Tuesday 31 August 2021

களங்கமின்மையின் சுடர்

 

களங்கமின்மையின் சுடர் –


கு.அழகிரிசாமியின் குழந்தைகள் உலகம்

உதயசங்கர்

“ உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய ந்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள் “

குழந்தைகளின் உலகம் எளிமையானது. கபடோ, பாசாங்கோ, கள்ளத்தனங்களோ, அற்றது. அந்தந்தக்கணங்களில் வாழ்கிறவர்கள் குழந்தைகள். வாழும் அந்தத் தருணங்களில் முழு அர்ப்புணிப்புடன் தங்களை ஈடு கொடுப்பவர்கள். எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காதவர்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து குழப்பமடையாதவர்கள். இயல்பானவர்கள். எந்த உயிர்களிடத்தும் ஏற்ற தாழ்வுகளைப் பார்க்காதவர்கள். பெரியவர்களாகிய நாம் சொல்லிக்கொடுக்காதவரை உயர்வு தாழ்வு என்ற சிந்தனை இல்லாதவர்கள். அவர்களுடைய போட்டியும் பொறாமையும் குழந்தைமையின் ஒரு பண்பு. அந்தக் குணங்கள் அவர்களிடம் வெகுநேரம் நீடிப்பதில்லை. எந்தச் சண்டையையும் நீண்ட நேரத்துக்கு போடாதவர்கள். காயும் பழமுமாக அவர்களுடைய வாழ்க்கையை வண்ணமயமாக்குபவர்கள். அன்பு நிறைந்தவர்கள். அன்பால் நிறைந்தவர்கள். குழந்தைமை என்பதே வெகுளித்தனமும், களங்கமின்மையும், கபடின்மையும் தான். ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்த பெரியவர்கள் வளரும்போது அந்தக் குழந்தைமையைத் தொலைத்து விடுகிறார்கள். தங்களுடைய பரிசுத்தமான உணர்ச்சிகளால் நிறைந்த அப்பாவித்தனமான இளகிய இதயத்தை வளர வளர இரும்பாக்கி விடுகிறார்கள். ஒருவகையில் இலக்கியம் அந்த மாசற்ற அன்பைப்பொழியும் களங்கமின்மையை மீட்டெடுக்கிற முயற்சி தான்.

 குழந்தைகள் உலகை தமிழிலக்கியத்தில் புனைவுகளாக நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், வண்ணதாசன், பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன், கோணங்கி,  ஜெயமோகன், கி.ராஜநாரயணன், எஸ்.ராமகிருஷ்ணன், என்று குழந்தைகளை மையப்படுத்திய கதைகளை எழுதி சாதனை செய்திருக்கிறார்கள். குழந்தைகளின் உளவியல், இயல்புகளைப் பற்றிப் பெரியவர்கள் புரிந்து கொள்கிற கதைகளாக அவை வெளிப்பாடடைந்திருக்கின்றன. சிறார் இலக்கியத்தின் முக்கியமான மூன்று வகைமைகளாக குழந்தைகள் வாசிப்பதற்காக பெரியவர்கள் எழுதும் இலக்கியம், குழந்தைகளே எழுதுகிற இலக்கியம், குழந்தைகளைப் புரிந்து கொள்வதற்காகப் பெரியவர்கள் எழுதுகிற இலக்கியம் என்று சொல்கிறார்கள் சிறார் இலக்கிய ஆய்வாளர்கள். அதில் குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் எழுதியுள்ள ஏராளமான கதைகளில் கு.அழகிரிசாமியின் கதைகளான ராஜாவந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, தெய்வம் பிறந்தது, போன்ற கதைகள் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. கு.அழகிரிசாமியின் எளிமையான கலைவெளிப்பாடு குழந்தைகளின் எளிமையான உலகத்துடன் மிகச் சரியாகப் பொருந்தி அந்தக் கதைகளை கலையின் பூரணத்துவத்துக்கு அருகில் கொண்டு போய் விடுகிறது.  

கு.அழகிரிசாமியின் தனித்துவமான வெளிப்பாடு என்று எதைச் சொல்லலாமென்றால் அன்றாட வாழ்க்கையின் அன்றாடக்காட்சிகளிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்கிறார். அதில் தன் கருத்தைத் திணிக்காமல் அதே நேரம் அந்தக் காட்சியில் தன் கருத்துக்கு ஏற்ற இயல்பை, வண்ணத்தீற்றலை அல்லது கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து வளர்த்தெடுக்கிறார். குழந்தைகள் வரையும் ஓவியம் போல அவ்வளவு இயற்கையாக இருக்கிறது. முதலில் அதன் எளிமை நம்மை ஏமாற்றி விடுகிறது. ஆனால் உற்று நோக்க நோக்க அந்த ஓவியத்தின் அழகும், ஆழமும், கடலென விரிவு கொள்கிறது. அதை உணர்ந்து கொள்ளும் போது வாசகனுக்குத் திடீரென தான் ஒரு பெருங்கடலுக்கு நடுவே நிற்பதை உணர்வான். தன்னச்சுற்றி வண்ணவண்ண முத்துகள் கீழே கொட்டிக் கிடப்பதைப் பார்ப்பான். ஒரு ஒளி வாழ்க்கை மீது ஊடுருவி பேருணர்வின் தரிசனத்தைக் கொடுக்கும். அதுவரை கெட்டிதட்டிப்போயிருந்த மானுட உணர்வுகளின் ஊற்றுக்கண் உடைந்து உணர்ச்சிகள் பெருகும். விம்மலுடன் கூடிய பெருமூச்சு எழுந்து வரும். கண்களில் ஈரம் பொங்கும். தன்னையும் அந்தச் சித்திரத்துக்குள் ஒரு கதாபாத்திரமாக உணரவைக்கும்.

அப்போது தான் கு.அழகிரிசாமியெனும் மகாகலைஞனின் மானுட அன்பை உணர்வான். அவருடைய கலைக்கோட்பாட்டை உணர்வான். அவருடைய கலை விதிகளைத் தெரிந்து கொள்வான். அவருடைய அரசியலை புரிந்து கொள்வான். அந்தச் சித்திரம் வாசகமனதில் அவர் ஏற்படுத்த நினைக்கும் தாக்கத்தைத் துல்லியமாக ஏற்படுத்தியதை உணர்ந்து கொள்வான். கு.அழகிரிசாமியின்  கதைகளில் பெரிய தத்துவவிசாரமோ, ஆன்மீக விசாரமோ, செய்வதில்லை. ஆனால் அப்படியொரு வாய்ப்பு அந்தக் கதைகளுக்குள் வருமென்றால் அதை ஒதுக்கித் தள்ளுவதுமில்லை. பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல வாசிப்பு இருந்தாலும், ஏராளமான கவிதைகளை எழுதியிருந்தாலும் கதைகளில் எளியமொழியையே கையாண்டார். இதழியல் துறையில் வேலை பார்த்ததாலோ என்னவோ யாருக்கு எழுதுகிறோம் என்ற போதம் இருந்தது. தமிழ்ச்சிறுகதைகளின் வரலாற்றில் பல உச்சங்களைத் தொட்டிருந்தார் கு.அழகிரிசாமி. குறிப்பாக குழந்தைகளை மையமாக வைத்து அவர் எழுதிய, ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, என்ற நான்கு கதைகளிலும் குழந்தைகளின் அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, அறியாமையை, குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதியிருப்பதை வாசிக்கும் போது உணரமுடியும்.

ஒருவகையில், ராஜா வந்திருக்கிறார் கதை கு.அழகிரிசாமியின் மையம் என்று கூடச் சொல்லலாம். அவர் இந்த வாழ்க்கையின் அவலத்தை, எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், துன்பதுயரங்கள் வந்தாலும் தாயம்மாளைப் போலத் தாங்கிக் கொள்ளவும் மங்கம்மாளைப் போல நம்பிக்கையுடன் கடந்து செல்லவும். தான் வாழும் வாழ்க்கையை வம்புக்கிழுக்கவும், அதில் வெற்றி பெறவும் முடியும் என்பதைச் சொல்கிற மிக முக்கியமான மானுட அரசியல் கதை. இந்த ஒரு கதைக்காகவே கு.அழகிரிசாமி உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டிய எழுத்தாளராகிறார்.

1950 – ல் சக்தி இதழில் வெளியான ராஜா வந்திருக்கிறார் கதையின் தொடக்கமே மங்கம்மாளின் குழந்தைகளின் போட்டி விளையாட்டுடன் தான் தொடங்குகிறது. சிறுகுழந்தைகள் அணிந்திருக்கும் சட்டையில் தொடங்கும் போதே இரண்டு வர்க்கங்களை அறிமுகப்படுத்தி விடுகிறார் கு.அழகிரிசாமி. மங்கம்மாளும், அவளுடைய மூத்த சகோதரர்களான செல்லையாவும் தம்பையாவும் ஏழ்மையில் உழலும் குடும்பம் என்பதும் அந்த ஊரிலேயே பெரிய தனக்காரரின் மகனான ராமசாமி சில்க் சட்டை போடுகிற, ஆறு பசுக்களை வைத்திருக்கிற வசதியான குடும்பத்தினர் என்பதும் தெரிந்து விடுகிறது. புத்தகத்தில் பதிலுக்குப் பதில் படம் காண்பிக்கும் விளையாட்டிலிருந்து என் வீட்டில் ஆறு பசு இருக்கிறது உன்வீட்டில் இருக்கிறதா? என்று வளர்ந்து பதில் பேச முடியாத ராமசாமியை மங்கம்மாளும், செல்லையாவும், தம்பையாவும், சேர்ந்து தோத்தோ நாயே என்று கேலி செய்வதில் முடிகிறது. இரண்டு குடும்பத்தினரும் வெவ்வேறு சாதியினர் என்பதை கோழி அடித்துத் தின்பதைப் பற்றிக் கேலியாக ராமசாமி சொல்வதன் மூலம் காட்டி விடுகிறார். செல்லையாவையும் தம்பையாவையும் விட மங்கம்மாளே துடிப்பான குழந்தையாக அறிமுகமாகிறாள்.

 ராமசாமியின் வீட்டு வேலைக்கராரால் விரட்டப்பட்டு குடிசைக்கு வரும் குழந்தைகளில் மங்கம்மாள் அவளுடைய தாயாரான தாயம்மாளிடம் ஐயா வந்து விட்டாரா? என்று கேட்பதிலிருந்து வேறொரு உலகம் கண்முன்னே விரிகிறது. எங்கோ தொலைதூரத்தில் வேலை பார்த்து அரைவயிறும் கால்வயிறுமாகக் கஞ்சி குடித்து எப்படியோ மிச்சப்பட்ட காசில் தீபாவளிக்கு குழந்தைகளுக்கு மல் துணியில் இரண்டு பனியன்களும், இரண்டு டவுசர்களும், ஒரு பாவாடையும், பச்சைநிறச்சட்டையும், ஒரு ஈரிழைத் துண்டும் இருக்கின்றன. அம்மாவுக்குத் துணியில்லை. அப்பாவுக்கு அந்தத் துண்டை வைத்துக்கொள்ளலாம் என்று அம்மா சொல்கிறார். அம்மாவுக்கு இல்லாத துணி அப்பாவுக்கு எதுக்கு என்று மங்கம்மாள் கேட்கிறாள்.

இருட்டில் அவர்கள் குடிசைக்குப் பின்னாலிருந்த வாழைமரத்துக்குக் கீழே ஒரு சிறுவன் எச்சில் இலையை வழித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனை அழைத்து விவரம் கேட்கிறார் தாயம்மாள். அப்பா, அம்மா, இல்லாத அநாதையான சிரங்கும் பொடுகும், நாற்றமும் எடுக்கும் தன் அரையில் கோவணம் மட்டுமே கட்டியிருந்த அந்தச் சிறுவனுக்குக் கூழு கொடுத்து தன் குழந்தைகளோடு படுக்க வைக்கிறாள். இரவில் பெய்யும் மழைக்கூதலுக்கு தான் மறுநாள் தீபாவளியன்று உடுத்தலாம் என்று எடுத்து வைத்திருந்த பீத்தல் புடவையை எல்லாருக்குமாகப் போர்த்தி விடுகிறார். மறுநாள் விடிகாலையிலேயே குழந்தைகளை எழுப்பி எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விடுகிறார். ராஜா என்ற அந்தச் சிறுவனுக்கும் எண்ணெய் தேய்த்து சீயக்காய் பொடி போட்டு பக்குவமாகக் குளிப்பாட்டி விடுகிறார். குளிக்கும் போது சிரங்குப்புண்களால் ஏற்பட்ட வேதனையினால் ராஜா அழும்போது சரியாயிரும் சரியாயிரும்.. புண் ஆறிரும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். அந்தப் பகுதியை வாசிக்கும் போது மனம் இளகாமல் இருக்கமுடியாது. பரிவின் சிகரத்தில் தாயம்மாளை படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி.

 மற்ற குழந்தைகள் புதுத்துணி உடுத்தும் போது ராஜாவுக்கு என்ன செய்ய என்று தாயம்மாள் குழம்பி நிற்கும் போது மங்கம்மாள் தான் அப்பாவுக்கென்று வைத்திருந்த அந்த ஈரிழைத்துண்டைக் கொடுக்க சொல்கிறாள். அவள் சொன்னதும் தயக்கமில்லாமல் அந்தத் துண்டை எடுத்து ராஜாவுக்குக் கட்டி விடுகிறாள். ஒரு வகையில் தாயம்மாளையும் மங்கம்மாளையும் ஒரே உருவின் இரண்டு பிறவிகளாகப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி என்று சொல்லலாம். புதுத்துணி உடுத்திய குழந்தைகள் தெருவுக்கு வரும்போது பெரிய வீட்டு ராமசாமி வருகிறான். அவனுடைய அக்காவைத் திருமணம் முடித்த ஜமீன் ராஜா அவர்களுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார் என்பதை

“ எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்..என்று சொல்லும்போது, மங்கம்மாள் பழைய பள்ளிக்கூடப்போட்டியை நினைத்துக் கொண்டு,

“ ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கிறார்… எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கிறான்.. வேணும்னா வந்து பாரு..

என்று சொல்வதோடு கதை முடிகிறது. இந்த வரிகளை வாசிக்கும் போது கண்ணில் நீர் துளிர்க்கிறது. இந்தக்கதையை வாசிக்க வாசிக்க வாசகமனதில் பேரன்பு ஒன்று சுரந்து பெருகி இந்த மனிதர்களை, உலகத்தை, பிரபஞ்சத்தை, அப்படியே சேர்த்தணைப்பதை உணரமுடியும்.

எளியவர்களின் மனவுலகை, அவர்கள் இந்த வாழ்க்கையை பார்க்கும் பார்வையை இதை விடச்சிறப்பாக யாரும் சொல்லவில்லை. எல்லாவிதமான இல்லாமைகளுக்கும் போதாமைகளுக்கும் நடுவில் தாயம்மாளிடம் அன்புக்குக் குறைவில்லை. தாய்மையுணர்வு குறையவில்லை. பொங்கித்ததும்பும் இந்த அன்பின் சாயலையே குமாரபுரம் ஸ்டேஷன் கதையிலும் வரைந்திருப்பார். முன்பின் தெரியாதவர்களிடம் ஏற்படும் உறவுகளின் தார்மீகநேசத்தைச் சொல்லியிருப்பார்.

 கு.அழகிரிசாமி ராஜா வந்திருக்கிறார் கதையில் தன்னுடைய அம்மாவுக்கு கோயில் கட்டியிருப்பதாக கி.ரா. சொல்லியிருந்தார். உண்மையில் ஒரு இந்திய கிராமத்தின் ஆத்மாவினைத் தொட்டுக்காட்டுகிற கதையாக ராஜா வந்திருக்கிறார் கதையைச் சொல்லலாம். தமிழ்ச்சிறுகதைச் சிகரங்களில் ஒன்று  ராஜா வந்திருக்கிறார்.

வாழ்வின் எந்தக் கட்டத்திலாவது புறக்கணிப்பின் துயரை அனுபவிக்காதவர்கள் இருக்கமுடியாது. அந்தத் துயரே அவர்களை வாழ்க்கை முழுவதும் வேட்டையாடிக் கொன்று தீர்த்து விடும். நிராகரிப்பின் கொடுக்குகளால் கொட்டப்பட்ட ஒருவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் எவ்வளவு கசப்பானதாக இருக்குமென்பது அதை அனுபவித்தவர்கள் உனர்வார்கள். ஆனால் குழந்தைகள் தங்களுக்கு நேர்கிற புறக்கணிப்பை எப்படி அவர்கள் வழியிலேயே ஈடு கட்டி மகிழ்கிறார்கள் என்பதை நேர்த்தியாகச் சொல்கிற கதை அன்பளிப்பு. கதையின் ஒவ்வொரு கணமும் நம்முடைய வாழ்வில் நாம் அனுபவித்த, நாம் பங்கேற்ற கணமாகவே இருப்பதை வாசிக்கும்போது உணரலாம். கதையின் இறுதிக்காட்சியில் நம்மை அறியாமல் நாம் மூச்சு விடக்கூட மறந்து போவோம். அந்தக் கடைசி வரியில் புறக்கணிப்பின் துயர் மொத்தமாக நம்மீது மிகப்பெரிய பளுவாக இறங்கி நசுக்குவதை உணர்ந்து கொள்ளமுடியும். ஒரு புதிய பாதை, ஒரு புதிய வெளிச்சம் நம் கண்ணுக்கு முன்னால் தெரியும். நமக்கு அழுகை வரும். சிரிப்பும் வரும். நாம் அழுதுகொண்டே சிரிக்கவோ, சிரித்துக்கொண்டே அழவோ செய்வோம். இதுதான் கு.அழகிரிசாமி நம்மிடம் ஏற்படுத்துகிற மாயம். மிகச்சாதாரணமாகா ஆரம்பிக்கிற கதை எப்படி இப்படியொரு மனித அடிப்படை உணர்வுகளில் ஊடாடி நம்மை அசைக்கிறது. வாழ்க்கை குறித்த மகத்தான ஞானத்தை நம்மிடம் ஏற்படுத்துகிறது என்பது தான் கலை. மகத்தான கலை எளிமையாகவே இருக்கிறது. அந்தக் கலை ஏற்படுத்தும் உணர்வு மானுடம் முழுவதற்கும் பொதுமையானது. அன்பளிப்பு கதை அந்த உணர்வை அளிக்கும் அற்புதத்தைச் செய்கிறது.

பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் கதாநாயகன், பக்கத்து வீடுகளிலிருக்கும் குழந்தைகளோடு மிக அன்னியோன்யமான பாசத்தையும் நேசத்தையும் கொண்டிருக்கிறான். அந்தக் குழந்தைகளும் அவன் மீது அளவில்லாத பிரியம் கொண்டிருக்கின்றன. அவனை வயது மூத்தவனாகக் கருதாமல் தங்களுடைய சமவயது தோழனாகக் கருதுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளென்று விடிந்து வெகுநேரமாகியும் தூங்கிக் கொண்டிருக்கிற அவனை முதுகில் அடித்து எழுப்புகின்றன குழந்தைகள். குழந்தைகள் வாசிப்பதற்காக அவன் வாங்கிக்கொண்டு வருவதாகச் சொன்ன புத்தகங்களுக்காக வீட்டை கந்தர்கோளமாக ஆக்கிவிடுகின்றனர். அவனும் அவர்களுக்கு சமமாக விளையாடி கொண்டு வந்த புத்தகங்களைக் கொடுக்கிறான்.

