Sunday, 10 May 2026

மேற்கத்திய சிறார் இலக்கியமும் இந்தியச் சிறார் இலக்கியமும்

 

மேற்கத்திய சிறார் இலக்கியமும் இந்தியச் சிறார் இலக்கியமும்

 

உதயசங்கர்



 

  ஐரோப்பிய நாடுகளில் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நிலவுடமைச் சமூகம் தனக்குள்ளேயே முற்றிக் கொண்டிருந்த முரண்பாடுகளால் தொழிற்புரட்சி நிகழ்ந்த து. தொடர்ந்து அறிவொளிப்புரட்சி, அறிவியல் புரட்சி நடந்தன. நிலவுடமைச் சமூகத்தின் பெரும்பாலான தளைகள் அறுத்தெறியப்பட்டன். குறிப்பாக மதங்களின் பழைய, பிற்போக்கான பிடியிலிருந்து அறிவுத்துறைகளனைத்தும் கலை, அறிவியல், மருத்துவம், உள்ளிட்ட அனைத்தும் மதங்களிலிலிருந்தும் ஆன்மீகத்திலிருந்தும் தங்களைத் துண்டித்துக் கொண்டு சுயேச்சையாக வளர்ந்தன.

 பேகன், ஹம்போல்ட், நியூட்டன், டார்வின், இம்மானுவல் காண்ட், மார்க்ஸ், போன்றவர்களின் பங்களிப்பு உலக சிந்தனையையும் உலக இயக்கத்தையும் மாற்றியது. உலகத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சின. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் போன்ற புதிய கோட்பாடுகள் எழுந்தபோது மதத்தின் ஒற்றைச் சர்வாதிகாரம் தகர்ந்து விட்டது. அதனால் அங்கே புதிய சிந்தனைகள், புதிய கலை இலக்கியப்படைப்புகள் தோன்றின.

முதலாளித்துவமும் அதன் அகோரப்பசிக்காக உலகநாடுகளை அடிமைப்படுத்த, சுரண்டலைப் பரவலாக்க போர்களை நட த்தினார்கள். நாடுகளை அடிமைப்படுத்தினார்கள். இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளில் சர்வாதிகாரிகள் தோன்றினார்கள்.

அதுவரை நிலவுடைமைச் சமூகத்தில் கிட்ட த்தட்ட அடிமைகளைப் போலிருந்த மக்கள் முதலாளித்துவ அமைப்பில் லேசாக மூச்சு விட்டனர். போலியானதாக இருந்தாலும் ஜனநாயகத்தின் சிலபல நன்மைகளை அனுபவத்தார்கள். புதிய கோட்பாடுகள், புதிய இலக்கியம், உருவாயின. முதலாளித்துவ சந்தைமுறையினால் அவை பரவலாகவும் செய்தன. சிறார் இலக்கியத்திலும் அதன் பாதிப்புகள் இருந்தன.

இங்கிலாந்து நிலவுடமைச் சமூகத்தின் அரச அதிகாரத்தை விமரிசனம் செய்து அற்புத உலகில் ஆலீஸை லூயி கரோல் எழுதினார். ஜெர்மனியின் பாசிச த்துக்கெதிராக களத்தில் உளவு விமானியாகவும் இலக்கியத்தில் குட்டி இளவரசனை எழுதியும் அந்து வான் எக்சுபரி பங்களிப்பு செய்தார்.

 ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் எழுதிய டாம் மாமாவின் குடிசை என்ற புகபெற்ற நாவல் ஒரு உள்நாட்டுப்போரையே உருவாக்கியது. அமெரிக்காவில் நிலவி வந்த நீக்ரோ அடிமை முறைக்கு எதிராக வெளிவந்த சிறார் நாவல். டாம் மாமாவின் வாழ்க்கைப் போராட்ட மாக விளக்கப்படும் நாவல் கொடூரமான அடிமைமுறை வாழ்க்கையை உலகத்துக்கே சொன்ன நாவலென்றும் சொல்லலாம். அடிமைகளைப் உயிரற்ற பொருட்களைப் போலப் பயன்படுத்தியதும் அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு எந்த மதிப்பளிக்காத குரூரத்தையும் பேசிய நாவல். பைபிளுக்கு அடுத்தபடியாக விற்பனையான நாவலென்ற புகழையும் பெற்றிருக்கிறது.

