல்லோரும் நரகத்துக்குப் போக! அதோடு அவர்களுடைய ஃப்ளாபர்ட்டுகளும், பாதலேர்களூம்…”

கபீர் அழ ஆரம்பித்தான்.

அவர்களில் ஒரு அறிவுஜீவி,” அவன் பூர்ஷ்வா துயரநாடகத்தை நடிக்கிறான்..” என்று சொன்னார்.

“ இல்லை.. நான் அழுவது ஏனென்றால் கலை எதற்காக என்று நீங்கள் புரிந்து கொள்ளவேண்டுமே என்பதற்காக…” என்று கபீர் சொன்னான்.

“ அவன் ஒரு பாட்டாளிவர்க்க ஜோக்கர்..”

“ இல்லை…அவன் ஒரு பூர்ஷ்வாக்கோமாளி..”.

*****************************************************************************************

 

ஒரு புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டது. முப்பது நாட்களுக்குள் அந்த நகரத்திலுள்ள பாலியல்தொழிலாளிகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. கவலையால் பாழடைந்த அவர்களுடைய முகத்தைப் பார்த்த கபீர் அழுதான்.

ஒரு மதத்தலைவர் கபீரிடம் கேட்டான்,” நீ ஏன் அழுகிறாய் நல்லவனே? “

கபீர்,” யார் அவர்களுக்கு மாப்பிள்ளைகளைக் கண்டுபிடிப்பார்கள்? “ என்று கேட்டான்.

. ஏதோ அவர் கேள்விப்பட்டதிலேயிலே இதுதான் மிகவும் வேடிக்கையான விஷயம் போல அந்த மதத்தலைவர் சிரிக்க ஆரம்பித்தார்

**********************************************************************************************************

 

ஒரு அரசியல்வாதி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். “ என் அருமைச் சகோதரர்களே! நம்முடைய தலையாயப் பிரச்னை எல்லைக்கு அப்பால் கடத்திச் செல்லப்பட்ட நம் பெண்களை எப்படி மீட்பது என்பது தான். நாம் எதுவும் செய்யவில்லையென்றால் அவர்கள் பாலியல்தொழிலாளிகள் வீட்டிற்கு அனுப்பப் படுவார்கள்… இந்த அழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்றவேஅண்டும்..அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்துப் போங்கள்…உங்கள் குடும்பத்தில் அடுத்ததாக யாருக்கேனும் திருமணஏற்பாடு நடக்க இருந்தால் இந்தப் பாவப்பட்ட ஜீவன்களை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருங்கள்…” கபீர் இதைக் கேட்டதும் தேற்றமுடியாத அளவுக்கு அழுதான்.

அதைப்பார்த்த தலைவர், கூட்டத்தைப்பார்த்து,” பாருங்கள் இந்த நல்லமனிதனை..என்னுடைய வேண்டுகோள் அவரை எப்படி ஆழமாகப் பாதித்திருக்கிறது.”

“ இல்ல… உங்கள் கோரிக்கை என்னைப் பாதிக்கவில்லை.. நான் ஏன் அழுதேன்னா எனக்குத் தெரியும்.. நீங்க இன்னும் கலியாணம் முடிக்காமல் இருப்பது ஏன்னா இன்னும் பணக்காரப்பொண்ணு கிடைக்காதது தான்..” என்று கபீர் சொன்னான்.

“ தூக்கி எறியுங்கள்..இந்தப்பைத்தியத்தை….” என்று கூட்டம் சீறியது.

**********************************************************************************************************

 

தேசத்தந்தை முகமது அலி ஜின்னா மறைந்தார். தேசமே அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தது.ஒவ்வொருவரும் கருப்பு பட்டைகளை அணிந்திருந்தனர்.அமைதியாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த கபீரின் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

“ எவ்வளவு துணி இந்தக் கருப்புப்பட்டைகளுக்காக செலவாயிருக்கும்.. அதை வைத்து எத்தனையோ நிர்வாணிகளுக்குத் துணியும்.. பசித்தவர்களுக்கு உணவும் கொடுத்திருக்கலாம்..” அவன் அஞ்சலிசெலுத்துபவர்களிடம் சொன்னான்.

“ நீ ஒரு கம்யூனிஸ்ட்..” என்று அவர்கள் சொன்னார்கள்.

“ நீ ஒரு ஐந்தாம்படை பத்திரிகையாளர்…”

“ நீ ஒரு பாகிஸ்தான் துரோகி..”

அன்று முதல்முறையாக கபீர் சிரித்தான். “ ஆனால் நண்பர்களே! நான் கருப்போ, சிவப்போ, பச்சையோ… எந்த பட்டையும் அணியவில்

Wednesday 11 September 2013

மற்றொரு நூல் வெளியீடு

மகத்தான தியாகங்களால் ஆனது சாதாரணர்களின் வாழ்க்கை. அனுதினமும் தியாகம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். தாங்கள் ஒரு தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணராமலே. ஒரு புறம் சிலரிடம் குவியும் செல்வமும் மறுபுறம் அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத அவலமும் கொண்ட இந்த அசமத்துவ சமூகத்தை இந்தச் சாதாரண மக்களே இயக்குகிறார்கள். சமூகத்தின் சமத்துவத்திற்காகவும் அவர்களே போராடுகிறார்கள். அவர்கள் புகழுக்காக அல்ல. அவர்களுடைய வாழ்வின் நெருக்கடி அவர்களைப் போராடத் தூண்டுகிறது. அந்தப் போராட்டம் என்பது அவர்களுக்காக மட்டுமில்லாமல் மானுடம் முழுமைக்குமான விடிவுக்காக போராட்டமாக உருமாறுகிறதுDSC00192 அவர்கள் தான் இந்தப் பூமியில் கதாநாயகர்கள் வரலாற்றை இயக்குபவர்கள். வரலாற்றை உருவாக்குபவர்கள். நான் அவர்களின் பக்கம் நிற்பதையே விரும்புகிறேன்.

- முன்னுரையிலிருந்து…

நினைவு என்னும் நீள்நதி

( இன்னும் சில நண்பர்கள், எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் )

விலை – ரூ. 120/  

வெளியீடு- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சென்னை.DSC00134