அவன் தாயாரோடு இந்த வீட்டுக்கு வந்த புதிதில் அவனுக்குப் பரிச்சயமான சித்ராவும் சுந்தர்ராஜனும் எப்போதும் முதல் உரிமையை எடுத்துக் கொள்கிறார்கள். அவனும் அதைச் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறான். மற்ற குழந்தைகளும் அதை நியாயம் தான் என்று நினைக்கும் போது சாரங்கராஜன் மட்டும் ஏங்குகிறான். அதற்காக வால்ட்விட்மேனின் கவிதை நூலை வாசிக்கக் கேட்கிறான். அதை மறுக்கும்போது அழுகிறான். அடுத்து அவன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பிருந்தாவுக்குக் காய்ச்சல் கண்டு படுத்திருப்பதைக் கேள்வி கேட்டு அவர்கள் வீட்டுக்குப் போய்ப் பார்க்கிறான். பிருந்தா அவனைப் பார்த்ததும் மாமா மாமா என்று புலம்புகிறாள். கொஞ்சம் தெளிவடைகிறாள். அப்போது சாரங்கனும் தன்னுடைய வீட்டுக்கு வரச்சொல்லி வற்புறுத்துகிறான். அதன்பிறகு இரண்டு டைரிகளைக் கொண்டுவந்தவன் சித்ராவுக்கும் சுந்தர்ராஜனுக்கும் மட்டும் கொடுக்கிறான். அப்போதும் சாரங்கன் ஏமாந்து போகிறான்.

ஏற்கனவே சொன்னபடி ஞாயிற்றுக்கிழமையன்று சாரங்கனின் வீட்டுக்குப் போகும் கதாநாயகனுக்கு உப்புமா காப்பியெல்லாம் கொடுத்து உபசரிக்கிறான் சாரங்கன். பின்னர் மெல்ல அவனுடைய டவுசர் பையிலிருந்து ஒரு டைரியை எடுத்து அவனுக்கு முன்னால் வைத்து எழுதச் சொல்கிறான் சாரங்கன்.

என்ன எழுத? என்று கேட்கும் அவனிடம், சொல்கிறான் சாரங்கன்.

என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு “

குழந்தைகளின் களங்கமற்ற அன்பைச் சொல்கிற மிகச் சிறந்த கதை. குழந்தைகளிடம் பெரியவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற அரிச்சுவடியைக் கற்பிக்கும் கதை அன்பளிப்பு. இந்தக் கதைக்குள் ஓரிடத்தில் கதையின் கதாநாயகன் நினைப்பதாக கு.அழகிரிசாமி எழுதுகிறார்.

“ உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய ந்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள் “

உண்மையிலேயே குழந்தைகளின் உலகத்தில் குழந்தைகளோடு குழந்தையாக வாழ்பவரால் மட்டுமே இப்படியான கவனிப்பைச் சொல்ல முடியும். இந்தக்கதை 1951-ல் சக்தி அக்டோபர், நவம்பர் இதழில் வெளியாகியிருக்கிறது.

ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, இரண்டு கதைகளும் தமிழிலக்கியத்துக்கு கு.அழகிரிசாமி கொடுத்துள்ள கொடை என்று சொல்லலாம்.

1959 – ஆம் ஆண்டு எழுதப்பட்ட தம்பி ராமையா கதையில் அப்போதே கல்வியினால் தங்களுடைய குடும்பம் உய்த்து விடும் என்று நம்பி காடுகரைகளை விற்று மூத்தமகனான சுந்தரத்தை படிக்கவைக்கிறார் கிராமத்து விவசாயியான பூரணலிங்கம். ஆனால் மகன் படித்து முடித்து நான்கு வருடங்களாக வேலை கிடைக்காமல் வீட்டிலிருக்கும் அவலத்தைப் பார்த்து கல்வியின் மீதே வெறுப்பு வருகிறது. ஊரிலுள்ள மற்ற பேர்கள் தங்களுடைய குழந்தைகளைப் படிக்கவைப்பது குறித்து பேசும்போது பூரணலிங்கம் படிப்பினால் எந்தப் பிரயோசனமுமில்லை என்று வாதிடுகிறார். இந்த நிலைமையில் மதுரையில் நண்பன் ஒருவன் மூலம் சொற்ப சம்பளத்துக்கு வேலைக்குப் போன சுந்தரம் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி மாதாமாதம் ஐந்து ரூபாய் சேமித்து ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு வருகிறான். ஊருக்கு வரும்போது தம்பி தங்கைகளுக்குத் துணிமணிகள், பலகாரங்கள், வாங்கிக் கொண்டு வருகிறான். தந்தையின் கையில் முப்பதோ, நாற்பதோ பணமும் கொடுக்கிறான். அவன் ஊரில் இருக்கும் சில நாட்களுக்கு தினமும் விருந்துச்சாப்பாடு நடக்கிறது. இதைப்பார்த்த தம்பி ராமையா அண்ணனுடன் ஊருக்குப் போனால் தினம் பண்டம் பலகாரம் புதுத்துணி, பொம்மை என்று வசதியாக இருக்கலாம்.  ஆனால் அண்ணன் அவனைக் கூட்டிக் கொண்டுபோக மறுக்கிறான் என்று நினைத்து அண்ணன்மீது வெறுப்பு வளர்ந்து அவன் ஊருக்குப் போகும்போது அலட்சியப்படுத்துகிறான்.

அண்ணனால் தம்பியின் வெறுமையான பார்வையைத் தாங்க முடியவில்லை. ஆனால் வீட்டிலுள்ளோருக்குப் புரியாமல் தம்பி ராமையாவை அதட்டி உருட்டி அண்ணனை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள். ராமையா அண்ணனுக்கு  விடைகொடுக்க கையைக்கூட அசைக்கவில்லை.

அப்போது சுந்தரம் நினைக்கிறான்,

“ ராமையா நான் உன்னை நடுக்காட்டில் தவிக்க விட்டுவிட்டு இன்பலோகத்துக்கு வந்து விடவில்லையடா. நான் வேறொரு நடுக்காட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன்.. நீயாவது என்னை வெறுப்பதன் மூலம் ஆறுதலைத் தேடிக்கொண்டாய்.. எனக்கோ எந்த ஆறுதலும் இல்லை….. தினம் தினமும் உன்னையும் உன் ஏக்கத்தையும் இப்போது உன் வெறுப்பையும் எண்ணி எண்ணித் துயரப்படுவதற்குத் தான் மதுரைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.. நீ நினைப்பது போல் நான் ஈவு இரக்கமற்ற பாவியில்லை..

தம்பிராமையா என்ற ஏழுவயது சிறுவனின் மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிற கதை. அண்ணன் சுந்தரத்தின் வழியே கதையை நடத்தும் கு.அழகிரிசாமி அந்தக் காலத்தைப் பற்றிய சமூக விமரிசனத்தையும் கல்வி குறித்த விமரிசனத்தையும் முன்வைக்கிறார். இந்தக் கதை பல தளங்களில் வைத்துப் பேசப்படவேண்டிய கதை.

கு.அழகிரிசாமியின் வர்க்க அரசியலை வெளிப்படையாக உணர்த்துகிற கதை தெய்வம் பிறந்தது. ராமசாமிக்குத் திருமணமாகி நீண்ட பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு பிறக்கிறான் குழந்தை ஜகந்நாதன். அவர் அவனை இந்த உலகின் அனைத்து தர்மநியாயங்களும் அறிந்த உத்தமனாக வளர்க்க நினைக்கிறார். அதற்காக அவர் அவனுக்கு எல்லாவிதமான நீதிநெறிகளையும் நன்னெறிகளையும் சொல்லிக்கொடுக்கிறார். அவர் சொன்னபடியே கேட்டு நடக்கிறான் ஜகந்நாதன். அப்பாவுக்கு ஷவரம் செய்ய வரும் வேலாயுதத்தை வணங்கி மரியாதை செய்கிறான்.

வீட்டில் காந்தியின் படத்தை மாட்டும்போது அவர் சமூகத்துக்குச் செய்த சேவையைப் பற்றி ஜகந்நாதனிடம் சொல்கிறார். அப்போது அவன் அபப்டியென்றால் சாமிப்படங்களை ஏன் மாட்ட வேண்டும் என்று கேட்கிறான். இந்த உலகை, இயற்கையைப் படைத்துக் காப்பாற்றுகிற சாமிப்படங்களை மாட்டி வைக்கலாம் என்று சொன்னதும் கேட்டுக் கொள்கிறான். ராமசாமிக்கு ஒரு குடும்பப்படம் எடுத்து வீட்டில் மாட்டி வைக்க ஆசை. அதற்காகப் பிரயத்தனப்பட்டு போட்டோ ஸ்டுடியோவுக்குப் போய் போட்டோ எடுத்து கண்ணாடிச் சட்டமிட்டு சுவரில் மாட்டுகிறார். அப்போதும் குழந்தை ஜகந்நாதன் கேள்வி கேட்கிறான். நம்முடைய போட்டோவை எதுக்கு நம் வீட்டில் மாட்டவேண்டும் என்கிறான். தந்தையால் பதில் சொல்லமுடியவில்லை. காந்தி, சாமிப் படங்களை மாட்டியிருப்பதற்குச் சொன்ன பதிலையே அவன் திரும்பக் கேள்வியாகக் கேட்கிறான். நமக்கு நன்மை செய்கிறவர்களின் படங்களைத் தான் மாட்டவேண்டுமென்றால் நம்முடைய வீட்டுக்கு வருகிற துணி வெளுக்கிற கோமதி நாயகம், ஷவரம் செய்கிற  ஐயாவு, வேலாயுதம், காய்கறிக்காரர், இவர்களுடைய படங்களை ஏன் மாட்டவில்லை? என்று கேட்கிறான் குழந்தை. அந்தக்கேள்வியைக் கேட்ட ராமசாமி சிலிர்த்து மகனைக் கட்டியணைத்து கண்ணீர் சிந்தி, என் வயிற்றிலும் தெய்வம் பிறக்குமா? பிறந்து விட்டதே! என்று ஆனந்தக்கூச்சலிட்டுக்கொண்டு மனைவியைத் தேடிப்போகிறார்.

பெற்றோர்கள் எல்லோருமே தங்களுடைய குழந்தைகள் நீதிமான்களாக நியாயவான்களாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் தான். அந்த நியாயமும், நேர்மையும் அவர்களைத் தர்மசங்கடப்படுத்தாதவரையில் குழந்தைகளுக்கு நன்னெறி, நீதிநெறி, ஆகியவற்றைச் சொல்லிக் கொடுப்பார்கள். தெய்வம் பிறந்தது கதையில் வருகிற ராமசாமி குழந்தையின் கேள்வியில் புளகாங்கிதமடைகிறார். அந்தக் கேள்வியின் தாத்பரியத்தைக் கண்டு அகமகிழ்கிறார். கு.அழகிரிசாமி தன்னுடைய அரசியல் சார்பு நிலையை ஜகந்நாதன் மூலம் வெளிப்படுத்துகிறார் என்று சொல்லலாம். இயல்பு மாறாமல் குழந்தையின் கேள்விகளை திறம்பட புனைவாக்கித் தந்து கதை முடிவில் ஒரு புதிய வெளிச்சத்தைக் காட்டுகிறார் கு.அழகிரிசாமி.

1960 – ஆம் ஆண்டு தாமரை பொங்கல் மலரில் வெளியான கதை தெய்வம் பிறந்தது.

மேலே சொன்ன கதைகளுக்கு மாறாக குழந்தைகளின் பேதமையைப் பற்றி எழுதிய் கதை பேதமை. 1960- ஆம் ஆண்டு மார்ச் மாதம் கலைக்கதிர் பத்திரிகையில் வெளியான கதை. வாசகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் கதை.

தெருவில் கடைக்காரரால் மிருகத்தனமாக அடிக்கப்பட்டு கதறிக் கொண்டிருக்கும் இரண்டு கந்தலுடையில் அழுக்காக இருந்த ஏழைச்சிறுவர்களை அந்த அடியிலிருந்துக் காப்பாற்றுகிற கதாநாயகன் சற்று நேரத்துக்கு முன்னால் அவனே அடிக்க வேண்டும் என்று நினைத்தவன் தான். வீடு வீடாகச் சென்று பிச்சைச்சோறு வாங்கி வந்து கொண்டிருந்த வயதான குருட்டுப்பிச்சைக்காரரின் தகரக்குவளையில் அந்த இரண்டு சிறுவர்களும் மண்ணையள்ளிப் போட்டு விட்டுச் சிரிக்கிறார்கள். அதைப்பார்த்த எல்லோருக்குமே ஆத்திரம் வந்தது. ஆனால் கடைக்காரர் அந்த ஆத்திரத்தை கண்மண் தெரியாமல் காட்டி விட்டார். குழந்தைகளின் அவலக்குரலைத் தாங்க முடியாமல் அவரிடமிருந்து அவர்களை மீட்டு அவர்களுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

ஊருக்கு வெளியே இருந்த குடிசையில் அவனுடைய அம்மா மட்டுமல்ல அக்கம்பக்கத்திலிருந்த குடிசைகளிலிருந்தவர்களும் கூட அந்தக் குழந்தைகளை அடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்ப்போது கூட குழந்தைகளின் பேதமையை நினைத்து, இப்படியொரு கொடூரமான வாழ்க்கையிலிருந்து தப்பிக்கத் தானே எண்ணம் வரும் என்றெல்லாம் யோசிக்கிறார் கதாநாயகன். ஆனால் அந்த இடத்தை விட்டுப் புறப்படும்போது அந்தக் குடிசைக்குத் தட்டுத்தடுமாறி இன்னொரு குருட்டுப்பிச்சைக்காரன் ஒரு கையில் குவளையும். ஒரு கையில் தடியுடன் வந்து சேர்கிறான். அவன் தான் அந்தக் குழந்தைகளின் தந்தை. அதைப் பார்த்ததும் கதாநாயகனுக்கு நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கிறது. குருடன் பெற்ற பிள்ளைகள் தான் குருடன் சோற்றில் மண்ணள்ளிப் போட்டுச் சிரித்தவர்கள்.

துயரம் தாங்க முடியாமல் கடைசி வரியில் குழந்தைகளே! என்று விளிக்கிறார் கதாநாயகன்.

புறவயமான சமூகச்சூழலின் விளைவாக இருந்தாலும் இந்தக் கதையில் வரும் குழந்தைகளின் பேதமையை யாராலும் பொறுத்துக் கொள்ளமுடிவதில்லை.

குழந்தைகளைப் பற்றிய இன்னுமொரு கதை இருவர் கண்ட ஒரே கனவு.

கு.அழகிரிசாமியின் கலை உன்னதங்களை மட்டுமல்ல, கீழ்மைகளையும் நமக்குக் காட்டுகிறது. அவரளவுக்கு நுட்பமாக குழந்தைகளின் உலகை வெளிப்படுத்தியவர்கள் தமிழில் மிகவும் குறைவு.

இருவர் கண்ட ஒரே கனவு கதையில் ஏழைத்தாய் காய்ச்சலினால் இறந்து போய் விடுகிறாள். அவளுடைய இரண்டு பையன்களும் இரண்டு மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் கிடக்கிறார்கள். அவர்களைப் பார்த்து இரக்கப்பட்டு கஞ்சி கொடுக்கிறார் விவசாயத்தொழிலாளியான வேலப்பன். அடுத்தவர்கள் கொடுக்கும் எதையும் வாங்கிச் சாப்பிடக்கூடாதென்ற அம்மாவின் கண்டிப்பினால் ஆசைப்பட்டு கஞ்சியை வாங்கிவந்த சின்னவனிடம் பெரியவன் சண்டைபோட்டு கஞ்சியைக் கீழே கொட்டி விடுகிறார்கள். அம்மாவிடம் புகார் சொல்வதற்காக ஓடிவந்தால் அம்மா இறந்து கிடக்கிறாள். எப்போதும் அவள் விளையாடும் விளையாட்டென்று நினைத்து அவளை அடித்துக் கிள்ளி எழுப்புகிறார்கள். அம்மாவின் இழப்பைக் கூட உணரமுடியாத பிஞ்சுக்குழந்தைகள். முன்னர் கஞ்சி கொடுத்த வேலப்பன் தன் வீட்டில் அவர்களைத் தங்கவைக்கிறான். இரவில் இரண்டு குழந்தைகளும் ஏக காலத்தில் அம்மா என்றலறி எழுந்திரிக்கிறார்கள். கேட்டால் இருவருக்கும் ஒரே கனவு. அவர்களுடைய அம்மா வந்து தான் உடுத்தியிருந்த சேலையை அவர்கள் மீது போர்த்திவிட்டு நான் சாகவில்லை.. என்று சொல்லிவிட்டுப் போவதாக கனவு வந்து அம்மாவை தேடுவதாகக் கதை முடிகிறது.

கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை மட்டுமல்ல அநாதரவான குழந்தைகள், ஏழைச்சிறுவர்கள், திரும்பத்திரும்ப கு.அழகிரிசாமியின் கதைகளில் வருகிறார்கள். அவர்களுடைய மனநிலையை அவ்வளவு யதார்த்தமாகச் சித்தரிக்கிறார். கு.அழகிரிசாமியின் கதைகளில் குழந்தைகள் அழியாத சித்திரங்களாக அமைந்து விடுகிறார்கள். கதையின் முக்கியக்கதாபாத்திரங்களாக இல்லாவிட்டாலும் கூட அவர்களுடைய இருப்பை கு.அழகிரிசாமி அபூர்வமான வண்ணத்தில் தீட்டி விடுகிறார். குழந்தைகளின் மீது அவர் கொண்ட பேரன்பும் பெருநேசமும் அவரை அப்படி எழுத வைத்திருக்கிறது.

தரிசனம் என்ற கதையிலும் முத்து என்ற ஒரு ஆதரவற்ற கிழவரும், ஆண்டியப்பன் என்ற அநாதையான சிறுவனும் வருகிறார்கள். முதியவருக்கு உணர்வுகள் மரத்துப் போய் விடுகிறது. எதுவும் நினைவிலில்லை. சித்தசுவாதீனமில்லாதவர் என்று ஊரார் சொல்கிறார்கள். ஆனால் அவர் அன்றாடம் கூலிவேலைக்குப் போய் கிடைக்கும் கூலியைத் தூரத்து உறவினரான ஆறுமுகத்திடம் கொடுத்து அவனிடமும் அவன் மனைவியிடமும் ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டு திண்ணையில் முடங்கிக் காலத்தைக் கழிக்கிறார். ஆண்டியப்பனுக்கோ தாயும் தந்தையும் இறந்து ஆதரவின்றி அந்த ஊர் பெரிய தனக்காரரிடம் வேலை பார்த்துக் கொண்டு தொழுவத்தில் படுத்துக் கிடக்கிறான்.  பத்து நாட்களாக விடாமல் பெய்யும் மழை சிறுவனையும் திண்ணைக்குத் தள்ளுகிறது. இருவரும் திண்ணையில் இரவுப்பொழுதைக் கழிக்கிறார்கள். அப்போதுதான் திண்ணையின் மூலையில் ஒரு குருவிக்கூடிருப்பதைப் பார்க்கிறார் கிழவர் முத்து. அது தன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்காமல் தட்டழிவதைப் பார்க்கிறார். வெளியே மழை பெய்து கொண்டேயிருக்கிறது.