மார்க் ட்வைனின் தொடர் நாவல்களான டாம் சாயரின் சாகசங்களும், ஹக்கிள் பெரிஃபின்னின் சாகசங்களும் அமெரிக்க க் குழந்தை இலக்கியத்தின் போக் கையே மாற்றியதாகச் சொல்லப்படுகிறது.

 த்தகைய மாற்றங்கள் மேற்கத்திய சிறார் இலக்கியத்தில் மட்டுமல்ல. பெரியவர்கள் இலக்கியத்திலும் நிகழ்ந்தன. அதாவது மதங்களின் கொடுங்கரத்திலிருந்து சிறார் இலக்கியம் உள்ளிட்ட அனைத்து அறிவுத்துறைகளும் விடுதலையடைந்தன.

ஆனால் அதேநேரம் இந்தியா எப்படி இருந்தது?


 
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் மட்டுமே காலாகாலத்துக்கும் இருந்த தாகவும் அவை காற்றிலேயே பிறந்து வந்த தாகவும் அதாவது கடவுள் நேரே அருளியதாகவும் கட்டுக்கதைகள் சொல்லப்பட்டன. அதனால் அந்த வேதங்களைக் குறிப்பிட்ட சாதியினரைத் தவிர வேறு யாரும் படிக்க க் கூடாதென்று சட்டமும் தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன. இப்போதும் வேதகாலம் இந்தியாவின் பொற்காலம் என்ற கட்டுக்கதைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. குறிப்பாக வேதகாலத்துக்கு முன்பாகவும் சமகாலத்திலும் இந்தியாவில் வேறு மதங்களோ, கோட்பாடுகளோ இருந்ததாக எங்கும் சொல்லப்படவில்லை. ( ஆங்கிலேயர்கள் தான் பௌத்தம் சமணம் சாங்கீயம் போன்ற மதங்கள் இருந்த தையும் அசோகர் போன்ற அரசர்கள் வாழ்ந்த தையும் கண்டுபிடித்தனர் )

சரி அந்த நான்கு வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருந்தன?

 நான்கு வேதங்களிலும் சடங்குகள், யாகங்கள், வேள்விகள் குறித்தான பாடல்களே நிறைந்திருக்கின்றன. எந்தத் தத்துவமோ, கருத்தியலோ, வாழ்க்கை நெறிமுறைகளோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவை ஒரு இனக்குழுவின் சடங்குப்பாடல்கள். அனைவருக்கும் பொதுவானதில்லை.

இந்தச் சடங்குகள் மக்களின் வாழ்வாதாரங்களைச் சுரண்டவும் அழிக்கவும் முற்பட்டபோது புதிய சமயங்கள் தோன்றின.

வேதகாலத்திலேயே  மக்களின் தேவையின் அடிப்படையில் உருவான பௌத்தமும் சமணமும்  சமூக வாழ்க்கை நெறிமுறைகளை, வாழ்க்கை குறித்த, தத்துவச் சிந்தனைகளை உருவாக்கியிருந்தன.  மக்களும் அரசுகளும் பௌத்த சமண சமயங்களின் பால் ஆர்வங்கொண்டனர். வேத சமயம் மக்களிடம் செல்வாக்கிழந்தபோது வேதங்களுக்குத் தத்துவச்சாயம் பூசவேண்டிய தேவை உருவானது. வேதங்களின் விளக்கமென்ற போர்வையில் உபநிடதங்கள் எழுதப்பட்டன.

 உபநிடதங்களில் சொல்லப்பட்ட கருத்துகளெல்லாம் பௌத்த சமண சாங்கீய சமயங்களின் தத்துவங்களிலிருந்து உருவியது, உல்டா செய்தவை. பிரம்மம், அத்வைதம் என்று உருட்டுகின்றவை. இன்னொன்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 வேதங்களோ, பௌத்தமோ, சமணமோ, உபநிடதமோ ஆரம்பகால மனித அறிவு வளர்ச்சியின் படிநிலைகளில் அந்தக் கால நிலவுடமைச் சமூகத்தின் தேவைகளுக்காகவும் சுரண்டலை நிலைநிறுத்தவும்  உருவானவை.