மழையினால் கூலி வேலையில்லையென்பதால் ஆறுமுகத்தின் மனைவி வைது கொண்டே சோறு போடுகிறாள். அவள் போடும் சோற்றில் பாதியை ஒரு காகிதத்தில் எடுத்து வந்து தாய்க்குருவி கண்ணில் படும் இடத்தில் வைத்து விடுகிறார். தாய்க்குருவி சோற்றை எடுத்துக்கொண்டு போய் குஞ்சுகளுக்கு ஊட்டுகிற காட்சியைப் பார்த்து கிழவர் தெய்வ தரிசனத்தைக் கண்டமாதிரி கண்களில் கண்ணீர் வழிய கும்பிடுகிறார்.  இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்டியப்பன் தொழவேண்டியது அவரையல்லவா என்று அவரைக் கும்பிடுகிறான்.

இந்தக்கதை முழுவதும் கிழவர் முத்துவைச் சுற்றியே வந்தாலும் ஆண்டியப்பன் என்ற கதாபாத்திரமும் தரிசிக்கிறது. இரண்டுபேரும் இரண்டு தரிசனங்களைப் பார்க்கிறார்கள். இரண்டு தரிசனங்களின் வழியாக வாசகர்களுக்கு வேறொரு தரிசனத்தைத் தருகிறார் கு.அழகிரிசாமி.

எளியவர்களின் வழியாகவே வாழ்க்கையின் உன்னதங்களை உணர்த்துகிறார் கு.அழகிரிசாமி. குழந்தைகளின் இயல்புணர்வை அவரளவுக்கு பதிவு செய்தவர்களும் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்குக் கதைகளில் குழந்தைகள் வந்து செல்வதையும் பார்க்கும்போது, எந்தளவுக்கு கு.அழகிரிசாமியின் மனதில் குழந்தைகளின் மீதான பிரியமும் பேரன்பும் இருக்கிறது என்பது புரியும். 

எங்கள் அன்புக்குரிய கலைஞன் கு.அழகிரிசாமியின் கதைகளில் குழந்தைகள் சுதந்திரமாக இருக்கிறார்கள். தங்களுக்கு நேர்ந்த புறக்கணிப்பைத் தாங்களே சரி செய்து கொள்கிறார்கள். வாழ்க்கையின் சிடுக்குகளை எளிதாக அவிழ்த்து விடுகிறார்கள். தங்களுடைய நேசத்தினாலும் பரிவினாலும் இந்தப் பிரபஞ்சத்தையே பற்றியணைக்கும் வல்லமை கொண்டவர்களாகிறார்கள்.

அவர்கள் யாவரும் கு.அழகிரிசாமியே! எங்கள் மூதாயே!

நன்றி - புக் டே



 

 

Friday 27 August 2021

கனிவின் ஒளியும் குரூரத்தின் இருளும்

 

கனிவின் ஒளியும் குரூரத்தின் இருளும் –

இரண்டு சிறுகதைகளை முன்வைத்து


உதயசங்கர்.

உலக இலக்கியத்தில் ரயில் நிலையம் போல வேறு ஒரு இடம் அதிகமாகப் பதிவாகியிருக்குமா என்பது சந்தேகமே. உலகப்புகழ்பெற்ற டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவில் ரயில்வே ஸ்டேஷன் ஒரு கதாபாத்திரமாக வருகிறது. அன்னா ரயிலில் பாய்ந்தே தற்கொலை செய்து கொள்கிறாள். அஸ்தபோ ஸ்டேஷனில் டால்ஸ்டாய் தன்னந்தனியராக தன் இறுதிக்கணங்களைக் கழிக்கிறார். நதானியல் ஹாதர்னின் சுவர்க்க சாலை என்ற சிறுகதை இரும்புக்குதிரையை அதாவது ரயில் எஞ்சினை முன்வைத்து ஜான் பனியனின் பயணியின் முன்னேற்றம் என்ற நாவலை கேலி செய்து எழுதப்பட்டது.  இந்திய இலக்கியத்திலும் மிக முக்கியமான பங்கை ரயில்களும், ரயில்வே ஸ்டேஷன்களும் வகிக்கின்றன. ரஸ்கின் பாண்டின் கதைகளில் குழந்தைகளின் அன்புக்குரியதாக ரயில்களும் ரயில்வே ஸ்டேஷனும் வருவதைப் பார்க்கலாம். அப்படி தமிழிலக்கியத்திலும் கு.ப.ரா.வின் விடியுமா என்ற சிறுகதை முழுவதும் ஓரிரவு ரயில்பயணத்தில் நடக்கிறது. உணர்ச்சிகளின் சங்கமமாக, உணர்ச்சிகளின் குவிமையமாக, வாழ்க்கை பற்றிய அடிப்படையான பார்வையை உருவாக்குகிற இடமாக ரயில்களும் ரயில்வே ஸ்டேஷன்களும் இலக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.

தமிழ்ச்சிறுகதை மேதைகளில் ஒருவரான கு.அழகிரிசாமியின் இரண்டு சிறுகதைகளில் தகப்பனும் மகளும் , குமாரபுரம் ஸ்டேஷன், ஆகியவற்றில் ரயிலையும் ரயில்வே ஸ்டேஷனையும் முக்கியமான களமாகவும் கதாபாத்திரமாகவும் சித்தரித்திருக்கிறார். அதில் தகப்பன் மகளும் கதையில் ரயிலில் எதிரே உட்கார்ந்திருக்கும் இரண்டு இளைஞர்களிடமிருந்து தன்னுடைய சிறுமியான மகளைப் பாதுகாப்பதற்காக அந்தச் சிறுமியின் தந்தை செய்கிற கோணங்கித்தனங்களே அவரை ஒரு அற்பனாகக் காட்டுகிற கதை. பொதுவாக கு.அழகிரிசாமி வாழ்க்கையின் யதார்த்தமான காட்சிகளையே சித்தரிக்கிறார். அந்தக் காட்சிச் சித்தரிப்பில் மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்துகிற மனவிகாரங்கள், விசித்திரங்கள், மானுடத்தருணத்தின் ஒளிக்கீற்றுகள், ஆகியவற்றையே அவர் நமக்குத் தரிசனங்களாகத் தருகிறார். எளிமையான வாழ்க்கையை எளிமையான சொற்களால், எளிமையான வடிவத்தில், எளிமையான கலையாக செதுக்குகிறார் கு.அழகிரிசாமி. அவருடைய தனித்துவமென்பது சாமானியர்களின் வாழ்வை சாதாரணமாகச் சொல்வது தான். அந்த சாதாரணத்துவத்துக்குள்  தார்மீகமான அறவிழுமியங்களைத் தேடுகிறார்.

தான் கண்டடைந்த மானுடத்தார்மீக அறவிழுமியங்களை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் வாசகர்கள் முன் காட்டுகிறார் கு.அழகிரிசாமி. குழந்தையின் களங்கமின்மையும், தான் கண்டுபிடித்ததை உடனே காட்டிவிடும் வெள்ளந்தித்தனமும், கபடின்மையும் தான் கு.அழகிரிசாமியின் கலைத்துவம். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்கள் கண்டெடுக்கும் உடைந்த பொம்மையோ, அறுந்து விழுந்த பொத்தானோ, துருப்பிடித்த ஆணியோ, பழைய பாசிமணியோ, உண்மையான முத்துகளோ, பவளங்களோ, எல்லாம் ஒன்று தான். எல்லாவற்றையும் சமமான மதிப்புடனே அவர்கள் வைத்துக்கொள்வார்கள். அப்படித்தான் கு.அழகிரிசாமியும் தான் கண்ட அனைத்திலும் உள்ளுறைந்திருந்த மானுடநாடகத்தைத் தன்னுடைய கதைகளில் நிகழ்த்தினார்.

ஒரு சம்பவம், ஒரு தருணம், ஒரு நிகழ்ச்சி, ஒரு உணர்ச்சியைச் சுற்றி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு எழுதப்படும் நவீனச்சிறுகதைகளுக்கு மாறாக கு.அழகிரிசாமியின் குமாரபுரம் ஸ்டேஷன் கதையில் பல சம்பவங்கள், பல தருணங்கள், ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பல கதாபாத்திரங்கள், பல உணர்ச்சிச்சுழல்கள், எல்லாம் இயல்பாக ஒன்று கூடி ஒரு மானுடத்தரிசனத்தை உருவாக்குகிறது. அந்தத் தரிசனம் இந்த வாழ்வைக் கனிவுடன் சாந்தமாக உற்று நோக்குகிறது. கு.அழகிரிசாமி அந்தக்கனிவின் சிகரத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

கோவில்பட்டி என்ற சிறுநகரத்துக்கு அருகில் பத்து கி.மீ. தூரத்திலுள்ள இடைசெவல் என்ற கிராமத்தில் தமிழிலக்கியத்தின் இரண்டு மேதைகள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், உருவானார்கள். அவர்கள் அண்டைவீட்டுக்காரர்கள் என்பதும் சமவயதினர் என்பதும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் இரண்டு பேரும் கம்யூனிச இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதும் இரண்டு பேரும் இசைமீது பெரும்பித்து கொண்டவர்கள் என்பதும், பழந்தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் என்பதும் தமிழிலக்கியத்தில் பாரதூரமான தாக்கங்களை உருவாக்கியவர்கள் என்பதும் சாதாரணமான விஷயங்களில்லை.

23-9-1923 அன்று கு.அழகிரிசாமி பிறந்தார். ஆரம்பக்கல்வியை கோவில்பட்டியிலுள்ள ஆயிரவைசிய ஆரம்பப்பள்ளியிலும், உயர்நிலைக்கல்வியை வ.உ.சி. அரசுப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை கல்வி கற்றார். கல்வியில் மிகச்சிறந்த மாணவனாகவே இருந்தார் கு.அழகிரிசாமி. உடல்நிலை காரணமாக பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் போன கி.ரா. பக்கத்து வீட்டுக்காரனான கு.அழகிரிசாமியுன் அத்யந்த நட்பு கொண்டிருந்தார். இருவரின் பாலிய காலத்தைப் பற்றி விரிவாக கி.ரா. நிறைய எழுதியிருக்கிறார்.

இடைசெவலுக்கு அருகிலிருந்த குமாரபுரம் ஊரில் அமெரிக்கன் கல்லூரியில் படித்த ஆங்கிலம் தெரிந்த  எட்டக்காபட்டி முத்துச்சாமி என்ற கரிசல்க்காட்டு சம்சாரியிடமிருந்து ஆண்டன் செகாவின் சிறுகதை நூலை வாங்கிக் கொண்டு வாசித்தார். அவரையே தன் இலக்கியகுருவாக கு.அழகிரிசாமி வரித்துக் கொண்டார். அவரிடமிருந்த இலக்கியநூல்களை அழகிரிசாமியும் அவர் மூலமாக கி.ரா.வும் கற்கத் தொடங்குகிறார்கள். பிறகு இருவரும் அப்போது இளைஞர்களை ஈர்த்துவந்த கம்யூனிச இயக்கத்தில் இணைந்தார்கள். கு.அழகிரிசாமி சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இடைசெவல் கிளையின் செயலாளராக இருந்தார். கி.ரா. இந்திய விவசாயிகள் சங்கத்தின் செயலாளராக இருந்தார். கோவில்பட்டி கவிஞர் கந்தசாமிச்செட்டியார் மூலம் கவிதையில் ஈடுபாடு கொண்டு கவிதைகளை எழுதினார். பள்ளியிறுதி வகுப்பு முடிந்ததும் அரசு வேலைக்கு சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார்.  பத்திரப்பதிவுத்துறையில் வேலை கிடைத்து ஆரம்பத்தில் சுரண்டையிலும் பின்னர் தென்காசியிலும், நாங்குநேரியிலும் சில மாதங்கள் வேலை பார்த்தார்.. தென்காசியில் வேலைபார்த்தபோது ரசிகமணி டி.கே.சி.யைச் சந்தித்தார். அவருடைய நன்மதிப்பைப் பெற்று ரேடியோவில் கவியரங்க நிகழ்ச்சியில் ரசிகமணியுடன் இணைந்து பங்கேற்றார்.

1943 –ல் கு.அழகிரிசாமியின் முதல்கதையான உறக்கம் கொள்ளுமா? என்ற கதை ஆனந்த போதினியில் வெளியானது. 1944 – ஆம் ஆண்டு பிரசண்டவிகடனில் உதவி ஆசிரியர் வேலையில் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தார். அதன்பிறகு தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளராகவே வேலை பார்த்தார். பிரசண்டவிகடன், சக்தி, தமிழ்மணி, தமிழ்நேசன், நவசக்தி, தமிழ்வட்டம், சோவியத் நாடு போன்ற பத்திரிகைகளில் வேலை பார்த்தார். 1952 –ல் அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு சிரிக்கவில்லை வெளியானது. அதன்பிறகு 13 சிறுகதைத்தொகுப்புகள், 3 நாவல்கள், 8 கட்டுரை நூல்கள், 3 சிறுவர் நூல்கள், 2 நாடகங்கள், 11 மொழிபெயர்ப்புகள், 4 பதிப்பு நூல்கள் என்று இலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்திருக்கிறார்.

கம்யூனிச இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டை அவர் கி.ரா.வுக்கு எழுதிய கடிதங்களில் காணமுடிகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாங்கி அனுப்பும்படியும், ஜீவாவின் சிங்கக்கர்ஜனையைப் பொதுக்கூட்டத்தில் கேட்டதாகவும், அந்தக்கூட்டத்தில் இடதுசாரி இயக்கத்தின் தலைவர்களான ராமநாதன், ராமகிருஷ்ணன், சிண்டன், எம்.ஆர்.வி, போன்றோர் கலந்து கொண்டு பேசியதாகவும் எழுதியிருந்தார். பி.ராமமூர்த்தியின் பேச்சைக் கேட்க ஆவலாக இருந்ததாகவும் அவர் வராத குறையை ஜீவா தீர்த்துவைத்ததாகவும், மறுநாள் பாமினிதத்தின் பேச்சைக் கேட்க போகப்போவதாகவும், ஜனசக்தி, பீப்பிள்ஸ் ஏஜ், தவறாமல் வாசிப்பதாகவும், முடிந்தவரை இயக்கம் சார்ந்த செய்திகளை அவர் வேலை பார்க்கும் பத்திரிகையில் முடிந்தவரை பிரசுரிக்க முயற்சிப்பதாகவும் எழுதியிருக்கிறார்.

1962 –ல் எழுத்து பத்திரிகை எதற்காக எழுதுகிறேன்? என்ற கேள்வியை முன்வைத்து சிறந்த எழுத்தாளர்களிடமிருந்து பதிலை வாங்கி கட்டுரைத் தொடராகப் பிரசுரித்தது. அதில் கு.அழகிரிசாமி எழுதும்போது,

“ நான் மனிதனாக வாழவிரும்புகிறேன்.. நான் மனிதனாக சுதந்திர புருஷனாக இருப்பதற்கு வழி என்ன? நான் எழுதுவது ஒன்றே வழி. நான் முழுச்சுதந்திரத்தோடு இருக்கச் சந்தர்ப்பங்கள் துணை செய்யாத சமயத்திலும் மன உலகில் சுதந்திரத்தை இழக்கத்தயாராக இல்லை. ஆகவே எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன்…..

பிரசாரத்துக்காக எழுதவில்லையா, நிர்ப்பந்துக்காக எழுதவில்லையா, பணத்துக்காக எழுதவில்லையா, வாழ்க்கைச் செலவுக்காக எழுதவில்லையா என்றெல்லாம் கேட்கலாம். இத்தனைக்காகவும் நான் எழுதுகிறேன் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் அடிப்படை என்னவோ ஒன்று தான். புறக்காரணங்கள் எவையாக இருந்தாலும் என் குறிக்கோள் மாறிவிடவில்லை. ஒருவேளை உள்ளே மறைந்து நிற்கலாம். ஆனால் மாறவில்லை. மாறாது. எனவே சந்தர்ப்பத்தேவைகளையோ, புறக்காரணங்களையோ பெரிதுபடுத்தி முழுக்காரணங்கள் ஆக்கவேண்டியதில்லை. லட்சியம் தவறும்போது தன் ஆத்மாவுக்கும் மனித குலத்துக்கும் துரோகம் இழைக்கும்போதும்தான் அவற்றை முழுக்காரணங்கள் ஆக்க முடியும்… இப்படிப்பட்ட காரியத்தைக் கலைகளினாலேயே சாதிக்கமுடியும். நான் பயின்ற கலை எழுத்து. அதனால் எழுதுகிறேன்.. ( எழுத்து மே, 1962 )

தான் ஏன் எழுதுகிறேன் என்பதைப் பற்றிய ஒரு எழுத்தாளனின் சுயவாக்குமூலம் இது. கு.அழகிரிசாமியே சொல்லியிருக்கிறபடி மனிதன் என்ற அந்த மகத்தான சொல்லின் முழு அர்த்தத்திலேயே தன்னுடைய கலைக்கொள்கையை வகுத்து அதைப் பின்பற்றினார். எல்லாவித நிர்ப்பந்தங்களுக்கேற்றபடியும் சந்தர்ப்பங்களுக்கேற்றபடியும் அவர் எழுதியிருந்தாலும் அவருடைய தார்மீகமான மானுட அறவிழுமியங்களின் பாதையிலேயே தன்னுடைய பயணத்தை அமைத்துக் கொண்டார். அவர் எழுதியுள்ள 105 கதைகளில் ஏராளமான கதைகள் உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்படவேண்டியவை. சிரிக்கவில்லை, தவப்பயன், திரிபுரம், ராஜா வந்திருக்கிறார், வெறும்நாய், அன்பளிப்பு, பாலம்மாள் கதை, அழகம்மாள், பெரியமனுஷி, திரிவேணி, காலகண்டி, தம்பி ராமையா, சுயரூபம், குமாரபுரம் ஸ்டேஷன், இருவர் கண்ட ஒரே கனவு, பேதமை, போன்ற கதைகளை மிகச்சிறந்த கதைகளாகக் கொள்ளலாம்.

இந்தக்கட்டுரையில் 1960-ல் அவர் எழுதி கல்கியில் வெளியான குமாரபுரம் ஸ்டேஷன் என்ற கதையைப் பற்றியும் 2002 – ல் நான் எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு என்ற கதையைப் பற்றியும் பேசிப்பார்க்கலாம்.

குமாரபுரம் ஸ்டேஷன் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன் என்ற முதல்வரியுடன் தொடங்குகிறது கதை. சுற்றிலும் ஊரோ, ஆள் நடமாட்டமோ இல்லாத ஸ்டேஷன். அந்த ஸ்டேஷனின் வரலாற்றிலேயே முதன்முதலாக வந்திறங்குகிறார் முக்கியஸ்தர் சுப்பராம ஐயர். கோவில்பட்டியில் ஒரு பள்ளியின் தலைமையாசிரியரான அவர் தன்னுடைய பாலியகால நண்பரான குமாரபுரம் ஸ்டேஷன் மாஸ்டரோடு மூன்று நாள் விடுமுறையைக் கழிப்பதற்காக வந்திருந்தார். ஸ்டேஷன் மாஸ்டரின் மகனின் ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாட வந்திருந்த ஒரே விருந்தினர். குமாரபுரம் ஸ்டேஷனின் அலாதியான தனிமை, யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அவ்வப்போது வந்துபோகும் ரயில்வண்டிகள், பயணிகள் யாரும் வராமல் தண்ணீர்ப்பந்தலாக நின்று கொண்டிருக்கும் ஸ்டேஷன் என்று சுப்பராம ஐயர் அலட்சியமாக நினைக்கிறார். ஆனால் தவநிலையில் அந்தக் கரிசக்காட்டில் அமைதியாக நின்று கொண்டிருக்கும் குமாரபுரம் ஸ்டேஷனின் வழியே உலகத்தைப் பார்க்கிறார் ஸ்டேஷன் மாஸ்டர்.

இரண்டு நாட்கள் அங்கே தங்கிய பிறகு, மூன்றாவது நாளில் குமாரபுரம் ஸ்டேஷன் அவருக்கு வேறொன்றாகத் தெரிகிறது. அடுத்து பத்து கி.மீ. தூரத்திலிருந்த கோவில்பட்டி ஸ்டேஷனுக்கு வருகிற இருபது நிமிடப்பயணத்திலும் சுப்பராம ஐயருக்கு ஞானம் கிடைக்கிறது. தான் இருக்குமிடத்திலிருந்து உலகத்தைப் பார்க்கும் ஞானம் கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர். சூதுவாதில்லாமல் உரக்கப்பேசிக்கொண்டிருக்கும் கிராமத்துவாசிகள், ஊர்க்குழந்தைகளையும் தன்னுடைய குழந்தையோடு மேல் படிப்புக்காக பள்ளிக்கூடத்தில் சேர்க்க அழைத்து வந்த பெரியவர், மேல்படிப்புக்காக அந்தக்குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்து அனுப்பும் ஆசிரியர், ரயிலில் வருகிற திருநெல்வேலி பங்கஜ விலாஸ் ஹோட்டல் முதலாளியான பூதாகாரமானவர் தனக்குக் குழந்தையில்லையென்றால் என்ன? தன்னுடைய ஹோட்டலில் சாப்பிடுகிற அத்தனை குழந்தைகளும் தன் குழந்தைகள் தான் என்று சொல்லும் உரிமை. இடைசெவல் குழந்தைகளையும் கல்லூரிக்கு வரும்போது தன்னுடைய ஹோட்டலில் தான் வந்து சாப்பிடவேண்டும் என்ற வேண்டுகோளோடு வழியனுப்புகிற அன்பு, கோவில்பட்டியில் அந்தப்பையன்களுடைய ஊர்க்காரரான போர்ட்டரின் விருந்தோம்பல், எல்லாக்காட்சிகளையும் கண்ணுற்ற சுப்பராம ஐயர் பரவசமடைகிறார். குமாரபுரம் ஸ்டேஷனை மிகப்பெரிய பள்ளிக்கூடமென்று நினைக்கிறார்.

ஒரு மகத்தான மானுட தரிசனத்தை குமாரபுரம் ஸ்டேஷனில் மிக லகுவாக நிகழ்த்துகிறார் கு.அழகிரிசாமி. கலையமைதியின் உச்சத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது குமாரபுரம் ஸ்டேஷன். அடுத்தடுத்த காட்சிகளில் சுப்பராம ஐயருக்கு மட்டுமல்ல நமக்கும் மானுடமேன்மையின் உன்னதம் தெரிகிறது. எளிய மனிதர்களின் எளிய உரையாடல்கள், எளிய வாழ்க்கைச் சித்திரங்களின் மூலம் கதையினை பல அர்த்தத்தளங்களுக்குக் கொண்டுபோகிறார் கு.அழகிரிசாமி.

முதலில் ஸ்டேஷன் பற்றிய வர்ணனை. ஸ்டேஷன் மாஸ்டருடனான உரையாடல். ஸ்டேஷனின் தனிமை ஏற்படுத்தும் உணர்வு. ரயில் வரும் முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஸ்டேஷன் உயிர் பெற்று எழுந்து நாடகக்காட்சிகளைத் தொடங்குகிறது. அந்த மானுட நாடகம் ரயிலிலும் தொடர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான பதிவுகளை ஏற்படுத்துகிறார் கு.அழகிரிசாமி. அதனால் ஏற்கனவே குமாரபுரம் ஸ்டேஷன் தங்கலில் மனம் மாறத்தொடங்கியிருந்த சுப்பராம ஐயர், ரயில் பயணத்தில் முற்றிலும் மாறிவிடுகிறார். சுப்பராம ஐயரின் மன ஆழத்திலிருந்து பேரூணர்வு எழுந்து அவரைப் பரவசப்படுத்துகிறது. அதே பரவசத்தை கிராம்த்துப்பெரியவரும் குழந்தைகளும் பள்ளிக்கூடத்தில் அடைகிறார்கள். சுப்பராம ஐயர் குமாரபுரம் ஸ்டேஷனை ஞானம் தந்த போதிமரமாக நினைக்கிறார்.

கு.அழகிரிசாமியின் கலை செகாவியன் பாணியிலானது. யதார்த்தக்காட்சிகளின் வழியே சாமானியர் மக்களின் குணவிசித்திரங்களின் வழியே எளிய மொழியில் கட்டமைக்கப்பட்டு எழுப்பப்படுவது, கொஞ்சம் அசந்தாலும் அவருடைய கலையின் சூட்சுமம் பிடிபடாமல் போய் விடும் வாய்ப்பு உணடு. அதனால் கதைகள் சாதாரணமானதாகத் தோற்றமளிக்கும் ஆபத்தும் நேரிடும். கு. அழகிரிசாமியிடம் திருகுமுருகலான வலிந்தெழுதும் மொழி இல்லை. வாசகர்களை மயக்கும் உத்திகளில்லை. எதிர்பாராத திருப்பங்களில்லை. விநோதமான கருப்பொருளில்லை. ஆனால் கரைபுரண்டோடும் வாழ்க்கைச்சித்திரங்கள் இருக்கின்றன. அவர் காட்டுகிற காட்சிகள் சாதாரணமானவை தான். அவர் சித்தரிக்கிற மனிதர்கள் சாதாரணமானவர்கள் தான். ஆனால் அவற்றின் மூலம் ஒரு மானுடத்தருணத்தை உருவாக்க முயற்சிக்கிறார். அந்த மானுடத் தருணங்களின் வழியாக மனிதர்களின் மீது கனிவு கொள்கிறார். பரிவையும் அன்பையும் காட்டுகிறார். வாசகர்களிடம் இதோ பாருங்கள். இந்த மனிதர்கள் சாதாரணமானவர்கள் தான். அவர்கள் சாதாரணமாக இருப்பதின் வழியே தான் இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறார்கள். அன்பைப் பரிமளிக்கச்செய்கிறார்கள் என்று கிசுகிசுக்கிறார். பொதுவாக அவர் உரக்கப்பேசுவதில்லை. ஆனால் அவருடைய முணுமுணுப்பை உற்றுக் கேட்காவிடில் கு.அழகிரிசாமியின் மேதைமை நமக்குப் புரியாது.

குமாரபுரம் ஸ்டேஷன் கதையை தான் எழுதியதைப் பற்றி கு.அழகிரிசாமி கதைக்கு ஒரு கரு என்ற தலைப்பில் 1963 – ல் தாமரையில் எழுதிய கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“ குமாரபுரம் ஸ்டேஷனுக்கு குமாரபுரம் ஸ்டேஷன் தான் கரு. என் சொந்த கிராமமாகிய இடைசெவலுக்கு அருகில் உள்ள இந்த ஸ்டேஷன் தான் நான் முதன்முதலில் பார்த்த ரயில்வே ஸ்டேஷன். நடுக்காட்டில் ஒரு கட்டடம். கிராமத்தில் காணும் எந்த வீட்டையும் விட அழகும் வசதியும் வாய்ந்தது. அதை ஒட்டி சில வீடுகள். சுகமான மனோரம்யமான வாழ்க்கை! நடுக்காட்டில் உள்ள வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது, தினந்தோறும் வனபோஜனம் சாப்பிடும் இன்பானுபவமாகத் தோன்றியது. ஸ்டேஷன் மாஸ்டரின் வாழ்க்கை கிராமத்து ஜனங்களின் வாழ்க்கையை விட கவர்ச்சிகரமாக அந்தச் சிறு வயதில் எனக்குத் தோன்றியது. அப்பொழுது மனசைக் கவர்ந்த ஒரு இன்ப உலகமாகக் காட்சியளித்த அந்த குமாரபுரம் ஸ்டேஷன் அந்த “ முதற்காதல் “ – எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகுகூட உள்ளத்தைக் கவர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஸ்டேஷனை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். பல வருஷங்களுக்குப் பிறகு எழுதினேன். காதல் நிறைவேறியது போல் இருந்தது. எனக்குப் பிடித்த என் சிறுகதைகளில் குமாரபுரம் ஸ்டேஷனும் ஒன்று “

இந்தக் கதையை கு.அழகிரிசாமி எழுதிய காலம் நாடு விடுதலையடைந்து வாழ்வில் தேனும் பாலும் தெருக்களில் ஓடும் என்று அரசியல் கட்சிகள் சொல்லிக் கொண்டிருந்த காலம். நிலவுடமைச் சமூக மதிப்பீடுகள் மெல்ல மெல்ல மறைந்து நவீன காலத்தின் புதிய மதிப்பீடுகள் உருவான காலம். கல்வியினால் கடைத்தேறிவிடலாம் என்ற நம்பிக்கை பெருகிய காலம். நம் கண்ணெதிரே ஒரு புதிய உலகம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்ற நம்பியிருந்த காலம். அந்தக் காலத்தில் கிராமத்து வெகுளித்தனமும், அன்பும், பரிவும் எப்படி நவீன சமூகத்தின் அடையாளமாக அங்கே தன்னந்தனியாக நின்று கொண்டிருந்த குமாரபுரம் ஸ்டேஷனையும் அந்த ஸ்டேஷன் மாஸ்டரையும், அங்கே அலட்சியமாக வந்து தங்கியிருந்த பள்ளியின் தலைமையாசிரியரான சுப்பராம ஐயரையும் மாற்றுகிறது. நவீன சமூகம் எந்தப் பாதையில் போகவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இடதுசாரித்தத்துவத்திலும் இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த கு.அழகிரிசாமியின் கலைக்கொள்கையை மையப்படுத்திய கதை என்று குமாரபுரம் ஸ்டேஷன் கதையைச் சொல்லலாம். கு.அழகிரியிசத்தைப் புரிந்து கொள்வதற்கு குமாரபுரம் ஸ்டேஷன் கதையை வாசிக்காமல் கடந்து செல்லமுடியாது.

 குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் 1876 – ஆம் ஆண்டு கோவில்பட்டி – திருநெல்வேலி ரயில் மார்க்கத்தில்  அமைந்திருக்கிறது. அருகில் எந்த ஊரும் கிடையாது. கு.அழகிரிசாமி எழுதியிருப்பதைப் போல அது ஒரு காட்டு ஸ்டேஷன் தான். எப்போதாவது பகலில் ஆடு, மாடு, மேய்க்கும் பையன்களோ, கரிசல்க்காடுகளில் வேலை செய்பவர்களோ வந்து தாகம் தீர்க்கவும் அங்கிருக்கும் வேப்பமரம், புளிய மரம், பன்னீர் மரம், பிள்ளைவளத்தி மரம், விளாமரம், கருவை, மரங்களின் நிழலில் ஓய்வெடுப்பதும் உண்டு. நான் குமாரபுரம் ஸ்டேஷனில் 1999 – லிருந்து 2018 – வரையிலான காலத்தில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வேலை பார்த்தேன். எங்கு மாறுதல் தந்தாலும் மீண்டும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கு வந்து விடுவேன். குமாரபுரம் ஸ்டேஷன் அப்படி என்னை ஈர்த்திருந்தது. அது மட்டுமல்ல அதன் ஏகாந்த அமைதியும் அவ்வப்போது வீசும் ஊ ஊ ஊ என்று கூப்பிடும் குருமலைக்கணவாய் காற்றும் எதிரே விரிந்திருக்கும் குறும் புதர்களும், காடை, கௌதாரி, காட்டுப்புறா, மணிப்புறா, மயில், காகம், கருங்குருவி, பனங்காடை, மரங்கொத்தி, தவிட்டுக்குருவி, செம்போத்து, போன்ற பறவைகளின் சுதந்திரமான நடமாட்டமும், இரவில் கூகை, ஆந்தை, குள்ளநரி, கருநாகம் தொடங்கி அத்தனை விதமான பாம்புகள், நட்டுவாக்காலி, தேள், பொரிவண்டு, உள்ளங்கையகலம் இருக்கும் மரவண்டுகள், தீப்பூச்சி, நாற்றமெடுக்கும் பச்சைப்பூச்சி, என்று எல்லாவிதமான உயிரினங்களையும் தரிசிக்கலாம். காலையில் கௌதாரி தன் குஞ்சுகளுடன் காலாற இரைதேடிப் போவதைப் பார்க்கலாம். இணையைச் சேருவதற்காக மயில் தோகைவிரித்து சிலிர்த்தாடுவதைக் காணலாம்.

இப்படிப்பட்ட ஸ்டேஷனை விட்டுப்போக யாருக்கு மனம் வரும்? அதுவும் கு.அழகிரிசாமியைப் போன்ற ஆளுமையின் கதை பெற்ற ஸ்தலமான குமாரபுரம் ஸ்டேஷன் என்னை வசீகரித்துக் கொண்டேயிருந்தது. 1960-ஐப் போலவே அந்த ஸ்டேஷன் கிராசிங்குக்காகவே உருவாக்கப்பட்டிருந்ததென்பதால் வேறு எந்தத் தொந்திரவும் கிடையாது. ரயில்கள் போய் விட்டால் நம்மருகில் தனிமை வந்து தானாக நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்ளும். அப்படியொரு அமைதி.

1992 –ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இந்தியாவே ரணகளமாகி மக்களின் மனதில் மதவெறி விஷவிதையெனத் தூவப்பட்டு விருட்சமாக வளர்ந்து கொண்டிருந்த காலம். அன்றாடம் மக்களைப் பதட்டத்தில் வைத்திருந்த காலம். அமைதியென்பதே இனி வராதோ என்றிருந்த காலம். தங்களுடைய பொருளாதாரக்கஷ்டங்களுக்கு விடிவு காலம் கிடையாதோ என்று பரிதவித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் குமாரபுரம் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இரவுகளில் திடீர் திடீரென்று தண்டவாளங்களின் வழியே ஆட்கள் நடந்து வருவார்கள். அவர்களைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அழுக்கான உடையுடன். தாடி, முடியெல்லாம் சடைபிடித்து, அழுக்குப்பையுடன், அழுக்கான தேகத்துடன் எதையோ வெறித்த கண்களுடன் எங்கேயாவது தப்பித்துப் போய் விடவேண்டுமென்ற வேகத்துடன் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கியும், தெற்கிலிருந்து வடக்கு திசை நோக்கியும் போய் வருவார்கள்.

லாரி கேலின்ஸ் – டொமினிக் லேப்பியர் இணைந்து எழுதிய FREEDOM AT MIDNIGHT என்ற நூல் மொழிபெயர்ப்பாளர் மயிலை பாலுவின் மொழிபெயர்ப்பில் நள்ளிரவில் சுதந்திரம் என்று அலைகள் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. அந்த நூலை வாசித்த நாட்களில் என் மனம் நிலை கொள்ளவில்லை. எப்போதும் வன்முறைக்காட்சிகள் கண்முன்னால் தோன்றிக் கொண்டேயிருந்தன. உடலில் ஒரு விறைப்புத்தன்மை கூடிக் கொண்டிருந்தது. தனியே இருக்கும்போது பயம் கிளை கிளையாய் விட்டது. காதுகளில் ஓலம். பெண்களின், குழந்தைகளின் ஓலம் கேட்டுக் கொண்டேயிருந்தது. மனிதர்களின் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.

அந்த நேரத்தில் தான் நான் திடீரென்று ஒருநாளிரவு குமாரபுரம் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதே வெறி பிடித்ததைப் போல எழுதத்தொடங்கினேன். இரவு முழ்வதும் எழுதினேன். எப்படி ரயிலகள் வந்தன: போயின என்று எனக்குத் தெரியவில்லை. இரவு பனிரெண்டு மணிக்குத் தொடங்கிய எழுத்து காலை ஆறு மணிக்குத் தான் முடிந்தது. ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல, ஏதோ ஒரு ஆசுவாசம் என்னிடம் தோன்றியது.  மனம் இளகியிருந்தது.  அதன்பிறகு ஒரு வாரகாலத்திற்குப் பிறகு மீண்டும் வாசித்துபார்த்து செம்மை செய்தேன்.

குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு கதையில் ஸ்டேஷன் மாஸ்டர் நாராயணன் இரவுப்பணி பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் விரிந்து கிடக்கிறது. எதிரே காட்டின் உயிர்த்துடிப்பு, மின்மினிப்பூச்சிகள், இராப்பூச்சிகளின் சங்கீதமென கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார். குமாரபுரம் ஸ்டேஷனின் வெளிச்சத்தை நோக்கி அத்தனை உயிரினங்களும் கலங்கரை விளக்காக நினைத்துக் கொண்டு பாய்ந்து வருகின்றன. மின்சாரம் தடைபட்டு அந்தக் குறுக்காட்டில் இன்னொரு புதராக குமாரபுரம் ஸ்டேஷன் இருக்கிறது. அப்போது இருளிலிருந்து முளைத்து வந்தவனைப் போல ஒருவன் அவர் முன்னல் நிற்கிறான். அவன் கையேந்தியபடி நிற்கிறான். அவனுக்கு டீ கொடுக்கச்சொன்ன நாராயணன் உள்ளே ரயில் வருவதற்கான அனுமதியைக் கொடுக்கச் செல்கிறார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த மர்ம மனிதனைக் காணவில்லை.

மீண்டும் நள்ளிரவில் சுதந்திரம் புத்தகத்தை வாசிக்கும் போது புத்தகத்திலிருந்த எழுத்துகள் அவரைச் சரித்திரத்தின் சுழலுக்குள் இழுத்துச் செல்கிறது. அங்கே அமிர்தசரஸ் ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர் சானிசிங்காக நின்று கொண்டிருக்கிறார். பிரிவினைக் கலகங்களும் வன்முறைகளும் வெடித்து விட்டன. லாகூரிலிருந்து வருகிற ரயில் முழுவதும் பிணங்கள் வருகின்றன. அதைப் பார்த்த சீக்கியர்கள் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் அன்வரை ஸ்டேஷன் மாஸ்டரின் வேண்டுகோளையும் மீறி இழுத்துச் சென்று கொலை செய்கின்றனர். நடந்து கொண்டிருந்த சம்பவங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த சானிசிங் மயங்கிச் சரிகிறார்.