இப்படியே இந்தியா பழமைவாதச் சிந்தனைகளால், பிற்போக்கான கருத்துகளால், பெண்ணடிமைக்கொள்கைகளால், சாதி வேறுபாடுகளால் நிலவுடமை ஆட்சியின்  பொருளாதாரச்சுரண்டல்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பீடிக்கப்பட்டிருந்த காலத்தில் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நுழைகிறார்கள். அவர்கள் வரும்போது இங்கிருந்த பழைமைவாதச் சமூகத்துடன் சமரசம் செய்து கொண்டார்கள். அடிப்படையான சமூக மாற்றங்களைக் கொண்டு வராமல் அவர்கள் நிர்வாகம் செய்வதற்கும் ஆள்வதற்கும் சுரண்டுவதற்கும் தேவையான மாற்றங்களை மட்டும் கொண்டு வந்தார்கள்.

இந்திய விடுதலைப்போராட்டத்தின் தொடக்கப்புள்ளியே வர்ணாசிரம தர்மத்துக்கு சனாதனத்துக்கு எதிராக ஆங்கிலேயர்கள் செய்த சிறிய சீர்திருத்தங்களை எதிர்த்து உருவானது தான். அனைவருக்கும் கல்வி, பெண்கள் கல்வி, சதிக்கு எதிரான தடைச்சட்டம், விதவை மறுமணச்சட்டம், ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த இந்தச் சீர்திருத்தங்களைத் தான் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே இந்தியாவின் அறிவுத்துறைகள் மதங்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தன. இங்கேயிருந்த உயர்சாதி நிலவுடமைச் சமூகமும் அனைத்து மதங்களும் அறிவுத்துறைகளின் சுயேச்சையான வளர்ச்சியை இன்றுவரை விரும்புவதில்லை.

எந்த மாற்றமும் அவ்வளவு சுலபமாக நடந்து விடாது. ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்பதைப் போன்ற நிலைமை தான் இருக்கும். ஏனெனில் இங்கே நிலவுடமைச் சமூகத்திலிருந்து முதலாளித்துவசமூகம் இயல்பாக வெடித்துக் கிளம்பவில்லை. எந்தவொரு மாற்றமும் தானாக நிகழ்வதற்கும் மாற்றத்தைத் திணிப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. அதனால் தான் இங்கே புதிதாகத் தோன்றிய முதலாளித்துவம் பழைய நிலவுடமைச் சமூகத்துடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் அறிவியல் கண்டுபிடிப்பான ராக்கெட் ஏவுவதற்கு முன்னால் பூஜை செய்கிற அவலத்திலிருக்கிறோம்.

 கலை இலக்கியமும் அதற்கு விதிவிலக்கல்ல. அதில் அதிகம் பாதிப்புக்குள்ளாவது சிறார் இலக்கியம் தான். குழந்தைகளை அறுதப்பழசான மதங்களின் பண்பாட்டு விழுமியங்களின் மூலம் மட்டுமே பண்படுத்த முடியுமென்ற சிந்தனை சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிவாகியிருக்கிறது.

அதனால் தான்  இன்னமும் உபநிடதக்கதைகள்,  வேதகாலக்கதைகள், என்றெல்லாம் புத்தகங்கள் குழந்தை இலக்கியமென்று வருவதைப் பார்க்கமுடிகிறது.

நாம். ஜேம்ஸ்வெப் கேமிரா நம்முடைய பால்வெளி மண்டலத்தையே படம் பிடித்துக் காட்டுகிற அறிவியல் காலத்தில் வாழ்கிறோம். இன்னமும் அறுதப்பழசான சமூகமதிப்பீடுகளையே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொண்டிருப்பது உவப்பானதல்ல.

சிறார் இலக்கிய விடுதலையடைய வெகுதூரம் செல்ல வேண்டும். இதை சிறார்களுக்காக எழுதுகிற எழுத்தாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில்

. எல்லாம் மாறும். மாற வேண்டும். நிலையானது என்றோ, நித்தியமானது என்றோ எதுவும் கிடையாது.

நன்றி - புக் டே

 

 

Friday, 8 May 2026

மரணமும், விடுதலையும்…

 

மரணமும், விடுதலையும்

 ..மணிமாறன்.