குமாரபுரம் ஸ்டேஷனின் நாராயணனை அவருடைய உதவியாளர் எழுப்பி என்ன சார் அழுறீங்க? என்கிறார். நாராயணன் எழுந்து வெளியே பார்க்கிறார். பொழுது விடிந்து விட்டது. வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காடு சலம்பிக் கொண்டிருக்கிறது. டீ குடிக்கும் போது முந்தின நாளிரவு பார்த்த அதே மர்மமனிதன் திடீரென வந்து டீ கேட்கிறான். அவர் அவனிடம் பேச்சுக் கொடுத்து அவனுடைய பெயரைக் கேட்கிறார். அவன் சானிசிங், அமிர்தரஸ் ஸ்டேஷன் மாஸ்டர் என்று சொல்கிறான்.

இந்தக் கதை வரலாற்றின் பக்கங்களுக்குள் சென்று இன்றைய நிலைமையின் பயங்கரத்தை அன்றைய நிலவரத்துடன் ஒப்பிட்டு சூசகமாக வாசகனுக்குக் கடத்தி விடுகிறது.

ஒரே இடம் வெவ்வேறு காலகட்டத்தின் இரண்டு எழுத்தாளர்களின் கருப்பொருளாக மாறி வெவ்வேறு விதமாக வெளிப்பட்டிருப்பதென்பது தமிழிலக்கியத்தில் முன்னெப்போதுமில்லாததொரு விஷயம்.

இரண்டு கதைகளிலும் குமாரபுரம் ஸ்டேஷன் மாறவில்லை. அதன் ஏகாந்தம் மாறவில்லை. அதன் அழகு மாறவில்லை. ஆனால் நாற்பதாண்டு கால இடைவெளியில் சமூகத்தின் சூழல் மாறிவிட்டது. 1960-களில் சமூகம் இருந்த நிலைமையை வைத்து கு.அழகிரிசாமி எழுதிய குமாரபுரம் ஸ்டேஷன் கனிவின் ஒளியில் மனிதர்களைக் காட்டியது என்றால் 2002 –ல் இருந்த சமூகநிலைமையை வைத்து நான் எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு என்ற கதை ஒரு நம்பிக்கைக்காக, ஒரு கருத்துக்காக மனிதர்கள் பைத்தியம் பிடித்ததைப் போல மாறி ஒருவரையொருவர் கொலை செய்வதை, குரூரத்தின் கொடிய இருளைப் பற்றி எச்சரிக்கை செய்கிறது.  நம்முடைய இருண்டகாலத்தின் கடந்த காலப்பயணத்தை ஞாபகப்படுத்துகிறது.

குமாரபுரம் ஸ்டேஷன் கதையில் கு.அழகிரிசாமி காட்டுகிற மானுட கரிசனத்தின், மகத்தான அன்பின் தரிசனத்துக்காக ஏங்கித் தவிக்க வைக்கிறது.

கு.அழகிரிசாமியே! என் மூதாதையே!

நன்றி - புக் டே


Thursday 19 August 2021

அந்நியமாதலின் கலை

 

அந்நியமாதலின் கலை – காஃப்காவின் நுண்மொழிகளை முன்வைத்து…..

உதயசங்கர்

 


“ மெய்மையின் மிகு ஒளியால் மின்னுவது நம் கலை: வெகு விரைவாக விலகிச்செல்லும் முகச்சுழிப்பின் மேல் பட்டுத் தெறிக்கும் அந்த ஒளி உண்மையானது, வேறெதுவும் உண்மை அல்ல. “ ----- காஃப்கா

காலையில் நீங்கள் எழுந்திரிக்கும் போது ஒரு கரப்பான் பூச்சியாக மாறியிருந்தால் என்ன நடக்கும்? ஒரு மனிதனை எதிர்கொள்வதற்கும் ஒரு கரப்பான் பூச்சியை எதிர்கொள்வதற்குமிடையிலான இருத்தலியல் பதட்டத்தையே ஃப்ரான்ஸ் காஃப்கா தன்னுடைய உருமாற்றம் சிறுகதையில் எழுதியிருந்தார். அந்தக்கதை 1915 –ல் வெளியான சமயத்தில் இருத்தலியல் என்ற கோட்பாடே உருப்பெறவில்லை நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு எழுத்தாளர் இன்றுவரை உலக இலக்கியத்தில் தன்னுடைய தாக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார் என்பது இன்னமும் அவர் காலத்தின் சமூக யதார்த்தம் மாறிவிடவில்லை என்பதையே குறிக்கிறது.  இப்போது அவர் எழுதிய நுண்மொழிகள் தமிழில் கே.கணேஷ்ராம் மொழிபெயர்ப்பில் காஃப்காவின் நுண்மொழிகள் என்ற தலைப்பில் அற்புதமான வடிவமைப்பில் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே காஃப்காவின் உருமாற்றமும், விசாரணையும், சில சிறுகதைகளும் தமிழில் வெளியாகியிருந்தாலும் காஃப்காவின் வாழ்க்கை தரிசனங்களையும் தத்துவப்பார்வையையும் வெளிப்படுத்துகிற விதமாக காஃப்காவின் நுண்மொழிகள் நூல் இருக்கிறது என்று சொல்லலாம்.

காஃப்கா என்ற எழுத்தாளர் எப்படி உருவானார்? ஒருவருடைய அகவாழ்க்கை எப்படி ஒருவரின் புற வாழ்க்கையையும் அவருடைய பார்வையையும் உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதைப் பற்றியும் காஃப்காவை முன் வைத்து உரையாடிப்பார்க்கலாம்.

ஒருவர் ஏன் எழுதவேண்டும்? எழுதியே தீர வேண்டும் என்ற வெறியோ, எழுதாமலிருக்க முடியாது என்ற நெருக்கடியோ எப்போது ஏற்படுகிறது? ஏன் ஒருவன் எழுத்தாளனாகிறான்? கவிஞனாகிறான்? கலைஞனாகிறான்? மலையாளமொழியின் மகாகவியான கி.சச்சிதானந்திடம் நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்டபோது பைத்தியம் பிடிக்காமலிருப்பதற்காக எழுதுகிறேன் என்று பதில் சொன்னார். அவருடைய குடும்பத்தில் பரம்பரை நோயாக மனநோய் இருந்து வருவதால் அப்படிப்பட்ட மனநோய் தன்னைத்தாக்கி விடக்கூடாதேயென்று தான் கவிதை எழுதத்தொடங்கியதாகச் சொன்னார். இன்னொரு எழுத்தாளர் தான் நேசித்த பெண்ணுக்காக எழுதத்துணிந்ததாகச் சொன்னார். மற்றொருவர் தன்னை நிருபிப்பதற்காக எழுதவதாகச் சொல்கிறார். சகிக்க முடியாத இந்த வாழ்க்கையிலிருந்து ஆசுவாசம் கொள்வதற்காக எழுதுகிறேன் என்கிறார் ஒருவர். ஒருவர் சமூகத்துக்காக, சமூகத்தை மாற்றுவதற்காக எழுதுவதாகச் சொல்லும் போது எனக்காக மட்டுமே எழுதுகிறேன் என்று ஒருவர் முணுமுணுப்பதைக் கேட்க முடிகிறது. தாழ்வு மனப்பான்மையினால் எழுதுகிறேன் என்று சொல்லும் போது புறவுலக அழுத்தத்தைத் தாங்க முடியாமல் எழுதுவதாக மற்றொருவர் சொல்கிறார். பணத்துக்காக, புகழுக்காக, காதலுக்காக, விருதுகளுக்காக, சில குறிப்பிட்ட காரியங்களுக்காக, எழுதுவதாக, ஆயிரக்கணக்கான காரணங்களைச் சொல்லமுடியும். மனிதமனதின் கோடிக்கணக்கான பின்னங்களை ஒருவரால் புரிந்து கொள்ள முடிந்தால் இந்தக் காரணங்களையும் ஒருவேளை புரிந்து கொள்ள முடியலாம்.

ஆனால் கலையின் வித்துக்குள் மனப்பிறழ்வின் கூறு இருப்பதைச் சாதாரணமாக எல்லோராலும் கண்டுபிடித்துச் சொல்லி விடமுடியும். மார்க்சீய அறிஞர். ஜார்ஜ் தாம்சனின் தனது மனிதசாரம் என்ற நூலில் கலைஞர்கள் தனித்துவமான குழுவாகத் தங்களுக்கென்றே தனித்துவமான பழக்கவழக்கங்களோடு, வாழ்க்கைமுறையை மேற்கொள்வதாக எழுதுகிறார். திரும்ப திரும்பச் சொல்லப்படும் மந்திரமொழியினால் புறவுலக யதார்த்தத்தைக் கட்டுப்படுத்தமுடியுமென்று அவர்கள் நம்பினார்கள். அதனால் மந்திரக்கவிதைகளை அவர்கள் படைத்தார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ்ந்த அவர்களே கவிஞர்களாகவும், மருத்துவர்களாகவும், பூசாரிகளாகவும் மாறினார்கள் என்று சொல்கிறார்.

கலையின் வரலாறும் உளவியல் ஆய்வுகளும் இதை நிரூபித்திருக்கின்றன. ஏனெனில் கலைஞர்கள் மட்டுமே இந்த உலகை வேறுமாதிரியாகப் பார்க்கிறார்கள். அந்தப் கற்பனையின் வழியே அவர்கள் ஒரு புதியதொரு உலகைப் படைக்கிறார்கள். கற்பனையாகக் கண்ட உலகத்தை வார்த்தைகளின் வழியே புனைவாக மாற்றி உயிர் கொடுத்து வாசகர்களை நம்பவைக்கிறார்கள். இந்தக் கற்பனைக்கும், பாவனைக்கும், புனைவுக்கும், அவர்கள் உலகியல் தர்க்க அறிவை உதறி கலையியல் தர்க்கத்தைக் கைக்கொள்கிறார்கள். கலையின் தர்க்கம் எந்த கட்டுப்பாடுகளுமற்றது. தன்னை வெளிப்படுத்தும் ஆவேசம் மட்டுமே அதற்கு இருக்கும். எனவே தான் பல சமயங்களில் பல எழுத்தாளர்களின் படைப்புகளைச் சமகாலத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை.

இன்று உலகம் முழுவதும் புகழடைந்திருக்கிற ஃபிரான்ஸ் காஃப்காவின் படைப்புகளும் அவருடைய காலத்தில் போற்றப்படவோ, புரிந்து கொள்ளப்படவோ இல்லை. காஃப்காவை ஜெர்மன் மொழியில் எழுதிய பொகிமியாவைச் சேர்ந்த யூத எழுத்தாளர் என்றே அழைக்கிறார்கள். பொகிமியா என்ற நாடு ஆஸ்திரியா ஹங்கேரி, பேரரசு, வியன்னா ஆகியவற்றின் சில பகுதிகளையும் இன்றைய செக்கோஸ்லோவிய நாட்டின் மேற்குப் பகுதியையும் உள்ளடக்கியது. பொகிமியாவில் இருந்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் இசைஞர்களும் வழக்கத்துக்கு மாறான வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். யாரும் யாருடனும் நிரந்தரமான உறவு வைத்திருப்பதில்லை. சாகசவிரும்பிகளாகவும், நாடோடிகளாகவும், சுற்றியலைபவர்களாகவும் தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தனர். இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிறகே செக்கோஸ்லோவேக்கியக் குடியரசு தோன்றியது.

. காஃப்கா அப்போது பொகிமியாவின் தலைநகர் என்றழைக்கப்பட்ட ப்ரேக் நகரில் 1883 –ல் ஜூலை மாதம் 3 –ஆம் தேதி ஒரு மத்திய தரவர்க்க யூதக்குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை  ஹெர்மன் காஃப்கா ப்ரேக் நகரத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான பெரிய ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். அவருடைய கடையில் பதினைந்துபேர் வேலை பார்த்தனர். அவர் வீட்டிலும் வெளியிலும் சர்வாதிகாரியாக, கொடுங்கோலராக இருந்தார். தந்தையின் ஆதிக்கவுணர்வு ஃபிரான்ஸ் காஃப்காவின் வாழ்நாள் முழுவதிலும் கருநிழலாய் அவர் மீது கவிந்திருந்தது. காஃப்கா அவருடைய தந்தைக்கு 100 பக்கங்களுக்கு மேலாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவருடைய தந்தையின் ஆதிக்கமும், கண்டிப்பும் அவரை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்று விரிவாகச் சொல்லியிருக்கிறார். தனது தந்தையைப் பற்றி காஃப்கா கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,

“ சக்தியிலும், ஆரோக்கியத்திலும், பசியுணர்விலும், உரக்கப்பேசுவதிலும், சகிப்புத்தன்மையிலும், பேச்சுக்கலையிலும், சுய திருப்தியிலும், ஆதிக்கத்திலும், சமயோசித அறிவிலும் மனித இயல்பை அறிந்து கொள்வதிலும் ஒரு உண்மையான காஃப்காவியனாக இருந்தாரென்று குறிப்பிடுகிறார்.

அப்பாவுக்கு மட்டுமல்ல தன் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு சகோதரிகளுக்கு என்று எல்லோருக்கும் நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதினார் காஃப்கா. தன்னைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து விலகியிருப்பவராகவும், அதிகம் பேசாதவராகவும், கூச்ச சுபாவியாகவும் பார்ப்பவர்களுக்குத் தோற்றமளித்த காஃப்காவுக்கு தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்த கடிதங்கள் ஒரு வடிகாலாக இருந்தன. ஆனால் அவரிடம் பழகுபவர்களிடம் மிகவும் சகஜமாக, இனிமையாக, நட்பார்ந்த முறையிலும் உறவு கொண்டிருந்தார் காஃப்கா.

அப்பாவின் ஆதிக்கத்திலிருந்து காஃப்கா விடுபட எடுத்த முயற்சிகளெல்லாம் மேலும் இருளையே கொண்டு வந்து சேர்த்தன. காஃப்காவின் படைப்புகளிலெல்லாம் அந்த இருளை நாம் தரிசிக்கமுடியும்.

காஃப்காவின் தாயார் ஜூலி தந்தைக்கு நேர்மாறாக அமைதியான பெண்மணி. மது உற்பத்தி செய்து சில்லறை விற்பனை செய்யும் ஒரு பணக்காரருடைய மகள். ஜூலி தினமும் 12 மணிநேரம் கணவர் நடத்திய ஃபேன்சி ஸ்டோரிலேயே அதை நிர்வாகம் செய்யும் வேலையைச் செய்து கொண்டிருந்தார். இந்தத் தம்பதினருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் காஃப்காவுக்கு முன்னால் பிறந்த இரண்டு ஆண்குழந்தைகள் ஜார்ஜும், ஹெய்ன்றிச்சும், குழந்தைப்பருவத்திலேயே இறந்து விட்டார்கள். அதன் பிறகு பிறந்த காஃப்கா குடும்பத்தின் மூத்த சகோதரரானார். அவருக்குப் பிறகு மூன்று பெண்குழந்தைகள்  எல்லி, வல்லி, ஒட்டிலி, ஆகியோரும் பிறந்தார்கள். வீட்டிலிருந்த ஒரே ஆண்குழந்தையாக காஃப்கா இருந்ததினால் அப்பா என்ற கொடுங்கோலரின் கவனம் முழுவதும் காஃப்கா மீதே இருந்தது. எப்போதும் கண்டிப்பின் சவுக்குநுனி அவரைப் பதம் பார்த்துக் கொண்டேயிருந்தது. தாயும் தந்தையும் வியாபாரநிறுவனத்தில் அக்கறையுடன் இருந்ததினால் குழந்தைகள் எல்லாருமே தாதிகளாலும் வேலைக்காரர்களாலுமே வளர்க்கப்பட்டார்கள்.

எப்போதும் அப்பாவின் இரண்டு கண்கள் அவரைக் கண்காணித்துக் கொண்டேயிருப்பதாக பிரமை தோன்றி அவரை மனதளவிலும் உடலளவிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நம்பிக்கையின்மையும், தாழ்வு மனப்பான்மையும், விரக்தியும், பதட்டவுணர்வும், அவரை வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டேயிருந்தன. தன்னை எப்போதும் புகார் சொல்லிக்கொண்டேயிருக்கும் தன்னுடைய அப்பாவை எப்படியாவது திருப்தியடையச் செய்யவேண்டுமென வாழ்நாள் முழுவதும் ஆசைப்பட்டார். அதற்காகவே கல்லூரிப்படிப்பில் அவருக்கு விருப்பமான இராசயனப்பாடத்தை விட்டு விட்டு சட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்தார்.

அங்கே 1901 – ஆம் ஆண்டு சட்டப்படிப்பின் முதலாம் ஆண்டு முடிவில் மேக்ஸ் ப்ராடைச் சந்தித்தார். அன்றிலிருந்து இறுதிக்காலம் வரை மேக்ஸ் ப்ராட் காஃப்காவின் உற்ற நண்பராக இருந்தார்.  ப்ராடின் மூலம் ஜெர்மனியில் வெளியாகியிருந்த தாஸ்தயேவ்ஸ்கி, ஃப்ளாபர்ட், கோகோல், கிரில்லிபார்ஜர், ஹென்ரிச் வோன் க்ளெஸ்ட் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையெல்லாம் வாசித்தார் காஃப்கா. அதில் கிரில்லி பார்ஜரையும், ஹென்ரிச்சையும் தன்னுடைய உடன்பிறந்த சகோதரர்கள் என்று சொல்லிப் பெருமையடைந்தார். 1906 – ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து விட்டு 1907 – ஆம் ஆண்டு ஒரு இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து அந்த வேலை பிடிக்காமல் 1908- ல் அதிலிருந்து விலகி வேறு ஒரு கம்பெனியில் சேருகிறார். 1911 –ல் தங்கை எல்லிஸின் கணவரோடு சேர்ந்து ஆஸ்பெஸ்டாஸ் கம்பெனி ஒன்றைத் தொடங்கி அதில் வேலை பார்க்கிறார். அவருடைய பலவீனமான உடல்நிலையை இன்னும் மோசமாக்கி விடுகிறது. அதிலிருந்தும் வெளியேறி தீவிரமான எழுத்துப்பணியில் ஈடுபடுகிறார்.

1912 – ஆம் ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி, மேக்ஸ் ப்ராடின் உறவினரான ஃபெலிஸ் பாயர் என்ற பெண்ணைச் சந்தித்து அவருடன் காதலில் விழுந்தார். பெலிஸ் பாயரைப் பற்றி காஃப்காவே,  ஒட்டிய கன்னம், துருத்திய கன்ன எலும்புகள், நீண்ட நாடி, ஈரப்பசையில்லாத உலர்ந்த கண்கள், உடைந்த வெள்ளை முடி, மொத்தத்தில் யாரையும் அருகில் நெருங்க விடாத கடுமையான முகத்தைக் கொண்டவர் என்று சித்தரிக்கிறார். ஆனால் காஃப்கா அவருக்கு ஏராளமான கடிதங்கள் எழுதுகிறார். அந்தக் கடிதங்களும் காஃப்காவின் மறைவுக்குப் பின் புத்தகமாக வெளிந்திருக்கிறது.

ஃபெல்ஸ் பாயருடன் உறவிலிருந்த காலகட்டத்தில் அவர் படைப்பாக்கரீதியில் காத்திரமான படைப்புகளைப் படைத்திருக்கிறார். உருமாற்றம், விசாரணை, தீர்ப்பு, கோட்டை போன்ற படைப்புகள் இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டவை. ஃபெலிஸுடன் இரண்டுமுறை நிச்சயதார்த்தம் நடந்து முறிந்து விடுகிறது. அதற்கு மிகமுக்கியமான காரணம் காஃப்கா ஒரே நேரத்தில் அதீத பாலியல் விருப்புள்ளவராகவும் அதே நேரம் அதில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சவுணர்வும் கொண்டிருந்தார். அதே போல குடும்பம் மாதிரியான நிரந்தரமான அமைப்பில் தன்னால் பொருந்திப்போக முடியாது என்று ஆழமாக நம்பினார். அதனால் தொடர்ந்து பெண்களுடன் உறவு கொள்பவராகவும் அதே நேரம் அந்த உறவை நீடிக்க விரும்பாதவராகவும் இருந்தார் காஃப்கா.

ஃபெலிஸ் பாயருடன் காதலுறவிலிருக்கும்போதே  ஃபெலிஸின் தோழியான மார்க்ரெட் பிளாச்சோடும் உறவு வைத்துக்கொள்கிறார். மார்க்கரெட்டுக்கு காஃப்காவின் மூலமாக ஒரு குழந்தையும் பிறந்தது ஆனால் அது காஃப்காவுக்கே தெரியாது என்று காஃப்காவின் வரலாற்றாசிரியர்கள் சிலரும் அதை மறுத்தும் கருத்துகள் இருக்கின்றன. ஆனாலும் பெலிஸுடன் இரண்டுமுறை திருமணத்துக்காக நிச்சயம் செய்கிறார். ஒவ்வொரு முறையும் காஃப்கா நிச்சயதார்த்துக்குப் பிறகு உறவை முறித்து விடுகிறார்.

இறுதிவரை திருமணம் முடிக்காமலேயே வாழ்ந்து முடித்த காஃப்காவுக்கு இருந்த பிளவுண்ட ஆளுமைச் சிதைவு நோய் அவரை உறுதியாக எந்த முடிவையும் எடுக்க அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில் சதாநேரமும் அவரை வேட்டையாடிய காமத்தை எதிர்கொள்ளவும் அவரால் முடியவில்லை. பாலியல் தொழிலாளர் விடுதிகளுக்குப் போயிருக்கிறார். போர்னோகிராபி பார்ப்பதில் விருப்புடையவராக இருந்திருக்கிறார்.  மூன்றாவதாகவும் அவருடைய விருப்பத்தின் படியே  படிப்பறிவில்லாத, ஏழ்மையான, தங்கும்விடுதியில் அறை உதவியாளராக இருந்த ஜூலி என்ற பெண்ணுடன் நிச்சய்தார்த்தம் நடந்தது. ஆனால் திருமணத்தேதிக்கு முன்பே அவர் இன்னொரு பெண்ணுடன் ஓடிபோனார்.

1912 – 1915 க்குமிடையில் அவருடைய இரண்டு சிறுகதை நூல்கள் 1. Contemplation, 2. A Country Doctor, வெளியாகின. இலக்கிய இதழ்களில் பல சிறுகதைகளும் வெளியாகியிருந்தன என்றாலும் அவருடைய படைப்புகள் யாராலும் கவனிக்கப்படவேயில்லை.  அதனால் விரக்தியடைந்த காஃப்கா தன்னுடைய ஏராளமான கையெழுத்துப்பிரதிகளை  எரித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய நண்பரான மேக்ஸ் பிராடிடமும் அவரிமுள்ள பிரதிகளை அழித்து விடச்சொல்லியிருக்கிறார். காஃப்காவின் படைப்புகளின் மீது மேக்ஸுக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாக அவர் அழிக்கவில்லை.

1915 – ஆம் ஆண்டு முதல் உலகப்போர் தொடங்கிய போது காஃப்கா ராணுவச்சேவை செய்யத் தேர்வுக்காகச் சென்றிருந்தார். காஃப்காவின் பலவீனமான உடல்நிலை காரணமாக அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காஃப்கா பள்ளிப்பருவத்திலேயே அனார்க்கிஸ்ட் இளைஞர் கழகத்துடனும், சோசலிச இளைஞர் கழகத்துடனும் தொடர்பிலிருந்தார். அவர்களுடைய பல கூட்டங்களில் கலந்து கொண்டார். பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது தன்னை ஒரு சோசலிஸ்ட் என்று தெரிந்து கொள்ளும்படியாக சிவப்புநிற அடையாளச்சின்னத்தை அணிந்து கொண்டு போனார். காஃப்காவின் அரசியல் பார்வையென்பது அனார்க்கிசமாகவும் சோசலிசமாகவும் இருந்திருக்கிறது. இறுகிய, கெட்டிதட்டிப்போன சமூகத்தை தகர்த்துவிட்டு புதிய சமூகத்தை உருவாக்க வேண்டுமென்ற கொள்கையுடைய அனார்க்கிச இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் தொடர்பிலிருந்திருக்கிறார்.

1917 – ஆம் ஆண்டு ஜனவரியில் அவருக்கு காசநோய் இருப்பதைக் கண்டறிந்தார்கள். உடனே அவர் தன்னுடைய இளையசகோதரியான ஒட்டிலியாவின் ஊரான ஜூராவுக்குச் செல்கிறார். ஜுராவ் ஒரு பொகிமியக் கிராமம். அங்கே ஒட்டிலியா ஒரு பண்ணைத்தோட்டத்தில் வேலை பார்க்கிறார். அங்கே இருந்த எட்டு மாதங்களும் காஃப்காவின் வாழ்வில் மிக அமைதியான காலமாக இருந்தது. அங்கே தான் காஃப்கா தன்னுடைய நுண்மொழிகளை எழுதுகிறார். எந்த வரிசையும் இல்லாமல் அவர் எழுதிய நூற்றியொன்பது நுண்மொழிகள் தமிழின் சிறந்த மொழிபெயர்ப்பாளரான கே.கணேஷ்ராமினால் மொழிபெயர்க்கப்பட்டு நூல்வனம் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது.

நுண்மொழிகள் அல்லது அபாரிசம் ( APHORISM ) என்று சொல்லப்படுகிற செவ்வியல் வடிவம் பொதுவாக ஐரோப்பிய அறிவுஜீவிகளின் தத்துவ தரிசனங்களையும், வாழ்க்கை பற்றிய ஆழமான அவதானிப்புகளையும், இறுதியான விதிமுறைகளையும் பற்றிச் சொல்வதாக இருக்கிறது. சாக்ரடீஸுக்கு முன்னாலேயே இருந்திருக்கிறது என்றும் அவற்றில் அறம், புதிர், தரிசனம், தத்துவக்குறிப்பு, பிரபஞ்சம் மற்றும் இயற்கை பற்றிய அவதானிப்புகள், மறைஞான சூட்சுமப்புதிர்கள், மானுட மீட்சிக்கான சிந்தனைகள், தனிமனித வாழ்வின் மீதான விசாரணையாகவும் இருக்கின்றன என்றும் காஃப்காவின் நுண்மொழிகள் இவை அனைத்தின் தொகுப்பாகவு இருக்கின்றன என்றும் தன்னுடைய பின்னுரையில் எழுதுகிறார் கே.கணேஷ்ராம்.

இந்த மாதிரியான வடிவம் இலக்கியம் என்றில்லை மருத்துவத்துறையிலும் எழுதப்பட்டிருக்கிறது. ஹோமியோபதி மருத்துவமுறையைக் கண்டுபிடித்த மேதையான சாமுவேல் ஃபிரெடெரிக் ஹானிமன் தன்னுடைய மருத்துவமுறையின் விதிமுறைகளை 291 அபாரிசம்களாக எழுதி 1810 – ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். ஆக நுண்மொழிகள் என்ற இலக்கியவடிவம் அனைத்துத்துறைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. செறிவான குறைந்த வார்த்தைகளில் தான் கண்டடைந்த தரிசனங்களை, சிந்தனைகளை, அநுபவங்களை எழுதுதல் என்று பொதுவாக நுண்மொழிகளைப் பற்றி சொல்லலாம்.

 ஜூராவ் கிராமத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுப்புறமும், அப்பா, வேலை, பெண்கள், அலுவலகம், என்ற பிடுங்கல்களுமில்லாத அந்தக் காலத்தில் காஃப்காவின் மனம் முன்னெப்போதுமில்லாத அமைதியை அடைந்திருக்கிறது. வெங்காயச்சருகுத்தாளை எட்டாக மடித்து எழுதியிருக்கிறார் காஃப்கா. அதையுமே மேக்ஸ் பிராடிடம் அழித்து விடவே சொல்லியிருக்கிறார். ஆனால் நல்லவேளையாக மேக்ஸ் அதைச் செய்யவில்லை. 1918 –ல் ஜூராவிலிருந்து வெளியேறி ப்ரேக் நகருக்குச் செல்கிறார். அங்கே 1920- ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் அனுபவம் பத்திரிகையாளரான மெலினா ஜெசன்காவுடன் ஏற்படுகிறது. நீண்டகாலம் இருந்த உறவென்றால் அது மெலினாவுடனாக உறவு தான். 1923 – ஆம் ஆண்டு விடுமுறைக்காலத்தில் கடற்கரை நகரத்துக்குச் சென்ற காஃப்கா கிண்டர் கார்டன் டீச்சரான டோரா டையமொண்ட்டுடன் காதல் கொள்கிறார். காஃப்காவின் இறுதிக்காலம் வரை டோரா அவருடன் இருந்தார். தொண்டையில் ஏற்பட்ட காசநோயினால் சாப்பிடமுடியாமல் பட்டினியால் காஃப்கா 1924- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி தன்னுடைய நாற்பதாவது வயதில் வியன்னாவுக்கு அருகிலுள்ள கியர்லிங் என்ற நகரத்தில் காலமானார்.

மேக்ஸ் பிராடு தான் காப்பாற்றி வைத்திருந்த காஃப்காவின் படைப்புகளனைத்தையும் காஃப்காவின் மறைவுக்குப் பிறகு ஒவ்வொன்றாக வெளியிட்டார்.

காஃப்கா தன்னுடைய நுண்மொழிகளில் தன்னுடைய புனைவுகளில் பயன்படுத்திய பூடகமான மொழியை விட இன்னும் மறைஞான மொழியைப் பயன்படுத்துகிறார். யூத இறையியல் சிந்தனைகளும், கிறித்துவத்தத்துவமும், அவருடைய நுண்மொழிகளில் விரவிக் கிடக்கின்றன. அத்துடன் அவருக்கு தத்துவவாதிகளான கீர்க்கேகாடு, பாஸ்கல், ஹெப்பெல் ஆகியோரின் சிந்தனைகளின் தாக்கமும் இருந்தது.

காஃப்கா வாழ்வினை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி அவருடைய நுண்மொழியொன்றில்,

“ மனிதன் இழைக்கும் தவறுகள் அனைத்தும் பொறுமையின்மையிலிருந்தே கிளை விடுகின்றன. முறையான அணுகுநெறியிலிருந்து உரிய காலத்துக்கு முன்பே முறிந்து விடுகிறது. உண்மையெனத் தோன்றுவதை உண்மையெனத் தோன்றுமாறு விவரிப்பதே அந்த அணுகுநெறி..

என்று சொல்லும்போது நம்மிடம் புதிய சிந்தனை பிறக்கிறது. மனிதன் பொறுமையற்றவன். பொறுமையின்மையின் விளைவாகவே அவன் சென்று சேர இடத்துக்குச் செல்லமுடியாமல் போகிறது என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். நுண்மொழிகளில்,

“ கூண்டு ஒன்று பறவையைத் தேடித்திரிந்தது.. 

என்ற கவித்துவமான வரிகளை வாசிக்கும்போது அமைப்புகள் சுதந்திரத்தைச் சிறைப்பிடிக்கத் தீட்டுகிற திட்டங்களை யோசிக்க முடிகிறது. தனிமனித விசாரணைகளாக அவர் எழுதியுள்ள,

“ ஒருவர் ஒரே பொருளை வெவ்வேறு விதமாக அவதானிப்பதால் அந்த ஒருவருள் பல்வேறு அகநிலைகள் அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது..

புறவயத்தின் பாதிப்பு மனிதர்களில் எப்படி வெவ்வேறு விதமான அகவயமான பிரதிமைகளை உருவாக்குகின்றது என்பதை செறிவாகச் சொல்லும் நுண்மொழி அது. அநேகமாக நிறைய நுண்மொழிகள் இந்த விதமான பார்வையையே கொண்டிருக்கின்றன.

“ மனிதகுலத்திற்கு முன் உன்னை சோதித்து அறிவாய், அது சந்தேகப்படுபவனைச் சந்தேகிக்கவும் நம்பிக்கை உடையவனை நம்பவும் கற்றுக்கொடுக்கும்..

காஃப்காவின் அகவாழ்க்கையே அவருடைய புறவாழ்க்கை பற்றிய சிந்தனைகளைத் தீர்மானித்தது என்று சொல்லலாம்.

“ மிகக்குறைவான பொய்களைச் சொல்லுவதற்கு வழி மிகக்குறைவான பொய்களைச் சொல்லுவதுதான். ஒருவருக்கு பொய்களைச் சொல்வதற்கு மிகக்குறைவான வாய்ப்புகளை வழங்குவது அல்ல..

எளிமையான வார்த்தைகளில் எளிமையான உண்மைகளை எழுதியிருக்கும் காஃப்கா படைப்பூக்கமும் சுதந்திரமுமே பிரபஞ்சத்தின் பூரணத்துவத்துக்குக் காரணமென்று ஒரு நுண்மொழியில் சொல்கிறார்.

எல்லையற்ற பூரணமும் பிரபஞ்சத்தின் பரப்பும் தீவிரப்படைப்பூக்கம் மற்றும் சுதந்திரமான சிந்தனையின் உச்சபட்ச சேர்க்கையின் விளைவே….

அவனது அயற்சியோ பெரும்போரில் ஈடுபட்ட வீரனுக்குரியது. அவனது தொழிலோ அலுவலகத்தின் ஒரு மூலையை வெள்ளை அடிப்பது..

என்று வாழ்வின் அபத்தம் பற்றி எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நுண்மொழியையும் சிந்திக்க சிந்திக்க வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு அர்த்தங்களைத் தரும் அழகைக் கொண்டிருக்கிறது.

செறிவான மொழியில் எழுதப்பட்டிருக்கிற காஃப்காவின் நுண்மொழிகளை அதேமாதிரியான செறிவான மொழியில் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் கே.கணேஷ்ராம். காஃப்கா எந்த வடிவத்தில் காகிதத்தில் எழுதினாரோ அதே மாதிரியான வடிவத்தில் நேர்த்தியான தயாரிப்பில் பார்த்தவுடன் கையிலெடுக்கும் விதமாக புத்தகத்தைத் தயாரித்திருக்கிறார் நூல்வனம் மணிகண்டன். காஃப்காவை மீண்டும் கண்டெடுக்கவும் அவருடைய படைப்புகளை வாசிப்பதற்குமான தூண்டுதலாக இந்த நூல் அமைத்திருக்கிறது.

காஃப்காவின் எழுத்துகள், அவர் மற்றவர்களுக்கு எழுதிய கடிதங்கள், அவருடைய நாட்குறிப்புகளின் வழியாக காஃப்கா ஆட்டிசம், தூக்கமின்மை, பிளவுண்ட ஆளுமைச்சிதைவு, ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அவற்றின் விளைவாக அவரிடம் அந்நியமாதல், இருத்தலியல் பதட்டம், குற்றவுணர்ச்சி, அபத்தவுணர்வு, ஆகியவை இருந்தனவென்று அதுதான் அவருடைய குணாதிசயத்தையும் எழுத்தையும் உருவாக்கியது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தந்தையின் ஆதிக்கத்தால் பீடிக்கப்பட்ட காஃப்காவுக்கு எல்லாவிதமான ஆதிக்க, அதிகார, உணர்வுகளுக்கும் எதிரான மனநிலையைக் கொண்டிருந்தார். அதை அபத்தமான வடிவத்தில் வெளிப்படுத்தினார். உருமாற்றத்தில் வரும் திடீரென கரப்பான் பூச்சியாக மாறிய கிரிகோரை அவரது குடும்பம், அலுவலகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதையே அபத்த நாடகமாகச் சித்தரித்திருப்பார் காஃப்கா. எல்லாவிதமான ஆதிக்கத்தையும் எதிர்க்கும் கலையை எழுதியவர் காஃப்கா. அதனாலேயே 1945- ஆம் ஆண்டுக்குப் பிறகு காஃப்கா ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் மீண்டும் கண்டெடுக்கப்படுகிறார். கம்யூனிச நாடான புதிய  செக் குடியரசில் காஃப்காவின் படைப்புகள் மார்க்சியத்தின் அந்நியமாதலைப் பிரதிபலிக்கும் படைப்புகள் என்று போற்றப்பட்டன.

காஃப்கா நிலப்பிரபுத்துவ சமூகத்திலிருந்து நவீன முதலாளித்துவ சமூக மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட அதிகாரவர்க்க அழுத்தத்தினால் அந்நியமாதலுணர்வுக்கும் இருத்தலியல் பதட்டத்துக்கும் ஆளானார். மாறிவரும், சமூக ஒழுங்கை, தகர்ந்து வரும் அதிகாரவர்க்க பிரபுத்துவ சமூகத்தை தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் காஃப்கா என்ற மதிப்பீடுகளும் முன்னெழுந்து வந்தன. காஃப்கா தன்னுடைய கதைகளில் ஏற்படுத்திய இக்கட்டான சூழ்நிலையை காஃப்கேஸ்க்யூ என்றழைத்தார்கள். ஆங்கில அகராதியிலும் அந்த வார்த்தை இடம் பெற்றது. ஒருவகையில் காஃப்கா காரல் மார்க்சின் அந்நியமாதலையே எழுதினாரென்று போற்றப்பட்டது. அதனால் ஜெர்மானிய இலக்கியத்தில் காஃப்காவின் யதார்த்தமும் ஃபேண்டசியும் கலந்த இலக்கியபாணி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது..

இதற்கு எதிராக காஃப்காவின் படைப்புகளில் அத்தகைய பார்வை ஏதுமில்லை. அவர் காலத்தில் அப்படிப்பட்ட புறவய சமூக யதார்த்த நிலை இல்லை என்ற கருத்தும் அந்தக் காலத்தில் மேலோங்கியிருந்தது. 1960-களுக்குப் பிறகு காஃப்கா உலகெங்குமுள்ள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டார். உலகமுழுவதுமுள்ள எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், தத்துவசிந்தனையாளர்கள் இன்னமும் காஃப்காவின் படைப்புகளின் மீது வெவ்வேறுவிதமான வாசிப்பையும் கருத்துகளையும் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காஃப்காவை வாசிக்கும் வாசகர்களும் அவருடைய படைப்புகளின் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு தரிசனங்களை கண்டடையலாம். அதற்கு காஃப்காவின் நுண்மொழிகள் மிகச்சிறந்த உதாரணம்.