முன்வரும் எல்லா இலக்கிய வகைமைகளிலும் தன்னுடைய மொழியால் பரிட்சித்துப் பார்த்திடும் வழக்கும் கொண்டவர் எழுத்தாளர் உதயசங்கர். கவிதை, சிறுகதை, உரைநடை, இளையோர் இலக்கியம்,சிறார் படைப்புகள் என துறைகள் யாவற்றிலும் வெகுமதியான பங்களிப்பு அவருடையது. தமிழில் தற்கால இலக்கியத்தில் வாசக கவனம் பெற்றுவரும் இலக்கிய வகைமை  குறுங்கதைகள். ஏற்கனவே அசைவற்று மிதக்கும் நிழல் எனும் குறுங்கதைகள் தொகுப்பினை எழுதியிருக்கிறார்.  என்றுமுள இசை அவருடைய இரண்டாவது குறுங்கதைத் தொகுப்பு..

 

குறுங்கதை என்பதால் அது கால்பக்கத்திற்குள் துவங்கி முழுப்பக்கம்வரை இருக்கலாம் எனும் பொதுவான பார்வை இருக்கிறது. பக்க அளவு மட்டும் ஒரு தேர்ந்த குறுங்கதைக்கான இலக்கணமாகிட முடியாது. கைப்பிடி மணலுக்குள் ஒரு பெரும் வனத்தை அடைத்துவிட முடியும் குறுங்கதைகளால். . கைப்பிடிக்குள் அடங்கியிருக்கும் கடலுக்குள் பிரம்மாண்டத்தை வனைந்து கொண்டுவர முயல்கிற விந்தைகளை குறுங்கதைகள் செய்கின்றன. ஒரு காட்சி, ஒரு மின்னல் வெட்டித் தெறித்தது போலான சித்தரிப்பு. கவித்துவமான மொழிதல் இவையெல்லாம் குறுங்கதைகளுக்குள் நிகழ்கின்றன. சிறுகதைக்கும் கவிதைக்கும் இடையிலாடும் மலர்ஊஞ்சல் குறுங்கதைகள் என்றும் வாசக வசதிக்காக வைத்துக் கொள்ளலாம். தமிழில் குறுங்கதைகளுக்கு பெரும் தொடர்ச்சி இருக்கிறது. ஒரு ஊர்ல நரியாம் அதோட சரியாம் என்பதே தமிழில் எழுதப்பட்ட முதல் குறுங்கதை. பாரதியின் வசன கவிதைகளை தாண்டிச்செல்லவே சமகால குறுங்கதைகள் முயற்சி செய்கின்றன.  புதுமைப்பித்தன் குறுங்கதைகள் என்று பெயரிடாமலே கட்டில் பேசுகிறது போன்ற அபூர்வமான குறுங்கதைகளை எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியே என்றுமுள இசை எனும் எழுத்தாளர் உதயசங்கரின் குறுங்கதைத் தொகுப்பு..

 

எட்டிப்பார்த்த மரணம் துவங்கி சந்தை வரையிலும் மொத்தமாக நாற்பத்தி ஒன்பது குறுங்கதைகளை என்றுமுள இசையாக்கித்தந்திருக்கிறார்

எழுத்தாளர்.ஐம்பாதவது கதையை இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நானோ அல்லாது இதனை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களோ எழுதி என்றுமுள இசைக்குள் சேர்க்கலாம்..  தொகுப்பு முழுவதும் விடுதலையின் குரல்கள் தேர்ந்த சொற்களால் தைத்துத் தரப்பட்டிருக்கின்றன.. அதற்குள் ஆளுமைகளின் மரண நொடிகள் காட்சிகளாகின்றன. விரும்பி ஏற்க மரணம் என்ன வசநந்தத்தையா கொண்டுவரப்போகிறது. ஆனாலும் நித்தமும் எல்லோர் வாழ்விலும் எட்டிப்பார்க்கவே செய்கிறது மரணத்தின் கண்கள். அது விசிறிடும் துக்க வாசம் நிறைந்திருக்காத நாள் எது இந்த இகவாழ்வில் என்பதையே என்றுமுள இசை வாசகருக்குள் கடத்துகிறது.