நன்றி - புக் டே

Monday 16 August 2021

மானுட மனசாட்சியின் உரத்த குரல் சாதத் ஹசன் மண்டோ

 


மானுட மனசாட்சியின் உரத்தகுரல் சாதத் ஹசன் மண்டோ

உதயசங்கர்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிறுகதை எழுத்தாளரான சாதத் ஹசன் மண்டோ தன்னுடைய கல்லறை வாசகத்தைத் தான் இறப்பதற்கு முந்திய வருடத்தில் அதாவது 1954 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி இப்படி எழுதி வைத்திருந்தார்,

“ இங்கே கிடக்கிறான் சாதத் ஹசன் மண்டோ. அவனுடன் சேர்ந்து சிறுகதைக்கலையின் அத்தனை மர்மங்களும், கலைத்திறன்களும் புதைக்கப்பட்டு விட்டன. டன் கணக்கிலான மண்ணுக்கடியில் கிடக்கும் அவன், கடவுளை விட மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளன் அவன் தானோ என்று வியந்து கொண்டிருக்கிறான்..”

தன்னுடைய கலையின் மீது எத்தகைய நம்பிக்கை இருந்திருந்தால் இத்தனை கர்வத்துடன் எழுதமுடியும் அதுதான் சாதத் ஹசன் மண்டோ. உலகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், ஆசியக்கண்டத்தின் ஈடு இணையற்ற எழுத்தாளருமான சாதத் ஹசன் மண்டோ 1912-ஆம் ஆண்டு மே மாதம் 11 – ஆம் தேதி பஞ்சாபிலுள்ள லூதியானா மாவட்டத்திலுள்ள சம்ராலா என்ற நகருக்கு அருகிலுள்ள பாப்ரௌடி என்ற கிராமத்தில் பிறந்தார். அவருடைய முன்னோர்கள் காஷ்மீரைச் சேர்ந்த பணக்கார வியாபாரிகள். மண்டோவின் தாத்தா பாஷ்மானியா என்று சொல்லப்படும் காஷ்மீரில் வீடுகளில் வளர்க்கப்படும் சங்தாங்கி ஆடுகளின் கம்பளிரோமங்களை வாங்கி விற்கும் வியாபாரியாக இருந்தார். பின்னர் அமிர்தசரஸை நோக்கி குடும்பம் குடிபெயர்ந்தது. மண்டோவின் அப்பா மௌல்வி குலாம் ஹசன் தீவிரமான மத அபிமானியாக இருந்தார்.  அவர் இரண்டு திருமணம் முடித்து மொத்தம் 12 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார். மண்டோ மௌல்வி குலாம் ஹசனின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தார். மண்டோ தன்னுடைய மூத்த சகோதரர்களிடம் மிகுந்த பயபக்தியுடன் இருந்தார். ஏனெனில் அவர்கள் அவரைவிட வயது மிகவும் மூத்தவர்களாக மட்டுமல்ல நன்கு படித்தவர்களாகவும் இருந்தார்கள். மண்டோவின் அப்பா கண்டிப்பானவர். சம்ராலாவின் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற மண்டோவின் அப்பாவுக்கு கத்தியைப் போன்ற கூர்மையான நாக்கும் கண்டிப்பான வழிமுறைகளும் கொண்டிருந்தார். அதனால் மண்டோ அப்பாவைக் கண்டு எப்போது பயந்து கொண்டேயிருந்தார். அவரிடம் ஏற்பட்ட கலகக்குணத்துக்கு அவருடைய அப்பா ஒரு காரணமாக இருக்கலாம். அம்மாவின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மண்டோ.  மற்ற குடும்பத்தினருடன் அவ்வளவு நெருக்கமாக இல்லை.

மண்டோவின் அப்பா மண்டோ கஷ்டப்பட்டுப் படிக்கவேண்டும், மண்டோவின் மற்ற சகோதரர்களைப் போல வெளிநாடு சென்று படித்து பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்று நினைத்தார். ஆனால் மண்டோவிடம் வளர்ந்து வரும் மதஈடுபாடின்மையையும், மரியாதையின்மையையும் கண்டு மனம் வெதும்பினார். மண்டோவுக்கு வழக்கமான பள்ளிக்கல்வியில் ஈடுபாடில்லை. அவர் இண்டர்மீடியட்டில் இரண்டு முறை தோற்றுப்போனார். அதிலும் குறிப்பாக பின்னாளில் உருது இலக்கியத்தில் சாதனைகள் செய்த மண்டோ உருது மொழிப்பாடத்தில் தோல்வியடைந்தது முரண்நகை. இந்தத் தோல்வியின் விளைவாக அவர் சிற்றின்பக்கேளிக்கைகளில் முழுமூச்சாக இறங்கினார். 1930 – களின் துவக்கத்தில் சூதாட்டம், புகைபிடித்தல், கஞ்சா, சோம்பிக்கிடத்தல், போன்றவற்றில் மூழ்கிக்கிடந்தார். ஆனால் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக முஸாவர் பத்திரிகையின் ஆசிரியரான அப்துல் பாரி அலியுடனான சந்திப்பு 1933 – ல் மண்டோவின் இருபத்தியோராம் வயதில் நிகழ்ந்தது.  அவருடன் சேர்ந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அறிமுகமானது. பாரி அலி மண்டோவைச் சந்தித்தபோதே அவருடைய திறமையைக் கண்டு கொண்டார். அவர் மண்டோவின் புரட்சிமோகத்தை இலக்கியத்தின் பக்கம் திசை திருப்பினார். அவருக்கு ருஷ்ய இலக்கியத்தையும் பிரெஞ்சு இலக்கியத்தையும் அறிமுகப்படுத்தி ஈடுபாடு கொள்ள வைத்தார். ஆஸ்கார் வைல்டு, மாப்பாசான், விக்டர் ஹியுகோ போன்றவர்களின் கலைத்திறனை அறிமுகப்படுத்தினார். எழுத்தின் மூலம் வருமானம் ஈட்டலாம் என்ற பாதையையும் அவர் காட்டிக் கொடுத்தார். அவர் உடனே லூதியானாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினசரியான மாசாவாத் என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். அதில் மண்டோ புரட்சிகரக்கவிதைகளையும், கட்டுரைகளையும், மொழிபெயர்ப்புகளையும் செய்யத் தொடங்கினார்.

விக்டர் ஹியுகோவின் The last days of a condemned man என்ற நாடகத்தை உருதுவில் மொழிபெயர்த்தார். அதை லாகூரிலுள்ள லாகூர் புக் ஸ்டோர் என்ற நிறுவனம் ஒரு கைதியின் கதை என்ற பெயரில் வெளியிட்டது. அதன் வெற்றியினால் அவர் ஆஸ்கர் வைல்டின் வேரா அல்லது நிகிலிஸ்டுகள் என்ற நாடகத்தை 1934 –ல் மொழிபெயர்த்தார். அந்த நாடகம் அவருக்கு மிகப்பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது. பின்னாளில் அவர் அந்த நாட்களைப் பற்றி எழுதும்போது அவரும் அவருடைய நண்பர்களும் அமிர்தசரசின் வீதிகளில் நடந்து போகும்போது ஏதோ மாஸ்கோவில் புரட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்களைப் போல உணர்ந்ததாக எழுதினார். மாவீரன் பகத்சிங்கும் அவரை மிகவும் பாதித்திருந்தார். மண்டோ ஆரம்பம் முதலே ஒரு இடதுசாரியாகவும் சோசலிஸ்டாகவும் வளர்ந்தார். பின்னாளில் முற்போக்கு எழுத்தாளர் சங்கமே கூட அவருடைய படைப்புகளின் மீது விமரிசனங்களை வைத்தபோதும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

பாரி அலி மண்டோவை அவருடைய சொந்தப்படைப்புகளை எழுதும்படி வற்புறுத்தினார். மண்டோ மிகவிரைவிலேயே திறமையான எழுத்தாளராகப் பரிணமித்தார். அவருடைய முதல் கதையாகச் சொல்லப்படுகிற தமாஷா என்ற கதை ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பின்னணியாகக் கொண்டது.

அவருடைய பாலியகால நண்பரொருவரின் வற்புறுத்தலினால் அலிகாரிலுள்ள முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் 1934 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சேர்ந்தார். வழக்கம்போல அங்கே அவரால் மாணவனாக சோபிக்கமுடியவில்லை. ஆனால் அங்கேயிருந்த ஒன்பது மாதங்களில் ஏராளமான கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி பத்திரிகைகளில் வெளியிட்டார்.

மண்டோவுக்கு அப்போது இருபத்திமூன்று வயதிருக்கும். அவருக்கு காசநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. நெஞ்சுவலியைக் குறைப்பதற்காக அவர் நாட்டுச்சாராயத்தை அதிகமாகக் குடிக்க ஆரம்பித்தார். ஆனால் போதிய பலன் தராததால் அவர் மலைப்பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டார். அவருடைய முன்னோர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர் இப்போது தான் காஷ்மீருக்குப் போனார். காஷ்மீரும் அந்த மக்களும் அவரைக் கவர்ந்தனர். அங்கே தான் ஒரு ஆடு மேய்க்கும்பெண் மீது அவருடைய முதல் வசந்தம் வீசியது.

அவர் அமிர்தசரஸ் திரும்பி அங்கிருந்து லாகூருக்கு பராஸ் என்ற பத்திரிகையில் நிரந்தரவேலை கிடைத்துப் போனார். ஆனால் அந்தப்பத்திரிகையின் தன்மை அவருக்கு ஒத்துவரவில்லை. 1935 – ல் மும்பைக்கு வேலை தேடி வந்தார். முசாவ்விர் என்ற சினிமா வாராந்திரியின் ஆசிரியராகச் சேர்ந்தார். மண்டோ மும்பையைத் தீவிரமாக நேசித்தார். அதன் அழகும் ஒயிலும் ஸ்டைலும் அவரை அப்படியே ஈர்த்து விட்டன. இரண்டுமுரை மும்பையை விட்டு வெளியேறியிருந்தார். ஒருமுறை ஆல் இண்டியா ரேடியோவில் வேலை செய்வதற்காக, அது குறுகிய காலம், இரண்டாவது முறை பிரிவினைக்குப் பிறகு நிரந்தரமாக மும்பையை விட்டுப் பிரிந்தார். அவர் சாகும்வரை மும்பையின் மீதான காதல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. 1935 – 1947 வரையில் மும்பையிலிருந்த மண்டோ முதலில் சினிமா பத்திரிகையாளராக இருந்து பின்னர் இம்பீரியல் சினிமா கம்பெனியின் ஸ்கிரிப்ட் ரைட்டராக சேர்ந்தார். முதலில் அவர் எழுதி வெளியான திரைப்படம் படுதோல்வியடைந்தது. ஒரே நேரத்தில் சினிமா அவருக்கு ஆசைகாட்டவும் ஏமாற்றவும் செய்தது. ஆனாலும் அவர் விடவில்லை.

ஒரு சமயம் அவர் சினிமாக்களுக்கு எழுதிக்கொண்டே இரண்டு பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும், இடையிடையே ரேடியாவுக்கும் பங்களித்துக் கொண்டிருந்தார். அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு 1940 ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாவதாக 1942 –ல் அவருடைய கட்டுரைத்தொகுப்பு வெளியானது. அதன் பிறகு 1943 ஆம் ஆண்டு அவர் டெல்லிக்குப் போனார். அங்கே இருந்த இரண்டு ஆண்டுகளும் அவருடைய சொந்த வாழ்வில் பெரும் இழப்புகளைச் சந்தித்த ஆண்டுகளாக இருந்தன. அவருடைய அம்மாவும் அவருடைய மூத்தமகனும் இறந்து போனார்கள். இந்த இரண்டு இழப்புகளும் அவருக்கு பேரிடியாக இருந்தது மட்டுமல்லாமல் அவருடைய வாழ்நாள் முழுவதும் இழப்பின் துயரம் தொடர்ந்தது.

ஆல் இண்டியா ரேடியோவில் அப்போது பேர்பெற்ற இயக்குநராக இருந்த பித்ராஸ் புகாரியுடன் தீர்க்கமுடியாத முரண்பாடுகள் ஏற்பட்டன. மண்டோவுக்கு மாதாந்திரச்சம்பளம் கிடைத்த வேலை என்பதைத் தவிர மற்றபடி டெல்லியில் மண்டோ மகிழ்ச்சியாக இல்லை. அந்த வேலையைத் துறந்து மீண்டும் மும்பைக்கு வந்தார்.

முதலில் மீண்டும் முசாவ்விர் பத்திரிகையில் சேர்ந்து வேலை செய்து கொண்டே ஃப்ரீலான்சராக திரைப்படங்களுக்கு எழுதினார்.  1943 –ல் மும்பையில் ஃபிலிமிஸ்தான் என்ற படக்கம்பெனியில் சேர்ந்தார். அந்தக்கம்பெணி புகழ்பெற்ற பம்பாய் டாக்கீஸிலிருந்து பிரிந்து வந்த அவருடைய நெருங்கிய நண்பர்களான ஷியாம், அசோக்குமார், சேர்ந்து ஆரம்பித்திருந்தார்கள். அந்தக்கம்பெனிக்காக பல வெற்றிகரமான திரைப்படங்களுக்குக் கதைகளை எழுதினார்.

நாடு கொந்தளித்துக் கொண்டிருந்த காலம். தவிர்க்கமுடியாத பிரிவினையை நோக்கி இந்தியா தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. மும்பையில் திடீர் திடீரென்று கலவரங்கள் வெடித்தன. 1947 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி நாட்டின் பிரிவினை அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே மண்டோவின் மனைவியும் குழந்தைகளும் பாகிஸ்தானுக்குப் போய் விட்டனர். மண்டோவுக்கு மும்பையை விட்டுப் போக மனமில்லை. அவர் இந்தியாவில் இருந்து விடவே விரும்பினார். ஆனால் பம்பாய் டாக்கீஸ் நிர்வாகம் இஸ்லாமியர்களை வேலையிலிருந்து நீக்கிய நிகழ்வு அவருக்கு முதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள் திடீரென்று மண்டோ அவருடைய பைகளை எடுத்துக் கொண்டு பாகிஸ்தானுக்குக் கிளம்பினார். ஏன் அப்படி அவர் திடீரென்று புறப்பட வேண்டும் என்பதற்கான காரணங்கள் உடனே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் மண்டோ அவருடைய நினைவோடைக்குறிப்புகளில் மும்பையில் அவருடைய கடைசிநாட்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அதை அவருடைய மிக நெருங்கிய நண்பரான புகழ்பெற்ற திரைநட்சத்திரம் ஷியாமுக்கு அர்ப்பணித்திருந்தார்.

” ஒரு நாள் நானும் ஷியாமும் ராவல்பிண்டியிலிருந்து அகதியாக வந்திருந்த ஒரு சீக்கியக்குடும்பத்துடன் இருந்தோம். அங்கே என்ன நடந்தது என்று அவர்கள் விவரித்ததைக் கேட்டபோது திகைத்துப்போய் அதிர்ச்சியில் உறைந்திருந்தோம். அந்தக் கொடூரமான சம்பவங்களைக் கேட்ட  ஷியாம் அழுதுவிட்டான். அவனுடைய மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பதை என்னால் உணரமுடிந்தது. நாங்கள் அங்கிருந்து கிளம்பிய பிறகு நான் ஷியாமிடம்,

“ நான் ஒரு முஸ்லீம்.. என்னைக்கொல்லணும்னு உனக்குத் தோணலையா..” என்று கேட்டேன். அதற்கு அவன் இறுக்கமாக

” இப்போது இல்லை.. ஆனால் அவங்க இஸ்லாமியர்கள் செய்த அட்டூழியங்களைச் சொன்ன போது எனக்கு அப்படித் தோன்றியது அப்போது நான் உன்னைக் கொன்றிருப்பேன்..”  என்று சொன்னான். அவனுடைய வார்த்தைகள் என்னை ஆழமாகப் பாதித்தது. அவனைப்போலவே நானும் அவனைக்கொன்றிருக்கமுடியும். அதைப்பற்றி பின்னால் சிந்தித்தபோது இந்தியாவின் மதக்கலவரத்தின் இரத்தப்பாதையின் பின்னாலுள்ள உளவியலைப் புரிந்து கொள்ள முடிந்தது. “

கிட்டத்தட்ட இதுவே மண்டோ தன்னுடைய அருமைக்காதலியான மும்பையை விட்டுப்பிரிந்து பாகிஸ்தானுக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருந்தது என்று சொல்லலாம். ஆனால் பலரும் பலகாரணங்களைச் சொன்னார்கள். புதிய நாட்டில் புதிய வாழ்க்கையை வளமாகத் தொடங்கலாம் என்று நினைத்துப் போய் விட்டாரென்றும். எல்லாவற்றையும் அழித்துவிட்டு மீண்டும் புதிதாக தொடங்கலாம் என்று போனாரென்றும் பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த இந்துக்கள் கைவிட்டுச் சென்ற பெரிய பெரிய மாளிகைகளை இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வரும் இஸ்லாமியர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்ற செய்தியின் அடிப்படையில் மாளிகை கிடைக்கும் என்று போய்விட்டாரென்றும் அவருடைய அருமையான மனைவி, குழந்தைகளைப் பிரிந்திருக்கமுடியாமல் போய் விட்டாரென்றும், அவர் நேசித்த மும்பை சினிமா அவரை விரட்டி விட்ட விரக்தியில் போய் விட்டாரென்றும்,  

1948 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம் ஆண்டு அவருடைய மறைவு வரை அவர் பாகிஸ்தானில் லாகூரில் இருந்த காலத்தில் மிகத்தீவிரமான எழுத்தாளராக இயங்கினார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு என்ற விகிதத்தில் எழுதியிருக்கிறார். ஒரே கதையை வேறு வேறு மாதிரி எழுதியிருக்கிறார். ஒரே கதையை முடிவுகளை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார். பல கதைகள் வெவ்வேறு தொகுப்புகளிலும் திரும்பத்திரும்ப இடம் பெற்றிருக்கின்றன. அந்த நாட்களில் இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளின் மீது துயரத்தின் கருநிழல் இரவாய் கவிந்திருக்க எப்போது வெளிச்சம் வரும் என்று யாருக்குமே தெரியாதிருந்த காலத்தில் மிகுந்த மன உளைச்சலுடன், கைக்கும் வாய்க்குமான வறுமையுடன் மனதின் உணர்வெழுச்சிகளைத் தாங்கமுடியாமல் அதீதக்குடியுடன் அலைக்கழிந்திருக்கிறார் சாதத் ஹசன் மண்டோ.

அவரைத் துரத்திக்கொண்டேயிருந்த பிரமைகளான கரும்பிசாசுகளிடமிருந்து தப்பிக்கவும் கொடூரமான கற்பனைக்காட்சிகளிடமிருந்து விடுதலையடையவும்  குடியிடம் சரணடைந்திருக்கிறார். அந்தப் பிசாசுகளை குடி வெற்றிகொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் மனநலமருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்திருக்கிறார். எப்போதோ மருத்துவர்கள் அவருக்கு மரணஎச்சரிக்கை செய்து விட்டார்கள். இனி குடித்தால் அவ்வளவுதான். உயிருக்கு உத்திரவாதமில்லை. ஆனால் சாதத் ஹசன் மண்டோவும் குடிக்காமலிருக்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு மழுங்கடிக்கப்பட்ட, பாவனையான, போலியான, சமூக அக்கறையை முன்வைத்து எழுதத்தெரியவில்லை. அவருடைய  கூருர்ணவுகள் சமூகத்தின் அவலங்களைப் பார்த்து தங்களுடைய கூர்மைகளால் அவரையே குத்திக்கிழித்தன. அந்தக்காலத்தில் அவர் கேட்ட, பார்த்த, படித்த ஒவ்வொரு சம்பவமும் அவரைக் கூறுபோட்டன. உணர்வெழுச்சியை ஏற்படுத்தின. அந்த உணர்வெழுச்சியின் உக்கிரத்தை அவர் எழுதுவதின் மூலமே சமனப்படுத்தியிருக்கிறார். அதற்குக் குடி தேவையாயிருந்திருக்கிறது.

மண்டோவின் வாழ்க்கையை முன்வைத்து இரண்டு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. மண்டோ – நந்திதா தாஸ் இயக்கத்தில் 2018 –ல் வெளிவந்த திரைப்படம். அதில் மண்டோவின் இந்திய-பாகிஸ்தான் வாழ்க்கை சுருக்கமாக ஆனால் மிகவலிமையாக வெளிப்பட்டிருக்கிறது. இன்னொரு திரைப்படம் பாகிஸ்தானில் வெளியாகியிருக்கிறது. மண்டோ – இயக்கம் - சர்மட் சுல்தான் கஸூத் ( SARMAD SULTAN KASOOT ) . அந்தத் திரைப்படம் மூன்று மணிநேரம் ஓடக்கூடிய படம். தொலைக்காட்சி தொடராக வெளியாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அந்தத் திரைப்படத்தில் மண்டோவின் பாகிஸ்தான் வாழ்க்கை மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறது.  இரண்டு படங்களுமே மண்டோவின் கதாபாத்திரத்தை ஓரளவுக்கு நம் கண்முன்னால் கொண்டு வந்திருக்கின்றன. மண்டோவை வாசிக்கிறவர்கள் அந்தத் திரைப்படங்களையும் பார்க்கும் போது இன்னும் கூட அவருடைய கதைகள் கூடுதல் அர்த்தத்தைக் கொடுக்கும்.

அவரைச் சதாகாலமும் போலியான மனிதசமூகம் அணிந்திருக்கும் நாகரிகமான ஆடைகளுக்குப் பின்னாலிருக்கும் அழுகிய புண்களில் வடிந்து கொண்டிருக்கும் சீழ் தொந்திரவு செய்து கொண்டேயிருந்திருக்கிறது. அதைவிட அதைக் கண்டும் காணாமல் தன்னுடைய சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களின் பொறுப்பின்மை, அவருக்குள் ரௌத்திரத்தை கொழுந்து விட்டெரியச் செய்து கொண்டேயிருந்தது. அதனால் எப்படிச் சொன்னால் இந்த சமூகத்துக்கு உறைக்கும் என்று ஒவ்வொரு கதையிலும் சொல்லிச் சொல்லிப் பார்க்கிறார். எந்தவித அலங்காரமுமின்றி அப்பட்டமாக பச்சையாக எழுதினார் மண்டோ. அப்படி எழுதுவதின் மூலம் மட்டுமே சமூகத்தின் சொரணையை விழிக்கவைக்க முடியும் என்று நம்பினார். ஆனால் பொதுச்சமூகம் அவருடைய கதைகளை அப்படிப் பார்க்கவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திரப்பாகிஸ்தானிலும் ஆறுமுறை அவருடைய கதைகளுக்காக நீதிமன்றத்தில் ஏறி இறங்கியிருக்கிறார். ஒரு முறை தண்டிக்கவும் பட்டிருக்கிறார். ஆனால் மேல்முறையீட்டில் அதிலிருந்து விடுவிக்கவும் பட்டிருக்கிறார். அப்படி ஒரு சம்பவத்தில்,

“ எழுத்தாளனின் உணர்வுகள் காயப்படும்போது மட்டுமே அவன் தன்னுடைய பேனாவைக் கையிலெடுக்கிறான்.. “ என்று ஒரு நீதிபதியிடம் சொல்லியிருக்கிறார்.  அவருடைய காலத்தில் ஒரு பக்கம் அரசாங்கம் அவரை கம்யூனிஸ்ட் என்று குற்றப்படுத்தியது என்றால் இன்னொருபக்கம் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் மற்ற இலக்கியவாதிகளும் கூட அவரை பிற்போக்குவாதியென்றும் ஆபாச எழுத்தாளரென்றும், இறந்தவர்களை வைத்துப் பிழைப்பு நடத்துபவரென்றும்,  தூற்றியிருக்கிறார்கள். அவருடைய கதைகளைப் பற்றிய விமரிசனங்களுக்கு,

“ என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றே அர்த்தம். என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவனவெல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச்சமூக அமைப்பினையே குறிக்கிறது. என் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும் இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதுதான் சிறந்த வழி..

 என்று நெஞ்சுரத்துடன் பதிலளிக்கிறார் மண்டோ. மண்டோ மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்த இருண்டகாலத்தின் கதைகளை பதிவு செய்தவர். மண்டோ மட்டுமே மனிதனுக்குள் கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். மதம் என்ற நம்பிக்கை மனித உயிர்களை எப்படியெல்லாம் பலி வாங்கியிருக்கிறது என்பதைத் தன்னுடைய படைப்புகளில் அந்தக் குரூரத்தை வாசகனும் உணரும்படிச் சொல்லியிருக்கிறார்.  சாமானியர்கள், விளிம்புநிலை மக்கள், பாலியல் தொழிலாளிகள், அடித்தட்டு மக்கள், என்று சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உலகை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியவர் மண்டோ. அவர்களுடைய வாழ்வின் அவலங்களை, ஆசாபாசங்களை, வக்கிரங்களை, வாசகமனம் அதிரும்படி எழுதியர் மண்டோ. சமன் குலைந்த சமூகத்தில் சமன் குலையச் செய்யும் எழுத்தை எழுத்தியவர் மண்டோ. தன்வாழ்நாள் முழுவதும் கலகக்காரராகவே வாழ்ந்தார் மண்டோ. சமூகத்தின் எல்லாவிதமான அதிகாரங்களையும்,  போலித்தனமான ஒழுக்கக்கோட்பாடுகளையும் கேள்வி கேட்டார் மண்டோ.

 அவருடைய படைப்புகளின் கலையுணர்வு ஆக்ரோசமானது ஆனால் கலையின் பூரணத்துவம் கொண்டது. அவருடைய கலையில் கலகக்குரல் கேட்டுக்கொண்டேயிருந்தது ஆனால் அதில் கலையின் மகத்துவம் பொங்கிக்கொண்டேயிருந்தது. அவருடைய கலையுணர்வு உரத்தகுரலில் பேசுவது ஆனால் அந்தக்குரலில் பிரச்சாரம் கிடையாது. அவருடைய கலையுணர்வு நேரடியானது ஆனால் நுட்பங்கள் நிறைந்தது. அவருடைய கலையுணர்வு யதார்த்தமானது ஆனால் யாரும் அதுவரை போகாத வழிகளில் சென்றது. அவருடைய கலையுணர்வு வாழ்க்கையின் இருளை வெளிச்சம் போட்டுக் காட்டியது ஆனால் அந்த வெளிச்சத்தில் இந்த உலகமே பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தது.

ஒருவகையில் மண்டோவின் எழுத்துகள் பிரிவினை கால இந்திய பாகிஸ்தான் மக்கள் சமூகத்தில் என்ன நடந்தது என்பதற்கான இலக்கிய வரலாற்று ஆதாரம். நாகரீக சமூகம் நெருக்கடிக்காலங்களில் எப்படி மனிதனுக்குள் இருக்கும் கொடூரகுணங்களை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதற்கான உளவியல் பாடங்கள். குற்றவியலுக்குப் பின்னாலுள்ள சிந்தனைகள், நியாயங்கள் என்று எல்லாவற்றையும் எழுதிப்பார்த்தவர் மண்டோ. அவருடைய படைப்புகளின் வெக்கை நமது சிவில் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி தன்னையே விசாரணை செய்யத் தூண்டுபவை.

இருபத்திமூன்று வயதில் அவர் முதல் கதையை எழுதினார். அதன்பிறகான இருபது வருடங்களில் இருபத்தியிரண்டு சிறுகதை தொகுப்புகளையும், ஒரு நாவலையும், ஐந்து ரேடியோ நாடகங்களின் தொகுப்பையும், மூன்று கட்டுரைத் தொகுப்புகளையும், இரண்டு நினைவோடைத் தொகுப்புகளையும் தன்னுடைய நாற்பத்திமூன்று வயதுக்குள் எழுதியிருக்கிறாரென்றால் அவருடைய எழுத்தின் வீரியம் நமக்குப் புலப்படும்.

இந்தத்தொகுப்பிலுள்ள கதைகளெல்லாம் மண்டோ பாகிஸ்தான் போனபிறகு எழுதப்பட்டவை. பாகிஸ்தான் சென்றபிறகு அவருடைய மனவெழுச்சியும் சிந்தனைகளும் எப்படியிருந்தன என்பதற்கான சாட்சி. அவருடைய வாழ்க்கையின் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம் என்று கூடச் சொல்லலாம்.

மண்டோவுக்கு கிரிக்கெட்டின் மீது காதல் இருந்தது. அவர் இறப்பதற்கு முன்னால் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் மேட்சைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். ஏற்கனவே லிவர் சிரோசிஸ் நோயினால் மரணத்தின் விளிம்பிலிருந்த மண்டோ அன்று பத்திரிகையில் ஒரு செய்தியைப் படித்துவிட்டு மன அமைதியின்றி தத்தளித்திருக்கிறார். குஜராத்தில் பேரூந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணையும் அவளுடைய குழந்தையையும் ஐந்தாறுபேர் கடத்திக்கொண்டு போய் அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக குளிர் இரவில் நடுரோட்டில் விரட்டி விட்டிருக்கிறார்கள். அந்த இரவின் குளிரில் அவளும் குழந்தையும் விரைத்து செத்திருக்கிறார்கள். இந்தச் செய்தியை வாசித்த மண்டோ வீட்டை விட்டு வெளியேறியவர் அளவுக்கதிகமாக குடித்திருக்கிறார். அவர் வீட்டுக்கு வந்ததும் ரத்தவாந்தி எடுத்திருக்கிறார். அதைப்பார்த்த அவருடைய சகலை ஹமீது ஜலாலின் மகனிடம், இது  வெத்திலை எச்சில் யாரிடமும் சொல்லாதே என்று சொல்லியிருக்கிறார். அந்தச் சிறுவனும் யாரிடமும் சொல்லவில்லை. நள்ளிரவில் படுக்கையில் வலியும் வாந்தியும் எடுத்து மனைவியை அழைத்துச் சொன்னபிறகுதான் மருத்துவர் அழைக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர் அவருடைய நிலைமையைப் பார்த்து உதட்டைப் பிதுக்க, மண்டோவின் இறுதிக்கணங்கள் தொடங்கி விட்டன.  கல்லறையில் குளிர்வதைப்போல குளிர்கிறது என்று சொன்ன மண்டோ இரண்டு போர்வைகளால் போர்த்திக்கொண்டிருக்கிறார். கடைசியாக ஒரு பெக் விஸ்கியைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார். கொஞ்சம் விஸ்கியை வாங்கிவந்து ஒரு ஸ்பூன் வாயில் ஊற்றினார்கள். இரண்டாவது ஸ்பூன் வாயிலிருந்து வெளியே வழிந்து விட்டது. உடலில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது. ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று அறிவித்தார்கள். ஹமீது ஜலால் எழுதும்போது, பொறுப்பற்ற ஆட்டங்களை ஆடிய மண்டோவிற்கு பலமுறை அவுட் கொடுக்காமலிருந்த கடவுள் கடைசியில் 1955 ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று விரலை உயர்த்தி அவுட் கொடுத்து விட்டாரென்று எழுதுகிறார்.

அவருடைய கதைகளை உருதுவிலிருந்து ஆங்கிலத்தில் பலர் பலவிதமாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இன்னும் மொழிபெயர்க்கப்படாத ஒரு நாவல் உட்பட ஏராளமான படைப்புகள் இருக்கின்றன. மண்டோவே பல கதைகளை, தொகுப்புகளை, பலபதிப்பாளர்களிடம் அன்றைன்றையத் தேவைக்காக விற்றிருக்கிறார். அதனால் தான் பல விதமான வேறுபட்ட தொகுப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் வாழ்ந்தபோது தன்னுடைய எழுத்தின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த மண்டோ அவருடைய மனைவி சஃபியா மண்டோவிடம்

“ நான் ஏராளமாக எழுதியிருக்கிறேன். நான் இறந்தாலும் நீ வசதியாக வாழலாம்.. என்று சொல்லிக் கொண்டேயிருப்பார் ஆனால் உண்மையில் பதிப்பாளர்கள் அவர் எல்லாவற்றுக்கும் பணம் வாங்கி விட்டாரென்று சொல்லி கையை விரித்து விட்டனர்…என்று அவருடைய மூத்தமகள் நுஸாத் மண்டோ சொல்கிறார்…மண்டோ இறந்தபோது அவருடைய மகள்களான நிஹாத் மண்டோ, நுஸாத் மண்டோ, நஸ்ரத் மண்டோ ஆகியோருக்கு முறையே ஒன்பது, ஏழு, ஐந்து வயது தான் பூர்த்தியாகியிருந்தது. சஃபியா மண்டோ தனியே அவர்களை வளர்த்து ஆளாக்கினார். மண்டோ தன்னுடைய கதைகளை எழுதியதும் முதலில் சஃபியாவிடம் தான் வாசித்துக்காட்டுவார். தன்னுடைய குடும்பத்தினர் மீது அளவு கடந்த பிரியம் கொண்டிருந்த மண்டோ அதைவிட ஆழமான பிரியத்தை இந்த சமூகத்தின் மீது வைத்திருந்தார். அது தான் அவருக்கு வரமாகவும் சாபமாகவும் அமைந்தது.

இந்தத் தொகுப்பிலுள்ள பத்து கதைகளும் மண்டோவின் கலைமேதைமையை உணர்த்தக்கூடியவை. இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ரக்‌ஷானந்த ஜலீல் உருதுவிலிருந்து மொழிபெயர்த்திருந்த நிர்வாணக்குரல்கள் தொகுப்பிலிருந்தும், சில கதைகள் காலித் ஹசன் உருதுவிலிருந்து மொழிபெயர்த்திருந்த ராஜ்யத்தின் முடிவு என்ற தொகுப்பிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. மண்டோ அசாதாரணத்தையே கதையாக்குகிறார். யாரும் பார்க்கத் துணியாத காட்சிகள், யாரும் பார்த்திராத கதாபாத்திரங்கள் யாரும் யோசித்திராத சம்பவங்கள், என்று கதைப்பின்னலில் எல்லோரும் சாதராணமாகத் தவறவிடுகிற அல்லது அலட்சியப்படுத்திச் செல்கிற அல்லது அருவெறுப்பு கொள்கிற வாழ்வின் சித்திரங்களை நுண்மையாகச் சித்தரிக்கிறார். இதிலுள்ள ஒவ்வொரு கதையும் அசாதாரணமானது. பிஸ்மில்லா என்ற விசித்திரமான பெயர் கொண்ட பெண்ணின் கதையின் மர்மம் கடைசியில் விலகும்போது ஏற்படும் அதிர்வின் அலை நம்மை நடுங்கச்செய்யும். ஆறுதல் கதையில் சாரதாவுக்கு நேர்ந்த அவமான உணர்வை ஆற்றுப்படுத்துகிற காட்சி மிகவும் நுட்பமானது. மெழுகுவர்த்தியின் கண்ணீர் பாலியல் தொழிலாளியின் ஒரு இரவின் இருளில் ஒற்றைக்கண்ணாய் எரியும் மெழுகுவர்த்தியின் ஒளி வரையும் சோகச்சித்திரம். நிர்வாணக்குரல்களில் வாழ்க்கையின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான காமத்தின் குரல்களை ஒன்றுபோல மொட்டைமாடியில் சாக்குகள் சுற்றிலும் திரையாகக் கட்டப்பட்ட கட்டில்கள் புலம்புகின்றன. விசித்திரமான அந்த வாழ்நிலைக்கு எல்லாரும் பழகிவிட அதைக்கண்டு அஞ்சி ஓடி மனநிலை பிறழ்கிற கதாபாத்திரம் வாழ்வின் குரூரத்தைச் சொல்கிறது.

தோற்றுக்கொண்டேயிருப்பவன் கதையில் ஒரு பாலியல் தொழிலாளியைக் காப்பாற்றுவதாகக் கொள்ளும் பெருமை மீது இறுதியில் கொடுக்கும் அடி தடுமாறச்செய்கிறது. காமத்தின் கடும் அவஸ்தையில் பாலியல் விடுதிக்குச் செல்ல நினைக்கும் ஒருவனின் மனச்சஞ்சலங்களும் அவஸ்தைகளும் மண்டோ என்ற இலக்கியாளுமையின் வரிகளில் சாக்கடையான சமூகத்தின் அவலத்தைக் காட்டுகிறது. சூபிகளின் கோவில்களில் நடக்கும் குழந்தைப்பேறு நேர்த்திக்கடன்களும் அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளை கோவிலில் கொடுத்துவிட்டு வரும் ஒரு பெண்ணின் மன அவஸ்தை. யாசித் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகும் நடந்த ராஜீய ரீதியிலான மறைமுக யுத்தத்தைப் பற்றிய கதை. இஸ்லாமிய புராணத்திலிருந்த ஒரு வில்லன் கதாபாத்திரம் எப்படி மாறுகிறது என்பது தான் இந்தக்கதை. மிகவும் புகழ்பெற்ற தோபாதேக்சிங் கதையை வாசிக்கும்போது நாம் வாழும் இந்த நிலத்துக்கு என்ன அர்த்தமிருக்கிறது என்ற கேள்வி எழாமல் போகாது. மனதை அதிரவைக்கும் கதை. கேள்விக்குறியான கௌரவம் கதையில் வரும் மீசை மம்மது பாயைக் கண்டு எல்லாரும் பயப்படுகிறார்கள், ஆனால் அந்த மம்மது பாய் ஏன் அழுகிறான் என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிற கதை. எல்லாக்கதைகளும் துல்லியமான விவரனைகளுடன், நேர்த்தியான கதைசொல்லலுடன், அழுத்தமான கதாபாத்திரங்களுடன் எழுதப்பட்டிருப்பது மண்டோவின் மேதைமைக்குச் சான்று. மண்டோவின் இருநூற்றைம்பது கதைகளில் தமிழில் இதுவரை ஐம்பது கதைகளுக்குள் தான் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். அவருடைய அத்தனை கதைகளும் நாவலும் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படும் போது மண்டோவின் மகாமேதைமை இன்னும் சூரியனாய் பிரகாசிக்கும்.

மண்டோவின்  சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்படவேண்டியவை. அவரை மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமே சிவில் சமூகம் தன்னுடைய மனப்பிறழ்வுகளை கண்டுணர்ந்து சரி செய்து கொள்ள முடியும். எல்லாரும் சகோதரத்துவதுடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை வாசிக்கவேண்டும்.

 மீண்டும் மீண்டும் மண்டோவை வாசிப்போம்.

 முன்னெப்போதையும் காட்டிலும் மண்டோ இன்று தேவைப்படுகிறார்.

நன்றி - புக் டே