 

துப்பாக்கிக்குண்டு தான் துளைத்திடப் போகும் முதியவரின் கண்களை மிக அருகில் பார்த்தபோது தனக்குள் தடுமாறிப்போகிறது. அது நினைத்துக்கொள்கிறது. மனிதர்கள் பைத்தியக்காரர்கள்.தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள வித விதமான ஆயுதங்களை உருவாக்குகிறார்கள். கோட்சேவின் துப்பாக்கியில் இருந்து கிளம்பிய தோட்டா தனக்குள் பேசிக்கொண்டே மகாத்மாவின் நெஞ்சை நோக்கிப் போகிறது. இந்த மனிதனை கருணை பொங்கிடும் இந்த ஆத்மாவை நிச்சயமாக அழிக்கக்கூடாது என்று முனங்கியபடியே பயணிக்கிறது. மகாத்மா மரணத்தின் கடைசிப்புள்ளியயைத் தொட்டபோது அவரின் குரல்வளையிலிருந்து வந்த ஹே ராம் எனும் ஒலியின் எதிரொலியைக் கேட்டிருக்கிறார் உதயசங்கர். அந்த எதிரொலி கோட்சேவின் சனாதன துப்பாக்கி வெளித்தள்ளிய தோட்டாவின் குரல் என்பதைக்கண்டறிய வரலாற்றுப் பிரக்ஞையும்  அதன்மீதான நீள்வாசிப்பும் வேண்டும். அது எழுத்தாளருக்கு இருப்பதை என்றுமுள இசையின் பல குறுங்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. தூக்குக் கயிற்றை முத்தமிட முன்நகர்ந்த நொடியில் உரத்து முழக்கமிட்ட தன் சொற்கள் காலமெனும் நீள் நதியில் மிதந்தலையும் வல்லமை கொண்டவை என்பது மாவீரன் பகத்சிங்கிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும். லாகூர் சிறையில் இருந்து தெறித்து விழுந்த இன்குலாப் ஜிந்தாபாத் எனும் சொற்கள்  இன்றுவரையிலும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் மாற்றங்களை முன் உணர்ந்திருப்பார் பகத்சிங் என்பதை நுண்கதையொன்று வாசகனுக்கு கண்டுபிடித்துச் சொல்கிறது. பொலிவியாவில் தான் கிடத்தப்பட்ட பள்ளிக்கூட பெஞ்சில் உயிரைவிட்டுக் கொண்டிருந்த சே அய்யோ இந்தப் பள்ளிக்கூடத்தை குழந்தைகள் படிக்த்திடும் வகையில் திறக்க மாட்டார்களே எனத் துக்கப் பட்டிருக்கிறான் என்பதையும் கதைகள்தான் கண்டுபிடித்துச் சொல்கின்றன.  விடுதலையின் சொற்களை தன் கவிதைகளுக்குள் பொதிந்து வைத்திருந்த பாப்லோ நெருடாவின் மரண நொடி எது?  அந்த கொடூரமான பூஞ்சை மருந்து தன்னுடலுக்குள் இறங்கி கவிதைச் சொற்களையும் விஷமாக்கிடுமோ? என கவலை கொண்டிருப்பார் என எழுதுவதற்கான சாத்தியங்களை குறுங்கதைகளே எழுத்தாளருக்கு உருவிக்கித் தருகின்றன. இந்த உலக இலக்கிய வாசிப்பும் கவனமும்தான்

 ஆப்ரிக்க கவிஞன் பெஞ்சமின் மொலாய்சிக்கு அஞ்சலிக் கவிதை எழுத வைக்கிறது.அந்த அஞ்சலிக்கவிதையில் அவன் ஏறிய தூக்குமர இலையின் பசிய வாசம் படர்ந்திருக்கும். அதனை வாசகர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். வேறு எந்த இலக்கிய வகைமையையும்விட கூடுதலான வாசகர் பங்கேற்பிற்கான சாத்தியங்களை தனக்குள் பொதிந்து வைத்திருப்பவை குறுங்கதைகள்.

 

கலைகள் மனங்களுக்குள் எளிய தத்துவ விவாதங்களை நிச்சயமாக நடத்தும் வல்லமை கொண்டவை. கலையின் நுண்தன்மை வாய்க்கப்பெற்றவை குறுங்கதைகள், எனவே அவற்றின் ஊடாக தத்துவ விவாதங்கள் நடக்கவே செய்யும். என்றுமுள இசையில் மனம், மரணம்,விடுதலை, காதல்,காமம் என வாழ்வின் நுண்பகுதிகளைக் குறித்த தர்க்கங்கள் பல கதைகளில் நிகழ்கின்றன.  தேடல் என்பது கனவுச்சொல்லாக மனங்களில் சேகரமாகியிருக்கிறது. நிஜத்தில் தேடல் என்பது என்ன? மறதியின் நிழல் அழுந்தப்படிந்த மனிதர்களால் ஆனது இந்த உலகு. மறதியின் கொடும்பாதைக்குள் பதுங்கிக்கிடக்கும் ஊரை, உலகை ஏன் தன்னையே தேடி ஏமாந்து போகிறவன் என்றுமுள இசைக்குள் அலைந்து கொண்டேயிருக்கிறான். அவன்தான் கோதமன் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நின்றபோது பன்றி இறைச்சியை உணவாகத் தந்தவன். உலகின் இயல்பில் தன்னைக் கரைத்துக் கொள்ளாத அந்த வேடுவன்தான் உழைப்பின் அழகை கோதமனுக்குப் போதித்தவன்.மனம் நிறையும் பயத்தைக் கொணடுவந்து சேர்க்கிறது இருள். இருளில் இருந்து யாரோ அல்லது எதுவோ தன்னை உற்றுக் கவனிப்பதாக நினைத்துவிட்டால் என்ன ஆகும். மனம் பிசகிப்போவதற்கானா  எல்லா சாத்தியங்களையும் தன்னுள் ரகஸியமாக்கி வைத்திருக்கிறது இருள். அதனால்தான் கோதமனுக்கே உழைப்பைக் கற்றுத்தந்த வேடவன் சமதளத்தின் ஒளிவெள்ளத்தில் தடுமாறி இருளைக்கண்டு அஞ்சுகிறான். கழிவறைச் சுவர்களை,அதுவும் பேருந்து நிலையங்களில் ஒதுங்கியிருக்கும் கழிவறைச் சுவர்களை பார்க்காமல் கடப்பது கடினம். அங்கு கிறுக்கப்பட்டிருக்கும் பாலியல் வசைகள். தன்னை அழைக்கச் சொல்லி பொறிக்கப்பட்டிருக்கும் அலைபேசி எண்கள். இப்படி எது எதுவோ நிறைந்திருப்பதே கழிவறைச் சுவர்களின் இயல்பு. நுண்கதைகளின் நுட்பமே இயால்பைக் கலைத்து எழுதும் அதன் விசித்திரத் தன்மையில்தான் கவனம் பெறுகிறது. நறுமணம் வீசும் மலர்களின் தைல ஓவியத்தை எழுதிய கோட்டிக்காரன் யாராக இருக்கும்.ஒரே படித்தான கழிவறை வசைகளைக் கண்டு எரிச்சலுற்ற மனதின் வெளிப்பாடுதான் அந்த மலர்க்காடு. சுவரில் வளர்ந்திருக்கும் அந்த தோட்டச்செடிகளில் இருந்து நறுமணம் வீசட்டும். தவறு ஒன்றுமில்லை.

 

பசிதான் கடவுள் என்று கண்டறிவதற்கு ஒரு நெடுந்தூரப் பயணம் தேவைப்படுகிறது. போதையில் வீழ்த்தும் சொற்கள் இவையென சில சொற்களைக் கண்டறிந்து சொல்கிற ஆற்றல் பசிக்கு மட்டுமே இருப்பதை எழுத்தாளர் தன் வாழ்வின் ஏதோ ஒரு பக்கத்தில் கண்டுணர்ந்திருக்கிறார். அதனால் தான் அவரால் கடவுள், மதம், சாதி, ஆன்மீகம், ஞானம், யோகம் முக்தி, மோட்சம் எனும் சூது கவ்விய சொற்களை துரத்திடும் பேராற்றல் எரிந்த வயிற்றின் பசிக்குரலின் ஆவேசத்தில் இருக்கிறது என்பதை உணர முடிகிறது. அவன் கடவுளுக்காக இவன் கடவுளை அவன் இடிப்பதைக் கண்ட கடவுளர்கள் தெருவிலிறங்கி ஓடுகிறார்கள் என்பதைச் சொல்லும் வல்லமை குறுங்கதைகளுக்கு இருக்கிறது.

 

கவிதைகளுக்குள் அரசியல் செய்ய முடிந்திருக்கிறது எழுத்தாளர்களால். வானம்பாடி கவிஞர்களின் தொகுப்புகளில் அரசியல் சொல்லாடல்கள் நிறைந்திருந்தது. சிறுகதைகளும்கூட அதன் அரசியல் முகத்தை வெகு சில எழுத்தாளர்களின் வழியே கண்டடைந்திருக்கிறது. சிறுகதைக்கும், கவிதைக்கும் இடையே ஊஞ்சலாடும் குறுங்கதைகள் உணர்வுகளின் தொகுப்பாகவே எழுதிப் பார்க்கப்படுகிறது. தமிழில் நிகழும் சமகாலத்தையும் குறுங்கதையாக்க வேண்டும் என்பதை என்றுமுள இசையின் வழியாக எழுத்தாளர் உதயசங்கர் நவீன தமிழ் இலக்கிய உலகிற்கு நினைவூட்டுகிறார்.பின் நவீனத்துவ காலத்தில் மனிதர்களுக்கு சந்தையில் இருப்பது பொருட்களுக்கான மதிப்பு மட்டுமே. பன்னாட்டுக் கம்பெனிகள் கடை விரித்திருக்கும் விரிந்த சந்தையில் தற்கொலைக் கருவிகளுக்குக்கூட சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.காயமற்றோரே வாருங்கள்.உங்களுக்கு மட்டுமே எங்கள் கருவிகள் என சொல்வதற்கு பின் உள்ள அரசியலை உடைத்து உடைத்து ஒரு நூறு குறுங்கதைகளை எழுத்தாளர்கள் எழுத வேண்டும். அதனையே என்றுமுள இசையும் விரும்புகிறது.

 

யாரும் இதுவரையிலும் எழுதி இருக்க சாத்தியமேயில்லாத கதைகளைத்தான் எல்லோரும் எழுத முயற்சிக்கிறார்கள். எல்லோரும் எழுதிக் கொண்டிருப்பது அல்லது எழுதத் துவங்குவது அவரவர்களின் இரண்டாவது கதையைத்தான். ஏன் என்றால் உங்களின் முதல்கதையை ஏற்கனவே போர்ஹே எழுதிவிட்டார் எனும் சொல்வழக்கு லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகினில் இன்றுவரையிலும் இருந்து வருகிறது. என்றுமுள இசைக்குள் அசலான முதல் தமிழ்க்குறுங்கதையை எழுத்தாளர் உதயசங்கர் எழுதிவிட்டார்.

மரணத்தின் நற்செய்தி..

காலாதி காலததிற்குள் பரவித்தொடரப் போகும் குறுங்கதையிது.

தேடிப்படியுங்கள். மமரணத்தையே தற்கொலை நோக்கி திருப்பி அனுப்பும் விந்தையர்கள் குழந்தைகள் என்பதை கண்டுபிடித்துச் சொன்ன குறுங்கதையது….போர் நிகழ்த்திக் கொண்டிருக்கும் வன்முறையை எதிர்த்து நிற்க வேண்டிய உளத்தை வடிவமைக்கும் ஆற்றல் கொண்டவை என்றுமுள இசை எனும் எழுத்தாளர் உதயசங்கரின் குறுங்கதைத் தொகுப்பு. இந்த தொகுப்பின் தனித்த அம்சம் குறுங்கதைகளுக்கு வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள். குறுங்கதைகள் உணர்த்திடும் உணர்வினை மேம்படுத்திடும் வகையினில் அமைந்துள்ளது. என்றுமுள இசை கவனம் பெறத் துவங்கியிருக்கும் குறுங்கதைகள் எனும் இலக்கிய வகைமைக்கு வளம் சேர்க்கும் தனித்த தொகுப்பு

                    .                  

                                          .                         

 

என்றுமுள இசை

குறுங்கதைகள்.

உதயசங்கர்.

செவ்வியல் பதிப்பகம்.

பக்கங்கள்.90

விலை 150/

தொடர்புக்கு - 9488406868